Sunday, 22 February 2026

tea-20


#மனசுக்கு_ஒரு_தேநீர்_20

“நான் தெரிந்தவன்” என்று நினைக்கும் நொடியில் வளர்ச்சி நிற்கிறது;
“நான் கற்றுக்கொள்கிறேன்” என்று நினைக்கும் நொடியில் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த உண்மையை வாழ்க்கை தத்துவமாக மாற்றும் எண்ணமே Beginner’s Mindset.

இந்தக் கருத்தை ஜென் தத்துவத்தில் விளக்கியவர் Shunryu Suzuki, அவர் எழுதிய Zen Mind, Beginner’s Mind நூல் உலகளவில் இந்த மனப்பாங்கை பரப்பியது.

தொடக்க மனநிலை என்பது
தெரிந்த விஷயத்தையும் புதிய கண்களால் காணும் மனநிலை.
ஒரு குழந்தை உலகைப் பார்ப்பதை நினைத்துப் பாருங்கள்.
அதற்கு எல்லாமே புதிது, அதனால் எல்லாமே அதிசயம்.அதே ஆச்சரிய உணர்வை பெரியவர்களாக இருந்தாலும் இழக்காமல் வைத்திருப்பதே இந்த தத்துவம்.
எந்த ஒரு விஷயத்தையும் முன் முடிவுகளுடன் ஆராயமல் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது ஆகும்

இதனால் சலிப்பு குறைந்து புத்துணர்வு தருகிறது.பதிலை முன்பே யூகிக்காமல் அவர்கள் சொல்லும்வரை பொறுமை காப்பது,
முன்பே இதுதான் இக்கதை சொல்ல வருகிறது என யோசிக்காமல் முழுமையாக படிப்பது,சரி தவறுக்கு
 அப்பாற்பட்டு வேறொரு கோணத்தில் சிந்தித்து நல்லவற்றை எடுத்துக் கொளவது,சிறிய தருணங்களில் கூட உணர்வு பூர்வமாக செயல்படுவது, இவ்வாறு செய்வதால் பதட்டத்தை தணிக்கச் செய்யும்.

மனம் வெறுமையாக இருந்தால் எதற்கும் தயாராக இருக்கும்.
பிரச்சினைகள் வெளியுலகத்தில் இல்லை  மனதில்தான்.உண்மை உண்மையாக காண் என்கிறது.

ஒரு பணியாளர் “I know everything” என்றால் வளர்ச்சி முடியும்.
“I’m still learning” என்றால் உயர்வு தொடங்கும்.நாம் ஒருவரை முழுமையாக தெரிந்துவிட்டோம் என்று நினைத்தால் புரிதல் குறையும்.அவரை தினமும் புதிதாய் அறிய முயன்றால் அன்பு அதிகரிக்கும்.

தொடக்க மனநிலை என்பது அறியாமை அல்ல,அது உயர்ந்த அறிவின் அறிகுறி.எப்போதும் தொடக்க நிலை மாணவனாக இருப்பவன் தான் உண்மையான ஞானி.

மனம் சோர்வடைவது கற்றல் காரணமாக அல்ல;
கற்றலை நிறுத்துவதால்தான்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜா-31


வாழ்க்கைக்கு ஹைக்கூ: 31

"நாம் சந்தித்தோம், பின் பிரிந்தோம்;
இப்போது தூரிகையும் மையும் 
இட்ட சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"

- டைகு ரயோகன் (Daigu Ryokan)

இந்தக் கவிதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிக அழகாகப் பேசுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் தோன்றுவதும் (சந்திப்பு), மறைவதும் (பிரிவு) இயற்கையான சுழற்சி. எவருமே எப்போதும் கூடவே இருப்பதில்லை.

இங்கு 'தூரிகை மற்றும் மை' என்பது ஒரு கலைப்படைப்பையோ அல்லது நாம் விட்டுச் செல்லும் நினைவுகளையோ குறிக்கிறது. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் செய்த செயல்களும், அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகளுமே உலகத்தில் சாட்சிகளாக எஞ்சியிருக்கும்.

நாம் வாழும் காலத்தில் மற்றவர் இதயத்தில் அல்லது இந்த உலகில் எத்தகைய பாதிப்பை (சுவடுகள்) ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தச் சிறிய கவிதை மகிழ்ச்சியான வாழ்விற்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நிகழ்காலத்தில் வாழுதல்: சந்திப்புகளும் உறவுகளும் நிரந்தரமற்றவை என்று உணரும்போது, தற்போது நம்முடன் இருப்பவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளத் தோன்றும்.

 2. பற்றற்ற நிலை: 
பிரிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தால், இழப்புகளால் வரும் துயரம் குறையும்.

3. நல்ல சுவடுகளை ஏற்படுத்துதல்: "நான் போன பிறகு என்ன எஞ்சியிருக்கும்?" என்ற கேள்விக்கு விடையாக, ஒரு ஓவியமாகவோ, கவிதையாகவோ அல்லது ஒரு நல்ல செயலாகவோ பிறருக்குப் பயனுள்ள ஒன்றை விட்டுச் செல்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை உணரலாம்.

"வாழ்க்கை ஒரு தருணம்; அதில் நாம் தீட்டும் ஓவியம் (நல்ல செயல்கள்) மட்டுமே என்றும் நிலைக்கும்"

Saturday, 21 February 2026

கோ.கமலக்கண்ணன்


‘நீ தகுதி உள்ளவனா?’

அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். 

தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.

தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும். 

வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர். 

ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர். 

நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார். 

நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு. 

வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார். 

இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்! 

இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.

-கோ.கமலக்கண்ணன்

வெளியே முற்றத்தில் வெயில் அனாதையாய நின்று வதைத்து கொண்டிருந்தது.அது உறவு தேடி வீட்டுக்குள்ளும்வெக்கையாய் நுழைந்தது. அவன் வீட்டிலிருந்த மின்விசிறியால் வெக்கைக்காற்றை விரட்டியடிக்க முடியவில்லை.அதன் விசிறலிலும் வெக்கைக் காற்றே அனாயசமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது-அபிமானி(மஞ்சள் என்பது நிறமல்ல சிறுகதையில்)

Tuesday, 17 February 2026

tea-19


#மனசுக்கு_ஒரு_தேநீர்_19

புதிதாக நாம் ஒன்றை கற்க ஆரம்பித்து சில நாள்களிலேயே ஏன் நாம் கைவிட்டு விடுகிறோம்?

You lose because you focus on the outcome, not the"doing"

இப்படி செய்தால், அப்படி வரும்" என்று நமக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடியதை மட்டுமே குறி வைக்கிறோம். போக வேண்டிய பாதையை பற்றி இல்லை.
வெற்றியை பெற ஒரே ஒரு வழி தான். நிலையான முயற்சியுடன், ஒழுங்காக செய்வது தான்.

அமெரிக்க உளவியலாளர் கூறுகிறார்.. ஒரு பஃபே பந்தி உள்ளது.சிறந்த உணவுகள் உங்கள் முன்னே இருக்கின்றன.அங்கு செல்வதற்கு இரண்டு அடிகள் தான் உள்ளன.அதற்கு நாம் முதலில் வரிசையில் நிற்க வேண்டும். அதே வரிசையில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அந்த உணவினை நாமே சென்று தான் எடுக்க வேண்டும். யாரும் எடுத்து வர மாட்டார்கள் என நம்ப வேண்டும்.பக்கத்தில் உள்ள வரிசை வேகமாய் செல்வது போல் தோன்றும்.ஆனால் அங்கு செல்லாமல் நிற்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுடன் ஒரே இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

உன்னுடைய துறையில் நீ நிலைத்து நிற்கவும் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.புதுப்புது விசயங்களையும்,திறமையும் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.நீ தேக்கமடைந்து நின்றுவிட்டால் உன் பின்னால் உள்ளவர்கள் உன் அருகில் உள்ளது போல் இருப்பார்கள். ஆனால் சிறிது நேரத்தில் உனக்கு முன்னால் வெகு தூரத்தில் நிற்பார்கள். ஆகவே புதிய பழக்கத்தை வசமாக்க தொடர்ந்து அதனை செய்வதுதான் சாத்தியம்.

ஒரு புத்தகத்தை படிக்க 3 மாதங்கள் கூட ஆகலாம், பரவாயில்லை. உங்கள் அக்கறை தினமும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அது தினம் ஒரு பக்கமாக கூட இருக்கலாம். நிலையான முயற்சி இருக்க வேண்டும்.

ஒரு புதிய பழக்கம் ஒன்று பழக, அது
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.எளிதாக இருக்க வேண்டும்.அதை செய்யும் பொழுது உங்களுக்கு முழு திருப்தி கிடைக்க வேண்டும்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 16 February 2026

book-14


#Reading_Marathon2026
#26RM009

Book No:14/150+
Pages:-157

உருவாகும் உள்ளம்
-எஸ்.ராமச்சந்திரன்
தமிழில் ஆயிஷா இரா.நடராசன்

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் ஆசிரியர் கே.என் சிவராமன் அவர்கள் எஸ் ராமச்சந்திரன் எழுதி ஆயிஷா நடராசன் மொழி பெயர்த்த உருவாகும் உள்ளம் என்ற புத்தகத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அப்போதே தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதன் பின்பு எதேச்சையாக புத்தகத் திருவிழாவில் வாங்கியதுதான் இந்த புத்தகம். மருத்துவராகவும் ஆய்வு உளவியலாளராகவும் அழைக்கப்படும் ராமச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கின்ற போது நிகழ்த்திய பேருரைகள், அவர் எழுதிய கட்டுரைகள் என ஐந்து பகுதிகளாக இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.

மூளையைப் பற்றி படித்த புத்தகங்களில் தலைமைச் செயலகம், விகடன் வெளியிட்ட உச்சி முதல் பாதம் வரை புத்தகத்திற்கு பிறகு மூளையைப் பற்றி மிக எளிதாக அதில் உள் நடைபெறும் மாற்றங்கள் பற்றி நமக்கு எளிமையாக இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

இந்நூல் மனித மனம், சிந்தனை, உணர்ச்சி, நினைவு போன்றவை மூளையின் செயல்பாடுகளால் எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறது.
மனிதன் காட்சிகளை எவ்வாறு அறிந்துகொள்கிறான் என்பதை மூளையின் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் மூலம் விவரிக்கிறது

ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் மறந்துவிடும் நோய் வந்து விடுவது இயற்கை. மீண்டும் தலையில் அடித்தால் அந்த நோய் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் எனக்குத் தெரிந்து இதை உடைத்தது சேது படம் தான். தலையின் அடிபட்ட பின் சித்த வைத்தியம் மூலமாக நினைவுகளை மீட்டுக் கொணர்வது. இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தலையில் அடிபட்ட பின் அல்லது மூளையில் ஏதேனும் ஒரு இடத்தில் பழுதாகி விட்டால் முகக்குருடு என்று அழைக்கப்படும் அமைக்டாலா என்னும் அமைப்பு உள்ளது. இது உணர்வு மண்டலம் மையங்களுக்கு தொடர்பு கருவியாக உள்ளது எனவும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நினைவு மறதி உள்ளிட்ட தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் விரிவாக இதில் சொல்லியுள்ளார். மேலும் மூலையில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவாக இதில் சொல்லியிருப்பார்.

சிரிப்பு ஏன் வருகிறது?சாலையில் ஒருவர் விழுந்தவுடன் வரும் சிரிப்பு? எதனால் ஏன்? மூளை நரம்புகள் என்ன செய்கின்றன என்பதை காரணத்துடன் கூறுகிறார்.

பார்வையின் வழியே கவனிப்பதை மூளை எவ்வாறு கண்டுணர்கிறது? அப்போது எந்த நரம்பின் பங்குபெறுதலால் இது நடக்கிறது?
மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்?
மிரர் அக்நோசியா,மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நியூரான்களின் பெரிய பங்கு என இதற்கு அறிவியல் பூர்வ எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார்.

கலைத்திறன் கூறுகள் மனித மூளையில் உள்ளனவா? அதற்கு பேராசிரியர் 10 வித பொதுவிதிகளை முன் வைக்கிறார்.கேலிச்சித்திரங்கள்

சோழர் கால சிற்பங்கள் போன்றவற்றை விளக்கி புள்ளிகளை கோர்வையாக அணிப்படுத்தி உருவத்தை கண்டுபிடிக்கும் வேலையை மூளை செய்கிறது. பரிணாமம் அடைந்த பிறகு மூளையின் அதீத உந்துதலுடன் அவற்றை உணர்வது நேரடி காரணமாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.மேலும் மில்லர், ஸ்டீவ் பிங்கரின் கலை குறித்த கோட்பாட்டினை பொருத்திப் பார்க்கிறார்.

மனித மனத்தின் இயல்பை அறிவியல் கோணத்தில் புரிய வைக்கும் சிறந்த அறிவியல் அறிமுக நூல்.உணர்ச்சி உருவாகும் நரம்பியல் காரணங்கள்,மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்,டிஸ்லெக்சியா போன்ற கற்றல் கோளாறுகள் தொடர்பான ஆய்வுகள், சைனஸ்தீசியா நோய் குறித்தும் விளக்கியுள்ளார்  மூளை குறித்த வந்த புத்தகங்கள் பைபாஸ் ரோட்டில் செல்வது போல் இருக்கும்..இது மூளையை நரம்புகளுடன் இணைத்து கூறும்போது பைபாஸிலிருந்து ஊருக்குள் போய் வருவது போல நுண்ணிய பல பகுதிகளை விவரித்துள்ளார். இது அறிவியல் நூல் என்ற பயமே ஏற்படாமல் அழகிய எளிய தமிழில் ஆயிஷா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 15 February 2026

tea-18


#மனசுக்கு_ஒரு_தேநீர்_18

உலகின் பிரபலமான ஐந்து விதிகள். 

1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.

கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும். 

2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள்  என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள். 

எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும். 

3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே. 

யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல. 

4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும். 

அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை. 

5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 

தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.

நன்றி:ஷான்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 10 February 2026

எல்லாத் துயரத்திற்கும் முன்பாக அதன் வேர்க் கிழங்காக ஓர் இன்பம் ஒளிந்திருக்கும். துயரங்கள் காலத்தின் வெளிச்சத்தில் கருகி வீழ்பவை. வேர்க் கிழங்குகள் ஒருபோதும் அழிவதில்லை. மண்ணுக்குக் கீழே அவை உறங்கிக்கொண்டே இருக்கின்றன. -திருச்செந்தாழை

tea-17


#மனசுக்கு_ஒரு_தேநீர்_17

இன்றைய சமூக ஊடக காலத்தில் மனிதனின் பங்கு அளப்பரியது. கவனம் மிகப் பெரிய நாணயமாக மாறியுள்ளது. அந்தக் கவனத்தைப் பிடிக்க சிலர் அன்பையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்; இன்னும் சிலர் கோபத்தை. கோபத்தைத் தூண்டி, அதன்மூலம் பார்வை, பகிர்வு, விவாதம் ஆகியவற்றைப் பெருக்கும் யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

2015ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் தான் Rage bait.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் எனலாம். 

மக்களை உண்மையைச் சிந்திக்க வைப்பதற்காக அல்லாமல்
அவர்களை உடனடி கோபத்திற்கு தள்ளுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.உணர்ச்சி வசப்பதிவுகள், பாதி உண்மை, மிகைப்படுத்துதல்கள் இவைகளே ஆயுதம் Rage bait.

“If you want to control people, make them angry.”போல

மனித மனம் அமைதியை விட கோபத்திற்கே வேகமாக எதிர்வினை செய்கிறது.முகம் தெரியாத ஒருவர் மீது வன்மத்தை வார்த்தைகளில் உமிழ்கிறோம்.உரையாடத் தெரியாமலோ சிந்தனை வறட்சியாலோ வாக்குவாதம் செய்கிறோம்.சிந்தனை மேடையாக இல்லாமல்.சந்தைக் கடை போல் கூச்சலிடுகிறோம்.தனது கருத்துதான் சரி என்பதை வலுப்படுத்த எந்த எல்லை வரையும் செல்லத் தயங்குவதில்லை.

சில எதிர் கருத்துகளுக்கு குழுவாக வந்து திட்டி கோபத்தை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள் ஆன்லைன் யுகத்தில்.
செனிகா எனும் அறிஞர் கூறுகிறார்..“We suffer more often in imagination than in reality.” உண்மையை விட கண்மூடித்தனமான கற்பனைகளுக்கு அதிக இடம் அளிக்கிறோம்

Rage bait நம்மிடம் ஒரு முக்கியமான வாழ்வியல் பாடத்தைச் சொல்கிறது:
எதை நாம் கவனிக்கிறோமோ, அதையே நாம் வளர்க்கிறோம்.
ஒவ்வொரு தூண்டிவிடும் பதிவுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வினை ஆற்றாமல், தன் கருத்திற்கு உடன்படவில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவது சுலபம். 

சில நேரங்களில் மௌனம் தான் மிகச் சக்திவாய்ந்த எதிர்வினை.
“You don’t have to attend every argument you’re invited to.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 9 February 2026

tea-16


#மனசுக்கு_ஒரு_தேநீர்_16

Theory X & Theory Y 

“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"

 எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y. 

இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.

Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது

“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்

Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று  நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor

இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது. 

இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம். 

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.

புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 7 February 2026

ஜா-28


வாழ்க்கைக்கு ஹைக்கூ 28

“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”

- யமகுச்சி சோடோ

ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.

இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.

இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.

செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.

ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.

Thursday, 5 February 2026

book-11


#Reading_Marathon2026
#26RM009

Book No:11/150+
Pages:-160

தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்

கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.

“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”

என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.

இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்

மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..

ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?

'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.

கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..

"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.."  என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.

ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.

கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.

சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..

அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.

ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.

இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.

காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.

விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 28 January 2026

ஜா-27


வாழ்க்கைக்கு ஹைக்கூ 27:

"பிளம் மரத்தில்
ஒரு மலர், 
ஒரு மலர்அளவு
வெப்பம்.." 

- ரன்செட்சு (Ransetsu)

ஜப்பானிய கலாச்சாரத்தில் 'பிளம்' (Plum) மலர்கள் குளிர்காலத்தின் இறுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் பூக்கக் கூடியவை. 

கடுங்குளிரில் மரம் மொட்டையாக இருக்கும்போது, முதன்முதலில் பூக்கும் அந்த ஒரே ஒரு மலர் வசந்தத்தின் வருகையை அறிவிக்கிறது. இங்கு "ஒரு மலர்" என்பது வெறும் பூவை மட்டும் குறிக்கவில்லை; அது நம்பிக்கையின் அடையாளம்.

அந்தச் சிறிய மலர் மலர்வதால், உலகமே மெல்ல வெப்பமடையத் தொடங்குகிறது என்பதை "ஒரு மலர்அளவு வெப்பம்" (One blossom-worth of warmth) என்று கவிஞர் அழகாகக் கூறுகிறார்.
****

இந்தச் சிறிய கவிதை நமது வாழ்க்கைக்குப் பல ஆழமான பாடங்களைக் கற்றுத் தருகிறது. பெரிய மாற்றங்கள் எப்போதும் பிரம்மாண்டமாகத் தொடங்குவதில்லை. ஒரு சிறிய மலர் எப்படிப் பெரிய வசந்தத்தை வரவேற்கிறதோ, அதுபோல நம் வாழ்க்கையின் ஒரு சிறிய நேர்மறையான மாற்றமோ அல்லது ஒரு நல்ல செயலோ ஒட்டுமொத்த வாழ்வையும் ஒளிரச் செய்யும்.

வாழ்க்கை மிகக் கடினமாகவும், குளிர்காலத்தைப் போல உறையச் செய்வதாகவும் இருக்கும்போது, கண்ணுக்குத் தெரியும் ஒரு சிறிய நல்வாய்ப்பு கூட "இனி எல்லாம் மாறும்" என்கிற நம்பிக்கையைத் தரும்.

ஒரு பெரிய மரத்தில் பூத்திருக்கும் அந்த ஒற்றை மலரை உற்றுக் கவனிக்கும்போதுதான் அதன் மதிப்பும், இயற்கையின் இயக்கமும் நமக்குத் தெரிகிறது. அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சிறிய சந்தோஷங்களைக் கொண்டாடப் பழக வேண்டும்.

இருள் சூழ்ந்த நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தைப் போன்றது இந்த பிளம் மலர். அந்த ஒரு மலர் தரும் வெப்பம், விரைவில் மரம் முழுவதும் பூக்கள் பூக்கும் என்பதற்கான நம்பிக்கை. & அந்த நம்பிக்கையே வாழ்க்கை.

Tuesday, 27 January 2026

tea-12


#மனசுக்கு_ஒரு_தேநீர்_12

வால்டர் மிஷல் எனும் ஆசிரியர் வகுப்பிலுள்ள பத்து மாணவர்களுக்கு அழகிய கேக்கினை கொண்டு வந்தார்.அவர்கள் முன்னே அதனை வைக்கிறார்.பத்து நிமிடங்கள் யாரும் சாப்பிடக் கூடாது எனும் நிபந்தனை வைக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது ஏழு பேர் சாப்பிட்டுள்ளனர்..மூன்று பேர் சாப்பிடவில்லை.அவர்களை ஆய்வு செய்தபோது அந்த மூன்று பேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பதும், மற்றவர்கள்
சாதாரண வாழ்க்கை வாழ்வதையும் அறிகிறார்.

பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"என கணிக்கிறார்.
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு வைத்த தேர்விற்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது அதற்கு "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது.

இன்றைய பொறுமை, நாளைய வெற்றி.மனித வாழ்க்கையின் பெரும் சவால்களில் ஒன்று இப்போதே கிடைக்கக்கூடிய சுகத்தையும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெரும் நன்மையையும் தேர்வு செய்வதுதான். இந்தத் தேர்வின் மையத்தில்தான் மார்ஷ்மெல்லோ தியரி நிற்கிறது.

“The ability to delay gratification is a critical factor in long-term success.”
— Walter Mischel

இந்தத் தியரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது முழு மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இதுவா அதுவா எனும் தேர்வு
 எல்லாமே மார்ஷ்மெல்லோ தியரியின் மறுவடிவங்களே.

தன்னைக் கட்டுப்படுத்தும் தன்மையே அதிகம் போராட்டமானது.
ஒரு மனிதன் இன்றைய சோம்பலை ஒதுக்கி, தொடர்ச்சியான உழைப்பைத் தேர்வு செய்யும் போதும், வாழ்க்கையின் இனிப்பை பின்னாளில் பெரிதாகச் சுவைக்கிறான்.

“Self-control is choosing what you want most over what you want now.”

இன்றைய வேகமான உலகில், உடனடி திருப்தி எளிதாகக் கிடைக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஸ்க்ரோல், ஒரு ஸ்வைப்—என மகிழ்ச்சிகள் உடனே. ஆனால் அந்த மகிழ்ச்சி தற்காலிகம். மார்ஷ்மெல்லோ தியரி நமக்கு நினைவூட்டுவது ஒன்றே: தற்கால இன்பத்தை துறந்தவர்களுக்கே நிலையான வெற்றி கிடைக்கும்.பொறுமை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு மறைமுக வலிமை. இன்று நம்மை நாம் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு தருணமும், நாளைய நம்மை வலுப்படுத்துகிறது.

“Discipline is remembering what you want.”
— David Campbell

“இப்போதைய ஆசையை கட்டுப்படுத்தத் தெரிந்தவன், எதிர்காலத்தை கட்டுப்படுத்தக் கற்றவனாகிறான்.”

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 26 January 2026

tea-11


#மனசுக்கு_ஒரு_தேநீர்_11

வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை  நிறைவுடன் வாழலாம். 

வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.

சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி.  அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.

உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும்  இருக்கிறது

 செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 25 January 2026

பெங்குயின்


வெர்னர் ஹெர்சாக்கின் Encounters at the End of the World , இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த டாக்குமென்ட்டரி வைரல் ஆகும் என வெர்னர் ஹெர்சாக்கே நினைத்திருக்க மாட்டார். இப்போதும்கூட அதை வைரல் செய்யும் நபர்களுக்கு, வெர்னர் ஹெர்சாக் குறித்தோ, Encounters at the End of the World டாக்குமென்ட்டரி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Nihilist Penguin meme என அழைக்கபடும் மீமில் ஒரு அடேல் பென்குயின் தன்னந்தனியாக யாருமற்ற திசை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அது எங்கு செல்கிறது என்பது தான் பலரின் கேள்வி. முதலில் டிக்டாக்கில் வைரலாக, பின்பு இன்ஸ்டாவில் வைரலாகி, தற்போது white house வரை வைரலாகியிருக்கிறது. 

He is heading towards certain death என வீடியோவில் பேசியிருப்பார்  வெர்னர் ஹெர்சாக். 

2010ல் penguin depressed என்னும் தலைப்பில், அந்த இரண்டு நிமிட க்ளிப்பை ஒருவர் youtubeல் அப்லோடு செய்ய அது கிட்டத்தட்ட 88 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. அந்த பென்குயினைத் தடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என மனிதர்களிடம் ஏற்கெனவே வெர்னர் ஹெர்சாக் சொல்லிவிட்டார். அதனால், அந்த 5000 கிமீ பனிப்பாதையை அது தனியே கடக்கவிருக்கிறது. 

பென்குயின்கள் பெரும்பாலும் தனித்து வாழ்பவை அல்ல. கணவன் மனைவி சகிதமாக வாழ்பவை. எதிர் பாலினத்தைக் கவர, pebblesஐக் கொண்டு வருவது, ‘ என் கூட்டைப் பார் என்னைப் பிடிக்கும் ‘ ரீதியில் முட்டை வைக்க அழகான கூழாங்கற்களான கூட்டினை செய்வது, என வாழ்பவை. குட்டிகளைத் திருடி வைத்துக்கொள்ளும் திருட்டு அப்பா அம்மா பென்குயின்களும் உண்டு. 

ஆனால், பார்ட்னர் மறைந்ததும் பெரும்பாலும் பென்குயின்கள் தனிமையை நோக்கிச் சென்றுவிடும். டாக்குமென்ட்டரியில் வரும் இந்த பென்குயினும், அப்படியானதொரு முடிவை எடுத்த பென்குயின் தான். 

-கார்த்திகேயன்

Saturday, 24 January 2026

ஜா-26


வாழ்க்கைக்கு ஹைக்கூ 26

“சொட்டு சொட்டாய்
விழும் பனித்துளி...
இவ்வுலகின் தூசியைக்
கழுவிவிடத் துடிக்கிறது!”

- மட்சுவோ பாஷோ

இந்தக் கவிதை "தூய்மை" மற்றும் "புதுப்பித்தல்" பற்றிய மிக அழகானதொரு கற்பனை. அதிகாலை நேரத்தில் ஒரு மலரின் இதழிலிருந்து ஒரு சிறிய பனித்துளி (Dew drop) சொட்டுச் சொட்டாகக் கீழே விழுகிறது. அந்தப் பனித்துளி பார்ப்பதற்குப் பளிங்கு போலத் தூய்மையாக இருக்கிறது. அது கீழே விழுவதை, "இந்த உலகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும், தூசியையும் கழுவிச் சுத்தம் செய்ய அது முயல்கிறது" என்று கவிஞர் வர்ணிக்கிறார்.

பனித்துளி மிகச் சிறியது; உலகம் மிகப் பெரியது. இருப்பினும், அந்தச் சிறிய துளிக்கு உலகையே சுத்தப்படுத்தும் ஒரு பெரிய ஆசை இருப்பதாகச் சொல்வது இதன் அழகியல்.

இந்தச் சிறிய ஹைக்கூ நமக்குத் தரும் நம்பிக்கையான செய்திகள் பல உள்ளன.

பனித்துளி மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் உயர்வானது. அதுபோல, "நம்மால் என்ன செய்துவிட முடியும்?" என்று நினைக்காமல், நம்மால் முடிந்த சிறிய நற்செயல்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். பல சிறிய துளிகள் சேர்ந்தால் அது ஒரு நதியாகி, உலகையே மாற்றும் வல்லமை பெறும்.

"உலகத்தின் தூசி" என்பது நம் மனதில் படியும் கவலைகள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வெறுப்பைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பனித்துளி எப்படிப் புதிதாக வருகிறதோ, அதுபோல நாமும் ஒவ்வொரு நாளையும் புதியதாகத் தொடங்க வேண்டும். கடந்த காலக் கசப்புகளை (தூசியை) அவ்வப்போது மனதிலிருந்து கழுவிவிட வேண்டும்.

உலகம் எவ்வளவு மாசுபட்டிருந்தாலும், இயற்கை பனித்துளி மூலம் அதைச் சுத்தம் செய்யத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அதுபோல, வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அவற்றைச் சரிசெய்யும் நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

"நமது செயல் சிறியதாக இருக்கலாம், ஆனால் நமது எண்ணம் உலகைச் சுத்தப்படுத்தும் அளவுக்கு உயர்வானதாக இருக்கட்டும்.

Wednesday, 21 January 2026

tea-9


##மனசுக்கு_ஒரு_தேநீர்_9

"ஸ்வபாவதஹ ப்ரவிஷந்தி"

எல்லாம் உண்டாகின்றன. அழிகின்றன, தொலைந்து மறைகின்றன, நீ சாட்சியாக தூரத்தில் இரு. அங்கு நின்று கொண்டு பார்த்தபடி இரு.

ஒரு விதை மண்ணில் புதையும்போது, அதற்கு “முளைக்க வேண்டும்” என்று யாரும் கட்டளையிடுவதில்லை. அதன் இயல்பே அதை முளைக்கச் செய்கிறது. அதுபோலவே, மனிதனின் மனம் எதை விரும்புகிறதோ, அவன் வாழ்க்கை அவ்வழியிலே தானாகவே செல்லத் தொடங்குகிறது.

புத்தர் மலைப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். கடும் வெயிலில் தாகம் எடுத்தது. சீடர் ஆனந்தரை கூப்பிட்டு நாம் வந்த வழியில் திரும்பிச் செல். இரண்டு காத தூரத்துக்கு பின் ஒரு அருவியை பார்த்தோம் அல்லவா. அங்கே நீர் நிரப்பி வா என்றார். ஆனந்தர் பாத்திரத்துடன் அருவியை அடைந்தார். அதே சமயம் அங்கு தேங்கி இருந்த நீரின் வழியாக மாட்டு வண்டிகள் சில சென்றன. தண்ணீர் முழுவதும் குப்பை பரவி விட்டது. அடிமட்டத்திலிருந்து சகதிகள் மேலே எழும்பி வந்து விட்டது. அந்த தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. 

அப்போது ஆனந்தர் திரும்பி புத்தரிடம் வந்து சொன்னார். அந்த அருவி நீர் பருகுவதற்கு லாயக்காக இல்லை. மேற்கொண்டு நாலு ஐந்து மைல்களில் நதி உள்ளது. அங்கிருந்து புது தண்ணீர் எடுத்து வருகிறேன் நீங்கள் ஓய்வெடுங்கள் என்றார். ஆனால் புத்தர் பிடிவாதமாக திரும்பிப் போய் அதே அருவி நீரை கொண்டு வா என்றார்.

 இதனை மறுக்க முடியாத ஆனந்தர் அருவி நீரை அடைந்தபோது தண்ணீர் சுத்தமாகி விட்டிருந்தது. ஆனந்தர் அருவியை நோக்கிச் செல்லும் போது  ஆன தூரத்தில் தூசி எல்லாம் அடிமட்டத்துக்கு இறங்கிவிட்டது. ஆனந்தர் திகைத்துப் போனார். அப்பொழுதுதான் அவருக்கு புத்தரின் பிடிவாதத்தின் அர்த்தம் புரிந்தது

நான் செல்லும்போது யோசித்துக் கொண்டு சென்றேன். குப்பையை அகற்றிவிட்டு நீர் எடுத்து வரலாம் என்று. ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் கரையிலேயே இருந்தேன். கலங்கிய நீர் அமைதிபட்டதும்.. தெளிவடைந்தும்.. இருந்தது. யாரும் அதை வழிந்து சென்று அமைதி படுத்தவில்லை. தானாகவே அது சாந்தப்பட்டு விட்டது என்றார்.

இதனைக் கேட்டவுடன் புத்தர் சொன்னார்..
வாழ்க்கையில் பிரச்சனைகளும் அப்படித்தான்.. அதுவே வரும் அதுவே அழியும். நாம் அமைதியாக நின்று பார்த்தபடி இருந்தால் போதும்.
இக்கட்டான நிலையில் பொறுமை முக்கியம். பதட்டமே அந்த நிலையை இன்னும் சுமையாக்கிவிடுகிறது. ஆகவே பொறுமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.ஆனால்
பொறுமை பொறுமையாகத்தான் வரும்.

புத்தம் புது காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 20 January 2026

tea-8


#மனசுக்கு_ஒரு_தேநீர்_8

Procrastination எனும் வார்த்தை அண்மையில் பிரபலமடைந்து வருகிறது.இதன் பொருள் அனைவருக்கும் தெரிந்தது தான்..
"செய்ய வேண்டிய காரியங்களைத்  தொடர்ந்து தள்ளிப்போடுவது 

இப்போது செய்ய முடியும் வேலை என்பதை அறிந்திருந்தும்,
“சிறிது நேரம் கழித்து செய்வோம்”,
“நாளை பார்த்துக் கொள்வோம்” என்று மனம் காரணங்கள் சொல்லி ஒதுக்கிவைப்பதே Procrastination.
பணியை தொடங்குவதில் சுணக்கம், கடினமானதை தவிர்ப்பது, அவசரப்பட்டு செய்வதில் ஒரு அலட்சியம் போன்றவை. 

எதிர்காலம் எங்களுக்கு என்ன வைத்திருக்கிறது?”
“What the future has in store for us”

“எதிர்காலத்தை ஒரு களஞ்சியம் அல்லது பொக்கிஷப் பெட்டி போலக் கற்பனை செய்கிறது மனது.ஆனால் நிகழ்கால வாய்ப்புகள், சவால்கள் அனைத்தும் செய்தால் தான் அது பொக்கிஷமாக மாறும்.உடனே தைத்தால் ஒன்பது கிழிசலை தவிர்க்கலாம் என்பது பழமொழி. ஆகவே எந்த ஒரு செயலையும் விரைந்து செய்ய வேண்டும்.

ஒரு மனிதன் விஷ அம்பால் காயமடைந்தான்.
அவன், “அம்பு எங்கிருந்து வந்தது? யார் எய்தார்?” என்று கேள்விகள் கேட்டு காலம் தாழ்த்தி..
அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் இறந்தான். தேவையற்ற கேள்விகளை விட, தீர்வில் கவனம் செலுத்து என்கிறது புத்தம்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

*கிடைப்பதற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அப்போதே தாம் செய்வதற்கு அரியவான செயல்களை செய்து முடித்தல் வேண்டும் என்கிறார்
திருவள்ளுவர்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 19 January 2026

வாழ்க்கைக்கு ஹைக்கூ 24"ஒரு கை தட்டும் ஓசை என்ன?" – ஹாகுயின் எகாகு இது புகழ்பெற்ற 'ஜென் கோன்' (Zen Koan) எனப்படும் ஒரு விதமான ஆன்மீகப் புதிர். பொதுவாக, இரண்டு கைகள் சந்திக்கும் போது தான் 'கைத்தட்டல்' ஓசை வரும். அப்படியிருக்க, "ஒரு கையின் ஓசை என்ன?" என்று கேட்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், ஜென் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே நமது தர்க்க அறிவை (Logic) நிறுத்திவிட்டு, உள்ளுணர்வை (Intuition) விழிக்கச் செய்வது தான். அதற்கு இதனைப் போன்ற புதிர்கள் உதவுகின்றன.இந்தக் கேள்விக்கு, "காற்று கிழிக்கும் சத்தம்" என்றோ, "விரல்கள் சொடுக்கும் சத்தம்" என்பது பதிலல்ல. உண்மையான பதில் "அமைதி" ஆகும். சத்தம் ஏற்படுவதற்கு இரண்டு பொருட்கள் வேண்டும். ஆனால் ஒரு கை என்பது எதனோடும் மோதாத நிலை. அது முழுமையான அமைதியைக் குறிக்கிறது.உதாரணமாக வானத்தில் இடி இடிப்பதற்கு மேகங்கள் மோத வேண்டும் (இரண்டு கைகள்). ஆனால் அந்த மோதலுக்கு முன் அங்கே இருந்த அமைதியான வானம் தான் ஒரு கை தட்டும் ஓசை.நாம ஒருவருடன் சண்டை போடுறோம். அங்கே "நான்" மற்றும் "அவன்" என்ற இரண்டு கைகள் உள்ளன. ஆனால் நாத தனிமையில், எந்த எண்ணமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அங்கே மோதுவதற்கு எதுவுமில்லை. அந்த முழுமையான மௌனமே ஒரு கையின் ஓசை.இந்த வாசகம் நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் ஆழமானது. நாம் எப்போதும் பிறரது பாராட்டு, அங்கீகாரம் அல்லது பதிலுக்காகவே (இரண்டாவது கைக்காக) காத்திருக்கிறோம். ஆனால், நம் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவையில்லை. நாம் தனியாக இருக்கும்போதே முழுமையானவர்கள் என்பதை இது உணர்த்துகிறது.உலகில் உள்ள அனைத்து சத்தங்களும் (பிரச்சனைகளும்) இரண்டு விஷயங்கள் மோதுவதால்தான் வருகின்றன (விருப்பம் vs வெறுப்பு, நான் vs நீ). இந்த மோதல்களை விட்டுவிட்டு, மனதை ஒரு சாட்சியாக (Observer) மட்டும் வைத்தால் கிடைப்பது பேரமைதி.வாழ்க்கையில் எப்போதும் சத்தத்தை மட்டுமே கேட்டுப் பழகிவிட்டோம். "சத்தமில்லாத அந்த ஓசையை" (Sound of Silence) கேட்கப் பழகுவதே இறைநிலை அல்லது தியான நிலை.ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறோம். இரண்டு கைகளால் இசைக்கப்படும் வயலின் இசையை ரசிக்கிறோம். ஆனால், அந்த இசைக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி (Gap) இருக்கும் அல்லவா? அந்த இடைவெளியில் இசை இல்லை, ஆனால் இசைக்கான உயிர் அங்கு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை ரசிப்பது தான் "ஒரு கை ஓசை".

tea-7


#மனசுக்கு_ஒரு_தேநீர்_7

பொருத்தமற்றத் தகவல் பெருவெள்ளத்தில் மூழ்கிய இன்றைய உலகில் தெளிவு தான் தீர்வு

-யுவால் நோவா ஹராரி

தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,"நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்!" என்று சபித்துவிட்டார்."

பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, "நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக் கொன்று விடு!" என்று கேட்டுக்கொண்டான்.

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது," மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு!" என்றான்

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் (பன்றித்) துணையைத் தேடிக் கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது," மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்று போடு" என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தனது தந்தையின் அருவருப்பான வாழ்க்கைக்கு முடிவு கட்ட வந்தபோது," மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் உடன் வந்து எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக் கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்! " என்று மகனுக்கு அறிவுறுத்தினான்

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சனைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது, பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது.

பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சனையோடு வாழ்வதே தீர்வாகிறது. பிரச்சனைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழி தான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சனைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லை! எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.எல்லாவற்றுக்கும் இது தான் தீர்வு எனவும் சொல்ல முடியாது.சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுத்து வெற்றி பெறுவோம்

புத்தம்புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 18 January 2026

tea-6


#மனசுக்கு_ஒரு_தேநீர்_6

சுதர்சனின் பதிவு

புத்தகம் படிப்பது பற்றி இரண்டுவிதமான முறைப்பாடுகள் இருக்கிறது. ஒன்று, புத்தகம் படிக்க நேரமில்லை. இரண்டாவது, புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்கமுடியாமல் அடுக்கிவைத்தல்.
புத்தகம் படிக்க நேரமில்லை என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. நேரமென்பது நம் கண் பார்க்கும் நிறங்களைப் போல ஒருவித Illusion என்று சொல்வார்கள். 

நாம் தீர்மானித்துக்கொள்வதுதான். சினிமா, கிரிக்கெட், சிறுபேச்சுகள், பேஸ்புக் டைம்லைனை மேலும் கீழும் பார்த்தல் என்று அவர்கள் நேரம் முடிந்துவிடும். இதையெல்லாம் செய்வது தவறென்று சொல்லவரவில்லை. இவற்றைச் செய்பவர்கள், "நேரமில்லை" என்றொரு காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது. Warren buffet க்குகூட வாசிக்க நேரமிருகிறது.
தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவர்கள் சிலர், புத்தகங்களை வாங்கிவிட்டு அடுக்கி வைக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பலரும் புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்காமல் அடுக்கி வைக்கிறார்கள் என்று சொல்லும் பதிவுகளும் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் நாம் சும்மா இருந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவதுபோலவும் பிரபல நடிகையாவது போலவும் ஒரு மணிநேரம் கனவு காணும்போது நம்முடைய மூளை பதினொரு கலோரிகளைப் பயன்படுத்துகிறது. ஒருமணித்தியாலம் வாசிப்பில் ஈடுபடும்பொழுது 42 கலோரிகளை மூளை பயன்படுத்துகிறது. இதுபோக தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தல், நியூரோன்களின் உரையாடல் என்று அதற்கு மேலதிகமாக பல கலோரிகள் செலவாகிறது. உண்மையில் நேர முகாமைத்துவம் என்பது நேரத்தைப் பயன்படுத்துவது அல்ல. நேரத்தை திறம்படப் பயன்படுத்துவது.

நான் ஒரு புத்தகத்தை ஒரு அரச அலுவலகத்தில் காத்திருந்த நீண்ட நேரத்தில் படித்து முடிக்க முடிந்தது. ஆகவே புத்தகம் படிப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்முடைய கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகள்தான் பிரச்சனை. நம்முடைய மூளை இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்யும்போதே(task switching) அதன் சக்தியை இழந்துவிடுகிறது.
நம்முடைய மூளை ஒருவித புதுமையை(novelty) எப்போதும் எதிர்பார்க்கும். வாசிப்பிலும் ஒரு படத்தைப் பார்க்கும்போதும் பெரும்பாலான சொல்லப்படாத பகுதிகளை நம்முடைய மூளை ஊகித்துக்கொள்கிறது. ஆனால் வாசிப்பில் கற்பனைவளம் அதிகம் பெருகும். இவ்வளவு கடினப்பட்டு வாசிக்கவேண்டுமா?
வாசிப்பு உண்மையில் ஒருவித இன்பம். ஒரு நகைச்சுவையை ரசிக்கிறீர்கள். ஆனால் அந்த நகைச்சுவையில் சொல்லப்படாத பகுதிகளை மூளை கண்டுணர்ந்து ஒரு சிறுபுன்னகை தருகிறது. அந்த நகைச்சுவை தரும் இன்பம் போல அனைத்தையும் காட்சிப்படுத்தும் நகைச்சுவைகள் தந்துவிடுவதில்லை எனப்படுகிறது.

 உண்மையில் நம்முடைய மூளையில் நம்மால் படிப்படியாக ஆழ உணரப்படும் விடயங்கள் நன்றாகப் பதியுமென்று சொல்லப்படுகிறது.
கல்லூரிகளில் பாடப்புத்தகங்களை அப்படியே கற்பிக்கும் கல்விமுறையைவிட மாணவர்களாக அவர்களுக்குள்ளேயே உரையாடிக் கற்கும் கல்விமுறை (peer instruction) வெற்றிபெற்ற்றிருக்கிறது.
இவற்றைத்தான் நாமாக வெளியில் தேடிப்படிக்கும் புத்தகங்கள் நம்முள் நிகழ்த்திச் செல்கிறது.
ஆகவே புத்தகங்களைப் பார்த்துத் தெரிவுசெய்வது உங்கள் பொறுப்பு. வருடத்துக்கு இரண்டு என்றாலும் ஒழுங்கான வாசிப்பை நிகழ்த்தினால் போதும்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 17 January 2026

book-8


#Reading_Marathon2026
#25RM009

Book No:8/150+
Pages:-127

தண்டகாரண்யத்தில் சீதை
-இமையம்

தமிழ் இலக்கியத்தில் சமூகத்தின் ஓரங்களில் வாழும் மனிதர்களின் மௌன வலிகளையும் மறைக்கப்பட்ட குரல்களையும் தீவிரமாக பதிவு செய்து வருபவர்.சிறுகதையோ, நாவலோ தனித்து ஒலிக்கும் குரலாக கதைமாந்தர்களின் தன்மை வெளிப்படும். சாதாரண ஒரு புள்ளியில் கதையின் மையசரடை சொற்களாலேயே அதனை வாசகனுக்கு தெரியப்படுத்துவார்.கிராமிய வாழ்வியலோ, 

தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்த குரலாக விளங்குபவர். கிராமிய வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, பெண்களின் மனநிலை, உறவுகளின் மெல்லியச் சிக்கல்கள் ஆகியவை அவரது சிறுகதைகளின் மையம். சாதாரணமான எழுத்துக்கள் தான் ஆனால் ஆழமான கதை சொல்லின் வழியாக நம்மை எப்போதும் கவர்ந்து இழுப்பவர் இமையம் அவர்கள். சமூக கருத்துக்கள் அவருடைய கதைகளில் அர்த்தமுள்ளதாய் பதிவு செய்திருப்பார். வாசிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு கதைகளின் வாயிலாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக தன்னை உணர வைத்து, எது சமூக நீதி? என்பது போல் சிந்திக்க வைப்பார்.அந்த அறக்கருத்துக்களை வாசிக்கும் நம்மிடம் கடத்துவார் ,அதுவே அவரின் சிறுகதையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் கொம்பன் என்னும் மாட்டினை ஆசையாக வளர்க்கிறார் மருது. வாடி வாசலில் அவிழ்க்கப்பட்ட மாடு வருவது தான் கதையின் ஆரம்ப வரியாக இருக்கிறது.அதற்கு அடுத்தாற் போல் மாடு பிடிபடுகிறது.அது மருதுவுக்கு அவ்வளவு அவமானத்தை தருகிறது.. அந்த அவமானம் அவரின் ஆணவமாய் மாறி என்னவெல்லாம் செய்கிறார்,நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரின் குணம் மாறுகிறது. இப்படி எல்லாம் ஒருவர் இருப்பாரா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு மருதினை பின்தொடர்ந்து இந்த கதைகளின் வழியே சென்றால் இறுதியில் மனம் கணக்க வைக்கும் முடிவு ஒன்று வருகிறது.

ஆசிரியர் கதை ஒன்று அல்லது பள்ளியில் நடைபெறும் கதை ஒன்று அவருடைய தொகுப்புகளில் தவறாமல் இடம்பெற்று விடும். அதன் வழியே அவர் காட்டும் வெளிச்சம் நாம் பார்க்காத கோணத்தில் இருக்கும் அப்படித்தான் பொட்டச்சி மனசு கதைகளிலும் சுமதிக்கும் சந்திரனுக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம் ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் ஆழமாக அந்தக் கதை  இருக்கும்.

உங்களுக்கு தீங்கிழைக்காத எந்த ஒரு ஆதிவாசியையும் கேடு விளைவிக்காத எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதர்மமான காரியங்களை ராமன் செய்தான் என பெயர் வந்துவிடும். வழக்கமாக ராமாயணத்தில் ராமனை பழித்துறைக்க வேண்டுமானால் அவர்  வானரங்களிடம் மனிதனைப் போல் வாழ வேண்டும் என்று கற்பித்தல் அறம் ஆகாது என்று சொல்வதாக பல வழக்காடு மன்றங்கள் நடப்பதுண்டு. இங்கே ராமனுக்கு புத்தி புகட்டும் சீதை என்ன வழியை கையாண்டால் என்பதுதான் தண்டகாரியத்தில் சீதை எனும் கதை. 

"மனம் ஆசைகளால் நிரம்பி இருக்கும் போது, சுயநலத்தின் பிடியில் மனம் சிக்கி இருக்கும் போது,

 மரணத்தை கண்டு மனம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்போது, தர்மத்துக்கும் அதர்மத்திற்கும் வேறுபாட்டை உணராத போது, தவம் யாகம் செய்து பெறுவது ஞானமா ? என்ற கேள்வி ராமனை நோக்கி சீதை கேட்பாள். இந்த கேள்வி படிக்கும் நம்மையும் ஒரு நிமிடம் உலுக்க வைப்பது போல் இருக்கும். எந்த தவறு செய்தாலும் நாம் ஒரு பரிகாரம் செய்தால் அந்த தவறுகள் நீங்கிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக அல்லது பின் நடக்க இருப்பதை ராமனுக்கு சீதை முன்பே சொல்லும் விதமாக இந்த கதை மனதுக்கு நெருக்கமாக இடம் பெற்றிருக்கும். "ஆயுதம் தான் அதிகாரத்தை கொண்டு வருகிறது" என்பது நடைமுறை நாட்களில் கூட நாடுகளைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

சாவித்திரி என்பவள் தன் அழகின் மீது கர்வம் கொண்டவள். தன்னை நாடிவரும் ஆண்களை ரசித்து விட்டு தூக்கி எறிபவள். அப்படி செய்யும் போது ஒரு கட்டத்தில் சாவித்திரியே தூக்கி எறிகிறான் ஒருவன் .அப்போது உண்மையான முகம் யாருக்கு என்பதை அருள்மணி கதாபாத்திரத்தின் வாயிலாக இந்த முகம் கதையை சொல்லி இருப்பார். "கரும்பு கட்டு தூக்குறவளுக்கு கரும்பு வெட்டுறவன் தான் பிரிசனா வருவான்" என்ற வார்த்தை எப்படி அவள் மனதை மாற்றியது என்பதை இக்கதை

 அடங்காத அழுகை கதை ஆனந்த விகடனில் வந்த போது வாசித்தேன். அப்போதே இக்கதை மிக நெருக்கமாக மனதிற்குப் பட்டது.. ஆசிரியர்  மாணவியை பார்த்து நீ எந்த ஊர் ?என்று கேட்கிறார் அதற்கு அவள் பதில் சொல்ல வேண்டும் இதுதான் கதை .இந்த ஒரு வரி கதையை படிக்கும் அனைவரையும் இழுக்கும் விதமாக அந்த கதை செல்கிறது. இந்த ஒரு வரியை அவர் 5 பக்கங்களில் சுவாரசியம் குன்றாமல் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அந்த ஆசிரியரைப் போலவே நாமும் அந்த மாணவியின் வாயிலிருந்து வரும் பெயரைக் கேட்க ஆவலாய் உள்ளது போல் அடங்காத அழுகை கதை இருக்கும்.

கூடுன்னாலும் குருவிக்கு அதுதான் அரண்மனை என்ற மகன் ராமனிடம் வயதான கிராமத்தில் வாழும் துளசியம்மாள் சொல்கிறாள். மகனும் மருமகளிடம் ஒரு கட்டத்துக்கு மேல் வரக்கூடாது என்று சுயமரியாதையுடன் வாழும் பெரியவர்களை காலம் சில சூழ்நிலைகளில் மகனிடமோ அல்லது மருமகளிடமோ வந்து தங்க வைத்து விடுகிறது.இந்த மனப்போராட்டம் பல பெரியவர்களிடம் இருக்கிறது. விரிசல்களை தவிர்த்து வாழ நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது அல்லது உண்மையான கோர முகங்களை பார்க்கும் நுட்பமும் சொந்த வீடு என்ற இந்த கதையில் விளக்கி இருப்பார்.

90களில் கிராமங்களில் மகளிர்க்கு தான் மலைவாழை அல்லவோ கல்வி எனும் வாசகம் முற்றிலும் பொருந்தும். ஏனெனில் பெண்கள் வயதுக்கு வந்தால் பலர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். குறிப்பிட்ட பருவம் எய்திய உடன் திருமணம் செய்து முடித்து விடுவார்கள். இன்று அப்படி இல்லை என்றாலும் சில கிராமங்களில் இன்றும் பெண்கள் கல்வி தொடர்வதற்கு வயது ஒரு காரணமாக இருக்கிறது. அதனை மையப்படுத்தி ஆசைகள் என்ற கதையை இமையம் அவர்கள் எழுதி இருப்பார்கள். பெண்கள் வயது மூப்பு அடைவதை பற்றி ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

கந்தர்வன் இரண்டாவது ஷிப்ட் என்ற கதை எழுதி இருப்பார் அந்த கதையை நினைவுபடுத்தும் விதமாக அதே நேரத்தில் காலை நிகழ்வை மட்டும் மையப்படுத்தி இந்த இயந்திரங்கள் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக இருவரும் பணிக்குச் செல்லும் போது பெண்கள் தான் அதிக வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அப்போது ஏற்படும் கோபம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப செய்யும் காரியங்கள் என ஒவ்வொன்றிணையும் மிக அழகாக வார்த்தைகளால் கோர்த்து இந்த கதை அமைந்திருக்கும் ஒவ்வொரு சண்டைகளும் பெண்கள் ஆண்கள் வீட்டு ஆட்களை திட்டுவதும் பதிலுக்கு அவர்கள் இவர்களை பேசுவதுமாக எல்லோர் வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் தான் இந்த கதை நமக்கு கண்ணாடி வழியே காட்டுவது போல் இருக்கிறது. 

இந்த கதைகள் எல்லாம் கட்டுரைகள் போல் முன்னுரை பொருளுரை முடிவுரை என்று வழக்கமான டெம்ப்ளேட்டுகள் வடிவில் கதைகள் இல்லாமல் இமையத்தின் பெரும்பலமே சம்பவங்களை சுவாரசியமாக்கி, வார்த்தைகளில் வடித்துக் கொடுப்பதுதான். அவர்களுடைய கதைகளில் உரையாடல் மிகப்பெரிய பங்கினை பெற்றிருக்கும். அந்த உரையாடலின் வழியாகத்தான் கதைகள் நகரும். அவை சாதாரண உரையாடல்கள் போலவே தோன்றும் ஆனால் அவை கதைகளுக்கு எவ்வளவு ஆழமான அர்த்தமுடையவை என்பதை அந்த கதை முடியும் போது நம்மை உணர வைத்திருப்பார். 

கதைகளின் பரிணாமங்கள் இப்படித்தான் நிகழும் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காரணம் கதைகள்  ஒரே நேர்கோட்டில் இல்லாமல்
ஆற்று நீரோட்டம் போல வளைந்து வளைந்து செல்லும் போது என்னதான் நடக்கிறது என்பதனை நாம் மெல்ல கவனித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இலக்கிய மேற்கோள்களோ அல்லது வாழ்வியல் தத்துவங்களோ இவருடைய கதைகளின் நிறைந்திருக்காது. ஆனால் வாழ்வியல் சம்பந்தமான அர்த்தமுள்ள உரையாடல்கள், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இவருடைய கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இவருடைய கதைகள் எப்போதும் தரும் அந்த வகையில் இந்த சிறுகதை தொகுப்பும் நிச்சயம் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை உள்வாங்கும் நோக்கில் இருக்கும் 

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 15 January 2026

ஜா-21


வாழ்க்கைக்கு ஹைக்கூ 21:

"நான் குனிந்து, 
கூர்ந்து கவனிக்கும் போது, 
கற்கள் கூட பதிலளிக்கின்றன."
— யுவான் மேய்

சீனக் கவிஞரான யுவான் மேய் எழுதிய இந்த ஹைக்கூ வரிகள் "ஜென்" தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

பொதுவாகக் கற்கள் உயிரற்றவை, கடினமானவை என்போம். ஆனால், நாம் நமது மனதின் இரைச்சலை அடக்கிவிட்டு, முழு ஈடுபாட்டுடனும் (Mindfulness), மிகுந்த கவனத்துடனும் ஒரு விஷயத்தை அணுகினால், பேசாத கற்கள் கூட நம்முடன் பேசும். இயற்கையின் மிக நுண்ணிய அசைவுகளைக் கூட நம்மால் உணர முடியும்.

இந்த மெட்டாஃபரின் மூலம் நமது அன்றாட வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான பாடங்களை கற்றுக் கொள்ளலாம்:

1. கவனமாக கேட்பதின் சக்தி (The Power of Deep Listening):
இன்று நம்மில் பலர், பிறர் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தானே தவிர, அவர்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல. "கூர்ந்து கவனித்தல்" என்பது ஒரு தியானம் போன்றது. 

நாம் முழுமையாக ஒருவரையோ அல்லது ஒரு சூழலையோ கவனிக்கும்போது, வார்த்தைகளால் சொல்லப்படாத உண்மைகளைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

2. நிதானம் மற்றும் பொறுமை (Stillness and Patience):
படத்திலுள்ள கற்கள் ஒன்றின் மேல் ஒன்று சமநிலையில் அடுக்கப்பட்டுள்ளன. இது நிதானத்தைக் குறிக்கிறது. அவசரமான உலகில், நாம் சிறிது நேரம் நின்று, நிதானித்து, சூழலைக் கவனித்தால் மட்டுமே வாழ்க்கையின் அழகையும், நமது பிரச்சனைகளின் தீர்வுகளையும் கண்டடைய முடியும்.

3. கல்லும் கரையும் (Empathy):
வாழ்க்கையில் "கல்" போன்ற கடினமான மனிதர்களோ அல்லது கடினமான சூழ்நிலைகளோ நமக்கு எதிர்ப்படலாம். 

அந்த சமயங்களில் நாம் அவர்கள் மீது கோபப்படாமல், பதற்றமடையாமல் சற்று இறங்கி வந்து, பொறுமையுடன் அவர்கள் தரப்பைக் கேட்டால், அந்தக் கல் மனமும் கரையும்; கடினமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Tuesday, 13 January 2026

சொக்கன்


இந்த மாத 'அந்திமழை' இதழில் கலை இயக்குநர் தோட்டா தரணியின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது:

> நாம் செய்யும் வேலைமீது நமக்குப் பயம் வேண்டும். சின்னதாகக் குடிசைச் செட் போட்டாலும் எனக்குப் பயம் இருக்கும்.

உளவியலாளர்கள் Anxiety (பதற்றக் குறைபாடு) பற்றிப் பேசுகையில், நம்முடைய அன்றாடப் பணிகளைச் செய்யும்போது நமக்குள் சிறிதளவு பதற்றம் இருந்தால் அது நம் வாழ்க்கையைப் பாதுகாப்பாக்குகிறது, நேர்த்தியாகச் செலுத்துகிறது என்பார்கள். அந்த அச்சம் அளவுக்கு மீறினால்தான் சிக்கலாகிவிடுகிறது. கட்டுக்குள் இருந்தால் அதுவும் ஒரு நல்ல, பயனுள்ள கருவிதான். கலைஞர்களுக்கும் அது பொருந்தும் என்பதைத் தோட்டா தரணி மிக அழகாகச் சொல்லிவிட்டார்.

ஆக, அச்சம் என்பதும் வலிமையடா!

Monday, 12 January 2026

ஜா-16


வாழ்க்கைக்கு ஹைக்கூ 19

"சூரிய ஒளியைக் காணாமலே, 
அந்தக் குளிர்கால கமிலியா மலர் 
பூத்துக் குலுங்குகிறது."

- கோபயாஷி இஸ்ஸா

பொதுவாக மலர்கள் மலர்வதற்குச் சூரிய ஒளி மிக அவசியம். சூரியனைப் பார்த்தால் தான் பல பூக்கள் மலரும். ஆனால், இந்தக் கவிதையில் வரும் "குளிர்கால கமிலியா" (Winter Camellia) மலர், சூரிய வெளிச்சம் இல்லாத, இருண்ட மற்றும் குளிர்ந்த சூழலிலும் முழுமையாக மலர்கிறது.

இங்கு சூரிய ஒளி என்பது  சாதகமான சூழ்நிலை, பாராட்டு அல்லது நமக்கு மற்றவர்கள் தரும் ஆதரவைக் குறிக்கிறது. மலர்வது என்பது நம்முடைய செயல்பாடு அல்லது வெற்றியைக் குறிக்கிறது. இந்த ஹைக்கூவின் மூலம், இஸ்ஸா: "சிறப்பாகச் செயல்பட, சாதகமான சூழ்நிலையோ அல்லது பிறரின் ஆதரவோ அவசியம் இல்லை. மனதில் உறுதி இருந்தால், இருளில்கூட நம்மால் ஒளிர முடியும்." என்ற கருத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு உதாரணமாக நம் காலத்தில் வாழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் பிறந்தது ராமேஸ்வரத்தில் ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தில். மின்சார வசதியோ, பண பலமோ, பெரிய பின்புலமோ அவருக்குக் கிடையாது. தினசரி செய்தித்தாள் போட்டு தனது செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வறுமை இருந்தது. இது "சூரிய ஒளி இல்லாத" நிலையைக் குறிக்கிறது. ஆனால், கலாம் அவர்கள், வசதிகள் இல்லை என்று அவர் முடங்கிவிடவில்லை. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தார். தோல்விகளைக் கண்டார் (விமானப்படை வேலை கிடைக்காதது). தன் விடாமுயற்சியால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், அனைவரும் மதிக்கத்தக்க ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.

பொதுவாக, "யாராவது என்னைப் பாராட்டினால் தான் நான் செய்வேன்," "சூழ்நிலை சரியாக அமைந்தால் தான் நான் தொடங்குவேன்" என்று நாம் பல நேரங்களில் காத்திருக்கிறோம். சூரியன் வரட்டும் என்று கமிலியா காத்திருப்பதில்லை. அதுபோல, பிறர் பாராட்டுவதற்கோ, உதவிகள் கிடைப்பதற்கோ காத்திருக்காமல், நமது கடமையைச் செய்து வரவேண்டும். நமது திறமை தானாகவே ஒருநாள் வெளிப்படும்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் (குளிர்காலம்) வரும்போது நாம் சோர்ந்து முடங்கி விடுகிறோம். கடினமான காலக்கட்டத்தில்தான் நம் உண்மையான வலிமை வெளிப்பட வேண்டும். இருள் சூழ்ந்திருந்தாலும், நம்மால் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

"எனக்கு அந்த வசதி இல்லை, இந்த வசதி இல்லை" என்று குறை கூறிக்கொண்டே இருப்பதை விட, இருப்பதை வைத்துச் சிறப்பாகச் செயல்படுவதே அழகு. 

இதைத் தான் ரூமி, “இருள் நிறைந்த பாதையில் ஒளியில்லையே என்று தேடாதீர்கள். சற்று கவனித்துப் பாருங்கள், நீங்களே அந்த ஒளியைத் தரும் தீபமாக இருக்கக்கூடும்" என்கிறார்.

Wednesday, 7 January 2026

ஜா-18


வாழ்க்கைக்கு ஹைக்கூ 18

"எவ்வளவு குளிர்ச்சி!
மணியை விட்டு
விலகிச் செல்லும் அந்த ஓசை..."

- யோசா பூசன் 

இந்தக் கவிதை ஒரு காற்றில் அசையும் மணியிலிருந்து (Wind chime) எழும் ஓசையை விவரிக்கிறது.

காற்றால் மணி ஆடும்போது சத்தம் வருகிறது. ஆனால், அந்தச் சத்தம் மணிக்குள்ளேயே இருந்தால் அது யாருக்கும் கேட்காது. அந்தச் சத்தம் மணியை விட்டுப் பிரிந்து, காற்றில் கலந்து, வெளியே வரும்போதுதான் அது இனிய ஒலியாக மாறுகிறது.

இங்கே "குளிர்ச்சி" என்ற சொல் "மன அமைதி" மற்றும் "பாரமற்ற மனநிலை"யைக் குறிக்கிறது.

இந்த ஹைக்கூவின் மூலம் பூசன் "ஒன்றைப் பற்றிக்கொண்டே இருப்பதை விட, அதை விடுவிப்பதில்தான் அழகும் பயனும் இருக்கிறது." என்கிறார். ஓசை மணியை விட்டுப் பிரியும் அந்த நொடிதான் ஆனந்தத்தைத் தருகிறது.

"ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதை" நினைத்துப் பாருங்கள். ஒரு தாய் தன் குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள் (மணி). ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, வீட்டை விட்டு வெளியே சென்று, தன் சொந்தக்காலில் நின்று சாதிக்கும்போதுதான் (ஓசை பிரியும்போது), அந்தத் தாய்க்கு உண்மையான பெருமையும், மனநிறைவும் கிடைக்கிறது.

"என் பிள்ளை என்னுடனேயே இருக்க வேண்டும்" என்று நினைத்தால் (ஓசை மணிக்குள்ளேயே இருந்தால்), அங்கே வளர்ச்சி இல்லை; மகிழ்ச்சி இல்லை. பிள்ளையை உலகத்திற்குப் பறக்க விடும்போதுதான் வாழ்க்கை முழுமையடைகிறது.

அதே போல, ஒரு பூ, தன் நறுமணத்தைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டால் அதற்குப் பயன் இல்லை. அது காற்றோடு கலந்து, பூவை விட்டு விலகிச் செல்லும்போது தான் பயன் ஏற்படுகிறது.

நாம் பல நேரங்களில் கடந்த காலக் கசப்புகளையோ, கோபத்தையோ அல்லது நமது பதவியையோ, நமக்குப் பிடித்தவர்களையோ இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருக்கிறோம்.

மணி எப்படி ஓசையைத் தக்க வைத்துக்கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறதோ, அதுபோல உங்கள் கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதை விட்டு வெளியேற்றும் போது தான் மனம் "குளிர்ச்சியாக" அமைதியாக இருக்கும்.

கீதையில் சொல்வது போல, "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே." என்ற தத்துவம் மனநிறைவுக்கு முக்கியம்.

நாம் ஒரு நல்ல செயலைச் செய்தவுடன் (ஓசை எழுப்பியவுடன்), அதை மறந்துவிடுவது நல்லது. "நான் செய்தேன், எனக்குப் பாராட்டு வேண்டும்" என்று அந்தச் செயலையே பிடித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்தச் செயல் உலகத்தைச் சென்றடையட்டும்; நாம் அதிலிருந்து விலகி நிற்கலாம்.

நம்மிடம் இருக்கும் அறிவு, செல்வம் அல்லது அன்பு ஆகியவை நமக்குள்ளேயே இருந்தால் யாருக்கும் பயனில்லை.

அது மணியை விட்டு வரும் ஓசை போல, உங்களை விட்டுப் பிறருக்குச் செல்லும்போதுதான் உண்மையான மதிப்பைப் பெறுகிறது.

Attachment leads pain; Detachment leads peace!