கோலப்பொடி
Saturday, 13 December 2025
உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.-சிவராஜ்
ஜானகிராம்
ஒசோஜி (大掃除)
ஒசோஜி என்பது ஜப்பானிய சமூகத்தில் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் முறை. “முழுமையான சுத்தம்” என்று அர்த்தம். நாம போகி, ஆயுத பூஜைக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்வது போல, புத்தாண்டுக்கு முன்பு ஒசோஜி என்ற பழக்கத்தை வீட்டையும் தாம் வாழும் சுற்றுச்சூழலையும் ஜப்பானியர்கள் சுத்தம் செய்கிறார்கள். இதன் சிறப்பம்சம், இது வெறும் வீட்டை அல்லது இடத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்ல. இந்த செயலை ஒரு தியானம் போல செய்யப்படுகிறது. ஒசோஜி, மனதில் தேங்கி நிற்கும் தேவையற்ற சுமைகள், கவலைகள், பயங்கள் மற்றும் பழைய பிடிப்புகளை சுத்தம் செய்யும் ஒரு நடைமுறையாகக் கருதப்படுகிறது.
வீட்டில் தூசி மெதுவாக சேர்வதைப் போல, மனதிலும் கவலை, கோபம், ஒப்பீடு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்றவை நம்மையறியாமல் சேர்ந்து விடுகின்றன. ஒசோஜியின் போது, நாம் நம்மை உள்ளார்ந்து பார்க்கவும், நமது சுமைகளை உணரவும், அவற்றை சுத்தம் செய்து விடுவிக்கவும் கற்றுத் தருகிறது. உடலை சுத்தம் செய்வது போல், மனதை சுத்தம் செய்வதும் அவசியம்.
பயனில்லாத எண்ணங்களை விட்டுவிடுதல், கடந்த கால குற்றவுணர்வுகளை மன்னித்தல், கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுதல், இன்றைய நிமிடத்தில் வாழ்தல் ஆகியவை சார்ந்த முயற்சிகளை எடுக்கவேண்டும். இந்த நடைமுறையில், மன சுத்தம் என்பது போராட்டமல்ல; அது விடுதலை. வெறுமை என்பது இழப்பு அல்ல; அது புதிய தெளிவுக்கான வாய்ப்பு என மாறுகிறது. அமைதி என்பது எதையாவது சேர்ப்பதில் இல்லை; தேவையற்றதை விட்டு விலகுவதில் உள்ளது என்ற செய்தியை ஒசோஜி நமக்குக் கற்றுத் தருகிறது.
அடுத்த மாத போகிப் பண்டிகையை ஒசோஜி ஆக்குவோம்.
Friday, 12 December 2025
ஜானகிராமன் நாபலூர்
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 01
"எதுவும் செய்யாமல்
அமைதியாக அமர்ந்திருங்கள்...
வசந்த காலம் தானாக வருகிறது,
புல் தானாகவே வளர்கிறது."
ஜப்பானிய ஜென் ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் இந்த ஹைக்கூக் கவிதை நமக்கு ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது:
1. எல்லாம் அதற்கான நேரத்தில் நடக்கும்:
நாம் பல நேரங்களில் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்காக அவசரப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு வேகம் உள்ளது. எப்படி வசந்த காலத்தை நம்மால் நாம் நினைத்த போது இழுத்துக்கொண்டு வர முடியாதோ, அதே போல வாழ்க்கையின் மாற்றங்களையும் நம்மால் நினைத்த நேரத்தில் ஏற்படுத்த முடியாது. உரிய நேரம் வரும்போது நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கும்.
2. அமைதியே வலிமை:
"எதுவும் செய்யாமல் இருப்பது" என்பது சோம்பேறித்தனம் அல்ல. இது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, பதற்றம் இல்லாமல் இருக்கும் நிலை. பல சமயங்களில் நமது பிரச்சனைக்கான தீர்வு, நாம் அதிகமாக முயற்சி செய்வதை விட, அமைதியாக இருந்து சூழலை கவனித்தாலே கிடைக்கக்கூடும்.
3. இயற்கையின் இயக்கத்தில் நம்பிக்கை வைத்தல்:
புல் வளர்வதற்கு நாம் அதைப் பிடித்து மேலே இழுக்க வேண்டியதில்லை அப்படி செய்தால் புல் தனியே பிடுங்கிக் கொண்டு வந்துவிடும். புல் தானாகவே வளர்கிறது. எல்லாவற்றையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. இயற்கையின் அல்லது இறைவனின் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தால் போதுமானது.
ஆக, மனஅமைதி எங்கிருக்கிறதோ அங்கு வளர்ச்சி இயல்பாக நிகழும்.
தும்பி
உலகின் சிறந்த கல்வி எது?
நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து, எவ்வளவோ தேர்வுகளை எழுதி, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் எது மறக்கடிக்கிறதோ அதுவே சிறந்த கல்வி என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.
இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா? வள்ளுவர், ஷேக்ஸ்பியர், மார்க்ஸ், சாக்ரடீஸ், கன்ஃபூஷியஸ், கபீர், தாகூர் என்று நான் விரும்பிப் படிக்கும் அனைவரையும் மறக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் அவர்கள் சொல்லிருப்பவை தவறு என்கிறீர்களா?
இப்படிக் கேட்டால் நம் கையைப் பிடித்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பூந்தொட்டி ஒன்றைக் காட்டுகிறார் ஜேகே. நீங்கள் நிறைய படிப்பவர் போலிருக்கிறது.
இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஓ, இது கூடவா தெரியாது எனக்கு? இந்த ரோஜாவை மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ வகை ரோஜாக்களை எல்லாம் கண்டிருக்கிறேனாக்கும். அயல் நாடுகளில் மட்டுமே பூக்கும் அரிய ரோஜாவைக்கூடப் பார்த்திருக்கிறேன். சட்டென்று ஷேக்ஸ்பியர் நினைவுக்கு வருகிறார்.
அது சரி, நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்கிறார் ஜேகே. இந்த எளிய ரோஜாவைப் பார்த்து ரசிக்கக்கூட உங்கள் கல்வி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த ரோஜா இன்று காலைதான் மலர்ந்திருக்கிறது. முதல் முறையாக இந்த மலர் நம் உலகுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
முதல் முறையாகக் காற்றை எதிர்கொண்டு மெல்ல மெல்ல அசைந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்த ரோஜாவை எப்படி இதற்கு முன்பு கண்டிருக்க முடியும்? எப்படி இதைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்க முடியும்? எப்படி இதை ஷேக்ஸ்பியரோ வேறு ஒருவரோ கண்டு எழுதியிருக்க முடியும்?
ஒரு மலரைப் பார்க்கும்போது இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஏற்கனெவே படித்திருக்கிறோம், ஏற்கெனவே ரசித்து முடித்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்றால் அதை உங்கள் கல்வியின் குறை என்பேன்.
உங்களுக்கான வழிகாட்டுதலை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்ஃபூஷியஸால் எப்படித் துல்லியமாக அளித்திருக்க முடியும்? என் மனிதர்கள் மதத்தின் பெயரால் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்னும் கபீரின் கேள்விதான் அவர் பாடலாக மாறியது. என் மனிதர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும் என்னும் மார்க்சின் சிந்தனைதான் அவர் எழுத்தாக விரிந்தது.
உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.
உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.
மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.
உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, ‘நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்’ என்று புன்னகை செய்யும்.
முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். ‘உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்’ என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.
முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.
ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி. உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.
நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.
-மாய உலகம், மாயா பஜார்
Thursday, 11 December 2025
மனசுக்குள்.ஒரு ஜிம்
ஒரு துறையில் நிபுணராக பலருக்கும் தடையாக இருக்கும் விஷயங்கள் இரண்டு
1. இயல்பிலேயே எனக்கு அந்தத் திறமை கிடையாது . ( Natural Talent)
2. எனக்கு அதில் ஆர்வம் இல்லை ( Passion)
இரண்டுமே தவறான கருத்துகள்.
பிறவியிலேயே சிலருக்கு கவனிக்கும் திறன் ( ability to focus) குறைவாக இருக்கலாம். ஆனால் இந்த Birth disadvantage ஐ பயிற்சியின் மூலம் ஈடு கட்டிவிடலாம் என்பதுதான் உண்மை. பயிற்சி செய்ய செய்ய மூளை இணைப்புகள் வலுவடைகின்றன என்கின்றன
இரண்டாவதுதான் மிக முக்கியமான காரணம். எனக்கு Passion இல்லை எனப் பல விஷயங்களைச் செய்யாமல் விடுகிறோம். உண்மையில் பிறவித் திறமை போல் பிறவிப் Passion என்றும் எதுவும் கிடையாது. Passion என்பதும் முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டியதே. ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் அதில் உங்களுக்குத் திறமை வர ஆரம்பித்தால் அதில் உங்கள் Passion உம் வளரும்.
ஒரு துறையில் திறமை/ ஆர்வம் வரக் கொஞ்சம் காலம் ஆகும். Critical period.
இதை Valley of disappointment என்கிறார்கள். சில வருடங்கள் ஆகும்.அந்த காலகட்டத்தில் நமக்கே நம்மீது சந்தேகம் வரும். இதில் எனக்குத் திறமை இல்லை இது எனது Passion இல்லை, இது எனக்கானதில்லை என்றெல்லாம் விட்டு விடுவோம்.
ஆனால் அந்த காலகட்டத்தைப் பொறுமையாக கடந்தால் திறமை ஆர்வம் இரண்டும் வரும்.
Dont do anything without passion. But allow time for passion to develop.
Follow your passion - கனவுகளைப் பின் தொடருங்கள் என்பதை விட Foster a good passion - நல்ல கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
- இது Cal Newport என்னும் உளவியலாளரின் புகழ்பெற்ற வாசகம்.
மனசுக்குள் ஒரு ஜிம் நூலிலிருந்து
- டாக்டர் ஜி ராமானுஜம்
Wednesday, 10 December 2025
115
#Reading_Marathon2025
#25RM055
Book No:115/150+
Pages:-199
நாம் நார்மலாகத் தான் இருக்கிறோமா?
-சிவபாலன் இளஙகோவன்
மனநலத்துறையில் பேராசிரியராக பணிபுரியும் சிவபாலன் அவர்களின் எழுத்துக்களை முதன் முதலாக உயிர்மையில் ஒரு ஆன்மீக கட்டுரையில் தன் கருத்துக்கு விளக்கம் அளிப்பதை பற்றி எழுதியிருப்பார். அதனை படித்தது முதல் அவரின் அனைத்து புத்தகங்களையும் தேடித் தேடி வாசித்து விடுவேன். அந்த வகையில் இந்த புத்தகமும் வாசிப்பு அனுபவத்துக்கு நெருக்கமானது. பொதிவாக மனம் குறித்து பல புத்தகங்களும் இருந்தாலும் மருத்துவரகள் எழுதும் போது இன்னும் எளிமையாக புரியும்.
சண்டையோ பதட்டமோ இருக்கும் போது நாம் அனைவரும்.கேட்டு உறுதிப்படுத்துவது நார்மல் ஆகிட்டியா என்பது தான். அப்படி நார்மல் ஆவதற்கு ஏதேனும் வ்ரைமுறை உண்டா.. விரைவில் நார்மலாக ஏதேனும் பரிகாரம் இருக்குமா என நான் எப்போதும் எண்ணுவதுண்டு.அந்த வகையில் 45 கட்டுரைகளில் வேறு வேறு வித நார்மல், மனம்,உறவாடல், உணர்ச்சிகள் பற்றியெல்லாம் அலசியுள்ளார்.
இசை எங்கிருந்து வருதுனு கேட்பது போல் தான் மனம் எங்கிருக்கிறது, மனசே இல்லனு பல வசைகளை கேட்டிருப்போம்.இதில் மனம் குறித்தும்,சொல்லி..ஆராய்ச்சி யின் முடிவில் மனித மூளையின் இன்சுலா என்னும் பகுதிதான் மனம். அதுதான் சுய உணர்வுக்கான காரணம் என்கிறார்.
நார்மல் என்பது மாயை என்பதை விளக்க வரும் கட்ட்டுரையில் shutter island திரைப்படத்தை உதாரணமாக கூறியது சிறப்பு.மன ஆரோக்கியம் என்பது உணர்ச்சிகளை கடந்த நிலை அல்ல. இந்த உணர்ச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்வது என்கிறார்.சுருக்கமாக மன ஆரோக்கியம் என்பது பிரச்சினைகள் கண்டு விலகுவது அல்ல..பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது.
தன்னைப் பற்றி அறிதலில் மற்றவர்கள் பற்றி யூகிப்பதில் உள்ள ஆபத்தை விளக்குகிறார். முரண்பாடுகளை கலைய வேண்டுமென்றால், அதற்கு.முதலில் ந்ம்மை அறிந்து கொள்ள வேண்டும்.மார்க்கெட்டிங் துறையில் பிறர் மனதை கவரச் செய்யும் "இண்டர்பர்சனல் ஸ்கில்ஸ்" பற்றி இதில் சொல்லியுள்ளார்.
மனதின் உணர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் தேவை சார்ந்தும், முடிவு சார்ந்தும் நிகழும்.அப்போது அட்ரினல் சுரக்கிறது. இதுதான் அடுத்து செயல்படத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது.உணர்ச்சிகளை முதலில் உணர்ந்து பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.எமோசனல் இண்டலிஜென்ஸ் அதாவது உணர்ச்சிகளை அறிவுபூர்வமாக கையாளுவது பற்றி தெரிவிக்கிறது.
உண்மையில் ஸ்ட்ரெஸ் என்பது என்ன?
மனஉளைச்சல் என்பது ஒரு போராட்டம். நிஜ அல்லது கற்பனை எதிர்கொள்ள அல்லது அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமது யான ஒரு ஆபத்தை நாம் எதிர்கொள்ளும்போது, அந்த ஆபத்தை ஒட்டுமொத்த சக்தியையும் நாம் திரட்டிக் கொள்வதுதான் ஸ்ட்ரெஸ்
உதாரணத்திற்கு, சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம் திடீரெனெ ஒரு மாடு நம்மை முட்டிவிட வேகமாய் வருகிறது அப்போது நமக்கு எப்படி இருக்கும்? உடல் ரீதியாகவும், ம ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் நமக்குள் நடக்கும்? படபடம் பாய் இருக்கும். வியர்த்துப்போய்விடும். மூச்சு முட்டும். மனம் பதட்டமாய் இருக்கும். நம் கவனம் முழுவதும் அந்த மாட்டின்மீகண் அதில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றியும்தான் இருக்கும். இதுதான் ஸ்ட்ரெஸ்.
நாம் ஒரு ஆபத்தில் இருக்கும்போதோ அல்லது அதை எதிர்நோக்கி இருக்கும்போதோ, நமது மூளை தன்னிச்சையாகச் செயல்பட்டு அட்ரினலின் முதலான ஹார்மோன்களை நமக்குள் சுரக்க வைத்து ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஆற்றலை வைத்துக்கொண்டுதான் நமது உடல் ஆபத்தோடு போராடுகிறது.எல்லா வகையான ஆபத்துகளும் இந்த ஸ்ட்ரெஸை உண்டு பண்ணுமா என்றால், இல்லை. நாம் எதை ஆபத்தாகப் பார்க்கிறோமோ அப்போதுதான் இந்த ஸ்ட்ரெஸ் வருகிறது.
*மனம் ஒரு ஊற்று போல ஏராளமான எண்ணங்களை அது சுரந்து கொண்டே இருக்கும்
*அறிவியலிடம் கேட்பது மிகச் சிக்கலான ஒரு கேள்வியை, ஆனால், எதிர்பார்ப்பது மிகச் சுலபமான பதிலை.. மனம் அத்தனை சுலபமானதல்ல
*சகமனிதர்களிடம் நாம் மேற்கொள்ளும் உள்ளார்ந்த தன்னலமற்ற உறவாடல்தான்.. ஒரு ஆரோக்கியமான மனதிற்கு அடையாளம்
*எண்ணங்களை அழிப்பதற்கு
இன்னும் எந்தஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை
*ஒரு எளிமையான, எதிர்னார்ப்பு இல்லாத உறவாடலில் எப்போதும் ஏமாற்றத்திற்கு இடமில்லை
*ஒரு நல்ல உரையாடல் பல விவாதங்களுக்கு தொடக்க புள்ளி.நமது கருத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது உரையாடலின் நோக்கமல்ல
*ஒவ்வொரு இழப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது.அதுமட்டுமே எல்லா இழப்புகளையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது.
இவ்வாறு மனித மனம் குறித்த பல்வேறு தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரகட்டுரையும் அதிக ஆழ்ம் பொதிந்தவையாக அர்த்தமுடனும் இருக்கின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 8 December 2025
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும் தான்.அதுவும் சலனம் எதுவும் இன்றி . இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும்,நான் அந்த விரிதலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.-வண்ணதாசன்
Saturday, 6 December 2025
114
#Reading_Marathon2025
#25RM055
Book No:114/150+
Pages:-153
மலரும் அறிவியல்
-ப.செங்குட்டுவன்
அறிவியல் குறித்த செய்திகளைத் தேடிச் செல்லும் போது வியப்பளிக்கும் பல்வேறு உண்மைகளை நாம் அறிய முடிகிறது. அவ்வாறு அறியும் போது..நாம் இத்தனை காலம் உன்மையென நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கையில் ஒரு சிறு கல் விழும்.மூட நம்பிக்கைகளை விரட்டி அடிக்கும். இத்தனை காலம் நாம் நம்பும் விஷயங்களை மீள் உருவாக்கம் நம் மனதில் செய்ய வேண்டியிருக்கும் அவ்வாறு எளிமையாக விளக்கும் வகையில் இந்த நூல் பதினொரு கட்டுரைகள் உள்ளன.
பிரபஞ்சம் குறித்த கருத்துகளைமுன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரை முதலாவதாக உள்ளது. பிரபஞசத்தின் வரலாறு குறித்த தகவல்களை ஐன்ஸ்டீன், நியூட்டனின் விதிகளின் படி விளக்கியுள்ளார்.ஒரு பொருள் மிக அதிகவேகத்தில் பயணம்செய்யும் போது அது செல்லும் திசைவழியே அதன் நீளம் குறைகிறது. நீள் வட்டத்தில் பயணித்தால் முன்முனையிலிருந்து நீளம் குறையும், செங்கோண வாட்டத்தில் பயணித்தால் செங்கோன வாட்டத்திலேயே குறையும் என்றார் ஐன்ஸ்டீன். மேலும் அவரின் ஒளி, வேகம்,நேரம் பற்றிய கோட்பாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்.
சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டின் செய்முறை மூலம் கண்டுபிடிக்கவில்லை; விளக்கவில்லை. இயற்கை இப்படித்தான் இருக்கும் என்ற ஆழ்ந்த சிந்தனை மூலமாகவே கண்டுபிடித்தார். கணக்கியல் மூலம் கண்டுபிடித்தார். அவரின் மூளையே, எண்ணங்களே செய்முறை ஆய்வகங்களாயின - Thought Experments - அவரின் மூளை உயர் அறிவியல் எண்ணங்கள், கருத்துக்கள் மலரும் சோலையாகும்.
"ஒரு முறை சிலர் ஐன்ஸ்டிடம் அவரின் ஆய்வகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டனர். உடனே தன் பவுண்டன் பேனாவை எடுத்து வைத்து இதுதான் என் ஆய்வகம் (There it is) என்றார். வேறொருமுறை எழுதி இனித் தேவையில்லை என்று கசக்கிப் போடும் பேப்பர் கூடையைக் காட்டி waste paper pocket) இதில்தான் என்னுடைய முக்கிய ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன" என்றார்.
அவர் எழுதிய முக்கிய கருத்துகள், கணக்குகள், தீர்வுகள் ஆகியவற்றை குப்பைக் (வேஸ்ட் பேப்பர்) கூடையில்தான் போடுவார்.அவர் எப்போதும் மாறுபட்டு சிந்திப்பார்
ஒளிச்சிதறல் பற்றிய கட்டுரையில் தொடர்ந்தாற் போல் மாறி மாறி கருப்பு வெள்ளைக் கோடுகள் ஏற்படுதலில் நியூட்டன் மற்றும் யங் கோட்பாடுகளை விளக்கியிருப்பார்.
விண்மீன்கள் தனித்தனியாகத் தோன்றுவதில்லை; கூட்டமாக உண்டாகின்றன.
விண்மீன்களுக்கு இடையேயுள்ள விண்வெளி ஹைட்ரஜன் வாயு தூசி (dust) ஆகிய மேகங்களால் (clouds) நிரம்பியுள்ளது. இந்த வாயு மேகங்கள் தங்களுக்குரிய ஒளியை வெளியிடுகின்றன. வானில் இவை பனிமூட்டங்கள் மேகங்கள் (Mist-clouds) போன்று தோற்றமளிப்பதால் இவற்றை நெபுலாக்கள் (Nebulae) என்றழைக்கின்றனர். நெபுலா என்ற இலத்தீன் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது மேகம் என்று பெயர்.
இந்த ஹைட்ரஜன் வாயுவும், தூசியும் தொடக்கக் காலத்தில் உண்டாகிய பழைய விண்மீன்களுக்கு இடையே இருக்கின்றன. இந்த வாயு, தூசி நெபுலாக்கள் ஆகியவற்றிலிருந்து தான் விண்மீன் பிறக்கின்றது. விண்வெளியில் இத்தகைய நெபுலாக்கள் பெருமளவில் இருக்கின்றன. நெபுலாக்கள் என்பவை பெரிய விண்மீன்களிலிருந்து வெளியே தள்ளப்பட்ட - தனியாகித் தள்ளப்பட்ட - வெளிப்பரப்பு களினாலும் நெடுங் காலத்திற்கு முன்னிருந்த பெரிய விண்மீன்களின் அழிவில் எஞ்சிய சிதைவுகளாலும் ஏற்பட்டவையே ஆகும் என்கிறார்
மேலும் ஹீலியம் எவ்வாறு உண்டாகிறது என்பது பற்றியும்,பெருவெடிப்பு, ஸ்டெடி ஸ்டேட் தியரி பற்றுயும் கூறியுள்ளார்.
கோலமிடும்பொழுது புள்ளிகளை வைத்து கோடுகளால் புள்ளிகளை இணைத்து பலவகை உருவங்களை (Shape) அமைக்கின்றனர். கோலங்களில் மான், மயில், வாத்து, மாடு. தேர் போன்றவற்றின் உருவங்களைக் காணலாம்.
அவ்வாறே, விண்வெளியிலுள்ள விண்மீன்களைப் புள்ளிகளாக்கி அவற்றை கோடுகளால் இணைத்து உருவத்தை உண்டாக்கி ஆடு, மாடு. மீன், பெருங்கரடி என்பன போன்றவற்றை உண்டாக்கிப் பெயரிட்டனர் நமது முன்னோர்கள். அவை அனைத்தும் கற்பனை உருவங்களே, கற்பனைப் பெயர்களே.
ஆக. நமது முன்னோர்கள் கற்பனையாக விண்மீன்களைக் கோடுகளால் ஏட்டில் இணைத்து அமைத்த உருவங்களே நமது ராசிகளாகும். கற்பனையில் உருவானவற்றை வைத்துக்கொண்டுதான் நாம் ராசிபலன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கற்பனையாக உருவாக்கப்பட்ட விண்மீன்களின் உருவங்களில் ராசிகளில் நம் வாழ்க்கையில் வலிந்து பிணைந்து விடப்பட்டவை மேஷம்,ரிஷபம் ராசி உள்ளிட்ட பன்னிரண்டு ஆகும்.
மேலும் பிரபஞசத்தில் உள்ள கோள்கள், காற்று மண்டலம்,விண்கல், எரிகல், நட்சத்திரம், கதிர்கள் குறித்த அறிவியல் தகவல்களும் மிக எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 3 December 2025
நாம் ஒன்றை தேர்வுசெய்தாகவேண்டும். ஒரே இருக்கையில்தான் நாம் இருந்தாக வேண்டும். அது நம் பருவுடல் நமக்கு போடும் நிபந்தனை. நாம் இந்த புரோட்டீன் கட்டிடத்திற்குள் சிறையுண்டிருக்கிறோம்.மனிதர்கள் கால்களால், மீன்கள் செதில்களால், பறவைகள் சிறகுகளால் கட்டுண்டிருக்கின்றன!நினைவிருக்கிறதா, சின்னஞ்சிறு வயதில் மேகங்களை பார்த்து எப்படி ஏங்கியிருப்போம், பறப்பதற்கு! மலையுச்சிகளின் மாயத்தனிமையில் நிற்க கண்ணீருடன் மனம் விம்மியிருப்போம். பிறகு நாம் கற்றுக் கொண்டோம், கற்பது கைமண்ணளவு என்று.மனிதனின் இந்த ஆதிச்சிறையின் சுவரில் ஒரு சிறிய ஓட்டை. அதன் வழியாக அவன் கண் வெளியே போக முடியாது, ஆனால் காட்சி வெளியே போகமுடியும். கருத்து வடிவில் அவன்கிளம்பி உலகமெங்கும் உலவ முடியும். விட்டுவிடுதலையாக முடியும். ஆம், அவனால் அப்போது இரண்டல்ல இரண்டாயிரம் இருக்கைகளில் அமர முடியும்!-யதி
Tuesday, 2 December 2025
Saturday, 29 November 2025
Sunday, 23 November 2025
மகுடேசுவரன்
இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான்.
ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும்.
ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :-
இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம்.
மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம்.
00
கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை.
கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர்.
00
அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது.
உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார்.
00
இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது.
பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது.
00
உழவர்க்கு உழவு தொழிலாகும்.
உயிர்காப்பது உழவுத்தொழில்.
00
நீ எடுத்த காட்சி பிழையானது.
என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ?
00
அன்பு தளையாகக்கூடாது.
அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை.
00
கிளி பேசும்.
கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை.
00
மழை காலந்தவறிப் பெய்கிறது.
மழைக்காலம் வந்துவிட்டது.
00
வளர்ச்சி தடைபடைக்கூடாது.
வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்.
00
இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம்.
- கவிஞர் மகுடேசுவரன்
112
#Reading_Marathon2025
#25RM055
Book No:112/150+
Pages:-190
#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்
ஆலவாயன்
-பெருமாள்.முருகன்
மாதொரு பாகனின் தொடர்ச்சியாக இந்நாவல் அமைந்துள்ளது.கிராமத்தில்.குழந்தை பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியாக காளியும் பொன்னாவும் இருக்கின்றனர்.
கதையின் ஆரம்பத்தில் காளி அந்தப் பூவரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவைத் தேர்ந்து..எதனால் அவன் இறந்தான் என அதன் வழியில் பயணிக்கிறது.
காளி இறந்தபின் அவன் மனைவி பொன்னா விற்கு சுற்றி இருக்கும் நபர்களின் பேச்சு மற்றும் காளியின் நினைவுடன் நாவல் துவங்கி செல்கிறது.பொன்னாவின் தாயாரும் மாமியார் மாராயியும் பொன்னாவை கவனித்துக் கொள்கின்றனர். குழந்தை இல்லாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான் என ஊரில் பேசுகின்றனர்."கஷ்டம் வரும்போதுதான் யார் யார் நமக்கு இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கஷ்டம் ஆதரவைக் காட்டித் தருகிறது. வருடும் கைகளின் இதத்தை உணர்த்துகிறது. சொற்களின் மதிப்பைப் புரிய வைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது. வருசக்கணக்காய்ப் பேசாமல் இருந்தவள் பவளாயி. இப்போது அம்மாவிடம்கூடக் கிடைக்காத ஆறுதலை அவளிடம் பெற்றாள் பொன்னா.
ஒரு இறப்பு போகப் போக கதையாகிவிடுகிறது.
கரட்டூர்த் தேர்திருவிழா துவங்குகிறது. 14 நாட்கள் நடைபெறும்.குழந்தை பேறு இல்லாதவர்கள் அத்திருவிழாவில் கலந்து கொள்வர்.இரண்டு ஆண்டுக்கு பின் பொன்னாவும் செல்கிறாள். காளிக்கு இது தெரியாது. அவன் சொன்னதாக சொல்லி அனுப்பிவிடுகின்றனர். பொன்னாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை.மாமியாரின் வலியுறுத்தலும் வேண்டுதலும் சொல்லப்பட்டிருக்கிறது.
மிக விரும்பிய மனைவி தன்னை ஏமாற்றியதைத் தாள இயலாமல் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியே காளி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.அன்று இரவு இதை அறிந்துதான் காளி தூக்கிலிட்டு தொங்கினான்.
அதிகாலையில் வீட்டுக்கு வரும் மாராயிதான் தன் பிள்ளையை முதலில் பார்த்து பதறுகிறாள்.
இதை அறிந்து அழுதுகொண்டு பொன்னா ஓடிவருகிறாள்.கதை நான் லீனியர் முறையில் இன்றும் அன்றும் என சொல்லப்படுகிறது. கணவனை இழந்து வாடும் பொன்னா சந்திக்கும் நிகழ்வுகள், கிராமத்து மக்களின் நம்பிக்கைகள், அன்றாட செயல்கள் ஆகியவை சொல்லப்படுகிறது.
கணவனின் நினைவாக காட்டில் கத்தரி செடி நடுகிறாள்.கணவன் இழந்தபின் அழுதுகொண்டு இருக்காமல் காட்டு வேலைக்கு செல்கிறாள்.மாமியார் மாராயிக்கு இது ஒரு ஊக்கம் தருகிறது.
பெருமாள் முருகன் கிராமத்தின் வேளாண் முறைகள் மற்றும் விவசாய வேலை பற்றிய நுண்ணிய குறிப்புகளை கொடுத்திருப்பார். அதன் பின் பொன்னா கருவுற்றிருப்பது தெரிகிறது. இந்த சேதி அறிந்தவுடன் மாமியார்.. காளியே தனக்கு வந்து பிறப்பதாக ஊருக்குள் சொல்கிறாள். தவறாய் பேசுவோரை திட்டுகிறாள்.
இடையிடையே குடும்ப உறவுகள் பற்றிய செய்திகளும், பொன்னாவுக்கு ஆதரவாய் இருக்கும் மாராயி,வெங்காயி,நல்லாயின் துணையும் நாவலில் விளக்கப்பட்டிருக்கிறது.பாட்டிகளின் உரையாடலில் கிராமத்து வாழ்வியல் நமக்கும் தருகிறது.
நாவால் முழுவதும் பெண்ணின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் உளவியல் பற்றியும் கூறியுள்ளார். மாதொருபாகனின் அடுத்தடுத்த க்ளைமேக்ஸ் நிகழ்வாக இக்கதை அமைந்திருக்கிறது. நாவலுக்கு வலுசேர்க்கும் விதத்தில் வேலாயின் கிளைக்கதையும் உதவுகிறது.
கிராமத்து மொழிகள் அனைத்தும் பழமொழியும், விடுகதையும்,மூத்தோர் சொல் தத்திவமும் சொல்வது புதுமையாகவும் அழகியலுடனும் இருக்கிறது. உதாரணத்திற்கு
"எல்லாக் கஷ்டங்களையும் பேச்சில் கரைத்துக் கொள்வார்கள்"
"ஆட்டுக்கு வால அளந்து வெச்சிருக்கறான். எருமைக்கு ஏன் நீளமா வெச்சிருக்கிறான்? மல்லையும் சாணியையும் கொழப்பித் தம்மேல தானே அடிச்சிக்கத்தான்' " என சொல்வது நன்று.
ஒவ்வொரு பாகம் முடியும் போது பூவரச மரத்தை குறிப்பிடுவார். அது காளி குறித்த எண்ணத்தையும் நமக்கு சொல்கிறது.
நாவலின் தலைப்புதான் கதைக்கரு. அந்த கதையின் முடிவு கடைசி பத்துப் பக்கம் விரிகிறது.
சர்சைக்குரிய கருத்து இருந்தாலும் நாவலின் எந்த இடத்திலும் முகச்சுழிப்போ, விரசமோ இல்லாமல் இயல்பான கிராமத்து நடையில் உள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 17 November 2025
111
#Reading_Marathon2025
#25RM055
Book No:111/150+
Pages:-559
தென்புலத்து மன்பாதை
-தொ.பரமசிவன்
கற்றவர்களிடத்தில் பண்பாட்டுத்தளத்தில் இயங்குவதற்கு இயங்குகிறவர்களிடத்தில் தவ பரமசிவன் என்ற பெயர் மிகவும் பிரசித்திமானது சமயங்களின் அரசியலை பெரியாருடைய பார்வையில் பேசியவர் பெரியாரியத்தை நாட்டார் தெய்வங்களோடு இணைத்து விவாதித்தவர் அவருடைய கருத்துக்கள் என்றும் படிப்பவர்களை செழுமை படுத்தும் விதத்தில் எழுதுபவர் நிகழ்காலத்தில் ஒருத்த குரலில் தன்னுடைய கருத்துக்களை சொல்வதில் வலிமை மிக்கவர்.
இந்நூலில் 16 தலைப்புகளில் 84 கட்டுரைகள் அடங்கியுள்ளன
சங்க காலத்தைப் பற்றி சொல்லும்போது" ஒரு காலம் என்பது சமூகத்தில் அதுவரை நிலை பெற்ற கருத்துக்கள் செல்வாக்கிலிருந்து புதிய கருத்துக்கள் தோன்றி வளர்கின்ற கால அளவை குறிக்கும்" என்று கொள்ளலாம். இந்த அளவீட்டின் படி சங்க இலக்கியம் குறித்த மதிப்பீடு மற்றும் சமூக ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் சாதி அமைப்பின் மூலப்படிவங்கள் பற்றி இதில் கூறியுள்ளார்.
பண்பாடு குறித்த பல்வேறு கட்டுரைகள் இவர் எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்திலும் பண்பாடு குறித்த கட்டுரைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறித்து மொகஞ்சதாரோ கால ஆய்வுகளில் இருந்து தற்காலத்தில் மனிதர்கள் குளிப்பது நீராடுதல் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டு நிகழ்வுகளை உதாரணத்துடன் கூறியுள்ளார். மேலும் பெண்கள் அணியும் தாலி கோலம் மாலை பண்பாட்டின் வாழ்வியல் போன்ற தலைப்புகளில் பண்டைய மனிதர்கள் கால வழக்கில் இருந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் எவ்வாறு தோன்றி இருக்கின்றன உருமாறி இருக்கின்றன என்பது பற்றி விரிவாக அலசி இருப்பார்.
பொதுவாக கோலமிடுவது இன்றும் வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். தெய்வங்கள் கால் பதிப்பதற்காக போடப்படும் ஆசனங்கள் தான் கோலம். மண்ணில் அதைத்தான் போடுகிறார்கள். வீட்டுக்கு வரும் தெய்வம் அதிலே தான் கால் பதித்து வீட்டுக்குள் வருகிறது என்பது நம்பிக்கை. அதில் கலையின் அம்சமாக புள்ளிகளும் வளைகோடுகளும் இருக்கிறது.
தமிழ் நாட்டின் வரலாறு, மக்கள் பண்பாட்டு நினைவுகள், நம்பிக்கைகள், சடங்குகள், புராணங்கள்—இவை அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்து நமக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சங்க இலக்கிய பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடனும் இதில் விளக்கியுள்ளார். கிராமியத்தின் வாழ்வியலில் இருந்து கிடைக்கும் பண்பாட்டு உணர்வையும் சமூகச் சிந்தனையையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொற்களில் ஒன்று (COOLIE) கூலி என்பதாகும். ஆக்ஸ்போர்டு அகராதி இந்தச் சொல்லிற்கு 'இந்திய, சீனத் தொழிலாளி' என்று பொருள் கொள்கின்றது. இந்தச் சொல் வழக்கு ஆங்கிலேயர்களால் இழிவாக வழங்கப்பட்டதுண்டு.
இந்தச் சொல்லின் வேர்ச்சொல் 'கூலம்' எனபதாகும். இதற்குத் 'தானியம்' என்பது பொருள். செய்கின்ற வேலைக்கு அன்றன்று தானியங்களை (கூலத்தை )ப் பெறுபவர் கூலியாவார்.கூலி என்ற சொல்லிற்கு மாற்றாக ஊதியம், சம்பளம் ஆகிய சொற்கள் பிற்காலத்தில் வழங்கப்பட்டன. சம்பளம் என்பது, சம்பா நெல்லும் அளத்து உப்பும், உழைப்புக்குப் பதிலாகப் பெற்றதைக் குறிக்கும் சொல்லாகும். பணப் பொருளாதாரம் பெரிதாக இல்லாமல் பண்டமாற்றுப் பொருளதாரம் நிலவிய வேளாண் சமூகக் காலத்தில் ஏழைத் தொழிலாளர் பெற்றதே 'கூலி'யாகும். பிற்காலத்தில் கூலி வேலை செய்யும் ஏழை மக்களைக் - குறிக்கவும் 'கூலி' என்ற சொல் பயன்பட்டது என்னும் வரலாற்று ஆய்வை நமக்கு எளிமையாக விளக்குகிறார்.
சோறு என்றவுடன் நமக்கு இன்று அரிசி சோறு மட்டும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு சோளம் குதிரைவாலி ஆகிய தானியங்களையும் சோறு என்று அழைத்தனர். அரிசி என்னும் சொல்லும் நெல் அரிசி மட்டுமல்லாது அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரியென்னும் வேர் சொல்லுக்கு சிறிய என்பது பொருள். அரி மணல் அரி நெல்லிக்காய் போன்று வெள்ளைப்பூண்டின் சிறிய கீற்றுகளையும் வெள்ளை பூண்டு அரிசி அன்று பெண்கள் கூறும் வழக்கம் உண்டு என்று கூறுகிறார்.
அண்மை காலங்களில் பெரியாரையும் பெரியாரையும் பற்றி பேசும்போது நாட்டார் தெய்வங்களை கொண்டாட முடிகின்றது அந்த கேள்வியை ஒருபுறம் சிந்தனை உணர்வோடு மறுபுறம் கேலியாகவும் கேட்கப்படுகிறது நான் எண்ணிப் பார்க்கிறோம் அதற்கான விடையை பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் என்னும் கட்டுரையில் விரிவாக இது பற்றி கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் துறை சார்ந்து பகுக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருத்தாழமிக்க தரவுகளை எப்போதும் நம்முடன் தொ.ப விவரிப்பார்.
சூழலியல் கட்டுரைகளின் சிலப்பதிகாரத்தில் இருந்து பல்வேறு தாவரங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருப்பது புத்தகங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்பு நிலை மக்கள், வழக்காறுகள், நாட்டார் தெய்வங்கள், பெரியார் என்னும் தளத்தில் வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் பொது அறிவு தகவல்கள் பலவற்றை தாங்கியும் அமைந்துள்ளது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Saturday, 15 November 2025
Wednesday, 5 November 2025
அமலன் ஸ்டான்லி
மனத்தை அசைவின்றி வைக்க முனைகையில் கண்களை மூட வேண்டியிருப்பதற்குக் காரணமுண்டு. புலன்வழி நீளும் இவ்வுடலின் மூலமே மனத்திற்கு அமைதியைக் கற்பிக்க இயலும். புலன்வழி மனத்தைத் திசை திருப்புவதற்கு நிறைய சாத்தியமுண்டு, குறிப்பாக பார்வையின் வழியே என்பதால் கண்கள் மூடப்படுகின்றன. பின்னர் சுவாசத்தோடு தொடர்பற்ற எவ்வோர் எண்ணமெழுந்தாலும் அதைப் பற்றிய சிந்தனையைத் தவிர்க்க வேண்டும். அவ்விதிமுறையின் படி தொடர்ந்து தியானம் பயின்று வந்தால் இறுதியில் மனம் அமைதியுறும்.
உதாரணத்திற்கு, ஒரு குளிர்சாதனப் பெட்டியின் கதவு எப்போதும் மூடியே இருக்க வேண்டும். அடிக்கடி திறந்தும் மூடியும் வந்தால் அப்பெட்டி கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பொருட்களும் தேவையானபடி குளிரூட்டப்படாது போகும். ஆற்றலும் விரயமாகும். குளிரூட்டிப் பாதுகாக்க வேண்டியவற்றையோ, சூடேற்ற வேண்டிய பொருட்களையோ எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பதே விதிமுறை.
ஒரு மணி நேரத்திற்கான தியானப் பயிற்சியின் விதிமுறைகளை மிகத் தெளிவாக வகுக்க வேண்டும். ஏதேனும் முக்கியமாகச் சிந்திக்கும் தேவையிருந்தால் அதைக் கடைசி ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கலாம். அல்லது பயிற்சிக்கு முன்னரே சிந்தித்து முடிக்கலாம். ஆனால் பயிற்சியின்போது அச்சிந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு, துல்லியமாக சுவாசத்தை உற்றறிய வேண்டும்.
தியானத்தை முடிக்கையில்தான் பிரச்சினையும் கூடவே எழும். அப்போது விதிமுறைகள் மாறுகின்றன. அன்றாட செயல்பாடுகள் தியானப் பயிற்சிக்கு அப்பாற்பட்டவை. எனவே அன்றாடங்களில் நம்மைப் பற்றி அவ்வளவு கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கதவு திறந்த நிலையிலேயே பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், நிறைய குளிராற்றலை உருவாக்க வேண்டும். அதாவது தியானத்திலிருந்து வெளியேறுகையில் மன அமைதிக்கான விதிமுறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் என்பதே உண்மை.
~ தனிசாரோ பிக்கு
"மூடாக் கதவு தியானம்" உரையிலிருந்து
Monday, 3 November 2025
190
#கற்கை_நன்றே_190
நாமாக கற்ற, அனுபவித்த ஒன்று, மற்றவர்களின் அனுபவத்தைவிட மிகவும் ஆழமானதாக நாம் உணர்கிறோம்.இதனை வைத்தே சில அனுமானங்களுடன் வாழ்கிறோம். இதனை அவ்வப்போது நாமே திருத்திக் கொள்வதை Re learn என்கிறோம்.
மனிதனுக்கு, நான் தான் பெரியவன் என்னும் எண்ணம் எப்போதும் உண்டு. மனித இனம் ஒரு narcissist! இந்த human narcissism னால் விளைந்தது தான் மதம். மதம் எப்போதும் இந்த human narcissism க்கு தூபம் போட்டுக் கொண்டே இருக்கும்.
நீ தான் பெரியவன், உனக்காக தான் இந்த உலகமே படைக்கப்பட்டது, கடவுள் தன் சாயலில் உன்னை படைத்து இருக்கிறார், அவருக்கு பிடித்தமானவன் நீ தான், நீ வேண்டிகிட்டா பூகம்பம் வரும், அல்லது வந்துகிட்டு இருக்கிற புயல் நின்னுடும் என்றெல்லாம் மதம் human narcissism ஐ வளர்க்கிறது.
ஆனா அறிவியல் என்ன பண்ணுது? தன்னுடைய கண்டுபிடிப்புகளால் மனிதன் முகத்திலேயே அறைகிறது. இப்படி மனிதனின் ego மேல் ஒரே போடாக போட்ட 3 விஷயங்களை Freud, "three blows to human narcissism at the hand of science" என்கிறார்.
1. முதல் அடி, பூமியை சுற்றி தான் சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றுகிறது. நாம் தான் இந்த அண்டத்தின் மையம் என்ற ego வை பிய்த்து எறிந்தது Copernican Revolution. cosmological blow!
2. இரண்டாவது, கடவுளின் சாயலில் நாம் அப்படியே மனிதனாகவே உருவமெடுத்தோம் என்ற நினைப்பில் வெந்நீரை ஊற்றியது Darwin னின் பரிணாம கொள்கை. Darwinian Revolution. மனிதனும் ஒரு விலங்கே என்றது biological blow!
3. Freudian Revolution, நம்முடைய செயல்கள் எல்லாம், நம்முடைய thinking எல்லாம், நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. conscious mind வேறு unconscious mind வேறு. "The ego is not master in its own house."
உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் id தான் உங்களை ஆட்டுவிக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்று உங்கள் conscious mind சொன்னால் அதன் பின்னணியில் எதிர்காலத்தை பற்றிய பயமும், insecurity, unknown கிட்ட இருந்து தன்னை தானே தற்காத்து கொள்ள உங்கள் மூளை செய்யும் defense போன்ற unconscious mind இன் செயல்கள் தான் காரணம் என்கிறார்
சிக்மண்ட் ப்ராய்ட். இது psychological blow!
-நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Thursday, 30 October 2025
189
#கற்கை_நன்றே_189
இங்க learning என்பது மாரத்தன் ஓட்டம் மாதிரி..
அப்டேட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கணும்.
-ஜெய்
டாம் கானல்லன் எழுதிய 1% தீர்வு புத்தகத்தில் குறிப்பிடும் நிகழ்வு..
கென் என்பவர் தன் மகன் ஜேக் அணியினர் கால்பந்து விளையாடுவதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். முந்தைய போட்டிகளில் எதிரணியினர் தான் வெற்றி பெற்றிருந்தனர்.மகனின் புதிய பயிற்சியாளர் ஜிம்.. போட்டியில் ஜேக்கின் மீது பார்வையை செலுத்தினார். எதிரணி நீண்ட நேரம் கோல் போடாமல் இருந்ததை சுட்டிக்காட்டி ஜேக்கை லாவகமாக பந்தை வாங்கி கோல் போட சிக்னல் கொடுத்தார்.ஜேக்கின் அணியின் கோல் போட்டு வெற்றி பெற்றனர்.இந்த கொண்டாட்டத்துக்குப் பின்
“ஜிம், உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”என தந்தை கேட்டார்
இக்கேள்வியை எதிர்பார்த்த பயிற்சியாளர் “சிறுவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்போதும் எனக்கு மனநிறைவைக் கொடுத்து வந்துள்ளது என்றார்.
“அதற்கு முதற்காரியமாக, மற்ற விளையாட்டு வீரர்களிடமிருந்து, தலைசிறந்த விளையாட்டு வீர்ர்களை எது தனித்துவப்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தேன். வீரர்களின் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படும் இடம் ஒலிம்பிக் போட்டிதான்.2006ம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதலாவதாக வந்தவருக்கும் நான்காவதாக வந்தவருக்கும், அதாவது, தங்கப் பதக்கம் பெற்றவருக்கும் பதக்கம் எதையும் பெறாதவருக்கும் இடையே இருந்த கால இடைவெளி வெறும் 1.08 நொடிகள்தான். அதாவது, 0.9 சதவீதம் மட்டும்தான்,” என்று கூறினார்.
இதனை நான் ஆராய்ந்தேன். “அபூர்வமாக சில சமயங்களில் அது ஒரு சதவீதத்திற்கும் சிறிது கூடுதலாக இருந்தது.“நான் இறுதியாக இந்த முடிவிற்குத்தான் வந்தேன்: சிறந்த ஆட்டக்காரருக்கும் மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் இடையே இருந்த இடைவெளி ஒரு சதவீதம் மட்டும்தான்.”
நம் ஒவ்வொருவராலும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் 1 சதவீத மேம்பாட்டை அடைய முடியும்.”
நேர்மையான நோக்கு, குழு மனப்பான்மை, தகவல் பரிமாற்றம், விடாமுயற்சி, அடிப்படை விளையாட்டுத் திறன்கள் போன்றவற்றில், 1 சதவீதம் முன்னேற வேண்டும் என்று நான் இந்தச் சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். அந்த விளைவுதான் வெற்றி.
“சில சமயங்களில், ஒரு சாதனையை முறியடிக்க நம்மால் முடியாது என்று நமக்குத் தோன்றிவிட்டால், கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படுவதில்லை.”“எல்லோராலும் மகத்தான சாதனைகளைப் படைக்க முடியாவிட்டாலும்கூட, தாங்கள் இப்போது இருப்பதைவிட மேம்பட்ட ஒருவராக ஆக அவர்களால் கண்டிப்பாக முடியும்.
ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாசகம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?” “‘வேகமாக! உயரமாக! வலுவாக!’ “
உச்சகட்ட வேகம் என்றோ, உச்சகட்ட உயரம் என்றோ, அல்லது உச்சகட்ட வலு என்றோ இங்கு குறிப்பிடப்படவில்லை. அதாவது, முன்பு இருந்ததைவிட அதிக வேகமாக, அதிக உயரமாக, அல்லது அதிக வலுவாக இருக்க வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது.”
1% மேம்பாடு ஒட்டு மொத்த வெற்றிக்கும் காரணமாகிறது
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
109
#Reading_Marathon2025
#25RM055
Book No:109/150+
Pages:-343
#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்
கங்கணம்
-பெருமாள்.முருகன்
பெருமாள்.முருகன் அவர்களின் புத்தக்த் தலைப்பே வித்தியாசமாகவும், கதையின் மைய சரடை தொட்டு விளக்கும் படியும்..அந்த வார்த்தையின் பவரையும் உணர்த்தும்.அந்த வகையில் கங்கணத்தை பற்றி விளக்கும் போது..
கங்கணம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. திருவிழாக் காலத்திலும் திருமணத்தின் போதும் கையில் கட்டும் மஞ்சள் கயிற்றுக்குக் கங்கணம் எனப் பெயர். அது ஆகுபெயராகிக் கைவளையைக் குறிப்பதும் உண்டு. மஞ்சள் துண்டைக் கயிற்றில் இணைத்துக் கையில் கட்டும் சடங்குக்குக் கங்கணம் கட்டுதல் என்று பெயர். கங்கணம் கட்டிவிட்டால் அக்காரியம் முடியும் வரைக்கும் வெளியே செல்லக்கூடாது, வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்பன நடைமுறைகள். ஏனெனில் திருவிழாவும் திருமணமும் கவனக்குவிப்பு வேண்டும் முக்கியமான காரியங்கள். ஏதோ செயலில் ஈடுபட்டு அச்செயலை முடிப்பதில் தீவிரக் கவனம் கொண்டிருக்கிறான் எனப் பொருள்.
இளமையில் மணப் பெண்களை சலித்து தேடினால்
முப்பதுக்கு மேல் மணப்பெண்ணை தேடி சலிக்கனும் என நறுக்கு ஒன்றை எழுதியிருந்தேன்.அதற்கு முற்றிலும் பொருந்துவது இந்நாவல். மாரிமுத்து அந்த பகுதியின் ஜமீன்போல. ஏகப்பட்ட நில புலன்களுக்கு சொந்தக்காரர். அவரின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பனின் பார்வையில் நாவல் துவங்குகிறது.மாரிமுத்துவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவரின் அப்பாவும் அம்மாவும் ஒரு பொருள் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கமாட்டர்கள். அத்தனை கஞ்சம்.ஆனால் மாரிமித்து அப்படியல்ல..தாமதித்தாலும் செய்வார். மாரிமுத்துவுக்கு வரன் பார்ப்பதெலாம் தட்டிப் போகிறது.
இரு வயது மூத்தவள், பழைய புல்லட் வண்டி வைத்திருப்பதால் பெண் அமையல எனக்கூறி பெண் அமையாமல் இருக்கிறது. ஊருக்கெல்லாம் இலவசமாய் திருமணம்.முடித்து வைக்கும் தானாவதி தாத்தாவாலேயே திருமண நடத்தி முடிக்கமுடியவில்லை.தன் தோட்டத்தில் வேலை பார்க்கும் குப்பன் மகன் ரமேஷ்க்கு திருமணம் செய்ய ஐயாயிரம் கடன் கேட்கிறார் குப்பன்.35 வயது வரை தான் திருமணம் ஆகாமல் இருக்க 17 வயதில் ஒரு சிறுவனுக்கு கல்யாணமா?இதை அவமானமாய் உணரும் மாரிமுத்து ஆறு மாதம் கெடு சொல்கிறார். அதற்குள் தான் திருமணம் முடிக்க மனதிற்குள். எண்ணிக்கொள்கிறான்.
என்னதான் பணக்காரனாய் இருந்தாலும் திருமணம் அமையாமல் அவமானமாய் இருந்தது. பெண்வீட்டார்க்கு மோர் கொடுக்காதது, மூலநட்சத்திரம், வரதட்சணை போன்றவற்றாலும் தடைபடுகிறது.அப்படியே அமைந்தாலும் யாரேனும் ஒருத்தன் மாப்பிளை குடினு சொல்லி வைக்கிறார்கள். அதனாலேயே மாரி குடித்து ஆறேழு வருடமாகிறது.நரைமுடி, லேசான வழுக்கையும் பீதியடைய வைக்கிறது.ஆறு மாதத்திற்குள் குப்பன் மகனுக்கு முன் திருமணம் நடக்கனும் என்பது டார்கெட்
பரம்பரை நிலம் பிரிக்கப்படாததால் தான் திருமணம் தள்ளிப் போகிறது எனச் சொல்ல அதனை பிரிக்கும் வேலையில் ஈடுபடும் போதுதான் சித்தப்பா மகன் செல்வராசுவுடன் பழக ஆரம்பித்தான்.ஐந்தாறு வயது சின்னவன் ஆனால் அறிவில் முதிர்ச்சியானவன்.அவன் மாற்று சாதி சேர்ந்த பெண்ணை விரும்புவதாக தெரிவித்த போது அதிர்ச்சி ஆகிறான். மாரிமுத்து.அவமானம், சாதி பெருமை எல்லாம் சொன்னாலும் தன் காதல் குறித்த பேச்சினால் அமைதியாகிறான் நாயகன்.ஆனாலும்
திருமணமாகாத குற்ற உணர்ச்சி அவனிடத்தில் எப்போதும் உண்டு.
இளவயது நண்பராக இருந்த ராமரை சந்தித்தது மாரிமுத்துவுக்கு ஆறுதலாய் இருந்தது.
நாவலின் பல இடங்களில் நாயகனின் பிரச்சனை மட்டும் அலசாமல் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்சனை, கிராமத்து மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் பாட்டி வைத்திய முறை ஆகியவை குறித்த செய்திகளும் வருகிறது.
அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி மாரிமுத்து தனக்கான துணையை அடைந்தானா? அவனது நிலம் அவனுக்கானதா? என்பதை கிராமிய மண் வாசனை மாறாமல் பெருமாள் முருகன் "கங்கணமா"க காட்டியுள்ளார்.
ஒரு முதிர் கண்ணன் சந்திக்கும் சவால்களும் ஏளனங்களும், சாதிக்குள் பெண் கொடுக்க மறுப்பவர்களும், வேற்று சாதியில் பெண் எடுக்கலாமா என மனதின் ஊசலாட்டமும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருமண தடைகள் என்னென்ன ருபத்தில் வருகின்றன என்பதை நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் தட்டிக்கழிக்க என்னென்ன கார்ணங்கள் வருகின்றன என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. மாரிமுத்து-அம்மா, மற்றும் மாரிமுத்து
பாட்டிக்கும் நடைபெறும் உரையாடல்கள் கதையை நகர்த்த உதவுகின்றன.
இடப்பிரச்சனை, கிளைக்கதைகள், தானாவதி தாத்தா ஆகியோர் நாவல் சுவாரஸ்யமாய் செல்ல உதவுகின்றனர்.செல்வராசு வந்தவுடன் வேறு பரிணாமத்தை விதையிடும் மற்றும் ராமன் கதாபாத்திரம் வந்த பின் அந்த விதைகள் வளர ஆரோக்கியமான உரையாடல் மாரிமுத்துவிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
கதையின் இறுதியில் குப்பனின் பேச்சு நல்ல முதிர்ச்சியைக் காட்டுகிறது.
*கழுத்துப்புண்ணு வலி எருதுக்குத்தான் தெரியும்.கொத்துகிற காகாக்கு தெரியுமா?
*பாட்டி சொன்னாள் நா என்ன கொமுறியா? நகைநட்டு போட்டு அலைய. மண்ணுக்குள்ள கெடக்கிற உடம்பு மண்ணுமேல கிடக்குது அவ்வளவுதான்
*பெரிய பெரிய சம்பவங்களை தாங்கிக் கொள்கிற மனதினால் அற்பவார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
மனித நாக்கு வார்த்தைகளை சுழற்றும்
எப்படிகற்றுக் கொண்டதோ?
ஒரே ஒரு ஒன்லைனரை வைத்து நாவல் முழுவதும் சுவாரஸ்யம் கெடாமல் கொடுத்துள்ளார் பெருமாள் முருகன்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Tuesday, 28 October 2025
188
#கற்கை_நன்றே_188
நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வை தன் ரசனையின் மையினால் எழுதியவர் சுஜாதா தான்..ஒரு சுவாரஸ்ய பகுதி
உலகில் மிகவும் அகழ்வாராயப்பட்ட இடம் - சுஜாதா
உலகத்திலேயே மிகவும் அகழ்வாராயப்பட்ட இடத்திற்கு கின்னஸ் இருந்தால் அது ஆழ்வார்பேட்டையில் இருக்கும் எங்கள் தெருவுக்குதான் கிடைக்கும்.
1993- ல் நான் பெங்களூரை துறந்துவிட்டு இங்கு குடிபுகுந்ததிலிருந்து இந்தச் சாலையை இடைவிடாமல் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்தவறி தோண்டுவது நின்றுபோனால் கடப்பாரை பயிற்சி விட்டுப் போகாமல் இருக்கத் தோண்டுகிறார்கள்.
முதன்முதலாக குடிநீர் வடிகால் வாரியர்கள் வந்து வெட்டிப் போட்டுவிட்டு சிமெண்டில் அனார்கலி ரேஞ்சுக்கு சமாதி போல ஏதோ கட்டிமுடித்து மூடினார்கள்.
அது மூடின உடனே டெலிபோன் காரர்கள் நீண்ட ஃபைபர் கிளாஸ் குழாய்களை அடுக்கி எதிர்ப்பக்கம் தோண்டி கேபிள் போட்டார்கள்.
அதன்பின் சிறு மேம்பாலம் கட்டுபவர்கள்
பாதாள சாக்கடை என்று எதையோ பிழைதிருத்தும் காரணத்துக்காக நடுவே வெட்டிப்போட்டார்கள்.
அவர்கள் முடிந்ததும் இப்போது மின்வாரியர்கள் ஹை டென்ஷன் கேபிள் போடுவதற்கு தோண்டி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு தோண்டலும் குறைந்தபட்சம் ஆறுமாதம் நீடிக்கிறது. கூலியாட்கள் குடிசை போட்டு, சோறாக்கி, பிள்ளை பெற்றுக் கொண்டு, மறு தோண்டுதலுக்கு புறப்படும் வரை ஒரு வாழ்க்கையை நடத்தி விட்டுச் செல்கிறார்கள்.
இப்போதெல்லாம் கார்ப்பரேஷன், டெலிபோன், மின்வாரிய வட்டாரங்களில் தினம் கீழ்க்காணும் உரையாடல் நிகழும் என்று நினைக்கிறேன்.
இன்ஜினியர்: "ஏம்பா இன்னிக்கி என்ன வேலை?"
காண்ட்ராக்டர்: "எதுவும் வேலை இல்லை இல்லிங்க".
இன்ஜினியர்: "அப்போ ஒண்ணு பண்ணுங்க. ஆழ்வார்பேட்டையில் அம்புஜம்மாள் தெரு ஒண்ணு இருக்கு அங்கே போய் தோண்டுங்க"
காண்ட்ராக்டர்: "எதுக்குங்க?"
இன்ஜினியர்: "சும்மாய்யா…. இனிமே வேலை இல்லைன்னு மட்டும் சொல்லாதே"
சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் கேபிள் போடுவதில்லையா, சாக்கடை வெட்டுவது இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் தோண்டுகிறார்கள். நானே பார்த்திருக்கிறேன்.
ராத்திரி 12 மணிக்கு ஆள் படையுடன் வருவார்கள் . அதி பிரகாசமாக கண்சிமிட்டும் மஞ்சள் விளக்குகளை வைப்பார்கள். அது என்ன மாயமோ….. அதிகாலைக்குள் தோண்டி வேலையை முடித்த இடம் தெரியாமல் அடைத்து சமன்படுத்தி விட்டுப் போவார்கள். ஒரே நாள் தான்.
இங்கு? பகவான் விட்ட வழி.
திருவள்ளுவர் இன்று இருந்தால்....
தோண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு நீண்டநாள் தோண்டல் இலை
என்று எழுதியிருப்பார்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 27 October 2025
187
#கற்கை_நன்றே_187
"அறிந்து கொள்ளல் என்பது இரண்டு வகை.
ஒன்று, புரிந்துகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளுதல், மற்றொன்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிந்து கொள்ளுதல்
டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்ட வேண்டும். 'டென்ஷன் இல்லாமல் இருப்பது' என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால், அது ஏற்கனவே இருக்கிறது என படித்திருக்கிறேன்.
தாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் அந்த அளவுக்குத்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். தம் வாழ்வில் நிகழும் விஷயங்கள நம் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில்லை மாறாக, அந்நிகழ்வுகள் குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நம் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது.
ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீஐ வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார்.
வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் என்கிறார் .மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம்.
நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு என்கிறார் ஜெயமோகன்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
டாக்டர்
மோன்தா புயல் நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்?
தமிழ்நாட்டை தீவிரப் புயல்களிடம் இருந்து காக்கும் "செட்டிங்" எது?
ஆம்... வங்கக் கடலில் உருவாகும்
பெரும்பான்மையான
சூப்பர், அதி தீவிர, தீவிர புயல்களிடம் இருந்து தமிழ்நாடு எப்படித் தப்புகிறது?
எப்படி
ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் புயலால் கடும் சேதத்துக்கு உள்ளாகின்றன?
அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள்
ஏன் - கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன?
என்பதை நாம் அறிய வேண்டும்.
நாம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் இருக்கிறோம்.
இந்தப் வெப்ப மண்டலப் பகுதிகளில்
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி " மேற்கு நோக்கிய காற்று" (WESTERLIES) தொடர்ந்து வீசுகிறது.
இதை "ட்ரேட் விண்ட்ஸ்" TRADE WINDS என்று அழைக்கிறோம்.
வளி மண்டலத்தில் தோன்றும் புயல்கள்
ஒரு பார்சல் போல இந்த மேற்கு நோக்கிய வர்த்தக் காற்றின் துணையுடன்
கிழக்கில் இருந்து தோன்று மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன.
இதற்கு அடுத்த படியாக
புயலை சுழலச் செய்வது எது என்று நாம் அறிய வேண்டும்.
அதற்குக் காரணம்
பூமியின் சுழற்சி..
பூமியின் சுழற்சியின் விளைவாக பூமத்திய ரேகைக்கு வடக்கே உருவாகும் புயல்களில்
காற்று சுழற்சி,
எதிர் கடிகார திசையில் இருக்கும் (ANTI CLOCK WISE DIRECTION)
பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்களில், காற்றின் சுழற்சி கடிகார திசையில் இருக்கும்.
இதன் விளைவாக,
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் புயல்கள்,
பூமத்திய ரேகைக்கு வடக்கே, வலது பக்கம் திரும்பும்.
இதனால் மேற்கு - வட மேற்கு திசை நோக்கி இயற்கையாகவே நகரும்.
பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்கள், இடது பக்கம் வளைந்து கிழக்கே தென் கிழக்கு திசையில் செல்லும்.
இப்போது புரிந்திருக்கும்...
அந்தமான் தீவுகள் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்படியே மெதுவாக வெஸ்ட்ரலைஸ்/ ட்ரேட் விண்ட் தாக்கத்தால்
மேற்கு நோக்கி வந்தாலும்
பூமியின் கோரியாலிஸ் விசையால்
மேற்கு - வட மேற்கு நோக்கி செல்கிறது.
இது தான் இயற்கை.
கூடவே, புயல்களுக்கு
எரிபொருளாக செயல்படும் கடலின் மேற்புற வெப்பம் அதிகமாக இருப்பது தொடர்ந்து புயலை இந்த விசைகளைத் தாண்டியும் தக்க வைக்க உதவுகிறது.
இவையன்றி
நிலப்பரப்பில் அதி காற்றழுத்தப் பகுதிகள் நிலவும் . இதை ரிட்ஜஸ் (RIDGES) என்று அழைக்கப்படுகின்றன.
இவை குறைந்த காற்றழுத்தப் பகுதியான புயல்களை தன்னிடம் நெருங்க விடாமல் தள்ளும்.
வட கிழக்கு பருவ மழை சூழ்நிலையான தற்போது, இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மிகுதியான காற்றழுத்தம் இருக்கும்.
இது புயல்களை
மேற்கொண்டு வடக்கு நோக்கி வராமல் தடுக்கும்.
இதன் விளைவாக
வடக்கு - வட மேற்கு திசையில், தமிழ்நாட்டின் வட கிழக்கு கடற்கரை, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றை விட்டு கிழக்கு நோக்கி "டிஃப்லெக்ட்" ( பாதை வளைவு) செய்து வங்கதேசத்தை நோக்கி , மியான்மரை நோக்கி கூட புயலை சில நேரங்களில் தள்ளி விடுவதையும் காண முடியும்.
இன்னும்
தமிழ்நாட்டின் தென் கிழக்கு கடற்கரையை
புயல்களிடம் காப்பாற்றும் அமைப்பாக இருப்பது
இலங்கை.
இலங்கையை நோக்கி வரும் புயல்களை நிலத்தில் நிலவும் மிகுதியான காற்றழுத்தம் காரணமாக ( ரிட்ஜ்)
வடக்கு நோக்கி தள்ளி விடுகிறது
அல்லது
மேற்கு நோக்கி வரும்
சிஸ்டங்களை, இலங்கையில் அவை கரைகடந்து வலிமை இழந்து தமிழ்நாட்டுக்கு மழை கொடுக்கின்றன.
தமிழ்நாட்டின்
வட கிழக்கு கடற்கரை
மாவட்டங்கள் - மழை மற்றும் புயல்களால் அவ்வப்போது பாதிப்பை சந்தித்து வந்தாலும், தமிழ்நாடு - அதி தீவிர/ தீவிர புயல்களிடம் இருந்து ஆந்திரா/ ஒடிசா/ மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில் இயற்கையாக அரணைப் பெற்று விளங்குகிறது.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Sunday, 26 October 2025
ஜீயோ டாமின்
ஒரே ஒரு வாளி - அதன் விளிம்பு வரையில் சுற்றியிருப்போருக்கு தாகம் தீர்க்கப் போதுமான தண்ணீரும் அதில் இருக்கிறது.
திடீரென விசித்திரமான ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. யார் அதிகத் தண்ணீரை உறிஞ்சுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.
வாளியிலிருக்கும் தண்ணீர் தீர்ந்தால் எல்லோரும் செத்துப்போவோம் என்று தெரிந்தும் எல்லோரும் போட்டியில் சேர்ந்து கொள்கின்றனர்.
காலம் காலமாக வர்க்கரீதியாகவும் சாதீய ரீதியாகவும் பிறரைச் சுரண்டிக் கொளுத்த ஒருசிலருக்கு மட்டும் தண்ணீரை வேகமாக உறிஞ்ச நீண்ட குழல் வாய்க்கிறது. மற்றவர்கள் அப்பாவியாக அதனை வேடிக்கப் பார்க்கின்றனர்.
தண்ணீர் தீர்ந்துகொண்டே இருக்கிறது.
இன்னும் வேகமாக உறிஞ்சினால் எல்லாருடைய தாகமும் தீருமென்று ஆரூடம் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்குப் பதிலாக மட்கும் உறிஞ்சு குழல் பயன்படுத்தினால் ஆபத்தில்லை என்கிறார்கள் சில 'ஆபத்தான' சூழலியலாளர்கள்.
போட்டி வேகமெடுக்க, பக்கெட்டின் தண்ணீர்தான் குறைகிறதே தவிர பெருவாரியான பார்வையாளர்களின் தாகம் தீரவில்லை. ஒட்டுமொத்தத் தண்ணீரும் வற்றும்போதும்கூட அது தீரப்போவதில்லை.
ஜிடிபி வளர்ச்சியை முதன்மை குறிக்கோளாகக் கொண்ட ஒவ்வொரு அரசும், பெருமுதலாளிகளின் நலனுக்காக – ‘உற்பத்தி அதிகரிப்பு’ என்ற பெயரில் இயற்கை வளங்களை வணிகப் பண்டமாக்கி தனியாருக்குத் தாரைவார்த்து விற்பனை செய்யும் பிரம்மாண்டச் சந்தையைக் கட்டியெழுப்பி பிற நாடுகளோடு போட்டி ஒன்றை நடத்துகின்றன. எவ்வளவு வேகமாக ஜிடிபி வளர்கிறதோ அவ்வளவு வேகமாக நாம் அழிவுக்கு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், நமக்கு மேலும் மேலும் சுரண்டிக்கொண்டே இருப்பதற்கு மலைகளும், கடல்களும், காடுகளும் இங்கு இல்லை. புவியின் எல்லா வளங்களும் வரம்புக்கு உட்பட்டவை. இந்தச் சுரண்டல் பொருளாதார அமைப்பால் ஒருபோதும் எல்லோருடைய பசியையும் தீர்க்க முடியாது - சமத்துவத்தையும் சமூக நீதியையும் உறுதி செய்ய முடியாது.
இதுவொரு சூதாட்டம்!
186
#கற்கை_நன்றே_186
உங்களால் எங்கே தொடங்க முடியுமோ அங்கிருந்து தொடங்குங்கள்.உங்கள் கையில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு தொடங்குங்கள்
-ஆண்ட்ரூ மேத்யூஸ்
எல்லாரும் வேண்டுவது எப்போதும் சந்தோசமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதும் என்பதில் இக்கணம் உணடு என்பதை மறந்துவிடுகின்றனர். நேரம் என்பது இக்கணம் மட்டும் தான்.இந்த நேரத்தில் நிம்மதியாகவும்.சந்தோசமாகவும் இருப்பது தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதற்கான அடிப்படை காரணம்.
படிப்படியாக மலையின் மீது எப்படி ஏறுவீர்களோ, அதே போல் உங்கள் பிரச்சினைகளை கையாளுங்கள் என்கிறார் ஆண்ட்ரூ மாத்யூஸ். பாறைமீது ஏறும்போது ஒரு பாறையில் சிக்கினால் உங்கள் கவனம் முழுவதும் அந்தக் கணத்தில் தான் விடுபட எண்ணுவீர்கள். எஞ்சி இருக்கும் பாறைமீது கால் சிக்கும் என எண்ண மாட்டீர்கள் அல்லவா..
எப்போதெல்லாம் 24 மணி நேரம் கடினமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள் கவனம் செலுத்துங்கள்.பின் அடுத்த ஐந்து நிமிடங்கள் என மகிழ்ச்சியாக் இருக்க எண்ணுங்கள்.
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் வட அமெரிக்கப் பெண்மணியான ஷேரன் உட், தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறினார்:
“அது உடல் வலிமையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாக மன வலிமையைப் பற்றியது என்பதை நான் கண்டறிந்தேன். உண்மையான போராட்டம் என்னுடைய மனத்தில்தான் நிகழ்ந்தது. நானே சுயமாக உருவாக்கிக் கொண்ட தடைகளைக் கடந்து, ஆற்றல் எனும் பொக்கிஷத்தை நான் சென்றடைய வேண்டியிருந்தது.
அந்த ஆற்றலின் 90 சதவீதத்தை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்.” பயன்படுத்தப்படாத அந்த 90 சதவீத ஆற்றலை நீங்கள் வசப்படுத்த விரும்பினால், “அதை நான் எப்படிச் செய்வது?” என்று கேளுங்கள். அப்போது நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைப்பீர்கள்
-நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
உலகில் இருக்கும் பாதி வேலைகள் புல்ஷிட் வேலைகள் என கூறப்படுகிறதுபுல்ஷிட் வேலைகளை யாரும் செய்யாமல் போனால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.விவசாயி, மீனவர், லாரி டிரைவர், காவல் துறை, வக்கீல்கள், மருத்துவர்கள்...இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலகம் முழுக்க பாதிப்புக்குள்ளாகும்.யுடியூபர்கள், திரைத்துறையினர், கிரிக்கட் ஸ்ட்ரைக் நடத்தினால் அவர்களைத்தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைஆனால் புல்ஷிட் வேலைகளுக்கு தான் சம்பளமும் அதிகம்-நியாண்டர் செல்வன்
Wednesday, 22 October 2025
Subscribe to:
Comments (Atom)