கோலப்பொடி
Thursday, 12 February 2026
Tuesday, 10 February 2026
tea-17
#மனசுக்கு_ஒரு_தேநீர்_17
இன்றைய சமூக ஊடக காலத்தில் மனிதனின் பங்கு அளப்பரியது. கவனம் மிகப் பெரிய நாணயமாக மாறியுள்ளது. அந்தக் கவனத்தைப் பிடிக்க சிலர் அன்பையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்; இன்னும் சிலர் கோபத்தை. கோபத்தைத் தூண்டி, அதன்மூலம் பார்வை, பகிர்வு, விவாதம் ஆகியவற்றைப் பெருக்கும் யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
2015ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் தான் Rage bait.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் எனலாம்.
மக்களை உண்மையைச் சிந்திக்க வைப்பதற்காக அல்லாமல்
அவர்களை உடனடி கோபத்திற்கு தள்ளுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.உணர்ச்சி வசப்பதிவுகள், பாதி உண்மை, மிகைப்படுத்துதல்கள் இவைகளே ஆயுதம் Rage bait.
“If you want to control people, make them angry.”போல
மனித மனம் அமைதியை விட கோபத்திற்கே வேகமாக எதிர்வினை செய்கிறது.முகம் தெரியாத ஒருவர் மீது வன்மத்தை வார்த்தைகளில் உமிழ்கிறோம்.உரையாடத் தெரியாமலோ சிந்தனை வறட்சியாலோ வாக்குவாதம் செய்கிறோம்.சிந்தனை மேடையாக இல்லாமல்.சந்தைக் கடை போல் கூச்சலிடுகிறோம்.தனது கருத்துதான் சரி என்பதை வலுப்படுத்த எந்த எல்லை வரையும் செல்லத் தயங்குவதில்லை.
சில எதிர் கருத்துகளுக்கு குழுவாக வந்து திட்டி கோபத்தை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள் ஆன்லைன் யுகத்தில்.
செனிகா எனும் அறிஞர் கூறுகிறார்..“We suffer more often in imagination than in reality.” உண்மையை விட கண்மூடித்தனமான கற்பனைகளுக்கு அதிக இடம் அளிக்கிறோம்
Rage bait நம்மிடம் ஒரு முக்கியமான வாழ்வியல் பாடத்தைச் சொல்கிறது:
எதை நாம் கவனிக்கிறோமோ, அதையே நாம் வளர்க்கிறோம்.
ஒவ்வொரு தூண்டிவிடும் பதிவுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வினை ஆற்றாமல், தன் கருத்திற்கு உடன்படவில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவது சுலபம்.
சில நேரங்களில் மௌனம் தான் மிகச் சக்திவாய்ந்த எதிர்வினை.
“You don’t have to attend every argument you’re invited to.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 9 February 2026
tea-16
#மனசுக்கு_ஒரு_தேநீர்_16
Theory X & Theory Y
“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"
எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y.
இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.
Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது
“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்
Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor
இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது.
இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம்.
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Saturday, 7 February 2026
ஜா-28
வாழ்க்கைக்கு ஹைக்கூ 28
“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”
- யமகுச்சி சோடோ
ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.
இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.
இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.
செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.
ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.
Thursday, 5 February 2026
book-11
#Reading_Marathon2026
#26RM009
Book No:11/150+
Pages:-160
தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்
கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.
“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”
என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.
இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்
மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..
ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?
'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.
கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..
"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.." என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.
ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.
கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.
சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..
அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.
ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.
இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.
காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.
விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 4 February 2026
Wednesday, 28 January 2026
ஜா-27
வாழ்க்கைக்கு ஹைக்கூ 27:
"பிளம் மரத்தில்
ஒரு மலர்,
ஒரு மலர்அளவு
வெப்பம்.."
- ரன்செட்சு (Ransetsu)
ஜப்பானிய கலாச்சாரத்தில் 'பிளம்' (Plum) மலர்கள் குளிர்காலத்தின் இறுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் பூக்கக் கூடியவை.
கடுங்குளிரில் மரம் மொட்டையாக இருக்கும்போது, முதன்முதலில் பூக்கும் அந்த ஒரே ஒரு மலர் வசந்தத்தின் வருகையை அறிவிக்கிறது. இங்கு "ஒரு மலர்" என்பது வெறும் பூவை மட்டும் குறிக்கவில்லை; அது நம்பிக்கையின் அடையாளம்.
அந்தச் சிறிய மலர் மலர்வதால், உலகமே மெல்ல வெப்பமடையத் தொடங்குகிறது என்பதை "ஒரு மலர்அளவு வெப்பம்" (One blossom-worth of warmth) என்று கவிஞர் அழகாகக் கூறுகிறார்.
****
இந்தச் சிறிய கவிதை நமது வாழ்க்கைக்குப் பல ஆழமான பாடங்களைக் கற்றுத் தருகிறது. பெரிய மாற்றங்கள் எப்போதும் பிரம்மாண்டமாகத் தொடங்குவதில்லை. ஒரு சிறிய மலர் எப்படிப் பெரிய வசந்தத்தை வரவேற்கிறதோ, அதுபோல நம் வாழ்க்கையின் ஒரு சிறிய நேர்மறையான மாற்றமோ அல்லது ஒரு நல்ல செயலோ ஒட்டுமொத்த வாழ்வையும் ஒளிரச் செய்யும்.
வாழ்க்கை மிகக் கடினமாகவும், குளிர்காலத்தைப் போல உறையச் செய்வதாகவும் இருக்கும்போது, கண்ணுக்குத் தெரியும் ஒரு சிறிய நல்வாய்ப்பு கூட "இனி எல்லாம் மாறும்" என்கிற நம்பிக்கையைத் தரும்.
ஒரு பெரிய மரத்தில் பூத்திருக்கும் அந்த ஒற்றை மலரை உற்றுக் கவனிக்கும்போதுதான் அதன் மதிப்பும், இயற்கையின் இயக்கமும் நமக்குத் தெரிகிறது. அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சிறிய சந்தோஷங்களைக் கொண்டாடப் பழக வேண்டும்.
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தைப் போன்றது இந்த பிளம் மலர். அந்த ஒரு மலர் தரும் வெப்பம், விரைவில் மரம் முழுவதும் பூக்கள் பூக்கும் என்பதற்கான நம்பிக்கை. & அந்த நம்பிக்கையே வாழ்க்கை.
Tuesday, 27 January 2026
tea-12
#மனசுக்கு_ஒரு_தேநீர்_12
வால்டர் மிஷல் எனும் ஆசிரியர் வகுப்பிலுள்ள பத்து மாணவர்களுக்கு அழகிய கேக்கினை கொண்டு வந்தார்.அவர்கள் முன்னே அதனை வைக்கிறார்.பத்து நிமிடங்கள் யாரும் சாப்பிடக் கூடாது எனும் நிபந்தனை வைக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது ஏழு பேர் சாப்பிட்டுள்ளனர்..மூன்று பேர் சாப்பிடவில்லை.அவர்களை ஆய்வு செய்தபோது அந்த மூன்று பேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பதும், மற்றவர்கள்
சாதாரண வாழ்க்கை வாழ்வதையும் அறிகிறார்.
பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"என கணிக்கிறார்.
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு வைத்த தேர்விற்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது அதற்கு "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது.
இன்றைய பொறுமை, நாளைய வெற்றி.மனித வாழ்க்கையின் பெரும் சவால்களில் ஒன்று இப்போதே கிடைக்கக்கூடிய சுகத்தையும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெரும் நன்மையையும் தேர்வு செய்வதுதான். இந்தத் தேர்வின் மையத்தில்தான் மார்ஷ்மெல்லோ தியரி நிற்கிறது.
“The ability to delay gratification is a critical factor in long-term success.”
— Walter Mischel
இந்தத் தியரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது முழு மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இதுவா அதுவா எனும் தேர்வு
எல்லாமே மார்ஷ்மெல்லோ தியரியின் மறுவடிவங்களே.
தன்னைக் கட்டுப்படுத்தும் தன்மையே அதிகம் போராட்டமானது.
ஒரு மனிதன் இன்றைய சோம்பலை ஒதுக்கி, தொடர்ச்சியான உழைப்பைத் தேர்வு செய்யும் போதும், வாழ்க்கையின் இனிப்பை பின்னாளில் பெரிதாகச் சுவைக்கிறான்.
“Self-control is choosing what you want most over what you want now.”
இன்றைய வேகமான உலகில், உடனடி திருப்தி எளிதாகக் கிடைக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஸ்க்ரோல், ஒரு ஸ்வைப்—என மகிழ்ச்சிகள் உடனே. ஆனால் அந்த மகிழ்ச்சி தற்காலிகம். மார்ஷ்மெல்லோ தியரி நமக்கு நினைவூட்டுவது ஒன்றே: தற்கால இன்பத்தை துறந்தவர்களுக்கே நிலையான வெற்றி கிடைக்கும்.பொறுமை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு மறைமுக வலிமை. இன்று நம்மை நாம் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு தருணமும், நாளைய நம்மை வலுப்படுத்துகிறது.
“Discipline is remembering what you want.”
— David Campbell
“இப்போதைய ஆசையை கட்டுப்படுத்தத் தெரிந்தவன், எதிர்காலத்தை கட்டுப்படுத்தக் கற்றவனாகிறான்.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 26 January 2026
tea-11
#மனசுக்கு_ஒரு_தேநீர்_11
வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை நிறைவுடன் வாழலாம்.
வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.
சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி. அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.
உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும் இருக்கிறது
செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 25 January 2026
பெங்குயின்
வெர்னர் ஹெர்சாக்கின் Encounters at the End of the World , இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த டாக்குமென்ட்டரி வைரல் ஆகும் என வெர்னர் ஹெர்சாக்கே நினைத்திருக்க மாட்டார். இப்போதும்கூட அதை வைரல் செய்யும் நபர்களுக்கு, வெர்னர் ஹெர்சாக் குறித்தோ, Encounters at the End of the World டாக்குமென்ட்டரி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Nihilist Penguin meme என அழைக்கபடும் மீமில் ஒரு அடேல் பென்குயின் தன்னந்தனியாக யாருமற்ற திசை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அது எங்கு செல்கிறது என்பது தான் பலரின் கேள்வி. முதலில் டிக்டாக்கில் வைரலாக, பின்பு இன்ஸ்டாவில் வைரலாகி, தற்போது white house வரை வைரலாகியிருக்கிறது.
He is heading towards certain death என வீடியோவில் பேசியிருப்பார் வெர்னர் ஹெர்சாக்.
2010ல் penguin depressed என்னும் தலைப்பில், அந்த இரண்டு நிமிட க்ளிப்பை ஒருவர் youtubeல் அப்லோடு செய்ய அது கிட்டத்தட்ட 88 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. அந்த பென்குயினைத் தடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என மனிதர்களிடம் ஏற்கெனவே வெர்னர் ஹெர்சாக் சொல்லிவிட்டார். அதனால், அந்த 5000 கிமீ பனிப்பாதையை அது தனியே கடக்கவிருக்கிறது.
பென்குயின்கள் பெரும்பாலும் தனித்து வாழ்பவை அல்ல. கணவன் மனைவி சகிதமாக வாழ்பவை. எதிர் பாலினத்தைக் கவர, pebblesஐக் கொண்டு வருவது, ‘ என் கூட்டைப் பார் என்னைப் பிடிக்கும் ‘ ரீதியில் முட்டை வைக்க அழகான கூழாங்கற்களான கூட்டினை செய்வது, என வாழ்பவை. குட்டிகளைத் திருடி வைத்துக்கொள்ளும் திருட்டு அப்பா அம்மா பென்குயின்களும் உண்டு.
ஆனால், பார்ட்னர் மறைந்ததும் பெரும்பாலும் பென்குயின்கள் தனிமையை நோக்கிச் சென்றுவிடும். டாக்குமென்ட்டரியில் வரும் இந்த பென்குயினும், அப்படியானதொரு முடிவை எடுத்த பென்குயின் தான்.
-கார்த்திகேயன்
Saturday, 24 January 2026
ஜா-26
வாழ்க்கைக்கு ஹைக்கூ 26
“சொட்டு சொட்டாய்
விழும் பனித்துளி...
இவ்வுலகின் தூசியைக்
கழுவிவிடத் துடிக்கிறது!”
- மட்சுவோ பாஷோ
இந்தக் கவிதை "தூய்மை" மற்றும் "புதுப்பித்தல்" பற்றிய மிக அழகானதொரு கற்பனை. அதிகாலை நேரத்தில் ஒரு மலரின் இதழிலிருந்து ஒரு சிறிய பனித்துளி (Dew drop) சொட்டுச் சொட்டாகக் கீழே விழுகிறது. அந்தப் பனித்துளி பார்ப்பதற்குப் பளிங்கு போலத் தூய்மையாக இருக்கிறது. அது கீழே விழுவதை, "இந்த உலகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும், தூசியையும் கழுவிச் சுத்தம் செய்ய அது முயல்கிறது" என்று கவிஞர் வர்ணிக்கிறார்.
பனித்துளி மிகச் சிறியது; உலகம் மிகப் பெரியது. இருப்பினும், அந்தச் சிறிய துளிக்கு உலகையே சுத்தப்படுத்தும் ஒரு பெரிய ஆசை இருப்பதாகச் சொல்வது இதன் அழகியல்.
இந்தச் சிறிய ஹைக்கூ நமக்குத் தரும் நம்பிக்கையான செய்திகள் பல உள்ளன.
பனித்துளி மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் உயர்வானது. அதுபோல, "நம்மால் என்ன செய்துவிட முடியும்?" என்று நினைக்காமல், நம்மால் முடிந்த சிறிய நற்செயல்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். பல சிறிய துளிகள் சேர்ந்தால் அது ஒரு நதியாகி, உலகையே மாற்றும் வல்லமை பெறும்.
"உலகத்தின் தூசி" என்பது நம் மனதில் படியும் கவலைகள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வெறுப்பைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பனித்துளி எப்படிப் புதிதாக வருகிறதோ, அதுபோல நாமும் ஒவ்வொரு நாளையும் புதியதாகத் தொடங்க வேண்டும். கடந்த காலக் கசப்புகளை (தூசியை) அவ்வப்போது மனதிலிருந்து கழுவிவிட வேண்டும்.
உலகம் எவ்வளவு மாசுபட்டிருந்தாலும், இயற்கை பனித்துளி மூலம் அதைச் சுத்தம் செய்யத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அதுபோல, வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அவற்றைச் சரிசெய்யும் நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
"நமது செயல் சிறியதாக இருக்கலாம், ஆனால் நமது எண்ணம் உலகைச் சுத்தப்படுத்தும் அளவுக்கு உயர்வானதாக இருக்கட்டும்.
Wednesday, 21 January 2026
tea-9
##மனசுக்கு_ஒரு_தேநீர்_9
"ஸ்வபாவதஹ ப்ரவிஷந்தி"
எல்லாம் உண்டாகின்றன. அழிகின்றன, தொலைந்து மறைகின்றன, நீ சாட்சியாக தூரத்தில் இரு. அங்கு நின்று கொண்டு பார்த்தபடி இரு.
ஒரு விதை மண்ணில் புதையும்போது, அதற்கு “முளைக்க வேண்டும்” என்று யாரும் கட்டளையிடுவதில்லை. அதன் இயல்பே அதை முளைக்கச் செய்கிறது. அதுபோலவே, மனிதனின் மனம் எதை விரும்புகிறதோ, அவன் வாழ்க்கை அவ்வழியிலே தானாகவே செல்லத் தொடங்குகிறது.
புத்தர் மலைப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். கடும் வெயிலில் தாகம் எடுத்தது. சீடர் ஆனந்தரை கூப்பிட்டு நாம் வந்த வழியில் திரும்பிச் செல். இரண்டு காத தூரத்துக்கு பின் ஒரு அருவியை பார்த்தோம் அல்லவா. அங்கே நீர் நிரப்பி வா என்றார். ஆனந்தர் பாத்திரத்துடன் அருவியை அடைந்தார். அதே சமயம் அங்கு தேங்கி இருந்த நீரின் வழியாக மாட்டு வண்டிகள் சில சென்றன. தண்ணீர் முழுவதும் குப்பை பரவி விட்டது. அடிமட்டத்திலிருந்து சகதிகள் மேலே எழும்பி வந்து விட்டது. அந்த தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது.
அப்போது ஆனந்தர் திரும்பி புத்தரிடம் வந்து சொன்னார். அந்த அருவி நீர் பருகுவதற்கு லாயக்காக இல்லை. மேற்கொண்டு நாலு ஐந்து மைல்களில் நதி உள்ளது. அங்கிருந்து புது தண்ணீர் எடுத்து வருகிறேன் நீங்கள் ஓய்வெடுங்கள் என்றார். ஆனால் புத்தர் பிடிவாதமாக திரும்பிப் போய் அதே அருவி நீரை கொண்டு வா என்றார்.
இதனை மறுக்க முடியாத ஆனந்தர் அருவி நீரை அடைந்தபோது தண்ணீர் சுத்தமாகி விட்டிருந்தது. ஆனந்தர் அருவியை நோக்கிச் செல்லும் போது ஆன தூரத்தில் தூசி எல்லாம் அடிமட்டத்துக்கு இறங்கிவிட்டது. ஆனந்தர் திகைத்துப் போனார். அப்பொழுதுதான் அவருக்கு புத்தரின் பிடிவாதத்தின் அர்த்தம் புரிந்தது
நான் செல்லும்போது யோசித்துக் கொண்டு சென்றேன். குப்பையை அகற்றிவிட்டு நீர் எடுத்து வரலாம் என்று. ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் கரையிலேயே இருந்தேன். கலங்கிய நீர் அமைதிபட்டதும்.. தெளிவடைந்தும்.. இருந்தது. யாரும் அதை வழிந்து சென்று அமைதி படுத்தவில்லை. தானாகவே அது சாந்தப்பட்டு விட்டது என்றார்.
இதனைக் கேட்டவுடன் புத்தர் சொன்னார்..
வாழ்க்கையில் பிரச்சனைகளும் அப்படித்தான்.. அதுவே வரும் அதுவே அழியும். நாம் அமைதியாக நின்று பார்த்தபடி இருந்தால் போதும்.
இக்கட்டான நிலையில் பொறுமை முக்கியம். பதட்டமே அந்த நிலையை இன்னும் சுமையாக்கிவிடுகிறது. ஆகவே பொறுமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.ஆனால்
பொறுமை பொறுமையாகத்தான் வரும்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Tuesday, 20 January 2026
tea-8
#மனசுக்கு_ஒரு_தேநீர்_8
Procrastination எனும் வார்த்தை அண்மையில் பிரபலமடைந்து வருகிறது.இதன் பொருள் அனைவருக்கும் தெரிந்தது தான்..
"செய்ய வேண்டிய காரியங்களைத் தொடர்ந்து தள்ளிப்போடுவது
இப்போது செய்ய முடியும் வேலை என்பதை அறிந்திருந்தும்,
“சிறிது நேரம் கழித்து செய்வோம்”,
“நாளை பார்த்துக் கொள்வோம்” என்று மனம் காரணங்கள் சொல்லி ஒதுக்கிவைப்பதே Procrastination.
பணியை தொடங்குவதில் சுணக்கம், கடினமானதை தவிர்ப்பது, அவசரப்பட்டு செய்வதில் ஒரு அலட்சியம் போன்றவை.
எதிர்காலம் எங்களுக்கு என்ன வைத்திருக்கிறது?”
“What the future has in store for us”
“எதிர்காலத்தை ஒரு களஞ்சியம் அல்லது பொக்கிஷப் பெட்டி போலக் கற்பனை செய்கிறது மனது.ஆனால் நிகழ்கால வாய்ப்புகள், சவால்கள் அனைத்தும் செய்தால் தான் அது பொக்கிஷமாக மாறும்.உடனே தைத்தால் ஒன்பது கிழிசலை தவிர்க்கலாம் என்பது பழமொழி. ஆகவே எந்த ஒரு செயலையும் விரைந்து செய்ய வேண்டும்.
ஒரு மனிதன் விஷ அம்பால் காயமடைந்தான்.
அவன், “அம்பு எங்கிருந்து வந்தது? யார் எய்தார்?” என்று கேள்விகள் கேட்டு காலம் தாழ்த்தி..
அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் இறந்தான். தேவையற்ற கேள்விகளை விட, தீர்வில் கவனம் செலுத்து என்கிறது புத்தம்
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
*கிடைப்பதற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அப்போதே தாம் செய்வதற்கு அரியவான செயல்களை செய்து முடித்தல் வேண்டும் என்கிறார்
திருவள்ளுவர்
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 19 January 2026
வாழ்க்கைக்கு ஹைக்கூ 24"ஒரு கை தட்டும் ஓசை என்ன?" – ஹாகுயின் எகாகு இது புகழ்பெற்ற 'ஜென் கோன்' (Zen Koan) எனப்படும் ஒரு விதமான ஆன்மீகப் புதிர். பொதுவாக, இரண்டு கைகள் சந்திக்கும் போது தான் 'கைத்தட்டல்' ஓசை வரும். அப்படியிருக்க, "ஒரு கையின் ஓசை என்ன?" என்று கேட்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், ஜென் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே நமது தர்க்க அறிவை (Logic) நிறுத்திவிட்டு, உள்ளுணர்வை (Intuition) விழிக்கச் செய்வது தான். அதற்கு இதனைப் போன்ற புதிர்கள் உதவுகின்றன.இந்தக் கேள்விக்கு, "காற்று கிழிக்கும் சத்தம்" என்றோ, "விரல்கள் சொடுக்கும் சத்தம்" என்பது பதிலல்ல. உண்மையான பதில் "அமைதி" ஆகும். சத்தம் ஏற்படுவதற்கு இரண்டு பொருட்கள் வேண்டும். ஆனால் ஒரு கை என்பது எதனோடும் மோதாத நிலை. அது முழுமையான அமைதியைக் குறிக்கிறது.உதாரணமாக வானத்தில் இடி இடிப்பதற்கு மேகங்கள் மோத வேண்டும் (இரண்டு கைகள்). ஆனால் அந்த மோதலுக்கு முன் அங்கே இருந்த அமைதியான வானம் தான் ஒரு கை தட்டும் ஓசை.நாம ஒருவருடன் சண்டை போடுறோம். அங்கே "நான்" மற்றும் "அவன்" என்ற இரண்டு கைகள் உள்ளன. ஆனால் நாத தனிமையில், எந்த எண்ணமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அங்கே மோதுவதற்கு எதுவுமில்லை. அந்த முழுமையான மௌனமே ஒரு கையின் ஓசை.இந்த வாசகம் நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் ஆழமானது. நாம் எப்போதும் பிறரது பாராட்டு, அங்கீகாரம் அல்லது பதிலுக்காகவே (இரண்டாவது கைக்காக) காத்திருக்கிறோம். ஆனால், நம் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவையில்லை. நாம் தனியாக இருக்கும்போதே முழுமையானவர்கள் என்பதை இது உணர்த்துகிறது.உலகில் உள்ள அனைத்து சத்தங்களும் (பிரச்சனைகளும்) இரண்டு விஷயங்கள் மோதுவதால்தான் வருகின்றன (விருப்பம் vs வெறுப்பு, நான் vs நீ). இந்த மோதல்களை விட்டுவிட்டு, மனதை ஒரு சாட்சியாக (Observer) மட்டும் வைத்தால் கிடைப்பது பேரமைதி.வாழ்க்கையில் எப்போதும் சத்தத்தை மட்டுமே கேட்டுப் பழகிவிட்டோம். "சத்தமில்லாத அந்த ஓசையை" (Sound of Silence) கேட்கப் பழகுவதே இறைநிலை அல்லது தியான நிலை.ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறோம். இரண்டு கைகளால் இசைக்கப்படும் வயலின் இசையை ரசிக்கிறோம். ஆனால், அந்த இசைக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி (Gap) இருக்கும் அல்லவா? அந்த இடைவெளியில் இசை இல்லை, ஆனால் இசைக்கான உயிர் அங்கு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை ரசிப்பது தான் "ஒரு கை ஓசை".
tea-7
#மனசுக்கு_ஒரு_தேநீர்_7
பொருத்தமற்றத் தகவல் பெருவெள்ளத்தில் மூழ்கிய இன்றைய உலகில் தெளிவு தான் தீர்வு
-யுவால் நோவா ஹராரி
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,"நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்!" என்று சபித்துவிட்டார்."
பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, "நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக் கொன்று விடு!" என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது," மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு!" என்றான்
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் (பன்றித்) துணையைத் தேடிக் கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது," மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்று போடு" என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தனது தந்தையின் அருவருப்பான வாழ்க்கைக்கு முடிவு கட்ட வந்தபோது," மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் உடன் வந்து எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக் கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்! " என்று மகனுக்கு அறிவுறுத்தினான்
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சனைகளைத் தீர்க்க வழி தேடுவது.
அடுத்தது, பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது.
பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சனையோடு வாழ்வதே தீர்வாகிறது. பிரச்சனைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழி தான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சனைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லை! எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.எல்லாவற்றுக்கும் இது தான் தீர்வு எனவும் சொல்ல முடியாது.சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுத்து வெற்றி பெறுவோம்
புத்தம்புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 18 January 2026
tea-6
#மனசுக்கு_ஒரு_தேநீர்_6
சுதர்சனின் பதிவு
புத்தகம் படிப்பது பற்றி இரண்டுவிதமான முறைப்பாடுகள் இருக்கிறது. ஒன்று, புத்தகம் படிக்க நேரமில்லை. இரண்டாவது, புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்கமுடியாமல் அடுக்கிவைத்தல்.
புத்தகம் படிக்க நேரமில்லை என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. நேரமென்பது நம் கண் பார்க்கும் நிறங்களைப் போல ஒருவித Illusion என்று சொல்வார்கள்.
நாம் தீர்மானித்துக்கொள்வதுதான். சினிமா, கிரிக்கெட், சிறுபேச்சுகள், பேஸ்புக் டைம்லைனை மேலும் கீழும் பார்த்தல் என்று அவர்கள் நேரம் முடிந்துவிடும். இதையெல்லாம் செய்வது தவறென்று சொல்லவரவில்லை. இவற்றைச் செய்பவர்கள், "நேரமில்லை" என்றொரு காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது. Warren buffet க்குகூட வாசிக்க நேரமிருகிறது.
தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவர்கள் சிலர், புத்தகங்களை வாங்கிவிட்டு அடுக்கி வைக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பலரும் புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்காமல் அடுக்கி வைக்கிறார்கள் என்று சொல்லும் பதிவுகளும் பார்த்திருக்கிறேன்.
உண்மையில் நாம் சும்மா இருந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவதுபோலவும் பிரபல நடிகையாவது போலவும் ஒரு மணிநேரம் கனவு காணும்போது நம்முடைய மூளை பதினொரு கலோரிகளைப் பயன்படுத்துகிறது. ஒருமணித்தியாலம் வாசிப்பில் ஈடுபடும்பொழுது 42 கலோரிகளை மூளை பயன்படுத்துகிறது. இதுபோக தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தல், நியூரோன்களின் உரையாடல் என்று அதற்கு மேலதிகமாக பல கலோரிகள் செலவாகிறது. உண்மையில் நேர முகாமைத்துவம் என்பது நேரத்தைப் பயன்படுத்துவது அல்ல. நேரத்தை திறம்படப் பயன்படுத்துவது.
நான் ஒரு புத்தகத்தை ஒரு அரச அலுவலகத்தில் காத்திருந்த நீண்ட நேரத்தில் படித்து முடிக்க முடிந்தது. ஆகவே புத்தகம் படிப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்முடைய கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகள்தான் பிரச்சனை. நம்முடைய மூளை இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்யும்போதே(task switching) அதன் சக்தியை இழந்துவிடுகிறது.
நம்முடைய மூளை ஒருவித புதுமையை(novelty) எப்போதும் எதிர்பார்க்கும். வாசிப்பிலும் ஒரு படத்தைப் பார்க்கும்போதும் பெரும்பாலான சொல்லப்படாத பகுதிகளை நம்முடைய மூளை ஊகித்துக்கொள்கிறது. ஆனால் வாசிப்பில் கற்பனைவளம் அதிகம் பெருகும். இவ்வளவு கடினப்பட்டு வாசிக்கவேண்டுமா?
வாசிப்பு உண்மையில் ஒருவித இன்பம். ஒரு நகைச்சுவையை ரசிக்கிறீர்கள். ஆனால் அந்த நகைச்சுவையில் சொல்லப்படாத பகுதிகளை மூளை கண்டுணர்ந்து ஒரு சிறுபுன்னகை தருகிறது. அந்த நகைச்சுவை தரும் இன்பம் போல அனைத்தையும் காட்சிப்படுத்தும் நகைச்சுவைகள் தந்துவிடுவதில்லை எனப்படுகிறது.
உண்மையில் நம்முடைய மூளையில் நம்மால் படிப்படியாக ஆழ உணரப்படும் விடயங்கள் நன்றாகப் பதியுமென்று சொல்லப்படுகிறது.
கல்லூரிகளில் பாடப்புத்தகங்களை அப்படியே கற்பிக்கும் கல்விமுறையைவிட மாணவர்களாக அவர்களுக்குள்ளேயே உரையாடிக் கற்கும் கல்விமுறை (peer instruction) வெற்றிபெற்ற்றிருக்கிறது.
இவற்றைத்தான் நாமாக வெளியில் தேடிப்படிக்கும் புத்தகங்கள் நம்முள் நிகழ்த்திச் செல்கிறது.
ஆகவே புத்தகங்களைப் பார்த்துத் தெரிவுசெய்வது உங்கள் பொறுப்பு. வருடத்துக்கு இரண்டு என்றாலும் ஒழுங்கான வாசிப்பை நிகழ்த்தினால் போதும்
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Saturday, 17 January 2026
book-8
#Reading_Marathon2026
#25RM009
Book No:8/150+
Pages:-127
தண்டகாரண்யத்தில் சீதை
-இமையம்
தமிழ் இலக்கியத்தில் சமூகத்தின் ஓரங்களில் வாழும் மனிதர்களின் மௌன வலிகளையும் மறைக்கப்பட்ட குரல்களையும் தீவிரமாக பதிவு செய்து வருபவர்.சிறுகதையோ, நாவலோ தனித்து ஒலிக்கும் குரலாக கதைமாந்தர்களின் தன்மை வெளிப்படும். சாதாரண ஒரு புள்ளியில் கதையின் மையசரடை சொற்களாலேயே அதனை வாசகனுக்கு தெரியப்படுத்துவார்.கிராமிய வாழ்வியலோ,
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்த குரலாக விளங்குபவர். கிராமிய வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, பெண்களின் மனநிலை, உறவுகளின் மெல்லியச் சிக்கல்கள் ஆகியவை அவரது சிறுகதைகளின் மையம். சாதாரணமான எழுத்துக்கள் தான் ஆனால் ஆழமான கதை சொல்லின் வழியாக நம்மை எப்போதும் கவர்ந்து இழுப்பவர் இமையம் அவர்கள். சமூக கருத்துக்கள் அவருடைய கதைகளில் அர்த்தமுள்ளதாய் பதிவு செய்திருப்பார். வாசிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு கதைகளின் வாயிலாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக தன்னை உணர வைத்து, எது சமூக நீதி? என்பது போல் சிந்திக்க வைப்பார்.அந்த அறக்கருத்துக்களை வாசிக்கும் நம்மிடம் கடத்துவார் ,அதுவே அவரின் சிறுகதையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் கொம்பன் என்னும் மாட்டினை ஆசையாக வளர்க்கிறார் மருது. வாடி வாசலில் அவிழ்க்கப்பட்ட மாடு வருவது தான் கதையின் ஆரம்ப வரியாக இருக்கிறது.அதற்கு அடுத்தாற் போல் மாடு பிடிபடுகிறது.அது மருதுவுக்கு அவ்வளவு அவமானத்தை தருகிறது.. அந்த அவமானம் அவரின் ஆணவமாய் மாறி என்னவெல்லாம் செய்கிறார்,நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரின் குணம் மாறுகிறது. இப்படி எல்லாம் ஒருவர் இருப்பாரா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு மருதினை பின்தொடர்ந்து இந்த கதைகளின் வழியே சென்றால் இறுதியில் மனம் கணக்க வைக்கும் முடிவு ஒன்று வருகிறது.
ஆசிரியர் கதை ஒன்று அல்லது பள்ளியில் நடைபெறும் கதை ஒன்று அவருடைய தொகுப்புகளில் தவறாமல் இடம்பெற்று விடும். அதன் வழியே அவர் காட்டும் வெளிச்சம் நாம் பார்க்காத கோணத்தில் இருக்கும் அப்படித்தான் பொட்டச்சி மனசு கதைகளிலும் சுமதிக்கும் சந்திரனுக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம் ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் ஆழமாக அந்தக் கதை இருக்கும்.
உங்களுக்கு தீங்கிழைக்காத எந்த ஒரு ஆதிவாசியையும் கேடு விளைவிக்காத எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதர்மமான காரியங்களை ராமன் செய்தான் என பெயர் வந்துவிடும். வழக்கமாக ராமாயணத்தில் ராமனை பழித்துறைக்க வேண்டுமானால் அவர் வானரங்களிடம் மனிதனைப் போல் வாழ வேண்டும் என்று கற்பித்தல் அறம் ஆகாது என்று சொல்வதாக பல வழக்காடு மன்றங்கள் நடப்பதுண்டு. இங்கே ராமனுக்கு புத்தி புகட்டும் சீதை என்ன வழியை கையாண்டால் என்பதுதான் தண்டகாரியத்தில் சீதை எனும் கதை.
"மனம் ஆசைகளால் நிரம்பி இருக்கும் போது, சுயநலத்தின் பிடியில் மனம் சிக்கி இருக்கும் போது,
மரணத்தை கண்டு மனம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்போது, தர்மத்துக்கும் அதர்மத்திற்கும் வேறுபாட்டை உணராத போது, தவம் யாகம் செய்து பெறுவது ஞானமா ? என்ற கேள்வி ராமனை நோக்கி சீதை கேட்பாள். இந்த கேள்வி படிக்கும் நம்மையும் ஒரு நிமிடம் உலுக்க வைப்பது போல் இருக்கும். எந்த தவறு செய்தாலும் நாம் ஒரு பரிகாரம் செய்தால் அந்த தவறுகள் நீங்கிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக அல்லது பின் நடக்க இருப்பதை ராமனுக்கு சீதை முன்பே சொல்லும் விதமாக இந்த கதை மனதுக்கு நெருக்கமாக இடம் பெற்றிருக்கும். "ஆயுதம் தான் அதிகாரத்தை கொண்டு வருகிறது" என்பது நடைமுறை நாட்களில் கூட நாடுகளைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
சாவித்திரி என்பவள் தன் அழகின் மீது கர்வம் கொண்டவள். தன்னை நாடிவரும் ஆண்களை ரசித்து விட்டு தூக்கி எறிபவள். அப்படி செய்யும் போது ஒரு கட்டத்தில் சாவித்திரியே தூக்கி எறிகிறான் ஒருவன் .அப்போது உண்மையான முகம் யாருக்கு என்பதை அருள்மணி கதாபாத்திரத்தின் வாயிலாக இந்த முகம் கதையை சொல்லி இருப்பார். "கரும்பு கட்டு தூக்குறவளுக்கு கரும்பு வெட்டுறவன் தான் பிரிசனா வருவான்" என்ற வார்த்தை எப்படி அவள் மனதை மாற்றியது என்பதை இக்கதை
அடங்காத அழுகை கதை ஆனந்த விகடனில் வந்த போது வாசித்தேன். அப்போதே இக்கதை மிக நெருக்கமாக மனதிற்குப் பட்டது.. ஆசிரியர் மாணவியை பார்த்து நீ எந்த ஊர் ?என்று கேட்கிறார் அதற்கு அவள் பதில் சொல்ல வேண்டும் இதுதான் கதை .இந்த ஒரு வரி கதையை படிக்கும் அனைவரையும் இழுக்கும் விதமாக அந்த கதை செல்கிறது. இந்த ஒரு வரியை அவர் 5 பக்கங்களில் சுவாரசியம் குன்றாமல் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அந்த ஆசிரியரைப் போலவே நாமும் அந்த மாணவியின் வாயிலிருந்து வரும் பெயரைக் கேட்க ஆவலாய் உள்ளது போல் அடங்காத அழுகை கதை இருக்கும்.
கூடுன்னாலும் குருவிக்கு அதுதான் அரண்மனை என்ற மகன் ராமனிடம் வயதான கிராமத்தில் வாழும் துளசியம்மாள் சொல்கிறாள். மகனும் மருமகளிடம் ஒரு கட்டத்துக்கு மேல் வரக்கூடாது என்று சுயமரியாதையுடன் வாழும் பெரியவர்களை காலம் சில சூழ்நிலைகளில் மகனிடமோ அல்லது மருமகளிடமோ வந்து தங்க வைத்து விடுகிறது.இந்த மனப்போராட்டம் பல பெரியவர்களிடம் இருக்கிறது. விரிசல்களை தவிர்த்து வாழ நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது அல்லது உண்மையான கோர முகங்களை பார்க்கும் நுட்பமும் சொந்த வீடு என்ற இந்த கதையில் விளக்கி இருப்பார்.
90களில் கிராமங்களில் மகளிர்க்கு தான் மலைவாழை அல்லவோ கல்வி எனும் வாசகம் முற்றிலும் பொருந்தும். ஏனெனில் பெண்கள் வயதுக்கு வந்தால் பலர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். குறிப்பிட்ட பருவம் எய்திய உடன் திருமணம் செய்து முடித்து விடுவார்கள். இன்று அப்படி இல்லை என்றாலும் சில கிராமங்களில் இன்றும் பெண்கள் கல்வி தொடர்வதற்கு வயது ஒரு காரணமாக இருக்கிறது. அதனை மையப்படுத்தி ஆசைகள் என்ற கதையை இமையம் அவர்கள் எழுதி இருப்பார்கள். பெண்கள் வயது மூப்பு அடைவதை பற்றி ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கந்தர்வன் இரண்டாவது ஷிப்ட் என்ற கதை எழுதி இருப்பார் அந்த கதையை நினைவுபடுத்தும் விதமாக அதே நேரத்தில் காலை நிகழ்வை மட்டும் மையப்படுத்தி இந்த இயந்திரங்கள் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக இருவரும் பணிக்குச் செல்லும் போது பெண்கள் தான் அதிக வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அப்போது ஏற்படும் கோபம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப செய்யும் காரியங்கள் என ஒவ்வொன்றிணையும் மிக அழகாக வார்த்தைகளால் கோர்த்து இந்த கதை அமைந்திருக்கும் ஒவ்வொரு சண்டைகளும் பெண்கள் ஆண்கள் வீட்டு ஆட்களை திட்டுவதும் பதிலுக்கு அவர்கள் இவர்களை பேசுவதுமாக எல்லோர் வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் தான் இந்த கதை நமக்கு கண்ணாடி வழியே காட்டுவது போல் இருக்கிறது.
இந்த கதைகள் எல்லாம் கட்டுரைகள் போல் முன்னுரை பொருளுரை முடிவுரை என்று வழக்கமான டெம்ப்ளேட்டுகள் வடிவில் கதைகள் இல்லாமல் இமையத்தின் பெரும்பலமே சம்பவங்களை சுவாரசியமாக்கி, வார்த்தைகளில் வடித்துக் கொடுப்பதுதான். அவர்களுடைய கதைகளில் உரையாடல் மிகப்பெரிய பங்கினை பெற்றிருக்கும். அந்த உரையாடலின் வழியாகத்தான் கதைகள் நகரும். அவை சாதாரண உரையாடல்கள் போலவே தோன்றும் ஆனால் அவை கதைகளுக்கு எவ்வளவு ஆழமான அர்த்தமுடையவை என்பதை அந்த கதை முடியும் போது நம்மை உணர வைத்திருப்பார்.
கதைகளின் பரிணாமங்கள் இப்படித்தான் நிகழும் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காரணம் கதைகள் ஒரே நேர்கோட்டில் இல்லாமல்
ஆற்று நீரோட்டம் போல வளைந்து வளைந்து செல்லும் போது என்னதான் நடக்கிறது என்பதனை நாம் மெல்ல கவனித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இலக்கிய மேற்கோள்களோ அல்லது வாழ்வியல் தத்துவங்களோ இவருடைய கதைகளின் நிறைந்திருக்காது. ஆனால் வாழ்வியல் சம்பந்தமான அர்த்தமுள்ள உரையாடல்கள், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இவருடைய கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இவருடைய கதைகள் எப்போதும் தரும் அந்த வகையில் இந்த சிறுகதை தொகுப்பும் நிச்சயம் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை உள்வாங்கும் நோக்கில் இருக்கும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Thursday, 15 January 2026
ஜா-21
வாழ்க்கைக்கு ஹைக்கூ 21:
"நான் குனிந்து,
கூர்ந்து கவனிக்கும் போது,
கற்கள் கூட பதிலளிக்கின்றன."
— யுவான் மேய்
சீனக் கவிஞரான யுவான் மேய் எழுதிய இந்த ஹைக்கூ வரிகள் "ஜென்" தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.
பொதுவாகக் கற்கள் உயிரற்றவை, கடினமானவை என்போம். ஆனால், நாம் நமது மனதின் இரைச்சலை அடக்கிவிட்டு, முழு ஈடுபாட்டுடனும் (Mindfulness), மிகுந்த கவனத்துடனும் ஒரு விஷயத்தை அணுகினால், பேசாத கற்கள் கூட நம்முடன் பேசும். இயற்கையின் மிக நுண்ணிய அசைவுகளைக் கூட நம்மால் உணர முடியும்.
இந்த மெட்டாஃபரின் மூலம் நமது அன்றாட வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான பாடங்களை கற்றுக் கொள்ளலாம்:
1. கவனமாக கேட்பதின் சக்தி (The Power of Deep Listening):
இன்று நம்மில் பலர், பிறர் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தானே தவிர, அவர்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல. "கூர்ந்து கவனித்தல்" என்பது ஒரு தியானம் போன்றது.
நாம் முழுமையாக ஒருவரையோ அல்லது ஒரு சூழலையோ கவனிக்கும்போது, வார்த்தைகளால் சொல்லப்படாத உண்மைகளைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
2. நிதானம் மற்றும் பொறுமை (Stillness and Patience):
படத்திலுள்ள கற்கள் ஒன்றின் மேல் ஒன்று சமநிலையில் அடுக்கப்பட்டுள்ளன. இது நிதானத்தைக் குறிக்கிறது. அவசரமான உலகில், நாம் சிறிது நேரம் நின்று, நிதானித்து, சூழலைக் கவனித்தால் மட்டுமே வாழ்க்கையின் அழகையும், நமது பிரச்சனைகளின் தீர்வுகளையும் கண்டடைய முடியும்.
3. கல்லும் கரையும் (Empathy):
வாழ்க்கையில் "கல்" போன்ற கடினமான மனிதர்களோ அல்லது கடினமான சூழ்நிலைகளோ நமக்கு எதிர்ப்படலாம்.
அந்த சமயங்களில் நாம் அவர்கள் மீது கோபப்படாமல், பதற்றமடையாமல் சற்று இறங்கி வந்து, பொறுமையுடன் அவர்கள் தரப்பைக் கேட்டால், அந்தக் கல் மனமும் கரையும்; கடினமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
Wednesday, 14 January 2026
Tuesday, 13 January 2026
சொக்கன்
இந்த மாத 'அந்திமழை' இதழில் கலை இயக்குநர் தோட்டா தரணியின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது:
> நாம் செய்யும் வேலைமீது நமக்குப் பயம் வேண்டும். சின்னதாகக் குடிசைச் செட் போட்டாலும் எனக்குப் பயம் இருக்கும்.
உளவியலாளர்கள் Anxiety (பதற்றக் குறைபாடு) பற்றிப் பேசுகையில், நம்முடைய அன்றாடப் பணிகளைச் செய்யும்போது நமக்குள் சிறிதளவு பதற்றம் இருந்தால் அது நம் வாழ்க்கையைப் பாதுகாப்பாக்குகிறது, நேர்த்தியாகச் செலுத்துகிறது என்பார்கள். அந்த அச்சம் அளவுக்கு மீறினால்தான் சிக்கலாகிவிடுகிறது. கட்டுக்குள் இருந்தால் அதுவும் ஒரு நல்ல, பயனுள்ள கருவிதான். கலைஞர்களுக்கும் அது பொருந்தும் என்பதைத் தோட்டா தரணி மிக அழகாகச் சொல்லிவிட்டார்.
ஆக, அச்சம் என்பதும் வலிமையடா!
Monday, 12 January 2026
ஜா-16
வாழ்க்கைக்கு ஹைக்கூ 19
"சூரிய ஒளியைக் காணாமலே,
அந்தக் குளிர்கால கமிலியா மலர்
பூத்துக் குலுங்குகிறது."
- கோபயாஷி இஸ்ஸா
பொதுவாக மலர்கள் மலர்வதற்குச் சூரிய ஒளி மிக அவசியம். சூரியனைப் பார்த்தால் தான் பல பூக்கள் மலரும். ஆனால், இந்தக் கவிதையில் வரும் "குளிர்கால கமிலியா" (Winter Camellia) மலர், சூரிய வெளிச்சம் இல்லாத, இருண்ட மற்றும் குளிர்ந்த சூழலிலும் முழுமையாக மலர்கிறது.
இங்கு சூரிய ஒளி என்பது சாதகமான சூழ்நிலை, பாராட்டு அல்லது நமக்கு மற்றவர்கள் தரும் ஆதரவைக் குறிக்கிறது. மலர்வது என்பது நம்முடைய செயல்பாடு அல்லது வெற்றியைக் குறிக்கிறது. இந்த ஹைக்கூவின் மூலம், இஸ்ஸா: "சிறப்பாகச் செயல்பட, சாதகமான சூழ்நிலையோ அல்லது பிறரின் ஆதரவோ அவசியம் இல்லை. மனதில் உறுதி இருந்தால், இருளில்கூட நம்மால் ஒளிர முடியும்." என்ற கருத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு உதாரணமாக நம் காலத்தில் வாழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் பிறந்தது ராமேஸ்வரத்தில் ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தில். மின்சார வசதியோ, பண பலமோ, பெரிய பின்புலமோ அவருக்குக் கிடையாது. தினசரி செய்தித்தாள் போட்டு தனது செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வறுமை இருந்தது. இது "சூரிய ஒளி இல்லாத" நிலையைக் குறிக்கிறது. ஆனால், கலாம் அவர்கள், வசதிகள் இல்லை என்று அவர் முடங்கிவிடவில்லை. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தார். தோல்விகளைக் கண்டார் (விமானப்படை வேலை கிடைக்காதது). தன் விடாமுயற்சியால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், அனைவரும் மதிக்கத்தக்க ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.
பொதுவாக, "யாராவது என்னைப் பாராட்டினால் தான் நான் செய்வேன்," "சூழ்நிலை சரியாக அமைந்தால் தான் நான் தொடங்குவேன்" என்று நாம் பல நேரங்களில் காத்திருக்கிறோம். சூரியன் வரட்டும் என்று கமிலியா காத்திருப்பதில்லை. அதுபோல, பிறர் பாராட்டுவதற்கோ, உதவிகள் கிடைப்பதற்கோ காத்திருக்காமல், நமது கடமையைச் செய்து வரவேண்டும். நமது திறமை தானாகவே ஒருநாள் வெளிப்படும்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் (குளிர்காலம்) வரும்போது நாம் சோர்ந்து முடங்கி விடுகிறோம். கடினமான காலக்கட்டத்தில்தான் நம் உண்மையான வலிமை வெளிப்பட வேண்டும். இருள் சூழ்ந்திருந்தாலும், நம்மால் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"எனக்கு அந்த வசதி இல்லை, இந்த வசதி இல்லை" என்று குறை கூறிக்கொண்டே இருப்பதை விட, இருப்பதை வைத்துச் சிறப்பாகச் செயல்படுவதே அழகு.
இதைத் தான் ரூமி, “இருள் நிறைந்த பாதையில் ஒளியில்லையே என்று தேடாதீர்கள். சற்று கவனித்துப் பாருங்கள், நீங்களே அந்த ஒளியைத் தரும் தீபமாக இருக்கக்கூடும்" என்கிறார்.
Wednesday, 7 January 2026
ஜா-18
வாழ்க்கைக்கு ஹைக்கூ 18
"எவ்வளவு குளிர்ச்சி!
மணியை விட்டு
விலகிச் செல்லும் அந்த ஓசை..."
- யோசா பூசன்
இந்தக் கவிதை ஒரு காற்றில் அசையும் மணியிலிருந்து (Wind chime) எழும் ஓசையை விவரிக்கிறது.
காற்றால் மணி ஆடும்போது சத்தம் வருகிறது. ஆனால், அந்தச் சத்தம் மணிக்குள்ளேயே இருந்தால் அது யாருக்கும் கேட்காது. அந்தச் சத்தம் மணியை விட்டுப் பிரிந்து, காற்றில் கலந்து, வெளியே வரும்போதுதான் அது இனிய ஒலியாக மாறுகிறது.
இங்கே "குளிர்ச்சி" என்ற சொல் "மன அமைதி" மற்றும் "பாரமற்ற மனநிலை"யைக் குறிக்கிறது.
இந்த ஹைக்கூவின் மூலம் பூசன் "ஒன்றைப் பற்றிக்கொண்டே இருப்பதை விட, அதை விடுவிப்பதில்தான் அழகும் பயனும் இருக்கிறது." என்கிறார். ஓசை மணியை விட்டுப் பிரியும் அந்த நொடிதான் ஆனந்தத்தைத் தருகிறது.
"ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதை" நினைத்துப் பாருங்கள். ஒரு தாய் தன் குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள் (மணி). ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, வீட்டை விட்டு வெளியே சென்று, தன் சொந்தக்காலில் நின்று சாதிக்கும்போதுதான் (ஓசை பிரியும்போது), அந்தத் தாய்க்கு உண்மையான பெருமையும், மனநிறைவும் கிடைக்கிறது.
"என் பிள்ளை என்னுடனேயே இருக்க வேண்டும்" என்று நினைத்தால் (ஓசை மணிக்குள்ளேயே இருந்தால்), அங்கே வளர்ச்சி இல்லை; மகிழ்ச்சி இல்லை. பிள்ளையை உலகத்திற்குப் பறக்க விடும்போதுதான் வாழ்க்கை முழுமையடைகிறது.
அதே போல, ஒரு பூ, தன் நறுமணத்தைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டால் அதற்குப் பயன் இல்லை. அது காற்றோடு கலந்து, பூவை விட்டு விலகிச் செல்லும்போது தான் பயன் ஏற்படுகிறது.
நாம் பல நேரங்களில் கடந்த காலக் கசப்புகளையோ, கோபத்தையோ அல்லது நமது பதவியையோ, நமக்குப் பிடித்தவர்களையோ இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மணி எப்படி ஓசையைத் தக்க வைத்துக்கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறதோ, அதுபோல உங்கள் கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதை விட்டு வெளியேற்றும் போது தான் மனம் "குளிர்ச்சியாக" அமைதியாக இருக்கும்.
கீதையில் சொல்வது போல, "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே." என்ற தத்துவம் மனநிறைவுக்கு முக்கியம்.
நாம் ஒரு நல்ல செயலைச் செய்தவுடன் (ஓசை எழுப்பியவுடன்), அதை மறந்துவிடுவது நல்லது. "நான் செய்தேன், எனக்குப் பாராட்டு வேண்டும்" என்று அந்தச் செயலையே பிடித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்தச் செயல் உலகத்தைச் சென்றடையட்டும்; நாம் அதிலிருந்து விலகி நிற்கலாம்.
நம்மிடம் இருக்கும் அறிவு, செல்வம் அல்லது அன்பு ஆகியவை நமக்குள்ளேயே இருந்தால் யாருக்கும் பயனில்லை.
அது மணியை விட்டு வரும் ஓசை போல, உங்களை விட்டுப் பிறருக்குச் செல்லும்போதுதான் உண்மையான மதிப்பைப் பெறுகிறது.
Attachment leads pain; Detachment leads peace!
Tuesday, 6 January 2026
tsa-5
#மனசுக்கு_ஒரு_தேநீர்_5
ஒரு மனிதன் தினமும் தன் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் துடைப்பதை நிறுத்திவிட்டான்.
நாட்கள் சென்றன.தூசி படிந்து அவன் பிரதிபலிப்பை மறைத்தது.
அவன் நினைத்தான், “நான் என்னை இழந்துவிட்டேன் என்று.”மீண்டும் கண்ணாடியை சுத்தம் செய்தபோது தான் அறிந்தான்
அவன் முகம் போகவில்லை; அது வெறும் தூசியினால் மூடப்பட்டிருந்தது என்று.
உன் உண்மையான “நான்” ஒருபோதும் மறைவதில்லை.
அது எண்ணங்கள், பயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றால் தற்காலிகமாக மங்குகிறது.
தெளிவு தேடுவதால் அல்ல — மனதின் தூசியை நீக்குவதால் கிடைக்கும் என்கிறார் புத்தர்
இதேபோல் மற்றொன்று
ஒரே கடலில் இரண்டு மீன்கள் வாழ்ந்தன.
ஒன்றை கண்ணாடிக் கிண்ணத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
மீன் பாதுகாப்பாக உணர்ந்தது ஆனால் உண்மையில் சுதந்திரமாக இல்லை. மற்றொரு மீன் விசாலமான கடலில் நீந்தியது.
அது அலைகள், புயல்கள், மற்றும் தெரியாத ஆபத்துகளை சந்தித்தது.
ஆனால் அதுவே நீரின் ஆழத்தை உணரச் செய்தது.
ஒன்று கடலைப் பற்றி கற்றுக்கொண்டது.
மற்றொன்று கடலில் வாழ்ந்து கடலை அனுபவித்தது. கிண்ணம் அதே “பாதுகாப்பு” என்று கூறியது.கடல் அதே “உண்மை” என்று கூறியது.
ஒன்று நம்பிக்கையை கற்பிக்கும்.
மற்றொன்று இருப்பதைக் கற்பிக்கும். விதிகள் உண்மையைக் காட்டக்கூடும், ஆனால் விழிப்புணர்வே அதை வாழச் செய்யும்.
புத்தரின் கருத்தில் அறிதல் என்றால் கருத்து-அறிவு மட்டும் இல்லாமல், அனுபவத்தின் மூலம் பார்ப்பதும் ஆகும்.
புத்தம்புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 5 January 2026
tea-4
#மனசுக்கு_ஒரு_தேநீர்_4
தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது. அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி... அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன... சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது... அந்த நூறு நாய்களும் பதிலுக்கு.... "உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது. இருந்தும் கோபம் தாளாமல்.. "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.....
அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,
" வெறி பிடித்ததை" போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன...
இந்த நாய் பயத்தின் உச்சத்தில்... வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது....
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது....
இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்.தான் நுழைந்தது கண்ணாடி அறை என்று...தன்னை சுற்றி இருந்ததுதான் என்று....குரைத்தது தன் குரலின் எதிரொலி தான் என்று....
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.... நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்..
அன்பு செலுத்தினால்... அன்பு கிடைக்கும்...
நீ எதை விதைக்கிறாயோ....,"அதுவே முளைக்கும்"...
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 4 January 2026
தேநீர்,-3
#மனசுக்கு_ஒரு_தேநீர்_3
ஜப்பானில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே 'கேன்பாரு' (Canbaru)எனும் ஒரு ஜப்பானியச் சொல்லை சொல்லி வளர்க்கிறார்கள். அதன் பொருள்
விடா முயற்சியைக் கைவிடாதே” எது உன்னுடைய முழுத் திறமையோ அதை நன்றாகச் செய்வதிலே முழு கவனஞ் செலுத்து என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை.
நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்? மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள் என்கிறார் ஆண்ட்ரூ கார்னகி
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் தாராளமாய் உண்டு. நாம்தான் நேரத்தை சரியாய் பயன்படுத்துவதில்லை. நேரம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
இப்பொழுதே அழகாகி கொள்.
இப்பொழுதே சந்தோசமாக இரு.
இப்பொழுதே துவங்கு.
இப்பொழுதே வாழ்ந்து விடு..!!
எதிர்காலம் ஒன்றும்,
நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கைக்கு பதிலாக
புதிதாக எந்தவொன்றையும் உனக்கு தந்து விடப்போவதில்லை
-ஷம்ஸ் தப்ரீஸி
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
book-3
#Reading_Marathon2026
#25RM009
Book No:3/150+
Pages:-416
நான் ப்ரம்மம்
-ஸ்ரீநிசர்கதத்த மஹராஜ்
ஆன்மிகவாதிகளை பின்பற்றுவதை விட அவர்கள் கூறும் கருத்துக்களை பின்ப்ற்றுவது உண்மையான ஆன்மிகமாக கருதுகிறேன். ஏனெனில் அக்கருத்துகள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்
உளவியலாளர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவரும் வலியுறுத்துவது தன்னை அறிதல் தான்.நான் என்பதை ஒருவர் எவ்வாறு கையாளலாம் ஒன்றும் அறியாதவராக, ஆர்வமிக்கவராக, உறக்கத்திலிருந்து விழிக்கும் போது நான் எனும் விழிப்புணர்வு பெற்றவராக,தோன்றும். நாம் என்னவாக இல்லை என அறிந்தால் தான் நான் யார் என்பது தெரியவரும்.எதனையும் அடையாமல் வாய்ப்பு கொடுக்கப்படும் போது நீ வெளிப்படுவாய் பிறர் மீது அன்பு செய்வாய் என ஆரம்பத்தில்நான் எனும் உணர்வு குறித்து விளக்கமளிக்கிறார்.
ராமாயணத்தில் ஒரு காட்சியை விளக்கும் போது கம்பர்.. தயிர் மத்துகடைவது போல் துன்பம் தான் என்றும் நிலையாக மனிதவாழ்வில் உள்ளது. அது கடையும் நேரத்தை தவிர கிடைக்கும் சொற்ப நேரங்கள் தான் இன்பம் உள்ளது என்பார். மனநிலைகளின் ஓட்டம் முடிவற்றது, அர்த்தம் மிகுந்தது, வலி மிகுந்தது ஆகும். ஏனெனில் வலி ஒரு நிலையான காரணி. இரு வலி மிகுந்த நிலைகளுக்கு இடையே ஒரு இடைவெளியை நாம் இன்பம் என்று சொல்கிறோம் என அந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான ஒரு வரியை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மனம் இயங்கும் வரை காரண காரிய தன்மைகளை அலசிக்கொண்டே இருக்கிறது. ஒன்றுதான் மற்றொன்று காரணம் என்று ஓயாமல் மனம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு இடத்தில் ஆசை படாதே என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை.ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நீ பாடுபட வேண்டும். அதற்கான சக்தியை செலவிட வேண்டும். அதன் பின்பு அதன் பலன்களுக்காக காத்திரு என்ற நடைமுறை எதார்த்தத்தை புரிய வைக்கிறார்.
உலகை யார் நடத்துகிறார்கள் எனும் கேள்விக்கு யாரும் நடத்தவில்லை. எல்லாம் தானாக நடக்கின்றன. நீ கேள்வி கேட்கிறாய் நான் பதிலை சொல்கிறேன் அவ்வளவுதான் என்கிறார்.
மனிதனுக்கு பிராண மன,காரண எனும் மூன்று உடல்கள் உள்ளன .பிராண உடல் அவன் இருப்பையும், மனு உடல் அவன் அறிதலையும், காரண உடல் அவனுடைய ஆனந்தமான உருவாக்கம் குணத்தையும் குறிக்கின்றன. இதையெல்லாம் விழிப்புணர்வில் உள்ள நிலைகளே.
மாற்றத்திற்கு தேவையானது என்ன எனும் கேள்விக்கு..உன் உலகத்தை உள்ளவாறு பார். நீ கற்பனை செய்யும் வண்ணம் பார்க்காதே. பகுத்தறிவு பற்றற்ற தன்மைக்கு வழிவகுக்கும்; பற்றற்ற தன்மை சரியான செயலை உறுதி செய்யும்; சரியான செயல் உன் மெய்யான இருத்தலுக்கு உள்முகப் பாலம் அமைக்கும். முழுமூச்சான முயற்சிக்குச் செயல்தான் அத்தாட்சி. உனக்குச் சொன்னவற்றைப் பிசகாமலும் உண்மையாகவும் செய். எல்லாத் தடைகளும் கரைந்து விடும்.
அறியப்படுவதும் அறிபவரும் ஒன்றாவதாய் எனும் கேள்விக்கு.. இவை இரண்டுமே மனதின் கருத்துக்களே - வார்த்தைகள் அவற்றை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சுயம் என்பது கிடையாது. சுயம் என்பது அவை இரண்டில் ஒன்றிலும்கூட இல்லை. அவற்றிற்கு இடையிலோ. அவற்றிற்கு அப்பாலோ இல்லை. அதை மனதளவில் தேடுவது வீண். தேடுவதை நிறுத்தி. அது இங்கேயே, இப்போதே இருப்பதைப் பார். அதுதான் நீ நன்கு அறிந்த 'நான்' என்னும் விழிப்புணர்வு. நீ செய்ய வேண்டிய தெல்லாம் உன்னை விழிப்புணர்வின் புலத்திற்குள் இருப்ப தாகவோ, அல்லது விழிப்புணர்வுப் புலத்தால் ஆனதாகவோ நினைப்பதை நிறுத்துவதுதான். இதைச் செய்தால் போதும். நீ தெளிவான கவனத்தை இதன்மீது வைத்திருக்க வேண்டும்.. உன் பழைய அனுபவங்களையும் சாதனைகளையும் மறந்துவிடு என்று பதில் அளிக்கிறார்.
புதிய மனத்துக்கும் பழைய மனதிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு பழைய சுயம் எல்லாவற்றையும் வரையறுக்கவும் விளக்கவும் வேண்டுகிறது. அது வார்த்தைகளுக்குள் ஒவ்வொன்றும் பொருத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. வார்த்தைகளால் ஆன விளக்கங்களுக்கு புதுசுயம் முக்கியம்த்துவம் கொடுப்பதில்லை. ஞாபகத்தில் உள்ளவற்றோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்காமல் அது ஒவ்வொன்றையும் அவை இருக்கும் படியாக ஏற்றுக் கொள்கிறது என்ற வித்தியாசத்தை உணர்த்துகிறார்.
*நம்பிக்கை இல்லாமல் அமைதி இல்லை.யாரேனும் ஒருவரை நீ எப்போதும் நம்புவாய் அது உன் தாயாகவோ அல்லது உன் மனைவியாகவோ நண்பராகவோ இருக்கலாம்.
*எல்லா நேரமும் ஒவ்வொன்றும் தானாக நடக்கின்றது. ஆனால் நீ அதற்கு தயாராக இருக்க வேண்டும்.தயாராக இல்லாமல் இருப்பது குழந்தைத்தனம்.
*நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எப்போதும் எதிர்காலத்திற்கே நகர்கிறாய்
*உன்னை கேட்பதெல்லாம் உன்னிடமே திரும்பிப் பார்.உன்னை நெருக்கமாக பார் .உனக்குள் ஆழமாக பார் என்பதே
புத்தகத்தின் மையம் என்பது நான் இன்னும் உணர்வை பெறுவது தான். அதற்குத் தேவையானவை விழிப்புணர்வு மட்டுமே.அந்த விழிப்புணர்வுக்கு தடையாக இருப்பவை எவை எவை எல்லாம் உள்ளன என்பதனை கேள்வி பதில் வடிவில் கூறியுள்ளார். சில உரையாடல்கள் சாதாரண வடிவிலும் சிலவற்றிற்கு மிகவும் ஆழ்ந்த பதிலும் இந்த புத்தகத்தில் தந்துள்ளார். எந்த இடத்திலும் கடவுளை வணங்கு என்று கூறவில்லை. ஒவ்வொரு இடத்திலும் உன்னை எவ்வாறு எல்லாம் மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உன்னை எவ்வாறு எல்லாம் உள்ளுணர்வுடன் நோக்க வேண்டும், அதற்கு தேவையானவை என்ன என்ன என்பதனை பற்றிய மனித மனதை நான் என்று அறிய வைப்பதற்கான முயற்சியில் இந்த புத்தகம் உள்ளது. எந்த இடத்திலும் மூடநம்பிக்கைகளை பரப்பும் கருத்துக்கள் இடம்பெறவில்லை. கேள்விகள் தர்க்க ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் நிகழ்கின்றன. இன்னும் கொஞ்சம் சுருக்கி தத்துவ வடிவில் கொடுத்திருந்தால் இன்னும் இந்த புத்தகம் மேம்பட்டதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Saturday, 3 January 2026
நமக்குக் கீழே பணியாற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களைக் கூப்பிடவோ அழைத்துப் பேசும் போதோ " ஃப்ரீயா இருக்கீங்களா?/பேசலாமா/ வரமுடியுமா?" என்று கேட்பது நாகரிகச் செயல்பாடு."உடனே வாங்க! "என்று அழைப்பதற்கு முன் ஒரு நொடி யோசியுங்கள்.வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து.Think how you feel before the strongWhen to the feeble you do wrong.- ஆங்கிலத்தில் சுத்தானந்த பாரதி அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்Dr.ராமானுஜம்
Friday, 2 January 2026
விலங்குகளின் கண்மணிகள் சில செங்குத்தாகவும், சில கிடைமட்டமாகவும் இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு கண்மணிகள் வட்ட வடிவத்தில் இருக்கும்.இதைப்பற்றி 'சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற இதழில் ஓர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.வேட்டையாடுபவற்றின் (புலி, பூனைகள் போன்றவை) கண்மணி செங்குத்தாக இருக்கும். அதனால் அவை மிகத் துல்லியமாக கவனம் செலுத்தவும், இரையைத் தாக்கும் போது தூரங்களைத் துல்லியமாக தீர்மானிக்கவும் உதவுகின்றன.இரை தேடும் விலங்குகளின் (மாடு, ஆடு, குதிரைகள் போன்றவை) கண்மணி கிடைமட்டமாக இருக்கும். அதனால் அவை சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கவும், தூரத்திலிருந்து ஆபத்தைக் கண்டறியவும் உதவும் பரந்த பார்வையை வழங்குகின்றன, இதனால் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.மனிதர்களில் கண்களின் நிலை, தரையிலிருந்து மேலே உள்ள தலையின் உயரம் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய வடிவத்தில் அவை இருக்கும் இந்த வட்ட வடிவம் நமக்கு இரண்டு திறன்களை அளிக்கிறது:1. செங்குத்து கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற துல்லியமான பார்வை.2. கிடைமட்ட கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற பரந்த பார்வை.உயிரினங்களின் மிகச்சிறிய விவரங்களை கூட, அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு எவ்வளவு துல்லியமாக வடிவமைத்துள்ளது இயற்கை-படித்தது.
ஜா-15
வாழ்க்கைக்கு ஹைக்கூ 15
"விடைபெறும் நான்,
வழியனுப்பும் நீ,
இரண்டு இலையுதிர் காலங்கள்."
- யோசா பூசன் (1716-1784)
பொதுவாக "இலையுதிர் காலம்" என்பது அனைவருக்கும் பொதுவான ஒரே பருவக்காலம் தான். ஆனால், இந்த ஹைக்கூவில் கவிஞர் அதை "இரண்டு" என்று பிரிக்கிறார். ஏனென்றால், இந்தக் கவிதை இரு நண்பர்கள் பிரியும் தருணத்தை பேசுகிறது. செல்பவர் (கவிஞர்): பயணத்தை மேற்கொள்பவருக்கு, இந்த இலையுதிர் காலம் ஒரு தனிமையை, பயணத்தின் சவாலை, புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. தங்குபவர் (நண்பர்): அந்த இடத்திலேயே தங்கிவிடுபவருக்கு, அதே இலையுதிர் காலம் வெறுமையை, நண்பன் இல்லாத சோகத்தைக் குறிக்கிறது.
சூழல் இரண்டு பேருக்கும் ஒன்று தான் (இலையுதிர் காலம்), ஆனால் இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருப்பதால், அந்த ஒரே உலகம் இரண்டாகப் பிளக்கிறது.
இதைப் புரிந்துகொள்ள "மகள் திருமணமாகிச் செல்லும் தருணத்தை" உதாரணமாகக் கொள்ளலாம். திருமணம் முடிந்து பெண் வீட்டை விட்டுச் செல்கிறாள். பெண்ணின் பார்வையில் புகுந்த வீடு, புதிய உறவுகள், எதிர்காலம் பற்றிய பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். பெற்றோர் பார்வையில் வீட்டில் மகள் இல்லாத வெறுமை, பழைய நினைவுகள், பிரிவுத்துயர் ஆகியவை இருக்கும்.
நிகழ்வு ஒன்று தான்; நேரம் ஒன்றுதான். ஆனால் மகளின் உலகம் வேறு, பெற்றோரின் உலகம் வேறு. பூசன் சொல்வது போல, அங்கே "இரண்டு உலகங்கள்" உருவாகின்றன.
இந்தக் கவிதை நம் வாழ்க்கைக்குச் சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது:
1. அடுத்தவர் நிலையில் நின்று பார்த்தல்:
நாம் பெரும்பாலும், "எனக்கு வலிக்கிறது, எனக்குக் கஷ்டமாக இருக்கிறது" என்று நம்முடைய பார்வையை (Perspective) மட்டுமே பார்க்கிறோம்.
ஒரே சூழ்நிலை, உங்களுக்கு ஒரு மாதிரியாகவும், உங்கள் எதிரில் இருப்பவருக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகிழ்ச்சி, மற்றவருக்குச் சோகமாக இருக்கலாம். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் உறவுகளில் சிக்கல் வராது.
2. உணர்வுகளே உலகத்தைப் படைக்கின்றன:
உலகம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல; நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதே முக்கியம்.
சந்தோஷமான மனநிலையில் இருந்தால், வெயில் கூட சுகமாகத் தெரியும். சோகமாக இருந்தால், வசந்த காலமும் வலியாகத் தெரியும். நம் மனம் தான் நம் உலகத்தைத் தீர்மானிக்கிறது.
ஆக, ஒரே விஷயத்தை ஆளுக்கொரு கோணத்தில் பார்ப்பது இயல்பு என்று புரிந்து கொண்டு. "என் பார்வை மட்டுமே சரியல்ல, அவருக்கும் ஒரு பார்வை உண்டு" என்று மற்றவர் உணர்வுகளையும் மதித்து வாழ்வதே முதிர்ச்சியான வாழ்க்கை.
Subscribe to:
Comments (Atom)