பிறருக்கு கொடுப்பது தான் பெருமை கொண்ட செயல் என்றும், பிறரிடமிருந்து பெறுவது தாழ்ந்த செயல் என்றும் நாமெல்லாம் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
அதனால் தான் நாம் எதையும் மற்றவர் கொடுக்கும் வேளை அதை graceful ஆக பெற்றுக்கொள்ளகூட கற்கவில்லை. பெறுவது என்பதே ஏதோ சங்கடமான செயலாக நினைக்கிறோம்..
உண்மையில் அப்படியல்ல. கொடுப்பது நற்செயல் தான். ஆனால் பிறர் கொடுப்பதை பெற்றுக்கொள்வது ஒன்றும் இழி செயல் இல்லை.
ஒரு பாராட்டைக்கூட நம்மால் சங்கடமில்லாமல் ஏற்க முடிவதில்லை. ஒன்று நெளிந்து வளைந்து வெட்கத்துடன் ஏற்கிறோம், இல்லையெனில் தலை கனத்திருந்தால், நீ என்னடா என்னை பாராட்டுவது, எனக்கே என் தகுதி தெரியும்டா என்ற அளவில் செயல்படுகிறோம்.
இது பாராட்டுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்குமே பொருந்தும். நாம் கொடுப்பதை பெருமையாகவும் பெறுவதை இழிவாகவும் நினைக்கும் மனநிலை மிகவும் மோசமானது, முட்டாள்தனமானதும் கூட. பெறுவதற்கு மனிதர்கள் இல்லையெனில், கொடுப்பவருக்கு எங்கிருந்து பெருமை வரும்? ஒரு பகிர்தலில் ஒரு பக்கம் நல்லதும் ஒரு பக்கம் கெடுதலும் எப்படி இருக்க இயலும்?
பெரிய உதாரணம் எல்லாம் வேண்டாம். ஒரு சாதாரண நன்றியை கூட சட்டென அழகாக ஏற்றுக்கொள்ள கூசும் மனங்களை வளர்த்து வைத்திருக்கிறோம் நாம். நன்றி என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத வார்த்தைப்ப்போல், ஒருவர் நம்மிடம் சொல்லுபோது அப்படியே ஒரு அதிர்வு ....ஐயையோ எதுக்குங்க இதுக்கெல்லாம் நன்றி சொல்றீங்க? ஏங்க இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? ஏங்க நட்புக்குள்ள நன்றியெல்லாம் சொல்லி தள்ளி வைக்கிறீங்க? இவை தானே பெருபாலும் நாம் ஒரு சாதாரண நன்றியை எதிர்கொள்ளும் லட்சணம்?
நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் யாரும் thank you என்று சொன்னால், பதிலுக்கு no mention please என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள். அப்படியென்றால், உங்க நன்றி எல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல என்று பதுவிசாக சொல்வது. ஆனால் சில வருடங்களில் இது தவறு என உணர்ந்த ஆங்கிலம் பேசும் யாரோ ஒருவர் welcome அல்லது most welcome என்று (வரவேற்கிறேன் அல்லது மிகவும் வரவேற்கிறேன்) சொல்வதை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு இது இன்று வரை most welcome இல் நிற்கிறது.
ஒருவர் ஒன்றை மனதார கொடுக்கும்போது, பேசும்போது, அன்பு செலுத்தும்போது, அதையும் இயல்பாக ஏற்று அதே போல் இயல்பாக பெற்றுக்கொள்ளும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கொடுப்பது பெருமை எனவும், வாங்குவது இழிவு எனும் நிலையில் தான் மனிதர்களிடையே பகிர்தல் என்பது தொலைந்து போய் பல விரிசல்கள் ஏற்படுகின்றன, ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் பெருகுகின்றன.
பெறுவதற்கு யாரும் இல்லையேல், இங்கு அளிப்பவனுக்கு வேலையே இல்லை. இயல்பாக செய்வோமே எதை செய்தாலும்.
இங்கு அடித்து பிடுங்க கூட அஞ்ச மாட்டோம். ஆனால் அளிப்பதை அழகாக ஏற்றுக்கொள்ளத் தான் நமக்கெல்லாம் தெரியாது.
பி.கு. "என் கதை'யில் கமலாதாஸ் ஓர் இடத்தில் கூறி இருப்பார். "நான் அன்பு எனும் பிச்சையை வைத்துக்கொண்டு, அதை ஏந்திக்கொள்வதற்கான பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தேன்" என. இங்கு பிச்சை என்பதையும் தவறான பொருளில் பார்க்க வேண்டியதில்லை. அவர் சொல்ல வந்தது, என்னிடத்தில் அள்ளிக்கொடுக்கும் அளவுக்கு அன்பு பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை சரியாக வாங்குவதற்கு தான் மனிதர் ஒருவர் கூட கிடைக்கவில்லை என்று.
-லதா-