Wednesday 15 May 2024

காற்று வெளியிடை கண்ணம்மா,நின்றன் காதலை எண்ணி கழிக்கின்றேன்காதலில் களிப்பது வேறு. காதலை எண்ணி எண்ணி களிப்பது வேறு.அப்படி எண்னி எண்ணி களிப்பதுதான் உண்மையான காதலென்று சொல்கிறார் பாரதியார்

வெற்றியின் அளவுகோல். ஒரு சர்ச்சையில் எப்போதும் சிறிய தலைகள்தான் உருண்டுகொண்டிருக்கும். பெரிய தலைகள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருப்பார்கள். அங்ஙனம் மௌனம் காப்பதாலேயே அவர்கள் பெரிய மனிதர்கள். ஏனெனில், உங்களது தவறுகளுக்கும் செயல்களின் பின்விளைவுகளுக்கும் நீங்களே வக்காலத்து வாங்கித் தடுப்பாட்டம் ஆடும்வரை நீங்கள் பெரிய மனிதர் அல்ல. உங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காகப் பெரிய கூட்டத்தைத் தயார்செய்யும்போதே வெற்றியடைந்தவர் ஆகிறீர்கள்.-கோகுல் பிரசாத்

Tuesday 14 May 2024

எந்தவொரு நதியுமே கடைசி ஜாமத்தின் ஏதோ ஒரு தருணத்தில், ஓட்டத்தை ஒரு கணம் நிறுத்தி ஆசுவாசப்பட்டுவிட்டு, பிறகு மீண்டும் நகரத் தொடங்குமாம். காலத் தொடர்ச்சியும் அறுந்து அந்தரத்தில் தொங்கும் ஒற்றைக் கணம் அது-படித்தது

ஒருவர் போல்.இல்லை


மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மீண்டும் உருவாகாமல் எப்போதும் தனித்துவமாகவே உருவாகின்றன?

பரிணாம வளர்ச்சியின் தேவையால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களை போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.

எடுத்துக்காட்டாக, பென்குயின் பறவைகள் உருவத்தால் பெரும் வேறுபாடுகள் கொண்டவையில்லையெனினும், தத்தம் தனித்துவமான குரலோசையால் மற்ற பென்குயின்களை கண்டறிகின்றன. நாய்கள், தம் அதீதமான மோப்பத்திறனால் மற்ற நாய்களை அறிகின்றன. மனிதனின் உருவ வேறுபாடுகள் வியக்கத் தக்கவை. 700 கோடி மனிதர்கள் 700 விதமான முகங்கள். ஒத்த இரட்டையர்களின் மரபணுக்கள் ஒத்திருந்தாலும் உருவத்தில் வேறுபட்டு விடுவர். சிறு வேறுபாடுகளை கவனிக்கத் தவறுவதாலேயே நம்மால் வேறுபாட்டை அறிய முடிவதில்லை.

The Biology of belief நூலின் ஆசிரியர் முனைவர்.லிப்டன் அவர்கள் கூறுவதைப்போல், ஒவ்வொரு புறக்காரணி மட்டுமின்றி ஒருவரின் நம்பிக்கையும் அவர் தம் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். உலகின் எந்த மனிதனுக்கும், புற, அகக்காரணிகள் ஒன்றாக இருப்பதில்லை

உடலின் ஒவ்வொரு உயிர் அலகும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உயிரலகும் புற, அகக்காரணிகளால் பாதிக்கப்படும்போது ஒவ்வொன்றும் நுண்ணிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, பலகோடி செல்களிலான உடல் எனும் பெரிய அளவில் பெரும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.

எனது ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சிறு பிழை எவ்வாறு பெரும் பிழையாய் மாறுமென்பதற்கு எடுத்துக்காட்டாய், நிலவிற்கு ஒரு பொருளை நேர்கோட்டில் அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் கோணத்தில் 0.0000000001 பாகை பிழை ஏற்பட்டாலும், அது நிலவை அடைய முடியாது. ஏனெனில், அந்த பிழையின் அளவுடன், நிலவின் தூரத்தை பெருக்கும்போது வரும் கோணம், நிலவை விட்டு அந்த பொருளை, வெகு தொலைவில் விலக்கி விட்டிருக்கும். அவ்வாறே, நுண்ணிய அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெரிய அளவில் பூதாகர மாற்றமாக இருக்கும்.

அடுத்த முறை நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகின் தனித்துவமான உருவத்திற்கு சொந்தக்காரரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை!

-படித்தது

பகல் முழுக்க மோடம்.தரையும் வானிலையும் குளிர்ந்து விடுகிற நாளில் மனத்தின் இன்னொரு பகுதி இந்த மாநகரை ரசிக்கத் தொடங்கி விடுகிறது. அதுவரை இருந்த வெறுப்பு அத்தனையும் ஆவியாகி, இந்த ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிற மாதிரி சமனப்பட்டு விடுகிறது-யுவன் சந்திரசேகர்

Monday 13 May 2024

அழியாத மை*வாக்களிக்கும் போது வைக்கப்படும் அழியாத மை முன்பு புள்ளி போல் வைக்கப்பட்டது.1.2.2006 முதல் விரல் முழுதும் வைக்கப்பட்டது*1950ல் மைசூரை சேர்ந்த NRTC நிறுவனம் காப்புரிமைப் பெற்றது.*1962ல் 3வது மக்களவைத் தேர்தலில் மைசூரில் மட்டும் முதன்முதலில் உபயோகிக்கப்பட்டது*இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 30 இலட்சம் லிட்டர் மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 55கோடி*1976முதல் சர்வதேச அளவில் 29 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது-என்.மகேஷ்குமார்

முழுக்கப் புறக்கணிக்கப்பட்ட கிடங்கிலிருந்து நினைவுகள் பீறியடிப்பதன் பின்னுள்ள தர்க்கம் யாராலும் எளிதில் அளவிட முடியாதது என்றே சொல்ல வேண்டும்.-யுவன் சந்திரசேகர்

Saturday 11 May 2024

routine


,அன்றாட ஒழுங்கின் அவசியம்
Power of Routine

நீங்கள் உங்களை எத்தனை சாதாரணமான ஆளாகக் கருதினாலும் உங்களுக்குச் செய்ய பெரிய விஷயங்கள் இல்லை என்றாலும் கூட Routine எனப்படும் அன்றாட ஒழுங்கை வைத்துக் கொள்ளுங்கள்.
காலை இத்தனை மணிக்கு எழுவது , பேப்பர் படிப்பது  , உடற்பயிற்சி, ஃபேஸ்புக் பார்ப்பது, வீட்டு வேலைகள் , வாசிப்பது, எழுதுவது, ரிலாக்ஸ் பண்ணுவது என எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஒழுங்கு வைத்துக் கொண்டு அதன்படி செய்யுங்கள். எத்தனை சிறிய ரொட்டின் என்றாலும் பரவாயில்லை

பல விஷயங்களை நாம் செய்ய ஆசைப் படுவோம். ஆனால் அதைச் செய்ய ஒரு மூட் வரட்டும் எனக் காத்திருப்போம். அந்த மூட் வரவே வராது.இதுதான் Psychological Inertia எனப்படும் ஸ்டார்டிங் ட்ரபிள்.

அதுவே ஒரு அன்றாட ஒழுங்கு வைத்திருந்தால் அதுவே உங்களுக்கு ஒரு உந்துதலைத் தரும். 

அன்றாட ஒழுங்கை வைத்திருப்பவர்களுக்கு மனச் சோர்வு வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இலக்குகளை அடைவதாலும் மனச் சோர்வு குறைகிறது.

வாழ்க்கையின் நோக்கம் என்றெல்லாம் அடிப்படையில் எதுவும் கிடையாது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க ஒரு ஒழுங்கையும் நோக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . அது போலியாக இருந்தாலும். எதையாவது செய்தோம் என்ற நிறைவு இருக்கும்

So have a routine...

டாக்டர் ஜி ராமானுஜம்.

Thursday 9 May 2024

ஜீரோ வாட் பல்புகள் 12-15 வாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.அந்த காலத்தில்,அந்த காலத்தில் உள்ள மின்காந்த மீட்டரால் இவ்வளவு குறைவான அளவு சக்தியை அளவிட முடியல. மீட்டரில் 'ஜீரோ' பவர் என்று எழுதப்பட்டதால் அதற்கு ஜீரோ வாட் பல்ப் என்று பெயர் வைத்துவிட்டனர்.#info

புத்தர்


புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம். 

அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.

புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.

புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.

"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"

பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.

But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும் :-)

-படித்தது

நேற்றைய கனவென்பது இன்றைய வாழ்விலிருந்து நாளையின் வரலாற்றை உருவாக்குவதுதானே?-லதாமகன்

வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை -புத்தர்

There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure.""ஒரு கனவை நனவாக்க முடியாமல் தடுப்பது ஒன்று மட்டுமே : அது தோற்று விடுவோம் என்ற பயம் தான்".-பாவ்லோ கொய்லோ

Wednesday 8 May 2024

துவங்கிய இடத்திலேயே வந்து சேருகிற இரண்டே எண்கள் 0& 8.இதில் ஜீரோ போடுவது எளிது.8 சற்று சிக்கலானதும் கன்ட்ரோல் இருந்தால் மட்டும் காலூன்றாமல் போட முடியும் என்பதால் இருசக்கர ஓட்டுநர் உரிமத்துக்கு இதை தேர்ந்தெடுத்தனர்.#info

மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது.'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள்.அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.-ராமானுஜம்

Monday 6 May 2024

டாலரில் ப்ராங்க்ளின் படம்


பெஞ்சமின் ஃப்ராங்ளின்

அமெரிக்க டாலர்களில் படம் வரணும்னா அந்த நாட்டின் அதிபராக ஒருவர் இருந்திருக்கணும்.

ஆளானப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டனே $1 டாலர் நோட்டிலும், ஆப்ரஹாம் லிங்கன் $5 டாலர் நோட்டிலும் தான் படமாக வந்துள்ளனர். பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க அதிபர் இல்லை. ஆனாலும் படமாக வந்து விட்டார். அதுவும் $100 டாலர் நோட்டுகளில்.

ஏனெனில் பிராங்க் செய்த தரமான சம்பவங்கள் அப்படி!

பிரிட்டனை எதிர்க்க, அமெரிக்கா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரஞ்சு காரனுக்கு இளகிய மனசு. இந்த ஒப்பந்தம் நிறைவேற ஆணி வேராக செயல்பட்டவர்களில் பிராங்க் தான் முதல் ஆள்.

அமெரிக்கா முன்னேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளின் தயவு தேவை! என சீக்கிரமே புரிந்து கொண்ட பிராங்க், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து கடனுதவி, மற்றும் வாணிபம் இரண்டையும் கொண்டு வந்து சேர்த்தார்.

மொத்தம் மூணு ஒப்பந்தங்கள் நிறைவேற பிராங்க் தான் காரணம்:

Treaty of France
Treaty of Paris
Declaration of Independence

மூன்றாவதாய் உள்ளது படி யாரையும் கைது செய்ய முடியாது.
முதலாம் Amendment குடுத்த பேச்சுரிமை இருப்பதால் வெள்ளை மாளிகை முன்பு கூட நின்று கொண்டு "அதிபர் ஒழிக!" என்று கோசம் போட முடியும்.

ஆனால் சனி பகவான் நாவில் வந்து அமர்ந்து விட, கொஞ்சம் வாய் தவறி "அமெரிக்கா ஒழிக! அல்லது ஒழித்து கட்டுவேன்!" என்று சொன்னால் 10 வருடம் நிச்சயம்! 25 வருடம் லட்சியம்! என்று தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

பிராங்க் அறிவியல் அறிஞர். எதற்கும் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை. நல்ல விஷயங்கள் மக்களுக்கு எளிதா போய் சேரனும் என்று பெருந்தன்மையா சொல்லி விட்டாராம்.அதனால் அவரால் அதிகம் டாலர் சம்பாதிக்க முடியவில்லக்.ஆனால் ப்ராங்ளினால் அந்த டாலரில் படமாக வர முடிந்தது.

-படித்தது

1770ம் வருஷம், ஆஸ்த்ரேலியாவுக்கு சென்ற ஜோசப் பேங்க்ஸ் எனும் ஆங்கிலேயர், அங்கு வேறெங்கும் காணாத வித்தியாசமான விலங்கு ஒன்றினைப் பார்த்தார். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள, அங்கு இருந்த அபோரிஜினல் பழங்குடியினரிடம் அந்த விலங்கின் பெயரைக் கேட்டிருக்கிறார். அந்த பழங்குடியினர், "கங்காரு" என்றனர்.உடனே இவரும் தனது டைரியில் இந்த வகை விலங்குக்கு "கங்காரு" என்று பெயர் என குறித்துக்கொண்டார். பிறகு, அதனையே அதன் பொதுப் பெயராக உலகெல்லாம் பரப்பி விட்டனர். ரொம்ப நாளைக்குப் பிறகு தான் தெரிந்தது. அந்த பழங்குடியினர் பேசும் "கூகு யிமித்திர்" மொழியில் "கங்காரு" என்றால் "எனக்குத் தெரியாது / எனக்கு புரியவில்லை" என்று அர்த்தமாம். பாவத்த... 🤣

“ஒரு மனிதன் எப்படி இருக்கிறானோ, அவனை அப்படியே நடத்தினால், அவன் தொடர்ந்து அப்படியே இருப்பான். ஒரு மனிதனால் எப்படி இருக்க முடியுமோ, அவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அவனை நடத்தினால், அவன் அப்படிப்பட்டவனாக உருவாவான்.”-கதே

Saturday 4 May 2024

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைபோகாறு அகலாக் கடை' - வருமானம் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவழிப்பது அதிகம் இல்லாமல் இருந்தால் போதும்-திருவள்ளுவர்

தனிமை இரண்டு விதம்.தனிமையாய் ஆகுவது..தனிமையாய் ஆக்கப்படுவது.இரண்டுமே..வெவ்வேறு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.-பாலகுமாரன்

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் பணத்திற்கான மறு பெயர் கரன்சி (CURRENCY) என்று உள்ளது. பணமானது ஒரு நீரோட்டமாக (CURRENT) நதி போன்று, வழிந்து ஓடிக் கொண்டு, வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காக அப்பெயர்#info

ஓர் அஸ்திவாரக் கல்லாய் பார்வையில் படாதிரு பரந்தகன்ற பிரம்மாண்ட கட்டடத்தை மனநிறைவோடு உன் மார்பில் தாங்கு!-சரண்தாஸ்

Friday 3 May 2024

இயற்கையின் நிழலில்


மிக வலிமை வாய்ந்த இறகுகள்.. இவை.. 

நமது சீலிங் பேன் (Ceiling fan) சராசரியாக ஒரு நொடி பொழுதில், 4-5 முறை சுத்துகிறது..

அதுவே கணினியில் இருக்கும் விசிறி 40-50 முறை ஒரு நொடிக்கு..

கார்களில் பிஸ்டன் ஒரு நொடி பொழுதில் அதிக பட்சமாக 120 முறை சுற்றும்.. 

ஹெலிகாப்டரில் கூட ஒரு நொடியில் ரெக்கை 30-40 முறை சுற்றி விடும்..

ஒரு தேனீ பூச்சியின் ரெக்கை என்ன வேகத்தில் இயங்குகிறது தெரியுமா? 

ஒரு நொடியில் 236 முறை.. 

நாம் பயன் படுத்தும் கண்டுபிடிப்புகள் வட்டமாக விசுறுபவை.. 

தேனீ பூச்சி மற்றும் பறவைகளின் ரெக்கை அப்படி அல்ல.. மேல்கீழாக இயங்குபவை.. 

இது வரை மனிதன் இந்த பொறிமுறையில் (mechanism) எதையும் பறக்கவிட்டதாக தெரியவில்லை..

செயற்கையான கருவிகள் மேள்கீழாக இயங்கி 236 முறை ஒரு நொடியில் இயங்கினால் அதை தாங்க வலிமை தர பல கோடிகள் செலவு செய்து வருட கணக்கில் உழைப்பு போட வேண்டி இருக்கும்.. அப்படியும் சாத்தியம் தானா என்பது சந்தேகம் தான்.. ஏராளமான எரிபொருள் அல்லது மின்சாரமும் தேவை படும்..

ஆனால் விரல் நுனி அளவே உள்ள தேனீ, ஒரு நொடிக்கு 236 தனது இறகை அடித்து பறக்கும்.. 

குறைந்த பட்சம் ஒரு தேனீ 10 மணி நேரம் வேலை செய்யும்.. 

10 மணி நேரம் 

600 நிமிடங்கள்

36000 நொடிகள்

8496000 முறை ஒரு தேனீ இறகை ஒரு நாளில் அசைத்து விடும்.. 

இப்படி சராசரியாக 36 நாட்கள் செய்ந்தால், ஒரு தேக்கரண்டி யில் பண்ணிரண்டில் ஒரு பங்கு தேன் சேகரிக்கும்..

36 X 8496000 = 305856000 முறை ஒரு தேனீ பூச்சி தனது இறகை அடித்தால், நமக்கு கிட்டத்தட்ட, ஒரு சொட்டு தேன் கிடைக்கும்...

ஒரே தேனீ பூச்சியின் உழைப்பு இது.. 

கோடிக்கணக்கான தேனீக்கள் இப்படி தேன் சேகரிக்க சென்று, நமக்காக மகரந்த சேர்க்கை செய்கின்றன..

ஒரு பருக்கை சோற்றை, ஒரு துளி தேனை, ஒற்றை கடுகை, ஒரு நுண் துகள் உணவை, வீணடிக்க நமக்கு உரிமை இல்லை.. 

- இயற்கையின் நிழல்..

அத்தனை வழிகளும் அத்தனை சாத்தியங்களும் அத்தனை எளிய கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டும் அதன் வேலிகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் சுவர்களில் மோதி தங்கள் எல்லைகளை விரிவாக்கிவிட பாடுபடும் மனிதர்களின் காலம்.-லதாமகன்

Thursday 2 May 2024

'ஓய்வை ஒருவன் அனுபவிக்க விரும்பினால், அவன் தன்னுடைய நேரத்தை நிறைவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு நொடி கூட நிச்சயமில்லாதபோது ஒரு மணி நேரத்தை வீணாக்குதல் விவேகமாகுமா? ஓய்வு என்பது, பயனுள்ளதைச் செய்யப் பயன்படுத்தும் நேரமாகும். -பெஞ்சமின் பிராங்க்ளின்

உமா ரமணன்




ஆனந்த ராகம்..பாடல் ரேடியோவில் 90களில் ஒலிக்கும் போதெல்லாம் அந்த இசை கேட்டு ஓடிவரும் குரலில் அத்தனை துள்ளல் இருக்கும்.
கிளாசிக்கல் ஸ்டைலில் அமைந்த நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாள்திறவாய் அந்த கதாநாயகியின் முக ஒற்றுமைக்கும் குரலுக்கும் அத்தனை பொருத்தம். ரேவதியின் நடிப்பில் உருவான பாடல்கள் சிலவற்றுக்கு உமா ரமணின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அரங்கேற்ற வேலை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே, புதுமைப்பெண் படத்தில் வரும் கஸ்தூரி மானே உள்ளிட்ட சில பாடல்களை சொல்லலாம்.

கேளடி கண்மணி என் நீ பாதி நான் பாதியும், புது நெல்லு புது நாத்து படத்தில் மரிக்கொழுந்து பாடலில் சித்ராவுடன் இணைந்து பாடியிருப்பார். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் துள்ளல் இசையாக மேகம் கருக்கையிலே பாடலில் கிராமத்து மணத்தை நமக்கும் தந்து இருப்பார். ராஜாவுடன் இணைந்து பாடிய மற்றொரு பாடல் பாட்டு பாடவா படத்தில் வரும் நில் நில் நில் பதில் சொல் சொல் பாடலும்.
பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் வரும் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன் என்ற பாடலும் ராஜாவுடன் பாடியிருப்பார்.

வைக்காத செந்தூரம்தான் என சரணத்தில் ஆரம்பிக்கும் கும்பக்கரை தங்கையா படத்தில் வரும் பூத்து பூத்து குலுங்குதடி பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும். கண்மணி நீ வர காத்திருந்தாள்  பாடலில் இவரின் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலிப்பது குறிப்பிடத்தக்கது. நந்தவன தேர் படத்தில் வரும் வெள்ளி நிலவே பாடலில் நாயகனின் ஆறுதலை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை குரலிலே தந்திருப்பார்.

மகாநதி படம் வந்தபோது படத்தில் ஒரு சரணத்தை வெட்டி இருப்பார்கள். ஆனால் ஆடியோவில் அது இருக்கும். அதுதான் ஸ்ரீரங்கநாதர் பாடலில் கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் எனும் சரணம். அந்த பத்தியில் அவ்வளவு இயல்பாய் பாடியிருப்பார்.

முரளியின் படத்தில் வரும் தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே பாடலில் நாயகனுடன் ஊடல் ஆடும் நாயகியின் மனோ நிலையை அப்படியே பிரதிபலித்து இருப்பார். ஊரடங்கும் சாமத்துல எனும் துவங்கும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் சொர்ணலதா உடன் இணைந்து கலக்கி இருப்பார்.

 இது என்ன இது என்ன புது மயக்கம் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலும்.தற்காலத்து நாயகியான திரிஷா விற்கும் சிவகாசி மற்றும் திருப்பாச்சி பாடல்களில் பாடி இருப்பார்

இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வந்தவை இவைகள் மட்டுமே. தனித்துவக் குரலாக அதிகம் கவனத்தில் அறியாத உமாரமணன் அவர்களின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

-மணிகண்ட பிரபு

Wednesday 1 May 2024

Laapataa ladies, (Hindi)-மணி



அமீர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள படம்
தொலைந்து போன பெண்கள் எனும் அர்த்தம் தரும் டைட்டில் தான்
லாபட்டா லேடிஸ்.செங்கல் செல்போன் உள்ள 2000ன் துவக்கத்தில் நடக்கும் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு குக் கிராமத்தில் திருமணம் நடைபெறுகிறது.பொது இடத்தில் பெண்கள் யாரையும் பார்க்காமலிருக்க முக்காடிட்டு நடக்கும் வழக்கமுள்ள ஊரில், தீபக் எனும் மணமகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். மாப்பிள்ளை சைடுல ஒருத்தர் கூட இல்லை.

திருமணம் முடித்து தனது சொந்த ஊருக்கு தன் புது மனைவியுடன் கிளம்புகிறான்.. நெருக்கடியான ரயிலில் பயணம் செய்யும் போது அதே இருக்கைக்கு அருகே இன்னொரு புது மணத் தம்பதியினரும் பயணிக்கின்றனர். இரண்டு பெண்களுக்கும் ஒரே விதமான சிவப்பு நிற உடை + முக்காடு.

