Sunday, 29 March 2026

book-21


#Reading_Marathon2026

#26RM009

Book No:21/150+
Pages:-160

மஹாபிடாரி
-யுகபாரதி

யுகபாரதியின் எழுத்துகள் அவரைப்போலவே எளிமையானவை. அவருடைய முந்தைய புத்தகங்கள் யாவும் சிறியவையாக இருக்கும். நான் எடுத்தவுடனே பிரித்துப் பார்ப்பது யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்பதைத்தான்.ஏனெனில் அவர் சமர்ப்பிப்பது எல்லாமே வித்தியாசமாய் இருக்கும். உதாரணத்திற்கு 

"பெட்டகமாய் மதிக்கப் பெற்று
பின்னாளில்
பொட்டலம் மடிக்கக் கிழிபட்ட 
புத்தகங்களுக்கு"

பஞ்சாரம் கவிதைத்தொகுப்பை இப்படியாக அர்ப்பணித்திருப்பார்
இந்தப் புத்தகம் "நிலவூறித் ததும்பும் விழிகளுக்கு என கவித்துவமாய் சொல்லியிருப்பார்.

எழுதுவோர் அனைவரின் முதல் முயற்சி கவிதைதான். ஆனால் அந்த கவிதைவடிவத்திற்கும் ஆழமான சொற்களையும் அர்த்தங்களையும் இட்டு நிரப்பும் போது கவிஞராகிறார்கள்.கவிதை வடிவத்தில் வெறும் அலங்காரச் சொற்களை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் இன்னும் கவிஞராக முயற்சிக்கிறார்கள் என கருதலாம்.அந்த வகையில் யுகபார்தி அவர்கள் அக்மார்க் கவிஞர்தான். இதில் 108, காதல் கவிதைகள் குமுதத்தில் வாசித்து இருந்தாலும் ஒரு சேர படிக்கும் போது மகிழ்ச்சிதான்.

பூக்காரம்மா கொடுக்கும் பூவினைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்தில் ஒரு கவிதை " ஒரு விரற்கடைக் கூடுதலாக/நீட்டித்து நறுக்கினாளே/ அந்தக் கனகாம்பரத்தில்/ அறிந்து
 கொள்ளலாம் என் காதலின் நீளத்தை/ கவிதை அழகியல்.

ஒருமுறையேனும் உன் கண்களை சந்தித்திருந்தால் மறுபடியும் புத்தன் திரும்பிதிருப்பான் அரண்மனைக்கே என்னும் வரிகள் காதலின் வலிமை ஒரு ஞானியையே திசைமாற்றி இருக்கும் என்கிறார்.

இரண்டுத் தெரு 
தள்ளி நடந்தால் 
உன் வீடு வந்துவிடும் 
இடைப்பட்ட தூரத்தில் 
எத்தனை மரங்களோ அத்தனையிலும் என் காதல் அமர்ந்திருக்கிறது 
பகலில் காக்கையாக 
இரவில் ஆந்தையாக

கடைசி இருவரி எள்ளல்

பேருந்தில் கேட்கும் பாடல்களுக்கு ஆசை அதிகம். அப்படித்தான் இளையராஜா பாடலை அவள் முனுமுனுக்கும் போது அறிய முடியது உன் காதலும் உபரி வெட்கத்தையும்.
இதில் உபரி வெட்கம் கவனிக்க வேண்டிய வார்த்தை.இயல்பாய் இருக்கும் வெட்கத்தை அவர்களே வைத்துக் கொள்வார்கள். உபரியைத் தான் ஏற்றுமதி செய்கின்றனர் என அர்த்தம் தெரிகிறது.

காதலி அனுப்பும் குட்மார்னிங் செய்தியை கவித்துவத்துடன் சொல்லி அதன் இறுதியில்..

" சும்மா இருந்தாலும்/வரக்கூடிய சூரியன்கள்/எழுப்பாமல் விடுவதில்லை/காதலை என்கிறார்.

அதேபோல் அசந்து தூங்கும் காதலியை " எழுப்பிவிடக்கூடாதென்னும் எச்சரிக்கையில்/கனவிலும் தும்மாதிருக்கிறது/ என் காதல் என்கிறார்.

#ரசித்தவை

"*உன்னிடம் கேட்க யோசித்த கேள்விகளில் இதுவும் ஒன்று,
அற்புத விளக்கென்றுதானே கதையில் சொல்லப்படுகிறது பிறகேன் அதிலிருந்து 
தெய்வம் வராமல் 
பூதம் வருகிறது?"

*ஆடுகோழி பலியிடுமிடத்தில் அண்ணன்மார்கள் முன்னிருக்க ஒருவருக்கும் தெரியாமல் 
நீ சிரித்த சிரிப்பில் 
தொங்கிவிட்டது என் தலை விபரீதங்களைத் தொடங்கவே விசேஷங்கள்

*வெகுண்டெழுந்து நீ 
வீதியுலா வருகையில் 
உன் விபூதி தட்டில் 
இடுவதற்கே வைத்திருக்கிறேன் 
என் காதலை

*உனக்கொரு கோவிலோ
மாளிகையோ கட்டுமளவிற்கு
வசதியில்லை.
எங்கெங்கோ கிடக்கும்
சுள்ளிகளைப் பொறுக்கி
கூடமைக்கும் குருவியாகவும் வாய்ப்பில்லை.
அதையும் இதையும்
கட்டுவதால் ஆகப்போவது
ஒன்றும் இல்லையென
உன்னையே
இறுக்கி கட்டிக் கொள்ள
எழுந்தோடி வருகிறது
என் காதல்..

யுகபாரதி கவிதையில் மட்டுமல்ல உரைநடையிலும் வல்லவர் என்பது அவரின் அழகிய முன்னுரை உதாரணம் அதில்

காதல் கவிதைகளில் தென்படும் மற்றொரு மகிமை அது, எழுதியவனை முன்னிலைப் படுத்துவதில்லை. எங்கே அக்கவிதை தொடங்கியதோ அங்கிருந்து விலகி வேறு வேறு திக்கிற்குச் சென்றுவிடும். ஓர் ஆண் எத்தகைய அன்புடன் வெளிப்பட்டாலும், அதை ஒரு பெண் ஏற்கும் பட்சத்தில்தான் காதலாக மாறுகிறது. 'தெய்வம் கல்லிலா / ஒரு தோகையின் சொல்லிலா ' என்று 'வான் நிலா நிலா அல்ல' பாடலில் கண்ணதாசன் கேள்வி எழுப்புவார்.

புத்த்கத்தில் உள்ள எல்லா  கவிதைகளும் ஒரு பக்கத்தில் முடியும் எளிய கவிதைகள்.அன்றாடம் பயன்படுத்தும் இணைய மொழியில் இணைத்து எழுதியுள்ளார். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் ஏதேனும் ஒரு காதல் முடிச்சை ஒளித்து வைத்துள்ளார்.

தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

book-20


#Reading_Marathon2026
#26RM009


Book No:20/150+
Pages:-123

நூலகாலஜி
-ஆயிஷா நடராஜன்

முதன் முதலில் புத்தகம் எடுத்து வாசித்தது கல்லூரி  நூலகத்தில் தான்.விதவிதமான புத்தகங்கள், ஒவ்வொன்றையும் பிரித்து பிரித்து பார்த்து வைப்பேன்.பெரிய புத்தகத்தை தூக்கி கனத்தை கைகள் எடைபோடும். தெரிந்த எழுத்தாளரின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது, ஒரு புத்தகத்தை திறந்தவுடன் இதை வாசிக்காதே சுத்த த்ராபை என எழுதியிருந்த தெய்வ வாக்கை மீறி படிக்காமல் வைப்பது இவை எல்லாம் நூலகத்தில் தான்சாத்தியம்.

புதிய புத்தகங்களை நாம் காசு கொடுத்து வாங்கி வாசிக்கலாம். ஆனால் நூலகத்தின் மூலம் தான் நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் வரும். அட்டையை பார்த்தோ ஆயில் பிரிண்ட் பார்த்தோ யாரேனும் ஒருவர் சொல்லியதை காதால் கேட்டோ புத்தகத்தை எடுத்து பயிற்சி செய்து பார்க்கலாம்.15 நாட்களுக்கு ஒரு முறை புத்தகத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை நம்மை வாசிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். மேலும் அச்சில் இல்லாத அல்லது மீண்டும் பதிப்பிக்காத புத்தகங்களும் அந்த ஞானக்கிடங்கில் தான் ஒளிந்துள்ளது. அந்த நூலகம் குறித்தும் உலகளாவிய நூலகம் குறித்து தான் இந்த புத்தகத்தில் ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதியுள்ளார்.

நூலகம் ஒருவரை எவ்வாறு மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஓக் மாண்டினோ எனும் எழுத்தாளரை பற்றி குறிப்பிடுகிறார். இளம் வயதில் அமெரிக்க படையில் ராணுவத்தில் சேரும் இவர் ஜெர்மனியின் மீது போர் தொடுத்த போது ஜெர்மனி வீரர்களை சுட்டுக் கொன்றதை நினைத்து குறற உணர்வில் மனம் வருந்துகிறார்
 அது தற்கொலை எண்ணம் வரை செல்கிறது அந்த நேரத்தில் அருகிலுள்ள நூலகத்துக்குச் சென்று இதனை செய்து முடிக்க திட்டமிடுகிறார் அவர் அமர்ந்திருந்த மேசையில் இருந்த ஒரு புத்தகம்
‘நான் இறந்து போவதற்கு முன்… (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். இந்த புத்தகம் அவரை எந்த விதத்தில் மாற்றியது என்பதை பற்றி தான் முதல் கட்டுரை துவங்குகிறது.

ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் படிப்பதற்காக நூலகத்துக்கு நுழைய போராட்டங்கள் நடத்திய வரலாறும் உள்ளது. சொல்லப்போனால் பெண்கள் நூலகத்துக்குள் நுழைய 500 ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சோவியத் நாட்டில் இருந்த நூலகங்களை பற்றி சிங்காரவேலர் பதிவு செய்ததையும் கூறியிருப்பார் அதில் வாசிப்பே கற்றல் என்று குரூப்ஸ்கயாவின் தீவிர இயக்கப்படி, 1924ல் தலைவர் லெனின் மறைவிற்குப் பிறகும் அயராது மேலும் தீவிரமடைந்த அவரது நூலகப் புரட்சி மூன்று லட்சம் நூலகர்களை கற்றல்- தேவதைகளாக சோவியத் முழுதும் பயிற்சி தந்து நியமித்து 1939 வரை தொடர்ந்தது.

காமிக் புத்தக உலகம்தான் இன்றைய சர்வதேச நூலகங்களின் ரத்த ஓட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. காமிக்ஸ் புத்தகங்கள் நூலகங்களில் நுழைந்த வரலாறும் மக்களிடம் அது ஏற்படுத்திய அதிர்வு குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தது.

1915ல் டெஸ்லாவும் எடிசனும் இயற்பியல் நோபல் பரிசை பகிர்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது பரிசைப் பெற உடனடியாக மறுப்பை வெளியிட்டார் டெஸ்லா. ஆனால் பிரான்ஸ், யுகோஸ்லேவியா உட்பட 17 நாடுகளின் உயரிய விருதுகள் பெற்றவர் அவர். தனது ஆய்வகங்கள் தீயிடப்பட்ட பிறகு கடும் வறுமையில் அடுத்தடுத்து விடுதிகளில் அறை எடுத்துத் தங்கிட... 1922 முதல் அவர் வாழ்வு அவரைப் பணித்தது. பசியும் பிணியும் வாட்டி எடுத்தன. அறிவியலுக்காக திருமணம்கூடசெய்து கொள்ளாமல் வாழ்ந்த டெஸ்லா இறுதிவரை இரண்டு பழக்கங்களை கைவிடவில்லை. பூங்காக்களில் புறாக்களுக்குத் தீனி போடுதல்... தேடித் தேடி நூலகங்களில் வாசித்த வாசிப்பு என்ன?என்ற வரலாற்றுச் செய்தியும் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் நூலகம் கேள்விப்பட்டோம் ஆனால் நடக்கும் நூலகத்தை அறிவீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்கும் கட்டுரையில் போலன் சர்க்கார் அங்கத்தின் விடுதலையில் முக்கிய பங்கு வைத்த நட்சத்திரம் அவர் என்ன செய்தார் தெரியுமா? 

1970ல் சட்டென்று ஒருநாள் அவர் இரு தோள்களிலும் தோள்பைகளில் வங்க- விடுதலையின் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு தனது நடைப்பயணங்களைத் தொடங்கினார். அவரிடம் அவரது நடையின்போது இருநூறு புத்தகங்கள் இருந்தன. ராஜ்ஷஷி மாகாணத்தின் முப்பத்தாறு கிராமங்களில், தானே நேரில் நடந்து சென்று மக்கள் வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை, தானே நேரில் நடந்து சென்று மக்கள வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு 4கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை தனது புத்தக நடைப்பயணத்தில் முடித்தபின் ஒன்பது நாட்கள் கழித்து மீண்டும் அதே கிராமத்திற்கு வருவார். ஊர் மக்கள் முதலில் அவரது நூல் – அறிமுகத்தைக் கேட்டார்கள். பிறகு தங்களது விருப்ப நூலை தேர்வு செய்வார்கள். ஒன்பது நாட்களில் மறுமுறை அவர் வரும்போது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நூலை பெற்றுக்கொள்ளலாம்.

*டார்வினின் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல... மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும்  வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஓர் அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்துள்ளார்.

*படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய 'யங்- இண்டியா' இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941ல் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்தின் மூலம் நூலகம் குறித்த உலகெங்கிலும் உள்ள வரலாற்றினை அறிய முடிகிறது.நூலகத்தை பயன்படுத்திய அறிஞர்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் நூலகம் குறித்த பல்வேறு தகவல்கள். இந்த சிறிய புத்தகத்தில் சிந்திக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நூலகம் நம் ஊரில் இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று செல்போனுக்கு அடிமையான இளம் தலைமுறையை மடைமாற்றும் விதத்தில் நூலகத்தை பயன்படுத்துவது மிகச் சரியான தீர்வாக இருக்கும். ஏதேன்ஸ் நகரத்தில் முதலில் வந்தவை பள்ளிகள் அல்ல நூலகங்களே என்னும் செய்தியும் நமக்கு அறிய முடிகிறது. இன்று ஊடகத்தில் முன்வைக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். மாறாக புத்தகங்களை நாமே தேர்ந்தெடுக்கும் ரசனையை வளர்த்தெடுப்பதில் நூலகம் முக்கிய பங்கு வைக்கிறது. ஆகவே நூலகத்தில் நாம் உறுப்பினராகி வாசிப்பை மேம்படுத்துவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 27 March 2026

ராமானுஜம்


உளவியலில் Just Noticeable Difference என்று ஒரு விஷயம் சொல்வார்கள். அதாவது ஒரு பொருளின் அளவு அல்லது விலை மாறியிருப்பதை நம்மால் உணர முடியும் மாற்றம். உதாரணத்திற்கு பெட்ரோல் விலையைத் திடீரென ஒரே நாளில் இருபது ரூபாய் கூட்டினால் நமக்குச் சட்டென்று தெரியும். ஆனால் தினமும் பத்து பைசாவாகக் கூட்டினால் மெதுவாக 200 நாட்களில் இருபது ரூபாய் கூடியிருக்கும் . அதை நாம் உணரவே மாட்டோம். 

இதில் முக்கிய விஷயம் . ஒரிஜினல் அளவிலிருந்து எவ்வளவு சதவிகிதம் கூடியிருக்கிறது என்பதுதான்  முக்கியம்.  அதாவது பதினைந்து ரூபாய் டீ திடீரென இருபது ரூபாய் ஆனால் நமக்கு வித்தியாசம் தெரியும். ஏனெனில் ஒரிஜினலைவிட 33% க்கும் மேல் கூடியுள்ளது . இது ஐந்து ரூபாய்தான். ஆனால் அதுவே பத்து லட்சம் மதிப்புள்ள காரின் விலை ஐயாயிரம் ரூபாய் கூடினாலும் நமக்குத் தெரியாது. ஏனெனில் அது ஒரிஜினலைவிட அரை சதவிகிதம்தான்.  அதுவே ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் கூடினால்தான் நம் கவனத்தை ஈர்க்கும்.

இன்னொரு விஷயம்!  தினமும் அளவு பார்த்துக் கொண்டே இருந்தால் மாறுதல் நம் கண்களுக்குத் தெரியாது. ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

 உடல் எடை கூடுவதும் அப்படியே . கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதை நம்மால் உணர முடியாது.  பெரும்பாலும் மாதம் அரைக்கிலோ, முக்கால் கிலோ கூடும். ஆனால் இரண்டு வருடங்களில் 12 -15 கிலோ கூடியிருக்கும்.

அதே போல் வெற்றிகளும் உடனே வெளியே தெரியாது. உடல் எடைக் குறைப்பாக இருக்கட்டும், ஓர் இசைக்கருவி வாசிப்பதாக இருக்கட்டும், முதலீடாக இருக்கட்டும் , மெதுவாகவே முன்னேற்றம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும். முன்னேற்றம் இல்லை எனக் கைவிட்டுவிடக் கூடாது.

இந்த Just noticeable difference க்கும் கீழே இருக்கும் மாறுதல்களை உணர நீங்கள் மாற்ற விரும்புவதை அடிக்கடி தொடர்ந்து  அளவிட்டு ஆவணப்படுத்திக் கொண்டே இருங்கள். சேமிப்போ, உடல் எடையோ...சில வருடங்கள் கழித்து பழைய மதிப்பீடுகளைப் பார்த்து ஒப்பிடும்போதுதான் உங்கள் முன்னேற்றம் கண்ணுக்குத் தென்படும். மேலும் முன்னேற உந்துதலாக இருக்கும்.

ஆகவே ஆவணப் படுத்துங்கள். அளவிடுங்கள். எடை பார்க்கும் கருவி வாங்கி எடை பார்க்காமல் எடையைக் குறைக்கவே முடியாது. 
எனக்குப் பிடித்த வாசகம் ' You cannot change what you cannot  measure'. அளக்க முடியாத விஷயத்தை உங்களால் மாற்ற இயலாது. 

#அன்றாட_வாழ்வின்_உளவியல்

டாக்டர் ஜி ராமானுஜம்

-

Tuesday, 24 March 2026

Book-19


#Reading_Marathon2026
#26RM009

Book No:19/150+
Pages:-170

பூமர்
-செளம்யா

அரட்டை கேர்ள் எனும் சௌமியா அவர்களின் நான்காவது புத்தகம் இது. தொடர்ந்து அவரின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் மிக நெருக்கமாக இருக்கும். ஒரு சம்பவத்தை சொல்லும்போது கூர்மையான சில சொற்களை வைத்து நம்மை வீழ்த்தி விடுவார், அவரின் வார்த்தைகளுக்கு பின்னால் நம் மனதையும் செல்ல விட்டு அவர் சொல்வதை எல்லாம் நாம் ஆமோதிக்கும்படி எண்ண வைப்பார். இந்த கதைகளும் அப்படித்தான்.

"நீ சம்பாதிக்க ஆரம்பிச்சா இதைவிட நல்லதா வாங்கிட மாட்டியா"என்று தான் ஆரம்பிக்கிறது.. சொந்த வீட்டை விற்கும் அப்பாவின் வார்த்தை. இந்த ஒரு புள்ளியில் இருந்து துவங்கும் கதை இறுதியில் நாம் எதிர்பாராத விதத்திலும், மனம் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் கதை முடிகிறது. ஆனால் மணலில் கல்லை ஒளித்து வைப்பது போல சொற்களில் தேடித் தேடி அந்த முடிவை நாம் எடுக்க வேண்டும் என்பது சுவாரசியமானது. /வேறு மார்க்கமற்ற கையறு நிலையில் இன்னும் நிகழாத அல்லது நிகழவே வாய்ப்பறற வசந்தமான ஒரு எதிர்காலத்தை கனவு கண்டு சமாதானம் கொள்வது ஒரு ஆறுதல்/ என்பது உளவியல் உண்மையே.

/எதனால் அப்படி முடிவெடுத்தாளோ தெரியாது. ஆனால் செயலில் இறங்கிய பின் ஒரு முறையேனும் மீள முயற்சித்திருப்பாள். அது கண்டதிருந்து கையாளாகாமல் இந்த அறை அவஸ்தை பட்டு இருக்கும்/ என்பதை படிக்கும் போது மனம் சற்று அசைபோடுகிறது அந்த காட்சியை.

நான்கு மாடி கட்டடத்தில் நின்றிருந்தால் முதலில் தோன்றுவது கீழே விழுந்தால் என்ன ஆகும் எனும் எதிர்மறை சிந்தனை தான். அப்படி வரும்போதே நம்மையறியாமல் கையின்பிடி இறுகுவதை காணலாம். சாவு குறித்த செய்தி கேட்பதை விட கண் முன் பார்ப்பது துயரமானது. மனம் அவர்களை நினைத்து நம்மை ஒப்பீடு செய்யும் யதெச்சையாக. இறையன்புவின் நாவல் ஒன்று சாகாவரம். நண்பனுடைய இறப்பை பொறுக்கமாட்டாது மனம் ஏற்படுத்தும்.அடுக்கடுக்கான கேள்விகள்தான் அந்நாவல். இத்தொகுப்பில் உள்ள இக்கதையும் சிறுவனின் பார்வையில் சாவை நோக்கிய சிந்தனையை கிளறுவதாக அமைகிறது." கடன் வாங்கித்திரும்பத் தராம செத்துப்போறவங்க அடுத்த பிறவியில் மாடாய் பொறப்பாங்கனு வரி வரும்..நான் நினைச்சிக்கிட்டேன் அடுத்த ஜென்மத்தில மனுசங்களை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்னு

இக்கால ஜென்சி தலைமுறையின் கதைக்களம் தான் பூமர்.'உள்ளங்கை' கதை அவரின் தளத்தில் வந்தவுடனே படித்தேன். அக்கா தம்பி உறவின் மேன்மையை துருத்தலின்றி மிக இயல்பாய் பாசப்பிணைப்பை நவீனகாலத்தில் இருக்கும் அன்புடன் சொல்லியிருப்பார்.அக்கா கொடுக்கும் கட்டப்பைக்குள் ஷங்கர் பார்வையை நுழைக்கும் போது படிக்கும் நம்மையும் பையில் என்ன வைத்திருப்பார் என்று சொற்களில் துலாவ வைத்திருப்பார்.

தீராக்காதல் கதையும் ஏற்கனவே வாசித்திருந்தது தான். நடுத்தர வர்க்கத்து பெண்மணி எல்.ஐ சி ஏஜெண்டாக இருப்பாள். அங்கு வரும் மேலதிகாரி மீது வரும் ஈர்ப்பை கதை முழுவதும் நாசூக்காய் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருப்பார்.

பெண்களின் கைகளுக்கு ஒரு மாயவித்தை இருக்கிறது என 'அலங்கோலம்' கதையில் ஒரு வரி வரும்..அதுபோல சொல்லும் இக்கதையில் ஏதேனும் ஒரு மந்திர வரிகள் அல்லது படித்தவுடன் அடடே என எண்ண வைக்கும். காட்சிகளையும் தன் சொற்சித்திரத்தால் வண்ண மயமாக்கிவிடுவார். கணவன் மனைவி அந்நியோன்யத்தை அழகிய வரிகளால் விரசமின்றி பதிவு செய்திருப்பார். இதற்கு நேர்மாறாக சந்தேகப்படும் கணவனையும் சகித்துக் கொள்ளும் மனைவையைப் பற்றியும் ஐயுறவு கதை அழகியல்.கதையின் இறுதியில் மகள் தனக்கு நேரும் ஒரு நிகழ்வின் போதுதான் அம்மா இத்தனை நாட்கள் சொல்லும் சொற்களில் உயிர் உள்ளதை அறியும் இடம் நச்

"கோடுகளுக்குள் இருக்கும்வரை பிரச்சனை இல்லைதான். ஆனால் கோடுகள் ஒவ்வொரு முறையும் புதிய வட்டத்தைப் போட்டுக் கொண்டே வந்தன. ஒவ்வொரு புதிய வட்டமும் முந்தையதை விட ஒரு சுற்று குறுகி இருந்தது. அந்த குறுகலுக்குள் அடைபட்டு மூச்சு முட்டும் நிலைக்குத் தான் தள்ளப்படுவதை உணரச் சில மாதங்களாகின ரம்யாவுக்கு என ரம்யாவின் மனநிலையை அழகாக ஒப்பிட்டு காட்டியிருப்பார்.

இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதையாக மனக்குடல் கதை என சொல்லலாம். விவாகரத்தான இருவரும் மேட்ரிமோனி வழியாக பேசி சந்தித்து மறுமணத்துக்கு தயாராகின்றனர். எல்லாம் பொருந்தி வரும்போது ஒரே ஒரு செயல் நாயகனிடன் மனதில் உள்ளதை சொல்லும். அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை. 
பிற்போக்குத்தனங்களை ஒரு பெண் எதிர்கொள்ளும் சூழலில் ஒரு பெண் என்ன முடிவெடுக்கிறாள் என்பது கதையின் இறுதியாக அமைகிறது.

 /சந்திப்பது என்பது இருவர் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையை சம்பாதிப்பது/

" காலம் எல்லாவற்றையும் ஆற்றித் தேற்றுகிறது.எந்த உயிரும் வாழ்நாள் முழுக்கத் தனித்திருப்பதில்லை. யாரோ ஒரு ஜீவன் யாருக்காகவோ துணை நிற்பது காலத்தின் விதி எனும் வரி அருமை. கதையோட்டத்திற்கு பொருந்துகிறது.
இறுதியில் வந்து அம்மாவின் திட்டுக்குத் தயாராகியபடி அலைபேசியை அழுத்தினாள் என்பது அழகியல்.

மருத்துவமனை கேண்டினில் ரோஷன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். இந்த மனித மனம்தான் எத்தனை விசித்திரமானது! நெஞ்சம் முழுக்கத் துக்கம் நிரம்பிய ஒருவனால் நா ருசிக்கத் தேநீர் அருந்த முடிகிறது. போதை நாடி புகை பிடிக்க முடிகிறது. உடல் எப்போதுமே மனதுக்கு ஓர் அடி முன்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது . ருசி, பசி...
பரிதவிப்பில் என கதை துவங்குகிறது.

சாலை விபத்தில் அடிபட்டு படுத்திருக்கும்.உயிருக்கு உயிரான மனைவியை நினைத்து மருகும் கணவன் ரோஷனின் மனநிலையைத்தான் சொல்லியிருப்பார்.மகள் மீது அதீத அக்கறையுள்ள தாயின் பிரச்சினை குறித்த காரணத்தை அழகாக சொல்லியிருப்பார்.

செளம்யாவின் கதைக்களம் யாவும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சிக்கல்களை, சமூக அவலங்களை மிக யதார்த்த நடையில் படைத்தது சிறப்பு.அதனையே கதாபாத்திரங்களுக்கும் இடையேயான உரையாடலாக அமைந்தது நன்று.யதார்த்த உலகில் அல்லது போட்டி உலகில் தனி மனித உணர்வும் பார்வையும் சமூகத்தின் குரூர கணங்களை எதிர்கொள்ள முடியாத இயலாமையும் கதைகள் வெளிப்படுத்துகின்றன.வெறுமனே பெண்ணியம் பேசாமல் அடுக்கடுக்கான காரணங்களை சொல்லாமல், பிரசங்கம் போல் முழங்காமல், ஒவ்வொரு ஆண்களையும் உணர வைக்கிறார்.இதுவே படைப்பின் பெரும்பலம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 23 March 2026

Sunday, 22 March 2026

book-18


#Reading_Marathon2026
#26RM009

Book No:18/150+
Pages:-376

கருந்துளை
-கரன் கார்க்கி

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவற்கு வந்திருந்த அனைவரின் கைகளிலுமிருந்த புத்தகம் தான் கரன்கார்க்கி எழுதிய கருந்துளை நாவல். அடிப்படையில் தத்துவம் குறித்த வாசிப்பு மிகவும் பிடிக்கும். அறிவார்ந்த உரையாடல் இருக்கும் என்பதால் விரும்பி வாசித்தேன். அதே போல் தத்துவ விளக்கம் நாவல் முழுக்க எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் தத்துவவியல் பயிலும்.மாணவர்களான சமரனும், சுகுவும் நண்பர்கள்.தத்துவத்தில் நாட்டமுள்ள மாணவன் சமரன் அனைவரிடமும் பழகாதவன். ஆனால் தத்துவ படிப்பில், அறிந்துகொளவதில், வாசிப்பில் ஆர்வமுள்ளவன். உடன் பயிலும் வெண்பாவை காதலித்தாலும் நியாயமற்ற சில செயல்கள் செய்ததால் குற்ற உணர்வு ஏற்பட்டு தற்கொலை குறித்த எண்ணங்கள் அவனிடம் அடிக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் சுகுதான் அவனை தேற்றுவான்.தத்துவ ஆசிரியராக வரும் முரளி சார் மீது அள்வற்ற அன்பு வைத்துள்ளான்.அவரிடம் வகுப்பில் தத்துவத்தில் உரையாடல் செய்வான்.

பொதுவாக தத்துவம் என்பது கேள்விகள் கேட்பது, அறிவியல் என்பது அந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தருவது. எல்லாவற்றையும் வரையறை செய்து கொண்டு கேள்வி கேட்பது, காரண காரியத்துடன் விளக்குவது தான் அறிவின் முதற்படி என்கிறார்கள் தத்துவ அறிஞர்கள். 

அமெரிக்க நண்பரான சாக்கிய மோகன் என்பவருடன் தத்துவம் குறித்து உரையாட சமரன் அழைக்கப்படுகிறான்.தத்துவம்.
குறித்த உரையாடல் இப்பகுதியிலிருந்து துவங்குகிறது.
எல்லா இந்தியத் தத்துவங்களும் சுயம்பாக ஒன்றாக உருவாகவில்லை.உதாரணத்திற்கு ஈர்ப்பு விசை கண்டறிந்த நியூட்டன் ஈர்ப்பு விசைக்கான காரணத்தை கண்டறியவில்லை. ஐன்ஸ்டீன் கண்டறிந்ததாக விளக்குகிறார். இந்தியாவில் ஆத்திகப் பள்ளிகள் இருந்தது போல வேதங்களை ஏற்காதவர்களுக்கான நாத்திகப் பள்ளிகளும் இருந்தது என்றும் சாருவாகத் தத்துவம் நாத்திக பள்ளியை சேர்ந்தது எனக்கூறுவதும்,அதை விளக்கியிருப்பதும் சுவாரஸ்யம்.

இந்தியத்தத்துவங்கள் துறவறத்தை வலியுறுத்துவது போல மறுபிறப்பை ஏற்கின்றனவா? தத்துவங்கள் மீது புனிதப்பூச்சு உள்ளனவா? மதங்கள் ஏன் தத்துவங்கள் தருவித்துக் கொண்டன?போன்றவற்றிற்கு கருத்தாழமிக்க தொடர்பை கூறுகிறது.மனித வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒரு தத்துவப் பயணம் என்று கூறலாம்

 கதைக்காக சட்டென்று சமரனை - சராசரி காதலனாக - காதல் வசனங்கள் பேசும் கதாபாத்திரமாகக் காட்டாமல் காதல் தருணங்களிலும் அவன் தீவிரத்தன்மையோடே இருக்கிறான். ஆனாலும் அவனுக்குள்ளும் எட்டிப்பார்க்கும் காதலையும் அவ்வப்போது எழுதியும் இருக்கிறார் நாவலாசிரியர். ‘ஒரே விழியில் ஆயிரம் முறை மூழ்கலாம்’ வரி அதற்கோர் உதாரணம். 

சமரன்-வெண்பா காதல் அத்தியாயமும் இறுக்கமாய் இல்லாமல் இயல்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.பேராசிரியர் முரளியின் பின்னணி குறித்து விளக்கப்பட்டுள்ளது.தத்துவ பிடிப்புடன் ஆசிரியர்களுக்கே உரிய நிலையில் உள்ளார். சக பேராசிரியரான ஜடாயுவுடன் வேறுபட்டவர் என்பதை வகுப்பு மாணவர்களின் பார்வையில் விளக்கியிருப்பார்."கண்ணுக்கு தெரியாமலிருக்கும் ஒரு பொருள் எந்த விதத்திலும் வெளிப்படாதிருக்கும் என்றால் அது இருக்கிறதென்பது உண்மையல்ல" எனும் புத்தரின் வாசகம் பொருத்தமான இடத்தில் வருகிறது.

/ஒட்டு மொத்த உயிரினங்களும் ஒன்றிலிருந்து இன்னொன்றெனப் பரிணமித்ததுதான். அந்த விதத்துல குரங்குல பல வெரைட்டி இருக்கு. எல்லாமே மரத்திலிருக்குற பழங்களைக் காலி பண்ணிட்டு அடுத்த மரத்துக்குத் தாவிடும். ஆனால், மரத்திலிருக்குற பழம் காலியான பிறகு நிலத்தில் உணவைத் தேடுன குரங்குக்கும் மனிதனுக்குமான பொதுவான மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. அப்படியான ஒன்றான நியாண்டர்தால் மனிதனையும் குரங்கு வகையென்றே நாம் நினைத்திருந்தோம்/ எனும் பகுதியும் பின்னர் வரும் விளக்கமும் மூதாதையர் குறித்த புரிதலை விரிவாக்குகிறது.

நாவலின் எதிர்பாராத திருப்பமாக சுகுவிற்கு ஒன்று நிகழ்கிறது. அது சமரனை பாதிக்கிறது. தத்துவ விசாரணை செய்கிறான்.சமரனின் அம்மா கதாபாத்திரமும் அவளின் அடுத்த கட்ட நகர்வையும் சமரன் தீர்மானிக்கிறான்.நாவலின் ஒன்பதாவது அத்தியாயம் சினிமாபார்க்கும் உணர்வை காட்சிவடிவில் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளது.அதனைத்
தொடர்ந்து வெண்பனியில் வரும் நினைவுகள் நாவலை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

சமகால அரசியல் நிகழ்வுகள், சங்க கால.காட்சிகள், குதிரை குறித்த வரலாறு, பயணிகளின் கனிவான  கவனத்துக்கு, ராபர்ட் சிஷோம்-நம் பெருமாள் உரையாடல்,டாக்டர்-மகாத்மா உரையாடல் என
நாவலின் கடைசி அத்தியாயங்கள் அதிக ஆழமுள்ள கருத்துக்களுடன் வெளிப்பட்டுள்ளன

அதிகாரத்துக்கு எதிராகப் பேசினால் அது கருணையின்றி தங்களுக்கு எதிரான தத்துவத்தை கொன்றுவிடுவார்கள் என்று நிதர்சன உண்மைகளை வரலாற்று ஆதாரத்திலிருந்து தெரிவிக்கிறார்கள்..ஒருமரண போராட்டத்தில் இறுதியில். இறப்பவரின் மனநிலையில் என்னவெல்லாம் தோன்றுமோ அத்தனையும் விவரிக்கப்பட்டுள்ளது.
தத்துவ தரிசனமாக கடைசி மூன்று அத்தியாயங்கள் உள்ளன

#ரசித்தவை

*எதேச்சையான ஒன்று மற்றொன்றால் பயனுக்குள்ளாகிறது. பயன்பாட்டிலிருக்கும் ஒன்று மற்றொன்றால் பலப்படுகிறது. இப்படியாக வலிமையானது தப்பிப் பிழைக்கிறது - ஹெராக்லிடஸ்

*உண்மையென்பது பாதையற்ற நிலம் மட்டுமே, உண்மைக்கான பாதையை நான் போட முடியாது.
ஒளியை நோக்கிப் போவதாக நினைத்து இருளுக்குள்ளே நுழைந்து ஏமாறுவீர்கள்.

*தத்துவங்கள் மதங்களுடன் தொடர்புடையதாக மட்டுமே என்று நம்பப் பழகிவிட்டோம்

*மரபு, விதிகளின்படி வாழ்வதுவீண். நமக்கான வாழ்வை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும்-சார்த்தர்

*டுபாக்கூர்-இரண்டு மொழி தெரிந்தவர் என்று பொருள் அன்றைய நாளில் ஆங்கிலேயருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் பலவித தில்லுமுல்லுகளை செய்து பணம்.சம்பாதித்தவர்கள் என்பதால் துபாஷி என்ற சொல் வசைபாடும் சொல்லாக டுபாக்கூர் என மருவியது

நாவலுக்குரிய பொருத்தப்பாட்டுடன் உணர்வு ரீதியாக கடத்தாமல், தத்துவார்த்த ரீதியாக, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும்-கே.ஆர்.மீரா

டுபாக்கூர்-இரண்டு மொழி தெரிந்தவர் என்று பொருள் அன்றைய நாளில் ஆங்கிலேயருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் பலவித தில்லுமுல்லுகளை செய்து பணம்.சம்பாதித்தவர்கள் என்பதால் துபாஷி என்ற சொல் வசைபாடும் சொல்லாக டுபாக்கூர் என மருவியது-கரன் கார்க்கி

Tuesday, 17 March 2026

ஜா


கடந்த 75 ஆண்டுகளில் மனித சிந்தனை‌ முறையை மாற்றிய 5 முக்கியமான உளவியல் கருத்துகள்:

1. அடையாளம் என்பது நடத்தையால் உருவாக்கப்படுகிறது (Identity is built by behavior) பி.எஃப். ஸ்கின்னர் (1950):
நீங்கள் எப்படிப்பட்ட நபராக மாற விரும்புகிறீர்களோ, அப்படி ஆவதற்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் அப்படிப்பட்டவராகவே நடந்துகொள்ளத் தொடங்குங்கள். அது உங்கள் இயல்பாக மாறும் வரை அதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களின் எதிர்காலத்தை நோக்கி நீங்கள் வைக்கும் ஒரு அடியாகும்.

2. மக்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை (People aren’t thinking about you) சவிட்ஸ்கி (1999):
இதனை ஸ்பாட்லைட் விளைவு என்பார்கள். மக்கள் உங்கள் தவறுகளையோ அல்லது தோற்றத்தையோ அதிகமாகக் கவனிக்கிறார்கள் என்று நீங்கள் தவறாக மதிப்பிடுகிறீர்கள். ஆனால் உண்மையில் உங்களைப் போலவே அவர்களும் தங்களைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள். இதை உணர்ந்து கொண்டால் மனச் சுதந்திரம் கிடைக்கும்.

3. வளர்ச்சி என்பது போராட்டத்திலிருந்தே வருகிறது (Growth comes from struggle) கரோல் ட்வெக் (2006):
திறமை வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. உங்களின் நம்பிக்கை தான் தீர்மானிக்கிறது. உங்களால் வளர முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நிச்சயமாக வளர்வீர்கள். உங்களின் தொடர் முயற்சியானது திறமையை மேம்படுத்துகிறது. அதுவே 'வளர்ச்சி மனப்பான்மையின்' சக்தியாகும்.

4. தொடர்ச்சியான அனுபவங்களே சிந்தனையை வடிவமைக்கின்றன (Exposure shapes cognition) பாண்டுரா, (1977):
நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தரநிலை (standard) ஆகியவை நாம் எவற்றை தொடர்ச்சியாக, திரும்பத்திரும்ப பார்க்கிறோமோ அவற்றால் ஏற்படுகின்றன. நீங்கள் தினமும் எதைப் பார்க்கிறீர்களோ, அது காலப்போக்கில் சாதாரணமானது என்று நம்பத் தொடங்கிவிடுகிறீர்கள்.‌ இன்றைய டிஜிட்டல் சூழல், ஏஐ போன்றவை ஆரம்பத்தில் வியப்பளித்தாலும் கொஞ்ச நாட்களில் அது சாதாரணமாக தெரிகிறது. இந்த மனநிலை நம்‌ மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். 

5. நாம் உச்சக்கட்ட தருணத்தையும் இறுதியையுமே நினைவில் கொள்கிறோம் (We remember the peak and the end) டேனியல் கான்மேன் (1993):
நாம் நமது அனுபவங்களைச் சரியாக, முழுமையாக மதிப்பிடுவது கிடையாது. ஒரு நிகழ்வின் மிக முக்கியமான தருணத்தையும், அது எப்படி முடிந்தது என்பதையும் தான் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். எனவே நாம் என்ன எழுதினாலும், விவாதித்தாலும், கலைப்படைப்பை அல்லது விளக்கக்காட்சி உருவாக்கினாலும் அதனை‌ சிறப்பான முறையில் முடியுங்கள்; மேலும் மக்களுக்கு மறக்க முடியாத ஒரு உச்சக்கட்ட தருணத்தைக் கொடுங்கள்.

Saturday, 14 March 2026

ஆறு சொல்லவே இல்லைநீரின் எந்த ரகசியத்தையும்.நீர் சொல்லவே இல்லைஆற்றின் மீது எந்தப் புகாரையும்.'உப்புச் சப்பற்ற வாழ்க்கை'அலுத்துக் கொள்கிறது படித்துறை.~ வண்ணதாசன் ~

வழக்கமான வழியில் அமைதியாக ஓடும் நதியென்று எதுவுமே இவ்வுலகில் இல்லை-கரன் கார்க்கி

book-16


#Reading_Marathon2026
#26RM009

Book No:16/150+
Pages:-152

நெருப்பில் வளர்பவை
-பா.திருச்செந்தாழை

படைப்பு மனநிலை உச்சத்தில் இருக்கும் போது.. கதை ஓட்டத்திற்கு வந்து விழுகின்ற வார்த்தைகள் யாவுமெந் கருத்துசெறிவுடனும், அழகியலுடனும் சொற்கள் துடுப்பு போல கதைகளை முன்னோக்கி நகர்த்தும்.அப்படித்தான் திருச்செந்தாழையின் கதைகளில் ஒவ்வொரு சொற்களும் மின்னும்.
யதார்த்த உண்மைகளை,வாழ்வியல் சிக்கல்களுடன் தரும் போது நல்லதொரு வாசிப்பு அனுபவமாகிறது.

பொதுவாக காக்கை ஒளிவீசும் பொருட்களை விரும்பி எடுத்துச் செல்லும் அல்லது மதிப்பில்லாத பொருளை மதிப்புள்ள பொருளை எண்ணும்.காக்கைப் பொன் கதையில் வரும் மையக் கதாபாத்திரமான மஞ்சுவும் இதுபோலத்தான்..சற்குணத்தின் அன்பை அறிய முற்படுகிறாள் என்பதை பல நுட்ப வரிக்ளால் நெய்திருப்பார். /வீடு முழுக்க மதிய நேரத்தின் இருள் இறங்கியிருந்தது/

/அறிவுரைகள் பதற்றத்தின் நீர்ச்சுழிப்பில் கலந்து மறைந்தன/

உரசிக்கிழித்த தீக்குச்சியின் பெரும்பிழம்பொன்று மெல்ல மெல்ல ஒரு துளியாகி வடிகின்ற வெளிச்சமும் கதவிடுக்கில் விழுந்தது எனும் சிறுகதைக்கான சரியானபாதை இறக்கத்தில் இறங்கும் விமானம் போல் மஞ்சுவை போல் நாமும் ஆயாச மடைகிறோம்.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வீழ்ச்சியை கதையில் சொல்லி முடியாது. அப்படித்தான் சகுந்தலா-தினகரனின் குடும்ப வீழ்ச்சியால் பத்து வயதான சிவபாலனின் உழைப்பை காலம் வட்டியாக கேட்டிருக்கிறது."கரனை கரனையான அவனது புஷ்டிக் கட்டுகள் மீது சணல் சாக்குகளின் பிசிறுகள் இன்னமும் அப்பிக்கிடப்பதை பார்த்தால்.. வாசிக்கும் நமக்கும் தாய் போல்ச் இதயம் கனப்பதை கட்டுப்படுத்த முடியாது.தன் எழுத்துக்களின் வழியே அகத்தை தொட்டிருப்பார்.

கட்டி வச்சதோட வேலை முடிஞ்சிருச்சு..என்னையும் அக்காவையும் வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்மாவுக்கு. எப்போதும் நெருப்புடனேயே வாழப் பழகியவள்.ஓடிப்போன கணவனை நினைக்காது..வைராக்கியத்துடன் குடும்பத்தை நடத்துகிறாள். பெரியவனாகி திருமணம் முடித்து சுரண்டல் லாட்டரியால் ஜெயிலுக்கு போய் திரும்பும் மகனின்  பார்வையில் கதை நகர்கிறது. வெளிச்சத்திற்கு தான் ஆயிரம் உபகரணங்கள் தேவை இருளுக்கு? எனும் வரியில் தங்கள் வாழ்வு குறித்த சுய புராணம் சொல்கிறார்.

குளிர்ச்சியான கற்களும் வெளிச்சத்தை அனுமதிக்காத இருளும் நிரம்பியிருந்த வீட்டினுள் தன்னுடைய நண்பன் சுதாகரன் சட்டகத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்தான். துக்கம் விசாரிக்கப் போன சுதன் வெளிச்சம் நீங்க்கிவிட்ட வீட்டையும் அம்மாவையும் பார்த்தான். நிராதரவான சூழலில் ஏதெனும் ஆறுதல் மொழி கூறுபவர்கள் தெய்வத்தின் தூதுவர்கள். நிராதரவாய் விட்டுச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். எங்கேயும் செல்லமுடியாத தடுப்பு வேலியாக இருக்கும் இருளை விரட்டும் வெளிச்சம் போல் வந்தவனைப் பற்றி தாயின் அகம் பற்றிய கதை இது.

ஒரு அரசு ஊழியரின் மனநிலையும் அவரை நாடி வரும் அப்பாவி மக்களின் நாடியையும் பிடித்துப் பார்ப்பது போல மனநிலையை ஒரு பருக்கை பதமாக உணர்த்துகிறது.

/அத்தனை பேர்களது அசமந்தத்தின் நடுவே பற்றி எரிகின்ற காகிதம் போல ஒரு மனிதன் அலைவதை நான் எனக்குள் மிக நெருக்கமான ஞாபகப்படுத்தலாக உணர்ந்தேன். என்னை அறியாமல் அவரை நோக்கி, "இப்படி உட்காருங்க" என்றேன்.

அவரது பதற்றத்தைத் தணிக்கும் விதமான எவ்வித உத்தரவையும் வழங்குவதற்கான அதிகாரம் எனக்குக் கிடையாது. ஆனால் குறைந்தபட்சமாக அந்த அவதியோடு கைகோர்க்கத் துடித்தெழுந்த
ஒன்று உள்ளுக்குள் இருந்தது. அவர் என்னை அதே வினோதமான கண்களோடு பார்த்தார். அவரால் அவரது சுத்தல்களால் ஒருபோதும் உள்நுழைய முடியாத பிரம்மாண்ட கட்டிடத்தின் ஒரு சிறிய ஜன்னல் திறப்பைப் போல எனது குரலை அவர் உணர்ந்திருக்க வேண்டும்./

ஒரு நல்ல காட்சிக்கு பொருத்தமான வசனம் என்பது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் அந்த காட்சியின் தன்மையை அந்த வசனங்கள் தான் பிரதிபலிக்கும். ஒரு சில வார்த்தைகள் அந்த கதைகளின் ஒட்டுமொத்த கருவையும் ஒரு சொற்களில் சொல்ல வைக்க முடியும். ஆனால் அந்த சொற்களை தேடுதலில் தான் அந்த எழுத்தாளனின் முயற்சி உள்ளது. அந்த வகையில் 

/நீரில் விழுந்து விட்ட எண்ணெய் துளியை போல கலக்கவும் முடியாமல் விலகவும் இயலாமல் நின்று கொண்டிருந்த அவனது அவஸ்தையும், பதை பதைப்புமான முகத்தை பார்த்தபடி/ என்று ஒரு வரி ஒரு பிடி வெளிச்சம் கதையில் வருகிறது. இதை சாதாரணமாக படித்தால் கூட ஒரு இலக்கிய தரமாக இருக்கிறது. கதையோடு ஒன்றி வரும் போது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை இன்னும் மெருகூட்டுகிறது.

காலி செய்யப்பட்ட வீட்டினுள் அல்லது புதிதாக கட்டிய வீட்டினுள் நுழைந்து உள்ளீர்களா? எந்த பொருளும் இல்லாமல் இருக்கும் பேரமைதி வீட்டில் இருக்கும். அந்த அமைதியை நான் பலமுறை ரசித்துள்ளேன் நான் ரசித்ததை அப்படியே கேமராவில் பதிவு செய்வது போல சொற்களில் கொம்பு கதையில் வடித்துள்ளார்...

/கிழவன் வீட்டைத் திறந்தான். பொருட்களை எல்லாம் எடுத்துவிட்ட பிறகு வெற்று அறைகளில் நிறையும் ஆயாசத்திற்கும் மௌனத்திற்கும் வேறொரு வாழ்க்கை இருப்பது போலக் கிழவனுக்குப் படும். சாதாரண மனிதர்களால் வாழ முடியாத ஒரு வாழ்க்கை. இந்த வெறுமைக்குள்ளும் அமைதிக்குள்ளும் மிக மிக மெதுவாக நகர்கின்ற காலத்திற்குள்ளும் பேசிக்கொள்ளத் தேவையற்று சிலைகளைப் போல வாழ்கின்ற ஒரு வாழ்க்கை. பொருட்கள்தான் எவ்வளவு அசிங்கத்தைச் சேர்த்து விடுகின்றன இந்த வாழ்வின் மீது. கிழவன் ஒரு குழந்தையைப் போல் அந்த வீட்டின் தூசி படிந்த அமைதி மீது மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான். எப்போதாவது இப்படி இடிபடப்போகின்ற வீட்டில் தனியே இருக்கக் கிடைக்கும் வாய்ப்பு வந்தால் கிழவன் தவறவிட மாட்டான். அப்படியான வீட்டில் இருந்தபடி குடிக்கின்ற பீடித்துண்டுகளுக்குள் உச்சமான போதை நிரம்பி விடும்/
நல்ல ஒரு அழகியல் நிகழ்வை இந்த கதைகளில் சொல்லியிருப்பார்.

திருவிழாவின் இரைச்சல் சத்தங்கள் இப்போதும் தொலைவாக எங்கோ காற்றில் துணி வீழ்வதைப் போல கசிந்து கொண்டிருந்தன. எனும் நிறைசூலி கதையின் துவக்க வரி நல்ல ஒரு கவித்துவ உணர்வைத் தருகிறது.

ஒரு தருணத்தை, சுவாரஸ்யமான கவித்துவ சொற்களில் காட்சிப்படுத்துவதென்பது மிகவும் சவாலானது.கதை முடிவுகளைக் காட்டிலும் கதையின் போக்கில் கவனித்து செல்வது மலை ரயிலில் போன்ற மெல்லிய உணர்வை தருகிறது.ஒரு படைப்பு படைப்பாளன் என்ன நோக்கத்தில் எழுதுகிறானோ அந்நோக்கத்தை வாசிப்பாளனையும் அடைய வைக்கிறார். "நாற்பதாண்டு கால பணிக்காலத்தில் கடிகாரத்தோடு போட்டியிட்டு கொண்டு வேலை செய்யும் முத்தையாவுக்கு தனக்கு வயதாவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.முடிக்கி டை அடிப்பது போல காலத்தை நகர விடாமல் பின்னோக்கி இழுக்கப் பார்க்கிறார். தனக்கு வயதாவதை விட நிறுவனத்திற்காக உழைக்க மேலும் மெனக்கெடுக்கிறார். இந்த உளவியல் போராட்டம் தான் நெகிழும் சித்திரம் கதை.நான்கு பக்கங்களே உள்ள கதையில் அந்த நபரை பற்றி முழுமையாக உணர வைத்திருப்பார்.

நெருப்பில் வளர்பவை என்றால் துன்பங்களிலும் போராட்டங்களிலும் உருவாகும் மனித உறுதியையும் வாழ்க்கை உண்மையையும் குறிக்கிறது.இக்கதைகள் ஒவ்வொன்றும் சொற்களால் நெய்யப்பட்ட அழகிய ஆடையாகும். அதனை வாசித்து முடிக்கும் போது புத்தாடை அணிந்த இன்பத்தை மனம் சுரக்கிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 11 March 2026

ஜா-34


வாழ்க்கைக்கு ஹைக்கூ 34:

"உள்ளபடியே அவையவை,
அப்படியே இருப்பது நல்லது.
உதிர்ந்த இலைகளைப் 
பெருக்கிக் கொண்டே..."

- சந்தோகா டனேடா

ஜப்பானியத் துறவியும் கவிஞருமான சந்தோகா டனேடா (Santoka Taneda) என்பவரால் எழுதப்பட்ட இந்த ஹைக்கூ மிகவும் எளிமையான, ஆழமான வாழ்வியல் தத்துவத்தைக் கொண்டது.

இந்தக் கவிதை ஒரு சாதாரணச் செயலான "இலைகளைப் பெருக்குதல்" என்பதன் மூலம் ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.

மரம் இலைகளை உதிர்ப்பது இயற்கையானது. அதை மாற்ற முடியாது. இலைகள் விழுந்து கொண்டே இருக்கும், நாம் பெருக்கிக் கொண்டே இருப்போம். "விஷயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இருக்கட்டும்" என்று ஏற்றுக்கொள்ளுதலே நிறைவான வாழ்வின் அடிப்படை.

இலைகள் மீண்டும் விழும் என்று தெரிந்துமே ஒரு நபர் அதைச் சலிக்காமல் பெருக்குகிறார். பலனைப் பற்றி கவலைப்படாமல் தற்போதைய தருணத்தில் முழுமையாக ஈடுபடுவதையே இது குறிக்கிறது.

இந்தக் கவிதை "அங்கீகாரம்" (Acceptance) மற்றும் "தற்போதைய தருணத்தில் வாழ்தல்" (Mindfulness) பற்றிய அடிப்படைப் பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது.

1. தேவையற்ற போராட்டத்தைத் தவிர்த்தல்:
வாழ்க்கையில் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அவற்றை மாற்ற முயன்று நம் நிம்மதியை இழக்கிறோம். நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வது மன பாரத்தைக் குறைக்கும்.

உதாரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும்போது பதற்றப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. "இப்போது இதுதான் நிலை" என்று ஏற்றுக்கொண்டு, அந்த நேரத்தில் ஒரு நல்ல பாடலைக் கேட்பது, மனதுக்குள் ஒரு இனிய நினைவை கொண்டுவருவது அல்லது அமைதியாக இருப்பதுதான் நிறைவான வழி.

2. முடிவை விடச் செயலில் கவனம்:
இலைகளைப் பெருக்கி முடித்ததும் மீண்டும் இலை விழும். அது ஒரு முடிவில்லாத வேலை. ஆனால் அந்த வேலையைச் செய்யும் போது கிடைக்கும் அமைதிதான் முக்கியம்.

ஒரு மாணவர் தேர்வின் முடிவைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல், இன்று தான் படிக்க வேண்டிய பாடத்தில் மட்டும் முழு கவனத்தைச் செலுத்துவது. செயல் சரியாக இருந்தால், முடிவு தானாக அமையும்.

3. எளிய வாழ்க்கையின் அழகு:
வாழ்க்கை எப்போதும் சிக்கலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகச் சாதாரணமான வேலைகளைச் செய்வதிலும் ஒரு திருப்தி இருக்கிறது என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

உதாரணமாக வீட்டில் பாத்திரம் கழுவுவது அல்லது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்ற எளிய வேலைகளை எதோஎ ஒரு கடமைக்கு செய்யாமல், ஒரு தியானம் போல ஈடுபாட்டுடன் செய்வது மனதிற்குப் பெரிய அமைதியைத் தரும்.

Tuesday, 10 March 2026

tea-24


#மனசுக்கு_ஒரு_தேநீர்_24

Failure to Finish Syndrome

மனித வாழ்க்கையில் பலர் புதிய செயல்களை ஆர்வத்துடன் தொடங்குகின்றனர். ஆனால் அந்த செயல்களை இறுதி வரை கொண்டு செல்ல முடியாமல் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். இந்த மனநிலையே Failure to Finish Syndrome.

 தொடங்கும் உற்சாகம் இருப்பினும், அதை நிறைவு செய்யும் பொறுமை மற்றும் உறுதி இல்லாத நிலைதான் இதன் அடிப்படை.
வாழ்க்கையில் ஒரு செயலை தொடங்குவது எளிதானது. ஆனால் அதை முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்வது சாதனை. புத்தாண்டில் பலரும் செய்த தீர்மானங்களுக்கு ஏறக்குறைய கல்லறை கட்டியிருப்போம் அல்லது கட்டும் தருவாயில் இருப்போம்

 பலருக்கு புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த ஆர்வம் குறுகிய காலமே நீடிக்கும்.தொடர்ச்சியின்மை காரணமாக கைவிடுகிறோம். புதிய யோசனை வந்தவுடன் பழைய முயற்சியை கைவிடுகிறோம்.ஒரு வார இதழை வாங்கிவிட்டு படிக்கவில்லையெனில் அந்த வார இதழை வாங்காமல் இருப்பபரின் உணர்வுதான் நமக்கும் வரும்.
வாங்கிவிட்டு கூட படிக்கைவில்லையே எனும் ஆதங்கமும வரும்

ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் புத்தகம் படிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம்.ஆரம்பத்தில் சில பக்கங்களை ஆர்வத்துடன் படிக்கிறோம். பிறகு மற்றொரு புத்தகத்தைப் பார்த்ததும் அதில் ஆர்வம் கொள்கிறோம். இதனால் பல புத்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கும்; ஆனால் ஒன்றும் முழுமையாக முடிக்கப்பட்டிருக்காது. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும்
 சோம்பல் அல்லது வேறு காரணங்களால் நிறுத்திவிடுவதைப் பார்க்கிறோம்.

ஒருநாள் நிறுத்தினாலும் மீண்டும் துவங்க முயற்சிக்க வேண்டும். அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
கடினமானதை செய்ய முயற்சிப்பது, முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இருப்பது, இன்றைய வேலையை ஒத்திப்போடாமல் குறைந்தபட்சமாவது மேற்கொள்ள உறுதி செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் பெரிய சாதனைகள் அனைத்தும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவாகின்றன. 
“Genius is one percent inspiration and ninety-nine percent perspiration.”
என்று தாமஸ் எடிசன் கூறுகிறார்.

“Well begun is half done.”
ஆனால் உண்மை என்னவென்றால்:
“Well finished is fully done.”
ஆரம்பிப்பதை விட
முடிப்பதே உண்மையான சாதனை.

என்ன செய்யவேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தை, என்ன செய்யக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்தினால் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

லதா


பிறருக்கு கொடுப்பது தான் பெருமை கொண்ட செயல் என்றும், பிறரிடமிருந்து பெறுவது தாழ்ந்த செயல் என்றும் நாமெல்லாம் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம். 

அதனால் தான் நாம் எதையும் மற்றவர் கொடுக்கும் வேளை அதை graceful ஆக பெற்றுக்கொள்ளகூட கற்கவில்லை. பெறுவது என்பதே ஏதோ சங்கடமான செயலாக நினைக்கிறோம்..

உண்மையில் அப்படியல்ல. கொடுப்பது நற்செயல் தான். ஆனால் பிறர் கொடுப்பதை பெற்றுக்கொள்வது ஒன்றும் இழி செயல் இல்லை. 

ஒரு பாராட்டைக்கூட நம்மால் சங்கடமில்லாமல் ஏற்க முடிவதில்லை. ஒன்று நெளிந்து வளைந்து வெட்கத்துடன் ஏற்கிறோம், இல்லையெனில் தலை கனத்திருந்தால், நீ என்னடா என்னை பாராட்டுவது, எனக்கே என் தகுதி தெரியும்டா என்ற அளவில் செயல்படுகிறோம்.

இது பாராட்டுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்குமே பொருந்தும். நாம் கொடுப்பதை பெருமையாகவும் பெறுவதை இழிவாகவும் நினைக்கும் மனநிலை மிகவும் மோசமானது, முட்டாள்தனமானதும் கூட. பெறுவதற்கு மனிதர்கள் இல்லையெனில், கொடுப்பவருக்கு எங்கிருந்து பெருமை வரும்? ஒரு பகிர்தலில் ஒரு பக்கம் நல்லதும் ஒரு பக்கம் கெடுதலும் எப்படி இருக்க இயலும்? 

பெரிய உதாரணம் எல்லாம் வேண்டாம். ஒரு சாதாரண நன்றியை கூட சட்டென அழகாக ஏற்றுக்கொள்ள கூசும் மனங்களை வளர்த்து வைத்திருக்கிறோம் நாம். நன்றி என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத வார்த்தைப்ப்போல், ஒருவர் நம்மிடம் சொல்லுபோது அப்படியே ஒரு அதிர்வு ....ஐயையோ எதுக்குங்க இதுக்கெல்லாம் நன்றி சொல்றீங்க? ஏங்க இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? ஏங்க நட்புக்குள்ள நன்றியெல்லாம் சொல்லி தள்ளி வைக்கிறீங்க? இவை தானே பெருபாலும் நாம் ஒரு சாதாரண நன்றியை எதிர்கொள்ளும் லட்சணம்? 

நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் யாரும் thank you என்று சொன்னால், பதிலுக்கு no mention please என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள். அப்படியென்றால், உங்க நன்றி எல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல என்று பதுவிசாக சொல்வது. ஆனால் சில வருடங்களில் இது தவறு என உணர்ந்த ஆங்கிலம் பேசும் யாரோ ஒருவர் welcome அல்லது most welcome என்று (வரவேற்கிறேன் அல்லது மிகவும் வரவேற்கிறேன்) சொல்வதை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு இது இன்று வரை most welcome இல் நிற்கிறது. 

ஒருவர் ஒன்றை மனதார கொடுக்கும்போது, பேசும்போது, அன்பு செலுத்தும்போது,  அதையும் இயல்பாக ஏற்று அதே போல் இயல்பாக பெற்றுக்கொள்ளும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

கொடுப்பது பெருமை எனவும், வாங்குவது இழிவு எனும் நிலையில் தான்  மனிதர்களிடையே பகிர்தல் என்பது தொலைந்து போய் பல விரிசல்கள் ஏற்படுகின்றன, ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் பெருகுகின்றன. 

பெறுவதற்கு யாரும் இல்லையேல், இங்கு அளிப்பவனுக்கு வேலையே இல்லை. இயல்பாக செய்வோமே எதை செய்தாலும். 

இங்கு அடித்து பிடுங்க கூட அஞ்ச மாட்டோம். ஆனால் அளிப்பதை அழகாக ஏற்றுக்கொள்ளத் தான் நமக்கெல்லாம் தெரியாது. 

பி.கு.  "என் கதை'யில் கமலாதாஸ் ஓர் இடத்தில் கூறி இருப்பார். "நான் அன்பு எனும் பிச்சையை வைத்துக்கொண்டு, அதை ஏந்திக்கொள்வதற்கான  பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தேன்" என. இங்கு பிச்சை என்பதையும் தவறான பொருளில் பார்க்க வேண்டியதில்லை. அவர் சொல்ல வந்தது, என்னிடத்தில் அள்ளிக்கொடுக்கும் அளவுக்கு அன்பு பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை சரியாக வாங்குவதற்கு தான் மனிதர் ஒருவர் கூட கிடைக்கவில்லை என்று.

-லதா-

Monday, 9 March 2026

Book-15


#Reading_Marathon2026
#26RM009

Book No:15/150+
Pages:-112

கபர்
-கே.ஆர் மீரா

கே ஆர் மீராவின் புத்தகங்கள் அனைத்தும் தனித்துவமானவை. நாம் புனிதம் என்று கருதுபவை அனைத்தையும் பகடி செய்பவர். உண்மைக்கு மிக நெருக்கமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய எழுத்துக்களிலும் அதனை காணலாம்.நுட்பமான அவருடைய கதைகளில் வரும் எழுத்துக்கள் அனைத்தையும் வசீகரமானவை, எதிர்பாராத நேரத்தில் திருப்புமுனை உண்டாக்குபவை, அறிவார்ந்த தளத்தில் உளவியல் சிந்தனைகளை புள்ளிகள் வைத்து இறுதியில் கோலமிட்டு முடிப்பது போல அவருடைய எழுத்துக்கள் இருக்கும்.

 கபர் என்னும் இப் புத்தகம் மதம் சார்ந்த புத்தகம் அல்ல, மனித மனங்களின் மாற்றம் சார்ந்த புத்தகம் என்று நாம் சொல்லலாம். நமக்கான கல்லறைகள் அதிகமானவை. நாமே அதில் நம்முடைய எண்ணங்கள் ஆசைகளை அடக்கம் செய்து கொண்டு வெளிவர முடியாத சூழலில் உலவி கொண்டிருக்கிறோம் ஒருவரின் பணிவிடைகளுக்கு இன்னொருவர் கொடுக்கிற கைமாறல்ல அன்பு, அது ஒருத்தர்  இன்னொருவரின் மீது கண்டடைகிற பூரணத்துவம் தான் என்பது கதையின் அடிநாதமாக உள்ளது. காதலுக்கு மணம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் எட்வர்ட் ரோஸ் மலர் என்று சொல்லக்கூடிய அந்த வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த பூக்களின் நறுமணம் நம்மை உணர வைக்கும்.

 கதையின் நாயகி பாவனா மாவட்ட நீதிபதியாக உள்ளார். தன் சுதந்திரம் தனக்கான நீதியை தன்னிடத்தில் தேடிக் கொண்டிருப்பவர். ஏழு அத்தியாயங்கள் உடையது. முதலாவதாக கபர் என்னும் சமாதி உள்ள இடத்தின் மீதான உரிமை கோருதல் வழக்கு ஒன்று வருகிறது. அந்த வழக்கினை விசாரித்து கொண்டிருக்கும்போது அமானுஷ்ய சக்தி போல தம்மை ஆட்கொள்வதை பாவனா உணர்கிறார். மயக்கம் அடைகிறார். மருத்துவமனையில் சேர்கிறார். தொடர்ந்து இரண்டு முறை இவ்வாறு நடைபெற்றதால் அந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக இதனை பார்க்கிறார். 

முதல் அத்தியாயத்திலேயே யோகேஸ்வரன் மாமா எனும் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவர்களின் குடும்பத்தில் வயதானவர்கள் அனைவரும் காசி செல்வதை வழக்கமாய் கொண்டு இருப்பார்கள். அவ்வாறு காசி செல்பவர்கள் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் யோகேஸ்வரன் மாமா வரும்போது இரண்டு அழகிய தேவதை போன்ற பெண்களுடன் வருகிறார். அமானுஷ்ய தன்மையை கொண்டதாக இருக்கும் அப்பகுதி சிறுவயதில் இருந்து அவருக்கு ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது. அது இந்த வழக்கினை விசாரிக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக நினைவில் வந்து கொண்டிருக்கிறது. 

பாவனாவின் திருமணம் காதல் திருமணம்.பிரமோத் என்பவரை மணந்து கொள்கிறார்.பாவனாவின் வளர்ச்சி குறித்த தாழ்வு மனப்பான்மை காரணமாக இவரின் மீது வெறுப்பு கொள்கிறார். மகன் அத்வைத் ஹைபர் ஆக்டிவ் ஆட்டிசத்தால் குறைபாடுடன் பிறந்ததால்.. பிரிந்து சென்று இன்னொரு திருமணத்திற்கு தயாராகிறார். பாவனாவின் தந்தையும் தாயும் 36 வருடங்களுக்குப் பிறகு பிரிந்து இருக்கின்றனர்.அவர்களுடைய பின்னணியும் விளக்கப்படுகிறது.

யோகேஸ்வரன் மாமாவின் இறப்பு குறித்த கதைகள் இவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்ததாக மந்திர சக்தி கொண்ட மனதினை படித்து தெரிந்து கொள்ளும் கயாளுதின் தங்ஙளுடைய கதாபாத்திரம் குறித்த அறிமுகம் வருகிறது. அவருடைய அமானுஷ்ய சக்தியின் காரணமாகத்தான் ஒவ்வொரு முறை தீர்ப்பு சொல்ல வரும்போதும் ஏதேனும் ஒரு இடையூறு வருகிறது. ஒரு வழியாக இந்த வழக்கின் தீர்ப்பினை தடை விதிக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்கிறார்.

தீர்ப்பு கூறிய மகிழ்ச்சியில் அன்று மாலை மகனுடன் திரைப்படத்திற்கு செல்லும் போது அங்கும் காக்க சேரி வருகிறார். பேச்சினால் மயக்கி அல்லது பாவனாவே உடன் வருவதாக கூறி இருவரும் ஒரு இடத்துக்கு செல்கின்றனர் .பின்பு தான் தெரிகிறது அதுதான் சர்ச்சைக்குரிய இடமான கபர் இருக்கும் இடம். அதற்கு பிறகு கபர் குறித்த பாவனாவின் எண்ணங்கள் மாறுகிறது. தனக்குள்ளேயே ஒரு பூரணத்துவத்தை அவர் கண்டறிய முயல்கிறார். தன்னுடைய பிறப்பின் ரகசியம் குறித்த செய்தியை அறிகிறார். 

நாவல்  112 பக்கங்கள் தான். ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதைகள் நான் லீனியர் மாய‌யதார்த முறைகளில் நடக்கிறது. படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. கதையின் முக்கிய கதாபாத்திரமான பாவனா தன்னுடைய கணவனின் மறுமணத்திற்கு செல்லும் போதும், மகனிடம் காட்டும் பிரியத்துக்கும், நீதியில் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரமும், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நமக்கு உயர்த்தி காட்டுகிறது.

 மற்றொருவர் பாவனாவின் தாயாக வருபவர்.மகளை உற்சாகப்படுத்துகிறார்
 ஒரு இடத்தில் தாகூரின் மேற்கோளை கூறி "கூண்டுக்குள் என்றால் சிறகு விரிப்பதற்கு இடமில்லை. ஆனால் அமர கம்பி உண்டு.வானத்தில் என்றால் சிறகு விரிப்பதற்கு இடம் உண்டு. ஆனால் அமர கம்பி இல்லை" எந்த வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுதந்திரம் அளிக்கிறார்.

காதலால் அவ்வளவு ஒன்றும் அழ வைத்திட முடியாது.. ஆனால் அவமானம் செய்வதற்கு முடியும் என காதல் பிரிவின் துயரத்தை தனது சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். நீதி சார்ந்த வார்த்தைகளை நாவல்களில் அவ்வப்போது பயன்படுத்துகிறார். உதாரணத்திற்கு

* உறக்கத்தின் நீதிபதி என்னுடைய மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார். 

*இந்திய தண்டனைச் சட்டத்தில் சிரிப்பையும் அழுகையையும் குறித்த பிரிவுகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தேன்.. 

*வாழ்க்கை ஒரு வழக்கல்ல தீர்ப்பு தான் தெய்வம் யாருக்கும் நீதிபதி அல்ல எல்லாருக்கும் சாட்சி தான் என்று புரிந்து இருப்பார்.

தந்தை சீரியல் பார்த்துக் கொண்டு தன்னிடம் பேசுவதை பார்த்திருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு தந்தை இயல்பாக பேசுகிறார் இப்போது மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது அதற்கு 

*அன்பின் ஆயுள் மின்சாரம் வரும் வரைக்குமே இருந்தது என்று வெளிப்படுத்துகிறார்.

இல்லாமையின் பரிபூரணத்துவத்தை உணர வைக்கும் விதமாக நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் படியும், நாமே அந்த கதாபாத்திரமாக ஒன்றி போகும்படியும் அமைந்துள்ளது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்துள்ளது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 4 March 2026

tea-23


#மனசுக்கு_ஒரு_தேநீர்_23

ஒருவனின் வாழ்நாளை எவ்வாறு 
களவாட முடியும்? 

எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை விதைத்து, தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 'அன்றைய' நாளை மறக்கடித்து விடு. 
செய்த செயல்கள் ஏதுமின்றி அவனது ஆயுட் காலம் முழுவதும் கழிந்தே போய் விடும்.

-கஸ்ஸாலி

“Your mindset determines whether you see difficulty as a problem or a challenge

ஒரே நிகழ்வு 
ஒருவருக்கு பிரச்சனை,
மற்றொருவருக்கு சவால்.
ஒரு பிரச்சனைக்கும் ஒரு சவாலுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. மஹாத்ரயா ரே
இதனை உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஒரு காட்டின் நடுவில் ஒரு சிங்கம் என் எதிரில் நின்று கொண்டிருந்து, என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்றால், நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் என் கையில் ஓர் இயந்திரத் துப்பாக்கி இருந்தால், அந்த சிங்கத்திற்குப் பிரச்சனை என்று பொருள். சரியான நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சவால் மட்டும்தான் எனக்கு இருக்கும். 

நான் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை என்னிடம் உள்ள வளங்களைவிடப் பெரியதாக இருந்தால், அதை ஒரு பிரச்சனை என்று கூறலாம். ஆனால், என்னிடமுள்ள வளங்கள் நான் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையைவிடப் பெரிதாக இருந்தால், அது வெறும் சவால்தான்.

 நம்முடைய பிரச்சனைகளை அளவுக்கதிகமாக மதிப்பிடுவதும், அப்பிரச்சனைகளை முறியடிக்கக்கூடிய நமது திறனை மிகவும் குறைவாக மதிப்பிடுவதும்தான் மனிதனுடைய இக்கட்டான சூழ்நிலை

சவால்களை  வெற்றி கொள்ளும்போது, நீ இன்னும் பெரிய சவால்களைப் பின்தொடர அவை உனக்கு உதவுகின்றன; அதன் வாயிலாக அவை உனக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

மனித வாழ்க்கை என்பது அமைதியான ஏரி அல்ல; அலைகள் எழும் கடல் போன்றது. அந்த அலைகளில் சிலவற்றை நாம் பிரச்சனை என்று அழைக்கிறோம்; சிலவற்றை சவால் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் அலை ஒன்று தான் — அதை நாம் பார்க்கும் பார்வை மட்டுமே வேறுபடுகிறது.

வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலை வந்தால் மனித மனம் முதலில் அதை பிரச்சனையாகவே உணர்கிறது. பிரச்சனை என்பது நம்மை நிறுத்திவிடும் சுவரைப் போன்றது. அது பயத்தையும் தளர்ச்சியையும் உருவாக்குகிறது.
அதே நிலையை ஒருவர் சவால் என்று எண்ணும் போது, அந்த சுவர் கதவாக மாறுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திறமையில் அல்ல; பார்வையில் தான்.

பிரச்சனை மனிதனை சோதிக்கிறது;
சவால் மனிதனை செதுக்குகிறது.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-இதில் கண் துஞ்சார் என்றால் தூங்கவே மாட்டார்கள் என்கிற பொருள் இல்லை. தூக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள். தூக்கத்தில் கூட விழிப்புணர்வுடன் செயலைப் பற்றிய அரை நிலை சிந்தனையோடு இருப்பார்கள் என்று பொருள்இனிய காலை

Monday, 2 March 2026

tea-22


#மனசுக்கு_ஒரு_தேநீர்_22

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை.ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும் என்கிறார் ஹென்றி மில்லர்

நீண்டகாலமாக இருக்கும் செவி வழி கதை.ஆனால் வரலாற்று ரீதியாக நிருபிக்கப்படவில்லை. ஆனால்.எப்போது படித்தாலும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.

ஒரு நாள், ஸ்காட்லாந்து கிராமப்புறத்தில் ஒரு ஏழை விவசாயி Fleming என்பவர் சதுப்புநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் புதைகுழியில் மார்பளவு மூழ்கிவிட்டார். இதைக்கண்ட விவசாயி சற்றும் தாமதிக்காமல் கயிறு கட்டிச்சென்று காப்பாற்றினார்.
இதை அறிந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இச்செயலை பாராட்டி பணம் தந்தார். விவசாமி பிளெமிங் வாங்க மறுத்துவிட்டார்.

அப்போது அவர் கூறினார்:
“உங்கள் இளைய மகனுக்கு நல்ல கல்வி கிடைக்கட்டும்; அதற்கான செலவை நான் ஏற்கிறேன் என்று கூறி அவனை படிக்க வைத்தார்.
அந்த விவசாயியின் மகனே பின்னர் உலகப் புகழ்பெற்ற பென்சிலின் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானியான Alexander Fleming ஆவார்.

பல ஆண்டுகள் கழித்து, சதுப்பு நிலத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அச்சிறுவன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பென்சிலினால் காப்பாற்றப்பட்டார்.அவரது பெயர் Winston Churchill.

இதேபோன்று கரு.பழனியப்பன் பகிர்ந்த செய்தி.. எம்.ஜி.ஆரஇ பார்க்க.. மகனை தோளில் வைத்துக்  கொண்டு தினசரி ஒருவர் சாலையில் நின்றிருந்தார்.ஒரு முறை அழைத்து விசாரித்ததில் ஐந்து மகனக்கு தங்கள் வாயால் பெயர் வைக்க வேண்டுமென சொன்னாராம். சிரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் இதுவரை எப்படி அழைத்தீர்கள் என கேட்டதற்கு மலைக்கள்ளன் படம் வந்த போது பிறந்ததால் அப்பெயர் வைத்து அழைக்கிறோம் என்றாராம். இதனைக் கேட்ட எம்.ஜி.ஆர், நல்ல பெயரை வைத்ததோடு.. அச்சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். கட் செய்தால் அமெரிக்காவில் சிகிச்சை பெற வந்த எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டராக மலைக்கள்ளன் வந்து நின்றாராம்.

Kindness returns in unexpected ways.”

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

கோ கமலக்கண்ணன்


வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களின்போது ‘நானும் மனிதன்தான்’ என்று அகத்துக்குள் நினைத்துக்கொள்வதற்கு ஒரு பொருள் உண்டு. நானும் பிழை செய்யக் கூடியவனே ஆனால் பிழையை ஏற்று முன்னகரும் ஆற்றலும் என்னுள் உண்டு என்பது ஒரு பார்வை. குற்ற உணர்வு கொண்டு அங்கிருந்து எழுந்து ஊக்கம் பெற்று சக மனிதன் மீது கருணை கொள்வது. 

ஆனால் பொதுவாக மக்களைப் பாருங்கள். தனது பிறழ்வைப் பிறர் முன் நியாயப்படுத்தவே பெரும்பாலும் ‘நானும் மனுசன்தானே’ என்பார்கள். அதாவது உணர மாட்டார்கள், அலுத்துக்கொள்வார்கள். லஞ்சம், , திருட்டு, கொலை பாதகங்கள் அனைத்தையும் தன்பொருட்டு செய்துவிட்டு ‘நானும் மனிதன் தானே’ என்று அங்கலாய்ப்பார்கள். 

அதற்கு ‘நானும் மூடர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளத்தான் விரும்புகிறேன். அறமெல்லாம் ஒரு ஓரமாக இருக்கட்டும். அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் மதிப்பில்லை’ என்பதுதான் பொருள். 

எப்போது பார்த்தாலும் ‘அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்’ என்று சொல்லிக்கொண்டே திரிவது ஒரு வித மனநோய். அத்தகையோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்லர், மனிதப் பதர்கள். 

முதுமையில் கனிந்தால் பிறருக்கு இனிப்பைத் தர முடியும். கனிவு என்பது தளர்வு அல்ல. ஊக்கத்தால் எய்தக் கூடிய மேன்மை நிலை. மாறாக தன் தீங்குகளை வாதத்தால் தக்க வைத்தபடி இறுகிக் கொண்டே போனால் முதுமை பாறையாகத்தான் முடியும்.  அத்தகைய அக ஊக்கம் அற்றோரையே நடமாடும் மரங்கள் என்கிறார் வள்ளுவர்.

-கோ.கமலக்கண்ணன்

Sunday, 1 March 2026

tea-21


#மனசுக்கு_ஒரு_தேநீர்_21

“சிஸோகூ” (Chisoku) புத்தமதத்தில் வரும் ஒரு முக்கியமான வாழ்வியல் கோட்பாடு. இதன் பொருள்:
“கிடைத்ததிலே திருப்தி கொள்” அல்லது “மனநிறைவு அறிந்து வாழ்” என்பதாகும்.

புத்தமதம் கூறுவது:
ஆசை குறைந்தால் மனம் அமைதியாகும்;
திருப்தி வந்தால் வாழ்க்கை நிறைவாகும்.

சாலையில் யாரோ கோபத்தைத் தூண்டினால், அந்தத் தூண்டுதல் (contact) கோபத்தை (feeling → craving) உருவாக்கும். ஆனால், புன்னகைத்து "இது தற்காலிகம்" என ஞானத்தால் கோபத்தின் சங்கிலியை நிறுத்தினால், சிசோகூ நிகழ்கிறது.

மனித வாழ்க்கையின் பெரும்பாலான துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் “இன்னும் வேண்டும்” என்ற முடிவில்லா ஆசை. இதற்கு எதிர்மறையான மருந்தாக புத்தமதம் முன்வைக்கும் முக்கிய வாழ்வியல் நெறி தான் சிஸோகூ கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் அறிவு. அதிகம் சேர்ப்பது வாழ்க்கை இலக்கு அல்ல.மனநிறைவு தான் உண்மையான செல்வம்

சிஸோகூ என்பது வறுமையை ஏற்க வேண்டும் என்பதல்ல;
அது ஆசைக்கு எல்லை வைப்பதன் மூலம் மன அமைதி பெறும் அறிவு.

மனிதன் எவ்வளவு பெற்றாலும் இன்னும் வேண்டும் என்று நினைத்தால்
அவன் எப்போதும் குறைவாகவே உணர்வான்.
ஆனால் கிடைத்ததை உணர்ந்து நன்றி கொண்டால்,
அவனுக்குள் நிறைவு தோன்றும்.
“He who knows that enough is enough will always have enough.” — Lao Tzu
இது சிஸோகூவின் நேரடி தத்துவ வடிவம்.

Chisoku is not having less; it is realizing you already have enough.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 22 February 2026

tea-20


#மனசுக்கு_ஒரு_தேநீர்_20

“நான் தெரிந்தவன்” என்று நினைக்கும் நொடியில் வளர்ச்சி நிற்கிறது;
“நான் கற்றுக்கொள்கிறேன்” என்று நினைக்கும் நொடியில் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த உண்மையை வாழ்க்கை தத்துவமாக மாற்றும் எண்ணமே Beginner’s Mindset.

இந்தக் கருத்தை ஜென் தத்துவத்தில் விளக்கியவர் Shunryu Suzuki, அவர் எழுதிய Zen Mind, Beginner’s Mind நூல் உலகளவில் இந்த மனப்பாங்கை பரப்பியது.

தொடக்க மனநிலை என்பது
தெரிந்த விஷயத்தையும் புதிய கண்களால் காணும் மனநிலை.
ஒரு குழந்தை உலகைப் பார்ப்பதை நினைத்துப் பாருங்கள்.
அதற்கு எல்லாமே புதிது, அதனால் எல்லாமே அதிசயம்.அதே ஆச்சரிய உணர்வை பெரியவர்களாக இருந்தாலும் இழக்காமல் வைத்திருப்பதே இந்த தத்துவம்.
எந்த ஒரு விஷயத்தையும் முன் முடிவுகளுடன் ஆராயமல் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது ஆகும்

இதனால் சலிப்பு குறைந்து புத்துணர்வு தருகிறது.பதிலை முன்பே யூகிக்காமல் அவர்கள் சொல்லும்வரை பொறுமை காப்பது,
முன்பே இதுதான் இக்கதை சொல்ல வருகிறது என யோசிக்காமல் முழுமையாக படிப்பது,சரி தவறுக்கு
 அப்பாற்பட்டு வேறொரு கோணத்தில் சிந்தித்து நல்லவற்றை எடுத்துக் கொளவது,சிறிய தருணங்களில் கூட உணர்வு பூர்வமாக செயல்படுவது, இவ்வாறு செய்வதால் பதட்டத்தை தணிக்கச் செய்யும்.

மனம் வெறுமையாக இருந்தால் எதற்கும் தயாராக இருக்கும்.
பிரச்சினைகள் வெளியுலகத்தில் இல்லை  மனதில்தான்.உண்மை உண்மையாக காண் என்கிறது.

ஒரு பணியாளர் “I know everything” என்றால் வளர்ச்சி முடியும்.
“I’m still learning” என்றால் உயர்வு தொடங்கும்.நாம் ஒருவரை முழுமையாக தெரிந்துவிட்டோம் என்று நினைத்தால் புரிதல் குறையும்.அவரை தினமும் புதிதாய் அறிய முயன்றால் அன்பு அதிகரிக்கும்.

தொடக்க மனநிலை என்பது அறியாமை அல்ல,அது உயர்ந்த அறிவின் அறிகுறி.எப்போதும் தொடக்க நிலை மாணவனாக இருப்பவன் தான் உண்மையான ஞானி.

மனம் சோர்வடைவது கற்றல் காரணமாக அல்ல;
கற்றலை நிறுத்துவதால்தான்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜா-31


வாழ்க்கைக்கு ஹைக்கூ: 31

"நாம் சந்தித்தோம், பின் பிரிந்தோம்;
இப்போது தூரிகையும் மையும் 
இட்ட சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"

- டைகு ரயோகன் (Daigu Ryokan)

இந்தக் கவிதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிக அழகாகப் பேசுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் தோன்றுவதும் (சந்திப்பு), மறைவதும் (பிரிவு) இயற்கையான சுழற்சி. எவருமே எப்போதும் கூடவே இருப்பதில்லை.

இங்கு 'தூரிகை மற்றும் மை' என்பது ஒரு கலைப்படைப்பையோ அல்லது நாம் விட்டுச் செல்லும் நினைவுகளையோ குறிக்கிறது. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் செய்த செயல்களும், அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகளுமே உலகத்தில் சாட்சிகளாக எஞ்சியிருக்கும்.

நாம் வாழும் காலத்தில் மற்றவர் இதயத்தில் அல்லது இந்த உலகில் எத்தகைய பாதிப்பை (சுவடுகள்) ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தச் சிறிய கவிதை மகிழ்ச்சியான வாழ்விற்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நிகழ்காலத்தில் வாழுதல்: சந்திப்புகளும் உறவுகளும் நிரந்தரமற்றவை என்று உணரும்போது, தற்போது நம்முடன் இருப்பவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளத் தோன்றும்.

 2. பற்றற்ற நிலை: 
பிரிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தால், இழப்புகளால் வரும் துயரம் குறையும்.

3. நல்ல சுவடுகளை ஏற்படுத்துதல்: "நான் போன பிறகு என்ன எஞ்சியிருக்கும்?" என்ற கேள்விக்கு விடையாக, ஒரு ஓவியமாகவோ, கவிதையாகவோ அல்லது ஒரு நல்ல செயலாகவோ பிறருக்குப் பயனுள்ள ஒன்றை விட்டுச் செல்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை உணரலாம்.

"வாழ்க்கை ஒரு தருணம்; அதில் நாம் தீட்டும் ஓவியம் (நல்ல செயல்கள்) மட்டுமே என்றும் நிலைக்கும்"

Saturday, 21 February 2026

கோ.கமலக்கண்ணன்


‘நீ தகுதி உள்ளவனா?’

அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். 

தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.

தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும். 

வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர். 

ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர். 

நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார். 

நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு. 

வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார். 

இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்! 

இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.

-கோ.கமலக்கண்ணன்