Monday, 2 March 2026

கோ கமலக்கண்ணன்


வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களின்போது ‘நானும் மனிதன்தான்’ என்று அகத்துக்குள் நினைத்துக்கொள்வதற்கு ஒரு பொருள் உண்டு. நானும் பிழை செய்யக் கூடியவனே ஆனால் பிழையை ஏற்று முன்னகரும் ஆற்றலும் என்னுள் உண்டு என்பது ஒரு பார்வை. குற்ற உணர்வு கொண்டு அங்கிருந்து எழுந்து ஊக்கம் பெற்று சக மனிதன் மீது கருணை கொள்வது. 

ஆனால் பொதுவாக மக்களைப் பாருங்கள். தனது பிறழ்வைப் பிறர் முன் நியாயப்படுத்தவே பெரும்பாலும் ‘நானும் மனுசன்தானே’ என்பார்கள். அதாவது உணர மாட்டார்கள், அலுத்துக்கொள்வார்கள். லஞ்சம், , திருட்டு, கொலை பாதகங்கள் அனைத்தையும் தன்பொருட்டு செய்துவிட்டு ‘நானும் மனிதன் தானே’ என்று அங்கலாய்ப்பார்கள். 

அதற்கு ‘நானும் மூடர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளத்தான் விரும்புகிறேன். அறமெல்லாம் ஒரு ஓரமாக இருக்கட்டும். அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் மதிப்பில்லை’ என்பதுதான் பொருள். 

எப்போது பார்த்தாலும் ‘அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்’ என்று சொல்லிக்கொண்டே திரிவது ஒரு வித மனநோய். அத்தகையோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்லர், மனிதப் பதர்கள். 

முதுமையில் கனிந்தால் பிறருக்கு இனிப்பைத் தர முடியும். கனிவு என்பது தளர்வு அல்ல. ஊக்கத்தால் எய்தக் கூடிய மேன்மை நிலை. மாறாக தன் தீங்குகளை வாதத்தால் தக்க வைத்தபடி இறுகிக் கொண்டே போனால் முதுமை பாறையாகத்தான் முடியும்.  அத்தகைய அக ஊக்கம் அற்றோரையே நடமாடும் மரங்கள் என்கிறார் வள்ளுவர்.

-கோ.கமலக்கண்ணன்

Sunday, 1 March 2026

tea-21


#மனசுக்கு_ஒரு_தேநீர்_21

“சிஸோகூ” (Chisoku) புத்தமதத்தில் வரும் ஒரு முக்கியமான வாழ்வியல் கோட்பாடு. இதன் பொருள்:
“கிடைத்ததிலே திருப்தி கொள்” அல்லது “மனநிறைவு அறிந்து வாழ்” என்பதாகும்.

புத்தமதம் கூறுவது:
ஆசை குறைந்தால் மனம் அமைதியாகும்;
திருப்தி வந்தால் வாழ்க்கை நிறைவாகும்.

சாலையில் யாரோ கோபத்தைத் தூண்டினால், அந்தத் தூண்டுதல் (contact) கோபத்தை (feeling → craving) உருவாக்கும். ஆனால், புன்னகைத்து "இது தற்காலிகம்" என ஞானத்தால் கோபத்தின் சங்கிலியை நிறுத்தினால், சிசோகூ நிகழ்கிறது.

மனித வாழ்க்கையின் பெரும்பாலான துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் “இன்னும் வேண்டும்” என்ற முடிவில்லா ஆசை. இதற்கு எதிர்மறையான மருந்தாக புத்தமதம் முன்வைக்கும் முக்கிய வாழ்வியல் நெறி தான் சிஸோகூ கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் அறிவு. அதிகம் சேர்ப்பது வாழ்க்கை இலக்கு அல்ல.மனநிறைவு தான் உண்மையான செல்வம்

சிஸோகூ என்பது வறுமையை ஏற்க வேண்டும் என்பதல்ல;
அது ஆசைக்கு எல்லை வைப்பதன் மூலம் மன அமைதி பெறும் அறிவு.

மனிதன் எவ்வளவு பெற்றாலும் இன்னும் வேண்டும் என்று நினைத்தால்
அவன் எப்போதும் குறைவாகவே உணர்வான்.
ஆனால் கிடைத்ததை உணர்ந்து நன்றி கொண்டால்,
அவனுக்குள் நிறைவு தோன்றும்.
“He who knows that enough is enough will always have enough.” — Lao Tzu
இது சிஸோகூவின் நேரடி தத்துவ வடிவம்.

Chisoku is not having less; it is realizing you already have enough.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு