#Reading_Marathon2026
#26RM009
Book No:15/150+
Pages:-112
கபர்
-கே.ஆர் மீரா
கே ஆர் மீராவின் புத்தகங்கள் அனைத்தும் தனித்துவமானவை. நாம் புனிதம் என்று கருதுபவை அனைத்தையும் பகடி செய்பவர். உண்மைக்கு மிக நெருக்கமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய எழுத்துக்களிலும் அதனை காணலாம்.நுட்பமான அவருடைய கதைகளில் வரும் எழுத்துக்கள் அனைத்தையும் வசீகரமானவை, எதிர்பாராத நேரத்தில் திருப்புமுனை உண்டாக்குபவை, அறிவார்ந்த தளத்தில் உளவியல் சிந்தனைகளை புள்ளிகள் வைத்து இறுதியில் கோலமிட்டு முடிப்பது போல அவருடைய எழுத்துக்கள் இருக்கும்.
கபர் என்னும் இப் புத்தகம் மதம் சார்ந்த புத்தகம் அல்ல, மனித மனங்களின் மாற்றம் சார்ந்த புத்தகம் என்று நாம் சொல்லலாம். நமக்கான கல்லறைகள் அதிகமானவை. நாமே அதில் நம்முடைய எண்ணங்கள் ஆசைகளை அடக்கம் செய்து கொண்டு வெளிவர முடியாத சூழலில் உலவி கொண்டிருக்கிறோம் ஒருவரின் பணிவிடைகளுக்கு இன்னொருவர் கொடுக்கிற கைமாறல்ல அன்பு, அது ஒருத்தர் இன்னொருவரின் மீது கண்டடைகிற பூரணத்துவம் தான் என்பது கதையின் அடிநாதமாக உள்ளது. காதலுக்கு மணம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் எட்வர்ட் ரோஸ் மலர் என்று சொல்லக்கூடிய அந்த வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த பூக்களின் நறுமணம் நம்மை உணர வைக்கும்.
கதையின் நாயகி பாவனா மாவட்ட நீதிபதியாக உள்ளார். தன் சுதந்திரம் தனக்கான நீதியை தன்னிடத்தில் தேடிக் கொண்டிருப்பவர். ஏழு அத்தியாயங்கள் உடையது. முதலாவதாக கபர் என்னும் சமாதி உள்ள இடத்தின் மீதான உரிமை கோருதல் வழக்கு ஒன்று வருகிறது. அந்த வழக்கினை விசாரித்து கொண்டிருக்கும்போது அமானுஷ்ய சக்தி போல தம்மை ஆட்கொள்வதை பாவனா உணர்கிறார். மயக்கம் அடைகிறார். மருத்துவமனையில் சேர்கிறார். தொடர்ந்து இரண்டு முறை இவ்வாறு நடைபெற்றதால் அந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக இதனை பார்க்கிறார்.
முதல் அத்தியாயத்திலேயே யோகேஸ்வரன் மாமா எனும் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவர்களின் குடும்பத்தில் வயதானவர்கள் அனைவரும் காசி செல்வதை வழக்கமாய் கொண்டு இருப்பார்கள். அவ்வாறு காசி செல்பவர்கள் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் யோகேஸ்வரன் மாமா வரும்போது இரண்டு அழகிய தேவதை போன்ற பெண்களுடன் வருகிறார். அமானுஷ்ய தன்மையை கொண்டதாக இருக்கும் அப்பகுதி சிறுவயதில் இருந்து அவருக்கு ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது. அது இந்த வழக்கினை விசாரிக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக நினைவில் வந்து கொண்டிருக்கிறது.
பாவனாவின் திருமணம் காதல் திருமணம்.பிரமோத் என்பவரை மணந்து கொள்கிறார்.பாவனாவின் வளர்ச்சி குறித்த தாழ்வு மனப்பான்மை காரணமாக இவரின் மீது வெறுப்பு கொள்கிறார். மகன் அத்வைத் ஹைபர் ஆக்டிவ் ஆட்டிசத்தால் குறைபாடுடன் பிறந்ததால்.. பிரிந்து சென்று இன்னொரு திருமணத்திற்கு தயாராகிறார். பாவனாவின் தந்தையும் தாயும் 36 வருடங்களுக்குப் பிறகு பிரிந்து இருக்கின்றனர்.அவர்களுடைய பின்னணியும் விளக்கப்படுகிறது.
யோகேஸ்வரன் மாமாவின் இறப்பு குறித்த கதைகள் இவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்ததாக மந்திர சக்தி கொண்ட மனதினை படித்து தெரிந்து கொள்ளும் கயாளுதின் தங்ஙளுடைய கதாபாத்திரம் குறித்த அறிமுகம் வருகிறது. அவருடைய அமானுஷ்ய சக்தியின் காரணமாகத்தான் ஒவ்வொரு முறை தீர்ப்பு சொல்ல வரும்போதும் ஏதேனும் ஒரு இடையூறு வருகிறது. ஒரு வழியாக இந்த வழக்கின் தீர்ப்பினை தடை விதிக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்கிறார்.
தீர்ப்பு கூறிய மகிழ்ச்சியில் அன்று மாலை மகனுடன் திரைப்படத்திற்கு செல்லும் போது அங்கும் காக்க சேரி வருகிறார். பேச்சினால் மயக்கி அல்லது பாவனாவே உடன் வருவதாக கூறி இருவரும் ஒரு இடத்துக்கு செல்கின்றனர் .பின்பு தான் தெரிகிறது அதுதான் சர்ச்சைக்குரிய இடமான கபர் இருக்கும் இடம். அதற்கு பிறகு கபர் குறித்த பாவனாவின் எண்ணங்கள் மாறுகிறது. தனக்குள்ளேயே ஒரு பூரணத்துவத்தை அவர் கண்டறிய முயல்கிறார். தன்னுடைய பிறப்பின் ரகசியம் குறித்த செய்தியை அறிகிறார்.
நாவல் 112 பக்கங்கள் தான். ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதைகள் நான் லீனியர் மாயயதார்த முறைகளில் நடக்கிறது. படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. கதையின் முக்கிய கதாபாத்திரமான பாவனா தன்னுடைய கணவனின் மறுமணத்திற்கு செல்லும் போதும், மகனிடம் காட்டும் பிரியத்துக்கும், நீதியில் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரமும், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நமக்கு உயர்த்தி காட்டுகிறது.
மற்றொருவர் பாவனாவின் தாயாக வருபவர்.மகளை உற்சாகப்படுத்துகிறார்
ஒரு இடத்தில் தாகூரின் மேற்கோளை கூறி "கூண்டுக்குள் என்றால் சிறகு விரிப்பதற்கு இடமில்லை. ஆனால் அமர கம்பி உண்டு.வானத்தில் என்றால் சிறகு விரிப்பதற்கு இடம் உண்டு. ஆனால் அமர கம்பி இல்லை" எந்த வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுதந்திரம் அளிக்கிறார்.
காதலால் அவ்வளவு ஒன்றும் அழ வைத்திட முடியாது.. ஆனால் அவமானம் செய்வதற்கு முடியும் என காதல் பிரிவின் துயரத்தை தனது சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். நீதி சார்ந்த வார்த்தைகளை நாவல்களில் அவ்வப்போது பயன்படுத்துகிறார். உதாரணத்திற்கு
* உறக்கத்தின் நீதிபதி என்னுடைய மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்.
*இந்திய தண்டனைச் சட்டத்தில் சிரிப்பையும் அழுகையையும் குறித்த பிரிவுகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தேன்..
*வாழ்க்கை ஒரு வழக்கல்ல தீர்ப்பு தான் தெய்வம் யாருக்கும் நீதிபதி அல்ல எல்லாருக்கும் சாட்சி தான் என்று புரிந்து இருப்பார்.
தந்தை சீரியல் பார்த்துக் கொண்டு தன்னிடம் பேசுவதை பார்த்திருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு தந்தை இயல்பாக பேசுகிறார் இப்போது மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது அதற்கு
*அன்பின் ஆயுள் மின்சாரம் வரும் வரைக்குமே இருந்தது என்று வெளிப்படுத்துகிறார்.
இல்லாமையின் பரிபூரணத்துவத்தை உணர வைக்கும் விதமாக நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் படியும், நாமே அந்த கதாபாத்திரமாக ஒன்றி போகும்படியும் அமைந்துள்ளது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்துள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு