Sunday, 26 July 2026

47


தென்னிந்திய சிறுகதைகள்
-கே.வி ஷைலஜா

தென்னிந்திய மொழிகளின் இலக்கிய வளத்தை ஒரே தொகுப்பில் அறிமுகப்படுத்தும் முக்கியமான முயற்சியாக கே.வி. ஷைலஜா தொகுத்த தென்னிந்திய சிறுகதைகள் அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு வழங்கும் இந்நூல், மொழிகளுக்கு இடையேயான இலக்கியப் பாலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான பண்பாடு, வாழ்க்கை முறை, சமூகச் சிக்கல்கள், மனித உறவுகள் மற்றும் உணர்வுகள் உள்ளன. அவை அனைத்தும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வழியாக இயல்பாக வெளிப்படுகின்றன. மொழி மாறினாலும் மனித மனம் ஒன்றே என்பதை இந்தக் கதைகள் உணர்த்துகின்றன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல; சமூக அக்கறை, பெண்களின் வாழ்க்கை, வறுமை, சாதி, குடும்ப உறவுகள், காதல், தனிமை, நகரமயமாக்கல், மனிதநேயம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை ஆழமாகச் சித்தரிக்கின்றன.

முன்னுரையில் குளத்தங்கரை அரசமரம் பற்றி குறிப்பிடும் பிரபஞ்சன் சிறுகதைகளின் நுட்பத்தையும் வரலாற்றையும் பாடமாக கூறியுள்ளார். சிறுகதையின் விஸ்தரிப்பை ஏற்படுத்திய கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளார்.

இனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் இது.மழையினால் பூமியை தின்ன, வெறி பிடித்து வானம் வாய் பிளந்து நிற்கிறதாக வறண்ட ஊரில் திருட வந்து மாட்டிக்கொண்ட திருடன் வறண்ட பூமியை போல வறண்ட மனமுள்ள மனிதர்களிடம் எவ்வாறு ஈரம் ஏற்பட்டது என்பதுதான் சத்ரு கதை

ஜே.பி சாணக்யாவின் புகழ்பெற்ற ஆண்களின் படித்துறை கதை.இந்த கதையில் முடிவை பல முறை வாசித்துள்ளேன் மனம் கலங்க வைக்கும் இடம்."யாருமற்ற அவள் வீட்டுவாசலில், சாவைப் பற்றி நினைத்திராத சமயத்தில் துவைத்துக் காயவைத்த ஆடைகள் ஈரத்துடன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன என இருக்கும்

நோய்வாய்ப்பட்டு தனித்திருக்கும் இளைஞனுக்கு வாசிப்பின் போதையும் நோய்மையின் வாதையும் எவ்வாறு சமநிலைப்படுத்திக் கொண்டான் என்பது அட்சர ஆழியின் கதை.வேளான்கன்னியும்.கிறிஸ்டோபரும் சேர்ந்துவிட மாட்டார்களா என நினைக்க வைக்கிறது மறையும் முகம் கதை.

பால்யகால காதல் வாழ்க்கை பிரிவையே பரிசாக அளிக்கிறது. "அந்த காடு கனவு.எங்கள் ஆன்மாக்கள் பரந்த வெளியெங்கும் சுற்றிக் கொண்டிருக்கும்.காடு எனக்குள் இப்போதும் ஒரு நாளும் முடிவுக்கு வராத தனிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என உண்ணியை பிரிந்த இளம் பெண்ணின் வேதனையை காட்டின் பெருங்கனவு கதை சொல்கிறது.

கடன் தொல்லை தாளாமல் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குடும்ப சகிதம் தற்கொலை செய்யப்போகிறோம் என்பது தான் கொமாலா கதையின் துவக்க வரி. இதற்கு பின் நடப்பதுதான் கதை.'ஒருவிதத்தில் பார்த்தால் ஒவ்வொருவரும் கடன் பட்டவர்கள்" எனும் வரி பொருத்தமாய் இருந்தது.

எல்லா செய்திகளும் முன்னரே எழுதப்படுபவை தான்.ஒவ்வொன்றையும் எவ்வளவு சீக்கிரம் கண்டடையப் போகிறோம் என்பதுதான் பத்திரிக்கையாளனின் சாமர்த்தியம் -கே.ஆர் மீராவின் செய்திகளின் நாற்றம் கதையில்.

செய்தியாளர் மாணவர் விழித்திறன் சவால்கொண்ட மூவரைப் பற்றி செய்தி சேகரிக்கச் செல்லும்போது
நடக்கும் கதைதான் மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த அங்கத சுவையுடன் இக் கதை.

19ம் நூற்றாண்டில் மலபார் பிரதேசத்தில் விலைமலிவான உலோகத்தை தங்கமாக்கும் ரசவாதத்தை கண்டுபிடிக்கும் முயற்சியிலிருக்கும் அய்யாச்சாமிக்கு அடுத்து நிகழ்ந்தது என்ன என்பது ரசவாதத்தின் சரித்திரம்.'ஒவ்வொரு வாழ்க்கையும் ரசவாதத்தைக் கண்டு பிடிப்பதற்கான முயற்சிதான் என்பதும்,அவன் மனிதனைத் தங்கமாக்கும் வித்தையைத்தானே கண்டுபிடித்தான் எனும் வரிகளும் ரசித்தவை.

#தெலுங்கு கதைகள்

தமிழ் மண்ணின் விவசாயம், குடும்ப உறவுகள் போலவே தெலுங்கு அடிப்படையில் கதைகள் உள்ளன.
கணவன் மறுமணம் செய்த பிறகு பத்தாண்டுகள் கழித்து மாமனார் பார்க்க வரும் லாவண்யா எதிர்கொள்ளும் சவால்கள், கிராமத்திலிருந்து பிழைக்க நகரத்திற்கு வரும் சிவாவும் லட்சுமியும் சந்திக்கும் இடர்கள், கிராமத்து வாழ்க்கையை தொலைத்து நகர்த்திற்கு சென்று காசுக்கு வாங்கும் ஆக்ஸிஜன் மரத்தின் மெளன அழுகை தெரிகிறது.வீட்டு வேலை செய்யும் ஷகிலாவின் வாழ்க்கை, விவசாயி கடன் வாங்க செல்லும் விவசாய வங்கியின் விதிமுறைகளால் தடம் புறளும் வாழ்க்கை, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை பார்க்கும் உலகம் என ஒரு மொழியில் பிறந்த சிறந்த படைப்புகள் மற்றொரு மொழி வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கிய நோக்கத்தை இது வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.பெண்களின் குரலுக்கும் விளிம்புநிலை மக்களின் அனுபவங்களுக்கும் உரிய இடம் அளிக்கிறது.

#கன்னட கதைகள்

செம்மானின் கங்கை கதை காசிக்கு சென்று கங்கை நதிக்கு தான் கொடுக்க நினைக்கும் பரிசை கொடுக்க நினைக்கும் செருப்பு தைக்கும் கிழவனுக்கு உதவி செய்கிறான் ஒருவன் அதன் பின் நடப்பது கதை.கேப் டப்பியை திருடும் சிறுவன் கதையில் விரியும் கதை, கதை சொல்லும் சக்கக்காவின் கதையை இனிமேல் யார் சொல்லுவாங்ல எனும் பாபுவின் கதை

 ஒவ்வொரு கதையும் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகவும், ஒரு காலத்தின் பதிவாகவும் அமைகிறது.
தொகுப்பாசிரியர் கே.வி. ஷைலஜா கதைகளைத் தேர்ந்தெடுத்த விதம் இந்நூலின் சிறப்பாகும். வெவ்வேறு இலக்கியப் பாணிகளையும், பல தலைமுறை எழுத்தாளர்களின் குரல்களையும் ஒரே நூலில் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய இலக்கியத்தின் பரந்த பரிமாணத்தை வாசகர்கள் எளிதாக உணர முடிகிறது.

மொத்தத்தில், தென்னிந்திய சிறுகதைகள் என்பது சிறுகதைத் தொகுப்பாக மட்டுமல்ல; தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, பண்பாடு, சிந்தனை மற்றும் மனித உணர்வுகளை அறிமுகப்படுத்தும் இலக்கியச் சாளரமாகும். சிறுகதை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும், ஒப்பிலக்கியத்தை அறிய விரும்பும் மாணவர்களுக்கும், தென்னிந்திய மொழி இலக்கியங்களை விரிவாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும் இந்நூல் வழிகாட்டியாக அமைகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 25 July 2026

guardian கட்டுரை


மக்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள்? – ஒரு ஆய்வின் தமிழாக்கம்

மக்கள் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள் என்பதை ஆராய்ந்த ஒரு ஆய்வு, நவீன மனித மனத்தின் செயல்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெரும்பாலானோரின் சிந்தனைகள் வேலை, காபி குடிக்க வேண்டும் என்ற விருப்பம், மீண்டும் படுக்கைக்குச் சென்று தூங்க வேண்டும் என்ற ஆசை ஆகியவற்றைச் சுற்றியே இருப்பதாக அது கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வில், மற்றவர்களைவிட அதிக நேரம் உலகைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், வீட்டு வேலைகள் மற்றும் பணநிலையைப் பற்றிச் சிந்திப்பவர்கள், உடல் மற்றும் மனநலத்தில் கவனம் செலுத்துபவர்கள், வேலைக்கும் பொழுதுபோக்கிற்கும் சம முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என நான்கு தனித்துவமான சிந்தனைக் குழுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

இந்தக் குழுக்கள் நிரந்தரமானவை அல்ல; காலத்திற்கேற்ப ஒருவர் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு மாறக்கூடும். இருப்பினும், மக்களின் சிந்தனைகளை சீரற்ற நேரங்களில் பதிவு செய்வதன் மூலம் மனித சிந்தனைப் போக்குகளை நுட்பமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Claremont Graduate University மற்றும் சீனாவின் Wuhan University ஆகியவற்றைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

மனிதர்களின் விழிப்புணர்வுள்ள சிந்தனைகள் குறித்து இதுவரை மிகக் குறைவான ஆய்வுகள் நடந்திருந்ததே இதற்குக் காரணம்.
ஆய்வின் மூத்த ஆசிரியரான டாக்டர் ஜோஷுவா டாசோஃப் கூறுகையில்:

"மனிதனாக இருப்பதன் பெரும்பகுதி நம் மனதில் என்ன நடக்கிறது என்பதையே சார்ந்துள்ளது. பொருளாதார அறிஞர்களாகிய நாம் இதைப் பற்றி இதுவரை ஆழமாக ஆராயாதது உண்மையிலேயே ஆச்சரியமானது."

ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?

19 முதல் 71 வயதுக்குட்பட்ட 258 தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்தனர். இரண்டு வாரங்கள், தினமும் எட்டு முறை சீரற்ற நேரங்களில் அந்த செயலி ஒலி எழுப்பியது. ஒவ்வொரு முறையும், அவர்கள்:

*அந்த நேரத்தில் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்,
*என்ன செய்து கொண்டிருந்தார்கள்,
*தங்களின் மகிழ்ச்சி அளவு என்ன
என்பதை பதிவு செய்ய வேண்டியிருந்தது.
மொத்தமாக 23,000-க்கும் அதிகமான பதிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்
பகல் நேரத்தில் மக்களின் சிந்தனைகள் பெரும்பாலும் வேலை சார்ந்ததாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொழுதுபோக்கை நோக்கிச் செல்வதாகவும் கண்டறியப்பட்டது.

மக்களின் சிந்தனைகளில் சுமார் பாதி திட்டமிட்ட (Intentional) சிந்தனைகளாக இருந்தன. மீதமுள்ளவை திடீரென தோன்றும் அல்லது மனம் அலைபாய்வதால் உருவாகும் சிந்தனைகளாக இருந்தன.

சிந்தனைகளில்:
20% – உடல் உணர்வுகள் (சோர்வு, தூக்கம் போன்றவை)
17% – வேலை
14% – உணவு
10% – பொழுதுபோக்குகள், விளையாட்டு, கலை
10% – உறவுகள்
ஆகியவை இடம்பெற்றன.

தேவைகளைப் பற்றிய சிந்தனைகளில்:
29% – ஓய்வு
குறிப்பாக சிறிது தூக்கம் அல்லது குட்டித் தூக்கம் (Nap)
ஆகியவை முக்கிய இடம் பெற்றன.

மனம் வெறுமையாக இருந்ததா?

மிக அரிதாக மட்டுமே "எதுவும் நினைக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டது. அதே சமயம், பாலியல் தொடர்பான சிந்தனைகள் மிகவும் குறைவாகப் பதிவாகின. இதற்குக் காரணம், அவற்றைப் பகிர்வதில் மக்கள் தயக்கம் காட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதினர்.
ஆய்வின் போது அனுப்பப்பட்ட அறிவிப்புகளில் சுமார் 25%க்கு எந்தப் பதிலும் வரவில்லை.

மார்கஸ் ஆரேலியஸின் கருத்து சரியா?
ரோமப் பேரரசரும் தத்துவஞானியுமான மார்கஸ் ஆரேலியஸ் கூறிய,
"உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி, உன் சிந்தனைகளின் தரத்தைப் பொறுத்தது."
என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் சோதித்தனர்.

அவர்களின் முடிவு:
ஒருவர் எதைப் பற்றி சிந்திக்கிறார் என்பது, அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை கணிக்க மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது.
இதனால், "மார்கஸ் ஆரேலியஸ் கூறியது உண்மையாக இருக்கலாம்" என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆய்வின் வரம்புகள்
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த, கல்வியறிவு, தொழில்மயமாக்கல், செல்வம் மற்றும் ஜனநாயகச் சூழலில் வாழும் (WEIRD) மக்களாக இருந்தனர். எனவே, இந்த முடிவுகளை உலகம் முழுவதற்கும் பொதுவாகப் பொருத்த முடியாது என்று ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

நான்கு வகையான சிந்தனையாளர்கள்
1. கவலைப்படுபவர்கள் (The Worriers)
இந்தக் குழுவினர் உலக அரசியல், போர்கள், சமூகப் பிரச்சினைகள், கொரோனா போன்ற நிகழ்வுகள் குறித்து சராசரியைவிட 60% அதிகமாகச் சிந்தித்தனர்.
தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பற்றியும் 50% அதிகமாக சிந்தித்தனர்.
இவர்கள் மற்றவர்களைவிட இசையைப் பற்றியும் இரு மடங்கு அதிகமாகச் சிந்தித்தனர்.

2. குடும்ப மற்றும் நடைமுறை சிந்தனையாளர்கள் (The Domestics)
இவர்கள் வீட்டு வேலைகள், குடும்பம், பணநிலை, செலவுகள் ஆகியவற்றைப் பற்றிச் சராசரியைவிட 50% அதிகமாகச் சிந்தித்தனர்.
மேலும் திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றியும் சிந்தித்தனர்.

3. உடல்–மன சிந்தனையாளர்கள் (The Bodily Thinkers)
இந்தக் குழுவினர் தங்கள் உடல் உணர்வுகள், மனநிலை மற்றும் உணர்ச்சிகளைப் பற்றியே அதிகம் சிந்தித்தனர்.
சராசரி வயது: 32
மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்
தேவையற்ற, திடீர் சிந்தனைகள் அதிகம் (28%)

பெண்களில் மாதவிடாய் சுழற்சி அல்லது உடல், மனநலப் பிரச்சினைகள் காரணமாகவும் இவ்வகை சிந்தனைகள் அதிகரித்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

4. வேலைக்கும் வாழ்க்கைக்கும் சமநிலை கொடுப்பவர்கள் (The Work-hard, Play-hards)
இவர்கள் வேலை குறித்துச் சராசரியைவிட 50% அதிகமாகவும், அதே நேரத்தில் பொழுதுபோக்குகள், விளையாட்டு, கலை போன்றவற்றைப் பற்றியும் 25% அதிகமாகவும் சிந்தித்தனர்.
இந்தக் குழுவினரே:
அதிக வருமானம் பெற்றவர்கள்
அதிக மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள்

இந்த ஆய்வு, மனித மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பதையும், நமது சிந்தனைகளின் தரமும் திசையும் நமது மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், ஒரே மனிதர் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த நான்கு சிந்தனைப் போக்குகளுக்கிடையே மாறிக்கொண்டே இருக்கலாம் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

நன்றி The Guardian

கடல்.கொண்ட குமரிக்கோட்டுக்குதெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே.மூத்த முதற்குடிகளாக மிஞ்சியது மீன்குடி.அதன் தலைவனே மன்னனானான்.தோரணியின் தொன்மை காரணமாக பழையோன், பண்டையோன் என்று அழைக்கப்பட்டது மருவி பாண்டியன் என்றாயிற்று-கொற்றவைஜெயமோகன்

46



குட்டி இளவரசன்
-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி


அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய "குட்டி இளவரசன்" (Le Petit Prince) உலகப் புகழ்பெற்ற ஒரு உன்னதப் படைப்பாகும். 1943-இல் வெளியான இப்புத்தகம், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான ஒரு அழகான வாழ்வியல் கதையாகக் கருதப்படுகிறது. தமிழில் இதனை வெ. ஸ்ரீராம் மற்றும் ச. மதனகல்யாணி மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளனர்.

கதையின் நாயகனான விமானி,சிறு வயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். அதற்கு பெரியவர்களுக்கி விளக்கம் சொல்லி சலித்துப் போய் பெரியவனாகி விமானியாகிறார்.சில ஆண்டுகளுக்கு முன்பு தனது விமானம் பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் தரையிறங்குகிறார். அங்கு மனித நடமாட்டமே இல்லாத பகுதியில், ஒரு விசித்திரமான சிறுவனை அவர் சந்திக்கிறார். அவன் தான் "குட்டி இளவரசன்". அவன் "சிறுகோள் பி. 612" என்ற ஒரு சிறிய கிரகத்திலிருந்து வந்தவன். அந்தக் கிரகம் ஒரு வீட்டை விடச் சற்று பெரியது.

குட்டி இளவரசன் தனது கிரகத்தில் இருந்த ஒரு ரோஜா மலரை ஆழமாக நேசிப்பவன். அந்த மலருடன் ஏற்பட்ட சிறிய மனவருத்தத்தால், அவன் தனது கிரகத்தை விட்டுப் பல்வேறு கிரகங்களுக்குப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் போது அவன் பின்வரும் நபர்களைச் சந்திக்கிறான்

அரசன், தற்பெருமைக்காரன், குடிகாரன்,வியாபாரி மற்றும் சிலரை சந்தித்ததை பகிர்ந்து கொள்கிறான்.
இந்தச் சந்திப்புகள் மூலம், பெரியவர்கள் எண்களையும், வெளிப்படையான விஷயங்களையும் மட்டுமே கவனிப்பவர்கள் என்பதையும், அவர்கள் வாழ்க்கையின் உண்மையான அழகைப் புரிந்துகொள்ளத் தவறுபவர்கள் என்பதையும்  மென்மையான நகைச்சுவையுடன்
சுட்டிக்காட்டுகிறார்.

வாழ்வின் ரகசியம் பூமிக்கு வரும் குட்டி இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். அந்த நரி அவனுக்கு " ஆழமான பொருளைக் கற்றுக்கொடுக்கிறது. "உலகில் நீ எனக்கு ஒருவனாக, நான் உனக்கு ஒருவனாக மாறுவதுதான் பழக்கப்படுத்துதல்" என்று நரி விளக்குகிறது. மேலும், கதையின் மிக முக்கியமான கருத்தாக, "இதயத்திற்குத்தான் பார்வை உண்டு; முக்கியமானவை கண்களுக்குத் தெரிவதில்லை" என்ற ரகசியத்தை நரி அவனிடம் பகிர்ந்துகொள்கிறது.

தனது ரோஜா மலருக்காகத் தான் பொறுப்பாளி என்பதை உணரும் குட்டி இளவரசன், மீண்டும் தனது கிரகத்திற்கே திரும்ப முயல்கிறான். இக்கதையில் வரும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு, பெட்டிக்குள் இருக்கும் ஆடு போன்ற ஓவியங்கள், பெரியவர்களின் வறண்ட கற்பனைத் திறனைச் சாடுகின்றன.

குட்டி இளவரசன் வெறும் கதை புத்தகம் மட்டுமல்ல; அது அன்பு, நட்பு, பொறுப்புணர்வு மற்றும் குழந்தைப் பருவத்துத் தூய்மையை நினைவூட்டும் ஒரு வாழ்வியல் பாடம். பிரெஞ்சு அரசாங்கம் இதன் ஆசிரியரைப் போற்றும் வகையில், குட்டி இளவரசன் மற்றும் ஆசிரியரின் படங்களைக் கொண்ட ஐம்பது பிராங்க் நோட்டை வெளியிட்டது அதன் சிறப்பை உணர்த்துகிறது.

உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது". நாம் ஒருவருக்காகச் செலவிடும் நேரமும் அக்கறையும்தான் அவர்களை நமக்குச் சிறப்பானவர்களாக மாற்றுகிறது.

*நீ பழக்கப்படுத்திக்கொண்டதற்கு நீ என்றுமே பொறுப்பாளியாகிறாய்" ஒருவருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டால், அவர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்களாகிறோம்.

*மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும், தனக்குத் தானே நீதி வழங்கிக்கொள்வது மிகக் கடினம்". அவ்வாறு ஒருவன் தனக்குச் சரியான நீதி வழங்கிக்கொண்டால் அவன் ஒரு உண்மையான ஞானி என்று அரசன் குறிப்பிடுகிறான்.

*உண்மையான அழகு கண்களுக்குப் புலப்படுவதில்லை. மனிதர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது தெரியாமல் அலைபாய்கிறார்கள், ஆனால் அவர்கள் தேடுவது ஒரே ஒரு ரோஜாவிலோ அல்லது சிறிதளவு தண்ணீரிலோ கிடைத்துவிடும்.

*பெரியவர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தையை மறந்துவிடக்கூடாது என்பதையும், வாழ்க்கையில் அன்பும் நேரமும் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 24 July 2026

45


இப்படித்தான் உருவானேன்

-பழ.கருப்பையா

பழ கருப்பையா எனும்
 பெயர் என் அப்பா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஜனதா கட்சியில் பிடிப்பானவராய் இருந்தவர்.
பல கட்சிகள் மாறினாலும் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாய் இருப்பவர். அங்காடித் தெரு படத்தில் அண்ணாச்சியாக அவரின் நடிப்பு அசாத்தியமாய் இருக்கும். தனித்தமிழில் அவர் எழுதும் கட்டுதைகள் தனித்துவமானவை. துக்ளக் விழாவில் கேட்ட அவரின் உரையை பல முறை கேட்டுள்ளேன்.

தமிழ் இலக்கியம், அரசியல், சமூகச் சிந்தனை ஆகிய துறைகளில் தனித்துவமான குரலாகத் திகழ்பவர் பழ. கருப்பையா. அவரது எழுத்துகள் நேர்மையும் துணிவும் நிறைந்தவை. சமூக நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் அணுகும் அவரது பாணி வாசகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் வெளிவந்துள்ள "இப்படித்தான் உருவானேன்" என்ற நூல்வாழ்க்கைப் பயணத்தையும், சிந்தனை வளர்ச்சியையும், அனுபவங்களையும் பதிவு செய்யும் சுயசரிதைத் தன்மையுடைய படைப்பாகும்.மனிதனை உருவாக்குவது பிறப்பு அல்ல; அவன் தேர்ந்தெடுக்கும் பாதையும் தாங்கும் போராட்டங்களுமே என்பது நூல் முழுக்கத் தெரிகிறது.

காரைக்குடி குடிநீர் போராடத்தில் 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து குடிநீர் காவலனாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தி, வள்ளலாரை படித்த பின் வாழ்வில் திருப்புமுனை உண்டாக்கியதாக கூறுகிறார்.காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டவர்.எமர்ஜென்சி காலத்தில் ஜனதாவில் இணைந்தார்.

சோசலிச அடையாளங்களுடன் அன்றைய இளைஞராய் காரைக்குடி சட்டமன்றத் தொகுதில்  நின்று அதிமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.தோல்வி முடிவு அல்ல; தன்னை மறுபடியும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என்பதுபோல

'பகடையை வீசு அதுவரைதான் நம் வேலை! தாயம் விழுபதில் என் பங்கு இல்லை என அன்றைய ஜனதா தலைவர் பா.ராமச்சந்திரன் உடனான நட்பை பற்றியும் விவரித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதராக தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாசிப்பு, சமூக அக்கறை ஆகியவற்றின் மூலம் எவ்வாறு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்பதை பழ. கருப்பையா மனம் திறந்து பதிவு செய்கிறார். எமர்ஜென்சி கால கட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், அரசியல் தலைவர்களின் நிலைபாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

சிறுவயது நினைவுகள், குடும்பச் சூழல், கல்வி, அரசியல் ஈடுபாடு, பொதுவாழ்வு, இலக்கிய உலகில் ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவை இயல்பான நடையில் சொல்லப்பட்டுள்ளன.வெற்றியையோ சுயதம்பட்ட புகழையோ சொல்லாமல் தான் சந்தித்த தோல்விகள் தவறான முடிவுகள் ஆகியவற்றையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்கிறார்.

பெரியார், செழியன், ஜனதா கட்சி அனுபவம் மற்றும் சோசலிச தலைவர்களுடனான நட்பு, அரசியல் ரீதியான தொடர்பினையும் கூறியுள்ளார்.இப்படிப்பட்ட அரசியல்வாதி சினிமா துறையில் இன்று நீ நாளை நான் படம் மூலம் திரைத்துறையில் நுழைகிறார்.கமல், நளினி, மோகன்,விஜயகாந்த் என அடுத்தடுத்த நட்சத்திரங்களுடன் திரைப்பட பணியை சொல்லி தன் சரிவையும் வெளிப்படையாக சொல்லியிருப்பார்.தமிழறிஞர்களுடன் உடன் இருந்த தருணம் மற்றும் கண்ணதாசன் இறந்தபோது.. அழுதும் தொழுதும் ஆகப் போவதென்ன?
தமிழ்க் கவியையுலகம் வறுமையுற்றது என முடித்திருப்பார்.

பொருத்தமான் இடங்களில் நல்ல மேற்கோள்களை சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்தி இருப்பார்.

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்

எல்லார்க்கும் எல்லாவற்றையும் அடையத்தான் ஆசை.ஆனால் எதுவரையில் அடைய வேண்டும் என்பது ஒருவனால் வரையறுக்கப்பட்டிருப்பதாய் நாலடியார் கூறுவதாய் மேற்கோள் சொல்லியிருப்பார் பொருத்தமாய் இருந்தது அவர் சொன்ன இடத்தில்.

"விதியை ஊழ் என்பார் வள்ளுவர். உனக்கு உரியதல்லாத செல்வத்தை எவ்வளவு வருத்திக் காத்தாலும், அது உன்னைவிட்டு போய்விடும் என்று"

"தூய யோவானாக இருப்பது வாழ்க்கைக்குக் உதவாது. அரசியலுக்கும் உதவாது

காரைக்குடியில் இவர் இளையாராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் தான் கலைஞர் இசைஞானி பட்டம் கொடுத்தார் என்பது புதிய செய்தியாக இருந்தது.

சமூக நீதி, மொழிப்பற்று, அரசியல் நேர்மை, மனிதநேயம், சுயமரியாதை போன்ற கருத்துகள் வலியுறுத்தி இருப்பார். ஒருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் மற்றும் சமூக அனுபவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் ஆசிரியர் பல நிகழ்வுகளின் மூலம் எடுத்துரைக்கிறார்.தான் 2011 முதல் 2016 வரை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் செய்த பணிகள் சட்டமன்ற நிகழ்வுகள் ஆகியவற்றை சுவைபட எழுதியுள்ளார்.துக்ளக் ஆண்டுவிழாவில் எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன செய்யலாம்? இலஞ்சம் வாங்கலாம், பெஞ்சை தட்டலாம் ,வேறென்ன செய்யலாம் என பேசியதால் கோபத்துக்கா ஆளாகி என்ன ஆனது என்றும் அதனை அவர் எதிர்கொண்ட விதமும் துணிச்சல்

எளிமையான மொழி, நகைச்சுவை உணர்வு, கூர்மையான விமர்சனப் பார்வை மற்றும் சிந்திக்க வைக்கும் சம்பவங்கள் ஆகியவை இந்நூலின் வாசிப்பு அனுபவத்தை செழுமைப்படுத்துகின்றன. இது வெறும் சுயசரிதை அல்ல; ஒரு காலகட்டத்தின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றையும் பதிவு செய்யும் ஆவணமாக அமைகிறது.

"வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் எந்தப் பல்கலைக்கழகமும் கற்றுத் தர முடியாது.ஒரே கட்சியில்  பலர் தொடர்ந்து இருக்கிறார்கள்! சிலர் ஏன் இருக்க முடிவதில்லை? 

வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல; அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் தொகுப்பு என புரிந்து கொள்ளலாம்

 குறித்த பார்வையையும் பதிவு செய்கிறார்.தான் விரும்பி கேட்ட உரைகள் ஓஷோ மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அறிவின் தொகுப்பாக கடைசி அத்தியாயத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday, 23 July 2026

விக்னேஷ்வரன்

கால்பந்தின் கதைகள் ஒவ்வொன்றும் வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகமான அளவில்  எனக்குள் உயர்த்துகிறது. 

2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிராக கூடுதல் நேரத்தில் (106 ஆவது நிமிடத்தில் )ஃபெரான் டோரஸ் அடித்த கோல், அவரை உலக அரங்கில் இன்று கதாநாயகனாகிவிட்டது. ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது. அந்தக் கோல் வழியே டோரஸின் தனிப்பட்ட மீட்சிக் கதை ஒன்றும் இணைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் ஸ்பெயின் உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறிய  அணியில் ஃபெரான் டோரஸும் இருந்தார். ஏற்கனவே மான்செஸ்டர் சிட்டியிலிருந்து பார்சிலோனாவுக்கு பெரிய தொகைக்கு மாறிய பிறகு ஏற்பட்ட காயங்கள், அதனால் ஏற்பட்ட விமர்சனங்கள், முக்கியமாகச் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள், அணிகளில் விளையாடுவதற்குக்  குறைவான நேரம் கிடைப்பது என பல பிரச்சினைகள் அவரைத் தொடர்ந்து தாக்கின. "நான் ஒரு ஆழமற்ற பள்ளத்தில் இருப்பதாக உணர்ந்தேன். அதிலிருந்து  வெளியே வரும் வழியே தெரியவில்லை. என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அனைத்தும் என்னைப் பாதித்தது” என்று மிகுந்த மனவழுத்தத்தில் உழன்று கொண்டிருந்தார் டோர்ஸ், இறுதியில்  விளையாட்டு மனநல நிபுணர் ஒருவரிடம் கலந்துரையாடலுக்குப் போகிறார். இந்தத் தொடர் கலந்துரையாடல் வழியே அவரின் விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்வின் பிரச்சினைகள் கலந்துரையாடப்படுகின்றன. உளவியல் நிபுணர் வழியிலான இத்தகைய தொடர் கலந்துரையாடல்கள் அவருக்கு மிகச்சிறந்த சிகிச்சையும் நம்பிக்கையை கிடைத்திட வழிவகை செய்கிறது. இதன் வழியே ஃபெரான் டோரஸ் வேகமாக மீண்டெழுகிறார். இந்த மீண்டெழுந்த செயலுக்கு அவர் வைத்துக் கொண்ட பெயர் “ஷார்க் மென்டாலிட்டி” (Shark Mentality) அல்லது “எல் டிபுரான்” (El Tiburón).

அதாவது, சுறா மீன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருப்பது போல, ஒருபோதும் நிற்காமல், தினசரி மேம்பாட்டுக்கு முயல்வது, விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவது மற்றும் போட்டியில் இரக்கமற்ற முறையில் எதிர் அணியைத் தாக்குவது. இந்த மனநிலை அவரை மீண்டும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாற்றுகிறது.

ஸ்பெயின் அணியில் ஃபெரான் டோரஸின் இடம் என்பது எப்பொழுதும் சூப்பர் சப்ஸ்டிடியூட் என்பதாகும், அதாவது, ஆட்டம் தொடங்கும்போது முதல் பதினொரு வீரர்களுடன் இல்லாமல், தேவைப்படும் போது ஆட்டத்தின் நடுவில் உள்ளே வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது. இதுவே ஸ்பெயின் அணியில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியமான கதாபாத்திரம். நேற்றைய போட்டியில் இப்படியாகச்  சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்து விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் நிகோ வில்லியம்ஸ் அடித்த பந்து அவரை நோக்கி வந்தபோது, அவர் அடித்த அந்த வலிமையான இடது கால் ஷாட், அவரை வரலாற்றில் இடம் பிடிக்கச் செய்தது மட்டுமின்றி ஸ்பெயினுக்கும் கோப்பையும் அளித்துவிட்டது.

நேற்று போட்டி முடிந்தபின்பு ஃபெரான் டோரஸ் சொன்னது: “பந்து என்னை நோக்கி வந்தது. என் ஸ்பெயின் மக்களின் சக்தி ஒன்றாக என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு பந்தை உதைத்தேன்.”

மனவழுத்தில் மீண்டெழுந்த கதை என்றெல்லாம் இதை எழுதுவதை விடவும் இக்கதையில் முக்கியமானது: எந்தவொரு தனிநபரும் மனதளவில் தான் ஆழமற்ற பள்ளத்தில் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டியது மனநலம் சார்ந்த நல்ல கலந்துரையாடல் அல்லது சரியான சிகிச்சை முறை. இதில் வெட்கம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. 

குறைந்தபட்சம் அழுத்தமான கணங்களில் உங்களுக்குப் பிடித்தவர்களிடம் அதிகமான கலந்துரையாடல் செய்யுங்கள், நாம் யாரும் இங்கே தனியாக இல்லை. ஃபெரான் டோரஸக்கு கோல், வெற்றி, கோப்பை என்றால் நமக்கும் அருளப்பட்டவை ஏதாவது என்றாவது கிடைக்கும்.

Tuesday, 21 July 2026

ஜியோ டாமின்

மனிதன் இயல்பிலேயே சுயநலமானவனா?
அறிவியல் என்ன சொல்கிறது?

இந்த கேள்விக்கான பதிலை நீண்டகாலமாக சமூகம் கேட்டு வந்திருக்கிறது. நவீன அறிவியலானது ஒரு மனிதனின் குணநலனை மூன்று வகையான விஷயங்கள் தீர்மானிப்பதாகச் சொல்கிறது. ஒன்று அவன் தனது மூதாதையரிடமிருந்து பெற்றிருக்கும் மரபுப்பண்புகள், இரண்டாவது அவன் வளரும் / வளர்க்கப்படும் சூழல் (குறிப்பாக குடும்பம் இதில் தாக்கம் செலுத்துகிறது) மூன்றாவது அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.

இந்த மூன்றில் முதலாவது மட்டுமே அகக்காரணி. மற்ற இரண்டும் புறக் காரணிகள். நம் கேள்வி மனிதன் இயல்பிலேயே சுயநலமானவனா என்பதாக இருப்பதால் இந்த புறக்காரணிகளை இப்போதைக்கு விட்டுவிட்டு அவனது மரபணுக்கள் அவனை சுயநலமியாக வைத்திருக்கிறதா அல்லது பொது நலன் நாடுபவனாய் வைத்திருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.

இதனைத் தெரிந்துகொள்ள மனிதப் படிமலர்ச்சிக்கு (பரிணாமம்) நாம் செல்ல வேண்டும். 

மாறும் சவாலான சூழலுக்கு ஏற்றபடியான ‘தகவமைப்பைப் பெற்றிருக்கும்’ உயிர்(கள்) தழைக்கும் என்பது படிமலர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படை. அதாவது, மரபியல் சிதைவுபோன்ற (Mutation) ஏதேச்சையாக நிகழும் உயிரியல் மாற்றங்கள், மாறும் புறச்சூழலுக்கு சாதகமாக இருக்கும்போது உயிர்கள் தழைக்கின்றன / முரண்படும்போது அழிகின்றன. 

40-50 மனிதர்கள் இருக்கும் ஒரு தொல்பழங்கால மனிதரின் குழுவை எடுத்துக்கொள்வோம். கடுமையான வறட்சியையும் பட்டினியையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். குழுவுக்கான மிகச்சிறிய உணவே இருக்கிறது. ஒரு மனிதனுக்கு, 'இந்த உணவை நான் மட்டும் சாப்பிட்டுவிட்டால் என்ன?' என்ற எண்ணம் தோன்றுகிறது. இதை அவர் சாதுர்யமாகச் செய்துவிட்டால் குறைந்தபட்சம் உடனடியாக அவரது உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

அவர் அதனைச் செய்து பிழைத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிழைத்தல் அவரது சுயநலனுக்குக் காரணமான மரபணுக்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துகிறது. இதுவொரு வெற்றிகரமான பிழைத்தல் யுக்தியாக இருக்கும்பட்சத்தில் மனிதனின் இயல்பான குணமும் இயல்பூக்கமுமாக மாறுகிறது என்று கருதலாம்.

அதாவது படிமலர்ச்சிக் கோட்பாட்டின்படி பிழைத்திருக்க உதவும் தகவமைப்பானது பல்கிப் பெருகும்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 

ஆனால் உண்மையிலேயே இப்படிப்பட்ட மனிதரைத்தான் பரிணாமம் தேர்ந்தெடுத்ததா?

-ஜியோ டாமின்

Saturday, 18 July 2026

43


ஒருபோதும் அன்பு என்பது ஒரு மக்கள் இயக்கமாக இருந்ததில்லை. உண்மையில் யாருமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. ஒரு சில மனிதர்களின் அன்பினாலும், தீராத பேரார்வத்தினாலும் தான் இந்த உலகம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது அப்படித்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் எப்போதோ விரக்தியில் மூழ்கியிருப்பீர்கள்.

ஏதாவது ஒரு மத்தியானப் பொழுதில், ஏதாவது ஒரு நகரத்தின் தெருவில் ஜாலியாக நடந்து செல்லுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் வேறு யாருமல்ல, அவர் நீங்களே தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் நீங்களே தான்.
நீங்கள் அந்த மோசமான
மனிதராக இருந்திருக்கலாம். நீங்கள் அந்த அரக்கனாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அதிகார வெறி மிக்க
காவல்துறை அதிகாரியாக
இருந்திருக்கலாம். அவர்களைப் போல
மாறாமல் இருக்க, உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- ஜேம்ஸ் பால்ட்வின்

சக்திவேல்


ஒருபோதும் அன்பு என்பது ஒரு மக்கள் இயக்கமாக இருந்ததில்லை. உண்மையில் யாருமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. ஒரு சில மனிதர்களின் அன்பினாலும், தீராத பேரார்வத்தினாலும் தான் இந்த உலகம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது அப்படித்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் எப்போதோ விரக்தியில் மூழ்கியிருப்பீர்கள்.

ஏதாவது ஒரு மத்தியானப் பொழுதில், ஏதாவது ஒரு நகரத்தின் தெருவில் ஜாலியாக நடந்து செல்லுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் வேறு யாருமல்ல, அவர் நீங்களே தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் நீங்களே தான்.
நீங்கள் அந்த மோசமான
மனிதராக இருந்திருக்கலாம். நீங்கள் அந்த அரக்கனாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அதிகார வெறி மிக்க
காவல்துறை அதிகாரியாக
இருந்திருக்கலாம். அவர்களைப் போல
மாறாமல் இருக்க, உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- ஜேம்ஸ் பால்ட்வின்

42


சமகாலத் தமிழ் சிறுகதைகள்
-பாரதிபாலன்

சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள் (2000–2020) என்பது எழுத்தாளர் பாரதிபாலன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. இருபது ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறுகதைகளை ஒரே நூலில் தொகுத்து வழங்கும் முயற்சியாக இது உருவாகியுள்ளது.

உலகமயமாக்கல், நகரமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, குடும்ப உறவுகளின் மாற்றம், பெண்களின் வாழ்வியல், விளிம்புநிலை மக்களின் குரல், சாதி, பாலினம், சுற்றுச்சூழல், இடம்பெயர்வு போன்ற பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் இக்கதைகளின் வழியாக வெளிப்படுகின்றன. இதில் இமையத்தின் வீடியோ மாரியம்மன், ஜெயமோகனின் அறம் உள்ளிட்ட கதைகள் அதிகம் கவனம் ஈர்த்ததால் புதிய எழுத்தாளர்களின் சில கதைகளை பகிர்கிறேன்.

அரசயல் புலனாய்வு பத்திரிக்கை துறையில் வேலை செய்யும் நிருபரின் அனுவபவங்கள், நிர்வாகத்தினரிடம் சந்திக்கும் பிரச்ச்னைகளே ஞாபக குறிப்பு கதை.

கதை எழுத நினைக்கும் குடும்ப தலைவி கதையின் கருவாக என்ன எழுதலாம் என யோசிக்கும் கதையில் அடுத்தடுத்து நடைபெறும் அன்றாட அவஸ்தைகளே அவளுக்கு கருவாக கிடைப்பதுதான் கரு வின் கதை. வார்த்தைக் கோர்வையில் சம்பவங்களை அடுக்கிச்செல்லும் உமா மகேஸ்வரியின் ஆற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

அழுக்கான ஆடை உடுத்தும் தந்தையால் மன உளைச்சலுக்கு உண்டாகும் மகன் அதன் காரணத்தை அறியும் போதுதான் உண்மை புலனாகிறது என்பது புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள் கதை. அழகிய தலைப்பாக கதைக்கு பொருத்தமானது.அப்பாக்கள் மீதான மகன்களின் உளவியல் பார்வையை முன்வைக்கிறது.

ஒரு தோப்பு வாங்க நினைக்கும் இடைநிலை ஆசிரியருக்கு அந்த தோப்பு வாங்க வேண்டிய அவசியத்தை அழகியப்பெரியவனின் தோப்பு  கதை உணர்வு பூர்வமாக சொல்கிறது.இக்கதையை பவா செல்லத்துரையின் கதையாடலில் கேட்டிரிந்தாலும் படிக்கும்போது இன்னும் வீரியமிக்கதாய் உள்ளது

டொமினிக் எனும் அயல் நாட்டுக்காரன் திருவண்ணாமலை ஆசிரமத்தில் நீண்டகாலம் வசிப்பவன். கணவனை பிரிந்த ராணியையும் குழந்தையும் பாதுகாப்பவன். ஒரு நாள் அவளின் கணவன் சக்திவேலுடன் கைகலப்பு ஆகிறது. அதன் பின் டொமினிக் எடுக்கும் முடிவு தான் பவா செல்லத்துரையின் டொமினிக் கதை.

"இரு நண்பர்கள் கைகுழுக்கி தழுவும் போது உடல் சூடு இடம் மாறுகிறது" என்கிறார்.

"கடந்த கால இழிவுகள், பெருமிதங்கள் ஒரு போதும் நிகழ்காலப் பசியைப் போக்கி விடுபவையலல",

"வாழ்வின் ரகசிய முடிச்சுகள் ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது"" அவன் நடையில் ஒரு தீர்மானமிருந்தது" ;போன்ற வரிகள் ரசிக்க வைத்தன.

ஐந்து பெண்களை மணந்த பாஞ்சாலியின் உணர்வுகளை தர்மத்தின் ஆகுதியில் வெண்ணிலா விவரித்துள்ளார்.

மணவிலக்கு கோரிய மனைவியை பத்து மாதங்களுக்கு பிறகு சமாதானம் பேச கேரளாவில் சந்திக்கும் கணவன் எதிர்கொள்ளும் மன உளைச்சல் தான் சாம்ராஜின் அனந்தசயனபுரி கதை.

' ஏறக்குறைய தெருவில் யாரும் இல்லை.ஒரு நீள் மெளனம் போல் தெரு கிடந்ததாக சொல்லும்போது நாமும் உறைந்து நிற்கிறோம்.மரம் மழையை ஞாபகம் வைத்துச் சொட்டிக் கொண்டிந்தது அழகிய காட்சி.

பிள்ளையில்லாத இசக்கிமுத்து குலதெய்வமான கருப்பசாமியை கும்பிட்டு வரும்போது எதிர்படும் ஆட்டை.. பிள்ளை போல் வீட்டில் வளர்கிறான். பிள்ளை பிறந்தபின் நேர்த்திக்கடன் செலுத்துவதில் பாசம் தடுக்கிறது. அந்த உணர்வு போராட்டம்தான் குலசாமியை கொன்றவன் கதை.கிராமத்து எளிய மனிதர்களின் மனசாட்சியை அழகாக கதையாக்கியுள்ளனர்

பிரசவ அறையில் இருக்கும் பெண்ணின் மன உணர்வு.. ஆர்வமும் எதிர்பார்ப்பும் உடைய குரல்கள் கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பதை பெண்ணின் மனம் எவ்வாறெல்லாம் சந்தோசத்தை பயத்தினூடே கடத்தும் நிகழ்வுகளே பிரசவ வெளி கதை. 

வெற்றிகள் இல்லாத காலங்களில் ஒரு குதிரை ஜாக்கிக்குள் இருக்கும் வெறுமை கொடூரமானது.குதிரை ரேஸில் உயிர் தப்பிய அசோக் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் ப்ளூவின் பாசப்பிணைப்பு ஆழமானது. தற்போதைய ப்ளூவின் நிலையை எண்ணி வெதும்பி வெளியேறும் அசோக்கை போலவே நம்மை நெகிழ வைக்கிறது.

சித்த வைத்தியரான தாத்தாவிற்கும் மருத்துவரான பேரன் சுதர்சனுக்கும் இடையில் நடக்கும் பாசமும் தொழில் அர்ப்பணிப்பும் அம்பு படுக்கை கதை.

தூர் கவிதை போல அப்பாவின் மனதை தூர்வாராமல் இருந்து உண்மைய தெரியவரும்போது அப்பா தொலைந்திருப்பார்.. இறுதியாக மகன் உணர்ந்தது தான் மனக்கிணறு கதை.தாழம்பூ டீச்சரின் காதல் வாழ்க்கை தோல்வியடைய மண வாழ்க்கையும் தோல்வியடைய அவரின் ஈரமணமும் ஈகை குணமும்.ல் என்றும் தோல்வியடையாது என்பதை தாழ்ம்பூ டீச்சரின் கதை உணர்த்துகிறது.

அன்றாடம் கழிவு நீர்க்குழாயில் விஷவாயு தாக்கி தொழிலாளி மரணம் எனும் செய்தியை நாம் பார்த்து கடந்திருப்போம். அதன் வலியை சவக்குழி கதையில் காட்டியிருப்பார்கள்.இறுதியில் அது வழக்கமான பிணநாற்றம் அல்ல என்ச் சமுதாயத்தின் முகத்தை அதிகாரத்தின் தப்பித்தலை தோலுருத்து காட்டியிருப்பார்.

ஆணவ படுகொலையையும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பையும் நாயம்மை கதையில் சுகுணாதிவாகர் காட்சிபடுத்தியிருப்பார்."அது என்னவோ மகள்கள் அம்மாவாகப் போகிறார்கள் என்று தெரிந்தால் அம்மாக்கள் குழந்தையாகிவிடுகிறார்கள் என எதார்த்தத்தை சொல்லியிருப்பார்.

செய்தி சேனலில் வேலை பார்க்கும் நர்மதாவுக்கு நிறைய எதிரிகள். காரணம் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை எடுத்து விவாதிப்பதால்.அப்போது ஒரு நாள் முகம் தெரியாத ஒருவன் கறுப்பு மை அடித்து விட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் என்ன ஆனது என்பதே எஸ்.ரா எழுதிய கருப்பு ரத்தம் கதை

சிறுகதைகள் மனித உறவுகள், வாழ்க்கையின் உண்மைகள் குறித்து புதிய பார்வையை உருவாக்குகின்றன.சாதி, பாலின சமத்துவம், வறுமை, சுற்றுச்சூழல், கல்வி போன்ற பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வு உருவாக்குகின்றன.பல எழுத்தாளர்களின் கதைகள் உள்ளதால் புதிய சொற்கள், நடைகள், உவமைகள் ஆகியவற்றை அறிய பல்வேறு கதைகள் உதவுகிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 17 July 2026

41


#Reading_Marathon2026

#26RM009

Book No:41/150+
Pages:-525

நெடுங்குருதி
-எஸ் ராமகிருஷ்ணன்

இந்த நாவல் வேம்பலை என்ற புனைவில் உருவான ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது..இது ஆசிரியரின் பால்ய கால நினைவுகளில் இருந்த கிராமங்களின் வெயிலும் மூர்க்கமும் கலந்த ஒரு மறுவடிவம் என அவரே குறிப்பிடுகிறார்

வேம்பலை வரைபடத்தில் இல்லாததொரு ஊர்" என்று குறிப்பிடப்பட்டாலும், அது ராமநாதபுரம் மாவட்டத்து கிராமங்களின் நுட்பங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது.
கத்தியை யாரோ சாணை பிடிப்பது போல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது எனும் வரி வெக்கையான உலகை நமக்கு காட்டுகிறது.

சண்டையிட்டு பிரிந்த தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளரும் நாகு என்ற சிறுவனின் வாழ்விலிருந்து தொடங்கி, அவனது குடும்பம் மற்றும் வேம்பலை கிராமத்து மனிதர்களின் தலைமுறை கதையை விவரிக்கிறது.வேணியும் நீலாவும் நாகுவுடன் பிறந்தவர்கள்.எதிர்பாராத விதமாக நீலா இறந்துவிட, வேணிக்கு மட்டும் திருமணம் நடக்கிறது.
நாகுவின் மணவாழ்க்கை, விரும்பிய பெண் பற்றிய பகுதிகள் வருகிறது.

ஆதிலட்சுமி எனும் மாற்றுத்திறனாளி சிறுமி பகல் கனவு காண்பவள், அனைத்தி விஷ்யங்களையும் அறிந்து கொளபவள்,மரண படுக்கையில் இருக்கும் சென்னம்மா இறக்கும் சடங்கு வாழ்ந்த பகுதியை காண்பிப்பது கதையின் குறியீடு போல் உள்ளது. சொந்த வீடு ஊர் எல்லாருக்கும் நெருக்காமானது. சின்னு, மல்லிகா, வேணி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மனிதர்களின் ஆசாபாசங்கள், ஏக்கங்கள் மற்றும் வாதைகளை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

வழிப்பறிக் கொள்ளைக்குப் பெயர் பெற்ற வேம்பர்கள் கொற்கைப் பாண்டியனின் வீரர்களுக்குப் பயந்து தப்பி ஓடி, வேப்ப மரங்கள் தங்களை உள்வாங்கிக் காப்பாற்றியதாக நம்பப்படும் ஒரு நிலப்பரப்பில் குடியேறியவர்கள்.வெல்சி துரை வேம்பர்களை அடக்க முயன்றது. ஒரு மோதலில் வேம்பன் ஒருவன் வெல்சி துரையின் குரல்வளையை அறுத்துவிடுகிறான்.இதற்குப் பழிவாங்கத் துடித்த வெல்சி துரை, வேம்பலை கிராமத்தைச் சூழ்ந்து கொண்டு, ஒரு கிணற்றுக்குள் ஒளிந்திருந்த 42 வேம்பர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

வேறு ஊருக்கு மக்கள் செல்லக் கூடாது என குதிங்கால் நரம்பு மற்றும் குரல் நரம்பு அறுக்கப்பட்ட வரலாற்றுத் துயரமும் இதில் விரிவாகப் பேசப்படுகிறது.இச் சமூகத்தின் வீரமும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும்,தெரிய வருகிறது.

வேம்பலையின் மீது படர்ந்திருக்கும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவாகவும், வசியக் குரலால் மனிதர்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு நிலப்பரப்பாகவும் வேம்பலை காட்டப்படுகிறது.

ரேகை சட்டம் (Criminal Tribes Act)
இதன்படி, ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் காவல் நிலையத்தில் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இரவில் அங்கேயே தங்க வேண்டும் என்பது விதியாக இருந்தது போன்ற அடக்குமுறைகளால் ஒரு சமூகம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட வறுமையையும் மூர்க்கத்தையும் நாவல் பதிவு செய்கிறது.
இச்சட்டத்தினால் நாகுவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கு நாகுவின் குடும்பம் பலியாகிறது, வேம்பலையின் இயல்பான முகம் மக்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதே மையம். இதில் பல்வேறு கதாபாத்திரங்கள் மனிதநேயத்தை பேசுகிறது

நாகுவின் மகள் வசந்தா எங்கு செல்வதென தெரியாமல் நிற்கும்போது தன் தந்தை வாழ்ந்து மறைந்த வேம்பலைக்கே திரும்புகிறாள்.சேதுவிற்கும் கிட்ணாவிற்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு, தனது தந்தையின் பெயரான 'நாகு' என்ற பெயரைச் சூட்ட வசந்தா சொல்கிறாள். நாவலின் இறுதியில், வசந்தா மற்றும் சேதுவின் சாமான்கள் ஏற்றிய வண்டி வேம்பலைக்குள் நுழையும்போது, அந்த ஊர் தன் சுபாவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. வானிலிருந்து கொக்குகள் நிசப்தமாக வேம்பலையில் இறங்குகின்றன.என்பது
திரைக்காட்சி போல் நம்முள் விரிகிறது

வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் எழுதுகிறது

#ரசித்தது

*வாழ்ந்து இறந்த பிறகுதான் ஊரின் மீதும் வீட்டின் மீதும் நேசம் அதிகமாகிவிடுகிறது.இறப்பிற்கு பிறகும் மனிதனுக்கு ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது.

வாழ்க்கை என்பது மனிதர்களைப் பொருட்படுத்தாத ஒரு சக்தி. மனிதர்கள் எவ்வளவோ போராடினாலும், வாழ்வு அதன் போக்கில் எவ்வித சலனமுமின்றி எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது

*உலகம் மிக மர்மமானது. எண்ணிகையற்ற தெரியாதவைகளால் நிறைந்தது. நீயும், நானும் அருகாமையிலிருக்கும் இந்த நிமிஷம் என்றாவது ஒரு நாள் வியப்பாக உனக்கு தோன்றும்.அப்போது தான் இந்த நிமிஷத்தை நீ புரிந்துகொண்டிருக்கிறாய்  என்று அர்த்தம்!" 

*மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், பிரிந்து போவதும் தற்செயலானவை அல்ல; அவை உலகம் என்ற மர்மமான இயந்திரத்தின் ஒரு பகுதி. ஒவ்வொன்றும் ஒரு காரணத்துடனேயே நடக்கின்றன

*ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது எனது ஊர். 

*உலகில் அன்பை விட மேலானது ஒன்றிருக்கிறது, அது பெயரிடப்படாதது,

கருணையை விடவும் நெகிழ்ச்சியானது, அன்பால் வேதனையை பகிர்ந்துகொள்ள மட்டுமே முடியும், எது வேதனைய இல்லாமல் செய்கிறதோ அது அன்பை விட மேலானது,
நாம் அன்பை விட மேலான ஒன்றிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

*ஆயிரக்கணக்கான பறவைகள் கடந்து போனபோதும் வானில் அதன் சுவடேயில்லை.

*வாழ்வின் சந்தோஷங்களை நினைத்துப் பார்த்துக் கொள்கின்ற எவரும் கண்ணீர் சிந்திய நிமிஷங்களை நினைத்துப் பார்த்துக் கொள்வதில்லை."

மனிதனின் வேர்கள் நிலத்திலும், நினைவுகளிலும்,உள்ளன; அவற்றிலிருந்து விலகும்போது அவனது அடையாளமும் நீங்குகிறது" என்பதே இந் நாவல்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 13 July 2026

நியாம்டர்

எப்போதும் சேமித்துக்கொண்டே இருக்க வேண்டும், செலவு செய்வது தவறு என்ற மனநிலை எனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் FIRE (Financial Independence, Retire Early) சமூகத்தில் இதைப் பற்றி நிறைய பேசுகிறார்கள்.

FIRE பயணத்தில் இருப்பவர்களில் பலருக்கு "accumulation mindset" உருவாகிவிடுகிறது. தொடர்ந்து சேமிப்பார்கள். மிகவும் சிக்கனமாக வாழ்வார்கள். ஓய்வுபெற்ற பிறகும், போர்ட்ஃபோலியோ மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம் விடாமல் இருக்கும். அதனால், வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், பழைய சிக்கன வாழ்க்கையே தொடர்கிறது.

"இன்னும் ஒரு வருடம் காத்திருக்கிறேன்..."
"இன்னும் இரண்டு வருடம்..."
"இன்னும் மூன்று வருடம்..."

₹50 லட்சம் ₹1 கோடியாகிறது. ₹1 கோடி ₹2 கோடியாகிறது. ₹2 கோடி ₹3 கோடியாகிறது.

ஆனால் அவர்கள் நிற்பதில்லை. அடுத்த வட்ட எண்ணை, அடுத்த மைல்கல்லை நோக்கி மீண்டும் காத்திருக்கிறார்கள்.

"இப்போதுதான் ₹1.56 கோடி இருக்கிறது. சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு ₹20 லட்சம் செலவு செய்தால் போர்ட்ஃபோலியோ குறைந்துவிடும். ₹2 கோடி ஆன பிறகு போகலாம்."

₹2 கோடி ஆகிறது.

"சரி, ₹20 லட்சம் செலவு செய்த பிறகும் ₹2 கோடி இருக்க வேண்டுமென்றால், முதலில் ₹2.2 கோடி ஆகட்டும்."

₹2.2 கோடி ஆனதும், "இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் ₹2.5 கோடி ஆகிவிடும்" என்ற புதிய இலக்கு தோன்றுகிறது.

இப்படியே வாழ்க்கை முழுவதும் இலக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நாள் மட்டும் வரவே வராது.

FIRE சமூகத்தின் ஆலோசனை வேறுபட்டது.

முழு போர்ட்ஃபோலியோவை ஒரே தொகையாகப் பார்த்துக்கொண்டே இருந்தால், அதிலிருந்து ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மனம் வராது.

அதற்கு பதிலாக, மாதந்தோறும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு ₹10,000 அல்லது உங்களுக்கு ஏற்ற தொகையை மாற்றும் முறையை அமைத்துக்கொள்ளுங்கள். அதை "Fun Bucket" அல்லது "Enjoyment Fund" என்று தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும், ஒரு ஆண்டில் சந்தை உங்கள் திட்டமிட்ட 4% வருமானத்தை விட அதிகமாக, உதாரணத்திற்கு 8% அல்லது 10% வளர்ந்தால், அந்த கூடுதல் லாபத்தில் இருந்து 3%–4% தொகையை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்.

அந்தப் பணத்தை குற்ற உணர்வு இல்லாமல் செலவு செய்யுங்கள். ஏனெனில், வாழ்க்கையின் நோக்கம் போர்ட்ஃபோலியோவை இறக்கும் வரை பெரிதாக்குவது அல்ல; அந்தப் போர்ட்ஃபோலியோ உங்களுக்காக உருவாக்க வேண்டிய நினைவுகளையும் அனுபவங்களையும் வாழ்வதே.

~ நியாண்டர் செல்வன்

Saturday, 11 July 2026

39



#Reading_Marathon2026
#26RM009

Book No:39/150+
Pages:-256



 அவன் பெயர் சொல்
-ரமேஷ் பிரேதன்

 
தமிழ் நவீன இலக்கியத்தில் தனித்துவமான குரலாக அறியப்படும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன், மனித மனத்தின் சிக்கல்கள், சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள், அதிகார அமைப்புகளின் வன்முறை ஆகியவற்றை தனது படைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்கிறார். அவரது அவன் பெயர் சொல் 

கதைக்களம் பாண்டிச்சேரி.
நான் லீனியர் முறையில் கதை துவங்குகிறது. வாழ்க்கையில் மிகப் பெரிய வலி எது தெரியுமா? வாழ் நாள் எல்லாம் தனக்கு விதிக்கப்பட்ட மதத்தைச் சுமந்து திரிவது, சாதியை சுமப்பது, அதிலும் தீண்டத்தகாதவனாக இருந்தால் அதன் அடையாளத்தை சேர்ந்து சுமப்பது என மகள் சூன் யதாவுக்கு கடிதம் போல் மின்னஞ்சல் எழுதுகிறார். தையல்கார தந்தையால்
நோன்புக் கஞ்சிக்கு ஆசைப்பட்டு பத்தாம் வயதில் ராமசாமி எனும் நான் மதம் மாற்றம் செய்யப்பட்ட ரஹ்மான் ஆகிறார்.

பாய் வியாபாரம் செய்து முதலாளியாக உயர்ந்த ரஹ்மான் தன் மனைவி பெர்னதேத்தை மணந்த அனுபவத்தை ப்ளாஷ்பேக்கில் சொல்கிறார் .பிரெஞ்சு தேசத்தை  சேர்ந்தவள்.தமிழ் பண்பாட்டுடன் ஒட்ட முடியாமல் உன்னை தூக்கிக் கொண்டு பிரிகிறாள்.மகள்.பிறந்த மூன்று மாதத்தில் இறந்துவிடுகிறாள்.
 இருப்பையே மறுப்பதற்கு ஒப்பானது என்பதை நாவல் பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது.

சாராயக்கடை பற்றிய ஆவணப் படம் எடுப்பதிலும்,தீவிர எழுத்து வேட்கையிலும் இருக்கும் ரஹ்மான் உரையாடல், உள்ளுணர்வுகளை, ஒட்டகம் போன்ற குறியீடுகள் மூலமாக கதையை நகர்த்துகிறார்.
மனைவி அருகில்.இருப்பதைப்போல்
பல.இடங்கள் வருகிறது. இறந்து போன மனைவியுடன் பேசுவது போல் பித்தி நிலைக்கு உள்ளான தந்தையாக கடிதம் எழுதுகிறார். மகளின் ஓரிரி மின்னஞ்சலை பற்றி சொன்னாலும், படிக்கிற நமக்கே இப்பிடி இருக்கே பாவம் பொன்னுனு பரிதாபப்பட வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு கடிதமும் ஏதோ சொல்றார்னு போகுது.

தான் எழுதும் நாவலை பகிர்கிறார். முக்கிய காட்சிகளை உரையாடுகிறார்.மழை குறித்த  செய்திகளை, சக நண்பனை இறப்பு குறித்து ஒவ்வொன்றையும் பகிர்கிறார்.

இறுதயாக மகள் எழுதும் ஒரே மின்னஞ்சல் இப்புத்தகத்தின் இறுதியில் வருகிறது. ஆரம்பத்தில் இருந்து தொடங்கிய கேள்விகள் அனைத்திற்கும் விடையாக அமைகிறது.

ஆண்குறி, புணர்வு, பெண் குறித்த வர்ணனைகள ஓவர் டோஸாக உள்ளது.

*மழை மனதில் பல திறப்புகளை உண்டாக்குகிறது

*பைத்தியங்கள் பிறப்பதும் தெரிவதுமில்லை, இறப்பதும் திறப்பதுமில்லை

*வார்த்தைகள் அவளை எனக்கு வெளிப்படுத்திவிட ஒன்றையொன்று முட்டிக்கொண்டு மூச்சு திணறுகின்றன
 
பெயர்" என்பது ஒரு குறியீடாக முன்வைக்கப்படுகிறது.
நினைவுகளின் பயணம்
கதாபாத்திரங்களின் கடந்தகால அனுபவங்கள், மறக்கப்பட்ட சம்பவங்கள், மன உளைச்சல்கள் ஆகியவை நினைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன.அடையாளத்தை இழந்த மனிதனின் உளவியல் போராட்டமாக நாவல் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கடந்த கால இழிவுகள், பெருமிதங்கள் ஒரு போதும் நிகழ்காலப் பசியைப் போக்கி விடுபவையலல","வாழ்வின் ரகசிய முடிச்சுகள் ஏதோ ஒரு எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது""-பவா செல்லதுரை

40


#reading_marathon2026 
#26RM009

Book No:40/150+
Pages:-272

பூமியெங்கும் புத்தக வாசம்
-மு.முருகேஷ்

"நேர்காணல் என்பது கேள்வி–பதில் நிகழ்வு மட்டுமல்ல; ஒரு மனிதனின் திறமை, ஆளுமை, மனப்பான்மை ஆகியவற்றை அறிய உதவும் கண்ணாடியாகும்."அந்த வகையில் தி இந்து உதவி ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷ் அவர்களின் ஆளுமை நேர்காணல்களும் புத்தகம் குறித்த பிரபலங்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.

சரியான கேள்விகள், சரியான மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன.'வாழ்க்கைங்கிறது எப்பவுமே யதார்த்ததிலிருந்து தானே புனைப்படும். அங்கிருந்து பூக்கும் விஷயம் தான் சரியானது என பூமணி சொல்கிறார்.தனது சேமிப்பிலிருந்த 16 இலட்சத்தில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் அறக்கட்டளையில் 540 ஆவணங்களை தொகுத்த மணவை முஸ்தபாவின் முயற்சி பாராட்டும்படி இருந்தது.

தொழிலதிபர்கள், கைவினை கலைஞர்கள்,தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மாற்றுத் திறனாளிகள், அனைவரின்பேட்டியும் முன் மாதிரியாக இருந்தது.

நீர் நாய் ஆர்வலர்களின் பேட்டி ஆச்சர்யமாய் இருந்தது. பார்வையற்றவர்களின் பாதையில் நம்பிக்கை ஒளி ஏற்றும் பேராசிரியர் ரகுராமன். ஓய்வுபெற்ற போக்குவர்த்து துறை அலுவலர் பழனியப்பன் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அதில் சில விஷயங்களை சொல்கிறார்.ஓட்டுநர்கள் பசியுடன் வாகனம் இயக்க கூடாது, தூக்கமின்மை, மிகுந்த மன அழுத்தத்தில் வாகனம் இயக்காமை என்கிறார்.இரட்டை மலை சீனிவாசனின். வரலாற்றை எழுதிய அவரின் கொள்ளுப்பேத்தி நிர்மலா அருள்பிரகஷின் பேட்டி தாத்தாவின் வரலாற்றை அறிய உதவியது.

நேர்காணலில் முதல் பதில் முக்கியமல்ல; ஒவ்வொரு பதிலிலும் வெளிப்படும் நேர்மையே முக்கியம்.
கரிசல் காட்டு உழைப்பாளிகளின் வாழ்வை அசலாக பதிவு செய்த தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவஞ்சலியில் அவர்குறித்த செய்தியை அறிய முடிந்தது.

நேர்காணல் சிந்தனையையும் செயல்பாட்டையும் மதிப்பிடும்.. அவ்வகையில் பிரபல வாசிக்கும் அரசியல் தலைவர்களின் வாசிப்புபனுவத்தை பகிர வைத்துள்ளார். சீமானின் வாசிப்புக்கு சுப.வீ, மணிவண்ணன் போன்றோர் உந்து சக்தியாக விளங்கியதையும் தன்னை செதுக்கிய தாய்,  தமிழர் மீதான பண்பாட்டு படையெடுப்புகள், அசுரன், மெளனத்தின் சாட்சிகள் ஆகிய நூல்களை குறிப்பிடுகிறார்.

புத்தக வாசிப்பை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.. மொழிப்பெயர்ப்பு நூல் பிணந்தின்னிகள், நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை, குறிப்பிடுகிறார்.

ஒருநாளில் 3 மணி நேரம் நாளிதழ் படிக்க செலவிடுவதாக கி.வீரமணி குறிப்பிடுகிறார். சிறுவயதில் காண்டேகரின் புத்தகங்கள், பெரியாரின் தத்துவ விளக்கம் நூல்களையும் குறிப்பிடுகிறார்.

கேரளா கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலை பலர் குறிப்பிட்டதுபோல பார்த்திபனும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுஜாதாவின் எழுத்துககள் தன்னை பாதித்ததாக கூறியுள்ளார்.ஜெயந்தனின் பாவப்பட்ட மனிதர்கள் கதையை படமாக எடுக்க முயன்று முடியாமல் போனதையும் சொல்லியுள்ளார்.

வண்ணதாசனின் புத்தகமொன்று எல்லாவீட்டிலும் இருந்துவிட்டால், இந்த உலகின் பிரச்சினை என்பதே இருக்காதே என்கிறார் இயக்குநர் சசி லாசராவின் எழுத்துக்களை உள்வாங்கும் கர்வம் தனக்குள் வந்தத எண்ணி மகிழ்கிறார். 

/ ஒவ்வொரு துளிக்குள்ளும்
உறங்கிக் கிடக்கிறது
ஓராயிரம் துளிகள்/ எனும் கவித

 தனக்குள் எண்ணங்களை மூழ்கடிக்க வைத்ததாக தேவதச்சனின் கவிதையை சொல்கிறார்.

வானத்தைப் போலத்தான் புத்தக வாசிப்பும் விசாலமானது.ஒரு மனிதனால் எப்போதும் சிறு வட்டத்திற்குள் வாழமுடியும் ஆனால் புத்தகம் வாசிப்பவனுக்கு எல்லை இல்லை என்கிறார் பாக்யராஜ்.

"நல்ல நேர்காணல், சரியான நபரை மட்டுமல்ல; சரியான வாய்ப்பையும் உருவாக்குகிறது.ஒரு நேர்காணலின் வெற்றி, கேட்கப்படும் கேள்விகளில் அல்ல; பெறப்படும் உண்மையான பதில்களில் உள்ளது. ஒவ்வொரிவரின் பேட்டியிலும் அறிவை மட்டும் அளவிடாமல் அணுகுமுறையும் அளவிடப்படுகிறது 

 செயற்பாட்டாளர்களின் பேட்டிகள்
தொடர்புத் திறன்,பேசும் விதம், கருத்துகளை வெளிப்படுத்தும் திறன், தன்னம்பிக்கை போன்றவற்றை மதிப்பிட முடிகிறது.வாசிக்கும் நமக்கும் உத்வேகம் கொடுக்கிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

38


#Reading_Marathon2026
#26RM009
Book No:38/150+
Pages:-653

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 
சுந்தர ராமசாமி 

தமிழ் இலக்கியத்தில் குடும்பம், சமூகம், மனித உறவுகள் மற்றும் கால மாற்றங்களை ஆழமான உளவியல் பார்வையுடன் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதில் குழந்தைகளின் உலகம், பெண்களின் அனுபவங்கள், ஆண்களின் அதிகார மனப்பான்மை மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகளின் சிக்கல்கள் மிக இயல்பாக சித்தரிக்கப்படுகின்றன.

இந்த நாவல் ஒரு தனிப்பட்ட கதையை மட்டும் சொல்லுவதில்லை. மாறாக, ஒரு குடும்பத்தையும் அதன் வழியாக ஒரு சமூகத்தையும் வாசகன் முன் நிறுத்துகிறது. வயது, பாலினம், அதிகாரம், அன்பு, பொறுப்பு, ஆசை, ஏமாற்றம் போன்ற மனித வாழ்க்கையின் பல அடுக்குகள் இதில் வெளிப்படுகின்றன.

தாத்தாவின் கடனை அடைக்க கோட்டயம் செல்லும்.அப்பா எஸ்.ஆர் எஸ்க்கு அங்கேயே ஏஜென்சி தொழில் அமைகிறது.எஸ்.ஆர்.எஸ் லட்சுமி தம்பதியினரின் குழந்தைகள் மூத்தவள் ரமணி மற்றும் பாலு.கோட்டயத்தில் வசிக்கின்றனர். லட்சுமியின் தங்கை வள்ளி கல்வி பயில அங்கு வருகிறாள்.லட்சுமிக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அவர்களுக்கு உதவ இளம்விதவையான ஆனந்தம் அந்த வீட்டில் இருக்கிறாள்.

இதே குடும்பத்தில்  சாமு சீதையின் குழந்தைகளான லச்சம்,கோமு, பிஷாரடியின் குழந்தைகளான ஸ்ரீதரன்,அப்புக்குட்டன், சுகன் யா ஆகியோர் உள்ளனர். இதில் ஸ்ரீதரன் லண்டனில் ஐ.சி எஸ் படிக்க சென்று நாத்திகனாய் புரட்சிக்காரனாய் வருகிறான்.வள்ளியை திருமணம் செய்து வைக்கும் ஆசை நிராசையாகிறது. இவளின் தங்கை சுகன் யா தந்தைக்கும் த்மையனுக்கும்.உறவுப்பாலமாய் இருக்கிறாள்.

சேது அய்யரின் குடும்பத்தில் உள்ள வள்ளியுடன் ரமணிக்கு நல்ல தோழமை அமைகிறது.எஸ் ஆர் எஸ்ஸின் தங்கை பங்கஜாவின் வருகை சாதாரணமாய் குடும்பங்களில் நடக்கும் உரையாடல் போல் இருக்கிறது.

இந்த குடும்பங்களின் குழ்ந்தைகள், பெண்கள் பெரியவர்களுக்கு இடையேயான உரையாடலே நாவலாய் விரிகிறது.நாவல் ஒவ்வொரு அத்தியாத்திலும் உரையாடல் வழியே சென்று கொண்டே இருக்கிறது. இடம் வீடு குறித்த மையச்சரடு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது.

#குழந்தைகளின் உலகம்

பகல் தூக்கத்திலிருக்கும்
தந்தைக்கு பயந்த மகன்பாலுவின் பார்வையில் குழந்தைகள் உலகம் விரிகிறது. எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும்.பகல்.தூக்கத்தில்.பாலுவின் மன் உலகத்தில் வாழை தோப்பு விவரிக்கப்படுகிறது.ரமணியின் பார்வையில் படகுப் பயணம், பாடல் என கதை செல்கிறது. இவர்களின் உலகில்.குரியன் ஜானகி ஆகியோர் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறது.
ரமணி,பாலு, லச்சம்,வள்ளி ஆகியோரன் விளையாட்டுகள் அணுகுமுறைகள் படிக்கும் நம்மையும் குழந்தைகளின் உலகத்திற்கே கொண்டு செல்கிறது

இயல்பாய் நடக்கும் அன்றாட குழந்தைகள் உலகமான டீச்சர் விளையாட்டு, பாட்டுப் போட்டி, கடுதாசி போடுவது, சைக்கிள் ஓட்டுவது என உரையாடலின் வழியே அமைகிறது. குழந்தைகளின் உலகத்தில் பெற்றோர்கள் இருப்பதை சூழலும் அனுபவமும் உணர்த்துகிறது.

பாலு தன் ஆசிரியை எலிசபெத்தை வீட்டுக்கு அழைத்து வருவது, அப்பாவுடன் பாலு முரண்படும் இடங்கள் என பாலுவின் கதாபாத்திரம் நன்கு வடிமைத்திருப்பார் சு.ரா.
லச்சத்தின் இறப்பு நம்மை மனம் கனக்க வைக்கிறது.

மொட்டை பாலு என பட்டப்பெயர் குறித்து சொல்லபோது..ஒழுங்கா கூப்பிட்டா அன்பைக் காட்ட முடியுமா? இஷ்டத்தை பொறுத்துதான் எல்லாமே என்கிறாள் வள்ளி. எத்தனை நிதர்சன வார்த்தைகள்.வீட்டை விட்டு ஓடிப்போயிடலாமா என கேட்கையில் பசிக்குமா என்கிறாள்.பாலு அதற்கு தோசை காய்க்கிற மரம் இருக்காதா? என வெள்ளந்தியாக கேட்கிறான். பாலு தனது எலிசபெத் டீச்சரை வாஞ்சையோடு வீட்டுக்கு அழைத்து வந்து எல்லா பொருட்களையும் காட்டுகிறான்.

#பெண்கள்

லட்சுமிக்கு ஆஸ்துமா இருந்தாலும் கணவனின் சுயமுரண்களை அறியும் ஆளுமை மிக்கவள்.

மனைவி லட்சுமியின் சுபாவத்தை தனது அழகிய உவமையில் சு.ரா விளக்குகிறார்

/அவளுடனான அவருடைய பேச்சு
நாலு முழம் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் கன்றின் சுதந்திரம் போல் தான்.கன்று தும்பை அறுத்துக் கொள்ளும்போது அது எந்த திசை நோக்கிப் பாயும்?அது இலக்கணமற்ற சுதந்திரம்/ என்கிறார்.

நாவலில் வரும் இளம் விதவையான ஆனந்ததத்தை மணக்க விரும்பும் செல்லாப்பாவை பாராட்டுக்கின்றனர் எஸ்.ஆர் எஸ். தன் கணவன் சிறைக்கு சென்றாலும் தனி ஆளாக மன உறுதியுடன் இருக்கிறார் எலிசபெத் டீச்சர்.

ஏன் அழறேனு பாலு கேட்கும் போது ஆனந்தம் சொல்கிறாள்

அப்படி அழுதாத்தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும் என சொல்லி பெண்களின் அக உலகை விவரிக்கிறார்.

1939 களில் முற்போக்கு சிந்தனையாக வள்ளி மேற்படிப்பு படிக்க வள்ளி வருவது நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.

#ஆண்கள்

எஸ்.ஆர்.எஸ் உடன் விவாதிக்க வரும் கோவிந்தன் குட்டி, கருநாகப்புள்ளி ஆகியோரின் உரையாடல் தத்துவமயமானது.

இந்திய சமுதாயத்தில் புரட்சி என்பது
 சாத்தியமல்ல.சீர்திருத்தங்கள் வழியாக சிறுகசிறுகத்தான் சமூகம் மாறும். ஒரு சீர்திருத்தத்தை புகுத்தும் வரையிலம் சமூகம் வெடித்திவிடும் என்றநிலை ஏற்பட்டால் தான் அந்த சீர்திருத்தம் அமலாகும் என்கிறார். இந்திய மனம் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்கு தாவுமே தவிர கேள்வி கேட்கும் பகுத்தறிவை பார்க்காது என்கிறார்.

மேலும்.எதிர்காலம் என்பது இருட்டாகத்தான் இருக்கிறது. நம் அறிவில் சில வெளிச்சங்கள் தெரிந்தும் இருளின் திரை எல்லையற்றதாக விரிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்

எஸ்.ஆர்.எஸ் ஏஜென்சி தொழிலில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் கோட்டயத்தைவிட்டு வெளியேறுகிறார்.இனி கோட்டத்தை இருளை எப்படி பார்ப்பேன் என மனம் உடைகிறார்.ஊருக்கு திரும்புவதுடன் நாவல் நிறைவுறுகிறது.

வீடு பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது.பிரதான கதாபாத்திரமான எஸ்.ஆர் எஸ் கண்டிபான தந்தையாக வருகிறார்.

 /சிறிய விஷயங்களைப் பெரிதாகக் காட்டும் கண் அவருக்கு. அலங் கோலத்தைச் சிறிய அளவில் நுழையவிட்டால் அது பூதாகரமாகிப் பெருகி தன்னையே விழுங்கிவிடும் என்ற பயம். சுற்றிவரப் பார்த்து சதா கொதித்துக்கொண்டிருப்பது அவருடைய இயற்கையாகிவிட்டது. லட்சுமிக்கோ சகஜமாகவும் கலகலப்பாகவும் இருக்கவேண்டும் என்று ஆசை.ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை நீரைக் கசியாமல் வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தப் படுவது போல் ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் அதையும் மீறி விரல் இடுக்கில் ஈரம் கசிகிறது./
கோபமும் ஈரமும் எல்லைமீறி வழிவதாக குறிப்பிடுகிறார்.

/நினைவுகள் வயதான பின்பும் மழுங்காமல் கூராக இருக்கின்றன. நின்று நிலைக்க எவ்வளவு மழுங்கல் தேவைப்படுகிறது/

/எப்படிச் செயல்பட வேண்டும் என்பது பல சந்தர்ப்பங்களில் மனிதனுக்குத் தெரிவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிய வருகிறபோதும் பல சந்தர்ப்பங்களில் அவனால் அவற்றை அமுல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு உலோகம் உருகித் திரவ வடிவம் கொண்டிருக்கும்போது அதற்கு நாம் விரும்பும் வடிவம் தர முடியும். அது உருவம் பெற்று இறுகியபின் அதை மாற்ற முடியுமா?./

/எல்லாவற்றுக்கும் நம்மிடம் விடைகள் இருப்பதன் தீர்மானம் கற்பனையானது/

ஒவ்வொரு பாத்திரங்களும் முரண்பா
 முரண்பாடுகளுடனும் குறைகளுடனும் காட்டப்படுகிறார்கள்.
எளிய ஆழமான மொழிநடை பலம்.
மனித மன்ங்களின் அசைவுகளை துல்லியமாக காட்டுகிறது.

"குழந்தைகளின் பார்வையில் உலகம் புதிது; பெண்களின் பார்வையில் உலகம் பொறுப்பு; ஆண்களின் பார்வையில் உலகம் அதிகாரம். இந்த மூன்றின் சந்திப்பே மனித வாழ்க்கை."
என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 10 July 2026

ஷோபனா


ஒருவரின் reputation என்பதே முக்கியம். அதை உருவாக்கிவிட்டால் போதும். பிறகு அவரை நம்பியவர்கள் அவர் எத்தனை குற்றம் இழைத்தாலுமே தங்களின் அபிமானமோ சார்போ தவறு என்பதை ஏற்க மாட்டார்கள். தாங்கள் தவறு என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே அவர்களே அந்த ஒருவரின் பிம்பத்திற்காக , இமேஜிற்காக இறங்கிப்போராடுவார்கள். இங்கு சரி தவறு என்பதை விட அவரவர் அபிமானமும் சார்புமே ஒரு விஷயத்திற்கான சரி அல்லது தவறு என்னும் முடிவு நோக்கு அவர்களை நகர்த்துகிறது. ரெபுடேஷனை காப்பாற்றிக்கொண்டால் போதும். 

-ஷோபனா

மெளனம்.சம்மதமா


மெளனம் சம்மதமா
-ஷங்கர் பாபு

பேசாக்காரர்களைக் கண்டறிவது எப்படி? பார்க்க சாதுக்கள் போலத்தான் காணப்படுவார்கள். ஆனால், இப்படிப் பேசி ஆதங்கப்படுவார்கள்:

"தோணுச்சு..சரி.. போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்."

"வாய் வரைக்கும் வந்துச்சு, சரி, பொழைச்சுப்போன்னு விட்டுட்டேன்."

"எனக்குக் கேக்கத் தெரியாம இல்ல."

"அன்னைக்கே நாங்ககூட புழுங்கற மாதிரி கேட்டிருக்கணும், விட்டுட்டேன்."

"நுனிநாக்கு வரை வந்துச்சே!"

இவர்கள்தான் அந்தப் பேசாக்காரர்கள். அதாவது, நம்மில் 99% பேர்! இவர்கள், பேசுவதைப் பார்த்தால் குணக்குன்றுகள் போலத்தான் தோன்றும். ஆனால், சொல்லவில்லை, அதனால் நினைத்தபடி காட்சிகள் நடக்கவில்லை. நியாயம்தானே என்று பெருந்தன்மையாக இருப்பார்களா, என்ன!

அப்படிச் சொல்லி இருக்கலாமோ, இப்படிச் சொல்லி இருக்கலாமோ என்றெல்லாம் பரிதவிக்கத்தான் செய்வார்கள். ஆனால், சொல்ல நினைத்தபடி காட்சிகள் நடப்பதைத் தானே உள்ளுக்குள் விரும்புகிறோம். இது பேராசை இல்லையா?

சொல்லியிருக்க வேண்டிய விநாடி கடந்துவிட்டது. எனவே, அதைப்பொறுட்டி நடக்கும் சம்பவங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபட்சத்தில் இப்படித் தோன்றித்தான் செய்யும். "எனக்கு மட்டும் ஏன்?"

நுனிநாக்குவரை வந்துச்சே. ஏன் சொல்லவில்லை? உங்களின் 25,000 ஆவது வயதில்கூட அல்லது கலியுகம் முடியும் வரையும்கூட இந்த ஆதங்கம் தொடரும்!

பலரும் சொல்லாத வார்த்தைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலக் காட்சியை மனதில் மீண்டும் மீண்டும் ஓட்டி, கற்பனையில் சொல்ல நினைத்ததைச் சொல்லி காலம்கடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் சொல்லாததைப் புரிந்துகொண்டு நடக்கவும், அடுத்தவரைக் குற்றஞ்சொல்லவும் தலைப்படுகிறோம். மனுஷனா இவங்களாம்?

உச்சக்கட்டப் பேராசை ஒன்றும் இருக்கிறது.

"அவரே புரிஞ்சுக்குவார்னு நினைச்சேன்."

அதாவது, மனதுக்குள்ளேயே நினைப்பீர்கள், அதைக் கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டும்; சொல்லாமல் சொல்வார்கள், மனதுக்குள் கதறுவார்கள், கண்களால் சொல்வார்கள், கேட்பவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள், நீங்கள் சொல்லாததையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற! அதுவும் உங்கள் விருப்பப்படி!

நாம் எவ்வளவு பெரிய மொழி வளத்தைக் கொண்டிருக்கிறோம்! பேசுபவர்களைச் சிலாகிக்கிறோம். நாமும் மக்களுடன், நிறுவனப் பேச்சுகள், நேரில் என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறோம். ஆனால், சொல்ல வேண்டிய நேரத்தில், ஏனோ பேச்சுற்று நிற்கிறோம். நாம் மட்டும்தான் இப்படி என்று கவலைகொள்ள வேண்டாம். 12ஆம் நூற்றாண்டிலேயே பேசத் தெரியாத, 'ப்ரோ'க்களை நன்னூல்' என்னும் தன் இலக்கண நூலில் ஆராய்ந்திருக்கிறார் பவணந்தி முனிவர்.

அதாவது, "மட்டன் பிரியாணி உள்ளதா?" என்றால், "இல்லை" என்று சொல்லாமல், "பாகற்காய் பிரியாணி உள்ளது" என்றோ, "தயிர் சாதம் உள்ளது" என்றோதான் பதில் சொல்லி கடைக்காரர் டென்ஷன் படுத்துவார்.

கொஞ்சம் மார்க்கெட்டிங் உத்தி இதன் பின்னால் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், இல்லாத ஒன்றை இல்லை என்றே கூறாமலே, ஏன் சுற்றி வளைத்து இல்லை என்று கூற வேண்டும்? நேரடியாகப் பதில் சொல்வதில் என்ன பிரச்சினை?

நன்னூல் 8 வகைக் கேள்விகளில் மனிதன் 3க்கு மட்டும்தான் நேரடியான பதிலைச் சொல்வான் என்கிறது. அதாவது, 37.5% தான் நேரடியாகப் பதில் சொல்வான்; மீதி 62.5%, "பரோட்டா சாப்பிடுவாயா?" என்றால் "நான் விரதம்னு சொன்னேனா?" என்று குண்டக்க மண்டக்கத்தான் பதில் சொல்வான் என்கிறது.

நாகர்கோவில் நண்பன் ஒருவனிடம், "சாப்பிட்டாச்சா?" என்றாள், அவன், "மணி 2 ஆகுதுல்லா?" என்பான். அதாவது, மத்தியானம் 2 ஆகிறதாம். இன்னமுமா சாப்பிடாமல் இருப்பான் என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டுமாம். அடேய்!

இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசும் இயல்புடைய மனிதனுக்கு, பேச வேண்டியதைப் பேசும் நேரத்தில் தொண்டைக்குள்ளேயே வார்த்தைகள் சிக்கி நின்றுவிடுவது நகை முரண் ஒன்று. பேசிக்கொண்டே இருக்கிறோம் அல்லது பேசவே இல்லை அல்லது தேவையான நேரத்தில், தேவையான நேரத்தில் பேசுவதே இல்லை அல்லது சுற்றி வளைத்துப் பேசுகிறோம். அதில் திறமை காட்டுகிறோம்!

பாஸ், இப்போது உலகம் நாளொரு 'ஏஐ', பொழுதொரு 'ஆப்' என்றாகிவிட்டது. நீங்கள் சுற்றிவளைத்துப் பேசுவதையும், சொல்லில் விளையாடுவதையும் புரிந்துகொள்ள யாருக்கும், இப்போதெல்லாம் நேரமில்லை. தெளிவாகச் சொன்னாலே அவரவர் இஷ்டத்துக்குப் புரிந்து கொள்ளும் உலகம் இது. நீங்கள் என்னைச் சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கே சில நேரம் சரியாகத் தெரியாதபோது, அடுத்தவரிடம் ஏன் அந்தப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்?

சொல்லி வாய்ப்புகளை இழந்தவர்களைவிட, சொல்லாமல், தயக்கத்தால், வாய்ப்புகளை இழந்தவர்கள் கோடி. அதையே நினைத்து இன்றுவரை ஆதங்கப்படுபவர் கோடானுகோடி.

தீர்வு:
நினைத்ததை வெளிப்படுத்தாமல் அந்தச் செயல் பூர்த்தியடையாது. உங்களுக்காகவும், உங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் நீங்கள்தான் பேசியாக வேண்டும். ஒருவேளை, நேரடியாகச் சொல்லி, அதனால் கேட்பவர் மனம் புண்படும் என்றால், அப்படிப் பயந்து வாழும் அளவு, அந்த உறவின் தேவைதான் என்ன?

நீங்கள் சொல்லி, அது எதிர்பார்த்த மாதிரி நடக்காவிட்டாலும், சொல்லிவிட்டோம் என்பதே நிம்மதியைத் தந்து, பிற்கால டென்ஷன் மாத்திரைகளைக் குறைக்கும். நேரடியான பதில்களும் வெளிப்படையான மனமும் விரும்பப்படும் காலம் இது. வெளிப்படுத்துங்கள், அடுத்தவர் வெளிப்படுத்தினால் அதையும் மதியுங்கள்.

சொல்லாமலே தெரிய வேண்டியது, சொல்லிய பின் தெரியப்போகிறது; மௌனம் சம்மதம் என்பது போன்ற வசனங்கள் எல்லாம் அந்தந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள கண்டறியப்பட்ட சாதூர்ய வார்த்தைகள். மௌனம் சம்மதம் அல்ல, சம்மதம் என்றால் மட்டுமே சம்மதம்!

நன்றி தி இந்து

Thursday, 9 July 2026

படித்தது


வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள்

ஏமாற்றுவது ஒரு கௌரவமாகக் கருதப்படும் ஒரு விளையாட்டில், ஒருபோதும் நேர்மையாக விளையாடாதீர்கள்.

விலங்கு உலகில், சிங்கத்திற்கும் கழுதைப்புலிகளுக்கும் (hyenas) இடையிலான அந்தத் தொடர் போராட்டம் போல, வாழ்க்கையின் எதார்த்தத்தை மிகத் தெளிவாக உணர்த்தும் மோதல்கள் மிகக் குறைவு.

சிங்கம் என்பது வலிமை, துணிச்சல் மற்றும் கம்பீரத்தின் அடையாளம். கழுதைப்புலிகள் என்பவை தந்திரம், எண்ணிக்கை பலம் மற்றும் சந்தர்ப்பவாதத்தை மட்டுமே நம்பியிருப்பவை. இந்த இரு சக்திகளும் மோதும்போது, ​​அது ஒருபோதும் சமமான போட்டியாக இருப்பதில்லை.

சிங்கம் கூட்டமாகச் சென்று வேட்டையாடுவதில்லை. அது மற்றொன்று கொன்ற இரையைத் திருடுவதில்லை. அது தனது உணவை வீரத்துடனும் வலிமையுடனும் போராடிப் பெறுகிறது.

ஆனால் கழுதைப்புலி?
அது சிங்கத்தைச் சோர்வடையச் செய்கிறது.
கவனத்தைத் திசைதிருப்புகிறது.
மறைந்திருந்து தாக்குகிறது.
பின்புறமிருந்து தாக்குகிறது.

சிங்கம் காயமடையும்போது, ​​அந்தக் கூட்டமே அங்கு வருகிறது; சவாலை எதிர்கொள்ள அல்ல, அந்த இரையைப் பறித்துக்கொள்ளும் வெற்றியை அனுபவிக்கவே அவை வருகின்றன.

கழுதைப்புலி விதிகளை மதிப்பதில்லை; ஏனெனில் அதன் உலகில் ஏமாற்றுவது கொண்டாடப்படுகிறது. வேட்டையாடப்பட்ட இரையைத் திருடுவது அவமானமாகக் கருதப்படுவதில்லை, மாறாக அது பாராட்டப்படுகிறது. கூட்டமாகச் சேர்ந்து காட்டும் கோழைத்தனம் 'தந்திரம்' என்று அழைக்கப்படுகிறது. துரோகம் என்பது பிழைத்திருப்பதற்கான வழியாகக் கருதப்படுகிறது.

கழுதைப்புலிகளின் கலாச்சாரத்திலும் உலகிலும், ஏமாற்றுவது ஒரு கௌரவமாகக் கருதப்படுகிறது.

இது நமக்கு என்ன கற்றுத்தருகிறது?

வாழ்க்கை எப்போதும் நியாயமான ஒரு விளையாட்டு மைதானம் அல்ல. நேர்மை கேலி செய்யப்படும், நாணயம் தண்டிக்கப்படும், மற்றும் வஞ்சகம் வெகுமதி பெறும் சூழல்கள் வாழ்க்கையில் உண்டு.

அத்தகைய சூழலில் நீங்கள் நேர்மையாக விளையாடத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் தோற்கலாம், அல்லது உயிரோடு விழுங்கப்படலாம், அல்லது பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.

சிங்கம் நமக்குச் சில கடுமையான உண்மைகளைக் கற்றுத்தருகிறது:

1. உங்கள் சூழலை அறிந்துகொள்ளுங்கள்
சிங்கம் கண்மூடித்தனமாக ஒரு பொறிக்குள் நுழைவதில்லை. அது நிலப்பரப்பு, காற்று மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஆபத்து ஆகியவற்றை நன்கு ஆராய்கிறது.
வாழ்க்கையில், நீங்கள் எந்த வகையான விளையாட்டில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே ஞானம் தொடங்குகிறது.

2. வலிமை மட்டும் போதாது
சிங்கம் வலிமையானதாக இருக்கலாம், ஆனால் அதுவும் தந்திரோபாயத்துடன் போராட வேண்டும். தந்திரோபாயம் இல்லாத வலிமை வீணான வலிமையே.

3. அவர்களின் பாணியில் ஒருபோதும் போராடாதீர்கள்
சிங்கம் ஒருபோதும் கழுதைப்புலியாக மாறுவதில்லை. அது சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் ஒருபோதும் தனது இயல்பைக் குறைத்துக்கொள்வதில்லை. நீங்கள் வெறுக்கும் ஒருவராக மாறாமலேயே தந்திரோபாயத்துடன் செயல்பட முடியும்.

4. உங்கள் வெற்றியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
வேட்டையாடி முடித்த பிறகுதான் உண்மையான போராட்டம் தொடங்குகிறது என்பதை சிங்கம் அறியும். உங்கள் வெற்றியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சந்தர்ப்பவாதிகள் எப்போதும் அதைக் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

5. உங்கள் போர்களைத் தேர்ந்தெடுங்கள்
சில நேரங்களில், அங்கிருந்து விலகிச் சென்று, உண்மையிலேயே முக்கியமான ஒரு போருக்காக உங்கள் வலிமையைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். கழுதைப்புலிகள் நிறைந்த உலகில், மௌனம் ஒரு உத்தியாக அமையலாம்.

மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது, கோரப்பட வேண்டியது அல்ல.

துரோகத்தால் பயனடைபவர்களின் துரோகத்தைக் கண்டு ஆச்சரியப்படாதீர்கள்.

ஒரு சிங்கம் இரத்தம் சிந்தலாம், ஆனால் அது அங்கீகாரத்திற்காக யாசிக்காது.

ஒற்றுமையின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள், ஆனால் அது சரியான பெருமையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிங்கம் எப்போதும் காட்டின் ராஜாவாக இருக்கும், ஆனால் ராஜாக்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.

ஏமாற்றுதல் கொண்டாடப்படும்போது, ​​நேர்மை ஒரு பலவீனமாகிறது.

வாழ்க்கை நேர்மைக்கு வெகுமதி அளிப்பதில்லை. அது உயிர்வாழ்தல், உத்தி மற்றும் ஞானத்துடன் கூடிய வலிமைக்கு வெகுமதி அளிக்கிறது.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

-படித்தது

இந்த மனதோடுதான்வாழ வேண்டி இருக்கிறது.இந்த மனதுதான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.~ ராஜா சந்திரசேகர் ~

Wednesday, 8 July 2026

படித்தது


ஒரு ஜப்பானிய துறவி சொன்னார்... இதை படித்தால் உங்கள் வாழ்க்கை இன்றிலிருந்தே மாறும்

உலகில் பலர் வெற்றியை தேடுகிறார்கள். சந்தோஷத்தை தேடுகிறார்கள். அமைதியை தேடுகிறார்கள். ஆனால் தேடும் இடத்தில் கிடைப்பதில்லை. ஏனென்றால் தேடும் திசை தவறாக இருக்கிறது. 

நூற்றாண்டுகளாக ஞானிகள் சொல்லிவந்த இந்த 5 உண்மைகளை இன்று நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள்.

1. கவலை என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை கட்டுப்படுத்த நினைப்பதால் வருகிறது

இன்று உங்களுக்கு என்ன கவலை இருக்கிறது?
நாளை என்ன ஆகுமோ என்ற கவலையா? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையா? வேலை இருக்குமா என்ற கவலையா? பிள்ளைகள் சரியாக வளருவார்களா என்ற கவலையா?
இந்த கவலைகளில் எத்தனை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று யோசியுங்கள்.

நாளை என்ன ஆகும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இயற்கை என்ன செய்யும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தும் நாம் இந்த விஷயங்களுக்காக இரவும் பகலும் கவலைப்படுகிறோம். தூக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு கிடக்கிறோம்.
ஒரு எளிய உண்மை இருக்கிறது. நம் கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டும் கவனிக்கலாம். கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை விட்டுவிடலாம். இந்த ஒரு பழக்கம் மட்டும் போதும். கவலை பாதியாகும். வாழ்க்கை இலகுவாகும்.

2. மௌனம் என்பது வெறுமை அல்ல. அது ஆழமான சிந்தனை தொடங்கும் இடம்
நாம் எப்போதும் சத்தத்தில் வாழுகிறோம்.

காலையில் எழுந்தவுடன் தொலைபேசி. வேலையில் கூட்டங்கள். வீட்டில் தொலைக்காட்சி. படுக்கையிலும் காதில் ஒலிகள். மௌனம் என்பது நமக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் மௌனத்தில் நம் மனசு நம்மோடு பேசத் தொடங்குகிறது. அந்த பேச்சை கேட்க நாம் தயாராக இல்லை.

ஆனால் உண்மையான ஞானம் சத்தத்தில் பிறப்பதில்லை. மௌனத்தில் பிறக்கிறது. உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் மௌனத்தில் நடந்தவை. மிகப்பெரிய முடிவுகள் எல்லாம் மௌனத்தில் எடுக்கப்பட்டவை. மிகப்பெரிய புரிதல்கள் எல்லாம் மௌனத்தில் வந்தவை.

இன்று ஒரே ஒரு காரியம் செய்யுங்கள். பத்து நிமிடம் எந்த சத்தமும் இல்லாமல் அமருங்கள். தொலைபேசி வேண்டாம். தொலைக்காட்சி வேண்டாம். வெறும் மௌனம். அந்த பத்து நிமிடம் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பதில்கள் அங்கே இருக்கின்றன.

3. ஒழுக்கம் முதலில் கஷ்டமாக இருக்கும். ஆனால் வருத்தம் இன்னும் நீண்ட காலம் இருக்கும்
இரண்டு வலிகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒழுக்கத்தின் வலி. அல்லது வருத்தத்தின் வலி.

ஒழுக்கத்தின் வலி தற்காலிகமானது. காலை நான்கு மணிக்கு எழுவது கஷ்டமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது கஷ்டமாக இருக்கும். படிப்பதற்காக நேரம் ஒதுக்குவது கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த கஷ்டங்கள் காலப்போக்கில் பழக்கமாகும். பழக்கம் வாழ்க்கையாகும்.
வருத்தத்தின் வலி நிரந்தரமானது. படிக்காமல் போனதற்கான வருத்தம். உடல் நலனை கவனிக்காமல் போனதற்கான வருத்தம். நேரத்தை வீணாக்கியதற்கான வருத்தம். உறவுகளை கவனிக்காமல் போனதற்கான வருத்தம். இந்த வருத்தங்கள் வாழ்க்கையின் இறுதி வரை துரத்தும்.

இன்றே தேர்ந்தெடுங்கள். ஒழுக்கத்தின் சின்னச்சின்ன கஷ்டங்களை. வருத்தத்தின் பெரிய வலியை தவிர்க்க.

4. குறைவாக விரும்புவது அதிகமாக சம்பாதிப்பதை விட அதிகமான இடத்தை தருகிறது
இந்த உலகம் நமக்கு ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறது.
அதிகமாக சம்பாதியுங்கள். அதிகமாக வாங்குங்கள். அதிகமாக இருங்கள். அப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? அதிகமாக சம்பாதிக்க அதிகமாக உழைக்கிறோம். அதிகமாக உழைக்க அதிகமாக அழுத்தம் வருகிறது. அதிகமாக வாங்க அதிகமாக கடன் வருகிறது. அதிகமாக இருக்க அதிகமாக போட்டி வருகிறது. இதன் முடிவில் என்ன இருக்கிறது? அமைதியில்லாத வாழ்க்கை.

குறைவாக விரும்பினால் என்ன நடக்கும்? தேவையற்ற ஓட்டம் நிற்கும். தேவையற்ற கடன் வராது. தேவையற்ற போட்டி தேவையில்லை. மனதில் இடம் வரும். வாழ்க்கையில் நிம்மதி வரும்.
மகிழ்ச்சி அதிகமாக சேர்ப்பதில் இல்லை. தேவையற்றதை கழிப்பதில் இருக்கிறது.

5. அமைதி தினசரி நடத்தையால் கட்டப்படுகிறது. திடீர் உணர்வுகளால் அல்ல
ஒரு கோயில் ஒரே நாளில் கட்டப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல் சேர்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோயில் உருவாகிறது.

அமைதியும் அப்படித்தான். ஒரு நாள் தியானம் செய்தால் வாழ்க்கை மாறாது. ஒரு நாள் நல்லதாக இருந்தால் போதாது. ஒரு நாள் கோபப்படாமல் இருந்தால் அது பழக்கமாகாது.

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக. தினமும் ஒரு நல்ல பழக்கம். தினமும் ஒரு நல்ல செயல். தினமும் ஒரு அமைதியான தருணம். இந்த தினசரி சின்னச்சின்ன செயல்களே மாதங்கள் கழித்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும்.

திடீரென்று ஒருநாள் தூக்கத்திலிருந்து எழுந்து வாழ்க்கை மாறியிருக்காது. மாற்றம் தினசரி நடத்தையில் இருக்கிறது. சின்னச்சின்ன தேர்வுகளில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகளில் இருக்கிறது.

இந்த 5 உண்மைகளும் நமக்கு ஒரே ஒரு செய்தி சொல்கின்றன
வாழ்க்கை வெளியில் இல்லை. உள்ளில் இருக்கிறது. கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை விடுங்கள். மௌனத்தை நேசியுங்கள். ஒழுக்கத்தை தேர்ந்தெடுங்கள். குறைவில் மகிழுங்கள். தினமும் கட்டுங்கள்.
இந்த ஐந்து பழக்கங்கள் மட்டும் போதும். வாழ்க்கை இன்றிலிருந்தே மாற தொடங்கும்.

இந்த 5 பாடங்களில் இன்று உங்களுக்கு மிகவும் தேவையானது எது? கீழே உங்கள் எண்ணங்களை பகிருங்கள். இதை படிக்க வேண்டிய யாரோ ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறார்களா? இப்போதே அவர்களுக்கு அனுப்புங்கள். ஒரு நல்ல வார்த்தை ஒரு வாழ்க்கையை மாற்றலாம்.

படித்ததில்பிடித்தது
#motivation #thoughtschallenge #thoughtoftheday

Monday, 6 July 2026

அடிக்கடி நேர்ந்து வழக்கமாகிவிடும்போது அனுபவங்கள் தனது அற்புத தன்மையை இழந்துவிடுகின்றன-உமா மகேஸ்வரி

ஹெரால்ட் ப்ளூமின்


ஹெரால்ட் ப்ளூமின் இலக்கிய வாசிப்பின் ஐந்து முக்கிய விதிகள் பற்றிய கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் எந்தவொரு இலக்கிய வாசிப்பையும் ஒரு தனிப்பட்ட, படைப்பாற்றல் மிக்க, ஆழமான அனுபவம் என்றே வரையறுக்கிறார். அதற்காக அவர் எடுத்தியம்பும் ஐந்து முக்கியமான விதிகளைத் தொகுத்துப் படிக்கும் போது நமக்கு வாசிப்பின் நுண்ணிய சூத்திரங்கள் கொஞ்சம் பிடிபடுகின்றன.

1.  Clear your mind of cant: மனதை cant எனப்படும் ஒன்றுமில்லாத, புனிதமான, கோட்பாட்டுகளின் மற்றும் கல்விப்புலங்களின் சொற்களஞ்சியத்திலிருந்து அகற்றுவதை ப்ளூம் முன்வைக்கிறார்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியை இருத்தலியல், பல்கலைக்கழகம் சார்ந்த அடைப்புக்குறிக்குள் அடக்கி வாசிக்க வேண்டாம். தஸ்தயேவ்ஸ்கி நம்முடைய  வாழ்க்கையில் எப்படியாக ஒத்துப்போகிறார் என்றே வாசிக்க  வேண்டும் என்றே நான் இதைப் புரிந்து கொள்கிறேன்.)

2.  வாசிப்பில் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்:வாசிப்பு என்பது சமூக சீர்திருத்தக் கருவி அல்ல. அது முதலில் உங்களை மாற்ற வேண்டும். மற்றவர்களை மாற்ற நினைத்தால், அது பாசாங்காக மாறிவிடும். உண்மையான மாற்றம் உங்களிடமிருந்து தான் தொடங்குகிறது என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது, இந்த நாவல் ரஷ்ய சமூகத்தையே மாற்ற வேண்டும் என்றெல்லாம் சிந்தனை செய்யாமல், நாவலில் வரும் இவானின் கடவுள் மறுப்பு நம்முடைய தனிப்பட்ட உள்ளார்ந்த சந்தேகங்களை எப்படி பிரதிபலிக்கிறது போன்ற கேள்வியை எழுப்பினால், அக்கேள்வியுடனான அந்த வாசிப்புக்கு பிறக்கும் மாற்றம் இயல்பாகவே நமது வாழ்வின் சுற்றத்தைப் பாதிக்கும் என்றே இதை நான் புரிந்து கொள்கிறேன்.)

3.  உங்களுக்கு நெருக்கமானவற்றைத் தேடுங்கள்:
ஒவ்வொரு வாசகருக்கும் தனிப்பட்ட தொடர்ச்சியான இணைப்பு வாசிப்புள்ளது. அந்த இணைப்பைத் தொடர்ந்து வாசிப்பில் தேடுவதே எந்தவொரு வாசகனுக்கும் பயனளிக்கும். ஒரே இயல்பை பகிர்ந்துகொள்வதைப் போல உங்களை அணுகும் நூல்களைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியா டால்ஸ்டாய்யா என்கிற கேள்வி உங்கள் முன் வெளிப்படும் போது நீங்கள் உங்கள் வாசிப்பின் தொடர்ச்சியான இணைப்பு வழியே அச்சமின்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், தேவையற்ற புத்தகங்களையும் வாசிக்காமல் நீங்கள் அச்சமின்றி அவற்றை தயக்கமின்றி கைகழுவலாம் என்றே இதையும் நான் புரிந்து கொள்கிறேன்.)

4.  படைப்பாற்றல் மிக்க வாசிப்பு:
உண்மையான வாசிப்பு என்பது சரியாகப் படிப்பது அல்ல. அது தவறாகப் படித்து, அதை உங்கள் சொந்த அனுபவத்துடன் இணைத்து, புதிய வாசிப்பனுபவத்தையும் உருவாக்குவது. இதைத்தான் ப்ளூம் படைப்பாற்றலுடன் தவறான வாசிப்பு என்றும் அழைக்கிறார்.

(படைப்பாற்றல் மிக்க தவறான வாசிப்பு என்பது வாசகரை அடிமையாக்கும் வாசிப்பு அல்ல; அவரை ஒரு படைப்பாளியாக உயர்த்தும் செயல்முறை. இது ஒரு கனவு போன்ற உரையாடல்,நீங்களும் புத்தகமும் சந்தித்து, புதிதாக ஒன்றைப் பிறப்பிக்கும் செயல் என்றே நான் இதையும் புரிந்து கொள்கிறேன்.)

5.  முரண்களை மீட்டெடுங்கள்:
இது ப்ளூமின் ஐந்தாவது மற்றும் கடைசி மற்றும் முக்கியமான பரிந்துரை. கோட்பாடுகளின் ஆழமற்ற வடிவங்கள் முரண்களை அழிக்கின்றன. அதை மீட்டெடுப்பது வாசிப்புக்கு அவசியம் என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது நாம் இவானை ஓர் அறிவுஜீவி, தர்க்கவாதி, கடவுள் மறுப்பாளன், மனித சுதந்திரம் மிகக் கொடூரமானது என்று கூறுகிறவன், குழந்தைகள் படும் வேதனைக்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறான்.அதே இவான் தன் தந்தை கரமசோவின் கொலைக்கு மறைமுகமாகப் பொறுப்பேற்கிறான். தன் சகோதரன் திமித்ரியை காப்பாற்ற முயல்கிறான், ஆனால் தன் உள்ளுணர்வில் தந்தையின் மரணத்தை விரும்பியவனாக இருக்கிறான். இறுதியில் பைத்தியக்காரனாக மாறுகிறான், அவனது அறிவு அவனையே அழிக்கிறது என்கிற ரீதியில்  எளிய வாசிப்பு வழியே இவானை நாத்திக அறிவுஜீவி என்று முத்திரை குத்திவிடுவோம் ஆனால் இவானின் முரண்பாடுகளை மீட்டெடுத்து வாசிக்கும் எவரும் இவானின் உள்ளார்ந்த முரண்பாடுகளை,அவனது அறிவின் பலமும், அதே அறிவின் கொடூரமும், ஒரே நேரத்தில் ஒன்றாக உணர்வார்கள். இதுவே ப்ளூம் சொல்லும் முரண்களை மீட்டெடுப்பது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.)

ஹெரால்ட் ப்ளூம் தஸ்தயேவ்ஸ்கியை அதிகம் உணர்ச்சிவயப்படும் மற்றும் ஆன்மீக தத்துவங்களை மிகைப்படுத்தல் செய்யும் மனிதர் என்கிற விமர்சனம் ஒன்றை முன்வைப்பார். இன்று அதே தஸ்தயேவ்ஸ்கியை வைத்தே ஹெரால்ட் ப்ளூம் அளித்திருக்கும் வாசிப்பின் ஐந்து வரையறைகளை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

சிறந்த வாசகர் என்பவர் புத்தகத்தை சரியாக வாசிப்பவர் அல்ல. அவர் புத்தகத்தை தனக்குச் சொந்தமாக தவறாகப் புரிந்துகொள்பவர் என்பார் ப்ளூம். நானும் எனக்கு ஏற்றவகையில் ப்ளூமின் கோட்பாடுகளையும் தவறாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். இதன் வழியே என் வாசிப்பும் இன்னும் ஒருவேளை மேம்படலாம்.

Sunday, 5 July 2026

36


காலச்சுமை
-ராஜ் கெளதமன்

சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ் என தனித்துவமான படைப்புகளைத் தந்த ராஜ் கெளதமனின் படைப்பு. இவரின் எழுத்துகள் எப்போதும் எளிமையானவை. சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

காலச்சுமை தலைப்பே வித்தியாசமாக இருந்தது.

"காலம் மனிதன் மீது சுமத்தும் பாரம்" என்பதைக் குறிக்கிறது. இந்த நாவல், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவு செய்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கிராமத்தில் படித்து முடித்து விட்டு.. வேலையின்றி இருக்கிறான் சிலுவை. திடீரென தந்தியில் பாண்டிச்சேரி கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வருகிறது. எப்போதோ விண்ணப்பித்தது.. ஆனால் தந்தி வந்ததை நினைத்து பார்க்கவில்லை. எப்படியோ எந்த ஒரு இலஞ்சமும் இன்றி பணியில் சேர்கிறான். தமிழ் விரிவிரையாளராகி காணும் காட்சிகளிலிருந்து நாவல் துவங்ககிறது.

பெற்றோர் சம்மதத்துடன் ஏர்வாடியில் பொன்னம்மாவை திருமணம் முடித்த சிலுவை..இரு பெண் குழந்தைகளை தந்தையானான்.ஆனால் காலக்கொடுமையாக இளையமகள் எதிர்பாராத விதமாக இறந்துவிட அந்த சோகம் அவனை அலைக்கழித்தது. அவனை ஆற்றுப்படுத்தியது தத்துவ நூல்களும் ,மொழிபெயர்ப்பு நூல் எழுத துவங்கியதுதான். வாசிப்பு, எழுத்து, வீடுமாற்றம், எமர்ஜென்சி  காலகட்டம் என செல்லும் நாவல் புதிதாக மாற்றலாகி சேரும் கல்லூரியில் சாதொ பிரச்சனையை எதிர்கொள்கிறான்.

அன்றாடம் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் சுவை. சிலுவைக்கு ஒரு சோதனையாக ஒருபெயர் அவிச்ச ராணி என உச்சரிக்க இருக்கும்
நிகழ்வு சுவை.எமர்ஜென்சி காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனால் நேரும் நடைமுறை இடர்பாடுகளை யதார்த்த நடையில் சொல்லியிருப்பார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஊர் குறித்த நினைவுகள்,மக்கள் மனநிலை, உடன் படித்த நண்பர்கள், சக ஊழியர்கள் குறித்த விவரணைகள் வருகின்றன.

கல்வி சிலுவைராஜுக்கு புதிய உலகத்தைத் திறக்கிறது. இருப்பினும், சமூகப் பாகுபாடுகள் தொடர்ந்து அவரைத் துரத்துகின்றன
நம்மில் ஒருவராக சிலுவை தெரிகிறார்.சிலுவைராஜ் சரித்திரத்தின் நீட்சியாக தெரிவாதால் சிலுவையின் குணநலன்கள் நமக்கு நன்கு அறிமுகமானவைதான்.

சிலுவை காரைக்காலிலிருந்து 
புதுச்சேரிக்கு மாறுதல் ஆகிறார்.பெரிய ஊர், புதிய இடம் அங்குள்ள ஆய்வாளர்கள் ,ஊழியர்ளகள் என அதே சாதிய பிரச்சினை.

/இயக்கங்கள் சீரழிவதற்கு காரணம் மனுசங்கதான். எல்லாம் மாறுவது மாதிரி மனுசங்களும் மாறிப்போறாங்க. இல்லநான், மாறல அப்பிடியே இருக்கேன்னு அடம்பிடிக்கிற மனுசங்க உண்டுதான்.பறவைகளை போல ஜாலியா இருக்க ஆசைதான். எல்லாரும் பறவைகளா இருந்தா இது நடக்கும்.ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு மாதிரி/ என் மனித இயல்பை பகிர்கிறார் ஒரு இடத்தில்

சிலுவையின் பரிணாமங்கள் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். சிலுவையின் பின்பாதி சரித்திரமாக நாவல் தொடர்கிறது.

சிலுவையின் மகளை கல்யாணம் செய்தும் கொடுத்தாயிற்று. ஓய்வு காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கிறான்.திரும்பி பார்த்தால் வாழ்வே காலத்திடம் சுமையாக உள்ளது.நாமே நம்மை பற்றி சிந்திப்பது போல உள்ளது.. காலச்சுமையை எங்ஙனம் கொண்டு இறக்கி வைப்பது. அவ்வாறு இறக்கி வைத்தால் அதுவே ஆன்ம விடுதலை போல எண்ண வைக்கிறார்.

சிலுவை என்பவர் அசகாய சூரன் அல்ல. அன்றாடம் நாம் பார்க்கும் எளிமையான் மனிதன். அவரிடம் பலவீனங்களும், குழப்பங்களும், ஏமாற்றங்களும் உள்ளன. அதுவே அவரை மிகவும் இயல்பான, நம்பகமான கதாபாத்திரமாக மாற்றுகிறது.சுற்றியுள்ள சூழல்கள் நம்மை சூழ்ந்துள்ள வாழ்க்கை முறை எவ்வாறு நம் மீது ஆதிக்கம செலுத்துகிறது. நாம் அதிலிருந்து  விடுதலை அடைவது எவ்வாறு என யோசிக்க வைக்கிறது.

காலம் என்பது நாட்களைக் கணக்கிடும் கருவி மட்டுமல்ல; தலைமுறைகளின் காயங்களையும் சுமக்கும் நினைவகமாகும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 30 June 2026

ஜானகிராம்

"The Sheep Detectives" திரைப்படத்தில்,

George Hardy தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில்,

கடைசியா எழுதின லெட்டர்ல உனக்கு எந்த Sheep Special nu கேட்டிருந்த..எனக்கு எல்லா 
Sheep um Special தான்!
அதனாலதான் ஒவ்வொருத்தருக்கும் நான் ஒரு பேர் வச்சிருக்கேன்!"

என்று ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அதன் குணத்தையும் சொல்லிக் கொண்டே வரும்பொழுது,

ஆனா, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் Extra Special என்று சொல்வார்! 

Sebestian - என் சிங்கக்குட்டி!
என்ன மாதிரியே தனிமையை தேடுவான்.. அவனுக்கு எப்ப அந்த மலைக்கு போகணும் தோணுதோ அப்ப போயிடுவான்..எப்ப திரும்பி வரணும் தோணுதோ அப்பதான் வருவான்!

அப்புறம் என் செல்ல குட்டி - Lilly! 
இங்க இருக்கிறதிலேயே ரொம்ப அறிவாளி! என் மனசுல எப்போ என்ன ஓடிட்டு இருக்குன்னு பாத்த உடனேயே கண்டுபிடிச்சுடுவா..
எல்லாரையும் விட இவளை பார்க்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாரு..அது ஒரு Shepherd க்கு தான் புரியும்!" 

என்று அந்த கடிதத்தை முடிப்பார் Geogre!

Lilly - George காதலித்த ஒரே ஒரு பெண் அவனின் மனைவி! அவள் பெயரைத்தான் அந்த ஆட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பான் George!

உண்மையில்,

நமக்கும் எவ்வளவு பேரை பிடித்திருந்தாலும் நம்மை பிரதிபலிக்கும் ஒருவரை 
நம் மௌனங்களை புரிந்து கொள்ளும் ஒருவரை 
அழுகை முட்டிக் கொண்டு வரும் பொழுது சொல்லாமலேயே நம் கைகளை பிடித்துக் கொள்ளும் ஒருவரை நாம் சோகமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு நம்மை புன்னகைக்க வைக்க மெனக்கெடும் ஒருவரை கொஞ்சம் அதிகம் பிடித்துப் போகிறது! அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறோம்!

இந்த உலகில் நாம் எல்லோரிடத்திலும் தேடுவது நம்மைத்தான்! 

நமக்கு பிடித்த பாடல்களை பிடிக்கும் என்று சொல்பவர்கள் அடுத்த நொடியே நமக்கும் பிடித்தவர்களாகி விடுகிறார்கள்! 

அந்தி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போது கீழ்வானில் பரவும் மஞ்சளும் ஆரஞ்சும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் அழகாக தெரிகிறார்கள்!

கடல் பிடிக்கும் என்று சொல்பவர்களையும் காலாற நடை பிடிக்கும் என்று சொல்பவர்களை பெயரைக் கூட கேட்காமல் பிடித்துப் போகிறது!

ஏனென்றால் அவர்களில் நாம் 
நம் சாயலை உணர்கிறோம்!

ஒருவரை எந்த மதிப்பீடும் செய்யாமல் அவர்களின் இயல்பில் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தான் உண்மையில் அழகு!

ஆனால்,அதில் நம்மின் ஒரு சிறு துளியை கண்டடையும்போது பேரழகாகிறார்கள்!

விக்னேஷ்


"The Sheep Detectives" திரைப்படத்தில்,

George Hardy தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில்,

கடைசியா எழுதின லெட்டர்ல உனக்கு எந்த Sheep Special nu கேட்டிருந்த..எனக்கு எல்லா 
Sheep um Special தான்!
அதனாலதான் ஒவ்வொருத்தருக்கும் நான் ஒரு பேர் வச்சிருக்கேன்!"

என்று ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அதன் குணத்தையும் சொல்லிக் கொண்டே வரும்பொழுது,

ஆனா, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் Extra Special என்று சொல்வார்! 

Sebestian - என் சிங்கக்குட்டி!
என்ன மாதிரியே தனிமையை தேடுவான்.. அவனுக்கு எப்ப அந்த மலைக்கு போகணும் தோணுதோ அப்ப போயிடுவான்..எப்ப திரும்பி வரணும் தோணுதோ அப்பதான் வருவான்!

அப்புறம் என் செல்ல குட்டி - Lilly! 
இங்க இருக்கிறதிலேயே ரொம்ப அறிவாளி! என் மனசுல எப்போ என்ன ஓடிட்டு இருக்குன்னு பாத்த உடனேயே கண்டுபிடிச்சுடுவா..
எல்லாரையும் விட இவளை பார்க்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாரு..அது ஒரு Shepherd க்கு தான் புரியும்!" 

என்று அந்த கடிதத்தை முடிப்பார் Geogre!

Lilly - George காதலித்த ஒரே ஒரு பெண் அவனின் மனைவி! அவள் பெயரைத்தான் அந்த ஆட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பான் George!

உண்மையில்,

நமக்கும் எவ்வளவு பேரை பிடித்திருந்தாலும் நம்மை பிரதிபலிக்கும் ஒருவரை 
நம் மௌனங்களை புரிந்து கொள்ளும் ஒருவரை 
அழுகை முட்டிக் கொண்டு வரும் பொழுது சொல்லாமலேயே நம் கைகளை பிடித்துக் கொள்ளும் ஒருவரை நாம் சோகமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு நம்மை புன்னகைக்க வைக்க மெனக்கெடும் ஒருவரை கொஞ்சம் அதிகம் பிடித்துப் போகிறது! அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறோம்!

இந்த உலகில் நாம் எல்லோரிடத்திலும் தேடுவது நம்மைத்தான்! 

நமக்கு பிடித்த பாடல்களை பிடிக்கும் என்று சொல்பவர்கள் அடுத்த நொடியே நமக்கும் பிடித்தவர்களாகி விடுகிறார்கள்! 

அந்தி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போது கீழ்வானில் பரவும் மஞ்சளும் ஆரஞ்சும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் அழகாக தெரிகிறார்கள்!

கடல் பிடிக்கும் என்று சொல்பவர்களையும் காலாற நடை பிடிக்கும் என்று சொல்பவர்களை பெயரைக் கூட கேட்காமல் பிடித்துப் போகிறது!

ஏனென்றால் அவர்களில் நாம் 
நம் சாயலை உணர்கிறோம்!

ஒருவரை எந்த மதிப்பீடும் செய்யாமல் அவர்களின் இயல்பில் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தான் உண்மையில் அழகு!

ஆனால்,அதில் நம்மின் ஒரு சிறு துளியை கண்டடையும்போது பேரழகாகிறார்கள்!

Monday, 29 June 2026

ஜானகிராம்


"வெளியே உள்ள உலகத்தை விட, 
உள்ளே இருக்கும் உலகம் பெரியது."

ரூமியின் இந்த ஆழ்ந்த தத்துவ வரிகள், மனிதனின் அக உலகம் மற்றும் புற உலகத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தையும், அக உலகத்தின் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றன. 

நாம் கண்களால் பார்க்கும் புற உலகம் முடிவற்றதாகத் தோன்றினாலும், அதை அறிவியல் மூலமும், பயணம் மூலமும் அளவிட முடியும். ஆனால், மனிதனின் அக உலகம் அதாவது நமது சிந்தனைகள், உணர்வுகள், கற்பனைகள், நினைவுகள் ஆகியவை எல்லைகளற்றது. அதை அளவிடவோ, எல்லை வகுக்கவோ முடியாது.

புற உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும், அக உலகிலிருந்து தான் உதிக்கின்றன. ஒரு சிற்பி ஒரு சிலையை வடிப்பதற்கு முன், அதைத் தனது மனதில் முதலில் உருவாக்குகிறான். எனவே, படைக்கும் திறன் கொண்ட அக உலகம், படைக்கப்பட்ட புற உலகை விடப் பெரியது.

புற உலகம் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும், சவால்களையும் தரும். ஆனால், உண்மையான அமைதியும், ஞானமும், ஆன்மீக விடுதலையும் அக உலகிற்குள் பயணிப்பதன் மூலமே கிடைக்கும். தியானம், சுய-ஆய்வு போன்றவை இந்த அக உலகத்தைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகள். 

புற உலகத்தை விட அக உலகம் பிரம்மாண்டமானது. எடுத்துக்காட்டாக நாம் உறங்கும்போது, ஒரு சிறிய அறைக்குள் இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் கனவில் நாம் பிரம்மாண்டமான மலைகளில் பறக்கலாம், அறியாத நாடுகளுக்குச் செல்லலாம், அல்லது காலங்களைக் கடந்து பயணிக்கலாம். ஒரு சிறிய மூளைக்குள் இவ்வளவு பெரிய உலகத்தை நாம் உருவாக்க முடிகிறது. 

அதே போல, நாம் நிகழ்காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிலாம். ஆனால், நம் மனம் கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டிப் பார்க்க முடியும், அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் காண முடியும். நாம் விரும்பும் எவரையும், எந்த இடத்தையும் நொடிப் பொழுதில் நம் நினைவில் கொண்டு வர முடியும்.

புற உலகத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு அல்லது ஒரு துயரமான நிகழ்வு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்கிறது. ஆனால், அந்த நிகழ்வு நம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சி அல்லது துயரம், பல ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம். வெளியே நடக்கும் சிறிய தூண்டுதல், மனதுக்கள் ஒரு பெரிய உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது.

ரூமியின் இந்த வரிகள், நம்மை நமக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றன. புற உலகைத் தேடி ஓடுவதை விட, நம் அக உலகைப் புரிந்துகொண்டு, அதை மேம்படுத்துவதே உண்மையான மகிழ்ச்சிக்கும், ஞானத்திற்கும் வழி என்பதை உணர்த்துகின்றன. 

நம் அக உலகம் நமக்குள் இருக்கும் பெரிய பிரபஞ்சமாகும். அதை புரிந்து கொள்ளும் போது, நாம் யார் என்பதையும், நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

🌸