Monday, 27 October 2025

டாக்டர்


மோன்தா புயல்  நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்? 

தமிழ்நாட்டை தீவிரப் புயல்களிடம் இருந்து காக்கும் "செட்டிங்" எது? 

ஆம்... வங்கக் கடலில் உருவாகும் 
பெரும்பான்மையான 
சூப்பர், அதி தீவிர, தீவிர புயல்களிடம் இருந்து தமிழ்நாடு எப்படித் தப்புகிறது? 

எப்படி 
ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் புயலால் கடும் சேதத்துக்கு உள்ளாகின்றன? 

அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் 
ஏன் - கிழக்கில்  இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? 
என்பதை நாம் அறிய வேண்டும். 

நாம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் இருக்கிறோம். 
இந்தப் வெப்ப மண்டலப் பகுதிகளில்
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி " மேற்கு நோக்கிய காற்று" (WESTERLIES) தொடர்ந்து வீசுகிறது.

இதை "ட்ரேட் விண்ட்ஸ்" TRADE WINDS என்று அழைக்கிறோம். 

வளி மண்டலத்தில் தோன்றும் புயல்கள் 
ஒரு பார்சல் போல இந்த மேற்கு நோக்கிய வர்த்தக் காற்றின் துணையுடன்  
கிழக்கில் இருந்து தோன்று மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. 

இதற்கு அடுத்த படியாக 
புயலை சுழலச் செய்வது எது என்று நாம் அறிய வேண்டும். 

அதற்குக் காரணம் 
பூமியின் சுழற்சி..

பூமியின் சுழற்சியின் விளைவாக பூமத்திய ரேகைக்கு வடக்கே உருவாகும் புயல்களில் 
காற்று சுழற்சி, 
எதிர் கடிகார திசையில் இருக்கும் (ANTI CLOCK WISE DIRECTION) 

பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்களில், காற்றின் சுழற்சி கடிகார திசையில் இருக்கும். 

இதன் விளைவாக, 

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் புயல்கள், 
பூமத்திய ரேகைக்கு வடக்கே, வலது பக்கம் திரும்பும்.
இதனால் மேற்கு - வட மேற்கு திசை நோக்கி இயற்கையாகவே நகரும். 

பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்கள், இடது பக்கம் வளைந்து கிழக்கே தென் கிழக்கு திசையில் செல்லும். 

இப்போது புரிந்திருக்கும்... 

அந்தமான் தீவுகள் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்படியே மெதுவாக வெஸ்ட்ரலைஸ்/ ட்ரேட் விண்ட் தாக்கத்தால் 
மேற்கு நோக்கி வந்தாலும் 

பூமியின் கோரியாலிஸ் விசையால் 
மேற்கு - வட மேற்கு நோக்கி செல்கிறது. 

இது தான் இயற்கை. 

கூடவே, புயல்களுக்கு 
எரிபொருளாக செயல்படும் கடலின் மேற்புற வெப்பம் அதிகமாக இருப்பது தொடர்ந்து புயலை இந்த விசைகளைத் தாண்டியும் தக்க வைக்க உதவுகிறது. 

இவையன்றி 
நிலப்பரப்பில் அதி காற்றழுத்தப் பகுதிகள் நிலவும் . இதை ரிட்ஜஸ் (RIDGES) என்று அழைக்கப்படுகின்றன.
இவை குறைந்த காற்றழுத்தப் பகுதியான புயல்களை தன்னிடம் நெருங்க விடாமல் தள்ளும். 

வட கிழக்கு பருவ மழை சூழ்நிலையான தற்போது, இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மிகுதியான காற்றழுத்தம் இருக்கும். 
இது புயல்களை 
மேற்கொண்டு வடக்கு நோக்கி வராமல் தடுக்கும்.
இதன் விளைவாக 
வடக்கு - வட மேற்கு திசையில், தமிழ்நாட்டின் வட கிழக்கு கடற்கரை, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றை விட்டு கிழக்கு நோக்கி "டிஃப்லெக்ட்" ( பாதை வளைவு)  செய்து வங்கதேசத்தை நோக்கி , மியான்மரை நோக்கி கூட புயலை  சில நேரங்களில் தள்ளி விடுவதையும் காண முடியும். 

இன்னும் 
தமிழ்நாட்டின் தென் கிழக்கு கடற்கரையை 
புயல்களிடம் காப்பாற்றும் அமைப்பாக இருப்பது 
இலங்கை. 

இலங்கையை நோக்கி வரும் புயல்களை நிலத்தில் நிலவும் மிகுதியான காற்றழுத்தம் காரணமாக ( ரிட்ஜ்) 
வடக்கு நோக்கி தள்ளி விடுகிறது 

அல்லது 

மேற்கு நோக்கி வரும் 
சிஸ்டங்களை, இலங்கையில் அவை கரைகடந்து வலிமை இழந்து தமிழ்நாட்டுக்கு மழை கொடுக்கின்றன. 

தமிழ்நாட்டின் 
வட கிழக்கு கடற்கரை 
மாவட்டங்கள் - மழை மற்றும் புயல்களால் அவ்வப்போது பாதிப்பை சந்தித்து வந்தாலும்,  தமிழ்நாடு  - அதி தீவிர/ தீவிர புயல்களிடம் இருந்து ஆந்திரா/ ஒடிசா/ மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில் இயற்கையாக அரணைப் பெற்று விளங்குகிறது. 

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர்
சிவகங்கை

No comments:

Post a Comment