கோலப்பொடி
Friday, 13 March 2026
Wednesday, 11 March 2026
ஜா-34
வாழ்க்கைக்கு ஹைக்கூ 34:
"உள்ளபடியே அவையவை,
அப்படியே இருப்பது நல்லது.
உதிர்ந்த இலைகளைப்
பெருக்கிக் கொண்டே..."
- சந்தோகா டனேடா
ஜப்பானியத் துறவியும் கவிஞருமான சந்தோகா டனேடா (Santoka Taneda) என்பவரால் எழுதப்பட்ட இந்த ஹைக்கூ மிகவும் எளிமையான, ஆழமான வாழ்வியல் தத்துவத்தைக் கொண்டது.
இந்தக் கவிதை ஒரு சாதாரணச் செயலான "இலைகளைப் பெருக்குதல்" என்பதன் மூலம் ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.
மரம் இலைகளை உதிர்ப்பது இயற்கையானது. அதை மாற்ற முடியாது. இலைகள் விழுந்து கொண்டே இருக்கும், நாம் பெருக்கிக் கொண்டே இருப்போம். "விஷயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இருக்கட்டும்" என்று ஏற்றுக்கொள்ளுதலே நிறைவான வாழ்வின் அடிப்படை.
இலைகள் மீண்டும் விழும் என்று தெரிந்துமே ஒரு நபர் அதைச் சலிக்காமல் பெருக்குகிறார். பலனைப் பற்றி கவலைப்படாமல் தற்போதைய தருணத்தில் முழுமையாக ஈடுபடுவதையே இது குறிக்கிறது.
இந்தக் கவிதை "அங்கீகாரம்" (Acceptance) மற்றும் "தற்போதைய தருணத்தில் வாழ்தல்" (Mindfulness) பற்றிய அடிப்படைப் பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது.
1. தேவையற்ற போராட்டத்தைத் தவிர்த்தல்:
வாழ்க்கையில் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அவற்றை மாற்ற முயன்று நம் நிம்மதியை இழக்கிறோம். நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வது மன பாரத்தைக் குறைக்கும்.
உதாரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும்போது பதற்றப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. "இப்போது இதுதான் நிலை" என்று ஏற்றுக்கொண்டு, அந்த நேரத்தில் ஒரு நல்ல பாடலைக் கேட்பது, மனதுக்குள் ஒரு இனிய நினைவை கொண்டுவருவது அல்லது அமைதியாக இருப்பதுதான் நிறைவான வழி.
2. முடிவை விடச் செயலில் கவனம்:
இலைகளைப் பெருக்கி முடித்ததும் மீண்டும் இலை விழும். அது ஒரு முடிவில்லாத வேலை. ஆனால் அந்த வேலையைச் செய்யும் போது கிடைக்கும் அமைதிதான் முக்கியம்.
ஒரு மாணவர் தேர்வின் முடிவைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல், இன்று தான் படிக்க வேண்டிய பாடத்தில் மட்டும் முழு கவனத்தைச் செலுத்துவது. செயல் சரியாக இருந்தால், முடிவு தானாக அமையும்.
3. எளிய வாழ்க்கையின் அழகு:
வாழ்க்கை எப்போதும் சிக்கலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகச் சாதாரணமான வேலைகளைச் செய்வதிலும் ஒரு திருப்தி இருக்கிறது என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.
உதாரணமாக வீட்டில் பாத்திரம் கழுவுவது அல்லது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்ற எளிய வேலைகளை எதோஎ ஒரு கடமைக்கு செய்யாமல், ஒரு தியானம் போல ஈடுபாட்டுடன் செய்வது மனதிற்குப் பெரிய அமைதியைத் தரும்.
Tuesday, 10 March 2026
tea-24
#மனசுக்கு_ஒரு_தேநீர்_24
Failure to Finish Syndrome
மனித வாழ்க்கையில் பலர் புதிய செயல்களை ஆர்வத்துடன் தொடங்குகின்றனர். ஆனால் அந்த செயல்களை இறுதி வரை கொண்டு செல்ல முடியாமல் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். இந்த மனநிலையே Failure to Finish Syndrome.
தொடங்கும் உற்சாகம் இருப்பினும், அதை நிறைவு செய்யும் பொறுமை மற்றும் உறுதி இல்லாத நிலைதான் இதன் அடிப்படை.
வாழ்க்கையில் ஒரு செயலை தொடங்குவது எளிதானது. ஆனால் அதை முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்வது சாதனை. புத்தாண்டில் பலரும் செய்த தீர்மானங்களுக்கு ஏறக்குறைய கல்லறை கட்டியிருப்போம் அல்லது கட்டும் தருவாயில் இருப்போம்
பலருக்கு புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த ஆர்வம் குறுகிய காலமே நீடிக்கும்.தொடர்ச்சியின்மை காரணமாக கைவிடுகிறோம். புதிய யோசனை வந்தவுடன் பழைய முயற்சியை கைவிடுகிறோம்.ஒரு வார இதழை வாங்கிவிட்டு படிக்கவில்லையெனில் அந்த வார இதழை வாங்காமல் இருப்பபரின் உணர்வுதான் நமக்கும் வரும்.
வாங்கிவிட்டு கூட படிக்கைவில்லையே எனும் ஆதங்கமும வரும்
ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் புத்தகம் படிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம்.ஆரம்பத்தில் சில பக்கங்களை ஆர்வத்துடன் படிக்கிறோம். பிறகு மற்றொரு புத்தகத்தைப் பார்த்ததும் அதில் ஆர்வம் கொள்கிறோம். இதனால் பல புத்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கும்; ஆனால் ஒன்றும் முழுமையாக முடிக்கப்பட்டிருக்காது. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும்
சோம்பல் அல்லது வேறு காரணங்களால் நிறுத்திவிடுவதைப் பார்க்கிறோம்.
ஒருநாள் நிறுத்தினாலும் மீண்டும் துவங்க முயற்சிக்க வேண்டும். அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
கடினமானதை செய்ய முயற்சிப்பது, முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இருப்பது, இன்றைய வேலையை ஒத்திப்போடாமல் குறைந்தபட்சமாவது மேற்கொள்ள உறுதி செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் பெரிய சாதனைகள் அனைத்தும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவாகின்றன.
“Genius is one percent inspiration and ninety-nine percent perspiration.”
என்று தாமஸ் எடிசன் கூறுகிறார்.
“Well begun is half done.”
ஆனால் உண்மை என்னவென்றால்:
“Well finished is fully done.”
ஆரம்பிப்பதை விட
முடிப்பதே உண்மையான சாதனை.
என்ன செய்யவேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தை, என்ன செய்யக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்தினால் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
லதா
பிறருக்கு கொடுப்பது தான் பெருமை கொண்ட செயல் என்றும், பிறரிடமிருந்து பெறுவது தாழ்ந்த செயல் என்றும் நாமெல்லாம் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
அதனால் தான் நாம் எதையும் மற்றவர் கொடுக்கும் வேளை அதை graceful ஆக பெற்றுக்கொள்ளகூட கற்கவில்லை. பெறுவது என்பதே ஏதோ சங்கடமான செயலாக நினைக்கிறோம்..
உண்மையில் அப்படியல்ல. கொடுப்பது நற்செயல் தான். ஆனால் பிறர் கொடுப்பதை பெற்றுக்கொள்வது ஒன்றும் இழி செயல் இல்லை.
ஒரு பாராட்டைக்கூட நம்மால் சங்கடமில்லாமல் ஏற்க முடிவதில்லை. ஒன்று நெளிந்து வளைந்து வெட்கத்துடன் ஏற்கிறோம், இல்லையெனில் தலை கனத்திருந்தால், நீ என்னடா என்னை பாராட்டுவது, எனக்கே என் தகுதி தெரியும்டா என்ற அளவில் செயல்படுகிறோம்.
இது பாராட்டுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்குமே பொருந்தும். நாம் கொடுப்பதை பெருமையாகவும் பெறுவதை இழிவாகவும் நினைக்கும் மனநிலை மிகவும் மோசமானது, முட்டாள்தனமானதும் கூட. பெறுவதற்கு மனிதர்கள் இல்லையெனில், கொடுப்பவருக்கு எங்கிருந்து பெருமை வரும்? ஒரு பகிர்தலில் ஒரு பக்கம் நல்லதும் ஒரு பக்கம் கெடுதலும் எப்படி இருக்க இயலும்?
பெரிய உதாரணம் எல்லாம் வேண்டாம். ஒரு சாதாரண நன்றியை கூட சட்டென அழகாக ஏற்றுக்கொள்ள கூசும் மனங்களை வளர்த்து வைத்திருக்கிறோம் நாம். நன்றி என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத வார்த்தைப்ப்போல், ஒருவர் நம்மிடம் சொல்லுபோது அப்படியே ஒரு அதிர்வு ....ஐயையோ எதுக்குங்க இதுக்கெல்லாம் நன்றி சொல்றீங்க? ஏங்க இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? ஏங்க நட்புக்குள்ள நன்றியெல்லாம் சொல்லி தள்ளி வைக்கிறீங்க? இவை தானே பெருபாலும் நாம் ஒரு சாதாரண நன்றியை எதிர்கொள்ளும் லட்சணம்?
நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் யாரும் thank you என்று சொன்னால், பதிலுக்கு no mention please என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள். அப்படியென்றால், உங்க நன்றி எல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல என்று பதுவிசாக சொல்வது. ஆனால் சில வருடங்களில் இது தவறு என உணர்ந்த ஆங்கிலம் பேசும் யாரோ ஒருவர் welcome அல்லது most welcome என்று (வரவேற்கிறேன் அல்லது மிகவும் வரவேற்கிறேன்) சொல்வதை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு இது இன்று வரை most welcome இல் நிற்கிறது.
ஒருவர் ஒன்றை மனதார கொடுக்கும்போது, பேசும்போது, அன்பு செலுத்தும்போது, அதையும் இயல்பாக ஏற்று அதே போல் இயல்பாக பெற்றுக்கொள்ளும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கொடுப்பது பெருமை எனவும், வாங்குவது இழிவு எனும் நிலையில் தான் மனிதர்களிடையே பகிர்தல் என்பது தொலைந்து போய் பல விரிசல்கள் ஏற்படுகின்றன, ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் பெருகுகின்றன.
பெறுவதற்கு யாரும் இல்லையேல், இங்கு அளிப்பவனுக்கு வேலையே இல்லை. இயல்பாக செய்வோமே எதை செய்தாலும்.
இங்கு அடித்து பிடுங்க கூட அஞ்ச மாட்டோம். ஆனால் அளிப்பதை அழகாக ஏற்றுக்கொள்ளத் தான் நமக்கெல்லாம் தெரியாது.
பி.கு. "என் கதை'யில் கமலாதாஸ் ஓர் இடத்தில் கூறி இருப்பார். "நான் அன்பு எனும் பிச்சையை வைத்துக்கொண்டு, அதை ஏந்திக்கொள்வதற்கான பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தேன்" என. இங்கு பிச்சை என்பதையும் தவறான பொருளில் பார்க்க வேண்டியதில்லை. அவர் சொல்ல வந்தது, என்னிடத்தில் அள்ளிக்கொடுக்கும் அளவுக்கு அன்பு பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை சரியாக வாங்குவதற்கு தான் மனிதர் ஒருவர் கூட கிடைக்கவில்லை என்று.
-லதா-
Monday, 9 March 2026
Book-15
#Reading_Marathon2026
#26RM009
Book No:15/150+
Pages:-112
கபர்
-கே.ஆர் மீரா
கே ஆர் மீராவின் புத்தகங்கள் அனைத்தும் தனித்துவமானவை. நாம் புனிதம் என்று கருதுபவை அனைத்தையும் பகடி செய்பவர். உண்மைக்கு மிக நெருக்கமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய எழுத்துக்களிலும் அதனை காணலாம்.நுட்பமான அவருடைய கதைகளில் வரும் எழுத்துக்கள் அனைத்தையும் வசீகரமானவை, எதிர்பாராத நேரத்தில் திருப்புமுனை உண்டாக்குபவை, அறிவார்ந்த தளத்தில் உளவியல் சிந்தனைகளை புள்ளிகள் வைத்து இறுதியில் கோலமிட்டு முடிப்பது போல அவருடைய எழுத்துக்கள் இருக்கும்.
கபர் என்னும் இப் புத்தகம் மதம் சார்ந்த புத்தகம் அல்ல, மனித மனங்களின் மாற்றம் சார்ந்த புத்தகம் என்று நாம் சொல்லலாம். நமக்கான கல்லறைகள் அதிகமானவை. நாமே அதில் நம்முடைய எண்ணங்கள் ஆசைகளை அடக்கம் செய்து கொண்டு வெளிவர முடியாத சூழலில் உலவி கொண்டிருக்கிறோம் ஒருவரின் பணிவிடைகளுக்கு இன்னொருவர் கொடுக்கிற கைமாறல்ல அன்பு, அது ஒருத்தர் இன்னொருவரின் மீது கண்டடைகிற பூரணத்துவம் தான் என்பது கதையின் அடிநாதமாக உள்ளது. காதலுக்கு மணம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் எட்வர்ட் ரோஸ் மலர் என்று சொல்லக்கூடிய அந்த வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த பூக்களின் நறுமணம் நம்மை உணர வைக்கும்.
கதையின் நாயகி பாவனா மாவட்ட நீதிபதியாக உள்ளார். தன் சுதந்திரம் தனக்கான நீதியை தன்னிடத்தில் தேடிக் கொண்டிருப்பவர். ஏழு அத்தியாயங்கள் உடையது. முதலாவதாக கபர் என்னும் சமாதி உள்ள இடத்தின் மீதான உரிமை கோருதல் வழக்கு ஒன்று வருகிறது. அந்த வழக்கினை விசாரித்து கொண்டிருக்கும்போது அமானுஷ்ய சக்தி போல தம்மை ஆட்கொள்வதை பாவனா உணர்கிறார். மயக்கம் அடைகிறார். மருத்துவமனையில் சேர்கிறார். தொடர்ந்து இரண்டு முறை இவ்வாறு நடைபெற்றதால் அந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக இதனை பார்க்கிறார்.
முதல் அத்தியாயத்திலேயே யோகேஸ்வரன் மாமா எனும் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவர்களின் குடும்பத்தில் வயதானவர்கள் அனைவரும் காசி செல்வதை வழக்கமாய் கொண்டு இருப்பார்கள். அவ்வாறு காசி செல்பவர்கள் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் யோகேஸ்வரன் மாமா வரும்போது இரண்டு அழகிய தேவதை போன்ற பெண்களுடன் வருகிறார். அமானுஷ்ய தன்மையை கொண்டதாக இருக்கும் அப்பகுதி சிறுவயதில் இருந்து அவருக்கு ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது. அது இந்த வழக்கினை விசாரிக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக நினைவில் வந்து கொண்டிருக்கிறது.
பாவனாவின் திருமணம் காதல் திருமணம்.பிரமோத் என்பவரை மணந்து கொள்கிறார்.பாவனாவின் வளர்ச்சி குறித்த தாழ்வு மனப்பான்மை காரணமாக இவரின் மீது வெறுப்பு கொள்கிறார். மகன் அத்வைத் ஹைபர் ஆக்டிவ் ஆட்டிசத்தால் குறைபாடுடன் பிறந்ததால்.. பிரிந்து சென்று இன்னொரு திருமணத்திற்கு தயாராகிறார். பாவனாவின் தந்தையும் தாயும் 36 வருடங்களுக்குப் பிறகு பிரிந்து இருக்கின்றனர்.அவர்களுடைய பின்னணியும் விளக்கப்படுகிறது.
யோகேஸ்வரன் மாமாவின் இறப்பு குறித்த கதைகள் இவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்ததாக மந்திர சக்தி கொண்ட மனதினை படித்து தெரிந்து கொள்ளும் கயாளுதின் தங்ஙளுடைய கதாபாத்திரம் குறித்த அறிமுகம் வருகிறது. அவருடைய அமானுஷ்ய சக்தியின் காரணமாகத்தான் ஒவ்வொரு முறை தீர்ப்பு சொல்ல வரும்போதும் ஏதேனும் ஒரு இடையூறு வருகிறது. ஒரு வழியாக இந்த வழக்கின் தீர்ப்பினை தடை விதிக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்கிறார்.
தீர்ப்பு கூறிய மகிழ்ச்சியில் அன்று மாலை மகனுடன் திரைப்படத்திற்கு செல்லும் போது அங்கும் காக்க சேரி வருகிறார். பேச்சினால் மயக்கி அல்லது பாவனாவே உடன் வருவதாக கூறி இருவரும் ஒரு இடத்துக்கு செல்கின்றனர் .பின்பு தான் தெரிகிறது அதுதான் சர்ச்சைக்குரிய இடமான கபர் இருக்கும் இடம். அதற்கு பிறகு கபர் குறித்த பாவனாவின் எண்ணங்கள் மாறுகிறது. தனக்குள்ளேயே ஒரு பூரணத்துவத்தை அவர் கண்டறிய முயல்கிறார். தன்னுடைய பிறப்பின் ரகசியம் குறித்த செய்தியை அறிகிறார்.
நாவல் 112 பக்கங்கள் தான். ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதைகள் நான் லீனியர் மாயயதார்த முறைகளில் நடக்கிறது. படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. கதையின் முக்கிய கதாபாத்திரமான பாவனா தன்னுடைய கணவனின் மறுமணத்திற்கு செல்லும் போதும், மகனிடம் காட்டும் பிரியத்துக்கும், நீதியில் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரமும், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நமக்கு உயர்த்தி காட்டுகிறது.
மற்றொருவர் பாவனாவின் தாயாக வருபவர்.மகளை உற்சாகப்படுத்துகிறார்
ஒரு இடத்தில் தாகூரின் மேற்கோளை கூறி "கூண்டுக்குள் என்றால் சிறகு விரிப்பதற்கு இடமில்லை. ஆனால் அமர கம்பி உண்டு.வானத்தில் என்றால் சிறகு விரிப்பதற்கு இடம் உண்டு. ஆனால் அமர கம்பி இல்லை" எந்த வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுதந்திரம் அளிக்கிறார்.
காதலால் அவ்வளவு ஒன்றும் அழ வைத்திட முடியாது.. ஆனால் அவமானம் செய்வதற்கு முடியும் என காதல் பிரிவின் துயரத்தை தனது சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். நீதி சார்ந்த வார்த்தைகளை நாவல்களில் அவ்வப்போது பயன்படுத்துகிறார். உதாரணத்திற்கு
* உறக்கத்தின் நீதிபதி என்னுடைய மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்.
*இந்திய தண்டனைச் சட்டத்தில் சிரிப்பையும் அழுகையையும் குறித்த பிரிவுகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தேன்..
*வாழ்க்கை ஒரு வழக்கல்ல தீர்ப்பு தான் தெய்வம் யாருக்கும் நீதிபதி அல்ல எல்லாருக்கும் சாட்சி தான் என்று புரிந்து இருப்பார்.
தந்தை சீரியல் பார்த்துக் கொண்டு தன்னிடம் பேசுவதை பார்த்திருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு தந்தை இயல்பாக பேசுகிறார் இப்போது மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது அதற்கு
*அன்பின் ஆயுள் மின்சாரம் வரும் வரைக்குமே இருந்தது என்று வெளிப்படுத்துகிறார்.
இல்லாமையின் பரிபூரணத்துவத்தை உணர வைக்கும் விதமாக நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் படியும், நாமே அந்த கதாபாத்திரமாக ஒன்றி போகும்படியும் அமைந்துள்ளது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்துள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Wednesday, 4 March 2026
tea-23
#மனசுக்கு_ஒரு_தேநீர்_23
ஒருவனின் வாழ்நாளை எவ்வாறு
களவாட முடியும்?
எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை விதைத்து, தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 'அன்றைய' நாளை மறக்கடித்து விடு.
செய்த செயல்கள் ஏதுமின்றி அவனது ஆயுட் காலம் முழுவதும் கழிந்தே போய் விடும்.
-கஸ்ஸாலி
“Your mindset determines whether you see difficulty as a problem or a challenge
ஒரே நிகழ்வு
ஒருவருக்கு பிரச்சனை,
மற்றொருவருக்கு சவால்.
ஒரு பிரச்சனைக்கும் ஒரு சவாலுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. மஹாத்ரயா ரே
இதனை உதாரணங்களுடன் விளக்குகிறார்.
ஒரு காட்டின் நடுவில் ஒரு சிங்கம் என் எதிரில் நின்று கொண்டிருந்து, என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்றால், நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் என் கையில் ஓர் இயந்திரத் துப்பாக்கி இருந்தால், அந்த சிங்கத்திற்குப் பிரச்சனை என்று பொருள். சரியான நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சவால் மட்டும்தான் எனக்கு இருக்கும்.
நான் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை என்னிடம் உள்ள வளங்களைவிடப் பெரியதாக இருந்தால், அதை ஒரு பிரச்சனை என்று கூறலாம். ஆனால், என்னிடமுள்ள வளங்கள் நான் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையைவிடப் பெரிதாக இருந்தால், அது வெறும் சவால்தான்.
நம்முடைய பிரச்சனைகளை அளவுக்கதிகமாக மதிப்பிடுவதும், அப்பிரச்சனைகளை முறியடிக்கக்கூடிய நமது திறனை மிகவும் குறைவாக மதிப்பிடுவதும்தான் மனிதனுடைய இக்கட்டான சூழ்நிலை
சவால்களை வெற்றி கொள்ளும்போது, நீ இன்னும் பெரிய சவால்களைப் பின்தொடர அவை உனக்கு உதவுகின்றன; அதன் வாயிலாக அவை உனக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுக்கின்றன.
மனித வாழ்க்கை என்பது அமைதியான ஏரி அல்ல; அலைகள் எழும் கடல் போன்றது. அந்த அலைகளில் சிலவற்றை நாம் பிரச்சனை என்று அழைக்கிறோம்; சிலவற்றை சவால் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் அலை ஒன்று தான் — அதை நாம் பார்க்கும் பார்வை மட்டுமே வேறுபடுகிறது.
வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலை வந்தால் மனித மனம் முதலில் அதை பிரச்சனையாகவே உணர்கிறது. பிரச்சனை என்பது நம்மை நிறுத்திவிடும் சுவரைப் போன்றது. அது பயத்தையும் தளர்ச்சியையும் உருவாக்குகிறது.
அதே நிலையை ஒருவர் சவால் என்று எண்ணும் போது, அந்த சுவர் கதவாக மாறுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திறமையில் அல்ல; பார்வையில் தான்.
பிரச்சனை மனிதனை சோதிக்கிறது;
சவால் மனிதனை செதுக்குகிறது.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 2 March 2026
tea-22
#மனசுக்கு_ஒரு_தேநீர்_22
உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை.ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும் என்கிறார் ஹென்றி மில்லர்
நீண்டகாலமாக இருக்கும் செவி வழி கதை.ஆனால் வரலாற்று ரீதியாக நிருபிக்கப்படவில்லை. ஆனால்.எப்போது படித்தாலும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.
ஒரு நாள், ஸ்காட்லாந்து கிராமப்புறத்தில் ஒரு ஏழை விவசாயி Fleming என்பவர் சதுப்புநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் புதைகுழியில் மார்பளவு மூழ்கிவிட்டார். இதைக்கண்ட விவசாயி சற்றும் தாமதிக்காமல் கயிறு கட்டிச்சென்று காப்பாற்றினார்.
இதை அறிந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இச்செயலை பாராட்டி பணம் தந்தார். விவசாமி பிளெமிங் வாங்க மறுத்துவிட்டார்.
அப்போது அவர் கூறினார்:
“உங்கள் இளைய மகனுக்கு நல்ல கல்வி கிடைக்கட்டும்; அதற்கான செலவை நான் ஏற்கிறேன் என்று கூறி அவனை படிக்க வைத்தார்.
அந்த விவசாயியின் மகனே பின்னர் உலகப் புகழ்பெற்ற பென்சிலின் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானியான Alexander Fleming ஆவார்.
பல ஆண்டுகள் கழித்து, சதுப்பு நிலத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அச்சிறுவன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பென்சிலினால் காப்பாற்றப்பட்டார்.அவரது பெயர் Winston Churchill.
இதேபோன்று கரு.பழனியப்பன் பகிர்ந்த செய்தி.. எம்.ஜி.ஆரஇ பார்க்க.. மகனை தோளில் வைத்துக் கொண்டு தினசரி ஒருவர் சாலையில் நின்றிருந்தார்.ஒரு முறை அழைத்து விசாரித்ததில் ஐந்து மகனக்கு தங்கள் வாயால் பெயர் வைக்க வேண்டுமென சொன்னாராம். சிரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் இதுவரை எப்படி அழைத்தீர்கள் என கேட்டதற்கு மலைக்கள்ளன் படம் வந்த போது பிறந்ததால் அப்பெயர் வைத்து அழைக்கிறோம் என்றாராம். இதனைக் கேட்ட எம்.ஜி.ஆர், நல்ல பெயரை வைத்ததோடு.. அச்சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். கட் செய்தால் அமெரிக்காவில் சிகிச்சை பெற வந்த எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டராக மலைக்கள்ளன் வந்து நின்றாராம்.
Kindness returns in unexpected ways.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
கோ கமலக்கண்ணன்
வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களின்போது ‘நானும் மனிதன்தான்’ என்று அகத்துக்குள் நினைத்துக்கொள்வதற்கு ஒரு பொருள் உண்டு. நானும் பிழை செய்யக் கூடியவனே ஆனால் பிழையை ஏற்று முன்னகரும் ஆற்றலும் என்னுள் உண்டு என்பது ஒரு பார்வை. குற்ற உணர்வு கொண்டு அங்கிருந்து எழுந்து ஊக்கம் பெற்று சக மனிதன் மீது கருணை கொள்வது.
ஆனால் பொதுவாக மக்களைப் பாருங்கள். தனது பிறழ்வைப் பிறர் முன் நியாயப்படுத்தவே பெரும்பாலும் ‘நானும் மனுசன்தானே’ என்பார்கள். அதாவது உணர மாட்டார்கள், அலுத்துக்கொள்வார்கள். லஞ்சம், , திருட்டு, கொலை பாதகங்கள் அனைத்தையும் தன்பொருட்டு செய்துவிட்டு ‘நானும் மனிதன் தானே’ என்று அங்கலாய்ப்பார்கள்.
அதற்கு ‘நானும் மூடர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளத்தான் விரும்புகிறேன். அறமெல்லாம் ஒரு ஓரமாக இருக்கட்டும். அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் மதிப்பில்லை’ என்பதுதான் பொருள்.
எப்போது பார்த்தாலும் ‘அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்’ என்று சொல்லிக்கொண்டே திரிவது ஒரு வித மனநோய். அத்தகையோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்லர், மனிதப் பதர்கள்.
முதுமையில் கனிந்தால் பிறருக்கு இனிப்பைத் தர முடியும். கனிவு என்பது தளர்வு அல்ல. ஊக்கத்தால் எய்தக் கூடிய மேன்மை நிலை. மாறாக தன் தீங்குகளை வாதத்தால் தக்க வைத்தபடி இறுகிக் கொண்டே போனால் முதுமை பாறையாகத்தான் முடியும். அத்தகைய அக ஊக்கம் அற்றோரையே நடமாடும் மரங்கள் என்கிறார் வள்ளுவர்.
-கோ.கமலக்கண்ணன்
Sunday, 1 March 2026
tea-21
#மனசுக்கு_ஒரு_தேநீர்_21
“சிஸோகூ” (Chisoku) புத்தமதத்தில் வரும் ஒரு முக்கியமான வாழ்வியல் கோட்பாடு. இதன் பொருள்:
“கிடைத்ததிலே திருப்தி கொள்” அல்லது “மனநிறைவு அறிந்து வாழ்” என்பதாகும்.
புத்தமதம் கூறுவது:
ஆசை குறைந்தால் மனம் அமைதியாகும்;
திருப்தி வந்தால் வாழ்க்கை நிறைவாகும்.
சாலையில் யாரோ கோபத்தைத் தூண்டினால், அந்தத் தூண்டுதல் (contact) கோபத்தை (feeling → craving) உருவாக்கும். ஆனால், புன்னகைத்து "இது தற்காலிகம்" என ஞானத்தால் கோபத்தின் சங்கிலியை நிறுத்தினால், சிசோகூ நிகழ்கிறது.
மனித வாழ்க்கையின் பெரும்பாலான துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் “இன்னும் வேண்டும்” என்ற முடிவில்லா ஆசை. இதற்கு எதிர்மறையான மருந்தாக புத்தமதம் முன்வைக்கும் முக்கிய வாழ்வியல் நெறி தான் சிஸோகூ கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் அறிவு. அதிகம் சேர்ப்பது வாழ்க்கை இலக்கு அல்ல.மனநிறைவு தான் உண்மையான செல்வம்
சிஸோகூ என்பது வறுமையை ஏற்க வேண்டும் என்பதல்ல;
அது ஆசைக்கு எல்லை வைப்பதன் மூலம் மன அமைதி பெறும் அறிவு.
மனிதன் எவ்வளவு பெற்றாலும் இன்னும் வேண்டும் என்று நினைத்தால்
அவன் எப்போதும் குறைவாகவே உணர்வான்.
ஆனால் கிடைத்ததை உணர்ந்து நன்றி கொண்டால்,
அவனுக்குள் நிறைவு தோன்றும்.
“He who knows that enough is enough will always have enough.” — Lao Tzu
இது சிஸோகூவின் நேரடி தத்துவ வடிவம்.
Chisoku is not having less; it is realizing you already have enough.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Tuesday, 24 February 2026
Sunday, 22 February 2026
tea-20
#மனசுக்கு_ஒரு_தேநீர்_20
“நான் தெரிந்தவன்” என்று நினைக்கும் நொடியில் வளர்ச்சி நிற்கிறது;
“நான் கற்றுக்கொள்கிறேன்” என்று நினைக்கும் நொடியில் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த உண்மையை வாழ்க்கை தத்துவமாக மாற்றும் எண்ணமே Beginner’s Mindset.
இந்தக் கருத்தை ஜென் தத்துவத்தில் விளக்கியவர் Shunryu Suzuki, அவர் எழுதிய Zen Mind, Beginner’s Mind நூல் உலகளவில் இந்த மனப்பாங்கை பரப்பியது.
தொடக்க மனநிலை என்பது
தெரிந்த விஷயத்தையும் புதிய கண்களால் காணும் மனநிலை.
ஒரு குழந்தை உலகைப் பார்ப்பதை நினைத்துப் பாருங்கள்.
அதற்கு எல்லாமே புதிது, அதனால் எல்லாமே அதிசயம்.அதே ஆச்சரிய உணர்வை பெரியவர்களாக இருந்தாலும் இழக்காமல் வைத்திருப்பதே இந்த தத்துவம்.
எந்த ஒரு விஷயத்தையும் முன் முடிவுகளுடன் ஆராயமல் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது ஆகும்
இதனால் சலிப்பு குறைந்து புத்துணர்வு தருகிறது.பதிலை முன்பே யூகிக்காமல் அவர்கள் சொல்லும்வரை பொறுமை காப்பது,
முன்பே இதுதான் இக்கதை சொல்ல வருகிறது என யோசிக்காமல் முழுமையாக படிப்பது,சரி தவறுக்கு
அப்பாற்பட்டு வேறொரு கோணத்தில் சிந்தித்து நல்லவற்றை எடுத்துக் கொளவது,சிறிய தருணங்களில் கூட உணர்வு பூர்வமாக செயல்படுவது, இவ்வாறு செய்வதால் பதட்டத்தை தணிக்கச் செய்யும்.
மனம் வெறுமையாக இருந்தால் எதற்கும் தயாராக இருக்கும்.
பிரச்சினைகள் வெளியுலகத்தில் இல்லை மனதில்தான்.உண்மை உண்மையாக காண் என்கிறது.
ஒரு பணியாளர் “I know everything” என்றால் வளர்ச்சி முடியும்.
“I’m still learning” என்றால் உயர்வு தொடங்கும்.நாம் ஒருவரை முழுமையாக தெரிந்துவிட்டோம் என்று நினைத்தால் புரிதல் குறையும்.அவரை தினமும் புதிதாய் அறிய முயன்றால் அன்பு அதிகரிக்கும்.
தொடக்க மனநிலை என்பது அறியாமை அல்ல,அது உயர்ந்த அறிவின் அறிகுறி.எப்போதும் தொடக்க நிலை மாணவனாக இருப்பவன் தான் உண்மையான ஞானி.
மனம் சோர்வடைவது கற்றல் காரணமாக அல்ல;
கற்றலை நிறுத்துவதால்தான்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
ஜா-31
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 31
"நாம் சந்தித்தோம், பின் பிரிந்தோம்;
இப்போது தூரிகையும் மையும்
இட்ட சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"
- டைகு ரயோகன் (Daigu Ryokan)
இந்தக் கவிதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிக அழகாகப் பேசுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் தோன்றுவதும் (சந்திப்பு), மறைவதும் (பிரிவு) இயற்கையான சுழற்சி. எவருமே எப்போதும் கூடவே இருப்பதில்லை.
இங்கு 'தூரிகை மற்றும் மை' என்பது ஒரு கலைப்படைப்பையோ அல்லது நாம் விட்டுச் செல்லும் நினைவுகளையோ குறிக்கிறது. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் செய்த செயல்களும், அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகளுமே உலகத்தில் சாட்சிகளாக எஞ்சியிருக்கும்.
நாம் வாழும் காலத்தில் மற்றவர் இதயத்தில் அல்லது இந்த உலகில் எத்தகைய பாதிப்பை (சுவடுகள்) ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.
இந்தச் சிறிய கவிதை மகிழ்ச்சியான வாழ்விற்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:
1. நிகழ்காலத்தில் வாழுதல்: சந்திப்புகளும் உறவுகளும் நிரந்தரமற்றவை என்று உணரும்போது, தற்போது நம்முடன் இருப்பவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளத் தோன்றும்.
2. பற்றற்ற நிலை:
பிரிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தால், இழப்புகளால் வரும் துயரம் குறையும்.
3. நல்ல சுவடுகளை ஏற்படுத்துதல்: "நான் போன பிறகு என்ன எஞ்சியிருக்கும்?" என்ற கேள்விக்கு விடையாக, ஒரு ஓவியமாகவோ, கவிதையாகவோ அல்லது ஒரு நல்ல செயலாகவோ பிறருக்குப் பயனுள்ள ஒன்றை விட்டுச் செல்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை உணரலாம்.
"வாழ்க்கை ஒரு தருணம்; அதில் நாம் தீட்டும் ஓவியம் (நல்ல செயல்கள்) மட்டுமே என்றும் நிலைக்கும்"
Saturday, 21 February 2026
கோ.கமலக்கண்ணன்
‘நீ தகுதி உள்ளவனா?’
அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.
தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும்.
வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர்.
ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர்.
நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார்.
நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு.
வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார்.
இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்!
இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.
-கோ.கமலக்கண்ணன்
வெளியே முற்றத்தில் வெயில் அனாதையாய நின்று வதைத்து கொண்டிருந்தது.அது உறவு தேடி வீட்டுக்குள்ளும்வெக்கையாய் நுழைந்தது. அவன் வீட்டிலிருந்த மின்விசிறியால் வெக்கைக்காற்றை விரட்டியடிக்க முடியவில்லை.அதன் விசிறலிலும் வெக்கைக் காற்றே அனாயசமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது-அபிமானி(மஞ்சள் என்பது நிறமல்ல சிறுகதையில்)
Tuesday, 17 February 2026
tea-19
#மனசுக்கு_ஒரு_தேநீர்_19
புதிதாக நாம் ஒன்றை கற்க ஆரம்பித்து சில நாள்களிலேயே ஏன் நாம் கைவிட்டு விடுகிறோம்?
You lose because you focus on the outcome, not the"doing"
இப்படி செய்தால், அப்படி வரும்" என்று நமக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடியதை மட்டுமே குறி வைக்கிறோம். போக வேண்டிய பாதையை பற்றி இல்லை.
வெற்றியை பெற ஒரே ஒரு வழி தான். நிலையான முயற்சியுடன், ஒழுங்காக செய்வது தான்.
அமெரிக்க உளவியலாளர் கூறுகிறார்.. ஒரு பஃபே பந்தி உள்ளது.சிறந்த உணவுகள் உங்கள் முன்னே இருக்கின்றன.அங்கு செல்வதற்கு இரண்டு அடிகள் தான் உள்ளன.அதற்கு நாம் முதலில் வரிசையில் நிற்க வேண்டும். அதே வரிசையில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அந்த உணவினை நாமே சென்று தான் எடுக்க வேண்டும். யாரும் எடுத்து வர மாட்டார்கள் என நம்ப வேண்டும்.பக்கத்தில் உள்ள வரிசை வேகமாய் செல்வது போல் தோன்றும்.ஆனால் அங்கு செல்லாமல் நிற்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுடன் ஒரே இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
உன்னுடைய துறையில் நீ நிலைத்து நிற்கவும் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.புதுப்புது விசயங்களையும்,திறமையும் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.நீ தேக்கமடைந்து நின்றுவிட்டால் உன் பின்னால் உள்ளவர்கள் உன் அருகில் உள்ளது போல் இருப்பார்கள். ஆனால் சிறிது நேரத்தில் உனக்கு முன்னால் வெகு தூரத்தில் நிற்பார்கள். ஆகவே புதிய பழக்கத்தை வசமாக்க தொடர்ந்து அதனை செய்வதுதான் சாத்தியம்.
ஒரு புத்தகத்தை படிக்க 3 மாதங்கள் கூட ஆகலாம், பரவாயில்லை. உங்கள் அக்கறை தினமும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அது தினம் ஒரு பக்கமாக கூட இருக்கலாம். நிலையான முயற்சி இருக்க வேண்டும்.
ஒரு புதிய பழக்கம் ஒன்று பழக, அது
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.எளிதாக இருக்க வேண்டும்.அதை செய்யும் பொழுது உங்களுக்கு முழு திருப்தி கிடைக்க வேண்டும்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 16 February 2026
book-14
#Reading_Marathon2026
#26RM009
Book No:14/150+
Pages:-157
உருவாகும் உள்ளம்
-எஸ்.ராமச்சந்திரன்
தமிழில் ஆயிஷா இரா.நடராசன்
#12மாதம்_ஒரு_எழுத்தாளர்
சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் ஆசிரியர் கே.என் சிவராமன் அவர்கள் எஸ் ராமச்சந்திரன் எழுதி ஆயிஷா நடராசன் மொழி பெயர்த்த உருவாகும் உள்ளம் என்ற புத்தகத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அப்போதே தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதன் பின்பு எதேச்சையாக புத்தகத் திருவிழாவில் வாங்கியதுதான் இந்த புத்தகம். மருத்துவராகவும் ஆய்வு உளவியலாளராகவும் அழைக்கப்படும் ராமச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கின்ற போது நிகழ்த்திய பேருரைகள், அவர் எழுதிய கட்டுரைகள் என ஐந்து பகுதிகளாக இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.
மூளையைப் பற்றி படித்த புத்தகங்களில் தலைமைச் செயலகம், விகடன் வெளியிட்ட உச்சி முதல் பாதம் வரை புத்தகத்திற்கு பிறகு மூளையைப் பற்றி மிக எளிதாக அதில் உள் நடைபெறும் மாற்றங்கள் பற்றி நமக்கு எளிமையாக இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.
இந்நூல் மனித மனம், சிந்தனை, உணர்ச்சி, நினைவு போன்றவை மூளையின் செயல்பாடுகளால் எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறது.
மனிதன் காட்சிகளை எவ்வாறு அறிந்துகொள்கிறான் என்பதை மூளையின் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் மூலம் விவரிக்கிறது
ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் மறந்துவிடும் நோய் வந்து விடுவது இயற்கை. மீண்டும் தலையில் அடித்தால் அந்த நோய் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் எனக்குத் தெரிந்து இதை உடைத்தது சேது படம் தான். தலையின் அடிபட்ட பின் சித்த வைத்தியம் மூலமாக நினைவுகளை மீட்டுக் கொணர்வது. இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தலையில் அடிபட்ட பின் அல்லது மூளையில் ஏதேனும் ஒரு இடத்தில் பழுதாகி விட்டால் முகக்குருடு என்று அழைக்கப்படும் அமைக்டாலா என்னும் அமைப்பு உள்ளது. இது உணர்வு மண்டலம் மையங்களுக்கு தொடர்பு கருவியாக உள்ளது எனவும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நினைவு மறதி உள்ளிட்ட தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் விரிவாக இதில் சொல்லியுள்ளார். மேலும் மூலையில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவாக இதில் சொல்லியிருப்பார்.
சிரிப்பு ஏன் வருகிறது?சாலையில் ஒருவர் விழுந்தவுடன் வரும் சிரிப்பு? எதனால் ஏன்? மூளை நரம்புகள் என்ன செய்கின்றன என்பதை காரணத்துடன் கூறுகிறார்.
பார்வையின் வழியே கவனிப்பதை மூளை எவ்வாறு கண்டுணர்கிறது? அப்போது எந்த நரம்பின் பங்குபெறுதலால் இது நடக்கிறது?
மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்?
மிரர் அக்நோசியா,மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நியூரான்களின் பெரிய பங்கு என இதற்கு அறிவியல் பூர்வ எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார்.
கலைத்திறன் கூறுகள் மனித மூளையில் உள்ளனவா? அதற்கு பேராசிரியர் 10 வித பொதுவிதிகளை முன் வைக்கிறார்.கேலிச்சித்திரங்கள்
சோழர் கால சிற்பங்கள் போன்றவற்றை விளக்கி புள்ளிகளை கோர்வையாக அணிப்படுத்தி உருவத்தை கண்டுபிடிக்கும் வேலையை மூளை செய்கிறது. பரிணாமம் அடைந்த பிறகு மூளையின் அதீத உந்துதலுடன் அவற்றை உணர்வது நேரடி காரணமாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.மேலும் மில்லர், ஸ்டீவ் பிங்கரின் கலை குறித்த கோட்பாட்டினை பொருத்திப் பார்க்கிறார்.
மனித மனத்தின் இயல்பை அறிவியல் கோணத்தில் புரிய வைக்கும் சிறந்த அறிவியல் அறிமுக நூல்.உணர்ச்சி உருவாகும் நரம்பியல் காரணங்கள்,மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்,டிஸ்லெக்சியா போன்ற கற்றல் கோளாறுகள் தொடர்பான ஆய்வுகள், சைனஸ்தீசியா நோய் குறித்தும் விளக்கியுள்ளார் மூளை குறித்த வந்த புத்தகங்கள் பைபாஸ் ரோட்டில் செல்வது போல் இருக்கும்..இது மூளையை நரம்புகளுடன் இணைத்து கூறும்போது பைபாஸிலிருந்து ஊருக்குள் போய் வருவது போல நுண்ணிய பல பகுதிகளை விவரித்துள்ளார். இது அறிவியல் நூல் என்ற பயமே ஏற்படாமல் அழகிய எளிய தமிழில் ஆயிஷா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
தொடந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 15 February 2026
tea-18
#மனசுக்கு_ஒரு_தேநீர்_18
உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.
1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.
கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும்.
2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள் என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள்.
எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும்.
3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே.
யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல.
4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும்.
அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை.
5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.
நன்றி:ஷான்
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Thursday, 12 February 2026
Tuesday, 10 February 2026
tea-17
#மனசுக்கு_ஒரு_தேநீர்_17
இன்றைய சமூக ஊடக காலத்தில் மனிதனின் பங்கு அளப்பரியது. கவனம் மிகப் பெரிய நாணயமாக மாறியுள்ளது. அந்தக் கவனத்தைப் பிடிக்க சிலர் அன்பையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்; இன்னும் சிலர் கோபத்தை. கோபத்தைத் தூண்டி, அதன்மூலம் பார்வை, பகிர்வு, விவாதம் ஆகியவற்றைப் பெருக்கும் யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
2015ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் தான் Rage bait.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் எனலாம்.
மக்களை உண்மையைச் சிந்திக்க வைப்பதற்காக அல்லாமல்
அவர்களை உடனடி கோபத்திற்கு தள்ளுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.உணர்ச்சி வசப்பதிவுகள், பாதி உண்மை, மிகைப்படுத்துதல்கள் இவைகளே ஆயுதம் Rage bait.
“If you want to control people, make them angry.”போல
மனித மனம் அமைதியை விட கோபத்திற்கே வேகமாக எதிர்வினை செய்கிறது.முகம் தெரியாத ஒருவர் மீது வன்மத்தை வார்த்தைகளில் உமிழ்கிறோம்.உரையாடத் தெரியாமலோ சிந்தனை வறட்சியாலோ வாக்குவாதம் செய்கிறோம்.சிந்தனை மேடையாக இல்லாமல்.சந்தைக் கடை போல் கூச்சலிடுகிறோம்.தனது கருத்துதான் சரி என்பதை வலுப்படுத்த எந்த எல்லை வரையும் செல்லத் தயங்குவதில்லை.
சில எதிர் கருத்துகளுக்கு குழுவாக வந்து திட்டி கோபத்தை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள் ஆன்லைன் யுகத்தில்.
செனிகா எனும் அறிஞர் கூறுகிறார்..“We suffer more often in imagination than in reality.” உண்மையை விட கண்மூடித்தனமான கற்பனைகளுக்கு அதிக இடம் அளிக்கிறோம்
Rage bait நம்மிடம் ஒரு முக்கியமான வாழ்வியல் பாடத்தைச் சொல்கிறது:
எதை நாம் கவனிக்கிறோமோ, அதையே நாம் வளர்க்கிறோம்.
ஒவ்வொரு தூண்டிவிடும் பதிவுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வினை ஆற்றாமல், தன் கருத்திற்கு உடன்படவில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவது சுலபம்.
சில நேரங்களில் மௌனம் தான் மிகச் சக்திவாய்ந்த எதிர்வினை.
“You don’t have to attend every argument you’re invited to.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 9 February 2026
tea-16
#மனசுக்கு_ஒரு_தேநீர்_16
Theory X & Theory Y
“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"
எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y.
இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.
Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது
“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்
Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor
இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது.
இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம்.
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Saturday, 7 February 2026
ஜா-28
வாழ்க்கைக்கு ஹைக்கூ 28
“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”
- யமகுச்சி சோடோ
ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.
இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.
இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.
செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.
ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.
Thursday, 5 February 2026
book-11
#Reading_Marathon2026
#26RM009
Book No:11/150+
Pages:-160
தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்
கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.
“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”
என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.
இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்
மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..
ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?
'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.
கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..
"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.." என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.
ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.
கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.
சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..
அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.
ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.
இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.
காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.
விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 4 February 2026
Wednesday, 28 January 2026
ஜா-27
வாழ்க்கைக்கு ஹைக்கூ 27:
"பிளம் மரத்தில்
ஒரு மலர்,
ஒரு மலர்அளவு
வெப்பம்.."
- ரன்செட்சு (Ransetsu)
ஜப்பானிய கலாச்சாரத்தில் 'பிளம்' (Plum) மலர்கள் குளிர்காலத்தின் இறுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் பூக்கக் கூடியவை.
கடுங்குளிரில் மரம் மொட்டையாக இருக்கும்போது, முதன்முதலில் பூக்கும் அந்த ஒரே ஒரு மலர் வசந்தத்தின் வருகையை அறிவிக்கிறது. இங்கு "ஒரு மலர்" என்பது வெறும் பூவை மட்டும் குறிக்கவில்லை; அது நம்பிக்கையின் அடையாளம்.
அந்தச் சிறிய மலர் மலர்வதால், உலகமே மெல்ல வெப்பமடையத் தொடங்குகிறது என்பதை "ஒரு மலர்அளவு வெப்பம்" (One blossom-worth of warmth) என்று கவிஞர் அழகாகக் கூறுகிறார்.
****
இந்தச் சிறிய கவிதை நமது வாழ்க்கைக்குப் பல ஆழமான பாடங்களைக் கற்றுத் தருகிறது. பெரிய மாற்றங்கள் எப்போதும் பிரம்மாண்டமாகத் தொடங்குவதில்லை. ஒரு சிறிய மலர் எப்படிப் பெரிய வசந்தத்தை வரவேற்கிறதோ, அதுபோல நம் வாழ்க்கையின் ஒரு சிறிய நேர்மறையான மாற்றமோ அல்லது ஒரு நல்ல செயலோ ஒட்டுமொத்த வாழ்வையும் ஒளிரச் செய்யும்.
வாழ்க்கை மிகக் கடினமாகவும், குளிர்காலத்தைப் போல உறையச் செய்வதாகவும் இருக்கும்போது, கண்ணுக்குத் தெரியும் ஒரு சிறிய நல்வாய்ப்பு கூட "இனி எல்லாம் மாறும்" என்கிற நம்பிக்கையைத் தரும்.
ஒரு பெரிய மரத்தில் பூத்திருக்கும் அந்த ஒற்றை மலரை உற்றுக் கவனிக்கும்போதுதான் அதன் மதிப்பும், இயற்கையின் இயக்கமும் நமக்குத் தெரிகிறது. அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சிறிய சந்தோஷங்களைக் கொண்டாடப் பழக வேண்டும்.
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தைப் போன்றது இந்த பிளம் மலர். அந்த ஒரு மலர் தரும் வெப்பம், விரைவில் மரம் முழுவதும் பூக்கள் பூக்கும் என்பதற்கான நம்பிக்கை. & அந்த நம்பிக்கையே வாழ்க்கை.
Tuesday, 27 January 2026
tea-12
#மனசுக்கு_ஒரு_தேநீர்_12
வால்டர் மிஷல் எனும் ஆசிரியர் வகுப்பிலுள்ள பத்து மாணவர்களுக்கு அழகிய கேக்கினை கொண்டு வந்தார்.அவர்கள் முன்னே அதனை வைக்கிறார்.பத்து நிமிடங்கள் யாரும் சாப்பிடக் கூடாது எனும் நிபந்தனை வைக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது ஏழு பேர் சாப்பிட்டுள்ளனர்..மூன்று பேர் சாப்பிடவில்லை.அவர்களை ஆய்வு செய்தபோது அந்த மூன்று பேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பதும், மற்றவர்கள்
சாதாரண வாழ்க்கை வாழ்வதையும் அறிகிறார்.
பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"என கணிக்கிறார்.
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு வைத்த தேர்விற்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது அதற்கு "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது.
இன்றைய பொறுமை, நாளைய வெற்றி.மனித வாழ்க்கையின் பெரும் சவால்களில் ஒன்று இப்போதே கிடைக்கக்கூடிய சுகத்தையும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெரும் நன்மையையும் தேர்வு செய்வதுதான். இந்தத் தேர்வின் மையத்தில்தான் மார்ஷ்மெல்லோ தியரி நிற்கிறது.
“The ability to delay gratification is a critical factor in long-term success.”
— Walter Mischel
இந்தத் தியரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது முழு மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இதுவா அதுவா எனும் தேர்வு
எல்லாமே மார்ஷ்மெல்லோ தியரியின் மறுவடிவங்களே.
தன்னைக் கட்டுப்படுத்தும் தன்மையே அதிகம் போராட்டமானது.
ஒரு மனிதன் இன்றைய சோம்பலை ஒதுக்கி, தொடர்ச்சியான உழைப்பைத் தேர்வு செய்யும் போதும், வாழ்க்கையின் இனிப்பை பின்னாளில் பெரிதாகச் சுவைக்கிறான்.
“Self-control is choosing what you want most over what you want now.”
இன்றைய வேகமான உலகில், உடனடி திருப்தி எளிதாகக் கிடைக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஸ்க்ரோல், ஒரு ஸ்வைப்—என மகிழ்ச்சிகள் உடனே. ஆனால் அந்த மகிழ்ச்சி தற்காலிகம். மார்ஷ்மெல்லோ தியரி நமக்கு நினைவூட்டுவது ஒன்றே: தற்கால இன்பத்தை துறந்தவர்களுக்கே நிலையான வெற்றி கிடைக்கும்.பொறுமை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு மறைமுக வலிமை. இன்று நம்மை நாம் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு தருணமும், நாளைய நம்மை வலுப்படுத்துகிறது.
“Discipline is remembering what you want.”
— David Campbell
“இப்போதைய ஆசையை கட்டுப்படுத்தத் தெரிந்தவன், எதிர்காலத்தை கட்டுப்படுத்தக் கற்றவனாகிறான்.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 26 January 2026
tea-11
#மனசுக்கு_ஒரு_தேநீர்_11
வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை நிறைவுடன் வாழலாம்.
வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.
சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி. அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.
உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும் இருக்கிறது
செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Subscribe to:
Comments (Atom)