பகத்சிங் பிறந்ததினம்
மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது 23 மட்டுமே ஒரு தலைசிறந்த தலைவனுக்குரிய அத்தனை அடையாளங்களம் ஆளுமைகளுடன் இருந்திருக்கிறார். தூக்கிலிடப்படுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு 1930 ஜூலை மாதம் 24 ஆம் தேதி லாகூர் சிறைச்சாலையிலிருந்து தன் பள்ளிக் கால நண்பன் ஜெயதேவ் குப்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதத்தில் மிலிட்டரியிசம்,why men fight,Civil war in France,Land revolution in Russiya உள்ளிட்ட
பத்து புத்தகங்களை பற்றி பட்டியலிட்டு எழுதி.. இந்த பத்து புத்தகத்தையும் துவாரகதாஸ் நூலகத்திலிருந்து எப்படியாவது எடுத்து..வருகிற ஞாயிற்றுக்கிழமை தனது தம்பி என்னை பார்க்க வருகிறான் அவரிடம் கொடுத்து விடுமாறு வேண்டுகிறார்.
அதுமட்டுமின்றி பஞ்சாப் பொது நூலகத்தில் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற புத்தகத்தையும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் நாற்பது ஐம்பது வயது நிரம்பியவர்கள் மட்டுமே படித்து உள்வாங்கிக் கொள்ள முடியும்.ஆனாலும் இறப்பதற்கு முன் இதனை படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.
அதோடு நிற்காமல் பாஸ்டல் சிறைச்சாலை நூலகத்தில் ஒரு புத்தகப்பட்டியல் அனுப்பி புத்தகம் படிக்க வேண்டியுள்ளார்.இவை அனைத்தும் அரிய புத்தகங்கள். லாகூரில் துவாரகதாஸ் நூலகம் உள்ளது.இந்நூலகத்தை சுற்றித்தான் பகத்சிங்,சுகதேவ் கல்லூரிகளில் படித்து வந்துள்ளார்கள். அந்நூலகத்தின் நூலகராய் உள்ள ராஜாராம் சாஸ்திரியை பற்றி பெருமையாக சொல்லியுள்ளார். தனக்கான மிகச்சிறந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்க கொடுத்தவர் என பெருமையாய் கூறியுள்ளார்.
காந்தியவாதியான நூலகர் ராஜாராம் 1930 சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று பகத்சிங்குடன் தங்கியுள்ளார்.தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப் படவில்லை.
தி டிரிபியூன் எனும் இதழில் வெளியான நூல் விமர்சனம் ஒன்றை படித்துவிட்டு அந்நூலை வாங்கி வர வழக்கறிஞர் பிராணநாத் மெஹாதா விடம் கேட்டார் பகத்சிங்.அந்நூல் மாமேதை லெனின் வாழ்க்கை வரலாற்றுநூல்.1931 மார்ச்23 வழங்கினார்.அன்று மாலைதான் தூக்கிலிடப்பட்டார்
கடைசியில் தூக்கில் போடுவதற்கு முன்னால் மார்ச் 23ஆம் தேதி மாலையில் வெளியே வா என்று அழைத்த போது உலகின் மிகப் பெரியதொரு புரட்சியாளனுடன் கை குலுக்கி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த பகத்சிங் இன்னும் கொஞ்சம் வாசித்து விட்டு வந்து விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவாறு பக்கங்களை வாசித்து முடித்துவிட்டு தூக்குமேடை ஏற தயாரானார்.
ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.அப்போது ஒரு சுதந்திர கீதத்தை பாடினர்
அந்த நாளும் கண்டிப்பாக வரும்,
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்,
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்...
என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.
சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது."தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.
"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன.தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
பகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் இறக்க விருப்பம்?".
சுகதேவ் முதலில் சொல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.
இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.சிறையில் அடக்கம் செய்தால் பிரச்சனை வரும்.வெளியில் அலைஅலையாய் கூட்டம். எனவே சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது.
மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டுசெல்லப்பட்டது.
இறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது. சிதையூட்டிய உடலை காண மக்கள் கூட்டம் திரண்டு வந்து பார்த்தனர். மறுநாள் புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.
*புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன்றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல
*புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையைக் காணிக்கையாக்குகிறோம்
*என்னை தூக்கலிடும்போது என் கண்களை கட்ட வேண்டாம், சாகும்போது கூட இந்த மண்ணை பார்த்து கொண்டே தான் சாக வேண்டும்
*நேற்றைய வரலாறு தெரியாது போனால்,இன்று நடப்பது புரியாமல் போகும்.இன்று நடப்பது தெரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை
ஏராளமான புத்தகங்களை வாசித்து அறிவை விரிவு செய்து கொண்ட இளம் தலைவர் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன்