பிளவு
எஸ்.எல்.பைரப்பா
எஸ்.எல். பைரப்பா எழுதி, ஜெயா வெங்கட்ராமன் தமிழில் மொழிபெயர்த்த 'பிளவு' நாவல், நவீன சமூகத்தில் மனித உறவுகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களையும், சட்டத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான போராட்டத்தையும் மிக நுணுக்கமாகப் பேசுகிறது. மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே ஏற்படாமல் அடுத்தடுத்த சம்பவங்கள் முந்தைய சம்பவங்களின் நீட்சியாக ஒவ்வொரு அத்தியாயமும் விரிகிறது
ஒரு தொழிற்சாலையின் உரிமையாளரான ஜெயகுமார், அவனது குடும்பம், மற்றும் பேராசிரியை இலா ஆகியோரின் வாழ்க்கைப் பாதையில் நிகழும் 'பிளவுகளை' இந்த நாவல் மையமாகக் கொண்டுள்ளது.
நாவலின் தொடக்கத்திலேயே ஜெயகுமார் தனது இரண்டாவது மனைவி மங்களாவால் உள்நோக்கத்துடன் ஒரு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். ஜெயகுமாரின் முதல் மனைவி வைஜெயந்தி, அவரோடு இணைந்து கம்பெனியை வளர்த்தவர். அவளது மறைவிற்குப் பிறகு, தனது தனிச்செயலாளரான மங்களாவைத் திருமணம் செய்கிறார். ஆனால், இந்தத் திருமணம் அன்பினால் உருவானது அல்ல, மாறாக மங்களாவின் திட்டமிட்ட 'சட்ட வலை' என்பதை ஜெயகுமார் பின்னாளில் உணர்கிறார்
ஜெயகுமார் மங்களாவுடன் கொண்ட தற்காலிக உடல் உறவின் விளைவாக அவள் கர்ப்பமடைகிறாள். இதனைத் திருமணத்தில் முடிக்க மங்களா விரும்புகிறார். தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், சிறை செல்வதைத் தவிர்க்கவும் ஜெயகுமார் மங்களாவைத் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்
இந்நாவல் நவீன பெண்ணியச் சிந்தனைகளையும், அவை சில நேரங்களில் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விவாதிக்கிறது. மங்களா மற்றும் வழக்கறிஞர் சித்ரா ஹசூர் போன்ற கதாபாத்திரங்கள் சட்டத்தின் துணையுடன் ஜெயகுமாரை முடக்குகின்றனர். டெல்லியில் நடைபெறும் கசப்பான சம்பவத்தினால் சிறைதண்டனை பெறுவதோடு தனது தொழிற்சாலையையும் இழக்கிறார்.
நியாயம், அநியாயம், மதிப்பு, மரியாதை இதெல்லாம் சட்டத்துக்குச் சம்பந்தப்பட்டது இல்லை. இருக்கற சட்டத்தை உபயோகிச்சுக்கிட்டு ஒவ்வொரு குழுவும் எவ்வளவு பலன்பெற முடியுமோ அது எங்கயும் நடக்கறதுதான்" என்று வழக்கறிஞர் சுப்பராமய்யா கூறும் வரிகள், நாவல் உணர்த்தும் கசப்பான உண்மையைப் பிரதிபலிக்கின்றன.
அதேபோல், பேராசிரியை இலா போன்ற படித்த பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிளவுகளையும் நாவல் சித்தரிக்கிறது. தனது தொழில் முன்னேற்றத்திற்காகக் கணவனைப் பிரிந்து வாழும் இலா, பின்னாளில் ஒரு அமைச்சரின் தொடர்பால் தனது மதிப்பையும் மகளின் பாசத்தையும் இழக்கிறாள்
நாவலில் நம்பிக்கையூட்டும் ஒரு பகுதியாக ஜெயகுமாரின் மகள் வத்ஸலா (புட்டக்கா) மற்றும் நஸிகேதனின் உறவு அமைகிறது. விபத்தில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட வத்ஸலாவை, அமெரிக்காவிலிருந்து திரும்பிய நஸிகேதன் மனப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்கிறான்
பிளவு' நாவல் வெறும் குடும்பக் கதை மட்டுமல்ல; அது நவீன இந்தியச் சட்டங்கள், பாலினப் பாகுபாடுகள் மற்றும் மனிதர்களின் இரட்டை வேடங்களைத் தோலுரித்துக் காட்டும் ஒரு சமூக ஆவணம்.
*திருமணம்ங்கறது ஒரு சவப்பெட்டி. அதுக்குள்ள நம்மள அடச்சு மூடி ஆணி அடிக்கிறாங்க"
*நல்லவர்களுக்கு எப்போதுமே அறிவு கொஞ்சம் குறைவு, பயமும் அதிகம்
*காதலிச்சவங்களை அவநம்பிக்கைக்கு உள்ளாக்குறதவிட அதிகமான வலி உலகத்துல என்ன இருக்கு?"
விவாகரத்திற்குப் பிறகு ஜெயகுமாரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டைப் பெற்றுக்கொண்ட மங்களா, நிம்மதியான வாழ்வைத் தேடுகிறாள். ஆனால், அவளது முன்னாள் காதலன் பிரபாகரன், தனது குடும்ப கௌரவம் மற்றும் பதவியைக் கருத்தில் கொண்டு அவளைத் திருமணம் செய்ய மறுப்பதோடு, அவளுடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறான். வேலைக்காரர்களும் அவளை விட்டுச் செல்ல, வீட்டில் அவள் தனிமைப்படுத்தப்படுகிறாள்.
நாவலின் இறுதியில், மூளை வளர்ச்சி குன்றிய வத்ஸலா, நஸிகேதனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்குகிறாள். மங்களா ஜெயகுமாரைப் பார்க்கச் செல்லும்போது, வத்ஸலா ஏழு மாதக் கர்ப்பிணியாக, ஒரு சுமங்கலிப் பெண்ணின் பொலிவுடன் காட்சியளிக்கிறாள். பின்னர் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறப்பதையும், வத்ஸலா ஒரு சிறந்த தாயாகத் திகழ்வதையும் இலா-வின் மகள் பிரீத்தி எழுதும் கடிதம் உறுதிப்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாக, தவறான உறவுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் தற்காலிக வெற்றியைத் தந்தாலும், உண்மையான அன்பும் தார்மீக விழுமியங்களுமே இறுதியில் நிலைக்கும் என்பதை நாவல் உணர்த்துகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு