Thursday 29 April 2021

சுஜாதா

சுஜாதாதான் தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார் என பாலகுமாரன் கூறினார். அது என்ன?

சுஜாதா:கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை

வின்ஸ்டன் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரை ஆற்றிட அழைத்த போது முத்தாய்ப்பாய் சொன்ன வார்த்தைகள்..

"எப்போதும் முயற்சியை கைவிடாதீர்"
Never,Never,Never,give up"

Tuesday 27 April 2021

நாட்டுப்புற கதை

ஒரு காலத்தில் யானைக்கு பருத்த கண்கள் இருந்தன.அதிகம் சாப்பிடுவதாக கடவுளிடம் மற்ற உயிரினங்கள் முறையிட..யானை அதை கண்டுகொள்ளவில்லை. உடனே கடவுள் அம்பெய்தி யானையை குருடாக்கிவிடுகிறார்.

கண் இல்லாததால் ஒரு புழு தன் கண்களை கொடுக்கிறது.மறுநாள் கண்ணை திருப்பிக்கேட்டதற்கு காலால் நசுக்கி கொன்றுவிட்டது.

"நன்றி மறந்தவர்கள் எப்போதும் குரூரமாகவே நடந்து கொள்கின்றனர்"

-நாட்டுப்புற கதை

எஸ்.ரா

இலையின் மீது ஊர்ந்து செல்லும் புழுவை விளக்க முடியாமல் இலை நடுங்குவதைப் போன்றது தான் அவள் நிலையும்”

-எஸ்.ரா (துயில்)

ஜெயமோகன்

வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை. ஆனால் எதையாவது முக்கியமாக நினைத்துக்கொண்டால்தான் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு”

-ஜெயமோகன்

Sunday 25 April 2021

லெனின்

உன்னை விமர்சிப்பவர்களுக்கு நிரூபிக்கப் போராடாதே. உன்னை நம்பியிருப்பவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடு

-லெனின்

Saturday 24 April 2021

மாக்சிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலில் ஒரு தனிச்சிறப்பு

அந்தத் தாயின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.அவர் தாய் என்ற கதாபாத்திரமாக மட்டும் வருவார்.அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஏதாவது ஒரு விதத்தில் அந்தத் தாயாக தனது தாயை உருவகப்படுத்திக் கொள்ளத்தான்

-படித்தது

இனியவை இனியவை இறையன்பு-சுந்தர ஆவுடையப்பன்

#30D0044
நாள்-30
புத்தகம்-49

#
இறையன்புவின் எழுத்துக்களை நான் பள்ளிக்காலம் தொட்டு படித்து வருகிறேன். இப்பொழுதும் இறையன்பு என்று புதிய புத்தகத்தினைக் கண்டால் உடனடியாக வாங்கி விடுவேன். ஏனெனில் அவரின் கருத்துக்கள் ஆகட்டும், படித்த தகவல்கள் ஆகட்டும் மிகவும் புதுமையாக இருக்கும். புதுமையான பல புத்தகங்களிலிருந்து அதிலிருந்துதான் ரசித்தவற்றை முக்கியமானவற்றை தொகுத்து சுந்தர ஆவுடையப்பன் இப்புத்தகத்தில் தந்துள்ளார். சிந்தனை உலகம் ரசனை உலகம் சித்திர விசித்திரங்கள் படைப்புலகம் ஆளுமை துளிகள் என ஐந்து தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களில் தான் ரசித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

#வாழ்க்கை

இறையன்புவின் சிந்தனை வானம் பெரிது. அதில் வாழ்க்கை ஒரு வழிபாடு புத்தகத்தில் சொல்கிறார்.. மனிதன் விழிப்புணர்வோடு இருந்து விழிப்புணர்வை கூர்மைப்படுத்தி வந்தால் அடுத்தவர் எண்ணங்களை கூட படித்து விடலாம் என்று மனதை பண்படுத்தும் வித்தையைக் கூறுகிறார். பாதுகாப்பின்மை ஏற்பட ஆரம்பித்து விட்டது என்ற எண்ணமே அதன் பயத்துக்கு காரணம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கள், கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள் சீன கதைகள் என கட்டுரையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

இல்லறம் குறித்து கூறுகையில் முல்லாவின் கதையை சொல்கிறார்.

 திருமணம் செய்து கொண்டவர்கள் அதிக நாள் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது உண்மையா?

 முல்லா சொன்னார் :இல்லை ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அதிக நாள் வாழ்ந்து விட்டு ஒன்று சலிப்பு ஏற்படும்.. என்று தலைப்புக்கு ஏற்ற சுவாரஸ்யமான தகவல்களை சொல்வதில் அவர் இன்னும் ஒரு படி மேலானவர்.

ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள கன்ஃபூசியஸின் கருத்தை மேற்கோள் காட்டுகிறார் "நான் ஒவ்வொரு நாள் முடிவிலும் மூன்று கேள்விகளை கேட்டுக் கொள்வேன். நான் என் திறமைகளை அடுத்தவர்களுக்கு பணியாற்ற ஏதுவாக பயன்படுத்தியுள்ளேனா? என் சொற்களெல்லாம் உண்மையுடனும் நம்பகத்தன்மையுடன் இருந்தனவா? நானே கடைபிடிக்காத அறிவுரையை நான் கூறியிருக்கிறேனா? என்று. இப்படி பலரும் இந்த மூன்று கேள்விகளை கேட்டுக் கொண்டால் வீண் சண்டையோ விவாதமுமோ இருக்காது.

#சமூகம் சமூக மதிப்புகள்

சமூகம் சார்ந்த கருத்துக்களையும், அறச் சொற்களையும் பயன்படுத்துபவர் இறையன்பு. போரிடாமல் வாழ்வது குறித்தும்
கோபம் கொள்ளாது, கீழ்ப்படிந்து நடப்பதற்கான காரணங்களையும், எளிமையாகவும் ஆடம்பரம் தவிர்த்தும், அறிவை வளர்க்க நாள்தோறும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறார். ஆன்மீக தேடல் குறித்து சொல்லும்போது சீன கதைகளையும் ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்களையும் நமக்கு கூறுகிறார். 

புகழ் குறித்து கூறும்போது காலம் தாண்டியும் சிலருக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்துக்கு காரணம்.. அவர்கள் அங்கீகாரத்துக்கு ஆசைப்படாமல் வாழ்ந்ததால் தான்.. உண்மையைத் தேடுவதாகவே அவர்களுடைய பயணம் அமைந்திருந்த காரணத்தால் தான் என்று மேலும் கூறுகிறார். நேர்மை என்று கூறும் போது மற்றவர்களுக்காக நேர்மையாக இருப்பவர்கள் அவர்கள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தவறிழைப்பார்கள் என்ற உளவியல் காரணத்தையும் கூறுகிறார்.இதைத்தான் உள்நோக்கத்துடன் சொல்லப்படுகின்ற உண்மையும் பொய் போல்தான் என்று தாகூரின் மேற்கூற்றையும் கூறுகிறார்.

#முன்னேற்றத்தின் மூலங்கள்

ஒரு இளைஞன் புது செருப்பு வாங்க கடைக்குள் நுழைகிறான். கால் அளவை எடுத்து வைத்த கயிறு வீட்டில் வைத்து விட்டு வந்ததால்.. நாளை வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி திரும்பி விட்டான். கால்களே இருக்கும்போது கால் அளவை தேடுவதை போலத்தான் சிலரின் அறிவு இருக்கிறது என்று சிந்தனை நிந்தனை என்னும் கட்டுரையில் கூறுகிறார்.

தனித்து இயங்காது சில காரியங்களில் கூட்டு சேர்ந்து இயங்குவது மிக முக்கியமானதாகும். ஒரு மூளையில் சிந்திப்பதை விட இரு மூளைகளில் சிந்திப்பது மிகவும் அற்புதமானது என்ற ஒரு ஆங்கில மேற்கோள் இருப்பதைப்போல.. எறும்புகளின் உவமையை அருந்ததிராயின் கட்டுரை வழியே விளக்குகிறார். எறும்புகள் இணையும் போது அவற்றின் மூளை ஒரே மூளையாக திரண்டு விடுகிறது என்கிறது விஞ்ஞானம். எறும்பு போல மனிதர்களும் கூட்டு சேர்ந்து ஒரு காரியத்தில் ஈடுபடும் போது அவர்களின் சிந்தனை வளர்ச்சி அடைகிறது என்கிறார்.

#எழுத்து சொல் பேச்சு

ஒவ்வொன்றும் உயிர் எழுத்து என்னும் கட்டுரையின் கிப்பன் தன்னுடைய ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி எனும் நூலை எழுத 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம். பிளாட்டோ தன்னுடைய குடியரசு நூலின் முதல் வரியை ஒன்பது விதமாக எழுதி திருத்தி வந்த பிறகுதான் வடிவமைத்தாராம்.
 ஹெமிங்வேயின் வயோதிகமும் கடலும் என்ற நூல் 202 தடவை திரும்பத் திரும்ப எழுதினாராம். இவ்வாறு எழுத்தினைப் போல சொற்களுக்கு உண்டான ஆற்றலும், சொற்களின் முக்கியத்துவமும் உள்ள பகுதிகளும், மனிதர்களின் பேச்சு குறித்தும், புரிதல் குறித்தும் ,அவர்களின் நகைச்சுவை குறித்தும் சிந்திக்கும் திறன் குறித்தும் இக்கட்டுரையில் முழுநீளமாக எடுத்து ரைக்கிறார்.

#ரசித்தது

*போருக்கு தோட்டாக்களைக் காட்டிலும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது அவசியம் பெர்னாட்ஷா.

*உலகத்தில் விலை மதிப்புள்ளவை
நம்மிடம் இருப்பவையல்ல,
நம்மிடம் இருப்பவர்கள்.

*உதிர்ந்த பூக்கள் ஒட்டுவதில்லை,
கழிந்த நாட்கள் கிட்டுவதில்லை

*கிடைத்ததிலிருந்து நினைத்ததை அடைய பாடுபட வேண்டும்

*ஒரு மாடி வீடு எழ ஆயிரம் குடிசைகள் இடிக்கப்பட வேண்டியதாகிறது -கஜல்

*தான் அழகு என்று நினைக்காத போது தான் அழகு அரும்ப ஆரம்பிக்கிறது

*நம்முடைய பிரார்த்தனை என்பது புகார் பட்டியல் தான்

*கருணையும் கோபமும் இயல்பாக வராவிட்டால் அது அழகாக இருப்பதில்லை 

*உண்மை எப்போதும் தன்னை மெய்ப்பிக்க முயற்சி செய்வதில்லை

*கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம்

சிறுகதையோ நாவலோ தன்னுடைய புனைவின் வழியாக எப்படியும் எழுதிக் குவித்து விடலாம். ஆனால் ஒரு கட்டுரை எழுதுவது என்பது தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிப்பது போல.. பல்வேறு ஆழ்ந்த அனுபவங்கள், புத்தகங்கள், அறிவியல் கருத்துகளிலிருந்து தகவல்களை திரட்டி.. ஒன்றுகூட்டி படிப்பவர்களுக்கு இனிமையாக தரவேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இத்தகவல்களை ஏற்கனவே அவர்கள் படித்து இருக்கக்கூடும்.. படித்ததை சுவையாக தரக்கூடிய வித்தையை கட்டுரையாளர்கள் கையாண்டு இருப்பார்கள். ஒரு நல்ல புத்தகம் நூறு புத்தகங்களை அறிமுகப்படுத்தும் என்பார்கள், அதன் வழியே இப்புத்தகத்தின் மூலம் சீன கதைகள் அறிஞர்களின் தத்துவங்கள் படிக்கவேண்டிய நூல்கள் என ஒவ்வொரு கதவையும் திறந்து கொண்டே செல்கிறது. இறையன்புவின் புத்தகங்களை சுருக்கமாய் படிக்க விரும்புபவர்கள் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

தொடர்ந்து பகிர்வோம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday 23 April 2021

சுப்பராயுலு முதல் பழனிசாமி வரை..! - தமிழக முதல்வர்கள் வரலாறு #MyVikatan-மணிகண்டபிரபு


சென்னை சட்டமன்றம் 1861 பிரிட்டிஷ் கவுன்சில் சட்டத்தின் மூலம் துவக்கப்பட்டது. அப்போது அம்மன்றம் ஆலோசனை அவையாக மட்டுமே இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம் 1892 ன் படி சென்னை மாகாண சட்டமன்றத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தியது. 1909இல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்களின் விளைவாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இம்மன்றத்தில் இடம் பெற்றனர். பின்னர் 1919ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட இரட்டை ஆட்சியின் கீழ் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். இந்த உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் ஓரவை(Unicameral) அமைப்பாக 1920 இல் இருந்து 1937 வரை செயல்பட்டது.

ஆளுநர் நியமன உறுப்பினர்கள் தவிர 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவை வகுப்பு வாரியாக, சிறப்பு தொகுதி வாரியாக, ஒதுக்கப்பட்ட தொகுதிவாரியாக இருந்தன.


#முதல் தேர்தல்

சென்னை சட்டமன்றத்திற்கான முதல் பொதுத்தேர்தல் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சொத்து தகுதி உடையோர் மட்டுமே வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். முதல் தேர்தலில் 24.9 சதவீதம் வாக்குகள் பதிவாகி மைலாப்பூரில் அதிகபட்சமாக 52 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்தது. நீதிக்கட்சியின் தீவிர பிரச்சாரமும், பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்ததால் நீதிக் கட்சியை வெற்றி பெற்றது.


சென்னை இராஜதானி ஆளுநர் வில்லிங்டன் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியாரை ஆட்சி அமைக்குமாறு அழைத்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு பதிலாக சுப்பராயலு நாயுடு முதலமைச்சரானார். நீதிக்கட்சியின முதல் அமைச்சரவை 1923 செப்டம்பர் 11 வரை பதவியில் இருந்தது


இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்குள் சுயராஜ்ய கட்சி என்ற தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் நின்றனர். 1923ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக தேர்தல் உரிய நாளில் முடியாமல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. 17 தொகுதிகளில் 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 44 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் சுயராஜ்ய கட்சி போட்டியிட்ட 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை அமைக்க கூடிய பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பனகல் அரசர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் அமைச்சரவை பதவி ஏற்றது.


1926 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயராஜ்ய கட்சி சத்தியமூர்த்தி தலைமையில் களம் இறங்கி 47 இடங்களை கைப்பற்றியது. நீதிக்கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்றது. இம்முறை தனிப்பெரும்பான்மை பெற்ற சுயராஜ்ஜியக் கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால் ஆளுநர் சுயேட்சைகளில் ஒருவரான டாக்டர் பி. சுப்பராயன்(மோகன் குமாரமங்கலத்தின் தந்தை) முதலமைச்சராக சுயராஜ்ய கட்சி மற்றும் நீதிக்கட்சி ஆகிவற்றின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார்.

அடுத்து 1930 தேர்தலில்.. லாகூர் காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தின் படி காங்கிரஸ் போட்டியிடாததால் நீதிக்கட்சி சார்பில் முனுசாமி நாயுடு ஆட்சியமைத்தார். 1932ல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியதால் பொப்பிலி அரசர் முதல்வரானார்.


1937ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 156 இடங்களில் வெற்றி பெற்றது. பலரும் எதிர்பார்த்தது போல் சத்தியமூர்த்தி முதல்வராகாமல் மேலிட முடிவின்படி ராஜாஜி முதல்வரானார்.1939ல் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதில்லை எனும் காங்கிரஸின் முடிவின்படி ராஜாஜி பதவி விலகியபின் ஆளுநர் ஆட்சி 1939 முதல் 1946வரை நடந்தது. மீண்டும் 1946 தேர்தலில் ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டிய உடன்பாட்டின் காரணமாக டி.பிரகாசம் முதல்வரானார்.1947 நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினால் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.


இந்திய சுதந்திரத்தின் போது ஓமந்தூரார்தான் தமிழகத்தின் முதல்வராய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்குப்பின் 1949ல் பூசப்பாடி சஞ்சீவி குமாரராஜா முதல்வரானார். காங்கிரஸின் கோஷ்டி பூசல் அதிகமாய் இருந்தது இக்கால கட்டத்தில்தான்.


#சுதந்திரத்திற்குப் பின்

தேசிய, மாநில கட்சிகளைத்தவிர சுயேட்சைகளும் பெருமளவில் சுதந்திரத்திற்குப் பின் போட்டியிட்டனர்.தேர்தலில் சின்னங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அப்போது ஆணையத்தில் பணியாற்றிய எம். எஸ். சேத்தி ( M. S. Sethi) என்கிற ஓவியர் உருவாக்கியதுதான் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னத்தையும் உருவாக்கினார். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்


1952ல் நேருவுக்கும் ராஜாஜிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ராஜாஜி மாநில அரசியலில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ வாக போட்டியிடாமல் எம்.எல்.சியாக பதவிபெற்று மாநில முதல்வரானார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு காரணமாக 24-3-1954ல் ராஜினாமா செய்தார்.

1954 முதல் 1963வரை காமராஜர் முதல்வராய் இருந்து சாதனைகள் செய்தார். அடுத்து கே பிளான் திட்டப் படி காமராஜர் 1963ல் பதவி விலகியதை அடுத்து மீஞ்சூர் பக்தவச்சலம் முதல்வரானார். விலைவாசி உயர்வு, உணவுப் பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1967 தேர்தலில் 138 இடங்களில் வென்று திமுக சார்பில் அண்ணா 1967 மார்ச் 6ம் தேதி முதல்வரானார்.


அண்ணாவின் மறைவிற்குப் பின் 1969ல் மு.கருணாநிதி முதல்வரானார்.1972ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை முன் கூட்டியே 1971ல்நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்று. திமுக வெற்றி பெற்று முன் மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுகவை விட்டு பிரிந்த எம்.ஜி.ஆர்..1977 தேர்தலில் அதிமுக ஆட்சியமைத்து முதல்வரானார். 1987வரை முதல்வராய் இருந்து எம்.ஜி.ஆர் இயற்கை எய்திய பின் வி.என்.ஜானகி 1988ல் முதல்வரானார். 24 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை கலைக்கப்பட்டு 1989ல் நான்கு முனைப்போட்டி நிலவியபோது கருணாநிதி முதல்வரானார். ஆனால் தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்கத் தவறிவிட்டார் எனக் கூறி ஆட்சியை 1991 ஜனவரி 30ம் தேதி கலைத்தனர்.


1991ல் ராஜிவ் காந்தி படுகொலையின் காரணமாக எழுந்த அனுதாப அலையால் அதிமுக வென்று ஜெ.ஜெயலலிதா முதல்வரானார்.1996ல் மீண்டும் நான்காம் முறையாக கருணாநிதி முதல்வரானார். 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ.ஜெயலலிதா முதல்வரானார். அப்போது டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் பெரியகுளம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சிறிது காலம் முதல்வரானார்.அதன்பின் வழக்கில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.2006 தேர்தலில் திமுக 96 இடங்களை பெற்று காங்கிரஸ் உதவியுடன் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதல்வரானார்.


2011ம் ஆண்டு தேர்தலில் 146 இடங்கள் வென்று மூன்றாம் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 2016ம் ஆண்டு 134 இடங்களில் வென்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அதே ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார். அதன் பின் கட்சியில் எடுத்த முடிவின் காரணமாக 16-2-2017ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 16-வது சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மே 2ம் தேதி வெற்றி பெறுபவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். வரலாறு யார் பெயரை முன் மொழிய காத்திருக்கிறது என்பதை அறிய காத்திருப்போமாக.!

-மணிகண்டபிரபு

சொலவடைகளும் சொன்னவர்களும்-ச.மாடசாமி

#30D0044
நாள்-29
புத்தகம்-48

#

ஒரு நாட்டின் அறிவுசார் சொத்தாகப் போற்றப்படுவது நாட்டுப்புற இலக்கியங்களே.புனைவோ ,மேலை நாட்டுச் சிந்தனைகளோ இல்லாமல் முழுக்க முழுக்க மண்சார்ந்த வார்த்தைகளும்,மக்களின் அனுபவங்களுமே சொல்லப்பட்டுள்ளன.காலம் காலமாக வாய் வழியாய் வரும் இலக்கியம்..அழகோ மெருகோ இல்லாமல் ஆயிரம் அர்த்தங்களுடன் பொருள் பொதிந்ததாய் மக்கள் மொழியில் இருக்கும்.

புத்தகத்தின் ஆசிரியர் சா மாடசாமி பழுத்த அனுபவவாதி. கிராம மக்களுடன் இணைந்து வாழ்ந்தவர். தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தை கொண்டுசென்ற முன்னத்தி ஏர்களில் ஒருவர்.
 எது சொலவடை என்னும் தலைப்பில் சொல்லும் நேரங்களை பொருத்தும், பணி இடங்களை பொறுத்தோ, ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தியும் பழமொழிகள்  என்று சொல்லுமளவுக்கு.. சொன்னவர்கள் யார் என்று பல்வேறு விஷயங்களையும், முதலில் விளக்கி விட்டுத்தான் சொலவடைகள் ஆரம்பிக்கிறார்.

தருணங்கள் என்ற தலைப்பில் நான் ரசித்த சொலவடைகள்

*கொட்டுறது கொஞ்ச நேரம் அல்லறது அதிக நேரம் 

*அடுத்து அடுத்து போனா 
அடுத்த வீடு பகை 

*சோத்துக்கு இளைச்சாலும் 
சொல்லுக்கு இளைக்கக்கூடாது

* எழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா 

(அவரவர் இறப்பு அவரவர்க்கு; பிறர் வந்து சிறிது நேரம் பங்கேற்கலாம். ஆனால் சுமக்க முடியாது என்பதை மரண பேச்சுக்களில் வழி சொலவடை தெரிவிக்கிறது)

*கிழவி செத்தது பாரமில்ல எழவு சொல்லி மாளல
(மரணத்தைவிட மரணத்தை ஒட்டிய சடங்குகள் பாரமாகி போனதை குறிப்பிடுகிறது)

*பெருமை ஒரு முறம்
 புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை

*அத்தான் செத்தான் மயிராச்சு கம்பளி மெத்தை நமக்காச்சு 

(தனக்கு என்ன லாபம் என எந்த நிகழ்விலும் கணக்கு போடும் மனதை சொல்கிறது)

*பெரிய வீடுன்னு பிச்சைக்கு போனானாம்!
 கரிய வழிச்சு மூஞ்சியில தேச்சாளாம்

*பெருமை ஒரு முறம் 
புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை

*நேத்து வந்த மவுசு 
உரசிப் பார்த்தால் தெரியும்

*எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு எட்டுப் பணியாரம் .முட்டி தேய சுட்டவளுக்கு  மூணு பணியாரம்

(உழைப்பவனும் சும்மா உட்கார்ந்து இருப்பவனும் பலன்களை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் நிலமும் முறைகேட்டை தமிழ் சொலவடைகள் விரிவாகப் பேசுகின்றன)

*குட்டி நாய் கத்த 
கெழ நாய்க்கு வந்துச்சாம் ஆபத்து 

(ஒருவர் கூச்சலிட்டு போக இன்னொருவர் அடிவாங்கும் நிகழ்வு எதார்த்தத்தில் இருப்பதை அறிய முடிகிறது.)

*உழைச்சுப் பிழைக்குறவன் ஒருகோடி
ஏச்சுப் பிழைக்குறவன் ஏழுகோடி

ஏட்டுக் கல்வியை மட்டுமே படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட சொலவடைகள் புதிய அனுபவத்தையும், புதிய அணுகு முறைகளையும் ,மக்களின் பல்வேறு தரப்பட்ட கோணங்களையும் இதில் விளக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தவும், யோசனை சொல்லும் விதத்திலும், பிறருக்கு ஆறுதல் தரவும், எச்சரிக்கை தரவும் இப்படிப்பட்ட சொலவடைகள் அன்றாடம் நாம் பயன்படுத்தும் போது அடுத்த தலைமுறைக்கும் இத்தனையும்  கொண்டு சென்று சேர்த்த பெருமை நமக்கு உண்டு. அதுவே இப்புத்தகம் நமக்கு உணர்த்தும் பாடமும் .

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

பொதுவுடைமையரின் வருங்காலம்?-தா.பாண்டியன்

#30D0044

நாள்-28
புத்தகம்-46

"நின் வழியே செல்,உளருவோர் உளரட்டும்"

#

கம்யூனிஸ்ட் பத்தி என்ன நினைக்கிறீங்கனு யாராவதிடம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாய் இருக்கும்..அவங்க தேர்தலில் கூட்டணி மாறுவாங்க, உண்டியல் குலுக்குவாங்க, பெரிய இவங்க மாதிரி பேசுவாங்க என சொல்வார்கள்.அரசியலில் எல்லாக் கட்சிகளும் கூட்டணி மாறுவார்கள் தான்.ஆனால் கம்யூனிஸ்ட்கள் மாறினால் தான் குற்றம்.அவர்களின் நேர்மையை குறை சொல்லிவிட்டால், குத்திக்கிழித்துவிட்டால் தான்.. தம் குற்றவுணர்ச்சி குறையும் என்ற நம்பிக்கை.இப்படி கருத்து வேறுபாடுகள்,மக்களின் நம்பிக்கையிழப்பு,பணம் சம்பாதிக்க முடியாத நிலை என அனைத்து நிலைகளிலிருந்தும் இப்புத்தகம் அணுகுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்? மீண்டும் முதலாளித்துவம் ஆன்மீகமும் புது பலம் பெற்றது ஏன்? உள்ளிட்ட 41 வகையான கேள்விகளுக்கு புத்தகத்தில் பதிலளித்திருக்கிறார்.
வரலாற்று ரீதியில் முதலாளித்துவம் தோன்றிய வரலாறும், இன்றைய நிலையும், முதலாளித்துவத்தின் மீது ஏற்பட்ட கோபமும், உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றம் பற்றியும் ,இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் முதல் பகுதியில் கூறுகிறார்.

இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றிய வரலாறு ரஷ்ய புரட்சியின் முன்னிட்டு நடந்தது. 1917இல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து, 1920 இல் இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றது. காங்கிரஸ் கட்சி பொதுமான ஆதரவு அளித்தது. விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர் சிறைக்கு போகும்போது காங்கிரஸ் ஆகவும் வெளியே வரும்போது கம்யூனிஸ்டாகவும் வெளியே வந்தார்கள்.

 காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இடதுசாரி சிந்தனையில் ஈடுபட்டனர். புரட்சி வேகத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி நேதாஜி பார்வர்டு பிளாக் என்ற கட்சியை ஆரம்பித்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்தது, நேதாஜி ஹிட்லரை சந்திக்க காரணமாக இருந்த நிகழ்வு, ஹிட்லரின் ஐந்தாம் படை என பரப்பப்பட்ட பொய் என பல்வேறு வரலாற்று தரவுகளுடன் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய வரலாற்றை நமக்கு கூறுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்  சமூகநீதி இயக்கத்தில் பங்கெடுத்தது, மக்களின் போராட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்துச் சென்றது குறித்து கூறுகிறார்.
மேலும் அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்ததும், சோஷலிஸ்ட் கட்சியை நிராகரித்தது, அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளாததும், சாதிப் பிரச்சினை குறித்து பல்வேறு தடுமாற்றங்கள் இருந்ததும், தொழிலாளர் விவசாயிகள் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தனித்து செயல்பட்டதும், இந்திய மக்களின் யதார்த்த கருத்துக்களை நாம் உள்வாங்காமல் இருந்தது போன்ற பல்வேறு விமர்சனங்களையும் இப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

90களில் ரஷ்யாவின் வீழ்ச்சி என்பது கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சி ஆகவே உலகில் பல்வேறு மக்களால் பார்க்கப்பட்டது, நடுநிலை மனநிலை கொண்ட மனிதர்கள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியை தாங்கமுடியாமல் முதலாளித்துவத்தை நாடிச் சென்றனர். இன்றைய நிலையில் மக்கள் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் போராடி வெற்றி பெறுவதையும் மக்கள் விரும்புவது இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் ஒரே ஆதரவாக இடதுசாரி இயக்கங்கள் என்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

#ரசித்தது

*90களுக்குப் பிறகு 83 நாடுகளை ஆய்வு செய்ததில் 34 நாடுகளின் செல்வந்தர்களில் 60% சதவீதத்தினர் வருவாய் அதிகரித்து கொண்டே செல்வதும், 23 நாடுகளின் செல்வந்தர்களில் 40 சதவீதத்தினரின் வருவாய் குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.

*இந்தியாவில் 2015இல் 50 சதவீதத்தினருக்கு எந்த அளவுக்கு சொத்துக்கள் உள்ளனவோ அதே அளவு சொத்துக்கள் 62 தனி நபர்களிடம் உள்ளன

*எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மார்க்சிய பொருள் காண்பது அறிவு.

*புரட்சிகரமாக பேசுவதை விட, எவ்வளவு மக்களை இயக்கத்தில் ஈடுபடுத்த முடிகிறது என்பதுதான் ஒரு தலைமையை தீர்மானிக்க சரியான அளவுகோல்

*உறிஞ்சப்படுவதையே உணரமுடியாத அளவுக்கு சுரண்டல் முறையில் விஞ்ஞான தொழில்நுட்பம், முதலாளிக்கு ஆயுதமாக கிடைத்துவிட்டது. இதனால் சுரண்டும் முதலாளியை, உழைக்கும் மக்கள் நேரில் பார்ப்பது அரிது. எனவே எதிர்ப்புணர்வு தோன்றுவதும் அரிதாகிவிட்டது.

*To buy peace,we have to pay the price

*Leaders are there-but there is no leadership

முதலாளித்துவத்தை உணர்ந்தவர்களால் கம்யூனிஸ்ட்களை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். காரணம் கம்யூனிஸ்டுகள் படித்தவர்களாகவும், விஷயம் அறிந்தவர்களாக இருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவம் இன்று அதிதீவிர முதலாளித்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. காலம் அதற்கு கடிவாளம் இட்டால் தான் நாம் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்களை நாம் உணர முடியும் 

தொடர்ந்து பகிர்வோம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday 22 April 2021

முத்துலிங்கம்

எழுதி இலேசாக அழிந்த கரும்பலகை போல், தலைமயிர் நரையும்,கருமையும் கலந்திருக்கிறது

-அ.முத்துலிங்கம்

Wednesday 21 April 2021

மார்க் ட்வைன்

மார்க் ட்வைன் ஒரு முறை சொன்னார்..

Politicians are like diapers: they should be changed often, and for the same reason

டயப்பரையும்(Diapers) & 
அரசியல் வாதிகளையும் அடிக்கடி மாற்றவேண்டும்

இல்லாவிட்டால் இரண்டுமே நாறிப்போகும்.

பெருந்தலைவரின் நிழலில்-பழ.நெடுமாறன்


#30D0044
நாள்-27
புத்தகம்-45

#

மேய்ப்பவன் கையிலிருக்கும் குச்சி தண்டிப்பதற்கு அல்ல
வழிநடத்திச் செல்வதற்கே

பழ.நெடுமாறன் தொகுத்த இப்புத்தகத்தில் 69 தலைப்புகளில் காமராஜர் குறித்தும், அவர்தம் கொள்கைகளை குறித்தும் அவரின் நிழலாக இருந்து பார்த்து காமராஜர் வாழ்க்கையை தொகுத்துக் கூறியுள்ளார் பழ்.நெடுமாறான்.1958ம் ஆண்டு தாம் பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து பேசும்போது தான் முதன் முதலில் காமராஜரை சந்தித்தார். அன்றிலிருந்து காமராஜர் மீது பற்றும் பாசமும் அவருக்கு இயற்கையாகவே தோன்றிவிட்டது

எங்கோ ஒரு ஊரில் பிறந்து தீரர் சத்தியமூர்த்தியின் பேச்சை கேட்டு விடுதலை வேள்வியில் பங்கெடுத்து அந்நாளில் நீதிக்கட்சியின் பெரும்பான்மையை எதிர்த்து காங்கிரசை வளர்க்கும் முக்கிய பொறுப்பில் காமராஜர் இருந்தது தெரிகிறது. 1937 தேர்தலில் சாத்தூர் விவி ராமசாமி எனம் நீதிக்கட்சியின்
 தூண்களில் ஒருவரை எதிர்த்து காமராஜர் நின்றார். அதேபோல் ராமநாதபுரம் மன்னரை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவரை சத்தியமூர்த்தி நிறுத்தி இருவரையும் வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் தமிழகமெங்கும் இருவரின் புகழ் பரவியது.காமராசர் இறக்கும் வரையில் சத்தியமூர்த்தியின் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இப்போது போல் மத்திய தலைமைகளை கேட்டு முடிவு எடுக்கும் நிலை இல்லை அப்போது மாநில கமிட்டிக்கு இல்லை. கர்நாடகாவில் நிஜலிங்கப்பாவும் தமிழகத்தில் காமராஜரும் காங்கிரஸின் அசைக்க முடியாத மாநில உரிமைகளை பெரும் தலைவர்களாக விளங்கினர். மாநிலத்தின் முடிவினை கேட்டுத்தான் மத்திய காங்கிரஸ் கமிட்டி செயல்பட்டது என்பது ஒரு காலத்தில் வரலாறாக இருந்தது

காமராஜர் அரசியலில் அதிகாரத்தில் வந்த பொழுது மிகவும் எளிமையாகவும், நிர்வாகத்தில் மிக நேர்மையாகவும், தன்னுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் சி. சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்ததும்.. சென்னை மாநில கல்வித் துறையின் 100 ஆண்டுகள் முடியும் போது முதன்முதலாக தமிழன் ஒருவனுக்கு பொதுக் கல்வி இயக்குனர் கிட்டியது என நெகிழ்ச்சியுடன் சுந்தரவடிவேலு அவர்கள் கூறியதும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியவை.

காமராஜரின் வாழ்வில் முக்கியமானது ரஷ்ய பயணம். அங்கே அனைவருக்கும் கல்வி, அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்,இருப்பதை பார்வையிட்டு அப்படியே தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை கொண்டு கல்விச்சாலைகள் திறந்தார். இன்னொன்று முக்கியமானது இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான் பொது நூலகச் சட்டம் இயற்றப்பட்டு.. தமிழகமெங்கும் 1100 கிளை நூலகங்களிலும் 2000 வழங்கு முறை நூலகங்களும் ஏற்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் உருக்காலை வந்தது காமராஜரின் ஆலோசனையின் தான் .இன்றும் மேட்டூரில் நாம் காணும்போது ஒருபுறம் குடியிருப்பும், ஒருபுறமும் தொழிற்சாலையும் என அன்றே தீர்க்க தரிசனத்தோடு சிந்தித்து
தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குத்தூசி குருசாமியின் சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதுடன்  சாதிகளறற சமுதாயத்தை படைப்பதில் உண்மையான ஈடுபாட்டையும் உணர முடியும்.

காமராஜரின் மிக முக்கியமான திட்டங்களில் நீர் மேலாண்மையும் ஒன்று .அவர் கொண்டுவந்த புள்ளம்பாடி கால்வாய் திட்டம், மணிமுத்தாறு திட்டம் ,கிருஷ்ணா பெண்ணாறு கால்வாய்த்திட்டம்.  அவர் காலத்தில் நிறைவேற்றிய பாசன வசதி திட்டங்கள் மற்றும்
பரம்பிக்குளம் - ஆழியாறு போன்ற நீர் நிலை திட்டங்கள் நூலில் இடம் கூறப்பட்டுள்ளன.

காமராஜருக்கும் நேருவுக்கும் இருந்த நட்பு ,தமிழகத்தில் திருவிக, பெரியார், ராமமூர்த்தி, ஜீவா போன்றோருடன் அரசியல் நாகரிகத்துடன் பழகி வந்த பாங்கும்,  அண்டை மாநிலத்தவரிடம் இருந்த நட்பும், இந்தி குறித்த காமராஜரின் நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததும், ஈ.வெ.கி சம்பத் தலைமையிலான தமிழ் தேசிய கட்சியை காங்கிரசுடன் இணைந்தது குறித்தும், தேர்தலில் போட்டியிட்ட சம்பவங்களும் காந்திக்குப் பின் காமராஜர்தான் என்ற தமிழக மக்களின் நிலைப்பாடும் புத்தகத்தில் தெளிவாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.

பெரியாரும் காமராஜரும், ராஜாஜி உடனான அண்ணா உடனான நட்புகள் குறித்தும், காமராஜரின் சீடராக வாழ்ந்த சிவாஜி குறித்தும் ,காமராஜர்  தலைவர் எனக்கு என கூறிய எம்ஜிஆரின் கருத்துக்களும் பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகள் ,அரசியல் மேதைகளுடன் பழகிய அனுபவங்களை கடைசியில் எடுத்துக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கட்டுரையின் கீழே வரும் பெட்டிச் செய்தியின் மூலம் வரலாற்று நிகழ்வுகளையும் அறிய முடிந்தது.

#ரசித்தவை

*மதிய உணவுக்குப் பிறகு அவரிடம் ஒரே ஒரு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. பிறருக்கு முன்னால் அவர் அதை செய்யவே மாட்டார். பிறர் முன் புகைப்பது அநாகரிகம் எனக் கருதுவார்.

*காமராஜரின் நூலகத்தில் ஆங்கில நூல்கள் குறிப்பாக லெனின், காந்தி, நேரு, பாரதியார், காண்டேகர், புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா இன்சைட் ஈரோப் நூல்களும் டைம்ஸ் பத்திரிகைகளும் இருந்ததாக கூறியுள்ளார்.

*கமல்ஹாசனின் சகோதரி நளினியின் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற காமராஜர் நீ மேடை எல்லாமே ஆடக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் யாராவது நாட்டியக் கலையை வளர்க்க விரும்பினால் இதோ நிற்கிறாரே கமல்ஹாசன் அவனை மேடையேறி ஆடச் சொல் என்று கூறினார். பிறகாலத்தில் அவரின் வாக்கு பலித்தது

*தமிழகத்தில் திருச்சி நகரில் தான் பெரியாருக்கு முதன்முதலில் சிலை நிறுவப்பட்டது. அப்போது காமராஜர் தோல்வியடைந்திருந்தார். அண்ணா அப்போது முதலமைச்சர். வருவாரா என்ற ஐயத்துடன் காத்திருந்தபோது மாலையில் அண்ணாவும் காமராஜரும் சாரட் வண்டியில் அமர்ந்து, ஊர்வலமாக சென்று காமராஜர் பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.

*இந்தியாவில் சம நீதி கேட்டு நடத்தப்பட்ட முதல் போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். ஈவெரா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் ஜீவானந்தம் ஆகிய இருவரும் இளம் தொண்டர்களாக பங்கெடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday 20 April 2021

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் ஜான் ஹோல்ட்


#30D0044
நாள்-26
புத்தகம்-44

#

ஒரு வருட காலம் குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி வைத்து விட்டது கொரோனா. கற்கும் ஆற்றல் பாதி மழுங்கி விட்டது. தொலைக்காட்சி மொபைல் போன் என்று அவர்களின் காலம் கழிகிறது. மனக்கணக்கு மனப்பாட சக்தி என எதுவும் அவர்கள் செய்ய தயாராக இல்லை. எந்திரங்களின் உதவியை நாடி பழகியதால் மனக்கணக்கு போடும் நுட்பம் கை வரவில்லை. உண்மையில் குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என இந்த புத்தகம் விவரிக்கிறது.

3 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளின் கற்றல் சிறப்பாக நிகழ்கிறது என்பதை உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிறகு பள்ளிக்கு வந்த உடனே ஒரு அச்சுறுத்தல் அல்லது பயத்தின் காரணமாக அவர்களின் கற்றல் சற்று பின்னடைவை சந்தித்தது.

குழந்தைகள் குறித்து கற்றல் பகுதியில் குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள், இடது மூளை மற்றும் வலது மூளையின் செயல்பாடு, எதார்த்தமாக உலகில் கண்ணில் படும் பொருட்களையெல்லாம் குழந்தைகள் இயல்பாக தேர்வுசெய்து கற்பது. ஒவ்வொரு குழந்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுவதால் ஒரு குழந்தை மீதான ஆய்வில் இருந்து பெறப்படும் முடிவுகள் தவறாக கணிக்க வாய்ப்புள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கி குழந்தைகள் கற்றலை குறித்து விளக்குகிறது.

கற்றுத்தரும் கலையின் ஒரு பகுதி என்பது கற்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது தான். ஒரு மனநிலையில் இருப்பவர்கள் அடுத்த நொடியிலேயே அடுத்த மன நிலைக்கு மாறிவிடுவார்கள். விளையாட்டுகளும் சோதனை முயற்சிகளும் எனும் கட்டுரையில் குழந்தைகளின் மனநிலை அறிந்து கற்பதற்கான சாத்தியக்கூறுகளையும்.. அவர் வீட்டில் இருக்கும் குழந்தை மூலம் ஒவ்வொரு நாளின் தொடர் விளைவுகளை பற்றிக் கூறி சிந்திக்க வைக்கிறார். மேலைநாட்டு கல்வியாளர்களின் கற்பித்தல் முறைகளையும் சுய கற்பனை முயற்சிகளை மையமாக வைத்து கற்பதுவும், கற்க விரும்பாத பல விஷயங்களை கற்கும்படி சொல்லும்போது கீழ்ப்படியாமை குறித்து குழந்தைகள் சிந்திக்கின்றனர்.

குழந்தைகளின் பேச்சு குறித்து கூறும்போது குழந்தைகள் ஒலிகளை முதலில் நன்கு கேட்கிறார்கள்.
அழுவதை தவிர மற்ற நேரங்களில் எந்த சத்தமும் செய்யாமல் சுற்றியிருக்கும் ஒலிகளை கூர்ந்து கவனிக்கிறார்கள்.கேட்ட ஒலிகளைக் கொண்டு தமது விருப்பம் மற்றும் உணர்வு சார்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சிக்காகோோ பள்ளிகளில் வாசித்தல் பயிற்சியை 500 வல்லுநர்கள் இணைந்து 283 பயிற்சிகளாக தொகுக்கின்றனர்.
 இவ்வாறு பேச்சுப் பயிற்சி குறித்து பல்வேறு தரவுகள் மற்றும்
எடுத்துக்காட்டுகளுடன் இப்பகுதி விளக்குகிறார்.

புரியாத இடத்தில் இருக்கும்போது நமக்கு என்ன மனநிலை தோன்றுமோ.. அதே போல்தான் குழந்தைகள் முதன்முதலில் வாசிக்கும்போது என்னவென்று தெரியாமல் விழிப்பார்கள். கௌரவமும் நுண்ணுணர்வு மிக்க குழந்தைகளே சிலவேளைகளில் எதிர்வினை ஆற்றி இவை என்ன எனக் கேட்பார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை நாம் கற்றுத் தர முன்வரும் போது லேசான தயக்கமும் சொந்த விருப்பத்திற்கு மாறாக கற்கிறோமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு ஓடிவிடும்.

 நமக்கு தெரிந்த விஷயத்தை தான் கற்கிறோம் என்று முதலிலேயே சிந்தித்து விடும். குழந்தை அப்போது தெரியாத விஷயம் வருகிறபோது படிக்க சோர்வாகி ஓடிப்போய்விடும். முதல் பக்கத்தில் பார்த்த வார்த்தை தான் அடுத்த பக்கத்தில் வருகிறது என்று நாம் எண்ணிக் கொண்டாலும் குழந்தைகளை பொறுத்தவரை அது சற்று கடினமான செயல்தான். அக்குழந்தை அந்த வார்த்தையை முதன் முதலில் பார்ப்பது போலவே இருக்கும். மெதுவாகத்தான் கற்கும். முட்டாள்தனமாக கற்கிறாயே என்று கோபப்படக் கூடாது. வாசித்தலை பொறுத்தவரை குழந்தைகளுக்கு இருக்கும் பொறுமையை விட கற்பிப்போருக்கு இருக்கும் பொறுமை அதிகமாக இருக்கவேண்டும் .தவறாக உச்சரித்தாலும் உடனே திருத்தவும் சுட்டிக்காட்டவும் செய்யாமல் பொறுமையாக மேம்போக்காக செய்ய வேண்டும்.

குழந்தைகள் நம்மை நம்ப வேண்டுமானால் நாம் முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும்.
 நாம் அன்று எவ்வாறு நடத்தப்பட்டோமோ அவ்வாறுதான் இப்போது நமது குழந்தைகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். சிதறிய கற்றல் என்பது தற்போது நடைமுறை ஆகியுள்ளது. வார தேர்வு என்பது தினசரி தேர்வு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தேர்வு, ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் தேர்வு என்று மாறி உளளது. கற்றதை மேலும் மேலும் திருப்பி எழுதிப் பார்த்து சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் செய்து விடுகிறோம். ஒவ்வொரும் ஒவ்வொருவருக்குமான பார்வையை மழுங்கடித்து விட்டு ஒரே திசையில் கடிவாளம் இட்ட குதிரையைப் போல் சென்று கொண்டிருக்கிறோம். அவ்வாறு அல்லாது குழந்தைகள் கற்பதற்கு உதவி புரிந்து கற்றுக்கொடுத்தால் நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாருமில்லை.

 தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

அகம் புறம்-வண்ணதாசன்

#30D0044

நாள்-26
புத்தகம்-43



அனுபவங்கள் மட்டும் ஆசானால்ல.. அந்த அனுபவத்தை உள்வாங்கி உள்ளதை உள்ளவாறு மெருகேற்றி மற்றவர்க்கு பகிர்பவரும் ஆசான்தான்.வியாழக்கிழமை விகடன் வரும் என்ற நாளை இன்னும் ஆர்வத்துடன் வாசிக்க வைத்தது வண்ணதாசனின் அகம் புறம் தொடர் மூலம்தான்.தூர்தர்சனில் ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்து வாரம் முழுக்க சிலாகிப்போமே அப்படி ஒரு ரசனையான தொடர்தான் இது.வண்ணதாசன் தான் சந்தித்த மனிதர்கள்,அனுபவங்கள், கண்ட காட்சிகள் மண்ணின் மனதோடு அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

80களின் வீடுகளில் திண்ணையும் ஊஞ்சலும் உள்ள வீடுகள் இருக்கும்.
அந்த ஊஞ்சலில் ஆடிய மனிதர்களின்நினைவுகள், காட்சிகள் அழகிய சிறுகதை போல் காட்சிப்படுத்தியிருப்பார்.இறுதியில் வரும் வரி அந்த எழுத்துக்கு உயிர் கொடுத்தது போல இருக்கும்..

"அவர்களுடைய வீட்டில் ஊஞ்சல் இருக்கிறதா,தெரியவில்லை.
வீட்டில் இல்லாவிட்டால் என்ன, மனதில் இருக்கிறது!
மனதில் என்ன மனதில்..?
மனம்தான் அந்த ஊஞ்சலே!
என்று படித்தபோது அப்படியே புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வானத்தை பார்த்தால்தான் மோட்சம் கிடைத்தது மாதிரி

ஓவியம் என்றவுடன் நினைவுக்கு வருவது ஓவியர்கள் மட்டும் தான். ஆனால் வண்ணதாசன் சற்று வித்தியாசமாக கார்ட்டூன் ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் வரையும் ஓவியர்களையும் அவருடைய ஓவியங்களையும் மிகவும் சிலாகித்து எழுதியிருப்பார். ஒவ்வொரு ஓவியரின் தனித் திறமைகளையும் மனம் நெகிழ்ந்து பாராட்டியிருப்பார்.

மனிதர்கள் யாரும் துருப்பிடிக்க முடியாது. அவர்கள் யாரும் உலோக வார்ப்புகள் அல்லர். இந்த பேனா, சில சமயங்களில் ரொம்ப கெட்டிக்காரத்தனமாக இருக்க முயலும் .கெட்டிக்காரத்தனம் என்பது உப்பு மாதிரி, கொஞ்சம் கூடினால் ரொம்ப கரிக்கும்.ருசி கெட்டுவிடும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்.

நான் பழுத்திருந்தபோது/ பழம் கடிக்க வராமல்/ உளுத்து விட்டதும்/ புழு பொறுக்க/ ஓடிவரும்/ மனங்கொத்தி நீ

என்ற அவரின் கவிதை வரியைச் சொல்லி அபிதா என தலைப்பிட்டதை நினைத்து.. லா.ச.ராவின் அபிதா புத்தகத்தை படித்த நினைவும், விக்கிரமாதித்தனின் ஜமீலா புத்தகம் என்னிடம் இருப்பது போல் என்னுடைய அபிதா புத்தகமும் யாரிடமோ இருக்கும். நல்ல புத்தகங்கள் ஆறு மாதிரி நகர்ந்து கொண்டே இருக்கும் என்பார்.

தன் அனுபவங்களை சொல்லிக்கொண்டே இருக்கும்போது,  தெருவில் பெண்களைப் பார்த்த அனுபவத்தை சொல்கிறார்."இந்தப் பெண்களுக்குத் தான் ஒரு மாயம் உண்டே! தானும் இன்னொருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, தன்னை தாண்டி போகிறவர்களை ஒரு நொடிக்குள் படம் பிடிக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார்களே.. அப்படித்தான் அந்தப் பெண் என்னை பார்த்தது. அதுவும் சந்தோஷமாகவே இருந்தது. சந்தோஷம் என்பது என்ன இன்னாருக்கு இவ்வளவு என்று எழுதியா வைத்திருக்கிறது. என்னை பார்த்த பெண்ணின் முகத்திலும் சந்தோஷம் வழுக்கிக் கொண்டு போயிற்று. என்று தெருவில் தான் பார்த்த பல பெண்களின் சிரிப்பினை நமக்கு தெரிவிக்கிறார்

வழியில் சந்தித்த பால்ய வயது நண்பன் தான் நமது மறதியின் ஒட்டு மொத்த உருவமாய் வந்து நின்றான் என்று நா. முத்துக்குமார் பதிவு செய்திருப்பார். அதுபோல வெற்று திரை மனசு எனும் கட்டுரையில்
தான் மறந்த பல பிம்பங்களை நினைவுக்கு கொண்டுவர முயன்று இருக்கும் வண்ணதாசன், சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்.

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்/ எந்தப் பறவை எழுதியிருக்கும்/ இந்த கடிதத்தை இன்று திறந்து பார்க்க போகிறேன் ஒரு பறவையின் கடிதத்தை?/ என்று தன் வீட்டு வாசல் கதவில் வைத்திருக்கும் தபால் பெட்டியில் வெறுமையாய் இருப்பதையும், கடிதம் வாராத தன் நினைவையும், கடிதம் வழியே தான் சந்தித்த பல மனிதர்களை குறித்தும், தபால்காரர்கள் குறித்த நினைவுகளையும் தெரிவித்திருப்பார்.

மலையாளத்தில் சீனிவாசன் எழுதி நடித்த 'கத பறயும் போள்' என்ற சினிமாவில் ஆரம்பித்து தன் ஊரில் தான் சிறு வயது முதல்  சந்தித்த முடி வெட்டும் தொழிலாளர்களை பற்றிய நினைவுகளையும் அப்படத்தில் சீனிவாசனின் நடிப்பையும் சிலாகித்து இருப்பார். இந்த கட்டுரையில் தான் "மனிதர்கள் வாசல்படியில் நிற்பதை பார்த்த யாரோதான் புகைப்படங்களுக்கு சட்டம் இடுவதைத் துவங்கியிருக்க வேண்டும்" என்ற சலூன் கடை நினைவுகளோடு இந்த ஒரு முத்தான வரிகளையும் நமக்கு தந்திருப்பார்.

#மனம் கவர்ந்தவை

*மரத்தை மனிதர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன

*கஷ்டப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள் என்று விவிலிய வசனத்தை தபால்காரர்களுக்கு சொல்லியிருப்பார்.

*அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல எந்த தடங்கலுமின்றி அது ஊர்ந்து கொண்டு இருக்கிறது. ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்கு பிடிபட்டால் போதும்.

*மழையிடம் எது குறித்தும், எவர் குறித்தும், எந்தக் கேள்விகளும் இல்லை. சொல்லப்போனால் எல்லாக் கேள்விகளுக்கும் மழைதான் விடை.

*அவரவர்களுக்கு அவரவர்கள் விடைகள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் இத்தொடருக்கு புகைப்படத்தை மிக அழகாய் கொடுத்திருப்பவர் தேனி ஈஸ்வர்.இன்றைய கர்ணன் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.சிறு வயதில் வானில் வரும் விமானம் தெரியவில்லை எனும் போது ஒரு அண்ணன் என் கைக்கு நேராய் பார் எனும்போது கை காட்டிய திசையில் விமானத்தை கண்டுபிடித்துப் பார்க்கும் போது ஒரு இன்பம் வருமே அது போல் வண்ணதாசன் காட்டிய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தால் நிச்சயம் நிம்மதியும் அமைதியும் உண்டு.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

டாப் 200 வரலாற்று மனிதர்கள்-பூ.கொ.சரவணன்

#30D0044
நாள்-25
புத்தகம்-42



பூ.கொ. சரவணன் எழுதிய இப்புத்தகம் வரலாற்று மனிதர்களை அறிந்து கொள்ள உதவியாய் இருப்பதை பார்க்கிறேன். இதிலுள்ள ஆளுமைகளைப் பற்றி அறியாத தகவல்களையும் அறிந்த விஷயங்களை நினைவூட்டும் விதமாய் சில பகுதிகள் உள்ளன முன்னுரையில் குறிப்பிட்டது போல
எந்தப் புத்தகமும் முழுமையான ஒன்றாக முடியாது. அதே சமயம்
தேடலின், அறிவு வானின் பரந்த பரப்பில் அகல்விளக்கு அளவு வெளிச்சமேனும் தர வேண்டும் என்ற ஆவலில் எழுந்தவையே என இக்கட்டுரையை குறிப்பிடுகிறார்.

வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமல், கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது reference of life எனும்  தத்துவம் ஆப்பிரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும்போது உதித்தது என்ற செய்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் ஸ்வைட்சர் பற்றி அறியமுடிகிறது. வாழ்க்கைதான் எல்லாவற்றையும் விடப் பெரியது; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது. இணைந்து வாழ்வதலே பெரிது எனும் ஆண்டன் செகாவின் வரியை குறிப்பிட்டு அவரின் வாழ்க்கையை சுருக்கமாகச் சொல்கிறார்.

சில நேரங்களில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை என்று கூறும் ராகுல் டிராவிட் தனக்கு தெரிந்த சுவாரசியமான ஒரு கதையையும் கூறியிருக்கிறார். கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பதால் கடவுள் தரவே மாட்டார் என்று அர்த்தமில்லை.

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தால் அது முளைக்காது. ஐந்து வருடம் ஆனாலும் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும். அது ஐந்து வருடங்கள் தன்னுடைய வேர்களை வளர்த்துக்கண்டு இருந்தது.அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை, ஆர்வம், திறமை, மீதான பிடிப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வேன்  என்றார் திராவிட் 

பள்ளிக்குப் போகும் பொழுது இரண்டு மணி நேர ரயில் பயணத்தில்.. தான் படித்த சாகச கதைகள்.. என்னை வேறு ஒரு கனவு உலகத்திற்கு கூட்டிப்போயின. இயல்பான எளியவன் நான்! புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான். அசாதாரணமான கனவுகளைக் கண்டு உழைத்தேன் என்று கூறும் எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி உண்ணா நோன்பு இருந்த போது "இவர் இன்னும் சாகவில்லையா" என வைஸ்ராய்க்கு கடிதம் எழுதியவர். இந்திய மக்கள் பஞ்சத்தால் இருந்தபோது உணவு கப்பல் அனுப்ப மாட்டேன் எனச் சொல்லி பல லட்சம் பேரை சாக விட்டவர். உலகப் போர் பற்றிய நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிய முடிந்தது.

இங்கிலாந்து போயிருந்தபோது நீரழிவு, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட போதும் 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார். அவருடன் வாழ்நாள் முழுக்க முரண்பட்ட திலகர் 'இந்தியாவின் வைரம்' என்று அவர் மரணத்தின்போது பெயர் சூட்டினார். காந்திக்கு மட்டுமல்ல ஜின்னாவுக்கும் இவர்தான் குரு.. அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே

பாகிஸ்தான் பகுதியின் தலைவராக இருந்த லியாகத் அலிகான் "உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எப்பொழுதும் உதவ காத்திருக்கிறோம் என்று சொன்னபோது, எங்களுக்கான தேவைகளை சிக்கல்களை நாங்களே தீர்த்துக் கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசம் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு உதவி செய்கிறதாய் இருந்தால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கம்பீரமாய் சொல்லிவிட்டு நடந்தாராம் கண்ணியமிகு காயிதே மில்லத்.

"விடுதலைப்போரின் தாய்" .அன்று அவர் எழ மறுத்ததால் தான் இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம் என்று ரோசா பார்க்ஸ் குறித்து மக்கள் கூறிய சொற்கள் கருப்பின மக்களை தலைநிமிர வைத்தது". மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி என்னும் கவிதை இயற்றிய சரோஜினி நாயுடுவை படித்தபோது வியக்கத்தான் செய்தோம்.

த கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரின் கனவை சாப்ளின் பேசியிருப்பார். ஹன்னா! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு, பேராசை, மிருகங்கத்தனங்களை கடந்து மனிதர்கள் எழப் போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்குச் சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஹிட்லரின் பேச்சாக சாப்லின் பேசிய அந்த வசனம் இன்று வரை மிகப் பிரபலமானது.

வெடிப்பதில் எந்த பயங்கரமும் இல்லை, எதிர்பார்ப்பில் தன் அது இருக்கிறது என்று சொன்னவர். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்று புகழப்படும் திரைப்படத்தின் இயக்குனர். பறவைகளின் அட்டூழியங்களை, உயரத்துக்கு பயப்படும் நாயகனை, அம்மாவாக தன்னை உணரும் நாயகனை, ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட் அறையில் நடக்கும் சம்பவங்களை என எந்த கதையாக இருந்தாலும் சிலிர்க்கவைக்கும் கதைசொல்லி ஆல்பிரட் ஹிட்ச்காக் 

என்னை ஹிட்லர் தவிர்த்தார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அதையேதான் செய்தார். என்னால் பேருந்தின் முன்பக்கம் இப்போதும் போக முடியவில்லை. நான் என் நிறத்தால் எடைபோட படுகிறேன். நினைத்த இடத்தில் என்னால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை என்று பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கில பாடப் புத்தகத்தில் நான் படித்த ஜெஸ்ஸி ஓவன்ஸ் கதையை மீண்டும் படிக்கும்போது பழைய நினைவுகளை கொண்டு வந்தது

#மனம் கவர்ந்த வரிகள்

*பேயைப் போல பயிற்சி செய்யுங்கள் தேவதையை போல ஆடுங்கள்-சச்சின்

*மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான். குறை சொல்லிக்கொண்டே வாழ்கிறான். ஏக்கத்தோடு இறக்கிறான்.

*எரியாத உண்மையை தத்துவம் என்பேன். மனதின் தீயால் நிறையும் உண்மையே கவிதை என்பேன்.-இக்பால்

*உன்னை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தை பயன்படுத்தாதே. விவாதத்தால் தான் ஜெயிக்க வேண்டும்.

*நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே விரும்புகிறேன்

*யாரும் விடுதலை சமத்துவம் நீதி ஆகியவற்றை உனக்கு தர முடியாது. நீ மனிதன் என்றால் நீயாகவே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் -மால்கம் எக்ஸ்

பலதரப்பட்ட ஆளுமைகளை ஒரே புத்தகத்தில் படிக்கும் போது, அவர்களைப்பற்றிய பிம்பங்களை நமக்கு கடத்துவதில் பூ.கொ சரவணனின் பங்கு முக்கியமானது. ஒவ்வொருவரை பற்றி ஒரு துளியேனும் தெரிந்துகொள்ளவேண்டும் ஆர்வத்தை தூண்டுகிறது.

 தொடர்ந்து பகிர்வோம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு-கே.ஜீவபாரதி

#30D0044
Day-24
Book-41



அறிவின் முதற்படி பொய்யை பிரித்தறிவது,இரண்டாவது படி உண்மையை விளங்கிக் கொள்வது.

அப்துற் றஹீம் எனும் எழுத்தாளுமை முதன்முதலில் படித்தது நூலகத்தில்தான்.எழுந்திரு,ஓடு, கை குலுக்கு என்ற கார்ப்ரேட் சுயமுன்னேற்ற' நூல்களுக்கு மத்தியில் உண்மையான வாழ்வியலோடு இணைந்த சுயமுன்னேற்ற நூலை வாசித்தேன். பக்கத்துக்கு பக்கம் அறியப்படாத அறிஞர்களின் அற்புத வரிகள். வருடத்தைப் பார்த்தேன் 1950க்கு பிறகான வருடங்கள். ஆச்சர்யம்.
அப்போதே தீர்க்கதரிசனத்தோடு பல விஷயங்களை எழுதியிருந்தது ஆச்சர்யமே.உடனே அவரின் புத்தகங்களை தேடி தேடி வாசித்தேன்.
இப்புத்தகம் அவரின் 28 புத்தகங்களை ஆய்வு செய்த நூலாகும்.

எந்தவித துணையும் இல்லாமல், பெரிய பத்திரிகைகளின் கடைக்கண் பார்வையும் இல்லாமல் அப்துற் ரஹீம் வாழ்வியல் இலக்கியங்களாக அப்துல்ரஹீம் 28 நூல்களையும் 3640 பக்கங்களையும் எழுதியுள்ளார் இதில் வாழ்க்கையில் வெற்றி என்னும் நூல் 29 பதிப்பைக் கண்டுள்ளது வியக்கத் தக்கதாகும்

176 பக்கங்களை கொண்ட வாழ்க்கையில் வெற்றி என்ற புத்தகத்தில் அப்துல்ரஹீம் பயன்படுத்தி இருக்கும் எழுத்தாளர்கள் 251 ஆகும்.அவர்களின் சிந்தனை துளிகளை புத்தகம் முழுவதும் நமக்கு தந்துள்ளார். அந்த பொன்மொழிகளை படித்தாலே வாழ்க்கையில் வெற்றி வெற்றி பெறும் தைரியமும் தன்னம்பிக்கையும் நமக்கு வரும்.
மு.வ வைப்போல் அறச் சொற்களையும், வாழ்வியல் இலக்கணங்களையும், பொருத்தமான திருக்குறள்களையும் இப்புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இறுதி முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் மனதை துன்புறுத்தி, அவரை அடிபணிய வைக்கும் நோக்கத்துடன்..பிரிட்டிஷார் அவரின் புதல்வர்களை கொன்று அவர்களின் தலைகளை ஒரு பீங்கானில் வைத்து மூடி பகதூர்ஷாவுக்கு அன்பளிப்பாக அனுப்பினார். திறந்து பார்க்கும்போது பகதூர்ஷா மயங்கி விழுந்து விடவில்லை, மாறாக கலகலவென்று சிரித்தார். இதை கண்டு வியப்புற்று ஊழியரை நோக்கி உன்னுடைய தளபதி என் மனதை துன்புறுத்துவதுக்காக  செய்துள்ளார் ஆனால் நான் ஒருபோதும் கவலை அடைய மாட்டேன் என்று கூறியதை கவலைப்படாதே என்னும் நூலில் தெரிவித்தபோது வியப்பாக இருந்தது.

முன்னேறுவது எப்படி? என்ற இரண்டு வார்த்தைகளை திருப்பி போட்டு பார்த்தால் எப்படி முன்னேறுவது? என்று அமையும். ஏனெனில் எப்படி முன்னேறுவது என்பதை சிந்திக்க வேண்டும். முன்னேறுவது எப்படி என்று கூறும் நேர் வழிகளையும், சிந்தனைகளையும், நமக்கு தந்துள்ளார். அப்துற் றஹுமின் மிகப் பெரிய ஆற்றல் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தினால்.. அவர்களின் செயல்களிலும் மாற்றம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு சிந்தனையை செம்மைப்படுத்தும் பல்வேறு விஷயங்களை தந்துள்ளார்

இல்லறம் குறித்த புத்தகத்தில்

திருமணத்தில் அழகு மிக முக்கிய இடம்பிடிக்கிறது.அழகு குறித்து விரிவாய் கூறி ஒவ்வொர் ஆணும் பெண்ணும் தன்னுடைய அழகுக்கேற்றவரை மணக்கலாம். ஒரு அறிஞர் சொன்னது போல் இருவகை மணமுண்டு. ஒன்று நீ காதலுக்காக மணமுடித்தால் நல்ல இரவையும் கெட்ட பகலையும் பெறுவாய். பணத்துக்காக மணமுடித்தால் மகிழ்ச்சிகரமான நாட்கள் இல்லாமல் போய்விடும்.துன்பநாட்கள் இருக்காது

பெண் முத்தைப்போன்றவள். கடலில் இருந்து என்ன பயன். மாலையாக அணியப்பெற்றால் தான் பெருமை.புகுந்தவீட்டில் சென்றபின் சில நாள் கழித்து ஒரு சலசலப்பு வரும்.மனைவிக்காக பேசுவதா,மதருக்காக பேசுவதா என குழம்பி அமைதி காக்கும்போது ஊர் அவனை பத்திப் பேசும்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குனு சைலன்ட் மோடுல சந்திராயானுக்கே ராக்கெட் விடும் அனுபவம் ஆணுக்கு வந்துவிடுகிறது.ஒரு பெண்ணின் நா தான் அவளுடைய வாள்;அதனை அவள் துருப்பிடிக்க அனுமதிப்பதே இல்லை.அதனை நல்வழியில் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதை புத்தகம் முழுவதும் அதிக மேற்கோள்களுடன் சொல்லியிருப்பார்.

அன்புள்ள தம்பிக்கு

கடித இலக்கியம் போல் தன் தம்பிக்கு அறிவுரை கூறும் வாழ்வியல் நூலாக இப்புத்தகம் உள்ளது.

நல்லொழுக்கம் என்பது இனிமையான நறுமண பூண்டுக்கு நிகர் ஆகும். அதனை நசுக்கினால்தான் அதன் நறுமணம்
கம்மென்று கமழும் என்ற பேகன் கூறியதை நினைவூட்டுவார். நல்லொழுக்கமே ஒருவனுக்கு கவசம் என்று ஒரு அண்ணன் தம்பிகளுக்கு ஒழுக்கம் குறித்து சொல்லும் போது பல்வேறு மேற்கோள்களை கூறுவார்.

" ஒரு சிற்பி தான் செய்த சிலையின் பின்பாகத்தை ஒழுங்காக செய்து கொண்டிருந்தார். அதனை பார்த்த ஒருவன் சிலையின் முகப்பைதானே  மக்கள் பார்ப்பர். பின்புறம் சுவரின் பக்கத்தில் தானே உள்ளது என்றார். அதனை மக்கள் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்ப்பான் அல்லவா என்று மறுமொழி பகர்ந்தார் அந்த சிற்பி. இப்படி பல்வேறுபட்ட துணுக்குகள் இப்புத்தகத்தில் இருக்கிறது.

#பணம்

பணத்தைப் பற்றிக் கூறும் போது ஒரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார் "வருமானத்தை காலணிக்கு நிகராக கூறலாம். அது சிறிதாக இருப்பேன் அதை அணிந்திருப்பவனின் காலை கடிக்கிறது. பெரிதாக இருப்பின் அவனை சற்று தடுமாற செய்கிறது.

ஓராண்டிற்குள் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற விரும்புபவன் ஆறு மாதத்துக்குள் தூக்கு மேடையில் ஏறி விடுவான். விரைவாக சுண்ணாம்பாலும் செங்கல்லாலும் எழுப்பப்படும் கட்டிடம் விரைவில் விழுந்துவிடும். நேர்மையான முறையில் சிறிது சிறிதாக சேர்க்கப்படுவது நிறைந்து பெருகும்.

மனம் கவர்ந்த வரிகள்

*ஹிட்லர் படித்த இளவரசன் என்ற நூலில் "வழிகள் எதுவாயினும் குறிக்கோள் அடைவதே முக்கியம்" என்று கூறப்பட்டிருந்தது. ஹிட்லரை தவறான வழியில் அழைத்துச் சென்று அழித்தது.

*மனம் பேச ஆரம்பிக்கும் பொழுது நியாயம் மௌனம் சாதிக்கிறது

*தலையமைந்த யானைக்கு வினை அமைந்த பாகன் போலவும் , அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூலுக்கு இன்றியமையாதது முன்னுரை ஆகும் -நச்சினார்க்கினியர்

*நினைவாற்றல் அறிவிற்கு ஒரு ஆணி

* சிறு மனிதர்கள் வறுமைக்கு அடங்கி விடும் போது, பெரிய மனிதர்கள் வறுமையை தங்களுக்கு அடிபணியச் செய்து மேலேறி நிற்க்கிறார்கள்.

*இன்று உலகம் விரும்புவது தனித்தன்மையுடன் சிந்தித்துச்செயலாற்றுகின்றவர்களையேயன்றி பிறருடைய சிந்தனையைச் செயலாற்றும் மனித இயந்திரங்களையல்ல. 

* அறிவின் முதற்படி என்னவென்றால் பொய்யை பிரித்தறிவது, இரண்டாவது படி உண்மையை விளங்கிக் கொள்வது

அப்துற் றஹீமின் புத்தகங்கள் யதார்த்தம் சார்ந்தவை. வாழ்வை வாழ்ந்து பார்த்த ஒரு முதிர்ந்த அறிஞரின் பார்வையில் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது, எப்படி அமைத்துக் கொள்ளலாம்.. என்பதை அனுபவப் பகிர்வாக இப்புத்தகத்தை நான் பார்க்கிறேன் .வெறுமனே சம்பிரதாயமாக சுய முன்னேற்றத்தை பற்றிக் குறிப்பிடாமல் பக்குவப்பட்ட யதார்த்தத்துடன் கூறும் பொழுது நாமும் இவை சரிதான் என்று மனதுக்கு படும்படி இவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அப்துற் றஹீம் அவர்களுடையது. பல்வேறு புத்தகங்களின் கருத்துக்களை மேற்கோள்களை நமக்கு இவரின் எழுத்துக்கள் வாயிலாக.. ஒவ்வொன்றிலும் நமக்கு தந்துள்ளார். இவரை படிப்பது பத்து புத்தகங்களை படிப்பதற்கு சமம் ஆகும்

 தொடர்ந்து பகிர்வோம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

இலையுதிராக்காடு-பிரம்மராஜன்

#30D0044
நாள்-23
புத்தகம்-40



பிரம்மராஜன்.. உலக கவிதைகளை மிக நுட்பமாகவும் உலக கவிஞர்களின பார்வையில் கவிதையையும் நமக்கு மொழிபெயர்த்து தரக்கூடிய ஒரு முக்கிய ஆளுமை என்று சொல்லலாம் .இந் நூலில் இடம் பெற்ற கட்டுரைகள் உலக கவிஞர்கள் 33 பேர் குறித்த கவிதைகள், கவிஞர்கள் குறித்தும் ஆவணமாக நமக்கு கட்டுரை வடிவில் சொல்லி இருக்கிறார்

மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட ஒரு பேச்சே வாழ்க்கை.. என்று எழுதிய ஜோசப் ப்ராட்ஸ்கி குறித்த ரஷ்ய கவிதைகள் குறித்து நமக்கு சொல்கிறார்.அவரின் நவீனத்துவ புரட்சிகரமான கருத்துகளையும் அழகியல் எதார்த்தத்துடன் உள்ள கவிதைகள் பலவற்றை நமக்கு மேற்கோள்கட்டி விளக்குகிறார்.
பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்ட "நம் விடைபெறுதல் மௌனமாய் நிகழட்டும்/ இசைத்தட்டு நிறுத்திவிடு/ இவ்வுலகில் தனிமைப்படுத்தல் அப்பால் வரும் பிரிவுகளின் குறிப்பு/ என்று வாழ்வின் கசப்பை ஒவ்வொரு வரியிலும் நமக்கும் கடத்துகிறார்.

ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு டிஎஸ் எலியட்டை படிக்காமல் கடந்திருக்க முடியாது. வோர்ட்ஸ்வெர்த்தின் எழுத்தை படித்த வாசகர்கள் நிச்சயம் எலியட்டின் கவித்துவ வழிபாட்டு முறையும் கவிகளும் வினோதமாய் தெரியும் என்று பிரம்மராஜன் தெரிவிக்கிறார்.
காரணம் எலியட்டின் கவிதைகள் வாசகனின் புரிதலுக்கு தடையாக கவிதையின் மையத்தை அணுக முடியாத அளவுக்கு சில சிக்கல்களை கொண்டதாக இருக்கும். அவரின் கவித்துவ சாதனைகளை மூன்று பிரிவுகளாக பிரித்து அதிலுள்ள கவிதைகளையும் படிமங்களையும் கூறுகிறார். இதில் கரிந்த கிராமம் எனும் கவிதையை மொழிபெயர்த்திருக்கிறார்.

கவிதையும் வரலாறும் பகுதியில் சாமுவேல் பெக்கெட் எழுதிய "ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றிற்கான தொக்கி நிற்கும் குறிப்பினையும் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்க மூட்டப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொற்றொடரும் எதையாவது சொல்லும் விருப்பத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு குறியீடும் எதை இலக்குவைத்து செல்கிறது என்பதை குறிக்கிறது. இந்த வகையில் அர்த்தம் என்பதும் செய்தி பரிமாற்றம் என்பது சொற்களின் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன.  நமது காலம் போன்றதொன்றில் கவிஞனின் விதியானது "சொற்களின் கூட்டத்துக்கு மிகத் தூய்மையான அர்த்தத்தை வழங்குவதுதான்" என்று கூறுகிறார்

தெரியாத கூட்டத்தில் தெரிந்த ஒருவரை பார்த்ததுபோல இக்கட்டுரையில் ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்களை படிக்கும்போது உணர முடிந்தது. காம்யூவின் ஒரு நாவலை தற்கால சமயத்திற்கும் பொருத்திப் பார்க்கும்படி இருக்கிறது

"ஓரன் நகரை கொள்ளை நோய் தாக்குகிறது. நோய் பரவாது இருக்கும் பொருட்டு எல்லைகள் மூடப்பட்டு மனிதர்கள் நகருக்குள் வருவதும் தடை செய்யப்படுகிறது. மருத்துவ காரணங்களை அலசுகிறார்கள. மனிதன் மரணத்தை சந்திக்கும் போது எங்கனம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறப் பிரச்சனை விளக்கப்படுகிறது. இதில் டாக்டரான ரியூ நாவலின் விவரணை குரலாக இருக்கிறார். கொள்ளை நோய் பற்றியும் அந்த சமயத்தில் மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் ஒவ்வொரு பாத்திரங்களும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இறுதியில் நோய் முற்றாக நீங்கிய பின் சந்தோஷம அடைகின்றனர்.

 ஆயினும் நோய்க் கிருமிகள் முற்றிலும் அளிக்கப்படுவதில்லை, காலம் காலமாக மரச்சாமான்களுக்கி டையிலும் நிலத்தடி சேமிப்பு அறைகளிலும் கிருமிகள் பதுங்கி இருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு மகிழ்ச்சியான நகரை தாக்கக்கூடும் என்று நாவலை முடித்து இருப்பார் காம்யு.இக்கால காலகட்டத்திற்கு இந்த எழுத்துக்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

#ரசித்தது

*இறந்துபோன எழுத்தாளர்கள் நமக்கு வெகு தொலைவில் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அறிந்திருந்ததை விட நாம் அறிபவை அதிகம்

*இயற்கை கலையை பார்த்து காப்பி அடிக்கிறது -ஆஸ்கார் வைல்ட்

*போர் என்பது மற்றவர்கள் எல்லோரும் திட்டமிட்ட மடமையினால் உண்டாக்கப்பட்டது

*வாழ்க்கை ஓலமும் சீற்றமுமாய் ஒரு மடையனால் சொல்லப்பட்ட எதையுமே அர்த்தப்படுத்தாத கதையாகும்.

*காலடி ஓசைகள் நினைவில் எதிரொலிக்கின்றன 
நாம் போகாத பாதையின் வழியாக நாம் திறக்காத கதவினை நோக்கி

*கவிதை என்பது சொற்களால் நெய்யப்பட்ட ஒரு இயந்திரமாகும். ஒரு கவிதை உருவாக்கத்தின் போது நிறைய மனோவியல் தொழில்நுட்பங்கள் செயல்படுகின்றன.

*எந்த இரு அர்த்தங்களுடன் எதார்த்தம் தன்னை நமக்கு வெளிப்படுத்திக் கொள்கிறது அதுவே கவிதை மொழி

மற்ற புத்தகங்களை போல் இல்லாமல் சற்று அடர்த்தியானது. அடர்த்தியான  நடையில் அயலக கவிஞர்களின் கவிதை நுட்பத்தினை அறியக்கூடிய வகையில் இப்புத்தகம் இருக்கிறது. வாசிப்பு அனுபவத்திற்காக இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

குறள் வானம்-சுப.வீரபாண்டியன்

#30D0044
நாள்-23
புத்தகம்-39



உலகின் அதிக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது/(எழுதப்பட்டது) பைபிளுக்கு பிறகு திருக்குறள் கூட அல்ல. திருக்குறளுக்கு எழுதிய உரைகள் தான். இப்புத்தகம் மற்றவர்களின் உரைகள் போல் பாடலுக்கான உரையாக மட்டுமில்லாமல், ஒவ்வொரு குறளிலும் தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து, வர்ணாசிரமத்தை ஆராய்ந்தும், இக்கால புழக்கத்திலுள்ள நடைமுறை யதார்த்த வாழ்க்கையை சொல்லியும் குரலில் உரையாய் நமக்கு பதிவு செய்திருக்கிறார் சுப.வீ.

உதாரணத்துக்கு கடவுள் வாழ்த்துப் பாடலில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் குறளுக்கு.. பகவன் என்பது பகவான் என்கிற வடசொல்லில் இருந்து வந்திருந்த  தமிழ்ச் சொல்தான். ஆனால் பகவன் என்கிற சொல் வேறு பொருள் இருக்கிறது.பகவு என்ற சொல் தமிழ் வேரைக் கொண்டது. பகவு என்னும் சொல்லுக்கு தமிழில் கதிர் என்று பொருள். கதிர் என்றால் கதிரவன். பகலவன் கதிரவன் என்று குறளுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார்

வேண்டுதல் வேண்டாமை எனும் குறளில் புத்தரின் கருத்துக்களையும் நமக்கு பகிர்ந்துகொள்கிறார். அனைத்து துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமா வெறுப்பும் கூட காரணமே எனும் இன்னொரு பார்வையில் குறளை அணுகுகிறார்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் எனும் சொல்லுக்கு இன்னொரு சொல் ஐந்து அவித்தல். அடக்கல் என்றால் அது ஆமைபோல் அடக்கிக் கொள்வது. அவித்தல் என்றால் முழுவதும் அதனை உணர்வற்று போகிற நிலை. அது மனிதனால் ஏற்க முடியவில்லை.

வான் சிறப்பு அதிகாரத்தை குறிப்பிடும்போது மழையை போற்றுதல் நம்முடைய மரபு. ஏனெனில் நான் வசிப்பது வெப்பமான பூமி. எனவே தான் நாம் வரவேற்கும் போது அகம் குளிர முகம் மலர என்று வரவேற்கிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் குளிரை வரவேற்பதில்லை. warm welcome என்கிறார்கள். அதாவது சூடான வருகை தருகிறார்கள் என சிறிய தகவல் கூட மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்

பற்றுக பற்றற்றான் எனும் குரலில் பற்றி என்று வருகிற ஒவ்வொரு இடத்திலும் அந்த பற்று என்ற சொல்லுக்கு பொருள் வேறுபடுகிறது பாடம் படித்தல், பாசம் என பல்வேறு விதமான பொருட்களை ஒரே சொல்லில் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருப்பது திருவள்ளுவரின் சிறப்பு

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் எனும் குறளில் நான் முன்னோர்களுக்கு செய்கிற கடன் என்பதே அவர்களுக்கு திதி கொடுப்பது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது இல்லை, முன்னோர்களுடைய கொள்கைகளை தொடர்ந்து எடுத்துச் செல்வதும், அவர்கள் காட்டிய வழியில் இருந்து வழுவாது நடப்பதும் தான் நாம் முன்னோர்களுக்கு செய்கிற கடன். என்று வஉசி உரையை இக்குறளுக்கு மேற்கோள் காட்டியிருக்கிறார்

அடக்கமுடைமை அதிகாரத்தைப் பற்றி சொல்லும்போது
 மலையினும் மாணப் பெரிது என்று கூறுகிறார். மலை என்பது அசையாமல் இருப்பது. அசைய இயலாதது. ஆகவே அதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் மனிதர்கள் அசையும் இயல்புடையவர்கள்.. இன்றைக்கும் நாம் பார்க்கலாம் தங்களுடைய அடக்கமின்மையை அசைவுகளால் தான் பலர் வெளிப்படுத்துகிறார்கள். அமர்ந்திருக்கும்போது காலாட்டி கொண்டிருப்பார்கள். மன அடக்கம், புலனடக்கம் இன்மை வெளிப்படுவதாக உளவியலாளர்களின் கருத்து தெரிவிக்கிறார்கள். அடங்குவதற்கு பேரறிவு வேண்டும் என்றும், அடங்காமல் திரிவதற்கு அறிவு தேவையில்லை. அடக்கம் என்பது அறிவின் ஒரு பகுதி.. ஆகையினால் தான் அடக்கம் என்பது பெரிய உடமையாக வள்ளுவர் தெரிவித்ததாக புதிய கோணத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல என்னும் குறளில் சிற்றினம் என்ற சொல்லை நாம் காம உறவுகளில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் .ஆனால் அதனை அவர் காமத்துப்பாலில் வைக்காமல் அறத்துப்பால் வைப்பதற்கான காரணம் அறமற்ற வழிகளில் அடுத்தவன் பொருளை கவர்ந்து கொள்ள விரும்புவது தான் சிற்றின்பம். நமக்கு உரிய பொருளை பெறுவது பேரின்பம் என்று புதிய பொருளை நமக்குத் தருகிறார்.

#ரசித்தது

ஒன்றின் மீது நாம் வைக்கிற ஆசை நம்மை எப்படி அழைக்கழிக்குமோ,  அதுபோல இன்னொன்றின் மீது வைக்கிற வெறுப்பும் நம்மை அலைக்கழிக்கும்.

*அறம்சார்ந்த பொறுப்பு என்பது தன்னை சரிப்படுத்துவது. அறம்சார்ந்த கோபம் தான் வாழும் சமூகத்தை சரிப்படுத்துவது

*இல்லற வாழ்க்கை என்பது நான்கு சுவர்களுக்குள் தொடங்குகிறது தவிர நான்கு சுவர்களுக்குள் முடிந்து போவதில்லை

*ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லல் அறங்கூறுதல். ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுதல் புறங்கூறுதல்.

*மனம் என்பது ஐம்பொறிகளின் வழியாக பல்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டே இருக்கும். மனம் ஓரிடத்தில் நிற்பதில்லை. கண்வழி போகிறது செவிவழி போகிறது, நுகரும் நாசி வழிபோகிறது. இப்படி ஐம்பொறி வழியில் செல்லும் மனதை நிறுத்தலே தவம்.

மற்ற புத்தகங்களைப் போல் வெறுமனே திருக்குறளுக்கு மட்டும் உரை எழுதி செல்லாமல் மற்ற உரையாசிரியர்கள் பகிர்ந்த செய்தியையும் தன்னுடைய கருத்தையும் இதில் நமக்கு தருகிறார். அனைவரும் படிக்க வேண்டிய நல்ல திருக்குறள் புத்தகம் 

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

கனவுகளின் மிச்சம்-அருணன்

#30D0044

நாள்-22
புத்தகம்-38



வரலாறு என்பது சுகமான கடற்கரைச் சாலை அல்ல; அது கடினமான மலையேற்றப் பாதை. அங்கே வளைவு நெளிவு இருக்கும், சில எதிர்பாராத விபத்துகள் நடக்கும். ஆனால் பாதை என்னவோ முன்னோக்கியே செல்கிறது. அதை முடிந்த அளவு செப்பனிட்டுக் கொண்டே அதோ ஒரு முன்னோடி போகிறார்.

அருணன் என்றவுடன் நினைவுக்கு வருவது தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதத்தில் பங்கேற்பாளர் என்று மட்டுமே.ஆனால் அவர் தொடர் வாசிப்பாளர்.பல புத்தகங்களை எழுதியுள்ளார்.இடதுசாரி தலைவர்களில் முக்கிய பேச்சாளராக இருக்கிறார்.திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாசிப்பு குறித்து சில ஆண்டுக்கு முன் இவர் பேசிய பேச்சு மறக்க முடியாதது.அதில் கல்கியின் சிறுகதை ஒன்றை கூறினார். 1940களில் ஒரு திருமண மண்டபத்தில் நாயகன் நாயகியின் அழகில் மயங்கி ஒரு கடிதம் கொடுக்கிறார்.அக்கடிதத்தை பெற்ற அப்பெண் அழுகிறார்.காரணம் படிக்க தெரியாததால்..அக்கால கட்டத்தில் பெண் கல்வி எந்த இடத்தில் இருந்தது என்பது குறித்து பேசினார்.

பேராசிரியர் அருணன் அவர்கள் தன் இளமைக்காலத்தில் தான் சந்தித்த அனுபவங்களும், தான் படித்த வரலாற்று நூல்களும், ஆய்வுகளும், தான் எழுதிய கட்டுரைகளும், தனக்கேற்பட்ட அனுபவங்களையும் புத்தகமாக கனவுகளின் மிச்சம் எனும் நூலாக தந்துள்ளார்.

இளமையில் புத்தக வாசிப்பில் அறிமுகமானபோது ராஜாஜி எழுதிய "அபேத வாதம்" தான்.அபேதம் என்றால் பேதமின்மை அதாவது சமத்துவம் என்பது ஆகும். பெட்ரண்ட் ரஸல் எழுதி திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல எனும் சிறு பிரசாரமும் அவருக்கு மனதுக்கு மிக நெருக்கமாக இளமைப்பருவத்தில் அமைந்தது.

 எம்.காம் முடித்த கையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தேர்ந்தெடுத்து, பின் அஞ்சல் வழிக் கல்வியில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். அப்போதுதான் செம்மலரில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருந்தார்
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துவக்கிய நிகழ்வையும் அதில் பணியாற்றிய அனுபவத்தையும் 1987 இல் தமுஎகச வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, 18 ஆண்டுகள் தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றிய அனுபவத்தையும் நமக்கு
 பகிர்ந்து கொள்கிறார்.

களப்பிரர் காலம் இருண்ட காலமா?,
மானுடம் தந்த கம்பன் எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். காரல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும், லெனின் வாழ்வும் சிந்தனையும், அண்ணா ஆட்சியை பிடித்தது எப்படி?, எனும் தலைப்பில் புத்தகமும், ஓசோவை முன்வைத்து விவாதம் எனும் புத்தகம் புத்தரின் கருத்துகளுக்கும் ஓசோவின் கருத்துகளுக்கும் உள்ள நடைமுறை தன்மையே விவாதிப்பது போல் இருக்கும்.

அருணன் எழுதிய புத்தகங்களில் முக்கியமானதான காலந்தோறும் பிராமணியம் புத்தகம் பிறந்த கதையும், அது வளர்ந்த கதையும், அது வந்தபோது ஏற்பட்ட விவாதங்களையும் நமக்கு பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அடுத்ததாக யுகங்களின் தத்துவம், கடவுளின் கதை எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.பயண இலக்கியம், தொலைக்காட்சி விவாதம் என தொடர்ந்து தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

#ரசித்தது

*துவங்கப்பட்ட அனைத்திற்கும் முடிவு இருக்கிறது. தானாக முடிவதற்கு முன்பு வம்பாக முடித்து வைப்பதற்கும் ஒரு வைராக்கியம் வேண்டும்.

*நா பார்த்தசாரதியின் நாவலில் நாயகி மணிக்கட்டில் கடிகாரத்தை கட்டியபடியே "காலத்தையே உங்கள் கையில் கட்டி விட்டேன்" என்பாள். அதற்கு அவனும் நாம் தான் காலத்தின் கையில் கட்டுண்டவர்கள்
என்பான்.

*நீங்கள் மட்டும் மார்க்சியத்தை படிக்க வில்லை எனில் திக்குத் தெரியாத காட்டில் அலைகிற ஒரு தனி ஆளாகிப் போவீர்கள்- பிடல் காஸ்ட்ரோ

*ஒருவன் அடுத்தவரது வெற்றியை வாழ்த்திப் பேசினால் அதில் பொறாமை இரகசியமாக மறைந்திருக்கிறது. ஒருவன் அடுத்தவரது இழப்புக்காக வருத்தம் தெரிவித்தால் அதில் மகிழ்ச்சி இரகசியமாக மறைந்திருக்கிறது.

*ஒழுக்கமற்ற அறிவு ஒருபோதும் ஞானத்தைக் கொண்டு வராது

*கற்களை கும்பிடுவதன் மூலம் கடவுளை காண முடியும் என்றால் நான் மலையையே கும்பிடுவேன்
- கபீர்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

எரியத்தொடங்கும் கடல்-அ.வெண்ணிலா

#30D0044
நாள்-22
புத்தகம்-37



உரைநடை என்பது சந்தையை
வேடிக்கை பார்ப்பது போன்றது-
 
கவிதை என்பது நீர்நிலையை நாடிவரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது போன்றது
-எஸ்.ரா

மனதில் தோன்றும் எண்ணங்களை மிக மென்மையான வார்த்தைகளில் சொல்வது கவிதை எனும் கலை. அதில் பெண்களின் உணர்வுகளையும், அவர்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழுத்தமாக சொல்வதில் கவிஞர் வெண்ணிலா அவர்களுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் இத்தொகுப்பில் தன் கவிதை 11 தொகுப்புகளை இணைத்து ஒரு புத்தகமாக நம் கைகளில் இருக்கிறது. நான் எப்போதும் ரசிப்பது அவரின் சிறு கவிதைகள் தான். ஏனெனில் சிறு குறு வரிகளில் மிகப் பெரிய உண்மைகளை அவர் சொல்லியிருக்கக் கூடும். அந்த வகையில் நான் ரசித்த சில கவிதைகள்

*அன்பு கொண்ட உன் முன் நிற்கும்போது 
பேரழகின் தோரணை வந்துவிடுகிறது எனக்கு

*முத்தத்தில் துவங்கி 
முத்தத்தில் முடியும் 
தாம்பத்தியம் 
எத்தனை பேருக்கு வாய்க்கிறது 

யாரும் சொல்லாமலேயே கற்றுக்கொள்கிறார்கள் 
அலுத்து தூங்குவதற்கான உடற்பயிற்சியாக.

*விஷப்பாம்பு ஒன்று 
என் மீதேறி 
நிதானமாக 
கடந்து போகிறது 
புரிதலற்ற உன் 
பார்வைகளை 
சந்திக்கும் பொழுதெல்லாம்.

*ஊடலின் நேரங்களில் விரவிக்கிடந்து 
வெறுமை சுமக்கின்றன 
ஒரு முத்தத்திற்கான
 இடைவெளிகள்

*உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவன் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே

*துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்

*கருத்த தோலுக்கருகில் சிவந்தது போலவும்,
சிவந்த தோலுக்கருகில் கொஞ்சம் கருப்புதானோ எனவும் கண்ணாமூஞ்சி காட்டுகிறது என் மாநிறக் கை

*எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்.

உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை.

எனக்கானதாகவும்,
உனக்கானதாகவும்
யாருக்கானதாகவும்
இல்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
அவரவர்களின் 'நான்'

*இரவின் மௌனத்தை பறவையின் முதல் குரல் கலைக்கிறது...!

*நானும் அந்த நாயும்
குழந்தைக்குச் சோறூட்டும்
மையப்புள்ளியில் சந்தித்துக் கொள்கிறோம்

கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும் 
உள்ளிறங்க வேண்டும்  என நானும் 
கீழே விழ வேண்டும் என நாயும்
 அவரவர் எதிர்பார்ப்பில் !

*ஜன்னலோர இருக்கைக்கு
அடுத்ததே என்றாலும்
அந்நியப்பட்டுப் போகிறது
வானம் !

*ஒருநாள் கூட
மனித முகங்களையே வெளிக்காட்டாத 
அந்த வீட்டில்

வெறுமையை மறைக்க
விதம் விதமாய்
பூத்துக் குலுங்குகின்றன 
பூக்கள்
எல்லா நாட்களிலும்.

*மகளுக்கு 
வாய்ப்பதில்லை
தாயுமான தந்தை

பேத்திகளுக்காக
மாறுகிறார்கள்
தந்தையாக தாத்தாக்கள்

இதுபோல் எண்ணற்ற கவிதைகள் புத்தகம் முழுவதும் நம் மன உணர்வுகளை அசைத்துப் பார்க்கவும், ரசித்து பார்க்கவும் தன் எழுத்தின் வழியே நம்மிடம் கைகுலுக்கி ..புத்தகம் அதற்குள் முடிந்து விட்டதா என்று எண்ணிப் பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு கவிதையையும் நேர்த்தியாக படைத்துள்ளார் கவிஞர் வெண்ணிலா 

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புரட்சிக்கதிர்கள்-வை.கோ

#30D0044
நாள்-21
புத்தகம்-36

#

அரசியல் தவிர்த்து வைகோவின் இன்னொரு முகம் வாசிப்பு. திருவாசக ஒலிநாடா வெளியீட்டு விழாவில் சிலாகித்து பேசிய வைகோவின் பேச்சை கேட்டு இளையராஜாவே அசந்து போனார். இப்புத்தகம் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் இருந்தபோது 6 புரட்சியாளர்களை அறிமுகம் செய்து எழுதிய கட்டுரைகள்.உல்க் வரலாற்றினை மற்றவர்க்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் பிரஞ்சுப் புரட்சி செங்கொடி புரட்சி என்று புரட்சி மலர்களால் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்திய புரட்சியாளர்களின் கட்டுரைகள் ஆகும்.

"எனது மனவலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும்" என்ற சேகுவேராவின் வார்த்தைகளுடன் துவங்கும் கட்டுரையில் அவரின் இளமைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை சுவைபட கூறியுள்ளார். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிள் பயணத்தில் 4000 மைல் பயணம் செய்யும்போது ஏழை பெண்ணின் அவல நிலையை பற்றி தன் குறிப்பில் கூறியது நம்மையும் நெஞ்சம் கனக்க வைக்கிறது

 கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வில் தான் உலகத் தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காணமுடியும். செத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது. என்று உருக்கமாக குறிப்பிட்டார். கியூபாவில் ஏற்படுத்திய புரட்சியை தொடர்ந்து இறுதியில் பொலிவியாவில் சடலம் ஆகும்போது நிகழ்ந்த சம்பவத்தை நமக்கு ஓவியம் வரைந்தது போல் எழுத்தில் விளக்குகிறார்

இரண்டாவதாக இத்தாலி முசோலினியின் ராணுவப் பிடியில் சிக்கிய லிபிய நாட்டில் ஏற்பட்ட புரட்சியாளர் உமர்முக்தார் அவரின் செயல்பாட்டினையும் வீரத்தையும் அதிகம் அறிந்திராத வரலாற்றுத் தகவல்களை நமக்கு விளக்கிக் காட்டுகிறார்

நடுநிசி ஆயிற்று அனைவரும் அயர்ந்து தூங்கி வட்டனர். நானும் என் தந்தையும் அவரது படுக்கை அறைக்குச் சென்றோம். அண்ணனும் தம்பியும் கட்டித்தழுவிக் கொள்கிறார்கள். கண்கலங்கினார். விடைபெற்றுக் கொள்ளும் வேலை
 வீட்டின் பின்பக்கம் இறங்க பயன்படும் படிக்கட்டு வழியாக இறங்கி சென்றார். கையசைத்தார். இதுதான் நாங்கள் இறுதியாக நேதாஜியை கண்ட தருணம் என அவரின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ்  பகிர்ந்து கொள்வதுடன் போஸ் குறித்த கட்டுரையை துவங்குகிறார். காங்கிரஸில் இருந்த போதும் சரி, சுதந்திரத்துக்காக போராடிய போதும் சரி ,விடுதலை ஒன்றையே தன்னுடைய இறுதி மூச்சு வரை கொண்டிருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.அவரின் இறுதியாக நிகழ்ந்த விமான விபத்து மர்மம் வரை விளக்கியுள்ளார்.

அரசியலில் ஒன்று முக்கியம் நியாயமாக நடந்தால் தோள் கொடுங்கள் 
தவறாக நடந்தால் விலகிச் செல்லுங்கள் -லிங்கன்

ஆபிரகாம் லிங்கனின் பாதையே கரடுமுரடானது .தோல்விகள் ஒன்றையே அதிகம் சந்தித்த ஆபிரகாம் லிங்கன் தன் கல்வியின் மூலம் முன்னேறினார், நேர்மையின் மூலம் முன்னேறினார்.இளமை முதல் அவரின் ஈடுபாடும் தேடலும் அவரை முன்னேற்றியது. இளம் வயதிலேயே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், ஜூலியஸ் சீஸரின் நாடகத்தில் மார்க் அந்தோணி பேசுவதையும் அடிக்கடி பேசி பார்ப்பார்.

தேர்தல் களத்தில் வேட்பாளராக, வணிகராக, அஞ்சல் பணியாளராக, சட்டமன்றத்தில் நுழையும் போது ஆற்றிய கடமைகள், திருமண வாழ்க்கை, வழக்கறிஞராக, நாடாளுமன்றத்தில் லிங்கன் என்று பல்வேறு களத்தில் அவரின் பயணம் தொடர்ந்து இருக்கிறது. லிங்கனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சொற்கள் ஸ்டீபன் டக்லஸ் பேசும்போது "அமெரிக்க அரசாங்கம் வெள்ளை மனிதனுக்காக வெள்ளை மனிதனால் நிர்வகிக்கப்படும் வெள்ளை மனிதனுடைய அரசாங்கம்" என்று கூறினார். 

இந்தச் சொற்களை மாற்றி தான் 1863 நவம்பர் 19 கெட்டிஸ்பர்க் மைதானத்தில் "மக்களுடைய மக்களுக்காக மக்களால் அரசாங்கம்" என்று புகழ்பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். அதன்பின் குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய சேவைகள், அவர் தாடி வைப்பதற்கான காரணங்கள், கொலைமுயற்சி, உள்நாட்டுப் போரை திறம்பட நிர்வகித்தது என்று அவரின் அறியாத பக்கங்கள் நிறைய நமக்குத் தெரிய வருகிறது.

இத்தாலி வீரரான போராளி கரிபால்டி அவரின் குருவாகத் திகழும் மாஜினியின் தியாகமும், வீரமும், விடுதலைக்கான பல்வேறு அடக்குமுறைகளையும், போராட்டங்களையும், கப்பல் படை வீரர்களை தயார் செய்ததையும் கரிபால்டியின் தலைமுறை வாழ்க்கை என அவரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் துல்லியமாக கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இத்தாலி எங்கும் ஒலித்த பாடல் "எங்கள் குழந்தைகள் தலைவனின் பெயர் அறிவர்!
 கரிபால்டியின் இதயம் ஒவ்வொரு மார்பிலும் துடிக்கிறது..
 என்று வீதிகள் தோறும் அந்த வரிகள் ஒலித்தது.

போராட்டக்காரர்களுக்கு இயற்கை தரும் பரிசு மரணமே.கரிபால்டியின் மரணமும் பல்வேறு வீர சாகசங்கள் மற்றும் வெற்றிகளுக்கு பிறகே கிடைத்தது.

#ரசித்த வரிகள்

*ஒரு முடிவை எடுப்பதற்காக நான் போராடிய போது உயிர்த்தியாகம் செய்வது எவ்வளவு எளிதானது என்று உணர்ந்தேன்- சேகுவேரா

*மரணத்துக்கு அஞ்சிடோம் மண்ணின் மானம் காப்போம் -உமர் முக்தார்

*தோல்வி என்று எந்தக் கட்டத்திலும் ஒப்புக்கொள்ளாதவனே புரட்சிக்காரன் -நேதாஜி

*புரட்சியின் திறவுகோல் பட்டினிதான்

*இம்பால் போரில் தமிழர்கள் பெருமளவு கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் நினைவாக, நேதாஜி உணர்ச்சி மேலிட்டு "நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறந்து நன்றி கடன் தீர்ப்பேன்" என மனமுருகி சொன்னார்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday 15 April 2021

பெரியார் கணினி-நன்னன்


#30D0044
நாள்-21,,புத்தகம்-35



பெரியார் கணினி இந்நூல் பெரியாரின் கருத்துகள் 48 தலைப்புகளில் முதற் பகுப்புகளாகவும், பிறகு 309 துணைப்பகுப்புகளும்,11 கிளைப்பகுப்புகளும் அடங்கியுள்ளன. இம் மூவகைப் பகுப்புகளிலுமாக மொத்தம் 4884 கருத்துக் கனிகள் அடங்கியுள்ளன.இது மிகப்பெரிய கருத்து கருவூலமாகும்.

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும்  மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.

காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்

கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து  ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே

#இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 5000 பொன்மொழிகளில் இருந்து நான் ரசித்த சில கருத்துகள்

*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்

* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்

* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது

* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது

* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்

* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை

* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி

* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது

* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன

* உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை

*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.

* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.

*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

*முட்டாள்த்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.

*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.

தொடர்ந்து கற்றுக்கொள்

ஆய்வு செய்

உருமாறு.!


தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு


அறத்தின் குரல்-நா.பார்த்தசாரதி





எப்போது படித்தாலும் பிரமிக்கத்தக்கது மகாபாரதம். ஏதேனும் ஒரு புதிய விஷயம் தென்படுவது மகாபாரதக் கதைகளில் தான். நா பார்த்தசாரதியின் அறத்தின் குரலும் மகாபாரத கதையின் சுருக்கம் தான்.

சன் டிவியில் பார்த்த பி.ஆர்.சோப்ராவின் பாரதத்தை பார்த்ததால் படிக்க படிக்க அப்படியே காட்சி விரிந்தது.திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரின் பிறப்பிலிருந்து கதை தோன்றுகிறது. திருதராட்டிரன் மன்னனாகவும், பாண்டுவை சேனாதிபதியாகவும்,
விதுரனை அவனுடைய அறிவாற்றலுக்கு ஏற்ற அமைச்சராகவும் நியமிக்கிறார்கள். திருதராஷ்டிரனுக்கு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணமுடித்து வைக்கிறார்கள்.

கன்னியான குந்தியின் அரண்மனைக்கு வரும் தவ வலிமைமிக்க துர்வாச முனிவருக்கு ஓராண்டு பணிவிடை செய்த காரணத்தினால்  அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறார்.  உனக்கு விருப்பமான எந்த தேவர்களை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறினாலும் அழகும் ஆற்றலும் மிக்க ஒரு புதல்வனை உனக்கு அளித்து விட்டுச் செல்வார்கள்.மந்திரத்தை விளையாட்டுத்தனமாக சோதித்துப் பார்க்க நினைத்த குந்தி சூரியனை நினைத்ததால் அவர் மூலம் கரணன் பிறந்தான். செய்வதறியாது திகைத்த குந்தி கர்ணனை ஆற்றில் விட்டு அதன்பின் பாண்டுவை மணமுடித்து இருவரும் வாழ்ந்து வந்தனர்

இந்தும முனிவரிடம்
பாண்டு பெற்ற சாபத்தினால் எப்போதெல்லாம் மனைவியை இன்பம் நாடி தீண்டுகிறாயோ அப்போது இறந்து போவாய் எனும் சாபத்தினால் குந்தியை தீண்டவில்லை. அதன்பின்னர் குந்தியின் வரத்தின் மூலம் தருமராசன் மூலம் தர்மனும் வாயுதேவன் மூலம் பீமனும் இந்திரன் மூலம் அர்ஜுனனும் 3 ஆண்கள் பிறந்தனர். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்திரிக்கும் இதேபோல் வரத்தை அளித்து அஸ்வினி தேவர்கள் இருவரின் மூலம் நகுல சகாதேவன் பிறந்தனர். ஒருகட்டத்தில் பாண்டுவின் சாபத்தினால் இறக்கிறார்.அவருடன் மாத்திரியும்.

அப்போது இருந்தே காந்தாரியின் குடும்பத்திற்கு குந்தியின் குடும்பம் மேல் பொறாமை இருந்துகொண்டே இருந்தது. இளமையிலிருந்து நடைபெறும் போராட்டமும், துரோணாச்சாரியார் எவ்வாறு பாண்டவர்கள் கௌரவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார் என்ற வரலாறும், இளமையிலேயே முளைத்த பகைமை எப்படி இறுதிவரை தொடர்கிறது என்பது குறித்த வரலாறும், பாஞ்சாலியை திருமணம் செய்த கதையும்,பாஞ்சாலியை தாயின் கட்டளைக்கிணங்க ஐவர் பங்கிட்டு கொண்டதையும் கூறிய முதல் பருவம் முடிகிறது.நாட்டுக்காக துரியோதனன் செய்த சூழ்ச்சியும் நாவல் முழுக்க நமக்கு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது

இரண்டாம் பாகத்தில் வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட பாண்டவர்களை வம்படியாக சூதாட்டத்திற்கு அழைத்துச் செல்ல விதுரனை தூது அனுப்புகிறார்கள். சூதாட்டத்தில் ஒவ்வொரு பொருளாக வைத்து ஆடி தோற்றுப்போன தர்மன் இறுதியில் கானகம் செல்வதோடு இரண்டாம் பாகம் முற்றுகிறது

காட்டில் அர்ஜுனன் தன் தவத்தின் மூலம் வரம் பெறுவதும், பீமன் யாத்திரை மூலம் வரம் பெறுவதும் 12 ஆண்டுகள் வனவாசத்தில் பல்வேறு இடங்களுக்கு அலைவதும் வனவாசம் முடிந்து ஒரு சிறு போருடன் வெளிப்படுவதும் விறுவிறுப்பாக இருக்கிறது.

போர் குறித்து பல்வேறு விஷயங்களை அலசி போர் நியாயம் தானா என்பதை எல்லாம் இருதரப்பினரும் பேசி முடிவில் கண்ணன போர் பற்றி பேச அஸ்தினாபுரம் வரும்போது துரியோதனன் அவரை மதிக்காமல் அரண்மனையிலேயே இருந்து விடுகிறான்.விதுரன் மட்டுமே எதிர்கொண்டு அழைத்துப் போய் விதுரன் மாளிகையில் தங்கி ஆலோசனை நடத்தி விட்டு செல்கிறார்.தன்னை காணாமல் விதுரனை கண்ணன் கண்டதால், துரியோதனின் கோபமெல்லாம் விதுரன் பக்கம் திரும்புகிறது. ஆகவே விதுரனை மிகவும் கேவலமாக திட்டியதால் விதுரன் நான் போர் புரியமாட்டேன் என்று வில்லை உடைத்து போடுகிறார். இப்படி ஒவ்வொருவராக அவர்களில் சிலர் போருக்கு வராததை கிளை கதைகளுடன் கதை சொல்கிறது.

போர் துவங்கிய நாள் முதல் போரின் முடிவு வரை ஒவ்வொரு நாள் நிகழ்ந்த சம்பவங்களும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் 14 வருஷஙகளாக காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறிய துடன் புத்தகம் நிறைவுறுகிறது


*பாஞ்சாலியை திருமணம் செய்ய கர்ணன் எத்தனித்த போது அவனுடைய வில் தலையிலே முட்டி தடுமாறி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. 

*கசப்பு என்ற சுவை இருப்பதால் தான் இனிப்பின் பெருமை விளங்குகின்றது

*விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ தவறிக்கூட அநீதிக்கு துணை செய்வதில்லை

*நம்புவதில் தான் எல்லாம் இருக்கிறது நம்பாததில் எதுவுமிலலை

*உலகத்தில் எல்லாருமே கன்னத்தில் அறைந்து பல்லை உடைத்த கைகளுக்குதான் பயப்படுகிறார்கள் அணைக்கிற கைக்கு பயப்படுவதில்லை.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கொரோனா கால பொதுத் தேர்வுகள்... பிரச்னைகளும், சவால்களும்!


ஊரே ஐ.பி.எல் போட்டிகள் பார்த்து குதூகலிக்க,மற்றொருபுரம் தேர்தல் திருவிழாவில் மகிழ்ந்திருக்க

"நீங்கள் பயணித்து வந்த அந்த 
புறநகர்ச் சாலையோரம்... 
யாரும் கவனிக்காத
சவலைப்பிள்ளையைப்போல்
பெயர்ப் பலகை கூட இல்லாமல் 
ஒரு ஊர் கடந்திருக்குமே...
அதுதான் எங்க ஊர் எனும்
கவி வளநாடனின் கவிதையைப் போல வீட்டில் பொதுத்தேர்வு எழுதுவோரும் கவனிக்கப்படாமல் இருக்கின்றனர்.

குடும்ப வாட்ஸ் அப் குழுவில் ஆரம்பித்து,தெரு முழுக்க எளிதில் பிரபலமடைந்து விடுகின்றனர் இவன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுவோன் என்று.பலர் நலம் விசாரிக்க ஆரம்பிப்பதே எக்ஸாம் எப்பனு தான் ஆரம்பிக்கிறார்கள். குடும்ப மானம்,கெளரவமான மதிப்பெண்,போட்டித்தேர்வு, மருத்துவ பொறியியல் படிப்பில் நல்ல கல்லூரி, எதிர்வீட்டு பெண்ணைவிட எக்ஸ்ட்ரா ஒரு மதிப்பெண்ணாவது பெற்றுவிட வேண்டுமென்று மைலேஜ் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர் மாணவ மாணவியர்


#மிரட்டும் பாடச்சுமை

பொதுத்தேர்வு எழுதுவோரில் முக்கியமானவர்கள் அறிவியல் பிரிவு மாணவர்கள்.நீட் தேர்வு, ஜே.இ.இ பொறியியல் தேர்வு என இவர்கள் சற்று இன்னும் மெனக்கெட வேண்டியுள்ளது.பயமுறுத்தும் பாடச்சுமைகள் ஒருபுறம்
உதாரணத்திற்கு

பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் புத்தகம் பக்கம் வாரியாக தமிழ்வழி
மற்றும் ஆங்கிலவழி இயற்பியல்-656(648), வேதியியல் 672(624),தாவரவியல் 608(560) விலங்கியல் 472(440), கணிதம்-672(608) பக்கங்கள்
என ஒவ்வொரு பாடமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இன்றைய மாணவர்களை பயமுறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தற்போது கொரோனா காலத்தில் ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.பொதுவாக சில எளிய பகுதிகளே நீக்கியுள்ளனர்.
உதாரணத்திற்கு வேதியியல் பாடத்தில் அன்றாட வாழ்வில் வேதியியல் பாடம் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறும் பகுதி. இதனை தற்போது முற்றிலும் நீக்கியுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில்
பொதுவாக இதனை ஆசிரியர்கள் ஜூன் மாதம் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்தால்தான் திருப்புதல்,சுழற்சி தேர்வுகளுக்கு தயார்படுத்த முடியும். ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க வேண்டியதை ஆசிரியர்கள் 7 மாதத்தில் முடித்து மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்.தற்போது நான்கு மாதத்தில் படிக்க வேண்டிய கட்டாயம்.ப்ளூ பிரின்ட் எல்லாம் தற்போது இல்லை..அட்டை டூ அட்டை படித்தால்தான் பாஸ் என்பதால் ஒரு கட்டத்தில் அவசரப்பட்டு அறிவியல் பாடம் எடுத்து விட்டோமோ எனும் விரக்தி மனநிலைக்கு மாணவர்கள் வருகிறார்கள்.எந்தப் பகுதியிலிருந்து கேள்வி வருமென்று ஒரு வித பதட்டத்துடனே மாணவ மாணவியர் இருக்கின்றனர்

அறிவியல் பிரிவினர்
70 மதிப்பெண்ணுக்கு 54 மதிப்பெண்கள் பயன்படுத்தி(applied) எழுதும் முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 70மதிப்பெண் எழுத்துத்தேர்வும் 30 மதிப்பெண் பிராக்டிகல் மற்றும் இன்டர்னெல் மதிப்பெண் ஆகும்.இதில் 70க்கு 15மதிப்பெண்ணும்
கலைப்பிரிவினர் 90க்கு 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். 30க்கு 20மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.அல்லது மாற்றி எடுத்தாலும் மொத்தம் 35  மதிப்பெண்கள் பெற வேண்டும்.


#மாணவர்கள் மனநிலை

தேர்வுக்காக பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மொத்த பாடத்தில் சில பகுதிகள் மட்டுமே நீக்கியுள்ளனர். அதிலும் சில எளிய பகுதிகளை நீக்கிவிட்டதால் ஏமாற்றமாகிவிட்டது. இதுவரை இரு திருப்புதல் தேர்வுகள் (50மதிப்பெண்கள்&70 மதிப்பெண்கள்) நடத்தியுள்ளனர்.இன்னொரு மாதம் தேர்வுகளை ஒத்தி வைத்தால் மேலும் சில திருப்புதல் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் என்கின்றனர் சில மாணவிகள்.

இதுவரை நடத்திய ஆன்லைன் வகுப்புகள் குறித்து கேட்டபோது தனியார் பள்ளிகளில் முதலில் இருந்த ஈடுபாடும் ஆர்வமும் நாள்பட நாள்பட குறைந்துவிட்டது. ஆசிரியர்கள் பாடங்களை முடித்துவிடும் எண்ணத்திலேயே முடித்ததாகவும், கலந்துரையாடல் இல்லையெனவும் தெரிவித்தனர். மேலும் சில மாணவ மாணவியர் வீடியோவை OFF ல் வைத்துவிட்டு கட் அடித்து சென்ற நிகழ்வும் நடந்தேறி இருக்கிறது.நேரடி கற்பித்தல் போல் ஆன்லைன் பாடங்கள் இல்லை. இம்முறை தோல்வியடைந்துள்ளது

அரசுப்பள்ளியில் பயிலுவோர் நிலை இன்னும் மோசம்.கோவை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் வேலைக்கு சென்றுவிட்டதால் ஆன்லைன் வகுப்புகள் வரவில்லை.  பள்ளி வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என சொல்லிவிட்டதால் பலர் பள்ளிக்கு வருவதில்லை.சிலர் ப்ராக்டிகல்,திருப்புதல் தேர்வுக்கு மட்டும் வந்து செல்கின்றனர். பல பெற்றோர்களிடம் சாதாரண்ஸ் போன் வைத்திருப்பதால் குழந்தைகளையும் ஒன்றும் சொல்ல இயலாத கையறுநிலையில் பெற்றோர்கள் இருந்துள்ளனர்.

இன்னும் சில மாணவர்கள் அரசு ஆல்பாஸ் அறிவித்துவிடும் எனும் மனநிலையில் தேர்வுக்கு முழுமையாக தயாராகாத மனநிலையில் இருக்கின்றனர்.


#ஆசிரியர்கள் நிலை

ஆன்லைன் வகுப்புகள் சரிவர அமையாததால் மீண்டும் பாடங்களை முதலில் இருந்து ஜனவரியில் நடத்த ஆரம்பித்தனர்.8 மாதங்களில் நடத்த வேண்டிய பாடங்களை இரண்டு, மூன்று மாதங்களில் தயார் செய்திருக்கின்றனர்.ஒவ்வொரு வகுப்பிலும் 25 பேர் மட்டும் அமர வைக்கப்படுவதால் 300 பேர் பயிலும் பள்ளியில் 12 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர்.


மொத்தமுள்ள இந்த நான்கு  மாதத்தில் சில மாவட்டங்களில் திருப்புதல் தேர்வு நடந்துள்ளது.முதல் இரு தேர்வுகள் காலை, மாலை என நான்கு நாட்களும், மூன்றாம் தேர்வு ஆறு நாட்களும் என 14 நாட்களும் தேர்வில் கழிந்துள்ளது. மீதமுள்ள நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியர் 20 பக்கங்கள் நடத்தினால் ஆறு ஆசிரியர்கள் நடத்திய 120 பக்கங்களை தினசரி ஒரு மாணவன் படிக்க வேண்டியிருக்கிறது.

Attendance கட்டாயமில்லாததால் பலர் வகுப்பறைக்கு வரவைக்க முடியவில்லை.தொழில் நகரங்கள் மற்றும் உள்ள பல ஊர்களில் கட்டிட வேலை,தினசரி கூலி வேலைக்கு செல்வதால் படிப்பில் நாட்டமின்றி இருக்கின்றனர்.கவனத்தை சிதறவைக்கும் திறன்பேசியில் மூழ்கிவிட்டனர்.சமூக ஊடகங்களில் அதிக நேரங்கள் செலவிடுகின்றனர். சில பெற்றோர்களிடம் போதிய அக்கறையின்மையால் ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பதில்லை.

CBSE பள்ளிகளில் இதைவிட சுமை அதிகம்.சில பள்ளிகளில் பேக்கேஜ் முறையில் ஆசிரியர்களை கான்ட்ராக்ட் முறையில் முடித்துக் கொடுக்க வேகமாய் பாடங்களை
நடத்தி விரைந்து முடித்து வருகின்றனர்.

கல்வியாளர்கள் பார்வையில்

ப்ளஸ் 2 மதிப்பெண்கள் தான் மருத்துவம்,பொறியியலில் சேர ஆதாரமாக இருப்பதால் அவசரகதியில் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்கின்றனர்.தனியார் பள்ளிகள் எப்போதும் போல் பிளஸ் 1ல் ப்ளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர்.தேர்வுகளில் சமமின்மை நிலவுவதாக ஆதங்கப்படுகின்றனர்.தேர்வு அழுத்தத்திற்கு மாற்றாக ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக பாடப்பகுதிகளை எழுதாமல் 'செமஸ்டர்' முறையில் தேர்வு நடத்த மாற்று வழிகளை கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.ஆன்லைனில் தேர்வு நடத்தவும்


பாடச்சுமை, பாடங்கள் புரியாமை, பெற்றோர் நெருக்கடி போன்றவை பொதுத்தேர்வு எழுதுவோரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  அறிவியல் இயக்கத்தினர் போன்றோர் கடந்த காலங்களில் முப்பருவ கல்வி முறை, எழுத்துத்தேர்வு முறையை குறைத்து அகமதிப்பீட்டு முறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவல்,கோடைவெயில் தவிர்த்து தாமதமாயாவது நடத்தலாம்.

#தேர்வு குறித்த பார்வை

குறுகிய காலமே உள்ளதால்
மாணவர்களும் ஆசிரியர்களும் கூறும் காரணங்களில் அடிப்படையானது இந்த ஆண்டு Blue Print முறைப்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்பட வேண்டும். கொள்குறி வினாக்கள் அதிகம் தரப்பட வேண்டும்.தேர்வினை ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.மே மாதம் மாதிரி வினாத்தாள்களை கொடுத்து தேர்வு குறித்த பயத்தினை நீக்கி தாமதமாய் தேர்வினை ஜூன் மாதத்தில் துவங்கலாம்.