ரயில் காலதாமதமாவதால், நல்லிரவில் தீபக்கோட ஸ்டேஷன் வருகிறது.உண்மையான மனைவி உறங்கிக் கொண்டிருக்க, தீபக் இரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் பெட்டியில் இருந்த மற்றொருவரின் மனைவியுடன் அந்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறான். அந்த பெண்ணுக்கு தான் இடம் மாறி இறங்குவது அறிந்தும், அவள் அமைதியாக தீபக்குடனே அவனது கிராமத்துக்கு செல்கிறாள். 

தீபக்கின் உண்மையான மனைவி வேறு ஒரு ஊரில் இறங்கி தவிக்க, அங்கு அவளுக்கு அந்த ஸ்டேஷனில் டீக்கடை நடத்தும் ஒரு வயதான பெண்மணி ஆதரவு அளிக்கிறார்.

இறுதியில் புது மணத்தம்பதி சேர்ந்தார்களா?புது மணப்பெண் என்ன ஆனாள் என்பது மீதிக்கதை.

*இடம் மாறிப்போன இரண்டு பெண்களின் நிலைதான் கதையாக பயணிக்கிறது. காவல் நிலைய புகார், ரயில் நிலையத் தொடர்பு என அன்றைய தொழில் நுட்பத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ள கோல்டன் நாட்கள் தெரிகிறது

*விருப்பமில்லாத மற்றொரு மணப்பெண் அமைதியாக தீபக்குடன் பயணிக்கிறாள்.ஆரத்தி எடுக்கும் போது வரும் அதிர்ச்சி பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது

*புதிதாய் வந்த மணப்பெண்வந்த அன்றே செங்கல் செல்போனின் சிம்மை எரித்துவிடுகிறாள். இதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என லாஜிக் வொர்க் அவுட் ஆகிறது

*தொலைந்து போன உண்மையான மனைவி பதறி அழும் இடம் இயலாமையை காட்டுகிறது. யாரையும் நம்பாமல் பின்னர் நம்பிக்கையுடன் நகர்வது பெண்ணின் தன்னம்பிக்கையை காட்டுகிறது

*கையிலிருக்கும் மருதாணியில் தீபக்கின் பெயர் அழிவதை பார்த்து இனி சந்திப்போமா என சந்தேகத்தையும் கூட்டுகிறது.

*பெண்ணை ஒருவர் துணையின்றி அனுப்புவார்களா?ஆணின் உறவினர் ஒருவரும் வரவில்லையா?கடிதப் போக்குவரத்தில் பெண் வீட்டார் விசாரிக்கவில்லையா?புதுப்பெண்ணை விருந்தாளி போல் தங்க வைப்பார்களா? என அடுக்கடுக்கான கேள்வி இருந்தும் அந்த விளிம்பு நிலை குடும்ப கிராமச் சூழல் கோவாக்சின் போட்டவர் போல் கேள்வி கேட்காமல் கோவிஷீல்ட் போட்டவர் மாதிரி அமைதியாய் கவனிக்க வைக்கிறது.

ஒருவரிக்கதை,நல்ல திரைக்கதை வித்தியாசமான அனுபவம், சினிமாத்தனம் இல்லாமல் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

பெருந்தீசிற்றனலிலிருந்து கிளம்புவதுபோல,பெரும் யுத்தம் சிறுபுறக்கணிப்பிலிருந்து துவங்கும்.-நரன்

புரிந்துணர்வுடன் காதுகொடுத்துக் கேட்பது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுவதாகச் சிலர் கூக்குரலிடுகின்றனர். துவக்கத்தில் அது கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டாலும், அது தவறான புரிதல்களைச் சரிப்படுத்துவதற்கும் உதவும்.பிரச்சனையின் காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்-டேல் கார்னகி

Monday 29 April 2024

உலகைச்சுற்றிய ஆமை வாழ்க்கையில் ஜெயிக்க புத்திசாலித்தனம் அவசியமில்லை. முட்டாளாக இல்லாமல் இருந்தாலே போதும். மிகப்பெரிய புத்திசாலிகள் எல்லாம் சின்ன, சின்ன முட்டாள்தனத்தால் தான் இடறிவிழுந்து தோற்கிறார்கள். முட்டாள்தனங்களை தவிர்த்துவிட்டு , எளிமையான தேர்வுகளை செய்து ஐம்பது ஆண்டுகள் கழித்து திரும்பிபார்த்தால் மிகப்பெரிய சிகரத்தின் உச்சியில் நிற்போம். மிகப்பெரிய சிகரங்களின் உச்சியை அடைய ஒரே வழி தவறுகள் செய்யாமல், நிதானமாக, மெதுவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதே ஆகும். முயல் 100 மீட்டர் ரேஸை ஜெயிக்கும். ஆனால் உலகை சுற்றிவருவது ஆமையால் தான் முடியும்.-நியாண்டர் செல்வன்

உண்மை ஒன்றே.நாம்தான்அதைப் பலவாறாகக் கற்பிக்கிறோம்(ஏகம் ஸத்:விப்ரா பஹூதா வதந்தி)-ரிக்ஒரே உண்மையைத்தான் பல்வேறு சமயங்கள் பல்வேறு வகையில் விளக்குகின்றன.விளக்கங்கள் வேறு; ஆனால் விளக்கப்படும் உண்மை ஒன்றுதான்.ஏனெனில் உள்ளது ஒன்றுதான்.-கவிக்கோ

துன்பம், துயரத்தை தடுக்க முனைகையில் அவை அதிகரிக்கவே செய்கின்றன. அவற்றை பற்றி கவலைப்படுவதை நிறுத்தினால் அவை அதன்பின் நம்மை துன்புறுத்தும் சக்தியை இழக்கின்றன. மகிழ்ச்சி வேண்டும் என தேடி அலைகையில் உன்னிடம் மகிழ்ச்சி இல்லை என நீ ஒப்புக்கொள்வதாக தான் பொருள். மகிழ்ச்சியை தேடுவதை நிறுத்தினால் அது உன்னிடமே இருப்பதை நீ கண்டுகொண்டாய் என பொருள் ~புத்தர்

Sunday 28 April 2024

ஆலோலம்வயலில் தானியங்களை தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்ட முடியாது, ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’வாயால் ஒலி எழுப்புதல் என்று அழைக்கப்படுகிறது.#info

ஹேர்மிசஸ் கோட்பாடு


ஹோர்மிசிஸ் என ஒரு கோட்பாடு பயாலஜியில் உண்டு .மிகச்சிறிய அளவுகளில் விஷம் தொடர்ந்து கொடுக்கபட்டால் அந்த உயிரினம் வலுவானதாக மாறும் என்பது.

விஷம் மட்டுமில்லை,,மிக சிறிய அளவுகளில் துன்பம், துயரம், ஸ்ட்ரெஸ் அளிக்கும் விசயமும் இப்படியே நன்மையாக மாறும்...

மெக்கினாக் தீவுகளில்...அங்கே கார்கள் தடைசெய்யபட்டிருந்தன. குதிரைவண்டிகள் தான் பயணிகளை இழுத்துபோயின. இரு குதிரைகள் 15 பேர் கொண்ட வண்டியை இழுத்துசென்றன. வண்டிக்காரரிடம் கேட்டதற்கு "இப்படி கடுமையாக வேலை செய்யும் குதிரைகள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் குதிரைகளை விட நீண்டகாலம் வாழும், நோய்நொடியும் குறைவாகவே வரும்" என்றார்.

 உடல்பயிற்சியின் நன்மை என மட்டுமே இதை சொல்லமுடியாது.

 ஆய்வு ஒன்றில் எலிகளை இரு பிரிவாக பிரித்தார்கள்..ஒரு பிரிவு எலிகள் குளிர்நீரில் தினம் 4 மணிநேரம் விடப்பட்டன. குளிரில் நடுங்கியபடி அவை நாலுமணிநேரத்தை கழித்தன. மற்றொரு பிரிவு எலிகளை அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டார்கள். தினம் குளிரில் இருந்த எலிகள் சும்மா இருந்த எலிகளை விட நீண்டநாள் உயிர்வாழ்ந்தன. 

ஆக குதிரைகளுக்கு வேலை, எலிகளுக்கு குளிர்..இருவிதமான ஸ்ட்ரெஸ்கள் தொடர்ந்து கொடுக்கபட்டன...அவை அவற்றின் ஆயுளையும் உடல்நலனையும் கூட்டின.

ஆக: நம் வாழ்வில் சின்ன, சின்னதாக வரும் துன்பம், துயரம் இவை நம்மை வருங்காலங்களில் மிக வலுவானவர்களாக ஆக்குகின்றன.

சொகுசான வாழ்க்கை நம்மை மிகபலவீனமாக ஆக்கும் .

சிறிய அளவிலான துன்பங்கள் நம்மை வலுவானவராக ஆக்கும்

-நியாண்டர் செல்வன்

நிறைய எழுதுவது என்பது காணாமல் போய்விடுவோமோ என்ற உள்பயத்தின் வெளிப்பாடு. குறைவாக எழுதுவது என்பது லௌகீகக் கடலின் வெளியொதுங்கிப் பிறவியமுதைக் குடிப்பதாகப் பாவித்துக்கொள்ளும் தப்பித்தல்! இடைப்பட்டிருப்பதே இயல்பு.-கல்யாணராமன்

Saturday 27 April 2024

"நடந்தபடி தனிமையில் சிந்திக்காதவன் வாழ்க்கையை வாழ்வதே இல்லை..-ஹென்றி டேவிட் தெரோ.

உயர்ந்த ஓக் மரத்திலே ஒற்றை ஆந்தை வசிக்குது; அதிக அளவு பார்க்குது, அளந்தளந்து பேசுது! குறைந்த அளவு பேசினால் கூடிக் கேட்பர் யாவரும்! பறவை அறிந்த உண்மையைமனிதர் அறிவதில்லை ஏன்?-ஆங்கிலக் கவிதை

அப்பா அவளிடம் என்ன வேண்டுமெனக் கேட்டார்?அவள் யோசித்தாள்.யோசித்தல் என்பது, கண்களை மேலே செருகிக் கொள்ளுதல்;கூரையைப் பார்த்தல்; ஏற்கெனவே கடித்துத் துப்பப்பட்டிருந்தாலும், இருப்பது போல் பாவித்துக்கொண்டு நகத்தைக் கடித்தல்; இவை அனைத்தையும் செய்து விட்டு ஜோதி சொன்னாள்:-பிரபஞ்சன்

Thursday 25 April 2024

கடைசி ரிங் வரைக்கும் அட்டன் பண்ணுவோம்னு நம்பிகையோட அந்த பாக்கம் இருக்கவனுக்கு, நாம முதல் ரிங்லயே சைலன்ட்ல போடுறது தான் நம்பிக்கை துரோகம்..-செல்வா

ஒரு குடம் நீரில் ஒரு துளி விஷத்தை விட்டால் மரணம் ஏற்படும். கடலுக்குள் ஒரு துளி விஷத்தை விட்டால் எந்த விளைவுகளும் ஏற்படாது. நம் அறிவு குடத்தை போல குறுகியதாக இருந்தால், அதனுள் கலக்கும் மிகசிறிய தீய எண்ணமும் நம்மை கெட்டவனாக மாற்றிவிடும். நம் அறிவு கடலை போல பரந்ததாக இருந்தால், அதனுள் கலக்கும் தீய எண்ணங்கள் நம்மையும், பிறரையும் பாதிக்காது. கடல் அனைத்தையும் விழுங்கி ஜீரணித்துவிடும்.-திச் நாட் ஹான்

Wednesday 24 April 2024

நீரில் இருக்கும் ஆக்சிஜன்


நீருக்குள் இருக்கும் ஆக்ஸிஜனை ஏன் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை?

பாலில் இருக்கும் நெய்யை நேரடியாக நாம் சாப்பிட முடியாதல்லவா ?அது போலத்தான் நீரில் இருக்கும் ஆக்சிஜனையும் .

வெப்ப ரத்த பிராணிகள் ,மற்றும் குளிர் ரத்த பிராணிகள் என்று இயற்கை இரண்டுவகையாக பிரித்துள்ளது .அவை முறையே தரையிலும் ,தண்ணீரிலும் இருப்பவை .ஒன்றில் உயிர்வாழும் உயிர்கள் மற்றவற்றில் வாழ இயலாதவாறு அவற்றின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலம் வேறுபட்டு இருக்கின்றது .

சில மட்டும் இரண்டிலும் இருக்கும் .தவளை போல .

திமிங்கலம் நீரில் இருந்தாலும் அதுவும் மனிதரை போல சுவாசிப்பவையே .நீரில் இருந்து மீன்கள் ஆக்சிஜனை பிரித்தெடுப்பதுபோல எடுக்காமல் ,நீரின் மேல் வந்து காற்றை உட்கொண்டுவிட்டு நீரினுள் செல்கின்றது .

-படித்தது

கற்கை நன்றே-36


கற்கை நன்றே-36
*மணி

ஜப்பான் நாட்டில் கென்கோ என்பவர்
மனிதர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து எழுதியுள்ளார். அதில் மனிதர்கள் எப்போது தவறிழைப்பார்கள் என சொல்லியிருப்பார்.

மரம் ஏறுவதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண் டிருந்தான் ஒருவன். கற்க வந்த ஒருவன் பயிற்சியை முடித்து மரம் ஏறிக்காட்டினான். அவன் கடினமான பகுதிகளில் ஏறும்போது அமைதியாக இருந்த அந்தப் பயிற்சி கொடுப்பவர் எளிமையான இடத்திற்கு வரும்பொழுது 'ஜாக்கிரதை ' 'ஜாக்கிரதை' என்று குரல் கொடுத்தார். 

அந்த இடத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து கீழே இறங்கி வந்த அந்த இளைஞன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான். "நான் கடின மான பகுதிகளுக்குச் செல்லும் போது அமைதி யாக இருந்துவிட்டு எளிய பகுதிக்கு வரும்போது என்னை உஷார் படுத்தினீர்களே! என்ன காரணம்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த பயிற்சியளிப்பவர், கடினமான இடம் வரும்போது நீயே கவனமாக இருப்பாய். எளிமையான இடம் வருகிறபோது தான் நாம் அதீத நம்பிக்கையால் தவறிழைப்போம் என்று அறிவுறுத்தினார்.

நாம் செய்யும் செயல்களில்..அதீத தன்னம்பிக்கை,எதனையும் குறைவாக மதிப்பிடுவது,நம்மைப் பற்றிய பெருமிதம் போன்றவைகளில் தவறிழைக்கிறோம். மாற்றிக் கொள்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

சுதர்சன்

உலக புத்தக தினம்! என்னிடம் வந்து, எனக்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்! என்று எத்தனையோ பேர் கேட்டது உண்டு. ஆனால், ஒரு புத்தகத்தைப் பரிந்துரை செய்வதிலும் பார்க்க, அதை வாங்கிப் படிப்பதிலும் பார்க்க நுட்பமான காரியங்கள் நிறையவே இருக்கிறது. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. முதலாவதாக, "நம்மைப்போல யோசிக்கிறாரே இந்த எழுத்தாளர்!" என்கிற எழுத்து உங்களை நல்ல சௌகரியமாக வைத்துக்கொள்ளும். ஆனால், அப்படியான எழுத்துத் தருகிற சௌகரியம் முக்கியமா? அல்லது, "இப்படியும் முன்னோக்கி யோசிக்கலாம்!" என்று உங்களைக் கொஞ்சம் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி நுட்பமாய் மேலே தூக்கிவிட அழைக்கும் எழுத்து முக்கியமா? என்பதை நீங்கள்தான் கண்டறியத் தயாராக இருக்கவேண்டும். அதற்காக உங்கள் மூளையைப் பயிற்றுவிக்கவேண்டும்.

2. முதலாவது கூற்றின்படி, அப்படியானதொரு கண்டடைதலை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், நீங்களும் உங்களைக் கொஞ்சம் தயார் செய்துகொள்ளவேண்டும். அதற்கு  நீங்கள் கேட்பவராக இருக்கவேண்டும். எங்கிருந்து பெற்றுக்கொள்கிறீர்களோ அதை உங்களைவிட உயர்வான ஒன்றாகவும் குருவாகவும் நினைக்கவேண்டும். காரணம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்றை நமக்குத் தருகின்ற வல்லமை அதனிடம் இருக்கிறது. அதை நீங்கள் மதிக்கவேண்டும். 

3. எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் நியூரான்கள் ஒன்றையொன்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். உதாரணமாக, ஒரு நாவல் உங்களை மனித உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ளச் செய்கிறது என்றால், ஒரு விஞ்ஞான நூல் அல்லது ஆய்வு நூல் ஒரு விடயத்தைப் பகுத்தறிந்து கற்கச் சொல்லித்தரும். இந்த இரண்டையும் இணைத்து இடையில் ஒரு மையப்புள்ளியை உருவாக்கி உங்களைச் சிந்திக்க வைப்பது நியூரான்களின் வேலை.

4. ஒருபக்கம் பழைய அனுபவங்களையும், மனித உள்ளத்தையும் கற்றுக்கொள்கிற அதேநேரம் மறுபக்கம் மாறிவரும் உலகத்தின் போக்கையும், சிந்தனையையும், புதிய உலகம் எதிர்கொள்ளும் சவால்களையும் கற்றுக்கொள்ள விளையவேண்டும். இது நமது சிந்தனையின் போக்குக்கு மிக உதவியாக இருக்கும். காரணம், பழைய அனுபவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் பழைய சிந்தனைக்குள் வைத்திருக்கப் பார்க்கும். அதனால் புதிதாக வருகிற தொழிநுட்பம் முதலாக, விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் வரை எல்லாவற்றையும் படியுங்கள். முடிந்தளவு அடிப்படையையேனும் படியுங்கள்.  

5. எத்தனை புத்தகங்கள் படித்தாலும் எல்லாவற்றையும் கூட்டத்தோடு சேர்ந்து சிந்திக்காமல் அல்லது செயற்படாமல்  தனக்கெனத் தனியாக உருவாக்கிக்கொண்ட ஒரு நிகழ்ச்சிநிரலின்படி சிந்திப்பதும் செயற்படுவதும் மிகவும் முக்கியம். சுயமாகச் சிந்திப்பதும் எழுதுவதும் செயற்படுவதும் மிகவும் சிரமமான காரியம். அதற்காக நாம் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் இறுதியாக நீங்கள் உங்கள் தனிச் சிந்தனையோடு இருப்பதும் செயற்படுவதும் உங்களுக்கு நீங்களே  கொடுத்துக்கொள்ளும் பரிசாக இருக்கும். காரணம் அப்படி இருக்கும் போது உங்களால் மேலும் மேலும் கற்றுக்கொள்ள முடியும்.

6. கற்கின்ற, வாசிக்கின்ற விடயத்தில் ஒரு பத்து வீதத்தையேனும் உங்கள் யதார்த்த உலகில் நிகழ்த்திப் பார்க்கவேண்டும். சராசரி எழுபது வருட வாழ்க்கையில் நம் வாழ்நாள் வாசிப்பிலிருந்து ஒருசில கூறுகளையேனும் எடுத்து, நம் நியூரான்கள் மூளையில் உருவாக்கிய தொடர்புகளின் விளைவினால் உருவான அறிவில் பத்து வீதத்தையேனும் நம்மால் நிஜ வாழ்க்கையில் பிரயோகப்படுத்திப் பார்க்க முடிந்தால் அது நமக்கு ஒரு திருப்தியைத் தரும். அது உங்களை மேலும் மேலும் கற்கச் சொல்லித் தூண்டும். 

7. கற்கத் தயாராவதும், கற்பதும், தொடர்புபடுத்துவதும், தொடர்புபடுத்தியதை தனிச் சிந்தனையில் அலசுவதும். அதைப் பிரயோகித்து சுவை காண்பதும் முடிந்தவுடன் கற்றவற்றைக் கத்தரித்து அழகாக்க முயலவேண்டும். அவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். புதிதாக ஒன்றைக் கற்கும்போது பழையதில் தேவையில்லாதவற்றை அகற்றத் தெரியவேண்டும். அவற்றை நறுக்கி சிந்தனையைச் செழுமைப்படுத்தத் தெரியவேண்டும். 

8. உங்களையும் உங்கள் கற்றலையும் சிந்தனையையும் செழுமைப்படுத்தும் போது நீங்கள் எதை நோக்கிப் போகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் கற்றல் உங்களை வெறுமனே கண்மூடித்தனமாக ஒரு சித்தாந்தத்தையும் ஒருவழிப் போக்கையும் நோக்கிக் கொண்டுசெல்கிறதா? ஒரு சார்பாக மட்டும் சிந்திக்க வைக்கிறதா என்பதை மீள்பரிசீலனை செய்து கற்றலை மேலும் விரிவுபடுத்துங்கள். அதாவது உங்கள் மூளைக்கு மேலும் மேலும் சவாலான சிந்தனைகளை வழங்கி நீங்கள் சிந்திக்கிற விதம் சரிதானா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே கற்ற விடயத்தின் உறுதித் தன்மையைப் பரிசீலியுங்கள்.

9.  கற்பது ஒருபக்கம். அதைச் சுவைபடக் கற்பது இன்னமும் முக்கியமானது. உங்களுக்குப் பிடித்த, மிகப்பிடித்த விடயத்தையும் அவ்வப்போது கற்க ஆரம்பியுங்கள். புத்தகத்தோடு அதையும் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு பாடல் கேளுங்கள். அதில் கற்பனையைப் படியுங்கள். ஓவியத்தில் வண்ணங்களைப் படியுங்கள். இசையைப் படியுங்கள். இரசிக்கப் பழகுங்கள். ஒன்று கற்பனை உலகம். இன்னொன்று இன்னொருவரின் அனுபவத்தையும் அறிவையும் படிப்பது. அடுத்தது நிகழ் உலகம்.  இந்த மூன்றையும் ஒரு கோலம் போல் இணைக்கவேண்டும். இப்படி ஒன்றைச் சுவைபடக் கற்பது முக்கியமானது.

10. இறுதியாக இந்தக் கற்றலை மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் கற்கத்  தயாராகவேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. புத்தகங்களுக்கு முடிவில்லை. நாம் அதன் முடிவை விட, கற்பதில் இன்பம் காண்கிறோம், வாசிக்கிற கணப்பொழுதில் இன்பம் காண்கிறோம் என்கிற உண்மையையும் உணர்ந்தே புத்தகங்களை வாசிக்கவேண்டும்.

-சுதர்சன்

பச்சை வலை


புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது எதற்காக? —

முக்கியமாக இது அந்தக் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் நடப்பதைக் கவனிக்க நேர்ந்தால் கவனக்குறைவாக கீழே விழ நேரிடலாம். விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

அதிகமான சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் விழுவது அங்கு பணிபுரிபவர்களை விரைவில் சோர்வடையச்செய்யும். இதனைத் தவிரக்கும் விதமாகவும் இவ்வித மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது .

மேலும் வெளியில் நடப்பதை கட்டிட வேலையாட்கள் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் வேலையில் குறைபாடு மற்றும் வேலையில் தாமதம் ஆகியனவும் நேரிடும்!

அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கை இது. கட்டிடத்திலிருத்து வெளியேறும் தூசி போன்றவற்றிலிருந்து பக்கத்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இவ்விதம் வலை அமைப்பு கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது.

கட்டிடத்தின் வெளிப்பூச்சு சமயம் சிமென்ட் கலவை அடுத்த கட்டிடத்தின் மீது விழுவதைத் தடுப்பதற்காகவும் பெயிண்ட் அடிக்கும்போது பக்கத்து கட்டிடத்தின்மீது சிதறாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது. இவைகள் வலையினுள்ளேயே தங்கிவிடும்.

கட்டிடம் முடியும் வரை மற்றவர்களின் கண்ணேறு (திருஷ்டி) கட்டிடத்தின் மீது படுவதைத் தடுப்பதற்காகவும் இவ்விதம் கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை நிற வலையமைப்பு ஏற்படுத்துகின்றனர்

-படித்தது

Tuesday 23 April 2024

கற்கை நன்றே-35


கற்கை நன்றே-35
*மணி

தலைசிறந்த வில்லாளி மாடியில் ஓர் அரசரோடு பேசிக்கொண்டிருந்தார். மேலே நிறைய பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அந்தப் பறவைகளைக் காட்டிய அந்த வில்லாளி  'நான் அம்பு எய்யாமலே ஒரு பறவையை வீழ்த்திக் காட்டட்டுமா? நாணை இழுத்தால் போதும்' என்றார். அரசரும் சந்தேகத்தோடு சரி என்றார்.

அப்போது ஒரு தனி கொக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. வில்லாளி தன் வில்லை எடுத்து களை நாணை இழுத்தார். அந்தப் பறவை அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தரையில் விழுந்தது. மன்னருக்கு ஆச்சரியம். அந்த வில்லாளி விளக்கினார். 'இந்தக் கொக்கு ஏற்கெனவே ஓர் அம்பால் காயப்பட்டிருப்பது எனக்குத் தெரியும்,அதனால் தளர்ந்துபோய் சோகமாகப் பறந்தது. அதன் பழைய காயம்  இன்னும் அதை உறுத்திக் கொண்டிருந்தது. தனியாகவும் பறந்தது. பயத்தோடு பறந்தது. நான் நாணை இழுத்ததும் அந்த வலியே அதை வீழ்த்துவதற்குப் போதுமாக இருந்தது'.

 பலவீனமானவர்கள் என்று தெரிந்தால் அடுத்தவர்கள் எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.

Sunday 21 April 2024

கடலில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் கடலின் பெருமை உண்டு. ஆயினும் அது தனியாக வாழ ஆரம்பிக்குமானால் அந்த நிமிஷமே அது கடல் என்ற பெயரை இழந்து விடும்.-காந்தி

நாம் நம்முடைய தவறுகளை எந்த அளவு மன்னிக்கத் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு மற்றவர்களின் தவறுகளைத் தண்டிக்கத் துடிக்கிறோம். நம்முடைய தவறுகள் நம் பல்லே நம் நாக்கைக் கடித்துக்கொள்வதைப் போல விபத்துகள் என நினைக்கிறோம். மற்றவர்களின் தவறுகளை திட்டமிட்ட பாதகம் என நினைக்கிறோம். வெகுண்டு எழுந்து தண்டிக்கிறோம்உண்மையில் அவர்களின் கீழ்மையின் வழியாக நாம் பார்ப்பது நம்முடைய கீழ்மையைத்தான்.-இளங்கோ கிருஷ்ணன்

நான் எவ்வளவு இருளை நோக்கி வேகமாகச் சென்றாலும் ஒளியும் என்னைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. நான் ஒளியின் பிடிவாதத்தை வியக்கிறேன். கருணையின் பிடிவாதம் அது.-போகன் சங்கர்

Monday 15 April 2024

தொழில்நுட்பத்தால் மிகச் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகத்தில் மக்கள் முன்பு எப்போதையும்விட அதிகத் தனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.- யுவால் நோவா ஹராரி

பைக்கை நிறுத்தும் போது டிக் டிக் என்று சத்தம் வருவது ஏன்?அதிக தூரம் வாகனத்தை இயக்கும்போது எஞ்சினில் இருக்கும் பிஸ்டனை சுற்றியுள்ள ஹவுசிங் அல்லது பேரல் எனப்படும் பகுதி அதிக சூடாகி அதில் வெப்பத்தை தணிப்பதற்காக இருக்கும் கூலிங் பின்ஸ் எனப்படும் தகடுகளும் சூடாகி சற்று நீட்சியடையும் .(EXPAND )அதாவது வெப்பவிரிவாக்கல் .அது வெப்பத்தை தணிக்க வாகனத்தில் எஞ்சின் பகுதியில் அடுக்கடுக்கான தகடுகளாக இருப்பதை காணலாம் .அது வாகனம் இயங்கும்போதும் சூடாகி விரியும் .அப்போதும் சத்தமெழுப்பும் .ஆனால் வாகனத்தில் சத்தத்திலும் ,காற்றின் சத்தத்திலும் நம் காதுகளுக்கு கேட்பதில்லை .வாகனத்தை ஒட்டி வந்து வீட்டிலோ அல்லது சத்தமில்லாத அலுவலக சூழ்நிலையிலோ நிறுத்தும்போது அந்த தகடுகளானது குளிர ஆரம்பிக்கும் அதேபோல மீட்சியடையும் போதும் (SHRINK )சத்தமெழுப்பும் .சுற்றுப்புறம் அமைதியாக இருப்பதனால் அப்போது மட்டும் டிக் டிக் என்று சத்தம் தனியாக நாம் உணருமளவுக்கு காதுகளில் கேட்கின்றது .இது பெரும்பாலும் புதிய வாகனங்களில் மட்டுமே கேட்கும் .இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேலான வாகனங்களில் இந்த சத்தம் கேட்காது .ஏனெனில் அதிகமுறை இதுபோன்று நீட்சியும் ,மீட்சியும் அடைந்த காரணத்தால் அந்த தகடுகள் சற்றே வலுவிழந்திருக்கும் .-படித்தது

பாராளுமன்றமா? நாடாளுமன்றமா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தை தான் உலகையே ஆளக்கூடியதாக பார்(உலகம்) ஆளுமன்றம் என்பார்கள். நமக்கு நாடாளுமன்றம் மட்டுமே.நாடாளுமன்றத் தேர்தலே பொருத்தமானது

இறைவா! இந்தக் கண்ணீர் எவ்வளவு அற்புத படைப்பு.இது படைத்த உன்னை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!இறைவன் சொன்னான்:'நீ தவறாகப் புரிந்துகொண்டாய் பெண்ணைத்தான் நான் படைத்தேன். கண்ணீரைப் படைத்தது பெண்!'-அப்துல்ரகுமான்

Friday 12 April 2024

பேச்சாளர்களில் சிலர் எதிரே அமர்ந்து கேட்கும் ஆயிரம் மனிதர்களை இரண்டாயிரம் காதுகளாக மட்டுமேப் பார்க்கிறார்கள்.கைத்தட்டி ஓசையெழுப்பும் இரண்டாயிரம் கரங்களாகவேப் பார்க்கிறார்கள்.ஆயிரம் மூளைகள் கேட்கின்றன என்று யோசிப்பதே இல்லை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

கரப்பான்பூச்சி அணுகுமுறை


கரப்பான் பூச்சி கோட்பாடு

சுய முன்னேற்றத்திற்கான கரப்பான் பூச்சி கோட்பாடு

உணவகம் ஒன்றில், திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சி ஒரு பெண்ணின் மீது அமர்ந்தது.

அவள் பயத்தால் கத்த ஆரம்பித்தாள்.

பீதியடைந்த முகத்துடனும் நடுங்கும் குரலுடனும் அவள் குதிக்கத் துவங்கினாள், கரப்பான் பூச்சியை விடுவிக்க தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்றாள்.

அவளது குழுவில் உள்ள அனைவரும் பீதி அடைந்ததால் அவளது எதிர்வினை தொற்றிக்கொண்டது.

கடைசியில் அந்த பெண்மணி கரப்பான் பூச்சியை தள்ளிவிடச் சென்றார் ஆனால் ... அது குழுவில் உள்ள மற்றொரு பெண்ணின் மீது இறங்கியது.

இப்போது, நாடகத்தை தொடர்வது குழுவில் உள்ள மற்ற பெண்மணியின் முறை.

வெயிட்டர் அவர்களை காப்பாற்ற முன்வந்து சென்றார்.

எறிதல் என்ற தொடர்ச்சியில், கரப்பான் பூச்சி அடுத்தது வெயிட்டர் மீது விழுந்தது.

வெயிட்டர் உறுதியாக நின்று, தன்னைத் தானே தொகுத்து, அவரது சட்டையில் இருந்த கரப்பான் பூச்சியின் நடத்தை கவனித்தார்.

அவர் போதுமான நம்பிக்கையுடன் இருந்தபோது, அவர் அதை தன் விரல்களால் பிடித்து உணவகத்திலிருந்து வெளியே எறிந்தார்.

என் காபியை குடித்துக்கொண்டு, பொழுதுபோக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன், என் மனதின் ஆண்டெனா சில எண்ணங்களை எடுத்துக்கொண்டு வியக்கத் துவங்கியது, கரப்பான் பூச்சி தான் அவர்களின் ஹிஸ்ட்ரியானிக் நடத்தைக்கு காரணமா?

அப்படியென்றால், வெயிட்டர் ஏன் தொந்தரவு செய்யவில்லை?

அவர் எந்த குழப்பமும் இல்லாமல், அதை கையாண்டார்.

கரப்பான் பூச்சி அல்ல, கரப்பான் பூச்சியால் ஏற்படும் தொந்தரவுகளை சமாளிக்க இயலாமை தான் பெண்களை கலங்க வைத்தது.

என் அப்பாவோ, என் முதலாளியோ, என் மனைவியோ கத்துவது என்னை தொந்தரவு செய்வது அல்ல, அவர்கள் கூச்சலால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது என்பதை உணர்ந்தேன்.

என்னை தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அல்ல, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க இயலாமை தான் தொந்தரவு செய்கிறது.

பிரச்சனையை விட, பிரச்சனைக்கு என் எதிர்வினை தான் என் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கும்.

கதையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்:

வாழ்க்கையில் நான் ரியாக்ட் செய்யக்கூடாது என்று புரிந்துகொண்டேன்.

நான் எப்போதும் பதிலளிக்க வேண்டும்.

பெண்கள் எதிர்வினையாற்றினார்கள், ஆனால் வெயிட்டர் பதிலளித்தார்.

பதில்கள் எப்போதும் உள்ளுணர்வுடன் இருக்கும், ஆனால் பதில்கள் எப்போதும் நன்றாக யோசிக்கப்படுகின்றன.

புரிந்து கொள்ள ஒரு அழகான வழி

வாழ்க்கை.

சந்தோஷமாக இருப்பவன் அல்ல, ஏனெனில் அவன் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கிறது.

அவன் சந்தோஷமாக இருக்கிறான் ஏனென்றால் அவனது வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் அவனது அணுகுமுறை சரியானதாக இருக்கிறது! 

Thursday 11 April 2024

இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசலோட்டி, பரிசலோட்டி..எக்கரை என்கரை என்பது மறக்கும்-கல்யாண்ஜி

சமீபத்தில் அஜர்பைஜானில் நவ்ரூஸ் கொண்டாட்டங்களின் போது நெருப்பு தாண்டும் விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். போகி போல, நெருப்பு கொளுத்தி பழைய விஷயங்கள் போய், புது விஷயங்கள் வரவேண்டும் என்கிற சிந்தனை தூக்கலான ஒரு விழா. இனிப்புகளும் (பக்லவா போக, நம்ம ஊர் சோமாஸ் போன்ற சக்கர்பாராவும் பிரபலம்), பூக்களும் போக, கொளுத்திய நெருப்பை மூன்று முறை தாண்டிக் குதிக்கிறார்கள். அப்போது, இப்படி ஒரு சொலவடையையும் உரக்கச் சொல்கிறார்கள்: Ağırım-uğurum bu tonqala,Azarım-bezarım bu tonqala.“என் சுமைகளை, என் குப்பைகளை, இத் தீயில் இடுகிறேன்.என் நோய்கள் அனைத்தையும் இத் தீயில் இடுகிறேன்.”அந்தத் தீப்பிழம்புகளைத் தாண்டிக் குதித்த பிறகு அது தொடர்ந்து சிந்தனையில் இருந்தது: நாம் தயங்கக் கூடாது. குப்பையை ஒழிக்கத் தயங்குதல் ஓர் ஆற்றல் கொல்லி. தயக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஏறி கடைசியில் நம்மை மொத்தமாக நசுக்கும் சுமை. நாம் நம்முடைய தயக்கங்களின் கண்ணை உற்றுப் பார்க்க வேண்டும். அவற்றை அணைத்து, உட்காரவைத்து, அந்தக் கடினமான உரையாடலை மேற்கொண்ட பிறகு, அவற்றை வழியனுப்பி வைக்கவேண்டும். தயக்கங்களும் பழைய சுமைகளும் போனபிறகு, ஒரு வெற்றிடம் வரும். நம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் மட்டுமே அந்த வெளியை நிரப்பக் காத்திருக்கும். அது அர்த்தமுள்ளது.-ஸ்ரீதரன்

நீங்கள் விளையாடித் தூக்கி எறிந்த உடைந்த பொம்மைகளைத்தான் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம் நீங்கள் வாசித்துக் கைவிட்ட நைந்த புத்தங்களைத்தான் எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பலமுறை செய்து சலித்துவிட்ட பயணங்களைத்தான் இன்னும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம் பிறப்பிலேயே கிடைத்து விட்ட உங்கள் வாழ்வின் மிகைகளைத்தான் சந்ததிகளாகத் தேடி அலைகிறோம் உங்களின் அன்றாடமும் எங்களின் அன்றாடமும் என்றாவது சந்திக்கும் வரைஇந்தப் போதாமைகள்தான் எங்கள் அடையாளம். பொறுத்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ். - ஷான் கருப்பசாமி (7-ஏப்ரல்-2024)

தேநீர்க் கோப்பையோடு சன்னலில் பார்த்த மழைதான் பிறகு சாப்பாட்டுப் பொட்டலங்களுக்காக வானம் பார்க்க வைத்தது.-நிலாகண்ணன்

"உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனுதாபத்திற்காக ஏங்கிக் கிடக்கின்றனர். அனுதாபத்தைப் பெறுவதற்காக ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்டக் காயத்தை ஆர்வத்துடன் காட்டுகிறது. சில சமயம் வேண்டுமென்றே தன் கையில் ஒரு கீறலையோ அல்லது காயத்தையோகூட அது ஏற்படுத்துகிறது. அதே காரணத்திற்காகத்தான் பெரியவர்களும் தங்கள் காயங்களைக் காட்டுகிறார்கள், தங்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களையும் உடல்நலக் குறைவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள், குறிப்பாக, தங்களுக்கு நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின் முழு விபரங்களையும் அவர்கள் விலாவாரியாகப் பேசுகிறார்கள். தங்கள் நிஜ வாழ்விலோ அல்லது கற்பனையிலோ தங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டங்கள் குறித்து 'சுய பச்சாதாபம்' கொள்வது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது."-டாக்டர் ஆர்தர் ஐ. கேட்ஸ்

தூரத்தில் தெரிகிற அமைதியைப் பார்த்தல் என்பது விழி செய்யும் நீண்ட தவம். நிலவு, கடல், தொடுவானம், அசையும் மனிதர்கள் என எல்லாமே தொலைவினைக் கவிதையாக்கும் சூட்சுமம் அறிந்தவை. எந்தவித சலனமும் இன்றி தொலைவில் அசைந்துகொண்டிருக்கிற எல்லாமே தனிமையின் அழகு. தனிமையின் அழகு போல தனித்துவமானது எதுவுமில்லை. புல்லாங்குழலின் ஓசையை மாதிரி, கொஞ்சமும் சலிப்பு ஏற்படாத வண்ணம் நம்முள் சோகத்தை ஊறச் செய்பவை.-சுதர்சன்

Saturday 6 April 2024

ஸ்டெக்னோகிராபி


ஸ்டெகனோகிராஃபி: 

ஒரு படத்தின் உள்ளே இன்னொரு படத்தை மறைக்கும் கலை (Steganography: Hiding an image inside another)

கண்களை இடுக்கி கண்டு மகிழவும்!

இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், தகவல்களை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்காக நாம் பயன்படுத்தும் முறைகளில் ஒன்றுதான் கிரிப்டோகிராபி (Cryptography) - குறியாக்கம். குறியாக்க முறையில், தகவல் ஒரு குறிமுறையின் அடிப்படையில் மாற்றப்பட்டு, பெறுபவர் அதே குறிமுறையைக் கொண்டு தகவலை மீண்டும் பெற்றுக்கொள்வார். ஆனால், குறியாக்கம் செய்யப்பட்ட தகவல் கவனத்தை ஈர்க்கக் கூடும். இங்குதான் ஸ்டெகனோகிராஃபி (Steganography) என்ற முறை பயன்பட்டு வருகிறது.

ஸ்டெகனோகிராஃபி என்பது, ஒரு தகவலை (படம்,ஒலி, காணொளி)  மற்றொரு தகவலுக்குள் (படம், ஒலி, காணொளி) மறைத்து வைக்கும் ஒரு முறை ஆகும். இதன் மூலம், மறைத்து வைக்கப்பட்ட தகவல் வெளிப்படையாகத் தெரியாமல், மறைத்து வைக்கப்பட்ட தகவல் இருப்பதே தெரியாமல் இருக்கும்.  

உதாரணமாக, ஒரு பூங்கா படத்தின் உள்ளே இன்னொரு ரகசிய படத்தை மறைத்து வைக்கலாம். வெளிப்பார்வையில் அது பூங்கா படம்தான் போல் தோன்றும். ஆனால், சரியான முறையில் அந்த படத்தை பிரித்தெடுத்தால், அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய படத்தை பார்க்க முடியும்.

ஸ்டெகனோகிராஃபியின் பயன்பாடுகள் (Uses of Steganography)

* ரகசிய தகவல் பரிமாற்றம்: ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தி இராணுவ ரகசியங்கள், மருத்துவ தகவல்கள் போன்றவற்றை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்ய முடியும்.

* காப்புரிமை பாதுகாப்பு:  புகைப்படங்களில் காப்புரிமை தகவல்களை புதைத்து வைக்கலாம்
 
* தடய  அறிவியல் துறை(forensics):  டிஜிட்டல் குற்றங்களை கண்டறிவதற்கான ஆதாரங்களை மறைத்து வைக்கவும் ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தலாம் என்றாலும், இது சட்டவிரோதமான செயல்.

-அருள் குமரன்

Thursday 4 April 2024

அமைதி- நா காத்தல்- மௌனம் இந்த மூன்றும் எப்படி வெவ்வேறானவை?அமைதி - இரண்டு பேருக்கிடையே முழுமையான, சரியான புரிதல் ஏற்படும் போது வருவது. நா காத்தல் - இரண்டு பேருக்கிடையே பேசுற பேச்சால பிரச்சனை ஆகக்கூடாது என்ற நிலையில் வருவது. மௌனம் - இரண்டு பேருக்கிடையே எது பேசினாலும் பிரச்சனை வரும் என்ற நிலையில் மலர்வது... 🙂

“பலவீனமான மக்கள்தான் கொடூரமானவர்கள். வலிமையானவர்களிடம் இருந்து மட்டுமே மென்மையை எதிர்பார்க்க முடியும்,”-லியோ ராஸ்கின்

கனிவுள்ளவர்களே


"Blessed are the meek for they shall inherit the earth " என மலைபிரசங்கத்தில் ஏசு கூறுகிறார்.

Meek என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள்: "quiet, gentle, and easily imposed on; submissive

தமிழ் பைபிள் நூல்களில் "சாந்த குணமுடையவர்கள்  பாக்கியசாலிகள். அவர்கள் உலகை சுவிகரிப்பார்கள்" என மொழிபெயர்க்கிறார்கள்

பைபிளின் மூலமொழி கிரேக்கம். கிரேக்கத்தில் இங்கே meek என்பதற்கு பயனான சொல் Praus.

 Meek என்பதற்கு பதில் மூலச்சொல்லான Praus என்பதை எடுத்துக்கொண்டால் இந்த வசனத்தின் பொருளே மாறுகிறது.

 பிராஸ் என்பதன் பொருள் என்ன? வலிமை பொருந்திய அரசன்..தன் வலிமையை வெளிக்காட்டாமல் கனிவுடன் நடந்துகொள்ளும் தன்மை தான் பிராஸ். ஆக வலிமை பொருந்திய ஒருவன் கனிவுடன், பண்புடன் நடந்துகொள்வதுதான் Praus. அத்தகையோரே பாக்கியசாலிகள். அவர்களே உலகை ஸ்விகரிப்பார்கள்.

-படித்தது

ஓட்டளிப்பது நம் உரிமை


ஓட்டளிப்பது நம் உரிமை.!
*மணி

#ஒரு மென்மையான வழியில் உங்களால் உலகத்தை அசைக்க முடியும்
-காந்தி

உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது மக்களாட்சி நாடான இந்தியாவின் தேர்தலை.
ஜனநாயக தேர்தல் திருவிழாவிற்கு இந்திய மக்கள் காத்திருக்கின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்பு வரி கட்டுபவர்கள், ஐ.சி.எஸ் படித்தவர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் நிலை இருந்தது. 
சுதந்திரத்துக்குப் பின் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது

வாக்களிக்கும் முறையைப் பண்டைக்கால முதலே தமிழர்கள் அறிந்திருந்தனர். பண்டைய தமிழகத்தில் சோழநாட்டில் குடவோலை முறை இருந்ததாக படித்திருப்போம்.
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை.தேர்தலில் நிற்போரின்
 பெயர்களை ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராக இறுதியில் அறிவிப்பார்கள்.

#ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல் தேர்தல்

1951 முதல் 1952 வரை பல கட்டங்களாக ஐந்து மாதங்கள் நடைபெற்றது.பின்பு படிப்படியாக ஓட்டுச் சீட்டிலிருந்து வளர்ச்சி பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.1982ஆம் வருடம்  கேரள மாநிலம் ஒத்தப்பாலத்தில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.இதனை இசிஐஎல் மற்றும் பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனமும் தயாரித்து வழங்கின.

1996ஆம் வருடம்தான் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. 2001 மற்றும் 2002ஆம் வருடங்கள் நடந்த தேர்தல்களில் இயந்திரங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரத்தில் ஆரம்பகாலத்தில் அடிப்படை சந்தேகங்கள் இருந்தன.

இரண்டு முறை பட்டனை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவாகாது. ஒரு வாக்குக்கும் அடுத்த வாக்குக்கும் இடையில் 12 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். தொடர்ந்து பட்டனை அழுத்தினால் ‘பிழை’ என்றே காட்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்கு விழும் வகையில் ப்ரோக்ராம் செய்து இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப முடியாது. எந்த இயந்திரம், எந்த ஓட்டுச் சாவடிக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் அதிகாரிகளுக்குக்கூட தெரியாது. காரணம், இயந்திரத்தின் வரிசை எண் கணினியில் போடப்பட்டு அந்தக் கணினிதான் இயந்திரம் எந்த ஓட்டுச்சாவடிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.அதிகாலை தேர்தல் துவங்கும் முன் மாதிரி ஓட்டுப்பதிவு சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் முன் நடத்திய பின்பே வாக்குப்பதிவு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஒப்புகை சீட்டு முறை

2017ம் ஆண்டு பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றது.அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.இதில் மோசடி செய்ய இயலும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப்பரத்வாஜ் தெருவித்தார்.

இவ்வியந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும்பொருட்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் எடுத்த முடிவின்படி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் "பழைய வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படாது".மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வசதி இனி அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்.குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் என்றார்.

#VVPAT

Voter verifiable paper audit trail எனும் முறை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.தற்போது 
தமிழகம் முழுவதும் 39 மக்களவை தொகுதியிலும்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம்  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் மக்களின் ஐயப்பாடுகள் தீர்க்க வாய்ப்புள்ளது.

வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் இறுதியில் சீல் இடப்பட்டு,கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பின் இந்த ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும்.வாக்குப்பதிவின் உண்மைத்தன்மையை நிரூபிக்க பயன்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

#நம்பகத்தன்மை

 மேலை நாடுகள் சிலவற்றில் வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பியிருக்கின்றன. அங்கேயெல்லாம் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தி வருபவை போன்றல்ல. அவை வலைதளத்தோடு இணைப்பு கொண்டவை. எனவே நம்பகத்தன்மை கேள்விக்குறியானது”.நம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது ஒப்புகைச் சீட்டுடன் பயன்படுத்தப்படுவது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"உயருபவன் தன்னிலிருந்தே உயருகிறான்!
தாழ்பவன் தன்னிலிருந்தே தாழ்கிறான்"

 என்பது ஜென் வரி.இது ஜனநாயக கடமையான தேர்தலில் நேர்மையாக ஓட்டளிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.ஒவ்வொருவரும் தத்தமது உரிமையை நிலைநாட்டுவோம்.

தோழமையுடன்
-மணிகண்ட பிரபு

Wednesday 3 April 2024

பலவீனமே போற்றதலுக்குரியது. மனிதன் பிறக்கின்ற போது பலவீனத்துடனும் , நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கிறான் . அவன் வளர்ந்து பெரியவனாகி முதுமையடைந்து மரணிக்கும் போது கடினமானவனாக ,உணர்வற்றவனாக மாறிவிடுகிறான். செடி மரமாக வளர்கின்ற போது மென்மையாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையுடனும் இருக்கும். அது வளர்ந்து பெரிய மரமாகி மரணிக்கும் போது வறண்டு கடினமானதாக மாறியிருக்கும். கடினமும் , வலிமையும் மரணத்தின் நண்பர்கள் . நெகிழ்வும், பலவீனமும் நம் இருத்தலின் புத்துணர்வை வெளிப்படுத்துபவை. எது வளைந்து கொடுக்காமல் கடினமாக இருக்கிறதோ அது வெற்றி அடைவதில்லை.- திரைப்பட மேதை தார்க்கோவ்ஸ்கியின் பிறந்த தினம் இன்று.

Tuesday 2 April 2024

"ஒரு மனிதனுக்கு உண்மையாகத் தோன்றுவது பல சமயங்களில் மற்றொருவருக்கு உண்மைக்குப் புறம்பானதாகத் தெரியும்.ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் கவலையடைய வேண்டாம்.உண்மையுனர்வுடன் முயன்றால் மாறுபட்ட உண்மைகளாகத் தெரிவன ஒரு மரத்தின் பல இலைகள் போலத்தான் என்பது தெளிவு பெறும்.ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் வெவ்வேறு பண்புகளில் தோன்றுகிறார் அல்லவா? இருப்பினும் நாம் அவர் ஒருவரே என்பதை உணர்கிறோம்.எனவே நம்முடைய தரிசனத்திற்கு ஏற்ப நாம் உண்மையைக் கடைபிடிப்பதில் பிழையில்லை.அது ஒருவரின் கடமையே ஆகும்.-காந்தி

எதற்காகக் கோபப்பட்டோம் என்ற காரணங்கள் காலப்போக்கில் மறந்துபோகும். மனிதனுக்கு சூழ்நிலைகளின் இறுக்கங்களைத் தந்து தருணங்களின் வாழ்வை பறித்துக்கொள்வதும் காலம்தான், பின் மறதியைக் கொடுத்து வாழ்வைத் திருப்பிக் கொடுப்பதும் அதே காலம்தான்.-சேரவஞ்சி

குழம்பிய குட்டை?கூரையில் ஓட்டை?


எல்லாப் பிரச்சனைகளையும் ஒரேமாதிரி அணுகக்கூடாது என்கிறார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர். இதை விளக்குவதற்கு அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு: குழம்பிய குட்டை Vs கூரையில் ஓட்டை (Muddy Puddle Vs Leaky Ceiling).

குழம்பிய குட்டையை அப்படியே விட்டால் சிறிது நேரத்தில் தெளிவாகிவிடும். நான் அதைச் சரி செய்கிறேன் பேர்வழி என்று சேற்றில் குதித்துக் கலக்கினால் அது மேலும் குழம்பிவிடும்.

அதுபோல, சில பிரச்சனைகளைச் சும்மா விடவேண்டும், அவை தானாகச் சரியாகிவிடும்.

ஆனால், கூரையில் ஓட்டை விழுந்தால் அதை அப்படியே விடக்கூடாது. அப்படி விட்டால் அது மேலும் பெரிதாகி இன்னும் நீர் கசியும். சட்டென்று செயல்பட்டுச் சரிசெய்யவேண்டும்.

அதுபோல, சில பிரச்சனைகளைப் பார்த்தவுடன் களத்தில் இறங்கிச் செயல்படவேண்டும், தள்ளிப்போடக்கூடாது.

இப்போது உங்கள்முன் உள்ள பிரச்சனை குட்டையா, ஓட்டையா?

-என்.சொக்கன்

Monday 1 April 2024

குடைகளைசரிசெய்யும் காசில்பிழைத்து வாழ்பவனுக்கு,மழைக்காலத்துக்கு நிகராககருணை புரிகிறதுஇந்த வெயிற்காலமும்...!!!-கூடல் தாரிக்

'ஒரு பொருளை 360 கோணங்களில் பார்க்க முடியும் என்பது விஞ்ஞான உண்மை.ஒரு கருத்துக்கும் 360 மட்டுமல்ல..அதற்கும் மேலான கோணங்கள் இருக்க முடியும் என்பதை எற்றுக்கொண்டாலே உலகில் வெட்டி விவாதங்கள் குறைந்து ஆரோக்கியமான விவாதங்கள் நிலவும்.என்னுடைய கோணம் தவிர வேறு எதுவுமே சரியல்ல என்று பிடிவாதமாக யோசிக்கும்போதுதான்,அறிவு தன் வளர்ச்சியை நிறுத்திக்கொள்கிறது.'- Pattukkottai Prabakar Pkp

ரயில்


7 நாட்கள்... உலகின் மிக நீண்ட ரயில் பயணம் இதுதான்... எத்தனை கி.மீ. தூர ட்ராவல் தெரியுமா?
மிக நீளமான பாதையில் ஓடும் ரயில், 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது.

இந்திய ரயில்வே நமது நாட்டின் லைஃப் லைன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் எந்த ரயில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியுமா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதல் இடத்தில் உள்ளது. திப்ருகர்-கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரயில், 4,234 கி.மீ. தூரத்தை 75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. 59 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

ஆனால், உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? இந்தப் பயணத்தை இரண்டு நான்கு நாட்களில் முடிக்க முடியாது. இதை முடிக்க 7 நாட்கள் 20 மணி 25 நிமிடங்கள் ஆகும். உலகின் மிக நீளமான ரயில்- ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கும் வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கும் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் பெயர் டிரான்ஸ்-சைபீரியன் ரயில்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து வட கொரியாவில் உள்ள பியாங்யாங் வரை ஓடும் இந்த ரயில் 10,214 கி.மீ. ஆகும். மிக நீளமான பாதையில் ஓடும் இந்த ரயில் 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது. அதன் வழியில் காடும் வருகிறது. இந்த ஒரு வார காலப் பயணம் பயணிகளின் பொறுமையைச் சோதித்து பார்ப்பது மட்டுமின்றி அழகிய நிலப்பரப்புகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.
1916-ல் தொடங்கப்பட்டது: டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே 1916-ல் தொடங்கப்பட்டது. டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே மாஸ்கோவிலிருந்து ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்த பாதை உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாகும். இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில் மலைகள் மற்றும் காடுகளை கடந்துச் செல்கிறது.

பியோங்யாங்கில் இருந்து தொடங்கும் பயணம்: இந்த ரயில் வட கொரியாவில் இருந்து மாஸ்கோ, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ஆகிய இடங்களுக்கு பயணிகளை கொண்டு வருகிறது. இங்கே இந்த ரயில் விளாடிவோஸ்டாக்கில் இருந்து மாஸ்கோ செல்லும் ரயிலுடன் இணைகிறது. பியோங்யாங்கில் இருந்து ரயிலில் ஏறிய பயணிகள் பெட்டியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது சிறப்பு. இந்த ரயில் வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு மாதம் இருமுறை இயக்கப்படுகிறது.

இதேபோல், ரஷ்யாவிலிருந்து பியாங்யாங்கிற்கு மாதத்திற்கு நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாஸ்கோவிலிருந்து பியாங்யாங்கிற்கு ரயில் இல்லை.

Sunday 31 March 2024

ஏப்ரல் முதல் தேதி பற்றி என்ன நினைக்கிறீர்?வருடத்தின் 364நாட்களிலும் நாம் யார் என்பதை நமக்கு நினைவூட்டும் நாள்- மார்க் ட்வைன்

திட்டமிடுதல் என்பது முக்கியமானதுதான் என்றாலும், ஒவ்வொரு திட்டத்திலும் முக்கியமானது, அந்தத்திட்டம், திட்டமிட்டபடி நடக்காத போது, செய்யவேண்டியது என்ன என்பதைத் திட்டமிடுதலே ஆகும்-மார்கன்

ஆடுஜீவிதம்


ஆடு ஜீவிதம் திரைப்படம் சொல்வது என்ன? ❤️ 

பென்யாமின் எழுதிய நாவலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆடு ஜீவிதம். ஆடு ஜீவிதத்தின் பிரதான கதாப்பாத்திரமான நஜீப், தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீர்செய்வதற்காக சவுதிக்கு வேலை தேடிச் செல்கிறான். நல்ல தங்குமிடமும் வசதியும் கிடைக்குமென்று வேலை தேடிச் செல்கிறான். ஆனால் அங்கு அவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக எல்லாம் நடக்கிறது. அவனுக்கு யாருமே இல்லாத பாலைவனத்தில் ஆடுகளைப் பராமரிக்கும் வேலை கிடைக்கிறது. அடிமைப்படுத்தப்படுகிறான். இந்த அடிமைத்தனத்தில் இருந்து அவன் மீள்கிறானா இல்லையா என்பது மிகுதிக் கதை.

முதலில், ஆடுகளைப் பராமரிக்கக் கொண்டுசெல்லப்பட்ட நஜீப், சில காலங்களின் பின் தான் தப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே கைவிட்டு ஆடுகளோடு ஆடாகத் தன்னையும் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறான். ஆடுகளைப் போலவே நீர் அருந்தவும் உணவு உண்ணவும் செய்கிறான். 

இதில் ஒரு மனிதன் அடிமைப்படுத்தப் படுகிறான் என்பதைத் தாண்டி, அவனால் எவ்வளவு தூரம் ஒரு சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து, அதற்கு இசைவாக்கம் அடைந்து, தனது தப்பிப்பிழைத்தலுக்காகத் துன்பங்களை எல்லாம் கடக்கமுடிகிறது என்கிற வாழ்வியல் ஊக்கமும் சொல்லப்படுகிறது. இந்தப் பொதுவான அம்சம், உணர்வு எல்லாமே பாலைவனத்தில் வேலை தேடிப் போகிற  நஜீபுக்கு மட்டுமல்ல. நமது வாழ்விற்கும் பொருந்தும். ஒரு மனிதன் வாழ்வதற்கு இவ்வளவு துன்பப்படுகிறானா என்கிற கேள்வியும் ஒப்பீடுமே நமது துன்பங்களைக் குறைத்துவிடும். 

இதுபோல் திரைப்படங்கள், Survival  Adventurous  வகையைச் சார்ந்தது. பாலைவனத்தில், வெப்பக் காலநிலை, மணற்புயல், உயிரினங்களின் அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி நஜீப் எப்படித் தப்பிக்கிறான் என்பதைத் திரைப்படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சவுதியில் இருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். அந்தத் துன்பத்திலும் அவனுடைய உறவுகளின் நினைப்பு அவனை எப்படிக் கொண்டுநடத்துகிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். 

இதில் தப்பிக்கவேண்டும் என்கிற உந்துதல் அந்த மனிதர்களை, நீண்ட பாலைவனத்தின் அத்தனை துன்பத்தையும் கடக்க வைக்கிறது. 

Endurance running hypothesis என்று இருக்கிறது. இது உடல் ரீதியாகவே மனிதர்கள் நெடும்தூரம் ஓட உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறது. முன்னமெல்லாம் வேட்டையாடும்போது விலங்குகள் களைப்படையும் வரை மனிதனால் நெடுந்தூரம் விரட்டிச் சென்று வேட்டையாட முடிந்தது என்று சொல்கிறது. அதுபோல இவர்கள் தப்பிப்பிழைத்தலுக்காக நெடுந்தூரம் செல்கிறார்கள். We will keep walking until we die என்பான் நஜீபுடன் வரும் இப்ராஹிம். அது அப்படிப்பட்ட பயணம் தான். ஒரு உந்துதல் தேவைப்படுகிற பயணம். உயிருக்கான பயணம். வாழ்வுக்கான பயணம். ஒரு தனி மனிதனின் பயணம். அதை இந்தப் படம் மிக அழகாகக் காட்டியிருக்கிறது.

-சுதர்சன்

மனிதர்களின்பாதிப்பேச்சு மனதை சொல்வதற்காக அல்ல.ஒளிப்பதற்காக...!!-ஜெயமோகன்

அலை எவ்வளவு உயரத்துக்கு எழுந்தாலும், கடலைக் கண்டு பயம்கொள்ளாதே.அலையற்ற, அமைதியான கடலைக் கண்டால் நிச்சயம் பயம்கொள். அது கடலின் வழக்கமல்ல.-நரன்

Tuesday 26 March 2024

தோல்வியும் வெற்றியும்


தோல்வியும் வெற்றியும்…
--------------------------------------------

வெற்றி பெற்ற அனைவரும்,  அனைத்து முறையும் வெற்றியடைந்தவர்களாக இருப்பதில்லை. இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக கருதப்படும் ராகுல் த்ராவிட் ஒரு முறை, "நான் இந்தியாவுக்காக 600க்கும் மேற்பட்ட போட்டிகளில் களமிறங்கியிருக்கிறேன். ஆனால் அதில் 400 முறைகள் நான் 50 ரன்களுக்கும் குறைவாக அடித்து ஆட்டமிழந்திருக்கிறேன். எனது பெரும்பான்மை விளையாட்டுகள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன" என்கிறார். 

இயற்கையும் இதையேத் தான் சொல்கிறது. "தோல்வி முயற்சிகளின் விதி" (Law of Failed Attempts) என்ற ஒன்றை கூறுவார்கள். இயற்கையின் இயல்பில் வெற்றிகளை விட தோல்வியில் முடிந்த முயற்சிகளும் செயல்களுமே மிக அதிகம். 

காட்டின் ராஜாவான சிங்கம், தனது வேட்டைகளில் நான்கில் ஒரு முறை தான் அதற்கான இரையை பெறுகிறது. அதாவது அதன் முயற்சிகள் 75% தோல்வியில் முடிகின்றன. மீன்கள் இடும் முட்டைகளில் பாதிக்கு பாதி உண்ணப்பட்டு விடுகின்றன. பாதிக்கு பாதி கரடி குட்டிகள் இரண்டு வருடங்களுக்குள் இறந்துவிடுகின்றன. இந்த பூமியில் பொழியும் மழையில் 70 சதவீதம் கடலில் பெய்கின்றது. தாவரங்களின் விதைகளில் பெரும்பாலானவை பறவைகளால் உண்ணப்பட்டு விடுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பறவைகள், விலங்குகள், தாவரங்கள், இந்த பூமியின் இயற்கை சக்திகள் அனைத்தும் தோல்வியடையும் முயற்சிகளை எளிதாக, இயல்பாக எடுத்துக்கொள்கின்றன என புரிகிறது. 

ஆனால் மனிதன் மட்டுமே சில முயற்சிகள் எதிர்பார்த்த விளைவைத் தராத போதே தோல்வியுற்றதாக கருதிக்கொள்கிறான். எல்லா முயற்சியுமே வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்க்கிறான்.

முயல் வேட்டைக்கு சென்ற ஒருவன் நான்கு முயல்களை வேட்டையாடி கொண்டுவருவதை விட, யானை வேட்டைக்குச் சென்ற ஒருவன், யானையால் தூக்கி எறியப்பட்டு, உடலெல்லாம் காயத்துடன் தோல்வியுடன் திரும்புவது தான் மிகப்பெரிய வெற்றி என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

குருவிடம் ஒரு பக்தர், “குருவே, உங்களிடம் பல கோரிக்கைகள் வைத்து, நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்குமே நல்லது நடந்துவிடுவதில்லையே.. ஏன் இந்த பாரபட்சம்?” என கேட்கிறார். 

குரு சொல்கிறார், “ஐயா, மாமரத்தில் பூக்கும் எல்லா பூக்களுமே கனிகள் ஆகிவிடுவதில்லை” என பதிலளிக்கிறார். ஆக, பிரபஞ்ச இயக்கத்தில், தோல்வி என்பது இயல்பானது.

எந்த ஒரு செயலிலும் முழு தோல்வி அல்லது முழு வெற்றி என்ற ஒன்று அமையாது. "ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி"யாக  இருப்பதால், நமது வெற்றி - தோல்வி ஆகியவை நம் மனம் உருவாக்கிக்கொள்ளும் "வெற்று மாயை" என்றாகிறது. இதனை புரிந்து கொண்டால், நமது மனம் வெற்றியைக் கொண்டாடாது, தோல்வியில் துவளாது... ! 

🌸

-janakiram

நீ எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் ஆன்மாவாக இரு. -ரூமி

Monday 25 March 2024

முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையேமெல்லிய மலரைக் கண்டுதேனைத் தேடுகிறது தேனீ.அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.-மு.வ

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.-ரூமி

நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது

Sunday 24 March 2024

கற்கை நன்றே-33


கற்கை நன்றே-33
*மணி

அதியமான் போர்க்களத்தில் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருக்கும்போது.. தனக்கு புதல்வன் ஒருவன் பிறந்திருக்கிறான் எனும் செய்தி தெரிவிக்கப்பட்டது. புதல்வன் பிறந்தவுடன் தந்தை வந்து பார்த்து மகிழ வேண்டும் என்பதே அறநூல் விதி. ஆகவே அதியமான தன் புதல்வனை பார்க்க வருகிறார். அதனை அவ்வையார் இவ்வாறு வர்ணிக்கிறார்.

 அதியமான் போர்க்களத்தில் இருந்து நேரே அந்தப்புரம் வந்தான். போர்க்கோலத்தை கூட களையவில்லை. அவன் கையில் வேல், காலில் கழுத்தில் ஈரம் காயாத காயம், பகைவர்களோடு போரிடும்போது அவன் கொண்டிருந்த கோபமும் முகத்தில் இருந்து மாறவே இல்லை. 

செறுவர் நோக்கிய கண்தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே 

இந்த வர்ணனை அதியமானை ஒரு சிறந்த போர் வீரனாக காட்டுகிறது. ஆனால் ஒரு சிறந்த தந்தையாக காட்டவில்லை. குழந்தையை பார்த்தால் யாருடைய மனமும் மென்மை அடையும். ஆனால் தன் சொந்தக் குழந்தையை பார்த்த அதியமான் போரின் போது ஏற்பட்ட கோபம் தனியாமல், கண்ணில் சிவப்பு மறையாமல், அதே கோபத்தோடு இருந்தான். அதியமான் தன் புதல்வனை பார்த்து தந்தையாக மாறவில்லை போர்வீரராகவே இருந்தார்‌.

எரிமலையில் பூக்கள் எப்படி மலரும்? நம்மில் பலர் இப்படி இருக்கிறோம். அலுவல் செய்யும் இடத்தில் இருப்பது போலவே வீட்டிலும் அதிகார தோரணையோடு கெடுபிடிகளுடன் நடந்து கொள்கிறோம். என்று கவிக்கு அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

காலையில் படித்த இந்த வாசகங்கள் மனதில் ஏனோ தொட்டது. உலகமே ஒரு நாடக மேடை. ஒவ்வொருவருக்கும் மனிதன் நடித்து தான் ஆக வேண்டும். ஆனால் நெருங்கியவரிடத்தில் நடிக்க கூடாது. உண்மையாக மனதின் படி நடக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற வரி நமக்குச் சொல்லப்படுகிறது 

இனிய காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

“சுத்தியலைத் திறமையாகப் பயன்படுத்தும் ஒருவனுக்கு, தான் பார்ப்பவையெல்லாம் ஆணியாகவே தெரிகிறது-ஆபிரகாம் மாஸ்லோ

அவரவர் குற்றங்களுக்கு மனிதர்கள் பொறுப்பேற்றால் கடவுள் பேசத் தேவையில்லை.- பர்க்மன்

Saturday 23 March 2024

“இறுதியில், தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று ஒருவர் கேட்கக்கூடாது, மாறாக, கேள்வி தன்னிடம்தான் கேட்கப்படுகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே வரியில் கூறினால், வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனிடமும் கேள்வி கேட்கிறது; தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு விடையளிப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் பதிலளிக்க முடியும்; பொறுப்பாக இருப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் விடையளிக்க முடியும்.”-ஃப்ராங்க்கெல்

ஊன்றி நிற்கும் மரங்களைப் போலில்லாமல், உதிர்ந்த இலைகளைப் போன்று இப்பூமியில் நகர்ந்துகொண்டேயிருப்பேன். -நரன்

Thursday 21 March 2024

ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல. இனி என்ன செய்வதென்று தெரியாமல், இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது, வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது..!-ஈரோடு கதிர்

வென்றதை விட, தோற்றதைச் சொல்ல அதிக மனத் துணிவு வேண்டும்;அடித்ததை விட அரை வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும்.சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை; அவற்றை அப்படியே கடந்துவர வேண்டி இருக்கிறது;, ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது-பிருந்தா

நமரி


அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் மனிதரிடத்து தேர்தல் மனம் என ஒன்று செயல்பட்டுக்கொண்டேயிருக்கும் போலிருக்கிறது. தேர்தல் மனம் தனது வெற்றியையும், பிறர் ஒருவரின் தோல்வியையும் விழையும் . அதற்கான காரணங்களை அது விநியோகித்துக்கொண்டேயிருக்கும்.

மனித மனமே இப்படித்தான் விழைவுகளை கொண்டிருக்கும் போலிருக்கிறது. தன்னை கொண்டாடவேண்டும், தன் சொல்லிற்கு மந்திர சக்தி இருக்கிறது என்று நம்பச் சொல்லும் அதே மனம்,  தான் ஒப்பிடும் அந்த மற்றவர் சொல்லை  எவரும் கேட்பதில்லை, அவர் செல்லா காசாகிவிட்டார் என்பதை உணர்தலிலும்  உணர்த்தலிலும் உறுதிப்படுத்திக்கொள்வதிலும்  சந்தோஷம் கொள்கிறது. இங்கு ஒருவரின் வெற்றி பிற ஒருவரின் தோல்வியாக இருந்தே ஆகவேண்டும் போல..

மனம் ஏன் எப்போதும் தேர்தல் மனமாகவே செயல்படுகிறது …

 ⁃ நமரி

கம்மஞ்சங்கு


"கம்பஞ்சங்கு விழுந்து மாதிரியே, கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"

'குறுக்குச் சிறுத்தவளே' பாடலில் வருகிற குறிப்பிட்ட வரிகளைச் சிலர் இப்படி எழுதியிருப்பதைப் பார்த்தேன்...

உண்மையில் அது 'கம்பஞ்சங்கு' இல்லை.

கம்மங் கருதை விரல்களில் நெருடி, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதன் சொங்கு போனபிறகு அதை ஊதித் தின்பார்கள்.  அப்படி ஊதுகையில்  அதன் உமி கண்ணுக்குள் நுழைந்தால் உறுத்தும். அதுபோல, உன் பிம்பம் என் கண்ணுக்குள் விழுந்து என் நெஞ்சை உறுத்துகிறது. 

"கம்பஞ்சொங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"

சீனிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவார்கள் 
சோளக்கருதை உப்புப்போட்டு அவித்து உண்பார்கள் 
உளுந்தங்களியைக் கிண்டிச் சாப்பிடுவார்கள். 

கேட்கையிலேயே தமிழ் மணக்கும் கிராமத்து உணவுகள்.

அடுத்த தடவை, பொருள் புரிந்து உச்சரிக்கும்போது வரிகளும் இனிக்கும்.

-சுதர்சன்

நேரு


1937ம் ஆண்டு காந்தி கொல்கத்தாவுக்கு வருகிறார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அண்ணன் சரத் சந்திர போஸ் வீட்டில் தங்குகிறார்.

காந்தி வங்காளத்துக்கு வரும்போதெல்லாம் 'குருதேவ்' ரவீந்திரநாத் தாகூரைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர் தாகூரைச் சந்திக்கச் செல்லவில்லை.

இந்தத் தகவல் தாகூர் காதுக்குச் செல்கிறது, நான் காந்தியைப் பார்த்து நலம் விசாரிக்கவேண்டும் என்கிறார், அவர் தங்கியிருக்கும் இடத்துக்குப் புறப்பட்டு வருகிறார்.

அங்கு வந்தபிறகு ஒரு பிரச்சனை. காந்தி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது மாடி அறையில். எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட தாகூரால் படியேற இயலாது.

அதனால் என்ன? சட்டென்று ஒரு நாற்காலியைக் கொண்டுவருகிறார்கள், அதில் தாகூரை உட்காரவைக்கிறார்கள், நான்கு பேர் சேர்ந்து அந்த நாற்காலியைத் தூக்கிக்கொண்டு மாடி ஏறுகிறார்கள். அந்த நால்வர்: சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, சரத் சந்திர போஸ், காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய்.

Tuesday 19 March 2024

நற்செள்ளை


"நற்செள்ளை" எனும் சங்ககாலப் புலவர். சாதாரணமாக நாம் கண்டு, கவனிக்காமல் எளிதில் கடந்து செல்லும் பறவையான காக்கையைப் பற்றி தனது பாடலில் பாடியதால், அவருக்கு "காக்கைப் பாடினியார்" என்ற சிறப்புப் பட்டப்பெயர் வாய்த்தது. 

சுற்றிலும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மைச் சுற்றி அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவற்றை "சாதாரண செயல்" என நாம் கடந்து செல்கிறோம். 

எதிரில் ஒரு மரத்தைக் காண்கிறேன். 
அந்த மரத்தில் தினமும் வேரிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, 20 அடி உயரமுள்ள அந்த மரத்தின் உச்சிக்கிளைக்கும் தண்ணீர் கடத்தப்படுகிறது. இது மிகப் பெரிய அதிசயம் அல்லவா? பூ காயாவதும், காய் கனியாவதும் மகத்தான அதிசயம் தானே?

இயல்பான நிகழ்வுகளின் அதிசயத்தை வியக்க ஆரம்பித்தால் நமது மனம் நேர்மறை எண்ணங்களால் நிறையும், உற்சாகமாகும், நன்றி செலுத்தும் மனமும், அன்பு பரப்பும் குணமும் அதிகமாகும். வாழ்வு இனிதாகும். 

Every moment is a miracle... வாழ்வு இனிதாகட்டும். 🌸

புத்தகம்-11 குழந்தைகளுக்கான பொருளாதாரம்


Reading_Marathon2024
#24RM050

Book no:11/100+

குழந்தைகளுக்கான பொருளாதாரம்
-ரங்கநாயகம்மா

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 464 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வெறும் 180 ரூபாய்க்கு டிஸ்கவரி புக் பேலஸில் வெளியானது.

பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வார்கள் என்ற பழமொழி உண்டு. அதே போல் தான் இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாடங்கள் பெரியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் பொருளாதாரக் குறித்த மார்க்சிய நோக்கில் அனைத்து பாடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
 ஆந்திராவில் நானி என்ற குழந்தை மாதாந்திர இதழில் முதல் 8 பாகம் வந்து நின்று விட்டது. பிறகு அதன் தொடர்ச்சியாக அதே நடைமுறை பயன்படுத்தி பொருளாதார பாடத்தை குழந்தைகளுக்கு மிகவும் எளிய வகையில் விளக்கி ஒவ்வொரு பகுதி முடியும்போது அத்தியாயம் முடியும் பொழுதும் வினா விடையும் இருப்பதால் அந்த பகுதியை மிகவும் எளிமையாக உணர்ந்து கொள்ள முடிவதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.

 மார்ச்சின் மூலதனம் படிக்காதவர்களுக்கு அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு அடிப்படை பாடமாக அமையும். இந்த நூலில் 95 கட்டுரைகள் இடம்பெற்றன ஒவ்வொன்றும் மிக எளிய வடிவில் புரிந்து கொள்ளும் மொழியில் உள்ளது.

பணம் குறித்து துவங்கும் போது பொருள் வாங்கும் போது கொடுக்கிறோமே அதுதான் பணம். மனிதர்கள் உருவாக்கியதை மட்டுமே நாம் பொருள் என்று சொல்ல வேண்டும் நாம் படிக்கும் புத்தகங்கள் நாற்காலி இப்படி அனைத்தும் பொருட்களே. மனிதர்கள் பொருட்களை உருவாக்கிய வரலாறும் அந்தப் பொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கச்சா பொருட்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளும் என்னென்ன என்பதை உதாரணத்துடன் விளக்கி இருப்பார்கள்.

பொருட்களை உற்பத்தி செய்த பின் அதற்கான உழைப்பை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. உழைப்பு என்பதை மனிதர்கள் மட்டும் செலுத்தும் ஒன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதாய் சொல்கிறார்கள். உழைப்பு என்பது சில வகையான வேலைகளைக் குறிக்கும் நாம் சொந்த தேவைக்காக செய்து கொள்ளும் வேலை உழைப்பாகாது குறிப்பாக மூச்சு விடுவது உணவு உண்பது போன்றவை.

முற்காலத்தில் செய்த பரிவர்த்தனை பண்டமாற்று, பின்பு ஒரு பொருளின் பயன் மதிப்பு, ஒவ்வொரு பொருளுக்கும் பயன் மதிப்பு வேறுபடும் விஷயம் அதேபோல் ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பு,
உதாரணத்திற்கு ஒரு பானை செய்ய ஒரு மணி நேரம் ஆகிறது. காலணி மதிப்பு 2 மணி நேரம் என்றால் 2 பானைகள் கொடுத்து ஒரு ஜோடி காலனிகளை பெற வேண்டும். இதுதான் மதிப்பு விதி.

இவைகள் அனைத்தையும் விளக்கிய பின்பு உழைப்பில் சுரண்டல், ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள், அடிமை முறை, கூலி முறை, வர்க்கங்களாக பிரிந்து கிடத்தல், அடிமை சமூகத்தில் வணிகம் லாபம் கடன் மற்றும் வட்டி ஆகியவை, அடிமைகளுக்கு மத நூல்கள் அளிக்கும் போதனைகள் பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம், முதலாளி தொழிலாளிக்கான உறவுகள், நிலப்பரப்புத்துவ சமூகத்தில் உள்ள உழைப்பு சுரண்டல், முதலாளித்துவ அமைப்பின் தொடக்கம், லாபம் மூலதனத்தின் ஒரே குறிக்கோளாய் பார்க்கப்படுகிறது.. இவ்வாறு அதன் வரலாற்றை மிகத் துல்லியமாக எளிமையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார்கள்.

ஒரு தொழிலாளி 10 மணி நேர வேலையில் அவரின்
 மதிப்பு பத்து ரூபாய். ஆனால் கூலி தரப்படுவது ஐந்து ரூபாய். தொழிலாளர் 18 பொருட்களை உற்பத்தி செய்கிறார் .உற்பத்தி சாதனங்களின் மதிப்பு எட்டு.இந்த தரவுகளின் அடிப்படையில் உபரி உழைப்பு உபரி மதிப்பு உபரி உற்பத்தி ஆகிய மூன்றும் மிக விரிவாக அலசப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த உழைப்பு சுரண்டலை 1867 இன் இறுதியில் இதை கண்டறிந்து வெற்றி அடைந்தவர் ஜெர்மனிய பொருளாதார வல்லுனரான காரல் மார்க்ஸ் ஆவார். இதனை நிரூபிக்க உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள் நாலு தொகுதிகள் அடங்கிய மூலதனம் என்ற நூலை எழுதினார். இதில் கடந்த கால அறிவு ஜீவிகளின் வரலாற்றினை விவரித்தும் அலசியும் புகழ வேண்டி இடத்தில் புகழ்ந்தும் விமர்சிக்க வேண்டிய விமர்சித்தும் அவர்தன் வாதங்களை முன் வைத்தார் . உழைப்பு சுரண்டலை அவதானிப்பது என்பதை அதை ஒழிப்பதற்கான முதல் படி

இதுபோல் புத்தகம்முழுக்க பொருளாதார பார்வை மனித உழைப்பு, பொருட்களின் தோற்றம், ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் படிப்படியாக தெரிந்து கொள்ள உதவுகிறது.

*ஒரு பிரச்சனையை அனைவரும் ஒரு மாதிரி புரிந்து கொள்ள, சரியான தீர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுபோல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் நான் முரண்பட்ட கருத்துக்களை காண்கிறோம் .ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த தத்துவம் இருக்கிறது .எது சரி எது தவறு என்று ஆய்ந்தறிந்து நாம் அதனை பின்பற்ற 
வேண்டும்.

*பொதுவாக ஒரு பொருள் செய்ய தேவைப்படும் நேரமே அதன் மதிப்பாகும். மண்மீது எவ்வளவு உழைத்து செலுத்தப்பட்டதோ அதுவே என் மண்ணுக்கான மதிப்பு.

*அனைத்து மதிப்புகளும் உழைப்புக்கு சொந்தமானது அவை பொருட்களுக்கு உரியது அல்ல.

*விற்பனைக்கு தயாராக இருக்கும் ஒரு பொருள்தான் சரக்கு.

*புழக்கத்தில் இருக்கும் காகித பணத்தின் மதிப்பானது அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் தங்க நாணயத்தின் மதிப்பை சார்ந்து இருக்கும். இன்றைக்கும் கூட அவை ரிசர்வ் வங்கியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

*எவ்வளவுக்கு எவ்வளவு கூலியை உயர்த்திக் கொடுக்கிறாரோ அதற்கு மேல் லாபத்தை கூட்டி வைப்பார். ஆகவே கூலி என்பது உழைப்பின் மதிப்பு ஆகாது.

*காவலர்கள் மற்றும் ராணுவ பணியாளர்களும் உற்பத்திக்கு பங்களிக்காத உழைப்பாளர்களே. ஆனால் இவர்கள் முதலாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டலை காப்பதற்காக செயல்படும் உழைப்பாளர்கள்

*போட்டி என்னும் ஒரு புதிய தோற்றப்பாடு முதலாளித்துவ கட்டத்தில் தொடங்கிய ஒன்றாகும். மூலதனத்துக்கு இடையில் போட்டி அதுதான் முதலாளிகளுக்கு இடையிலான போட்டி

புத்தகத்தை முழுவதும் படித்தவுடன் ஏதோ புதிதாய் தெரிந்து கொண்ட ஒரு சந்தோஷமும் தெரிந்ததை நினைவூட்டிக் கொள்ளவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. நவீன காலத்தில் ஜெயமோகன் ஒரு இடத்தில் குறிப்பிட்டார்.. ஒரு தொழில் செய்யும் ஆசாரி, பிளம்பர் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் மாத ஊதியத்துக்கு செல்லும் படித்த ஒரு பட்டதாரி மாதம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே  வாங்குகிறார். அந்த மாத ஊதியம் பெறுவோர் கண்ணுக்குத் தெரியாமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார். ஆனாலும் மனித வளம் அதிகம் உள்ளதால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆட்கள் அதிகம் கிடைப்பதாலும் குடும்ப வறுமையாளும் இது பன்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்போதைய காலத்தில் வரி மின் கட்டணம் போன்றவை முதலாளிகளை தொழிலாளிகளாக மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். எத்தனையோ சுய தொழில் செய்வோர்கள்..தற்போது திருப்பூரில் வேலைக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது. இது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் நடுநிலமையோடு நோக்க வேண்டிய அத்தியாவசிய பணியாகும். ஆகவே இரு தரப்பினரையும் கற்றுணர்ந்து அடிப்படை தேவைக்கான கூறுகளை இந்த நூல் மிகவும் விரிவாக அலசி இருக்கிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

“இறுதியில், தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று ஒருவர் கேட்கக்கூடாது, மாறாக, கேள்வி தன்னிடம்தான் கேட்கப்படுகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே வரியில் கூறினால், வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனிடமும் கேள்வி கேட்கிறது; தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு விடையளிப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் பதிலளிக்க முடியும்; பொறுப்பாக இருப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் விடையளிக்க முடியும்.”-ப்ராங்க்கெல்

எந்த ஒரு எதிர்பாரா தடைகளையும் சாலையின் முடிவாக எண்ணாமல் ஒரு திருப்பமாக,வளைவாக எண்ணிப்பாருங்கள்.A bend in the road is not the end of the road..unless you fail to make the turn-ஹெலன் கெல்லர்

பிரிவு என்பது, காற்றுஅது சிறு சுடரைஅணைத்து விடுகிறது.பெரு நெருப்பைமேலும் கொழுந்துவிட்டுஎரியச் செய்கிறது-ஆங்கிலக் கவிதையில்

தலாய்லாமா


கேள்வி: 
உயிரினங்களில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்ன ?

தலாய்லாமா: 
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவன், மனிதன். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான், 
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப்பபெருவதற்க்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான். 

நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான், அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். 

தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான்; கடைசியில் வாழாமலே சாகிறான்.

Monday 18 March 2024

நடப்பதை இயல்பாக நடக்க விடுங்கள்.எதையும் பலவந்தப் படுத்தாதீர்கள்.-எதிர்மறை பயன்விதி (The law of Reverse effect)

காதல் ஒரு வினோத நெருப்புஅது பற்ற வைத்தால் பற்றாதுஅணைத்தால் அணையாது-மிர்ஸா காலிப்

யாதூம்


Yadhoom (யாதூம்)

“யாதூம்” என்பது ஸ்கான்டிநேவியன் மக்கள் நம்பும் வாழ்வியல் நம்பிக்கை. இந்த வாழ்க்கையின் பொருள் குறித்த அவர்களின் விளக்கம் என்று சொல்லலாம். மேர்ரி கிருஸ்த்மஸ் படத்தில், நடிகர் ராஜேஷ் கேரக்டர், நீண்ட நாள் கழித்து தனது வீட்டுக்கு வரும் விஜய் சேதுபதிக்கு, தானே தயாரித்த ஒரு வைன் பாட்டிலைப் பரிசாகத் தருவார். அந்த வைனுக்கு “யாதூம்” என்று பெயர் வைத்திருப்பார். அதனைப்பற்றிக் கேட்கும் போது, ஒரு நாள் திடீரென்று இந்த வைன் செய்வது தான் எனது வாழ்க்கையின் காரணம் என்று உணர்ந்தேன், இது தான் என்னோட “யாதூம் மொமண்ட்” என்று சொல்லுவார்.

நமது வாழ்வு, வேலை செய்வதிலும், குடும்பத்தைப் பாதுகாப்பதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும், நண்பர்கள் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதிலும் கழிகிறது. ஆனால் நாம் அனைவரும் ஒரு சிறப்பு தருணத்திற்காக காத்திருக்கிறோம். அந்தத் தருணம் நமது ஒட்டுமொத்த வாழ்வின் மேஜிக். அந்தத் தருணத்தின் பெயர், “யாதூம்”. அந்தத் தருணம் வரும்போது, மிகச் சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று திடீரென்று நமக்குள் தோன்றும். அதனை செய்வதன் மூலம் நமது வாழ்க்கை மாறும். ஒருவகையில் நமது ஒட்டுமொத்த வாழ்வே அந்தத் தருணத்துக்காகத் தான் அமைந்திருக்கிறது.

ஜப்பானியர்கள் இதே வாழ்வியல் தத்துவத்தை, “இக்கிகாய் (ikigai)” என்கிறார்கள். பூமியில் பிறந்த ஒவ்வொறுவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதுவே நம்மை காலையில் தூக்கத்தில் இருந்து எழ வைக்கிறது. உற்சாகமாக செயல்பட வைக்கிறது. 

ஒருவர் தனது "யாதூம்" அல்லது “இக்கிகாய்” எது என அறிந்துவிட்டால், அவரது வாழ்வு இசையாக மாறிவிடும். 

-janakiram

Sunday 17 March 2024

புத்தகம்-10


Reading_Marathon2024
#24RM050

Book no:10/100+

உனது பையில் ஒரு கூழாங்கல்
-திக் நாட் ஹஞ்ச்
தமிழில்:அமலன் ஸ்டான்லி

வேகமும் பரபரப்புமான நமது வாழ்க்கையில் இயற்கையான எளிமையும் மகிழ்ச்சியும் இன்பமும் இங்கேயே உண்டு, இந்த தருணத்தில் உண்டு. அமைதியின் பகிர்தல் என்பதை தாண்டி நாம் அதுவாகவே ஆகிவிடும் அர்த்தத்தில் இந்த நூலில் அமைதி குறித்த குறிப்புகள் ஏராளம் .ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ் என்பது போல தியானம், அமைதி, இன்பம் ஆகியவற்றை நாம் தொலைத்தவற்றை தேடிக் கொடுக்கும் ஒரு இயந்திரம் போல இந்த புத்தகம் அமைந்துள்ளது.

சமீபத்தில் ஒரு குழந்தைகளின் கூட்டத்தில் டிம் எனும் சிறுவன் மிக அழகாக முறுவலித்தான். நீ அழகாக புன்னகைக்கிறாய் என்றேன். அதுக்கு அவன் நன்றி என்றான். நீயல்ல நானே உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் உன் புன்னகையால் வாழ்வை மிக அழகு படுத்துகிறாய். மேலும் இன்னொரு இடத்தில்.. நாம் அன்றாட வாழ்வில் புன்னகைக்க முடிகிறது என்றால் நம்மால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க முடிகிறது என்றால் நாம் ஒருவர் மட்டுமல்ல நம்மில் ஒவ்வொருவரும் அதனால் பயனடைவோம் என்கிறார்.

புறச் சூழல்கள் அனைத்தும் ஒன்று கூடி உண்மையான நம்மிடம் இருந்து நம்மை அப்புறப்படுத்த நினைக்கும் போது, துரத்த முனையும் போது, தியானம் மிக முக்கியமாக பயன் அளிக்கிறது. அது நம்மையே நாம் அறியும் வகையில் இருக்கிறது. நம்மை நாம் தனித்து வைத்த வைத்திருக்காமல் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும் அது குறித்துச் செல்லும்போதுஉண்மையின் சாரம் இருந்தால்தான் வாழ்க்கையிலும் அது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். செடிகளை ஊன்றும் போது அது சொல்லுமாம்.. நான் பூமியிடம் என்னை ஒப்புவிக்கிறேன், பூமி தன்னை என்னிடம் ஒப்பு வைக்கிறாள் என்று.

ஒரு குழந்தை எப்படி அனைவராலும் போற்றப்படும் ஒரு ஞானியை தனக்குள் கிரகித்து பரவசத்துடன் புரிந்துணர்வு கொள்கிறது. தன் விருப்பத்துக்குள் அது எப்படி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை பற்பல கதைகள் மூலம் பெரியவர்களுக்கு என்னுள் பயிற்சியாக எடுத்துக்காட்டுகிறது
இந்தக் கணம் தான் நமக்கு வாழ கிடைக்கிறது. இது புத்தரின் போதனை. வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் உங்களுக்கு வந்துவிட்டதா என யாரேனும் கேட்டால் இன்னும் இல்லை என்றே உங்களில் பெரும்பாலோர் பதில் சொல்லுகிறீர்கள். அச்சிறந்த கணம் இன்னும் நிகழவில்லை, வெகு விரைவில் நிகழும் என நம்புகிறோம் .ஆனால் அந்த சிறந்த கணம் ஒரு நாள் நம்மை வந்து சேரும் என முன் எப்போதும் போல் தொடர்ந்து காத்திருந்தால் அது நிகழாது. உங்களுக்கான மகிழ்ச்சி எதிர்காலத்தில் ஒளிந்து இருக்கிறது என நம்ப வேண்டாம். உண்மையில் இக்கணமே உங்களுக்கான மகிழ்ச்சியை தொட முடியும். உயிர்ப்புடன் இருப்பீர்கள்.

விழிப்புணர்வை பற்றி சொல்லும் போது அது சூரிய ஒளி போல செயல்படுகிறது .எந்த முயற்சியும் இல்லாமல் சூரியன் எல்லாவற்றிலும் ஒளிர்கிறான் துலங்க செய்கிறான். யாவையும் அவ் ஒலியால் மாற்றுகின்றான். அதுபோல் நாம் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார்

ரசித்தவை

*உங்களின் இருதயத்தில் நீங்கள் சுமந்து செல்லும் துயரம் என்பது இச்சமூகத்தின் துயரமே. அத்துயரத்தை நீங்கள் உங்களோடு எடுத்து வந்தால் இச்சமூகத்தை நீங்கள் சுமந்து வருவதாகாகவே அர்த்தம்

*நமது மனம் நதியைப் போன்றது ஏராளமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் அதனுடைய ஓடிக்கொண்டிருக்கின்றன இதில் அமைதியும் அன்பையும் ஊடேற்ற வேண்டும்

*உலகின் வளம் குன்றா நீரை நான் சுவைத்தேன்

*நீங்கள் ஒரு மரத்தை தொடும் போது ஒருவித அழகையும் புத்துணர்வையும் அதனிடமிருந்து திரும்ப பெறுவீர்கள். மரங்கள் அருமையானவை. புயலிலும் திடகாத்திரமாக நிற்பவை. மரங்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்

தியானம் குறித்தும் நம்மையே நாம் அறிந்து கொள்ளும் விதத்திலும் எளிமையான சொற்களில் புத்த மத கருத்துகளில் நாம் அன்றாடம் காணும் விஷயங்களில் எல்லாம் மேற்கோள்கள் அமைந்திருக்கின்றன புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட முடியாது ஆங்காங்கே நின்று இளைப்பாரி தன் படித்துக் கொள்ளச் செல்ல வேண்டும் ஏனெனில் புரிந்து கொள்ள புரிந்து கொண்ட கருத்துக்களை அசைபோட நமக்கு சில நேரம் தாமதம் ஆகலாம் தியானம் குறித்து அமைதி குறித்து வாசிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தினை படிக்கலாம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 16 March 2024

ஓரான் பாமுக்


"ஏதாவது பிரார்த்தனையையோ செய்யுளையோ மனப்பாடம் செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு வார்த்தைகளை ஞாபகத்தில் பதிக்க வேண்டியிருந்தால் கண்ணெதிரே தெரிகின்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தக் கூடாது என்பது தெரியவரும். வார்த்தைகள் தம்மைப் படியச் செய்து கொண்டதும் மனம் விடுதலையுற்று ஞாபகத்தூண்டல்களுக்கு உதவக்கூடிய பிம்பங்களைத் தேடிக்கொள்கிறது. எண்ணங்களிலிருந்து கண்கள் முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு உலகை அதற்கே உரித்தான வியப்போடு கவனிக்கத் தொடங்குகின்றன. சில்லிட்ட குளிர்கால இரவுகளில் போர்வைக்குள் நடுங்கியபடி செய்யுளை மனனம் செய்துகொண்டே ஒரு கனவைப் போல இருட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பாஸ்ஃபரஸ்ஸை சன்னல் வழியே வெறித்துக்கொண்டிருப்பேன். 

இருட்டில் செய்யுளை மனப்பாடப்படுத்திக்கொண்டே, வினோதமான ஞாபக விளையாட்டுகள், உத்திகளைக் கொண்டு அதை ஒப்பிப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டே, என் கண்கள் பாஸ்ஃபரஸ் நீரோட்டத்தில் மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றின் மீது - அது அசாதாரணமாகத் தோற்றமளிக்கும் கப்பலாகவோ விடியலுக்கு முன் புறப்பட்டு விட்ட மீன்பிடிப் படகாகவோ இருக்கும்- நிலைத்திருக்கும். இவற்றின் மீது என் கவனம் குவியாவிட்டாலும் என் கண்கள் அவற்றின் வழக்கமான பணிகளிலிருந்து விலகாது. எதிரில் கடந்து செல்பவற்றை ஒரு கணம் கவனிக்கும்; பின் சற்று நேரம் கழித்துப் பிரக்ஞையில் உறைத்து, ஆம், அது ஒரு சரக்குக் கப்பல் என்று ஒப்புதல் அளிக்கும். 

குழந்தைப் பருவத்திலிருந்தே, இன்றுவரை பாஸ்ஃபரஸ்ஸை நோக்கி மேட்டுப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளில்தான் வசித்துவந்திருக்கிறேன். சன்னலுக்கு வெளியே தூரத்திலோ அடுக்ககங்களுக்கும் மசூதிகளின் கவிகைகளுக்கும் இடையிலோ பாஸ்ஃபரஸ் தெரிந்தே வந்திருக்கிறது. இஸ்தான்புல் வாசிகளுக்கு பாஸ்ஃபரஸ் தொலைதூரத்திலிருந்தாவது தமது சாளரங்கள் வழியே தெரிந்தாக வேண்டும். அது அவர்களுக்கு ஓர் ஆன்மீகக் கௌரவம் சார்ந்த விஷயம். இந்த இஸ்தான்புல் கட்டடங்களின் சன்னல்கள் மசூதிகளின் 'மிஹ்ராபு'கள் போல, கிறித்துவ தேவாலயங்களின் பலிபீடங்கள் போல, ஸினகாக்குகளின் tevans போல கடலையே நோக்கியிருப்பதற்கும் பாஸ்ஃபரஸ்ஸை நோக்கியிருக்கும் அமர்வறைகளின் எல்லா நாற்காலிகளும் சோபாக்களும் உணவு மேசைகளும் கடலை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். பாஸ்ஃபரஸ் காட்சிக்காக இவர்கள் எப்படியெல்லாம் சாளரங்களை அமைத்திருக்கிறார்கள் என்பதை மார்மராவிலிருந்து கப்பலில் வரும்போதே பேராசை பிடித்த சன்னல்கள் ஒன்றின் பார்வையை மற்றது மறைத்தபடியும் துருத்திக்கொண்டும், கட்டடமெங்கும் சன்னல் கண்களாகவும் மண்டியிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்."

- இஸ்தான்புல்_ஒரு நகரத்தின் நினைவுகள்

- ஓரான் பாமுக் (தமிழில் - ஜி.குப்புசாமி)

Friday 15 March 2024

கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும் என்று யாராலும் இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்து மட்டுமே அக்கதவைத் திறக்க முடியும். விவாதத்தின் மூலமாகவோ அல்லது உணர்ச்சிமயமான கோரிக்கையின் மூலமாகவோ இன்னொருவரின் கதவை நம்மால் திறக்க முடியாது-மர்லின் ஃபெர்கூஸன்

அருந்தப்படாத தேநீரின்சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்உறைந்து போயிருக்கலாம்ஏதேனுமொருசோகமோகோபமோ-நர்சிம்

இரண்டு கைகளாலும் தண்ணீரை வாரி விலக்குங்கள். புதிய தண்ணீர் வந்து சேரும்.பிறருக்கு பிரித்துக் கொடுங்கள், தேடி வந்து சேரும். சேமிப்பது போய்விடும். எடுத்துக் கொடுப்பது சேமிப்பாக இருக்கும்.எதைப் பிரித்துக் கொடுக்கிறாயோ அதுதான் உன் சொத்தாக உள்ளுலகில் தங்கும்.-கபீர்

விரும்பாத பணக்காரர்களை தவிர்க்க எண்ணினால் கடன் கேட்க வேண்டும்.வேண்டாத ஏழைகளை தவிர்க்க வேண்டுமெனில் கடன் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அவர்களே நம்மை தவிர்த்துவிடுவார்கள்-ராமகிருஷ்ணர்

நிலவைப் பார்த்து அடிக்கும் பேட்டரி லைட்டின் ஒளி சந்திரனை சென்றடையுமா?





உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனின் கோண விட்டம் 0.5 டிகிரி மட்டுமே தெரியும். பெரும்பாலான சாதாரண டார்ச் கிரண்கள் இதை விட அதிகமாக வேறுபடும். எனவே அதன் ஃபோட்டான்களின் ஒரு சிறிய பகுதியே 0.5 டிகிரி கோண விட்டம் கொண்ட வட்டத்தின் வழியாக செல்லும். எனவே டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஃபோட்டான்களில் ஒரு சிறிய பகுதியே சந்திரனை சென்றடைந்து தாக்கும். அது மனிதனின் கண்களால் காணமுடியாதது.

-படித்தது

ஒரு யோசனை தன்னுடையது என்று அடுத்தவரை உணரச் செய்யுங்கள்.-டேல் கார்னகி

Thursday 14 March 2024

கோகுல்


தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என நண்பர் கவலைப்பட்டார். என்னென்ன மறக்கிறது எனக் கேட்டேன். சில தகவல்கள், நிகழ்வுகள், இடங்கள், உரையாடல்கள். அன்றாடத்தைப் பாதிக்கும் அளவுக்குச் சிக்கலானதாக மாறவில்லை என்பதால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றேன். நண்பருக்குச் சமாதானமாகவில்லை.

துல்லியமான நினைவாற்றல் குறித்து நம் சூழலில் ஒருவிதமான பெருமிதம் நிலவுகிறது. அதிலும் ஓர் எழுத்தாளனுக்கு அல்லது எழுத்தாளனாக விரும்புகிறவனுக்கு அதிக நினைவாற்றல் அவசியம். கல்வி என்பதே இங்கே மனப்பாடச் சக்தியை ஒட்டி அமைவதால் ஏற்பட்ட அழுத்தம் இது. நான் ஏகப்பட்ட விஷயங்களை நினைவில் வைத்திருந்தேன். பார்த்தவை, படித்தவை, கேட்டவை, மேற்கோள்கள், மெய்யியல் கூற்றுகள், எழுத்தாளர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர்களது அனுபவங்கள், எந்தப் படம் எந்த ஆண்டு வெளியானது, அதன் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் நடிகையர் குறித்த தகவல்கள், அவர்களது பின்புலம், எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்தெந்தக் கலப்பினம் ஊடாடியிருக்கிறது என எண்ணற்ற தகவல்கள் மூளையில் கொட்டிக் கிடந்தன. ஒரு நடிகையின் பெற்றோர் யார், எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையெல்லாம்கூடச் சேகரித்து வைத்திருந்தேன். கூகுளையோ விக்கிபீடியாவையோ தேட வேண்டிய தேவையே இருந்ததில்லை. 

ஆனால், காலப்போக்கில் சில விஷயங்கள் மறக்கத் தொடங்கின. வயதாவதாலோ, எல்லாமே எளிதாகக் கிடைக்கிற மிதப்பிலோ மூளையின் குப்பைக் கிடங்கு காலியாக ஆரம்பித்தது. திடீரென ஒரு படம் பற்றிய சிந்தனை ஓடும். ஒரு காட்சி மனத்தில் விரியும். அதன் ஒளிப்பதிவாளர் யார் என நினைவைத் துழாவுவேன். முதல் கட்டத்தில் எரிச்சலாகவும் விரக்தியாகவும் இருந்தது. நினைவாற்றல் பிசகுவது குறித்து வருந்தினேன். ஐயோ, இத்தனை நாள் பாடுபட்டதெல்லாம் வீணா என்கிற அங்கலாய்ப்பு வதைத்தது. 

தற்சமயம் அந்தத் துயர மனநிலை ஏதுமில்லை. தகவல் ஏதேனும் மறந்துவிட்டால் மூளையைக் குடைவதுமில்லை. எது மறக்கிறது, எது நினைவில் தங்கியிருக்கிறது என்பதற்கான வேறுபாட்டைக் கண்டறிந்தேன். எந்த விஷயத்தைக் குறித்துச் சிந்தித்திருக்கிறேனோ அல்லது எந்த விஷயம் என்னைப் பாதித்துச் சிந்தனையாக மாறியிருக்கிறதோ அது மட்டுமே மூளையில் படிகிறது. மற்றவற்றைத் தானாகவே மனம் அகற்றிவிடுகிறது. 

ஒரு தகவல் சிந்தனையாக உருமாறியிருந்து அதை நினைவில் வைத்திருந்தாலே போதுமானது. சிந்தனை மட்டுமே முக்கியம், கவைக்குதவாத சாதாரண தகவல்கள் அல்ல.

-கோகுல்

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். ~ ஹார்வி மேக்கே ~

மாமியார்


ஒரு பணக்கார மனைவியின் மாமியார் காளை மாடு முட்டி இறந்து போனாள்.. துக்கம் கேட்க வந்த அனைவரும் சோகத்துடன் வந்து அவளை பார்த்து விசாரித்து வட்டு சென்றனர்.

ஆண்கள் வந்து கேட்கும் பொழுது ஆமாம் என்று தலையாட்டினார் .பெண்கள் வந்து விசாரித்த போது இல்லை என்று தலையாட்டினார்.

இதை நெடு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த' அவருடைய நண்பர் ஒருவர் உங்களிடம் துக்கம் கேட்க வந்தவர்களுக்கு ஆண்களிடம் ஆமாம் என்பது போலவும் பெண்களிடம் இல்லை! என்பது போலவும் ஏன் தலையாட்டினீர்கள் ?என்று கேட்டார்

ஆண்கள் வந்து உங்கள் மாமியார் மிகவும் நல்லவர் .உங்களை தன்னுடைய குழந்தை போல கவனித்துக் கொண்டார் என்று சொல்லும் போது, ஆமாம் என்று தலையாட்டினேன். பெண்களில் பலரும் வந்து கேட்டார்கள், அந்த காளை மாட்டை கொஞ்ச நாட்கள் எனக்கு தர முடியுமா ?என்று !
நான் முடியாது என்று தலையாட்டினேன் ! என்றார்.

நீதி:- சொல்வதற்கு எதுவும் இல்லை.

பாதையற்ற நிலங்களில் பாதைகளை நினைவிலிருந்து உருவாக்கும் பறவைகள் வேண்டுவது கூடுகளை அழித்தவர்களிடம் எளிய மன்னிப்பை. தயங்கித்தயங்கி தன் நிலத்தில் நுழைபவர்கள் தயங்கித்தயங்கி தன் நினைவுகளிலும் நுழைகிறார்கள்.-லதாமகன்

Wednesday 13 March 2024

கற்கை நன்றே-33



கற்கை நன்றே-33
*மணி

கவிக்கோ கூறுவார்..
அறிய அறிய அறிவு வளரும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் திருவள்ளுவரோ அறிய அறிய நம் அறியாமை தெரியவரும் என்று (அறிதோறும் அறியாமை கண்டற்று) என்ற குறளில் கூறுகிறார்.

 வள்ளுவரின் கருத்துக்கு இது மட்டும் பொருளல்ல. இதற்கு மேலே ஒரு பொருள் இருக்கிறது 
அறிய அறியத்தான் அறிய வேண்டியவை எவ்வளவு இருக்கின்றன என்ற மலைப்பு உண்டாகும்.

 எல்லாவற்றையும் அறிந்து விடலாம் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். ஆனால் நம் அறிவு பெருக பெருக இருளும் பெருகுகிறது. நாம் பல விஷயங்களை அறியவே முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று விஞ்ஞானிகள் இப்போது கூறுகின்றனர்

 அறியேன் என்பதை அறிவது உண்மையான அறிவு .அதாவது அறியாமையை அறிவது அறிவு.

 ஒவ்வொரு பறவையும் தன் சக்திக்கேற்ற உயரத்தை அடைகிறது. எவ்வளவு சக்தி வாய்ந்த பறவையாக இருந்தாலும் அது எட்டும் உயரத்தோடு ஆகாயம் முடிந்து விடுவதில்லை .அது எல்லையற்ற விரிந்து கொண்டே போய்க் கொண்டே இருக்கிறது.

 அறியாமையும் அது போலத்தான்..

 இனிய காலை

நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்களைப் பணக்காரர் ஆக்குவதில்லை.நீங்கள் வாங்காத பொருட்கள்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குகிறது-Morgan Housel,

"நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள். நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள்" -டால்ஸ்டாய்

Tuesday 12 March 2024

உன் கவலைகளை நேசிக்க முயற்சி செய்; நாம் நேசிக்கும் எல்லாம் நம்மை விட்டுப் போவதைப்போல கவலைகளும் போய்விடக்கூடும்-அனீஸ் மன்ஸுர்

"உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள்" Follow your Passion - அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை இது.இந்த அறிவுரை எத்தனை முட்டாள்தனமான அறிவுரை என விரிவான உதாரணங்கள் ஆய்வுகளோடு விளக்கியிருக்கிறார்.ஆசிரியர் நியூபோர்ட் Deep work நூலின் ஆசிரியர்.சுருக்கமாகச் சொன்னால் Passion என்பது மாறிக் கொண்டே இருக்கும். அதன் பின்னால் செல்வதைவிட திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவோம். நாம் செய்யும் விஷயத்தின் மேல் ஆர்வம் தானே வரும். உங்கள் Passion திறமையாளராக வர வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர வெறுமே மனதுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது.

பாபிலோனின் தொங்கும் தோட்டம்



பண்டைய உலக அதிசயங்களில் ஒன்று பாபிலோனிய தொங்குதோட்டம் (Hanging Gardens of Babylon). இன்றைய இராக்கில் அமைந்திருந்தது. அது பாபிலோனிய மன்னர் நெபுகட்நெசரின் சொந்த தோட்டம்.

பாராடைஸ் என சொர்க்கத்தை குறிப்பிடுவதுண்டு. பாரசிக மொழியில் தோட்டத்துக்கு pairi-daêza   என பெயர். அந்த சொல் கிரேக்க மொழியில் புகுந்து ஆங்கிலத்துக்கு வந்து பாரடைஸ் என்றால் சொர்க்கம் என ஆனது

பாரசிகர்கள் தோட்டங்கள் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். பெர்சியன் கார்டன் என்பது அத்தனை புகழ் பெற்ற கலைவடிவம். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதன் மன்னர் சைரஸ் காலத்தில் இருந்து அரண்மனையில் தோட்டம் வளர்ப்பது வழக்கம் என்றால் பார்த்துக்கலாம்

இவர்களின் பாதிப்பில் தான் முகலாயர்களும் பின்னாளில் முகல் கார்டன் என்ற பெயரில் தோட்டன்களை அமைத்தார்கள்

படத்தில் இரானின் கெர்மான் நகரில் இருந்து ஆறு கிமி தொலைவில் இருக்கும் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஷாஸ்தே தோட்டம் (Shahdez Garden). இது 19ம் நூற்றாண்டில் அமைக்கபட்டது. இதற்கான நீர் ஆறு கிமி தொலைவுக்கு எந்தவித மோடட்ரும், பம்பும் இல்லாமல் அருகில் உள்ள கெர்மான் நகரில் இருந்து பண்டைய தொழில்நுட்பம் மூலம் புவியீர்ப்பு விசையை பயன்படுத்தியெ கொண்டுவரப்படுகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பும் மன்னர் நெபுகட்ன்நேசரும் தன் பாலிலோனிய தொங்குதோட்டத்துக்கு இம்முறையை பயன்படுத்தி தான் நீரை கொண்டுவந்தார்

பாரசிகர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விசயங்களில் ஒன்று

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

Monday 11 March 2024

கற்கை_நன்றே-32*மணி


புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் செஸ்டர்டன் லண்டன் வாசி. நெடுங்காலமாக அந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தவர்.

ஒருநாள் பயணம் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை பார்த்து அவரது நண்பர் எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? என்று கேட்டார்.செஸ்டர்டன் லண்டனுக்கு என்றார். நண்பர் திடுக்கிட்டார். 'என்ன சொல்கிறீர்கள்'? நாம் லண்டனில் தானே இருக்கிறோம் என்றார். 

இல்லை உண்மையில் நான் ல்ண்டனுக்கு தான் போகிறேன். பாரிஸ் டோக்கியோ நியூயார்க் வழியாக லண்டன் போகிறேன். நெடுங்காலமாக லண்டனிலேயே இருக்கிறேன். அதனால் லண்டன் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விட்டது. லண்டனை நான் அறிய வேண்டும் என்றால் நான் கொஞ்ச நாள் அதை பிரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் பயணம் புறப்படுகிறேன். உண்மையில் நான் லண்டனுக்கு தான் போகிறேன் என்றார். 

"எது நம்மிடம் இருக்கிறதோ அதனுடைய அருமை நமக்குத் தெரியாது"

இனிய காலை

Sunday 10 March 2024

நந்திவர்மன்


நந்திவர்மன் பல்லவ மன்னன் இறந்து போனார் தன்னை ஆதரித்து வந்த வள்ளல் இறந்து போனதால் சோகம் கொண்ட கவிஞர் ஒருவர் இவ்வாறு கவிதை வடித்தார்

வானூரும் மதியை அடைந்ததும் தட்பம் 
வரி கடல் புகுந்ததன் பெருமை கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்த உன் கரங்கள் தேனுறு மலரால் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததும் தேகம் யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தைய பரனே

 நந்திக்கலம்பகத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.நந்தியே! அருளாளனே உன்னிடமிருந்த குளிர்ந்த குணம் நிலவிடம் போய்விட்டது. உன் பெருமையை கடலிடம் போய்விட்டது. உன் வீரம் புலியிடம் போய்விட்டது. உன் கைகள் கற்பக மரத்திடம் போய்விட்டன. இதுவரை உன்னிடம் இருந்த திருமகள் திருமால் இடம் போய்விட்டாள். உன் உடல் தீயிடம் போய்விட்டது. உன்னை நம்பி வாழ்ந்திருந்த நானும் என் வறுமையும் இனி எங்கே போவோம் என்கிறார் கவிஞர்

சாதி என்பது செங்கல் சுவர், முள்வேலி போன்ற பெளதீகத் தடையாக இருந்தால் அதைத் தகர்த்துவிட முடியும்.அது மனத்தடையாக இருப்பதால் அதைக் கடந்து வருவது சொர்க்கத்திற்குப் போகும் பாதையைவிடக் கரடுமுரடானது, கடினமானது-அம்பேத்கர்

புத்தகம்-8


Reading_Marathon2024
#24RM050

Book no:8/100+

உன்னால் கடக்க முடியும்
-ஓஷோ

பெரும்பாலான தன்னம்பிக்கை நூல்கள் எல்லாமே வார்த்தை ஜாலங்களால் அடுக்கிக் கொண்டு போவார்கள். ஆனால் ஓசோ எப்போதும் தத்துவத்துடன் உண்மை தன்மையை பற்றி மட்டுமே புத்தகத்தில் குறிப்பிடுவார் பேசுவார். என் விரலை கடித்து விடாதே நான் சுட்டிக்காட்டும் இடத்தை பார் என்பது போல அறியாததை நோக்கி மட்டுமே அவர் விரல்கள் காட்டுவார். அப்பாதையை கண்டுபிடித்து நாம் சென்றால் மட்டுமே அறியாமையை நாம் உணர்ந்து அதிலிருந்து கடக்க முடியும். நம்பிக்கை கொள்ளும் மனதை யாராலும் உருவாக்க முடியாது. ஏனெனில் மனதால் சந்தேகப்பட மட்டுமே முடியும். சந்தேகத்தை மறைக்க முடியும். ஆகவே நம்பிக்கையை இதயத்திலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நம்பிக்கை சந்தேகங்கள் மன உறுதி என்பதையெல்லாம் மதங்களும் மனிதர்களும் எவ்வாறு புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.. அதிலிருந்து நாம் கற்றுக் கள்ள வேண்டியது என்ன என்பதை, வெளிச்சத்தை இருளில் தேடி கண்டுபிடிப்பது போல இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயம் உண்மையை நோக்கியும் எதார்த்தத்தை வலியுறுத்தியும் பற்பல கதைகள் சம்பவங்களை உதாரணமாக கூறுகின்றன.

எப்போதும் முட்டாள் மனிதர்கள் கேட்பதுண்டு யாரிடம் கற்றுக்கொண்டாய்? என்று. எல்லாருக்கும் இந்த வழி தான் தெரியும். யார் உனக்கு தகவல் தந்தது என்று. நேர் எதிர்வழியில் தெரிந்து கொள்வது பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள். அதுதான் உண்மையான வழியில் அறிந்து கொள்வது. யாரும் உங்களுக்கு அறிவை புக ட்டுவதில்லை. மேலும் மேலும் உங்களுக்குள்ளேயே நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.

உபதேசங்கள் மட்டும் இல்லாமல் அதற்கு தகுந்த ஒரு கதைகளையும் சொல்லும் போது அந்த உபதேசங்களும் மனதில் பதிகின்றன. இதோ ஒரு கதையின் ரயில் வரும் பாதையில் நாய் குறுக்கே ஓடி ரயில் நாயின் வாலைத் துண்டித்து விட்டது. நாய் தன் காயங்களை ஆற்றிக் கண்டு வாலை தேடி அங்கே சென்றது.இன்னொரு ரயில் வந்து நாயின் தலையை துண்டித்தது. ஒரு வால் துண்டை தேடி போக தலையை இழந்து விடாதே என வாழ்வியல் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அதே போல ஒரு பெரிய ஜோதிடர் மேலே உள்ள நட்சத்திரங்களை பார்த்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டார். அந்த வழியே வந்த ஒரு பெண் அவரை காப்பாற்றி விடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக உன் ஜாதகத்தை என்னிடம் தா உன் வருங்காலத்தை பற்றி உனக்கு தெரிவிக்கிறேன் என்கிறார். அதற்கு அந்த பெண் நீ ஒரு முட்டாள். உன் முன்னாள் ஓரடியில் உள்ளதை கூட உன்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலத்தை பற்றி உன் கணிப்பை எப்படி நம்ப முடியும். நீ என்னை ஏமாற்ற முடியாது என்று பதில் சொல்கிறாள். ஒரு கற்பனை உலகில் வாழும் நபர்களை பற்றியும் இந்த கதையில் சொல்லி இருப்பார் .பின்னர் இதனை பற்றி விரிவாக உதாரணங்களுடன் விளக்கி இருப்பார்.

கனவின் செயல் உங்களை தூக்கத்தில் வைத்திருக்கும்.எல்லா கனவுகளின் செயல் நோக்கமும் அதுவே தான் .என்றோ ஒருநாள் சமுதாயம் சமமாக வர்க்க பேதம் இன்றி இருக்கும். இதுதான் கற்பனை உலகமான உடோப்பியா. ஒரு நாள் உருவாகும் அதில் துன்பங்கள் இராது. அந்த நாள் பூமி சொர்க்கம் ஆகும். இவை வெறும் கனவுகள். ஆறுதல் அளிப்பவை. சுகம் அளிப்பவை. காயத்துக்கு களிம்பு போன்றவை. ஆனால் களிம்பே இங்கே போலியானது என்பதை நாம் உணர வேண்டும். இரவு போய் விடியல் வரும் ஆனால் இரவு தான் நீடிக்கின்றது. தூக்கம் தொடர்கிறது துன்பங்கள் தொடர்ந்து நிலவுகிறது. வழிபடுதலும் ஒரு வகையான தப்பித்தல் தான் இது அதீத நாகரீகம் உடையது.

ஒரு மனிதன் ஒருவனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருப்பார். அவன் தடுமாறி கீழே விழுந்து பின் எழுந்து பின் இருப்பவனை பார்த்துச் சொன்னான். எவருமில்லை என்று. இரண்டு பக்கங்களில் இருந்தும் யாரும் இல்லை. அகங்காரம் சுயத்தை நோக்கினால் எவரும் இல்லை. சுயம் அகங்காரத்தை நோக்கினால் எவரும் இல்லை பார்வை ஏற்படும் போது வெறுமனே எவரும். இருப்பதில்லை இருவரும் காணாமல் போய்விடுகின்றனர் .இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது அகங்காரமும் சுயமும் நாம் எப்போதெல்லாம் கீழே விழுகிறோமோ அப்போது இரண்டும் நம்மை பெரிய பூதங்கள் போல் தோன்றி நம்மை உண்மையை அறிய விடாமல் செய்கிறது. ஆகவே இந்த இரண்டையும் மறைபொருளாக இதில் குறிப்பிட்டிருப்பார்

*மனம் உங்களை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தெரு நாய்களைப் போல துரத்தும் குரைக்கும் .ஆனால் நீங்கள் அதை கவனிக்கவிட்டால் மெல்ல மெல்ல இந்த நாய்களை பின்னே விட்டுச் செல்ல முடியும். அந்த குரைப்பு மேலும் தூரமாகி போகும்.

*ஏன் என்ற கேள்வி ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மேலும் மேலும் தத்துவத்துக்கு இட்டுச் செல்லும் .அது இல்லாமல் தத்துவம் ஒரு தரிசு நிலம்

*மரம் ஒன்றுக்கு சொர்க்கத்தை தொட வேண்டுமானால் அது தன் வேர்களை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். உங்கள் வேர்களை நரகத்திற்கு அனுப்பாமல் நீங்கள் சொர்க்கத்தில் மலர முடியாது

*என்னைத் தவிர எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பார்கள் போல நான் குழம்பிப் போய் இருக்கிறேன் நானே முட்டாள் முட்டாளாக இருப்பதை அவர் தெரிந்து கொண்டதால் அவர் அறிவாளியாய் இருக்க முடிகிறது.

*அறியாமையின் அளவு மென்படலமாக இருக்கும் போதே கவனி

*(யின்-யாங்-)ஆண் தொடர்ந்து பெண்ணாகி கொண்டிருக்கிறான். பெண் தொடர்ந்து ஆணாகிக் கொண்டிருக்கிறாள் 
(கல்யாணத்துக்கு அப்புறம் இது உணர முடியுதுங்க)

*தேடல் ஒரு பெரிய வருங்காலத்தை முன் அறிவிக்கிறது. ஒரு மிகப்பெரிய தகவலுக்கு மனிதன் தயாராகிக் கொண்டிருக்கிறான்

*அனைவரையும் நேசி என்பதற்கு எதிரானவர் பிராய்டு. அவருடைய வாதம் எளிமையான பொருளாதார உடையது. நேசம் மெல்லியதாக பரவுவதை பற்றி எழுதும்போது அதீதமான நேச விரிதல் அதன் மதிப்பை குறைத்து விடும் என்கிறார். மனதின் பற்றாக்குறையாலேயே பொருளாதாரம் நிலவியிருக்கிறது.

*ஒருவர் பூ ஒன்றை எடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சுற்றி இருப்பவரிடம் காட்டினால் ஒவ்வொருவரும் பூவைப் பற்றி சொன்னார்கள் ஒருவர் மட்டும் புன்னகைத்தார் பூ விளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல பூ தன்னிலையிலேயே ஒரு விளக்கம் தான். அங்கேயே இருக்கிறது நாம் அதை ரசிக்க மட்டுமே வேண்டும் எதையும் கூறத் தேவையில்லை.

*நினைவிருக்கட்டும் எல்லா பெரிய உண்மைகளும் எளிதானவை .பொய்கள் எளியவை அல்ல. அவற்றால் அப்படி இருக்க முடியாது

இதுதான் சொல்ல வருகிறார் என்பதனை இப்படித்தான் என்று ஓரிரு வரிகளில் சொல்ல முடியாது. கடலில் பயணம் செய்வது போல ஒரு முழு கடலையும் பார்க்க முடியாது இவரின் புத்தகமும் அப்படித்தான் .எல்லாவற்றையும் ஒரே வரியில் சொல்ல முடியாது. அந்த பெருமழையில் கொஞ்சம் நனைந்த உணர்வு தான் மேலிடுகிறது. ஓஷோவின் புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான். நமக்கு வேண்டியது இருக்கும் ,முரணும் இருக்கும் .ஆனால் தத்துவார்த்த ரீதியாக ஒரு கருத்தை முன்வைக்கின்ற போது நாமும் அதில் ஒன்றி போய் படித்து விடுகிறோம் தியானம் போல

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 9 March 2024

Slow work


Slow work--மெதுவாக வேலை செய்தல்

மெதுவாக வேலை என்றவுடன் "சோம்பேறித்தனமாக இருப்பது" என நினைக்கவேண்டாம் 🙂
1986ல் இத்தாலியில் மெக்டானலட்ஸ் அறிமுகம் ஆனபோது "துரித உணவு, துரித வேலை" எனும் கோட்பாட்டுக்கு எதிராக இத்தாலியில் "ஸ்லோ உணவு, ஸ்லோ வேலை" எனும் எதிர்ப்புரட்சி இயக்கம் துவக்கபட்டது. இதை "unbusy movement " எனவும் அழைக்கிறார்கள்

காலையில் சமைக்ககூட நேரம் இல்லாமல் மெக்டானல்ட்ஸில் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடி, நாள் முழுக்க வேலை செய்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி டிவி முன் விழுந்து, சமைக்க நேரம், விருப்பம் இன்றி சைனீஸ், பீட்சா என எதையாவது வாங்கி உண்டு தூங்கி....
இதையே மறுநாள், மறுவாரம், அடுத்தவருடம் என 40 ஆண்டுகள் தொடர்ந்து செய்வது வாழ்க்கையை சலிக்க வைக்கும் செயல்.

அன்பிஸி, ஸ்லோ ஒர்க் இயக்கங்களில் இப்படி வேலைசெய்யகூடாது.

தினம் காலையில் இன்று முடிக்கவேண்டிய முக்கிய வேலைகள் என்ன என எழுதிவைத்துக்கொள்ளவேண்டும்

அதன்பின் அலுவலகம் போய் கதவை பூட்டிக்கொண்டு செல்போன், மின்னஞ்சல், போன், அரட்டை என எதுவுமில்லாமல் அதில் மட்டுமே மூழ்கவேண்டும்.

அலுவலக மின்னஞ்சல் ஆனாலும் ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே திறந்து பார்க்கவேண்டும். அதிலும் "10- 10:30 AM" அதன்பின் "3-:30 PM" என்பது போல இரண்டு ஸ்லாட்கள் வைத்துக்கொண்டு அதில் மட்டுமே மின்னஞ்சல் பார்க்கவேண்டும்.

வேலைக்கு நடுவே பிரேக் எடுக்கலாம். எடுத்து மற்றவர்களை போய் பார்த்து, பேசி விட்டு வந்து மறுபடி கதவை பூட்டிக்கொண்டு வேலை செய்யணும்.

மல்டிடாஸ்கிங் எனும் பேச்சே கூடாது..ஒரு சமயத்தில் ஒரே முக்கிய வேலையை மட்டுமே செய்யணும். அதை செய்கையில் மற்றவேலைகளை நினைக்ககூடாது.

செய்ய நினைத்த வேலைகளை செய்துமுடித்தபின் ஆபிஸை விட்டு வீட்டுக்கு கிளம்பவேண்டியதுதான்.

--
"படிக்க நல்லா இருக்கு...இது எல்லாம் என் பணியிடத்தில் சாத்தியமில்லை..
எனக்கு ஓபன் ஆபிஸ் முறை...நான் எந்த கதவை பூட்டிக்கொண்டு வேலை செய்ய?
மின்னஞ்சல் பார்க்கலை என்றால் உடனே சுமோவில் வந்து அள்ளிக்கொன்டு போய்விடுவார்கள். அந்த அளவு என் வேலையில் பரபரப்பு இருக்கும்.."

-> இப்படி பலகாரணம் இருக்கலாம்...ஆனால் தனிநபராக இதை செய்வது எல்லா வேலையிலும் நடக்காது. அந்த நிறுவனங்களே முன்வந்து இத்தகைய பணியிட கலசாரத்தை உருவாக்காமல் ஸ்லோ ஒர்க் கான்செப்டை பின்பற்ற முடியாது.

பல நிறுவனங்கள் இத்தகைய பணியிட கலாசாரத்தை அறிமுகபப்டுத்தி வருகின்றன. கம்பனி முழுக்க silent work rule, யாரும், யார் கதவையும் போய் தட்டி தொல்லை செய்யகூடாது,.ஓபன் ஆபிஸ் முறைக்கு தடை, மீட்டிங்குகளை மிக குறைப்பது...இப்படி பல சீர்திருத்தங்கள் அறிமுகம் ஆகிவருகின்றன.

ஸ்லோ ஒர்க் என்பதை தாண்டி

Slow food--துரித உணவை தவிர்த்த்விட்டு சமைத்து, மெதுவாக ரசித்து உண்பது

Slow entertainment-> மெதுவாக நடப்பது, படிப்பது, பூங்காவில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது 

Slow ageing-> அரக்க பரக்க வேலை செய்து மன அழுத்தத்தை கூட்டிக்கொள்லாமல் மெதுவான வாழ்க்கைமுறை மூலம் மெதுவாக வயதாவது

Slow tourism- ஒரே நாளில் 10 ஊர்களை பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒரே ஊர், ஒரே இடம் என்பது போல மெதுவாக ஜாலியாக சுற்றிபார்த்து பயணிப்பது...

Slow dating-> வேக வேகமாக டேட்டிங், செக்ஸ், கல்யானம், விவாகரத்து என போகாமல் மெதுவாக பழகி, பேசி, புரிந்துகொண்டு நிதானமாக வாழ்க்கையை துவக்குவது

இப்படி இந்த அன்பிஸி, இயக்கம் பல்வேறு பரிணாமங்களில் பின்பற்றபட்டு வருகிறது.

வாழ்க்கையை மெதுவாக வாழ்வோம்

_நியாண்டர் செல்வம்

ஏன் பிறர்ஏற்றுக்கொள்ளவேண்டுமெனஇத்தனைப் பாடுபடுகிறீர்கள், தெரிந்துகொள்ளுங்கள்..!உங்களைச் சுதந்திரமாய்வாழச்செய்வது,நிராகரிப்புகள் மட்டும்தான்..!-படித்தது

Friday 8 March 2024

Just because you are anger doesn't have to be an excuse for you being cruelநீங்க கோபமாய் இருக்கிறதால் ஒருத்தர கேவலமா நடத்தும் உரிமை யாரும் உங்களுக்கு கொடுக்கல.நான் கோபத்தில் பேசிட்டேன் என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.-படித்தது

இளைப்பாறுதல் சுகம் பற்றி வள்ளலார்கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே! மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே! மென் காற்றில் விளை சுகமே!சுகத்தில் உறுபயனே!கொளுத்தும் கோடையில் தான் குளிர்தருவின் நிழலின் அருமையும் பெருமையும் புரியும்.

நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன் இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை. அது தான் மகத்தான சவால்”சைபீரியாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போவதற்குச் சற்று முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி தன் சதோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.– தாஸ்தாயெவ்ஸ்கி 

“பழக்கங்கள் உறுதியான கயிற்றைப் போன்றவை. ஒவ்வொரு நாளும் நாம் அதன் ஒவ்வோர் இழையை முடைகிறோம். விரைவில் அது அறுக்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.-ஹொரேஸ் மான்

யாருமில்லாத பாதைகளிலிருந்து திரும்பிப்பார்க்கும்போது பெரிதாகத் தோன்றும் உலகம் உடன் இருப்பவர்களின் கரம்பற்றி யோசிக்கும்போது மிகச்சிறியதாக மாறிவிடுகிறது. அத்தனை பெரும்பாதைகளையும் சிறு துகளென மாற்றித்தர யாராவது எப்பொழுதும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்.-லதாமகன்

தன்னிரக்கத்தின் வழி நாம் அடைவது ஆசுவாசம். நம் தயங்கங்களை நம் பிழைகளை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக நினைத்துக்கொள்வது ஒரு தப்பித்தல். சிறுவலிக்கு அஞ்சும் எளிய மனங்களின் வானம் கனவாகவே இருப்பது நியாயம்தானே?-லதாமகன்

பழம் தின்று கொட்டை போட்டவர்

பழம் தின்று கொட்டை போட்டவர் என்றால் என்ன அர்த்தம்?

யானைகளை காடுகளின் தந்தை என்பார்கள்.

ஆதிகாலம் முதல் யானைகள் தாம் பழங்களைத்தின்று தான் செல்லுமிடமெல்லாம் விதைகளைப்போட்டு காடுகளை விருத்தி செய்கின்றன.

இன்றளவும் காடுகளில் புதிய தாவரங்கள் மற்றும் மரங்கள் வேறுவேறான இடங்களில் வளர்வதற்கு யானைகள் தாம் காரணம்.

அவ்வாறாக பழம் தின்று கொட்டைகள் போட்டு காடுகளைபல்கிப்பெருகச்செய்த யானைகளை காட்டும் உதாரணம் தான் பழம் தின்று கொட்டை போடும் உதாரணம்.

அப்படியான யானைகள் அளவுக்கு பலம் பொருந்தியவர் என்று பொருள்கொடுக்கும் வகையில் தான் பழம் தின்று கொட்டை போட்டவர் என்று உதாரணமாக சொல்லப்படுகிறது.

-படித்தது

Thursday 7 March 2024

சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை. சும்மா இருக்கத் தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச் செலுத்தித் தான் செயலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதை எப்போதும் செய்துக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது-ஜெயமோகன்

புத்தகம்-7


Reading_Marathon2024
#24RM050

Book no:7/100+

உரையாடல்களின் காலம்
-சுகுணா திவாகர்

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. நான் மதிக்கும் எழுத்தாளுமைகளில் ஒருவரான சுகுணா திவாகரின் கட்டுரை நூல்கள் தான் இவை. எந்த ஒரு கட்டுரை தொகுப்பும் கட்டுரையின் ஆழங்களை தரவுகளோடு அலசி, பின் முடிவுகளை அனைவரின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்த்து இறுதியில் கட்டுரை முடியும் போது நாமே சொல்ல வந்த கருத்தினை போல் உணர வைப்பதாக இவர எழுத்துக்கள் இருக்கும். அவ்வாறு இதில் உள்ள 11 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கிய கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமகால பிரச்சனைகளை சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் எதிர்வினை ஆற்றி அந்த எதிர்வினைகளுக்கு தக்க ஆதாரங்களோடு வெளிப்படும் கட்டுரைகளாக ஆனந்த பவனை எதிர்க்கும் ஆரியம் கட்டுரை இருந்தது. மக்களின் உடை நாகரீகம் போன்றவற்றை வரலாற்றின் அடியொற்றி இதில் விளக்கியிருப்பார். ஆரிய பவன் ஐயங்கார் பேக்கரி என இருக்கும் தமிழகத்தில் தான் மற்ற கீழ் சாதியினர் பெயர்களில் உணவகங்கள் இல்லை என்பதும் முத்தாய்ப்பாக சொல்லி இருப்பார்

மதம் குறித்த கட்டுரைகளில் சமகால ஆளுமைகளின் கருத்துக்களை சொல்லியதோடு மதம் குறித்த பெரியாரின் நிலைப்பாடு என்ன மதத்தையும் கடவுளை மறுத்தால் அந்த இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பெரியாரின் காலத்திலேயே கேட்கப்பட்டபோது "நடுவீட்டில் மலம் நாறுகிறது அதை எடுத்து வீசு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று ஏன் கேட்கிறாய்? என்றார் பெரியார் என்று இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும் விதமாக இக்கூற்று இருந்தது. மதத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விடுபட்டு நமக்கான சுயேச்சை அறங்களை நாமே உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் மிகப்பெரும் மகிழ்ச்சி இருக்கிறது .அது மதவாதிகளின் கற்பனை சொர்க்கத்தை விட அற்புதமானது என்று இறுதியில் இந்த வரிகளுடன் முடித்து இருப்பார்.

மாமன்னன் படம் வந்தபோது தேவர் மகனுக்கு எதிரானதா என்பதை உரையாடல் வழியே காண்பித்து இதில் கூறியிருப்பார். அதேபோல் படைப்பு சுதந்திரத்தின் அடையாள அரசியல் வரம்புகளில் பர்கானா திரைப்படத்தை முன்வைத்தும் அவர் தனது சினிமா கட்டுரைகளில் உள்ள மதம் அரசியல் ஆகியவற்றைப்பற்றி பேசி இருப்பார்

கவிஞர்களின் காலம் முடிகிறதா எனும் கட்டுரையில் எந்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்குள் வரும்போது மனிதர்கள் பதற்றம் அடைவார்கள், எந்திரங்களினால் தொழிலாளர்கள் வேலை இழந்தார்களா? அதில் மார்க்ஸ்ன் சிந்தனை என்ன? உற்பத்தியும் நுகர்வும் சரி விகிதத்தில் இருந்தால் நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் தான்
 இதில் நுகர்வு குறையும்போது உற்பத்தி அதிகரிப்பதால் என்னென்ன முரண்பாடுகள் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி இதில் கூறியிருப்பார்

இமையத்தின் படைப்புகளை பற்றி கூறும் போது எது நம்மை பாதிக்கிறதோ தொந்தரவு செய்கிறதோ விமர்சனம் செய்ய தூண்டுகிறதோ அதை நாம் எழுத்தின் மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோமே அதுவே எழுத்தாகிறது படைப்பாகிறது என்று கூறுகிறார். அடுத்ததாக ஜெயமோகனின் எழுத்துக்களை குறித்த விமர்சனங்களை தரும்போது துணைவன் கதையில்
வரும் வாக்கியம் "அதிகாரம் துப்பாக்கிக் குழாய் வழியான்னு தான் மார்க்ஸ் சொல்லி இருப்பார் என்கிறார் அது உண்மையில் மார்க்ஸ் சொல்லவில்லை மாவோ சொன்னதாய்  என்று திருத்தி சொல்கிறார். மேலும் துணைவன் கதை குறித்தும் மா.லெ இயக்கத்தை பற்றிய கருத்தியல் குறித்தும் ,வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கு பெற்ற நிகழ்வை குறித்தும் விமர்சனப் பார்வையோடு இக்கட்டுரை அமைகிறது.

*பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அதை மறுத்து கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று அழுத்தமாக வாதிட்டவர் அம்பேத்கர்

*வார்த்தைகளை விமர்சனங்களை மௌனப்படுத்துவதற்காக முன்வைக்கும் போது அந்த வார்த்தைகள் ஆற்றல் இழந்து நீர்த்துப் போகின்றன

*கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கான சுதந்திரம் தானே தவிர, அவர் என்ன சொன்னாலும் யாரும் விமர்சித்து எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்கான சுதந்திரம் இல்லை

சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் அணுக வேண்டிய கட்டுரைகளை இதில் பேசியிருப்பார் 11 கட்டுரைகளும் வெவ்வேறு அனுபவங்களை தரும் வகையில் அமைந்திருந்தது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 6 March 2024

'முன்பெல்லாம் எல்லாவற்றையும் சொல்வாய்இப்போது ஏன்எதுவுமே சொல்வதில்லை?''சொல்லக்கூடாதென்று ஏதுமில்லைசொல்லத் தெரியாமலும் இல்லைசொல்லத் தோன்றவில்லை'ஒருவரை இழப்பதைக்காட்டிலும் அவலமானதுஒருவரிடம் நம் இடத்தை இழப்பது-மனுஷ்யபுத்திரன்

ஜெப் ப்ரவுன்


நாம் அனைவரும் சோர்வடைந்துவிட்டோம். உண்மையிலேயே அலுப்பாக இருக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமான பாதைதான், ஆனால் அழகானதும்கூட. நம்மிடமும் பிறரிடமும் நாம் அதிகம் எதிர்பார்ப்பதால் இந்தச் சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம். ஒருவேளை, மனித குலத்தால் மண்புழுவைப் போல மிக நிதானமாகவே முன்னேற முடியுமோ என்னவோ! முதலில், நாம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதை அடிக்கடி நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும். நிறைய ஓய்வெடுக்க வேண்டும். எளிய இன்பங்களில் மனநிறைவுடன் திளைக்க வேண்டும். எங்கும் அன்பையே காண வேண்டும். நான் வசிக்கும் பகுதி அருகில் ஒரு நதி ஓடுகிறது. அமைதியுடனும் நிதானத்துடனும் வளைந்து செல்கிறது. தான் ஏன் கடலாகவில்லை என்றோ ஆர்ப்பரிக்கும் வெள்ளமாகவில்லை என்றோ தன்னை அது கேட்டுக்கொள்வதில்லை. தான் எதுவோ அதில் மட்டும் ஆழ்ந்து லயித்திருக்கிறது. அடிபணிந்திருக்கிறது. நாமும் அந்த ஆற்றைப் போல நாம் யாரோ அதற்குச் சரணடைவோம். தூய நல்நிலையில் நிறைவடைவோம். நான் அந்த ஆற்றின் அருகே நாளை துயில்கொள்வேன். ஓய்வெடுப்பேன். மகிழ்ச்சியுடன் என்னை அர்ப்பணிப்பேன்.

- ஜெஃப் பிரவுன்.

அளிக்கும்போது அன்பைப் போல்இலகுவானதாகவும்பெறும்போது அன்பைப்போல்கனமானதாகவும் எதுவும் இல்லை-ஈரோடு கதிர்

Tuesday 5 March 2024

மெண்டரிங்சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு“நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்” என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.-படித்தது

கடல் ஆழம்


கடலின் ஆழம்

நிஜத்தில் சொல்வதானால் பூமியில் ஒரேயொரு சமுத்திரந்தான் இருக்கி்ன்றது. ஐந்து சமுத்திரங்கள் என்பது இந்தப் பாரிய சமுத்திரப் பரப்பில், பசுபிக், அட்லாண்டிக், இந்திய, ஆர்க்டிக், தெற்கத்தைய என்று அழைக்கப்படுகின்றன.

ஆழம் எவ்வளவு பார்த்தால், இடத்திற்கு இடம் வேறுபடுவதுதான் இந்தச் சமுததிர ஆழம். கடலுக்கடியில் உள்ள மாலைத் தொடர்கள் , செங்குத்தான பள்ளத்தாக்குகள் போன்றவைதான் ஆழத்தை தீர்மானிக்கின்றன.

sonar போன்ற கருவிகளைப் பயன்படுத்தி , நவீன தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் இந்தச் சமுததிரப் பரப்பின் பரவலான ஆழத்தை கண்டறிகிறார்கள். அண்ணளவாக 12,785 அடி (3,897 மீ) என்பது கண்டுபிடிப்பு. இதைச் சுருக்கமாக 3.8கி.மீ அல்லது 2.4 மைல் என்று சொல்லி விடலாம்.

மிக ஆழமான சமுத்திரப் பகுதிகள் என்று கண்டறிந்ததை பிரித்துச் சொல்கிறார்கள்.

👍Molloy Hole என்பது ஆர்க்டிக் சமுததிரத்தின் மிக ஆழமான பகுதி. இது மேல் மட்டத்திலிருந்து 5,669 மீற்றர் ஆழமானது.

👍Java Trench எனப்படும் பிரதேசம் இந்து மகா சமுத்திரத்தில்7,290 மீற்றர் ஆழத்தில் உள்ள பகுதி.

👍Puerto Rico Trench எனப்படுவது அட்லாண்டிக் சமுத்திரத்தின் 8,408 மீற்றர் ஆழத்தில் உள்ள பகுதி.

👍Mariana Trench எனப்படுவதுதான் பசிபிக் சமுத்திரப் பிராந்தியத்திற்குரியது. இதுதான் உலகிலேயே மிக ஆழமான சமுத்திரப் பகுதி. இதைப் பூகோள வரைபடத்தில் "Challenger Deep." என்று குறிப்பிடுகிறார்கள். இது சமுத்திரத்தின் மேற்கத்தைய பிராந்தியத்தில் காணப்படுவது.

இது எவ்வளவு ஆழமானது என்ற கேள்வி எழுகிறதல்லவா? எவரெஸ்ட் மலை உயரத்தை விட கூடிய அளவு ஆழமானது என்கிறார்கள்.

-படித்தது

Sunday 3 March 2024

சமுத்திரத்தின் பயணத்திற்குதயாரான பின் ஓடைகளின் ஆழம் பற்றிஅச்சம் கொள்ள என்ன இருக்கிறது.-நரன்

மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-இதில் கண் துஞ்சார் என்றால் தூங்கவே மாட்டார்கள் என்கிற பொருள் இல்லை. தூக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள். தூக்கத்தில் கூட விழிப்புணர்வுடன் செயலைப் பற்றிய அரை நிலை சிந்தனையோடு இருப்பார்கள் என்று பொருள்இனிய காலை

டிசம்பர் 1947 இந்திய சூழல் குறித்து லண்டனில் பேசிய ஜெனரல் கரியப்பா அவர்கள், அகிம்சையால் எந்த பயனும் விளையாது. வலிமையான இராணுவம் மட்டுமே இந்தியாவை பலப்படுத்தி முன்னேற உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.கரியப்பா அவர்கள் காந்தியை நேரில் சந்தித்ததில்லை. கரியப்பா பேசியதை அறிந்த காந்தி , ஹரிஜன் இதழில் பதிலை எழுதினார். கரியப்பா போன்ற எந்த ஜெனரலாகஇருந்தாலும் அவர்கள் அகிம்சை குறித்து பேசாமல் இருப்பதே உகந்த அறிவாகும். உலகில் இராணுவ அறிவியலும் அதன் நடைமுறைகளும் திவாலாகி நிற்பதை பார்க்கிறோம். பங்கு சந்தை சூதாட்டத்தில் திவாலான ஒருவர், குறிப்பிட்ட வகை சூதாட்டம் சிறந்தது எனப் பேச இயலுமா என காந்தி தன் பார்வையை வைத்தார்.டில்லி திரும்பியவுடனேயே கரியப்பா அவர்கள் காந்தியை சந்திக்க நேரில் சென்றார். காந்திக்கோ அன்று மெளன தினம். கால்ஷூவை வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்ற கரியப்பாவிற்கு இருக்கை ஒன்றைக் காட்டி காந்தி அமரச் சொன்னார். காந்தி தன் சர்க்கா வேலையில் இருந்தார். கரியப்பா காந்தி எதிரில் தரையில் அமர்ந்தார்.நான் உங்கள் அகிம்சை குறித்த பேச்சிற்கு பதில் எழுதியிருந்தேனே என பேப்பர் ஒன்றில் காந்தி எழுதி காட்டுகிறார். கரியப்பா முன்முறுவலுடன், என் போன்ற மிகச் சாதாரண ஒருவர் பேசியதையும் பொருட்படுத்தி அதற்கு தன் பதிலைத் தர மகாத்மா நேரம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி சொல்லவும், குழந்தைகளாகிய நாங்கள் எப்படி அறிந்துகொள்ளவேண்டும் என்பதைப் பெறவும் வந்ததாக கரியப்பா சொல்கிறார்.கரியப்பா இராணுவ வீரர்கள் குறித்த அற்புதமான புரிதலை காந்தி முன் வைக்கிறார். நாங்கள் சபிக்கப்பட்ட இனம். நீங்கள் கூட எங்களை வன்முறையாளர் எனக் கருதக்கூடும்.. உலகிலேயே போரை விரும்பாத கம்யூனிட்டி என்றால் இராணுவ வீரர்கள்தான். வீரர்களாக நாங்கள் யார் மீதும் போர் தொடுப்பதில்லை. மக்களுக்காக எனச் சொல்லப்படும் அரசாங்கங்கள்தான் , தங்களுக்கு இடையேயான தகராறுகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியாமல், போர் என பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கம் சொல்வதை உயிரை கொடுத்தாவது செய்யவேண்டிய கடமைக்காக நாங்கள் வீரர்களை பயிற்சிவிக்க வேண்டியுள்ளது. போரே கூடாது என்கிற அகிம்சையை விரும்பும் அரசாங்கங்களை மக்கள்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டால் வீரர்கள் ஏன் போர் வன்முறையில் இறங்கப்போகிறார்கள் என கரியப்பா விரிவாக தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.In democratic country soldiers do not initiate war..Governments என்கிற பதிலை தந்துவிட்டு , கரியப்பா காந்தியிடம் அறிவுரை ஒன்றை தனக்குத் தருமாறு வேண்டினார்.இரண்டுநாட்கள் கழிந்த பின்னர் முழு யூனிபார்ம் உடன் சென்று கரியப்பா காந்திக்கு சல்யூட் செய்தார். அப்போதும் தான் கேட்ட அறிவுரையை நினைவு படுத்தினார்.I ask you , please, to give me the ‘ child’s guide to knowledge’..tell me please, how can I put this over, that is the spirit of non violence to the troops..without endangering their sense of duty to train themselves well professionally as soldiers. I am a child in this. I want your guidance.கரியப்பா காந்தி முன் மிக நேர்மையாக துல்லியமாக தனக்கு வேண்டிய அறிவுரை ஒன்றை கேட்பதை காந்தி நன்றாக உணர்ந்தார். காந்தி எந்தவித தயக்கமும் இல்லாமல் தன் இயல்பான நேர்மை உண்மைத்தன்மையுடன் பதில் அளித்தார்.Yes you are all my children..I am a child too, but happen to be a bigger child. I have given more thought to this question..You asked me to tell you in a tangible concrete form..I am still groping in the dark for the answer. I will find and I will give it to you some day..எந்த இருட்டான சூழலிலும் இருட்டான கேள்விக்கும் வெளிச்சம் தரும் பதிலைக் காணவேண்டும், காணமுடியும் என்கிற நம்பிக்கையை காந்தி தன் உண்மையை நெருங்குதல் என்கிற பயிற்சியில் பெற்றிருந்தார். இதற்கான தேடலை செய்திட அவர் மனம் அலை பாய்ந்திருக்கும். ஆனால் அவரால் ஜன 30 1948க்கு பின்னர் உடல்ரீதியாக இருக்கவியலாமல் போனது. எந்த அகிம்சைக்கு அரசாங்கத்தின் இராணுவ வீரர்களுக்காக பதிலைத் தேடினாரோ , அந்த அகிம்சை வழியில் இறக்கவே அவர் விரும்பினார்.. துப்பாக்கி முனையால் அவர் தம் வாழ்வு வீழ்த்தப்பட்ட நாடகம் அரங்கேறியது.கரியப்பா போன்ற ஜெனரல்கள் காந்தி பேசிய இராணுவ நடைமுறைகளின் திவாலை உணர்ந்ததால் தான் வீரர்கள் போரை விரும்புவதில்லை..அரசாங்கம் விரும்புவதால் கடமை மட்டுமே ஆற்றுகிறார்கள் என காந்தியிடம் வாக்குமூலத்தை தந்தார். காந்தியை சாய்த்த அந்த குண்டு இன்று இராணுவ வலிமையான மஸ்குலர் பாரதம் என சிரித்துக்கொண்டு இருக்கிறது. கரியப்பாவின் கேள்விக்கான பதில் இன்னும் இருட்டில்தானா எவரிடமாவது அதற்கான சிறு காந்தி அகல் தெரிகிறதா.. கண்டால் சொல்லுங்களேன்-பட்டாபிராம்

ராமானுஜம்


நோக்கம் உயர்ந்ததாகவும் தெளிவானதாகவும் இருந்தால் வழிமுறைகள் என்னவாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

வாராக்கடனை வசூலிப்பது ஒரு பெரிய தொழில். நம் ஊரைப் போலே அமெரிக்காவிலும் கடனை வசூலிக்கும் ஏஜெண்ட்கள் ( Collectors)  ஏஜென்சிகள் ஏராளம். நம் ஊரைப் போன்றே அந்த ஏஜண்ட்களும் கடன் தவணை செலுத்த முடியாதவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் மிரட்டுவதும்தான் பெரும்பாலும் நடக்கும். ஏனெனில் அவர்கள் எவ்வளவு வசூலிக்கிறார்களோ அவ்வளவு கமிஷன் உண்டு. 

அப்படி ஒரு ஏஜெண்டாகச் சேர்ந்தவர்தான் Christina Ann Harbridge.  க்றிஸ்டினாவுக்கு அந்த வழிமுறைகள் ரொம்பவே உறுத்தலாக இருந்தன. ஏன் நாம் வாடிக்கையாளர்களிடம் இரக்கமாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு வசூலிக்கக் கூடாது என எண்ணினார் . சில வருடங்களுக்குப் பிறகு தானே ஒரு கடன் வசூலிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அப்படி தொடங்கிய ஒரு நிறுவனம் தான் Bridgeport Financial Limited. அந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோளே கடன் பாக்கி வைத்தவர்களிடம் கனிவாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  வசூலிக்கும் ஏஜெண்டுகள் எத்தனை அன்பாக நடந்து கொள்கிறார்கள் என பொதுமக்கள் பின்னூட்டம் தருகிறார்களோ அவ்வளவு கமிஷன்.

ஆரம்பத்தில் க்றிஸ்டினாவைப்பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். இதெல்லாம் பிரயோசனமில்லாத வழிகள் என்றனர்.

ஆனால் ஆச்சரியமான வகையில் அவரது நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்து சாதனை செய்தது. அது மட்டுமல்ல கடன் வாங்கிய நிறுவனங்களே கடன் பாக்கியைச் செலுத்தியவர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்தன. இது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாக இருந்தது.

நோக்கம் தெளிவாக இருந்தால் வழிமுறைகள் தானே பிறக்கும்.

- Simon Sinek எழுதிய Start with Why என்ற நூலில் படித்தது

- டாக்டர் ஜி ராமானுஜம்

உப்பைப் போல,ஒளியைப் போல,தவிர்க்க முடியாதது உன் இருப்பென்றுஅவர்கள் உணரும்போது, நீ அவ்விடம் விட்டு நகர்ந்துவெளியில் கலந்திருப்பாய்!~பிரிம்யா

மனதில் முளைத்த சிறகுகளின் வன்மைக்கு கனவுகளின் திசைகள் போதவில்லை ~ பிரான்சிஸ் கிருபா

Wednesday 28 February 2024

பார்னம்


பார்னம் விளைவு
*மணி

ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உள்ளது.

சிறுவயதில் கிளி ஜோசியம் பார்த்திருப்போம்.கிளி எடுத்துக் கொடுத்த சீட்டிற்கு அப்புறம் தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பாக்கெட் சைஸ் நோட்டினை எடுத்துப் படிப்பார் ஒரு தாத்தா. அதில் உள்ளவற்றை கேட்க கேட்க அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருப்போம்." எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் திறமையாய் முடிவெடுப்பதில் வல்லவர் நீங்க னு வார்த்தையை கேட்கும் போது வடிவேல் ஸ்டைலில் ஆமுங்க ஆமுங்க னு சொல்லுவோம். இவருக்கு எப்படி நம்மைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறது என நினைத்து எழுந்துபோவோம். 

கொஞ்சம் வளர்ந்த பிறகு நம் ராசி என்ன என தெரிந்தபிறகு.. அம்பது மீட்டர் தூரத்தில் இருந்தாலும் நம் ராசியை மட்டும் ஃபோகஸ் செய்து படிப்போம். அதிலும் அந்த முதல் வரி தான் க்ளாசிக்..
"பொறுமையும்  புத்திசாலித்தனமும் நிறைந்த ரிஷப ராசி நேயர்களே என்றால்.. நம்ம மனசு உடனே ஆஹா அச்சரா..நான் தான்னு மனசு உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடும்.சரி மற்ற ராசிகளையும் பார்க்கும்போது அதே போல் வேறு வரிகளில் ஆரம்பித்திருப்பார்கள்.இருந்தாலும் நம்மைப் பற்றி சொன்ன வரிகள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.

இதையெல்லாம் வேறு ஒருவர் முகத்துக்கு நேராக சொன்னால் அடப் போங்கனு போயிருவோம்.ஆனால் ஒரு புத்தகத்திலோ அல்லது செய்தியாக வந்த நிகழ்வை படிக்கும்போது நம்மை ஒப்பிட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைவதை கவனிச்சிருக்கீங்களா.
"உங்களிடம் உள்ள திறமைக்கு நீங்க இந்த ஆபிசில் இருக்க வேண்டியவ ஆளே இல்லை எனச்சொல்லும் போது ஷோல்டரை தூக்கி மார்பை விரிந்த நிலையில் வைத்திருப்போம் இல்லையா....

அடுத்தவர் உங்களை பார்த்து எப்படி எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கீங்கனு எதெச்சையா கேட்கும்போது மனசுக்குள்ள அப்பிடியே ஏ.சி போட்டது போல் இருக்கும்.

#பார்னம் விளைவு.

உளவியல் ரீதியில் இதற்கு 
பார்னம் விளைவு (Barnum effect) என்று பெயர். பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய விஷயங்களை, பொதுவான சில ஆளுமை பண்புகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவதாக இருக்குமாம்.
இது ஜோதிடம், வருடாந்திர பலன், மற்றும் கிரக பெயர்ச்சி பலன்களில் பார்த்திருக்கலாம்.

1948 ஆம் ஆண்டில், ஒரு "கிளாசிக் பரிசோதனை" என்று விவரிக்கப்பட்டுள்ள நிலையில்,  உளவியலாளர் பெர்ட்ராம் ஆர். ஃபோரர் ஒரு உளவியல் பரிசோதனையை வழங்கினார் - அதில் 
ஒரு ஓவியம் கொடுத்து பரிசோதித்ததில் அனைவரும் ஒன்றே போல் பதிலளித்தனராம்.இது ஃபோரெர் விளைவு (Forer effect) என்றும் அழைக்கப்படுகிறது

அதன் முடிவில் ஆழ் மட்டத்தில், மனம் நம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. நனவான மட்டத்தில் இருக்கும்போது, ​​அது எதிர்மறையில் கவனம் செலுத்துகிறது. நம்மிடமுள்ள நேர்மறை எண்ணங்களை எப்போதும் நினைவில் வைத்திருத்தல் அல்லது நம்மிடம் ஒருவர் பாசிட்டிவ் விஷயத்தை சொல்லும் போது உடனே ஒப்புக்கொள்ளுதல் போன்றவைகளால் இது சாத்தியமாகிறது.

பொதுவான போக்கினை கூறினாலும்
மனிதன் தம் அகநிலையை சரிபார்த்து தன் குணாதிசியத்தை பொருத்திப் பார்க்க முயன்று அதில் வெற்றியடைகிறான்.
உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.சில நேரங்களில் சோம்பலாய் இருப்பீர்கள்.இதில் "சிலநேரங்களில்"என்பது அனைவருக்குமே பொருந்தும். இந்த மாதிரி இடத்தில் தான் அனைவரும் ஒத்துப் போகிறோம்.இது ஒரு வகையில் நன்மையே. இதன் மூலம் நேர்மறை எண்ணத்தை நினைவு படுத்தி அதனை தொடர் வைக்கிறது.

#பலரும் தம்மையே குறிப்பதாகக் கருதிக்கொள்ளக்கூடிய விஷயங்கள் என உள்ளன.

*நீங்க வாழ்க்கையில் படாத கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பீங்க

*நீங்க பார்த்தா சட்டுனு பேசமாட்டீங்க
ஆனா பேச ஆரம்பித்தால் கலகல டைப்

*நீங்க எல்லோரையும் நம்புவதால் உங்களை எளிதில் ஏமாற்றுவிடுவார்கள்

*எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்வதில் அலாதி ஆர்வம்

*புதுமையான விஷயத்தை கற்றுக்கொள்ள ரொம்ப மெனக்கெடுவீங்க

*நீங்க முன்னேறுவது உங்களை சுற்றியுள்ளவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது.இருந்தாலும் உங்க திறமையால் அடுத்தடுத்த இடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்

*சவாலையெல்லாம் சர்பத் குடிப்பது
போல் உங்களுக்கு

*நீங்க பொதுவா யாரையும் எளிதில் நம்பமாட்டீங்க.நம்பி விட்டால் அப்புறம் கடைசி வரை கன்டினியூ பன்னுவீங்க

இப்படியெல்லாம் படிக்கும்போது இந்த அறிகுறி எல்லாம் நமக்கு இருக்குனு நினைப்போமே அதுதான் பார்னம் விளைவு.

பாபநாசம் படத்தில் பெண் போலிஸ் அதிகாரி சொல்வது போல் ஒரு வசனம் வரும்."ஒரு சினிமாவில் ஒரு நல்ல சீன் வந்தால் அது மட்டும் நினைவில் இருக்கும் மத்த எல்லா சீனையும் மற்ந்திருவோம் னு.அது போல் நம்மை பற்றி ஒருவிசயம் சொல்லப்பட்டாலும் அந்த ஒரு விஷயம் பிடித்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் நம்புகிறோம். 
எதிர்மறையாய் சொன்னால் நம்பமாட்டோம்.அதனால்தான் 
ஜோசியரின் மீதுதான் நம்பிக்கை குறைகிறதே தவிர..
ஜோசியத்தின்  மீது நம்பிக்கை குறைவதே இல்லை.

#உஷார்

பொதுவாக நம்பிக்கை சார்ந்த எதையும் புரிய வைப்பது கடினம்.ஆனால் அந்த நம்பிக்கையை மூலதனமாய் வைத்து ஒருவர் ஏமாற்றும்போது நாம் உஷாராய் இருக்க வேண்டும்.பத்து விஷயம் சொன்னதில் மூன்று ஒத்துப்போய்விட்டால் பதினொன்றாவது விஷயத்தை அவர் எப்படி கூறினாலும் நம்பகூடாது. சுயபரிசோதனை செய்துபார்க்கனும்.ஓஷோ கூறுவார் 
நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய்
இல்லையெனில் மற்றவைகளோடு ஒப்பிட்டு வேதனை அடைவாய் னு சொல்வார். உண்மையில் மற்றவர்களை விட நாம் ஒரு படி மேல் என்ற எண்ணம் உள்ளூர அனைவருக்கும் உள்ளது. இதை பயன்படுத்தி சொல்லும்போது எளிதில் வீழ்ந்துவிடுகிறோம்.ஆகவே நேர்மறை எண்ணதுக்காக இதனையெல்லாம் நம்புவோம். ஏமாற்றும்போது விழிப்புணர்வோடு இருப்போம்

-மணிகண்ட பிரபு