Monday 29 April 2024

உலகைச்சுற்றிய ஆமை வாழ்க்கையில் ஜெயிக்க புத்திசாலித்தனம் அவசியமில்லை. முட்டாளாக இல்லாமல் இருந்தாலே போதும். மிகப்பெரிய புத்திசாலிகள் எல்லாம் சின்ன, சின்ன முட்டாள்தனத்தால் தான் இடறிவிழுந்து தோற்கிறார்கள். முட்டாள்தனங்களை தவிர்த்துவிட்டு , எளிமையான தேர்வுகளை செய்து ஐம்பது ஆண்டுகள் கழித்து திரும்பிபார்த்தால் மிகப்பெரிய சிகரத்தின் உச்சியில் நிற்போம். மிகப்பெரிய சிகரங்களின் உச்சியை அடைய ஒரே வழி தவறுகள் செய்யாமல், நிதானமாக, மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதே ஆகும். முயல் 100 மீட்டர் ரேஸை ஜெயிக்கும். ஆனால் உலகை சுற்றிவருவது ஆமையால் தான் முடியும்.-நியாண்டர் செல்வன்

உண்மை ஒன்றே.நாம்தான்அதைப் பலவாறாகக் கற்பிக்கிறோம்(ஏகம் ஸத்:விப்ரா பஹூதா வதந்தி)-ரிக்ஒரே உண்மையைத்தான் பல்வேறு சமயங்கள் பல்வேறு வகையில் விளக்குகின்றன.விளக்கங்கள் வேறு; ஆனால் விளக்கப்படும் உண்மை ஒன்றுதான்.ஏனெனில் உள்ளது ஒன்றுதான்.-கவிக்கோ

துன்பம், துயரத்தை தடுக்க முனைகையில் அவை அதிகரிக்கவே செய்கின்றன. அவற்றை பற்றி கவலைப்படுவதை நிறுத்தினால் அவை அதன்பின் நம்மை துன்புறுத்தும் சக்தியை இழக்கின்றன. மகிழ்ச்சி வேண்டும் என தேடி அலைகையில் உன்னிடம் மகிழ்ச்சி இல்லை என நீ ஒப்புக்கொள்வதாக தான் பொருள். மகிழ்ச்சியை தேடுவதை நிறுத்தினால் அது உன்னிடமே இருப்பதை நீ கண்டுகொண்டாய் என பொருள் ~புத்தர்

Sunday 28 April 2024

ஆலோலம்வயலில் தானியங்களை தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்ட முடியாது, ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’வாயால் ஒலி எழுப்புதல் என்று அழைக்கப்படுகிறது.#info

ஹேர்மிசஸ் கோட்பாடு


ஹோர்மிசிஸ் என ஒரு கோட்பாடு பயாலஜியில் உண்டு .மிகச்சிறிய அளவுகளில் விஷம் தொடர்ந்து கொடுக்கபட்டால் அந்த உயிரினம் வலுவானதாக மாறும் என்பது.

விஷம் மட்டுமில்லை,,மிக சிறிய அளவுகளில் துன்பம், துயரம், ஸ்ட்ரெஸ் அளிக்கும் விசயமும் இப்படியே நன்மையாக மாறும்...

மெக்கினாக் தீவுகளில்...அங்கே கார்கள் தடைசெய்யபட்டிருந்தன. குதிரைவண்டிகள் தான் பயணிகளை இழுத்துபோயின. இரு குதிரைகள் 15 பேர் கொண்ட வண்டியை இழுத்துசென்றன. வண்டிக்காரரிடம் கேட்டதற்கு "இப்படி கடுமையாக வேலை செய்யும் குதிரைகள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் குதிரைகளை விட நீண்டகாலம் வாழும், நோய்நொடியும் குறைவாகவே வரும்" என்றார்.

 உடல்பயிற்சியின் நன்மை என மட்டுமே இதை சொல்லமுடியாது.

 ஆய்வு ஒன்றில் எலிகளை இரு பிரிவாக பிரித்தார்கள்..ஒரு பிரிவு எலிகள் குளிர்நீரில் தினம் 4 மணிநேரம் விடப்பட்டன. குளிரில் நடுங்கியபடி அவை நாலுமணிநேரத்தை கழித்தன. மற்றொரு பிரிவு எலிகளை அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டார்கள். தினம் குளிரில் இருந்த எலிகள் சும்மா இருந்த எலிகளை விட நீண்டநாள் உயிர்வாழ்ந்தன. 

ஆக குதிரைகளுக்கு வேலை, எலிகளுக்கு குளிர்..இருவிதமான ஸ்ட்ரெஸ்கள் தொடர்ந்து கொடுக்கபட்டன...அவை அவற்றின் ஆயுளையும் உடல்நலனையும் கூட்டின.

ஆக: நம் வாழ்வில் சின்ன, சின்னதாக வரும் துன்பம், துயரம் இவை நம்மை வருங்காலங்களில் மிக வலுவானவர்களாக ஆக்குகின்றன.

சொகுசான வாழ்க்கை நம்மை மிகபலவீனமாக ஆக்கும் .

சிறிய அளவிலான துன்பங்கள் நம்மை வலுவானவராக ஆக்கும்

-நியாண்டர் செல்வன்

நிறைய எழுதுவது என்பது காணாமல் போய்விடுவோமோ என்ற உள்பயத்தின் வெளிப்பாடு. குறைவாக எழுதுவது என்பது லௌகீகக் கடலின் வெளியொதுங்கிப் பிறவியமுதைக் குடிப்பதாகப் பாவித்துக்கொள்ளும் தப்பித்தல்! இடைப்பட்டிருப்பதே இயல்பு.-கல்யாணராமன்

Saturday 27 April 2024

"நடந்தபடி தனிமையில் சிந்திக்காதவன் வாழ்க்கையை வாழ்வதே இல்லை..-ஹென்றி டேவிட் தெரோ.

உயர்ந்த ஓக் மரத்திலே ஒற்றை ஆந்தை வசிக்குது; அதிக அளவு பார்க்குது, அளந்தளந்து பேசுது! குறைந்த அளவு பேசினால் கூடிக் கேட்பர் யாவரும்! பறவை அறிந்த உண்மையைமனிதர் அறிவதில்லை ஏன்?-ஆங்கிலக் கவிதை

அப்பா அவளிடம் என்ன வேண்டுமெனக் கேட்டார்?அவள் யோசித்தாள்.யோசித்தல் என்பது, கண்களை மேலே செருகிக் கொள்ளுதல்;கூரையைப் பார்த்தல்; ஏற்கெனவே கடித்துத் துப்பப்பட்டிருந்தாலும், இருப்பது போல் பாவித்துக்கொண்டு நகத்தைக் கடித்தல்; இவை அனைத்தையும் செய்து விட்டு ஜோதி சொன்னாள்:-பிரபஞ்சன்

Thursday 25 April 2024

கடைசி ரிங் வரைக்கும் அட்டன் பண்ணுவோம்னு நம்பிகையோட அந்த பாக்கம் இருக்கவனுக்கு, நாம முதல் ரிங்லயே சைலன்ட்ல போடுறது தான் நம்பிக்கை துரோகம்..-செல்வா

ஒரு குடம் நீரில் ஒரு துளி விஷத்தை விட்டால் மரணம் ஏற்படும். கடலுக்குள் ஒரு துளி விஷத்தை விட்டால் எந்த விளைவுகளும் ஏற்படாது. நம் அறிவு குடத்தை போல குறுகியதாக இருந்தால், அதனுள் கலக்கும் மிகசிறிய தீய எண்ணமும் நம்மை கெட்டவனாக மாற்றிவிடும். நம் அறிவு கடலை போல பரந்ததாக இருந்தால், அதனுள் கலக்கும் தீய எண்ணங்கள் நம்மையும், பிறரையும் பாதிக்காது. கடல் அனைத்தையும் விழுங்கி ஜீரணித்துவிடும்.-திச் நாட் ஹான்

Wednesday 24 April 2024

நீரில் இருக்கும் ஆக்சிஜன்


நீருக்குள் இருக்கும் ஆக்ஸிஜனை ஏன் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை?

பாலில் இருக்கும் நெய்யை நேரடியாக நாம் சாப்பிட முடியாதல்லவா ?அது போலத்தான் நீரில் இருக்கும் ஆக்சிஜனையும் .

வெப்ப ரத்த பிராணிகள் ,மற்றும் குளிர் ரத்த பிராணிகள் என்று இயற்கை இரண்டுவகையாக பிரித்துள்ளது .அவை முறையே தரையிலும் ,தண்ணீரிலும் இருப்பவை .ஒன்றில் உயிர்வாழும் உயிர்கள் மற்றவற்றில் வாழ இயலாதவாறு அவற்றின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலம் வேறுபட்டு இருக்கின்றது .

சில மட்டும் இரண்டிலும் இருக்கும் .தவளை போல .

திமிங்கலம் நீரில் இருந்தாலும் அதுவும் மனிதரை போல சுவாசிப்பவையே .நீரில் இருந்து மீன்கள் ஆக்சிஜனை பிரித்தெடுப்பதுபோல எடுக்காமல் ,நீரின் மேல் வந்து காற்றை உட்கொண்டுவிட்டு நீரினுள் செல்கின்றது .

-படித்தது

கற்கை நன்றே-36


கற்கை நன்றே-36
*மணி

ஜப்பான் நாட்டில் கென்கோ என்பவர்
மனிதர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து எழுதியுள்ளார். அதில் மனிதர்கள் எப்போது தவறிழைப்பார்கள் என சொல்லியிருப்பார்.

மரம் ஏறுவதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண் டிருந்தான் ஒருவன். கற்க வந்த ஒருவன் பயிற்சியை முடித்து மரம் ஏறிக்காட்டினான். அவன் கடினமான பகுதிகளில் ஏறும்போது அமைதியாக இருந்த அந்தப் பயிற்சி கொடுப்பவர் எளிமையான இடத்திற்கு வரும்பொழுது 'ஜாக்கிரதை ' 'ஜாக்கிரதை' என்று குரல் கொடுத்தார். 

அந்த இடத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து கீழே இறங்கி வந்த அந்த இளைஞன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான். "நான் கடின மான பகுதிகளுக்குச் செல்லும் போது அமைதி யாக இருந்துவிட்டு எளிய பகுதிக்கு வரும்போது என்னை உஷார் படுத்தினீர்களே! என்ன காரணம்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த பயிற்சியளிப்பவர், கடினமான இடம் வரும்போது நீயே கவனமாக இருப்பாய். எளிமையான இடம் வருகிறபோது தான் நாம் அதீத நம்பிக்கையால் தவறிழைப்போம் என்று அறிவுறுத்தினார்.

நாம் செய்யும் செயல்களில்..அதீத தன்னம்பிக்கை,எதனையும் குறைவாக மதிப்பிடுவது,நம்மைப் பற்றிய பெருமிதம் போன்றவைகளில் தவறிழைக்கிறோம். மாற்றிக் கொள்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

சுதர்சன்

உலக புத்தக தினம்! என்னிடம் வந்து, எனக்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்! என்று எத்தனையோ பேர் கேட்டது உண்டு. ஆனால், ஒரு புத்தகத்தைப் பரிந்துரை செய்வதிலும் பார்க்க, அதை வாங்கிப் படிப்பதிலும் பார்க்க நுட்பமான காரியங்கள் நிறையவே இருக்கிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. முதலாவதாக, "நம்மைப்போல யோசிக்கிறாரே இந்த எழுத்தாளர்!" என்கிற எழுத்து உங்களை நல்ல சௌகரியமாக வைத்துக்கொள்ளும். ஆனால், அப்படியான எழுத்துத் தருகிற சௌகரியம் முக்கியமா? அல்லது, "இப்படியும் முன்னோக்கி யோசிக்கலாம்!" என்று உங்களைக் கொஞ்சம் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி நுட்பமாய் மேலே தூக்கிவிட அழைக்கும் எழுத்து முக்கியமா? என்பதை நீங்கள்தான் கண்டறியத் தயாராக இருக்கவேண்டும். அதற்காக உங்கள் மூளையைப் பயிற்றுவிக்கவேண்டும்.

2. முதலாவது கூற்றின்படி, அப்படியானதொரு கண்டடைதலை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், நீங்களும் உங்களைக் கொஞ்சம் தயார் செய்துகொள்ளவேண்டும். அதற்கு  நீங்கள் கேட்பவராக இருக்கவேண்டும். எங்கிருந்து பெற்றுக்கொள்கிறீர்களோ அதை உங்களைவிட உயர்வான ஒன்றாகவும் குருவாகவும் நினைக்கவேண்டும். காரணம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்றை நமக்குத் தருகின்ற வல்லமை அதனிடம் இருக்கிறது. அதை நீங்கள் மதிக்கவேண்டும். 

3. எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் நியூரான்கள் ஒன்றையொன்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். உதாரணமாக, ஒரு நாவல் உங்களை மனித உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளச் செய்கிறது என்றால், ஒரு விஞ்ஞான நூல் அல்லது ஆய்வு நூல் ஒரு விடயத்தைப் பகுத்தறிந்து கற்கச் சொல்லித்தரும். இந்த இரண்டையும் இணைத்து இடையில் ஒரு மையப்புள்ளியை உருவாக்கி உங்களைச் சிந்திக்க வைப்பது நியூரான்களின் வேலை.

4. ஒருபக்கம் பழைய அனுபவங்களையும், மனித உள்ளத்தையும் கற்றுக்கொள்கிற அதேநேரம் மறுபக்கம் மாறிவரும் உலகத்தின் போக்கையும், சிந்தனையையும், புதிய உலகம் எதிர்கொள்ளும் சவால்களையும் கற்றுக்கொள்ள விளையவேண்டும். இது நமது சிந்தனையின் போக்குக்கு மிக உதவியாக இருக்கும். காரணம், பழைய அனுபவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் பழைய சிந்தனைக்குள் வைத்திருக்கப் பார்க்கும். அதனால் புதிதாக வருகிற தொழிநுட்பம் முதலாக, விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் வரை எல்லாவற்றையும் படியுங்கள். முடிந்தளவு அடிப்படையையேனும் படியுங்கள்.  

5. எத்தனை புத்தகங்கள் படித்தாலும் எல்லாவற்றையும் கூட்டத்தோடு சேர்ந்து சிந்திக்காமல் அல்லது செயற்படாமல்  தனக்கெனத் தனியாக உருவாக்கிக்கொண்ட ஒரு நிகழ்ச்சிநிரலின்படி சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் முக்கியம். சுயமாகச் சிந்திப்பதும் எழுதுவதும் செயற்படுவதும் மிகவும் சிரமமான காரியம். அதற்காக நாம் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் இறுதியாக நீங்கள் உங்கள் தனிச் சிந்தனையோடு இருப்பதும் செயற்படுவதும் உங்களுக்கு நீங்களே  கொடுத்துக்கொள்ளும் பரிசாக இருக்கும். காரணம் அப்படி இருக்கும் போது உங்களால் மேலும் மேலும் கற்றுக்கொள்ள முடியும்.

6. கற்கின்ற, வாசிக்கின்ற விடயத்தில் ஒரு பத்து வீதத்தையேனும் உங்கள் யதார்த்த உலகில் நிகழ்த்திப் பார்க்கவேண்டும். சராசரி எழுபது வருட வாழ்க்கையில் நம் வாழ்நாள் வாசிப்பிலிருந்து ஒருசில கூறுகளையேனும் எடுத்து, நம் நியூரான்கள் மூளையில் உருவாக்கிய தொடர்புகளின் விளைவினால் உருவான அறிவில் பத்து வீதத்தையேனும் நம்மால் நிஜ வாழ்க்கையில் பிரயோகப்படுத்திப் பார்க்க முடிந்தால் அது நமக்கு ஒரு திருப்தியைத் தரும். அது உங்களை மேலும் மேலும் கற்கச் சொல்லித் தூண்டும். 

7. கற்கத் தயாராவதும், கற்பதும், தொடர்புபடுத்துவதும், தொடர்புபடுத்தியதை தனிச் சிந்தனையில் அலசுவதும். அதைப் பிரயோகித்து சுவை காண்பதும் முடிந்தவுடன் கற்றவற்றைக் கத்தரித்து அழகாக்க முயலவேண்டும். அவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். புதிதாக ஒன்றைக் கற்கும்போது பழையதில் தேவையில்லாதவற்றை அகற்றத் தெரியவேண்டும். அவற்றை நறுக்கி சிந்தனையைச் செழுமைப்படுத்தத் தெரியவேண்டும். 

8. உங்களையும் உங்கள் கற்றலையும் சிந்தனையையும் செழுமைப்படுத்தும் போது நீங்கள் எதை நோக்கிப் போகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் கற்றல் உங்களை வெறுமனே கண்மூடித்தனமாக ஒரு சித்தாந்தத்தையும் ஒருவழிப் போக்கையும் நோக்கிக் கொண்டுசெல்கிறதா? ஒரு சார்பாக மட்டும் சிந்திக்க வைக்கிறதா என்பதை மீள்பரிசீலனை செய்து கற்றலை மேலும் விரிவுபடுத்துங்கள். அதாவது உங்கள் மூளைக்கு மேலும் மேலும் சவாலான சிந்தனைகளை வழங்கி நீங்கள் சிந்திக்கிற விதம் சரிதானா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே கற்ற விடயத்தின் உறுதித் தன்மையைப் பரிசீலியுங்கள்.

9.  கற்பது ஒருபக்கம். அதைச் சுவைபடக் கற்பது இன்னமும் முக்கியமானது. உங்களுக்குப் பிடித்த, மிகப்பிடித்த விடயத்தையும் அவ்வப்போது கற்க ஆரம்பியுங்கள். புத்தகத்தோடு அதையும் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு பாடல் கேளுங்கள். அதில் கற்பனையைப் படியுங்கள். ஓவியத்தில் வண்ணங்களைப் படியுங்கள். இசையைப் படியுங்கள். இரசிக்கப் பழகுங்கள். ஒன்று கற்பனை உலகம். இன்னொன்று இன்னொருவரின் அனுபவத்தையும் அறிவையும் படிப்பது. அடுத்தது நிகழ் உலகம்.  இந்த மூன்றையும் ஒரு கோலம் போல் இணைக்கவேண்டும். இப்படி ஒன்றைச் சுவைபடக் கற்பது முக்கியமானது.

10. இறுதியாக இந்தக் கற்றலை மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் கற்கத்  தயாராகவேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. புத்தகங்களுக்கு முடிவில்லை. நாம் அதன் முடிவை விட, கற்பதில் இன்பம் காண்கிறோம், வாசிக்கிற கணப்பொழுதில் இன்பம் காண்கிறோம் என்கிற உண்மையையும் உணர்ந்தே புத்தகங்களை வாசிக்கவேண்டும்.

-சுதர்சன்

பச்சை வலை


புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக? —

முக்கியமாக இது அந்தக் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் நடப்பதைக் கவனிக்க நேர்ந்தால் கவனக்குறைவாக கீழே விழ நேரிடலாம். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

அதிகமான சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் விழுவது அங்கு பணிபுரிபவர்களை விரைவில் சோர்வடையச்செய்யும். இதனைத் தவிரக்கும் விதமாகவும் இவ்வித மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது .

மேலும் வெளியில் நடப்பதை கட்டிட வேலையாட்கள் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் வேலையில் குறைபாடு மற்றும் வேலையில் தாமதம் ஆகியனவும் நேரிடும்!

அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கை இது. கட்டிடத்திலிருத்து வெளியேறும் தூசி போன்றவற்றிலிருந்து பக்கத்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இவ்விதம் வலை அமைப்பு கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது.

கட்டிடத்தின் வெளிப்பூச்சு சமயம் சிமென்ட் கலவை அடுத்த கட்டிடத்தின் மீது விழுவதைத் தடுப்பதற்காகவும் பெயிண்ட் அடிக்கும்போது பக்கத்து கட்டிடத்தின்மீது சிதறாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. இவைகள் வலையினுள்ளேயே தங்கிவிடும்.

கட்டிடம் முடியும் வரை மற்றவர்களின் கண்ணேறு (திருஷ்டி) கட்டிடத்தின் மீது படுவதைத் தடுப்பதற்காகவும் இவ்விதம் கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை நிற வலையமைப்பு ஏற்படுத்துகின்றனர்

-படித்தது

Tuesday 23 April 2024

கற்கை நன்றே-35


கற்கை நன்றே-35
*மணி

தலைசிறந்த வில்லாளி மாடியில் ஓர் அரசரோடு பேசிக்கொண்டிருந்தார். மேலே நிறைய பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அந்தப் பறவைகளைக் காட்டிய அந்த வில்லாளி  'நான் அம்பு எய்யாமலே ஒரு பறவையை வீழ்த்திக் காட்டட்டுமா? நாணை இழுத்தால் போதும்' என்றார். அரசரும் சந்தேகத்தோடு சரி என்றார்.

அப்போது ஒரு தனி கொக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. வில்லாளி தன் வில்லை எடுத்து களை நாணை இழுத்தார். அந்தப் பறவை அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தரையில் விழுந்தது. மன்னருக்கு ஆச்சரியம். அந்த வில்லாளி விளக்கினார். 'இந்தக் கொக்கு ஏற்கெனவே ஓர் அம்பால் காயப்பட்டிருப்பது எனக்குத் தெரியும்,அதனால் தளர்ந்துபோய் சோகமாகப் பறந்தது. அதன் பழைய காயம்  இன்னும் அதை உறுத்திக் கொண்டிருந்தது. தனியாகவும் பறந்தது. பயத்தோடு பறந்தது. நான் நாணை இழுத்ததும் அந்த வலியே அதை வீழ்த்துவதற்குப் போதுமாக இருந்தது'.

 பலவீனமானவர்கள் என்று தெரிந்தால் அடுத்தவர்கள் எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.

Sunday 21 April 2024

கடலில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் கடலின் பெருமை உண்டு. ஆயினும் அது தனியாக வாழ ஆரம்பிக்குமானால் அந்த நிமிஷமே அது கடல் என்ற பெயரை இழந்து விடும்.-காந்தி

நாம் நம்முடைய தவறுகளை எந்த அளவு மன்னிக்கத் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு மற்றவர்களின் தவறுகளைத் தண்டிக்கத் துடிக்கிறோம். நம்முடைய தவறுகள் நம் பல்லே நம் நாக்கைக் கடித்துக்கொள்வதைப் போல விபத்துகள் என நினைக்கிறோம். மற்றவர்களின் தவறுகளை திட்டமிட்ட பாதகம் என நினைக்கிறோம். வெகுண்டு எழுந்து தண்டிக்கிறோம்உண்மையில் அவர்களின் கீழ்மையின் வழியாக நாம் பார்ப்பது நம்முடைய கீழ்மையைத்தான்.-இளங்கோ கிருஷ்ணன்

நான் எவ்வளவு இருளை நோக்கி வேகமாகச் சென்றாலும் ஒளியும் என்னைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. நான் ஒளியின் பிடிவாதத்தை வியக்கிறேன். கருணையின் பிடிவாதம் அது.-போகன் சங்கர்

Monday 15 April 2024

தொழில்நுட்பத்தால் மிகச் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகத்தில் மக்கள் முன்பு எப்போதையும்விட அதிகத் தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.- யுவால் நோவா ஹராரி

பைக்கை நிறுத்தும் போது டிக் டிக் என்று சத்தம் வருவது ஏன்?அதிக தூரம் வாகனத்தை இயக்கும்போது எஞ்சினில் இருக்கும் பிஸ்டனை சுற்றியுள்ள ஹவுசிங் அல்லது பேரல் எனப்படும் பகுதி அதிக சூடாகி அதில் வெப்பத்தை தணிப்பதற்காக இருக்கும் கூலிங் பின்ஸ் எனப்படும் தகடுகளும் சூடாகி சற்று நீட்சியடையும் .(EXPAND )அதாவது வெப்பவிரிவாக்கல் .அது வெப்பத்தை தணிக்க வாகனத்தில் எஞ்சின் பகுதியில் அடுக்கடுக்கான தகடுகளாக இருப்பதை காணலாம் .அது வாகனம் இயங்கும்போதும் சூடாகி விரியும் .அப்போதும் சத்தமெழுப்பும் .ஆனால் வாகனத்தில் சத்தத்திலும் ,காற்றின் சத்தத்திலும் நம் காதுகளுக்கு கேட்பதில்லை .வாகனத்தை ஒட்டி வந்து வீட்டிலோ அல்லது சத்தமில்லாத அலுவலக சூழ்நிலையிலோ நிறுத்தும்போது அந்த தகடுகளானது குளிர ஆரம்பிக்கும் அதேபோல மீட்சியடையும் போதும் (SHRINK )சத்தமெழுப்பும் .சுற்றுப்புறம் அமைதியாக இருப்பதனால் அப்போது மட்டும் டிக் டிக் என்று சத்தம் தனியாக நாம் உணருமளவுக்கு காதுகளில் கேட்கின்றது .இது பெரும்பாலும் புதிய வாகனங்களில் மட்டுமே கேட்கும் .இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேலான வாகனங்களில் இந்த சத்தம் கேட்காது .ஏனெனில் அதிகமுறை இதுபோன்று நீட்சியும் ,மீட்சியும் அடைந்த காரணத்தால் அந்த தகடுகள் சற்றே வலுவிழந்திருக்கும் .-படித்தது

பாராளுமன்றமா? நாடாளுமன்றமா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தை தான் உலகையே ஆளக்கூடியதாக பார்(உலகம்) ஆளுமன்றம் என்பார்கள். நமக்கு நாடாளுமன்றம் மட்டுமே.நாடாளுமன்றத் தேர்தலே பொருத்தமானது

இறைவா! இந்தக் கண்ணீர் எவ்வளவு அற்புத படைப்பு.இது படைத்த உன்னை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!இறைவன் சொன்னான்:'நீ தவறாகப் புரிந்துகொண்டாய் பெண்ணைத்தான் நான் படைத்தேன். கண்ணீரைப் படைத்தது பெண்!'-அப்துல்ரகுமான்

Friday 12 April 2024

பேச்சாளர்களில் சிலர் எதிரே அமர்ந்து கேட்கும் ஆயிரம் மனிதர்களை இரண்டாயிரம் காதுகளாக மட்டுமேப் பார்க்கிறார்கள்.கைத்தட்டி ஓசையெழுப்பும் இரண்டாயிரம் கரங்களாகவேப் பார்க்கிறார்கள்.ஆயிரம் மூளைகள் கேட்கின்றன என்று யோசிப்பதே இல்லை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

கரப்பான்பூச்சி அணுகுமுறை


கரப்பான் பூச்சி கோட்பாடு

சுய முன்னேற்றத்திற்கான கரப்பான் பூச்சி கோட்பாடு

உணவகம் ஒன்றில், திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சி ஒரு பெண்ணின் மீது அமர்ந்தது.

அவள் பயத்தால் கத்த ஆரம்பித்தாள்.

பீதியடைந்த முகத்துடனும் நடுங்கும் குரலுடனும் அவள் குதிக்கத் துவங்கினாள், கரப்பான் பூச்சியை விடுவிக்க தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்றாள்.

அவளது குழுவில் உள்ள அனைவரும் பீதி அடைந்ததால் அவளது எதிர்வினை தொற்றிக்கொண்டது.

கடைசியில் அந்த பெண்மணி கரப்பான் பூச்சியை தள்ளிவிடச் சென்றார் ஆனால் ... அது குழுவில் உள்ள மற்றொரு பெண்ணின் மீது இறங்கியது.

இப்போது, நாடகத்தை தொடர்வது குழுவில் உள்ள மற்ற பெண்மணியின் முறை.

வெயிட்டர் அவர்களை காப்பாற்ற முன்வந்து சென்றார்.

எறிதல் என்ற தொடர்ச்சியில், கரப்பான் பூச்சி அடுத்தது வெயிட்டர் மீது விழுந்தது.

வெயிட்டர் உறுதியாக நின்று, தன்னைத் தானே தொகுத்து, அவரது சட்டையில் இருந்த கரப்பான் பூச்சியின் நடத்தை கவனித்தார்.

அவர் போதுமான நம்பிக்கையுடன் இருந்தபோது, அவர் அதை தன் விரல்களால் பிடித்து உணவகத்திலிருந்து வெளியே எறிந்தார்.

என் காபியை குடித்துக்கொண்டு, பொழுதுபோக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன், என் மனதின் ஆண்டெனா சில எண்ணங்களை எடுத்துக்கொண்டு வியக்கத் துவங்கியது, கரப்பான் பூச்சி தான் அவர்களின் ஹிஸ்ட்ரியானிக் நடத்தைக்கு காரணமா?

அப்படியென்றால், வெயிட்டர் ஏன் தொந்தரவு செய்யவில்லை?

அவர் எந்த குழப்பமும் இல்லாமல், அதை கையாண்டார்.

கரப்பான் பூச்சி அல்ல, கரப்பான் பூச்சியால் ஏற்படும் தொந்தரவுகளை சமாளிக்க இயலாமை தான் பெண்களை கலங்க வைத்தது.

என் அப்பாவோ, என் முதலாளியோ, என் மனைவியோ கத்துவது என்னை தொந்தரவு செய்வது அல்ல, அவர்கள் கூச்சலால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது என்பதை உணர்ந்தேன்.

என்னை தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அல்ல, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க இயலாமை தான் தொந்தரவு செய்கிறது.

பிரச்சனையை விட, பிரச்சனைக்கு என் எதிர்வினை தான் என் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கும்.

கதையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்:

வாழ்க்கையில் நான் ரியாக்ட் செய்யக்கூடாது என்று புரிந்துகொண்டேன்.

நான் எப்போதும் பதிலளிக்க வேண்டும்.

பெண்கள் எதிர்வினையாற்றினார்கள், ஆனால் வெயிட்டர் பதிலளித்தார்.

பதில்கள் எப்போதும் உள்ளுணர்வுடன் இருக்கும், ஆனால் பதில்கள் எப்போதும் நன்றாக யோசிக்கப்படுகின்றன.

புரிந்து கொள்ள ஒரு அழகான வழி

வாழ்க்கை.

சந்தோஷமாக இருப்பவன் அல்ல, ஏனெனில் அவன் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கிறது.

அவன் சந்தோஷமாக இருக்கிறான் ஏனென்றால் அவனது வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் அவனது அணுகுமுறை சரியானதாக இருக்கிறது! 

Thursday 11 April 2024

இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசலோட்டி, பரிசலோட்டி..எக்கரை என்கரை என்பது மறக்கும்-கல்யாண்ஜி

சமீபத்தில் அஜர்பைஜானில் நவ்ரூஸ் கொண்டாட்டங்களின் போது நெருப்பு தாண்டும் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். போகி போல, நெருப்பு கொளுத்தி பழைய விஷயங்கள் போய், புது விஷயங்கள் வரவேண்டும் என்கிற சிந்தனை தூக்கலான ஒரு விழா. இனிப்புகளும் (பக்லவா போக, நம்ம ஊர் சோமாஸ் போன்ற சக்கர்பாராவும் பிரபலம்), பூக்களும் போக, கொளுத்திய நெருப்பை மூன்று முறை தாண்டிக் குதிக்கிறார்கள். அப்போது, இப்படி ஒரு சொலவடையையும் உரக்கச் சொல்கிறார்கள்: Ağırım-uğurum bu tonqala,Azarım-bezarım bu tonqala.“என் சுமைகளை, என் குப்பைகளை, இத் தீயில் இடுகிறேன்.என் நோய்கள் அனைத்தையும் இத் தீயில் இடுகிறேன்.”அந்தத் தீப்பிழம்புகளைத் தாண்டிக் குதித்த பிறகு அது தொடர்ந்து சிந்தனையில் இருந்தது: நாம் தயங்கக் கூடாது. குப்பையை ஒழிக்கத் தயங்குதல் ஓர் ஆற்றல் கொல்லி. தயக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஏறி கடைசியில் நம்மை மொத்தமாக நசுக்கும் சுமை. நாம் நம்முடைய தயக்கங்களின் கண்ணை உற்றுப் பார்க்க வேண்டும். அவற்றை அணைத்து, உட்காரவைத்து, அந்தக் கடினமான உரையாடலை மேற்கொண்ட பிறகு, அவற்றை வழியனுப்பி வைக்கவேண்டும். தயக்கங்களும் பழைய சுமைகளும் போனபிறகு, ஒரு வெற்றிடம் வரும். நம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் மட்டுமே அந்த வெளியை நிரப்பக் காத்திருக்கும். அது அர்த்தமுள்ளது.-ஸ்ரீதரன்

நீங்கள் விளையாடித் தூக்கி எறிந்த உடைந்த பொம்மைகளைத்தான் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம் நீங்கள் வாசித்துக் கைவிட்ட நைந்த புத்தங்களைத்தான் எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பலமுறை செய்து சலித்துவிட்ட பயணங்களைத்தான் இன்னும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் பிறப்பிலேயே கிடைத்து விட்ட உங்கள் வாழ்வின் மிகைகளைத்தான் சந்ததிகளாகத் தேடி அலைகிறோம் உங்களின் அன்றாடமும் எங்களின் அன்றாடமும் என்றாவது சந்திக்கும் வரைஇந்தப் போதாமைகள்தான் எங்கள் அடையாளம். பொறுத்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ். - ஷான் கருப்பசாமி (7-ஏப்ரல்-2024)

தேநீர்க் கோப்பையோடு சன்னலில் பார்த்த மழைதான் பிறகு சாப்பாட்டுப் பொட்டலங்களுக்காக வானம் பார்க்க வைத்தது.-நிலாகண்ணன்

"உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனுதாபத்திற்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அனுதாபத்தைப் பெறுவதற்காக ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்டக் காயத்தை ஆர்வத்துடன் காட்டுகிறது. சில சமயம் வேண்டுமென்றே தன் கையில் ஒரு கீறலையோ அல்லது காயத்தையோகூட அது ஏற்படுத்துகிறது. அதே காரணத்திற்காகத்தான் பெரியவர்களும் தங்கள் காயங்களைக் காட்டுகிறார்கள், தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களையும் உடல்நலக் குறைவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள், குறிப்பாக, தங்களுக்கு நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின் முழு விபரங்களையும் அவர்கள் விலாவாரியாகப் பேசுகிறார்கள். தங்கள் நிஜ வாழ்விலோ அல்லது கற்பனையிலோ தங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்கள் குறித்து 'சுய பச்சாதாபம்' கொள்வது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது."-டாக்டர் ஆர்தர் ஐ. கேட்ஸ்

தூரத்தில் தெரிகிற அமைதியைப் பார்த்தல் என்பது விழி செய்யும் நீண்ட தவம். நிலவு, கடல், தொடுவானம், அசையும் மனிதர்கள் என எல்லாமே தொலைவினைக் கவிதையாக்கும் சூட்சுமம் அறிந்தவை. எந்தவித சலனமும் இன்றி தொலைவில் அசைந்துகொண்டிருக்கிற எல்லாமே தனிமையின் அழகு. தனிமையின் அழகு போல தனித்துவமானது எதுவுமில்லை. புல்லாங்குழலின் ஓசையை மாதிரி, கொஞ்சமும் சலிப்பு ஏற்படாத வண்ணம் நம்முள் சோகத்தை ஊறச் செய்பவை.-சுதர்சன்

Saturday 6 April 2024

ஸ்டெக்னோகிராபி


ஸ்டெகனோகிராஃபி: 

ஒரு படத்தின் உள்ளே இன்னொரு படத்தை மறைக்கும் கலை (Steganography: Hiding an image inside another)

கண்களை இடுக்கி கண்டு மகிழவும்!

இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், தகவல்களை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்காக நாம் பயன்படுத்தும் முறைகளில் ஒன்றுதான் கிரிப்டோகிராபி (Cryptography) - குறியாக்கம். குறியாக்க முறையில், தகவல் ஒரு குறிமுறையின் அடிப்படையில் மாற்றப்பட்டு, பெறுபவர் அதே குறிமுறையைக் கொண்டு தகவலை மீண்டும் பெற்றுக்கொள்வார். ஆனால், குறியாக்கம் செய்யப்பட்ட தகவல் கவனத்தை ஈர்க்கக் கூடும். இங்குதான் ஸ்டெகனோகிராஃபி (Steganography) என்ற முறை பயன்பட்டு வருகிறது.

ஸ்டெகனோகிராஃபி என்பது, ஒரு தகவலை (படம்,ஒலி, காணொளி)  மற்றொரு தகவலுக்குள் (படம், ஒலி, காணொளி) மறைத்து வைக்கும் ஒரு முறை ஆகும். இதன் மூலம், மறைத்து வைக்கப்பட்ட தகவல் வெளிப்படையாகத் தெரியாமல், மறைத்து வைக்கப்பட்ட தகவல் இருப்பதே தெரியாமல் இருக்கும்.  

உதாரணமாக, ஒரு பூங்கா படத்தின் உள்ளே இன்னொரு ரகசிய படத்தை மறைத்து வைக்கலாம். வெளிப்பார்வையில் அது பூங்கா படம்தான் போல் தோன்றும். ஆனால், சரியான முறையில் அந்த படத்தை பிரித்தெடுத்தால், அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய படத்தை பார்க்க முடியும்.

ஸ்டெகனோகிராஃபியின் பயன்பாடுகள் (Uses of Steganography)

* ரகசிய தகவல் பரிமாற்றம்: ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தி இராணுவ ரகசியங்கள், மருத்துவ தகவல்கள் போன்றவற்றை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்ய முடியும்.

* காப்புரிமை பாதுகாப்பு:  புகைப்படங்களில் காப்புரிமை தகவல்களை புதைத்து வைக்கலாம்
 
* தடய  அறிவியல் துறை(forensics):  டிஜிட்டல் குற்றங்களை கண்டறிவதற்கான ஆதாரங்களை மறைத்து வைக்கவும் ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தலாம் என்றாலும், இது சட்டவிரோதமான செயல்.

-அருள் குமரன்

Thursday 4 April 2024

அமைதி- நா காத்தல்- மௌனம் இந்த மூன்றும் எப்படி வெவ்வேறானவை?அமைதி - இரண்டு பேருக்கிடையே முழுமையான, சரியான புரிதல் ஏற்படும் போது வருவது. நா காத்தல் - இரண்டு பேருக்கிடையே பேசுற பேச்சால பிரச்சனை ஆகக்கூடாது என்ற நிலையில் வருவது. மௌனம் - இரண்டு பேருக்கிடையே எது பேசினாலும் பிரச்சனை வரும் என்ற நிலையில் மலர்வது... 🙂

“பலவீனமான மக்கள்தான் கொடூரமானவர்கள். வலிமையானவர்களிடம் இருந்து மட்டுமே மென்மையை எதிர்பார்க்க முடியும்,”-லியோ ராஸ்கின்

கனிவுள்ளவர்களே


"Blessed are the meek for they shall inherit the earth " என மலைபிரசங்கத்தில் ஏசு கூறுகிறார்.

Meek என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள்: "quiet, gentle, and easily imposed on; submissive

தமிழ் பைபிள் நூல்களில் "சாந்த குணமுடையவர்கள்  பாக்கியசாலிகள். அவர்கள் உலகை சுவிகரிப்பார்கள்" என மொழிபெயர்க்கிறார்கள்

பைபிளின் மூலமொழி கிரேக்கம். கிரேக்கத்தில் இங்கே meek என்பதற்கு பயனான சொல் Praus.

 Meek என்பதற்கு பதில் மூலச்சொல்லான Praus என்பதை எடுத்துக்கொண்டால் இந்த வசனத்தின் பொருளே மாறுகிறது.

 பிராஸ் என்பதன் பொருள் என்ன? வலிமை பொருந்திய அரசன்..தன் வலிமையை வெளிக்காட்டாமல் கனிவுடன் நடந்துகொள்ளும் தன்மை தான் பிராஸ். ஆக வலிமை பொருந்திய ஒருவன் கனிவுடன், பண்புடன் நடந்துகொள்வதுதான் Praus. அத்தகையோரே பாக்கியசாலிகள். அவர்களே உலகை ஸ்விகரிப்பார்கள்.

-படித்தது

ஓட்டளிப்பது நம் உரிமை


ஓட்டளிப்பது நம் உரிமை.!
*மணி

#ஒரு மென்மையான வழியில் உங்களால் உலகத்தை அசைக்க முடியும்
-காந்தி

உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது மக்களாட்சி நாடான இந்தியாவின் தேர்தலை.
ஜனநாயக தேர்தல் திருவிழாவிற்கு இந்திய மக்கள் காத்திருக்கின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்பு வரி கட்டுபவர்கள், ஐ.சி.எஸ் படித்தவர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் நிலை இருந்தது. 
சுதந்திரத்துக்குப் பின் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது

வாக்களிக்கும் முறையைப் பண்டைக்கால முதலே தமிழர்கள் அறிந்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் சோழநாட்டில் குடவோலை முறை இருந்ததாக படித்திருப்போம்.
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை.தேர்தலில் நிற்போரின்
 பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராக இறுதியில் அறிவிப்பார்கள்.

#ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல் தேர்தல்

1951 முதல் 1952 வரை பல கட்டங்களாக ஐந்து மாதங்கள் நடைபெற்றது.பின்பு படிப்படியாக ஓட்டுச் சீட்டிலிருந்து வளர்ச்சி பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.1982ஆம் வருடம்  கேரள மாநிலம் ஒத்தப்பாலத்தில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.இதனை இசிஐஎல் மற்றும் பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனமும் தயாரித்து வழங்கின.

1996ஆம் வருடம்தான் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. 2001 மற்றும் 2002ஆம் வருடங்கள் நடந்த தேர்தல்களில் இயந்திரங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரத்தில் ஆரம்பகாலத்தில் அடிப்படை சந்தேகங்கள் இருந்தன.

இரண்டு முறை பட்டனை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவாகாது. ஒரு வாக்குக்கும் அடுத்த வாக்குக்கும் இடையில் 12 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். தொடர்ந்து பட்டனை அழுத்தினால் ‘பிழை’ என்றே காட்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்கு விழும் வகையில் ப்ரோக்ராம் செய்து இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப முடியாது. எந்த இயந்திரம், எந்த ஓட்டுச் சாவடிக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் அதிகாரிகளுக்குக்கூட தெரியாது. காரணம், இயந்திரத்தின் வரிசை எண் கணினியில் போடப்பட்டு அந்தக் கணினிதான் இயந்திரம் எந்த ஓட்டுச்சாவடிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.அதிகாலை தேர்தல் துவங்கும் முன் மாதிரி ஓட்டுப்பதிவு சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் முன் நடத்திய பின்பே வாக்குப்பதிவு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஒப்புகை சீட்டு முறை

2017ம் ஆண்டு பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றது.அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.இதில் மோசடி செய்ய இயலும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப்பரத்வாஜ் தெருவித்தார்.

இவ்வியந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும்பொருட்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் எடுத்த முடிவின்படி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் "பழைய வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது".மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வசதி இனி அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்.குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் என்றார்.

#VVPAT

Voter verifiable paper audit trail எனும் முறை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.தற்போது 
தமிழகம் முழுவதும் 39 மக்களவை தொகுதியிலும்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம்  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் மக்களின் ஐயப்பாடுகள் தீர்க்க வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் இறுதியில் சீல் இடப்பட்டு,கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பின் இந்த ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும்.வாக்குப்பதிவின் உண்மைத்தன்மையை நிரூபிக்க பயன்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

#நம்பகத்தன்மை

 மேலை நாடுகள் சிலவற்றில் வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பியிருக்கின்றன. அங்கேயெல்லாம் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தி வருபவை போன்றல்ல. அவை வலைதளத்தோடு இணைப்பு கொண்டவை. எனவே நம்பகத்தன்மை கேள்விக்குறியானது”.நம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது ஒப்புகைச் சீட்டுடன் பயன்படுத்தப்படுவது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"உயருபவன் தன்னிலிருந்தே உயருகிறான்!
தாழ்பவன் தன்னிலிருந்தே தாழ்கிறான்"

 என்பது ஜென் வரி.இது ஜனநாயக கடமையான தேர்தலில் நேர்மையாக ஓட்டளிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.ஒவ்வொருவரும் தத்தமது உரிமையை நிலைநாட்டுவோம்.

தோழமையுடன்
-மணிகண்ட பிரபு

Wednesday 3 April 2024

பலவீனமே போற்றதலுக்குரியது. மனிதன் பிறக்கின்ற போது பலவீனத்துடனும் , நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கிறான் . அவன் வளர்ந்து பெரியவனாகி முதுமையடைந்து மரணிக்கும் போது கடினமானவனாக ,உணர்வற்றவனாக மாறிவிடுகிறான். செடி மரமாக வளர்கின்ற போது மென்மையாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் இருக்கும். அது வளர்ந்து பெரிய மரமாகி மரணிக்கும் போது வறண்டு கடினமானதாக மாறியிருக்கும். கடினமும் , வலிமையும் மரணத்தின் நண்பர்கள் . நெகிழ்வும், பலவீனமும் நம் இருத்தலின் புத்துணர்வை வெளிப்படுத்துபவை. எது வளைந்து கொடுக்காமல் கடினமாக இருக்கிறதோ அது வெற்றி அடைவதில்லை.- திரைப்பட மேதை தார்க்கோவ்ஸ்கியின் பிறந்த தினம் இன்று.

Tuesday 2 April 2024

"ஒரு மனிதனுக்கு உண்மையாகத் தோன்றுவது பல சமயங்களில் மற்றொருவருக்கு உண்மைக்குப் புறம்பானதாகத் தெரியும்.ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் கவலையடைய வேண்டாம்.உண்மையுனர்வுடன் முயன்றால் மாறுபட்ட உண்மைகளாகத் தெரிவன ஒரு மரத்தின் பல இலைகள் போலத்தான் என்பது தெளிவு பெறும்.ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் வெவ்வேறு பண்புகளில் தோன்றுகிறார் அல்லவா? இருப்பினும் நாம் அவர் ஒருவரே என்பதை உணர்கிறோம்.எனவே நம்முடைய தரிசனத்திற்கு ஏற்ப நாம் உண்மையைக் கடைபிடிப்பதில் பிழையில்லை.அது ஒருவரின் கடமையே ஆகும்.-காந்தி

எதற்காகக் கோபப்பட்டோம் என்ற காரணங்கள் காலப்போக்கில் மறந்துபோகும். மனிதனுக்கு சூழ்நிலைகளின் இறுக்கங்களைத் தந்து தருணங்களின் வாழ்வை பறித்துக்கொள்வதும் காலம்தான், பின் மறதியைக் கொடுத்து வாழ்வைத் திருப்பிக் கொடுப்பதும் அதே காலம்தான்.-சேரவஞ்சி

குழம்பிய குட்டை?கூரையில் ஓட்டை?


எல்லாப் பிரச்சனைகளையும் ஒரேமாதிரி அணுகக்கூடாது என்கிறார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர். இதை விளக்குவதற்கு அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு: குழம்பிய குட்டை Vs கூரையில் ஓட்டை (Muddy Puddle Vs Leaky Ceiling).

குழம்பிய குட்டையை அப்படியே விட்டால் சிறிது நேரத்தில் தெளிவாகிவிடும். நான் அதைச் சரி செய்கிறேன் பேர்வழி என்று சேற்றில் குதித்துக் கலக்கினால் அது மேலும் குழம்பிவிடும்.

அதுபோல, சில பிரச்சனைகளைச் சும்மா விடவேண்டும், அவை தானாகச் சரியாகிவிடும்.

ஆனால், கூரையில் ஓட்டை விழுந்தால் அதை அப்படியே விடக்கூடாது. அப்படி விட்டால் அது மேலும் பெரிதாகி இன்னும் நீர் கசியும். சட்டென்று செயல்பட்டுச் சரிசெய்யவேண்டும்.

அதுபோல, சில பிரச்சனைகளைப் பார்த்தவுடன் களத்தில் இறங்கிச் செயல்படவேண்டும், தள்ளிப்போடக்கூடாது.

இப்போது உங்கள்முன் உள்ள பிரச்சனை குட்டையா, ஓட்டையா?

-என்.சொக்கன்

Monday 1 April 2024

குடைகளைசரிசெய்யும் காசில்பிழைத்து வாழ்பவனுக்கு,மழைக்காலத்துக்கு நிகராககருணை புரிகிறதுஇந்த வெயிற்காலமும்...!!!-கூடல் தாரிக்

'ஒரு பொருளை 360 கோணங்களில் பார்க்க முடியும் என்பது விஞ்ஞான உண்மை.ஒரு கருத்துக்கும் 360 மட்டுமல்ல..அதற்கும் மேலான கோணங்கள் இருக்க முடியும் என்பதை எற்றுக்கொண்டாலே உலகில் வெட்டி விவாதங்கள் குறைந்து ஆரோக்கியமான விவாதங்கள் நிலவும்.என்னுடைய கோணம் தவிர வேறு எதுவுமே சரியல்ல என்று பிடிவாதமாக யோசிக்கும்போதுதான்,அறிவு தன் வளர்ச்சியை நிறுத்திக்கொள்கிறது.'- Pattukkottai Prabakar Pkp

ரயில்


7 நாட்கள்... உலகின் மிக நீண்ட ரயில் பயணம் இதுதான்... எத்தனை கி.மீ. தூர ட்ராவல் தெரியுமா?
மிக நீளமான பாதையில் ஓடும் ரயில், 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது.

இந்திய ரயில்வே நமது நாட்டின் லைஃப் லைன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் எந்த ரயில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியுமா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதல் இடத்தில் உள்ளது. திப்ருகர்-கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரயில், 4,234 கி.மீ. தூரத்தை 75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. 59 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

ஆனால், உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? இந்தப் பயணத்தை இரண்டு நான்கு நாட்களில் முடிக்க முடியாது. இதை முடிக்க 7 நாட்கள் 20 மணி 25 நிமிடங்கள் ஆகும். உலகின் மிக நீளமான ரயில்- ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கும் வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கும் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் பெயர் டிரான்ஸ்-சைபீரியன் ரயில்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து வட கொரியாவில் உள்ள பியாங்யாங் வரை ஓடும் இந்த ரயில் 10,214 கி.மீ. ஆகும். மிக நீளமான பாதையில் ஓடும் இந்த ரயில் 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது. அதன் வழியில் காடும் வருகிறது. இந்த ஒரு வார காலப் பயணம் பயணிகளின் பொறுமையைச் சோதித்து பார்ப்பது மட்டுமின்றி அழகிய நிலப்பரப்புகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.
1916-ல் தொடங்கப்பட்டது: டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே 1916-ல் தொடங்கப்பட்டது. டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே மாஸ்கோவிலிருந்து ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்த பாதை உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாகும். இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில் மலைகள் மற்றும் காடுகளை கடந்துச் செல்கிறது.

பியோங்யாங்கில் இருந்து தொடங்கும் பயணம்: இந்த ரயில் வட கொரியாவில் இருந்து மாஸ்கோ, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ஆகிய இடங்களுக்கு பயணிகளை கொண்டு வருகிறது. இங்கே இந்த ரயில் விளாடிவோஸ்டாக்கில் இருந்து மாஸ்கோ செல்லும் ரயிலுடன் இணைகிறது. பியோங்யாங்கில் இருந்து ரயிலில் ஏறிய பயணிகள் பெட்டியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது சிறப்பு. இந்த ரயில் வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு மாதம் இருமுறை இயக்கப்படுகிறது.

இதேபோல், ரஷ்யாவிலிருந்து பியாங்யாங்கிற்கு மாதத்திற்கு நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாஸ்கோவிலிருந்து பியாங்யாங்கிற்கு ரயில் இல்லை.