#Reading_Marathon2026
#26RM009
Book No:25/150+
Pages:-144
கண்ணாட்டி
-ஷான் கருப்பசாமி
ஷானின் எழுத்துகள் வசீகரமானவை. தான் சொல்ல வந்த கருத்துகளை இயல்பான மொழி நடையில் சொல்லுவார். கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் எந்த வித பூடகமும் இல்லாமல் எளிமையாய் இருக்கும். சமூகத்தில் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் குறித்த எதார்த்தமான கதைகள்.இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
மாமா கதை உறவு சார் கதை அல்ல. மேட்ச் மேக்கர் எனும் ஏ.ஐ செயலியின் சுருக்கம் தான். எதிர்காலத்தில் ஒருவருடன் இணைந்து வாழ பொருத்தம் பார்த்து சொல்லும்.ஷானின் வார்த்தையில் சொன்னால் இன்னார் நம் வாழ்வில் வருவது விளங்குமா இல்லையா என்று சொல்லும்.கதைக்களமே வித்தியாசமா எதிர்காலத்தில் நடக்கும் படி இருக்கும். 108 வயதான தனது தாத்தாவுடன் உரையாடும் முனீத்தின் கண்ணில் அழகி படுகிறாள்.உனக்கு அவள் பொருந்தமாட்டாள் என மாமா சொல்லியும் புனீத் விஞ்ஞானத்துகூட
வீம்பா விளையாட நினைப்பது கதை
சுவாரஸ்யமாய் சொல்லப்பட்டிருக்கிறது. அழகி ஒரு இடத்தில் ரொம்ப ப்ராக்டிகலாக
/ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதே கூட நீண்டகால அடிப்படையில் சலிப்பை உருவாக்கும்/ என சொல்வதும்
மாமாவின் ஒரு அறிவுரையாக
/உணர்வு ஒரு பனிமூட்டம். அதைத் தாண்டி உங்களால் பார்க்க முடியாது/ என்று சொல்வதும் கதை ஓட்டத்துக்கு பொருந்துகிறது.
இந்த நூலின் தலைப்பு கண்ணாட்டி என்பது அன்பானவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.பள்ளியின் முதல்வராய் இருக்கும் ராதிகா செல்லும் காரில் தவறி விழப்போகும் பாட்டியை காப்பாற்றுகிறார். அதன் பின் அன்பாய் ராதிகா பேசுவது பாட்டிக்கும், பாட்டியின் வெள்ளந்தி பேச்சு ராதிகாவுக்கும் பிடித்துப் போக அதன்பின் நடைபெறும் அன்பான நட்பின் உரையாடல் தான் கதை. கதையின் பாட்டியின் மூக்குக் கண்ணாடி முக்கிய கதை மாந்தராகவே வருகிறது. ஓட்டுநர் அன்வர், டீக்கடை ஆறுமுகம் போன்றோர் கதை ஓட்டத்துக்கு உதவுகின்றனர்./ராதிகா பேசும்போது பாட்டி அவள் முகத்தையே தாகம் தீர அள்ளி விழுங்கிக் கொள்வதி போல் பார்ப்பது, பிறகு போதும் என்பது போல அந்த இமைகள் மெல்ல மூடுவது நல்ல காட்சியமைப்பு/
பரணி சில்க்ஸ் மஞ்சப்பை அன்பின் குறியீடாக வெளிப்பாடாக நம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது.
அப்பாவின் எல்லா கனவுகளையும் பிள்ளைகளால் நிறைவேற்ற முடியுமா என்ன?ஆனால் ஒரு சில கலைஞர்கள் அவ்வாறு நினைப்பார்கள்.அப்படித்தான் புல்லாங்குழல் வாசிக்கும் சடகோபனும் தன் பிள்ளை வேணுகோபாலை சிறு வயதில் இருந்தே தயார் படுத்துகிறார். ஆனால் வேணுவோ பணி நிமித்தமாக, காதல் காரணமாக மும்பை செல்கிறார்.அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாதா சூழலில் வேணு அப்பாவிடம் வருகிறார். அதன் பின் என்ன ஆனது என்பது கதை.இறுதிக்காட்சி உணர்வு பூர்வமாய் இருந்தது.
கிராமத்தில் அறிவாளியான குமுதா அக்கா படிப்பதில் சுட்டி. எந்த விசயத்தையும் பதட்டப்படாமல் எதிர்கொள்வாள்.தட்டான் பிடிக்கும் போது பாம்பை பார்த்துவிடும் முத்துவுக்கு குமுதா தான் தைரியம் சொல்வாள். ராசு மாமாவை விரும்பி காதல் கைகூடாததால் மீசை மாப்பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது.அதன் பின் குமுதா அக்காவுக்கு என்ன நடந்தது என்பது மீதிக்கதை. கிராமத்து யதார்த்த வாழ்வியலை இக்கதை சொல்கிறது.
/கெஸ்சு வாங்க ஓடி வர்ற, எனத்துக்குடா நீ அங்க போன, பொட்டாட்ட இரு,/போன்ற கொங்குத்தமிழ் வட்டார மொழி மேலும் மெருகூட்டுகிறது. "தைரியம் இல்லாதவங்களுக்கு எதுக்கு ஆசையும், கனவும்..." போன்றவரிகள் ராசு மீதான இயலாமையைக் காட்டுகிறது.பெற்றோரின் புன்னகையில் அத்தனை சந்தோசமும் அக்காவிடமிருந்தே எடுக்கப்பட்டது எனும் வரி அக்மார்க் ரைட்டர்ஸ் டச். வரதட்சணை விசயம் கதையின் கருத்தாக நெற்றி பொட்டில் அறைந்து சொல்லப்படுகிறது.
ஆபிஸில் அடுத்த வாரம் வெளிநாடு போக வேண்டும் அலுவல் விசயமாக. விமலுக்கு பாஸ்போர்ட் ரினீவல் செய்யவில்லை. காவல் நிலையம் சென்று எல்லாம் வெரிஃபை செய்யக் கொடுத்தும் இன்னும் ஆகவில்லை. இன்னும் நாலு நாள் தான் இருக்கு. போலிசிடம் கேட்டால் இந்தா அந்தானு இழுக்கிறாங்க. ஒருவழியா போன் செய்து இலஞ்சம் எதிர்பார்க்கிறாங்களானு கேட்டுட்டான் விமல்..எஸ்.ஐ க்கு.கோபம் தலைக்கு ஏற இங்க வாடானு கூப்பிட... பயந்து கொண்டே செல்கிறான் விமல். அடுத்து என்ன என்பதுதான் விறுவிறுப்பான லஞ்சம் கதை.ஒவ்வொரு கதைக்குள்ளும் நாமே ஒரு கதாபாத்திரமாக மாறிவிடும் மாயவலை எல்லா கதைகளிலும் வருகிறது.
/ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய்கள் போல இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்/ என்பதில் அழகான உவமை போல் இருந்தது.
காலனியில் இட்லி சுட்டு விற்கும் அமிர்தம் பாட்டியின் கதை தான் கரு.
தத்துப்பிள்ளை ஜேம்சு மற்றும் கூட்டாளி மோகன் இருவரும் தான் நாயகர்கள்.ஒரு கட்டத்தில் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க..
மனித நேயமிக்க அமிர்தம் என்ன செய்தார் என்பது கதை.பசிதாண்டா இந்த உலகத்தில் நெசம். எனக்கு பசிக்குதுனு வெக்கத்தவிட்டு சொல்லறப்பத்தான் ஒரு மனுசன் நூத்துக்கு நூறு நெசத்தப் பேசறான்னு அர்த்தம் என அமிர்தம் சொல்வது சத்திய வார்த்தைகள்.
கதைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு தளத்தில் பயணித்தாலும்.. பொறுமையாக கதை பேசும் நியாயம் படிக்கும்போது உணர முடிகிறது.
எந்த இடத்திலும் மிகைப்படுத்தல்களோ, தேவையற்ற வார்த்தை விரயங்களோ இல்லை. ஒவ்வொன்றும் படித்து முடித்தவுடன் அசைபோட வைக்கிறது.
கதைகளில் அதிக கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒன்றிரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆனாலும் ஒவ்வொன்றும் தனி குணத்துடன் வெளிப்படுத்தியிருப்பார்.கடந்து போகும் காலத்தை குறிப்பிடும்போது அதிலிருந்து கற்றுக் கொண்டு கடந்து போக விடுங்கள் என கதைகள் சொல்கின்றன. மெல்லிய சூழல் எவ்வாறு நம் மனதில் ஒரு கணத்தை அசைத்துப் பார்க்கின்றன என்பதை இக்கதைகள் விளக்குகின்றன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு