கற்றதும் பெற்றதும்-74
*மணி
"எனக்கென்னவோ ஊர் என்பது மனிதர்கள் மூலமாகவும் மனிதர்கள் என்பவர்கள் தங்களது பேச்சு மூலமாகவுமே பளிச்பளிச்சென்று அடையாளம் காட்டிக்கொள்வது போலவும் தோன்றுகிறது.
-வண்ணதாசன்
(சில வாழைமரங்கள்)
"சமீபத்தில் என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது
ரசனை குறித்த விவாதமாய் மாறியது.மிஷினையும் மனிதனையும் வேறுபடுத்துவது ரசனைகளே.சின்ன விஷயங்களை ரசிக்காமலும் பிரம்மிக்காமலும் இருக்கும்போது மனம் மிருகமாய் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறது.பொறுமையும் அன்பும் மறைந்து எதிர்படும் மனிதர்களை நேசிக்காமல் கடந்துவிடுகிறோம். வண்ணதாசன் காட்டும் ரசனை நயம்.அலாதியானது.அதை நினைத்து பயணம் செய்தாலே மனம் புனிதமடைகிறது.
சகமனிதர்களை கவனித்து அவர்களை உள்வாங்கி கவனிப்பது தவறி வருகிறோம் .இதனால் என்ன இலாபம் என கேட்கும் வியாபார மூளை வந்த பிறகு எதிரில் வருபவன் எப்போதும் ஒரு பிண்டமாகத்தான் தெரிவான். மிஷின் யுகத்தில் நாமும் ஒரு மிஷினாக மாறியதை உணர நீண்ட காலம் ஆகும்.மனிதன் ரசிப்பு தன்மையை உணர வைப்பதில் வண்ணதாசன் எழுத்துக்கு ஆற்றலுண்டு.
#ஈரம்
கதை முழுவதும் எழுத்துகளில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.பக்கத்து வீட்டில் போர் போடும்போது அந்த வீட்டுத்தலைவன் முதலில் பீய்ச்சி வரும் தண்ணீரை எடுப்பான்.அந்த ஈரம் தான் கதை.
தன் மதனி (அண்ணி)வீட்டுக்கு செல்லும் காட்சி..முதல் பத்தி ஆரம்பிக்கும்..
" போன வருடம் இதே மாதிரி ஒரு சனிக்கிழமை மத்தியானம் நான் போயிருந்தேன். அன்றைக்கும் மதனி பாக்கு கலர் சேலை கட்டியிருந்தாள். அப்போதுதான் கதவை சாத்தி இருப்பார்கள் போல கையிலே வைத்திருந்த உடுமாத்து துணி தோளில் போட்டுக் கொண்டு வந்தார்கள்.இப்பதான் வர்றியா என்று கேட்ட முகத்தில் சிரிப்பு எப்படி. இப்படி சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது மதனிக்கு என்று தெரியவில்லை. தலைக்கு எண்ணெய் தேய்த்த கையை கடைசியில் முகத்தில் பூசிக் கொள்வது போல் லேசான எண்ணெய் பசை இருக்கிற அந்த முகத்தில், இன்ன இடம் என்று சொல்ல முடியாமல், எல்லா இடத்திலும் அந்தச் சிரிப்பு தெரியும்"
இவ்வாறு ஒரு பத்தியை துவங்கினால் யார்தான் அக்கதையில் பங்குகொள்ளாமல் அடுத்த பக்கம் விலகிப்போவார்கள்.அந்த வீட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்கிறது.
#அச்சிட்டு வெளியிடுபவர்
கோமு அக்காவுக்கு சாகிற வயசா னு கேட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்து நகர்கிற ராமையாவின் பார்வையில் விரியும் கதை.இறந்த அக்காவின் வீட்டின் வெளியிலிருந்து வழக்கம்போல்.சிறுவயதில் அழைத்தது போல் கோமு அக்கானு கூப்பிடுவார்.உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கும்.நேரில் வாழ்வதை விட சிறந்தது நினைவில் வாழ்வது போல திரும்பிச்செல்வான்.கனத்த இதயத்துடன்..
சின்ன வயசில் நம் தெருவிலும் கோமு அக்கா போல் அழகான யுவதிக்கு எஸ் கார்டா போவோம். நம்மிடம் சிரித்து பேசும்போது நம்மைதான் விரும்புறாங்கனு நெனைப்போம்.அதான் ஆண்களுக்கான first love failure.நம்ம றெக்க படத்தில வரும் இளம் விஜய் சேதுபதி மாதிரி.
#அரசமரம்
இருபிள்ளைகளின் வீட்டில் இரு மாதம் தங்கிவரும் அப்பாவை நாகலிங்கம் எனும் உறவினர் சந்தித்து என் வீட்டிலும் இரு மாதம் தங்கு என கைப்பிடித்து இழுத்துப்போவது கதை.அப்போது அவர் கையைப் பிடித்து இழுப்பார்.
"சமீபத்தில் யாருமே இப்படி தன் கையை பிடிக்காததும், காய்ப்பும் சொர சொரப்பும் நிறைந்த இன்னொரு ஆணின் கைகள் இவ்வளவு ஆதரவுடன் எளிய பரிவுடன் பட்டும் படாமலும் தனக்கு உதவ முன்வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதை உணர உணர அவருக்கு அழுகிற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.
வீடு வீடாக மாறி தங்கும் முதிர்ந்த வயதில் ஏற்படும் கூச்ச உணர்வை மிக அழகாய் உணர்த்தியிருப்பார்.
#சில வாழைமரங்கள்
ஊர் ஞாபகம் வந்தால் தன் ஊர்க்காரரை தேடிச்சென்று பேசுவது ஊருக்கே போய்விட்டு வந்த சுகம்.அப்படித்தான் சைலப்பன் வீட்டுக்கு சென்று அலவலாகி வருகிறார் இக்கதையில்.நகரத்து வாழ்வின் அவசரத்தில் சொந்த ஊர் பற்றி பேசுவதே சுகம்தான்.
அப்போது வீட்டிலிருந்த
தங்கம்மை அத்தையை பார்க்கத்தோன்றியது.குரல் மட்டும் கேட்டது அடுப்படியில்..அது வாழைமரத்தை தொட்ட மாதிரி இருந்ததாக சொல்லியிருப்பார்.
#கற்றதும் பெற்றதும்
கதை இருக்கா..ஜெட் வேகத்தில் ஓடும் உலகில் ஈரச்சாக்கை வெறும் காலில் மிதித்த பாதம் உணரும் குளுமை போல் வண்ணதாசனின் எழுத்துக்கள். இவரின் மொழிநடை அபாரமானது. இயல்பாய் எழும் காலடி ஓசையை போல மென்மையானது.அவசர உலகில் நாம் கவனியாது விட்ட எல்லாவற்றையும் அவர் கவனப்படுத்துகிறார்.வண்ணதாசனின் கதைகளை படிக்க படிக்க நாம் மென்மையாகவே மாறிவிடுகிறோம். மேலும், எதிர்படும் மனிதர்களை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கிவிடுவோம். ஜிமிக்கி அணிந்த பெண் அதற்கு வெல்ட் வைத்தது போல் தலையாட்டாமல் அமர்ந்திருப்பது ஜிமிக்கிற்கு செய்யும் துரோகம்.அதற்கு அவள் கல் கம்மலோ மொட்டுக்கம்மலோ கூட அணிந்து கொள்ளலாம்.
#ரசித்தவை
*கடுகை இப்படிக்கொட்டி,அகலமாக விரலால் பரப்பி விடும்போது விரல்களின் கீழே கடுகுகள் உருள்வது நன்றாக இருக்கும்.
*இன்னைக்கு என்ன சொல்லப்போகிறாளோ தெரியவில்லை.என்ன சொல்லப்போகிறோம் என்று முன்தீர்மானம் செய்யாமல் அவ்வப்போது தோன்றுகிறதைச் சொல்லும்போதுதான் நன்றாக இருக்கும்.
* அழகு என்றால் என்ன? தன்னைப் போலவே இன்னொன்றை ஞாபகப்படுத்த வேண்டும். அப்படி உண்டாக்குகிற ஞாபகங்களின் அடுக்குகள் முடிவற்றதாகிப் பெருகவேண்டும். பெருக்கத்தின் தளம்பல் அற்ற நிலையில்- கிணற்றில் மிதக்கிற புளிய இலை மாதிரி- தானும் அசையாமல் இருந்து நம்மையும் அசையாமல் இருக்கப் பண்ண வேண்டும்
*சிலரை பார்த்த உடனேயே அவரைப்போல் பேச வேண்டும், நடக்க வேண்டும் எனத் தோன்றுவிடுகிறது.
*இன்னொரு முகத்தை ஞாபகப்படுத்தாத முகம் என்ன முகம்?சிரிப்பு என்ன சிரிப்பு?
*நிஜத்துக்கு பயப்பட்டு என்ன ஆகப் போகுது?
*ஒரு புத்தம் புதிய தீப்பெட்டி
வாங்கி.ஒரே ஒரு குச்சியையாவது உபயோகித்து இருப்பார்களோ என்னவோ. தவறிக் கீழே விழுந்து இருக்கவேண்டும். நறுக்கி வைத்தது மாதிரி, ஒரே சீராகவும் நெருக்கமான அடுக்குக இருந்த தீப்பெட்டியை மூடி, ஒரு தடவைக்கு இரண்டு தடவை குலுக்கிப் பார்த்தார்.கைக்கு அடங்கின அந்தக் கனமும்,குலுக்கின போது ஏற்பட்ட சத்தமும் அவருக்குப் பிடித்து இருந்தன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு