‘உன்னை அழைப்பதற்குச் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. நீ கேட்கும் எதுவும் கிடைக்கும். உன் நண்பனைத் தவிர! வா சிசரோ’ என்று ஒரு தேவதை வந்து அழைத்தால், கையெடுத்து வணங்கிவிட்டுச் சொல்வேன். மாட்டேன். நீ வேண்டுமானால் அதைச் சொர்க்கம் என்று அழைக்கலாம். என் நண்பன் இல்லாத ஓரிடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்? அங்கே நான் ஏன் வரவேண்டும்?
‘உன்னை அழைப்பதற்கு நரகத்திலிருந்து வருகிறேன். அங்கே உலகின் அத்தனை பயங்கரங்களும் இருக்கின்றன. நீ தப்பவே முடியாது. உன் நண்பன் அட்டிகஸும் அங்கேதான் இருக்கிறான். வா என்னோடு’ என்று ஒரு பூதம் வந்து அழைத்தால், இதோ என்று கையோடு கிளம்பிவிடுவேன். என் அட்டிகஸ் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்? அங்கே எப்படிப் பயங்கரங்கள் இருக்கும்? ஒருவேளை நிஜமாகவே அது ஒரு கொடூரமான இடம் என்றால், என் நண்பனை அங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி இங்கே சுகமாக வாழ முடியும்?
பாவம், ரோமாபுரியின் தத்துவஞானி கொஞ்சம் உணர்வுவயப்படுகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வதில் கொஞ்சம்கூட மிகையே கிடையாது. நான், என் வீடு, என் குடும்பம் என்று சுருங்கிக் கிடந்த என்னைப் பிடித்து வெளியில் இழுத்து இதோ பார் என்று பரந்து விரிந்த உலகைக் காட்டியவன் அட்டிகஸ். கண்களோடுதான் பிறந்தேன். ஒளி அவன் கொடுத்தது. இதயத்தோடுதான் பிறந்தேன். துடிப்பு அவன் வழங்கியது. நட்பின் உண்மையான பொருள் என்ன, அது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை அவனிடமிருந்தே கற்றேன்.
ஒரு நல்ல நண்பனால் உங்கள் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று பார்க்க முடியும். உங்களுக்குள் நிறைந்திருக்கும் நல்லதையும் கெட்டதையும் கண்டுபிடித்து இது நல்லது, இது கெட்டது என்று தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும். நல்லதை மேலும் மேலும் வளர்க்கவும் கெட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும் அவன் உங்களுக்கு உதவுவான். இவன் என் வாழ்க்கைக்குள் நுழைந்தான். அதன் பின் எல்லாமே மாறிவிட்டது என்று அவனைக் கைகாட்டி நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.
நான் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதை மட்டுமல்ல; எதையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லையோ அதையும் என் நண்பன் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இதைச் சொன்னால் நான் கோபப்படுவேனோ, அப்படிச் சொன்னால் நான் வருந்துவேனோ என்றெல்லாம் தயங்க மாட்டான்.
அட்டிகஸ் நீ என்னை அதிகம் புகழ்ந்ததில்லையே, ஏன்? என்னுடைய மாபெரும் சாதனைகளைக்கூட ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுகிறாயே, ஏன் என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவன் என் தோளில் கை போட்டுப் புன்னகைத்தான். ‘நீ மேலே ஏற, ஏற கைதட்டி மகிழ்வதற்கும், இன்னும் இன்னும் மேலே போ என்று ஆர்ப்பரிப்பதற்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தக் கூச்சலில் என் சிசரோவின் இதயத்தை அடைத்துவிடக் கூடாது! தவறாக ஓரடிகூட எடுத்து வைத்துவிடக் கூடாதே என்று பதைபதைப்போடு பார்ப்பதற்கு நான் ஒருவன்தான் இருக்கிறேன்! உன் புகழ், சாதனை, பெருமிதம் எதுவும் உன்னைவிட முக்கியமில்லை எனக்கு’ என்றான் அட்டிகஸ்.
ஒருவருக்கு ஓர் அட்டிகஸ் போதுமா என்று கேட்டால் ஒரு தோட்டத்தில் ஒரு செடி போதுமா என்று கேட்பேன். ஆரம்பத்தில் என் வகுப்பு, என் பள்ளி, என் வீதி, என் மதம் என்றுதான் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் மட்டும் போதாது என்றே சொல்வேன். உங்கள் நம்பிக்கை, உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, உங்கள் நிலம், உங்கள் ஆர்வம் அனைத்தையும் கடந்து புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள்.
சமவயது நண்பர்கள் மட்டும் போதாது. மூத்தவர்களோடும் இளையவர்களோடும் பழகுங்கள். நீங்கள் ஆண் என்றால் பெண் நண்பர்களையும் நீங்கள் பெண் என்றால் ஆண் நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை விரிவடைவதை, சிந்தனை வளம் பெறுவதை, உள்ளம் வலுவடைவதை உணர்வீர்கள்.
நீங்கள் கலங்கி நிற்கும்போது உங்கள் நண்பரின் கரம் உங்கள் தோள்மீது படரும். நீங்கள் அஞ்சி நிற்கும்போது உங்கள் நண்பர் உங்கள் கரங்களை உறுதியோடு பற்றிக்கொண்டு உங்களோடு சேர்ந்து நடப்பார். உங்கள் பாதையில் இருள் மூடிக்கிடக்கும்போது அவர் மெழுகுவத்தியோடு தோன்றுவார்.
உங்கள் எதிரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை நீங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அவசரமே வேண்டாம், பேசிப் பழகி, பொறுமையாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான அட்டிகஸை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் ஓர் அட்டிகஸாக மாறவேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களைச் செழுமைப்படுத்தியதுபோல் நீங்கள் இன்னொருவரைச் செழுமைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களை நிறைவு செய்ததுபோல் நீங்கள் இன்னொருவரைக் கண்டறிந்து அவர் குறைபாடுகளைப் போக்கி, அவரை நிறைவு செய்ய வேண்டும்.
நிறைவான மனிதன். நிறைவான வாழ்க்கை. நிறைவான உலகம். இந்த மாயத்தை நட்பு தவிர வேறு எதனாலும் நிகழ்த்த முடியாது.
மருதன்
மாய உலகம், மாயாபஜார்