Saturday, 30 May 2026

book-31


#Reading_Marathon2026
#26RM009

Book No:31/150+
Pages:-711

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
- தூக்கு செல்வம்

இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பல பிரபலங்கள் பரிந்துரைத்த புத்த்கம் இது.இதற்கு திருடன் மணியன் பிள்ளை புத்தகத்தை மணியன் எழுதியது போல. இப்புத்த்கத்தை தூக்கு செல்வம் எழுதியுள்ளார்.தூக்கு கைதி செல்வம் 1998 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 2012ல் குடியரசு தலைவரால் ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார். செல்வம் எந்த குற்றத்திற்காக தண்டனை பெற்றார் என்பதும், சிறை வாழ்க்கைக்கு எவ்வாறு ஆளானார் ,
என்பதே புத்தகம்.

சிறை துறை பற்றி சமீபத்தில் ஜூனியர் விகடனில் தொடராக வந்தது.அதற்கு முன் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் வாசித்துள்ளேன். சினிமாவிலும் கமலின் மகாநதிதான் ஜெயில் பற்றிய சித்திரத்தை யதார்த்தமாய் காண்பித்தது. அதற்கு பின் நெட்ப்ளிக்ஸில் திஹார் சிறை குறித்த தொடரும் அங்கு நடைபெறும் நிகழ்வை  உள்ளது உள்ளபடியே காண்பித்திருக்கும்.

பணம் படைத்தவர்களும், உயர் சாதியினரும் தூக்கு மேடைக்கு வருவதில்லை.ஏழை எளிய குரலற்றவர்கள்தான் வருகின்றனர் எனும் நடைமுறை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

"வெளிச்சத்தில் வாழும் மனிதர்களே உங்களை ஓர் இருள் சூழ்ந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறேன் என ஆரம்பிக்கும் என்னுரையில் தனிமை குறித்த மனநிலையை உணர்த்துகிறது. காலம் கடுங்காவலில் வைத்த  வலியை தருகிறது. திரைப்படங்களில் வரும் சிறைக்காட்சிகள் போலியானவை என கூறி சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதென கூறுகிறார்.சிறை குறித்த வரலாற்றையும் இறுதியில் கொடுத்துள்ளார்.

நீதிபதி தண்டனை வழங்கியதும் பாளையங்கோட்டை நடுவண் சிறைக்கு சுமந்து செல்லும் வாகனத்திலிருந்து துப்பறியும் பாணியில் புத்தகம் துவங்குகிறது. செல்வத்தின் இளமை பருவம், பள்ளிப் படிப்பு, சிறுவயதில் பார்த்த முதல் பிணம், இரண்டாம் பிணத்தின் பிண்ணனிக் கதை, பால் துரை மாமாமின் வளர்ப்பில் விரிகிறது.

முன்பகை காரணமாக வெட்டுப்பட்டு வயலில் குத்துயிராய் கிடந்த செல்வத்தின் மரணவலி நமக்கும் படிக்கும்போது வருகிறது. பழிவாங்கலில்.செல்வம் ஈடுபடுகிறபோது சொல்கிறான்

"மனித குலத்திற்கே முதன்மையானது பழி உணர்ச்சி. பழி வாங்குவதில் குரூரமும் சந்தோஷமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வன்முறை பாதைக்குள் ஒரு முறை நுழைந்தால் மீண்டும் திரும்பிவர முடியாது. அந்த ஒரு வழிப்பாதையில் நாங்கள் இருவரும் மிகவும் வேகமாக ஐயப்பனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் என்று.

ஐயப்பன் உயிரிழந்த பின்பு லிங்கத்தின் நட்பு செல்வத்தை காப்பாற்றியது.அதன்பின் அய்யாவு, பிரபு என நீளும் பட்டியலுடன் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் ஒரு திரில்லர் நாவல் போல விரிகிறது.இரண்டாம் பாகத்தில் போலிஸிடன் சரணடைந்த பின் வரும் ஜெயில் அனுபவங்கள் நம்மையும் சிறை கைதி போல உணரச் செய்கிறது.
விடியற்காலை மலத்தை பேப்பரில் சுற்றி வைத்திருந்து, காலை ஆறுமணிக்கு கதவு திறக்கப்பட்டதும் கொண்டு சென்று எறிய வேண்டும்.

மேலும் ஜெயிலில் உள்ள வகைகள்,
அறைகளின் அமைவிடம், ஒரு கைதியை 3 பேர் மனுப்போட்டு பார்க்க முடியும்,சிறைக்குள் நடக்கும் மோதல்கள்,கைதிகள் விடுப்பு, திறந்த வெளி சிறையில் இருந்தால் தண்டனை நாள் பாதியாகும் என பல சிறை பற்றிய அறியாத பல செய்திகள் வருகிறது. செல்வம் சிறைக்கைதிகளுக்கான பல உரிமைகளை பெற்றுத் தருகிறார். சிறை அதிகாரிகளின் குணங்கள், சட்ட ஆணைகள் பற்றிய விபரங்களை புத்தக வாசிப்பின் மூலம் அனுபவங்களின் மூலம் அறிந்து தந்துள்ளார்.அந்நாளில் இவருடன் பிரேமானந்தா, வீரமணி உள்ளிட்ட பலரும் சிறையில் இருந்துள்ளனர்.

சென்னை, திருச்சி, பாளை
பாளை, கடலூர், நெல்லை உள்ளிட்ட சிறை அனுபவங்கள் விரிவாக எழுதியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நடந்த சிறைச்சாலை மரணங்களையும் பதிவு
செய்துள்ளார்.காவிரி நதிநீர் பிரச்சினை உண்ணாவிரதம், புலிகள் பிரச்சினைகள்,செம்மொழி மாநாடு, சிறைக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் நடந்த நிகழ்வுகள் பதிவாகி சுவாரஸ்யபடுத்தியுள்ளார்.

வேலூர் சிறையில் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரிடம் பழகிய அனுபவங்களை விவரித்திருப்பார்.
தான் செய்த குற்றங்களை சுய இரக்கமின்றி உள்ளது உள்ளபடியே
 விவரித்திருப்பார்.நான்கு அறைக்ள் தான் அங்கு நடைபெறும் வழக்கமான சம்பவங்கள் தான் ஆனால் பக்கத்துக்கு பக்கம் அனுபவ சுவடாய், த் ரில்லாய் செல்கிறது.

2017ம்.ஆண்டு சேலம் சிறையில் நடந்த புத்தக கண்காட்சி தான் வாசிப்பு பக்கம் செல்வத்தை திசை திருப்பியது எனலாம்.ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதை அடிக்கடி கேட்பதுண்டு. அது நிகழ்த்தும்.மாயம் அற்புதமானது.எழுதுவதற்கு முகிலன்

என்பவரின் ஊக்குவிப்பு குறித்து கூறுகிறார்.அதன்பின்பு வாசிப்பு வாசகர் வட்டம் சிறையில் நடைபெற்ற கலந்துரையாடல் பற்றியும் பிரபலங்களுடன் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறார் 2023ம் ஆண்டு ஒரு வழக்கில் பத்ரி சேஷாத் ரி செல்வத்துடன் இருந்த போதுதாம் இந்நூல் வடிவம் பெற விதை போட்டார்.

மூன்றாம் பாகத்தில் சிறை குறித்த அனுபவத்தை மடலாக வடித்துள்ளார்.

~படித்ததில் பிடித்தது

*புதிதாக சிறைக்கு வருபவர்களுக்கு தொற்று நோய் அறிகுறி இருப்பதை கண்டறிய 2-3 நாட்கள் தனிமை சிறையில் அடைத்த. வைப்பார்கள்

*போதைகளில் முதன்மையானது கையில் ஆயுதம் ஏந்துவதுதான்

*வெட்டரிவாளை கையில் எடுத்தவனுக்கு ஒரு நிரந்தர நண்பன் இல்லாமல் போகலாம்,ஆனால் நிரந்தர எதிரி உருவாகிக் கொண்டே இருப்பான்

*பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க 1985ல் இயற்றப்பட்ட சட்டமே தடா சட்டம்

*சுற்றுச்சுவர்களையும் கம்பிக்கதவுகளையும் விட அச்ச உணர்வுதான் சிறைசாலைகளுக்கு பலமான பாதுகாப்பு

*1837ல் சென்னையும், 1880ல் பாளையும்,1865 திருச்சியும் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட சிறைகளாகும்

*பகையின் தொடக்கமும் முடிவும் மனிதனின் கையில் இல்லை

*சிறையாளிக்கு சிறையில்தரும் உடைதான் மன அழுத்தம் தரும் முதல் விஷயம்

*மனித மூளை அளவில் சிறிதாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளையும் சிந்தனை திறன்களையும் அளவிட முடியாது.

*2013ம் ஆண்டு சிறையாளிகளுக்கு தொலைபேசி வசதி கொண்டு வரப்பட்டது.வாரம் ஒரு முறை 6 நிமிடங்கள் பேசலாம்.கட்டணம் ரூ30

*சாந்தனின் கவிதை கொஞ்சம் மனம் கனக்க வைக்கிறது

வேர் இல்லை
நெடுங்காலமாக வாழ்கிறது
தூக்கு மரம்

*ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் பாம்பு ஒன்றை பிடித்துக் கொடுத்தால்.தண்டனை காலம் 2 மாதம் முதல் 3 மாதம் வரை குறைக்கப்படும். தற்போது கடைபிடிப்பதில்லை.

இப்புத்தகத்தின் ஒரு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன். பக்கத்துக்கு பக்கம் ஏதேனும் ஒரு நிகழ்வு அது முடிந்தவுடன் அடுத்தது என நீள்கிறது.சிறை குறித்து அங்குலம்.அங்குலமாக பேசியுள்ளார். அத்தனை அதிகாரிகளையம் நினைவில் வைத்து  எழுதியுள்ளார். வித்தியாசமான வாசிப்பு அனுபவம்

தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 27 May 2026

book-29


#Reading_Marathon2026
#26RM009

Book No:29/150+
Pages:-361

உங்களால் வெல்ல முடியும்
-ஷிவ் கோரா

வெற்றி என்றாலே அது அதிர்ஷ்டத்தில் வந்துள்ளதாக எண்ணுவர்.தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லையெனில் அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக்கொள்வர்.இப்புத்தகம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மந்திரவார்தையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லியிருக்கார்.முதலாவதாக வெற்றிக்குத் தேவை மனப்பாங்கு என்கிறார்.இதற்கு உதாரணமாக விவசாயி-வைரம் கதையை சொல்கிறார். அக்கதை சொல்ல வந்த கருத்திற்குமிகவும் பொருத்தமாக இருக்கிறது.

நாம்.உடனிருக்கும் பணியாளர்களை கையாளவது பற்றிய கார்னெஜியின் விளக்கம்..நாம் தங்கத்தை தோண்டி எடுக்க முனையும்போது மண்ணை பார்க்க மாட்டோம். தங்கத்தை மட்டும் தேடுவதுதான் நம் நோக்கம் போல் நேர்மறை எண்ணங்களை பயன்படுத்துங்கள் என்கிறார்.
நல்லனவற்றை செய்வது, கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டு நில்லாமல் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்றுவது, 

அறிவு என்பது எதையும் விரைவாகக் கற்பது. திறமை என்பது கற்றதைச் செயல்படுத்துவது. செயல் திறன் என்பது கற்றதைச் செயல்படுத்தும் திறமையும் விருப்பமும் ஆகும். விருப்பம் என்பது திறமை படைத்த ஒரு மனிதரைச் செயல்திறன் உடையவராக மாற்றும் ஒரு மனப்பாங்காகும். எத்தனையோ திறமைசாலிகளெல்லாம் செயல்திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள். நல்ல மனப்பாங்கு இல்லாத மனிதர்களிடம் இருக்கும் திறமைகள் உபயோகமில்லாமல் போய்விடும்.ஆகவே அறிவையும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் வெற்றி அடைய உள்ள விசயங்களை கதைகள் உரையாடல்கள் வழியே முன்வைக்கிறார்.வெற்றி என்பது புரியாத புதிர் அல்ல;மாறாக சில அடிப்படைக்கொள்கைகளை விடாமல் பயன்படுத்துவதால் வரும் விளைவு ஆகும்.ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைவதே வெற்றியாகும் என்கிறார் ஏர்ல் நைடிங்கேல்.உதாரணத்திற்கு கூட்டுப்புழுவில் இருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவரும் சமயத்தில் யாரும் உதவக்கூடாது என்றார் ஆசிரியர். ஆனால் ஒரு மாணவர் அப்பூச்சி போராடுவதை பார்த்து உதவியதால் அது இறந்தது. ஆசிரியர் உடனே அப்போராட்டம் தான் அப்புச்சி உயிர்வாழி முக்கியமானது என்று விளக்கி தடைகளை தாண்டினால் உயிர்வாழ்வது சாத்தியம் என்றார்.

சில வரலாற்று செய்திகள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளன
"ரிச்சர்ட் ப்ளெச்னிடென், 1904 இல், செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் இந்திய டீயின் விற்பனையை மேம்படுத்த எண்ணினார். மிகவும் சூடாக இருந்ததால், அவரது டீயை யாருமே மாதிரிக்குக்கூட குடித்துப் பார்க்கவில்லை. மற்ற எல்லாக் குளிர்பானங்களும் நன்றாக விற்றுக் கொண்டிருப்பதைப் கவனித்தார். தன் டீயைக் குளிர வைத்து, சர்க்கரையுடன் கலந்து விற்கலாம் என்ற யோசனை திடீரென்று அவருக்குத் தோன்ற, அப்படியே அவர் செய்தார். மக்களும் அதை விரும்பினார்கள்.அதுவே உலகிற்கு குளிர்ந்த டீயை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாகும்.

ஒரே வேலைதான். ஆனால் பணியாளர்கள் வெவ்வேறு மனநிலையில் பணியை ஏற்பதால் அயர்ச்சி ,எதிர்மறைத்தன்மை ஏற்படுகிறது. இதை களைவதற்கான வழியை சொல்கிறார். பணியிடத்தில் அகத்தூண்டல், புறத்தூண்டல் செயல்ப்டும் விதம் அழகியகதை மூலம் விளக்கப்படுகிறது. "ஒரு பணியாளரிடம் வாடிக்கையாளர் 'இங்கே எப்போதிலிருந்து வேலை செய்கிறீர் எனக் கேட்டதற்கு என்னை அவர்கள் வெளியேற்றிவிடுவேன் என பயமுறுத்திய நாளிலிருந்து என்று பதிலளித்தார்.இதற்கு நேர்மாறாக ஊக்கம், பொறுப்புணர்வு மிகுந்த அகவயத்தூண்டல் எவ்வாறு ஊழியர்களை பணிசெ ய்ய வைக்கிறது என்பதன் உதாரணத்தையும் நமக்குத் தருகிறார்.

வெற்றி பெறுவதற்கு சுய கெளரவம் மிக முக்கியம். பென்சில் விற்கும் பிச்சைக்காரரிடம் நீங்களும் என்னை போல் வியாபாரி தான் என்று கூறி பிச்சையிடாமல் பென்சில் வாங்கியது அவரை ஊக்குவித்து வெற்றியடைய வைத்தது.பொருள் பற்றிய அறிவை விட மக்களைப் பற்றிய அறிவுதான் வியாபாரிக்கு மூலதனம்.ஹென்றி போர்ட் v8 என்ஜினை உருவாக்க அவரின் உதவியாளர்கள் சாத்தியமில்லை என்றனர். இறுதியில் அவரே ஊக்குவித்து உருவாக்கினார். கல்வியின் வன்முறையைத் தாண்டி கற்பனையை ஓட விட்டதால் இக்கண்டுபிடிப்பு சாத்தியமென்றார்.

அகம்பாவம் என்பது முட்டாள்தனத்தின் வலி தெரியாமல் இருக்கச் செய்யும் மயக்க மருந்தாகும் என்கிறார் நியூட் ரோக்னே. வெற்றி பெற தேவையானது அகம்பாவமில்லாமல் இருப்பது.எப்போதும் மற்றவர்களிடம் நன்றியுடன் இருப்பது முக்கியமாகும்.ஒரு பவுண்ட் கெட்டிக்காரத்தனத்தை விட ஒரு அவுன்ஸ் விஸ்வாசம் அதிக மதிப்பு உடையது.நேர்மையாய் இருப்பது உண்மையாய் இருப்பது பொறுமையுடன் செயல்படுவது என ஒவ்வொரு அத்தியாத்திற்கும் ஏற்ற பொன்மொழிகள் சிறு துணுக்குகள், கதைகள் முடிந்தபின் அதற்குரிய செயல்திட்டங்கள் விளக்கமாய் கொடுக்கப்பட்டுள்ளன.

இலக்குகளே வெற்றியை அடைய கவனச் சிதறலின்றி ஓடவைக்கிறது.
ஒரு தரமான புகைப்படம் எடுக்க கேமராவிற்கு ஃபோகஸ் முக்கியமோ அதுபோல இலக்கும் முக்கியமானது.
அர்த்தமில்லாத இலக்கையும் குறிப்பிடுகிறார்..ஒரு நாய் ஒவ்வொருகாரையும் பின் தொடர்ந்து குரைக்கும்.அந்த காரை பிடித்து விட்டால் அந்த காரை வைத்து அந்த நாய் என்ன செய்ய இயலும் என கேள்வி எழுப்பும்போது அர்த்தமற்ற இலக்குகளை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கிறது.

நூற்றுக்கணக்கானவர்களோடு ஒரு மூன்று நபர்கள் மராத்தான் பந்தயத்தில் ஓடினார்கள். பதக்கத்தை வென்றதோ நான்காவது நபர். அதற்காக இந்த மூவரும் தோல்வியடைந்து விட்டார்கள் என்று பொருளாகுமா? இல்லவே இல்லை. அந்த மூவருமே வெவ்வேறு
குறிக்கோள்களுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். 

முதலாமவர், தன் நீடித்த உறுதிப்பாட்டைச் சோதிக்க ஓடினார், இரண்டாமவர், முன்னர் தான் நிகழ்த்தியதை விட முன்னேற்றிக் காட்ட விரும்பினார்;மூன்றாமவர், தன் வாழ் நாளில் அதற்கு முன்னால் மராத்தானில் ஓடியதே இல்லை. அவரது குறிக்கோள் பந்தயத்தில் முழுமையாக ஓடி இலக்குக் கோட்டை அடைந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதனையே அவரும் செய்தார். இவை நமக்கு என்ன சொல்கின்றன? வெவ்வேறு குறிக்கோள்களை உடைய அந்த மூவரும் அவற்றை நிறைவேற்றினார்கள். ஆகவே, யார் பதக்கத்தை வென்றிருந்தாலும் அவர்கள் எல்லோருமே வெற்றியாளர்களே.

மார்க் ட்வைன் சொன்னதுபோல, ஒரு கௌரவத்தைப் பெற்றிருந்து, அதற்குத் தகுதியற்று இருப்பதை விட அதைப் பெறும் தகுதி இருந்தும், அதனைப் பெறாமல் இருப்பதே சிறந்ததாகும். ஏனென்றால், மதிப்பு என்பது தகுதி பெற்று இருப்பதே தவிர வேறு எதையும் பெற்றிருப்பது இல்லை.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 11 May 2026

வெறுப்பு இறந்த காலத்திலும் எதிர் காலத்திலும் இருப்பது… நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது… இறந்த கால, எதிர்கால தொடர்பில்லாமல் வெறுப்பு காட்டவே முடியாது.அன்பு செய்யுங்கள் இந்த உலகம் மீண்டும் சுவர்க்கமாகும்.அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவை இல்லை. அது தான் அன்பின் அழகு. அது தான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம், ஒரு சிறை.உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதை பகிர்ந்து கொள்வதற்கும் பொழிவதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமே தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.' - ஓஷோ

book-28


#Reading_Marathon2026
#26RM009

Book No:28/150+
Pages:-287

மன வளர்ச்சி குறைபாடுகள்
-டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா

பத்தாண்டுக்கு முன் ஆட்டிசம் என்பது புத்தகத்தில் மட்டும் படிக்கக்கூடியதாக எங்கோ ஒன்று இருப்பதாக கேள்விப்படுவோம்.

குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைபாடுகள் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. முன்பு அவர்களை.ஒதுக்கி வைப்போம் தற்போதைய சூழலில் ஆட்டிசம் குறித்த விழிப்பிணர்வு அதிகரித்துள்ளது.கற்றவர்கள் மத்தியில் கூட தெளிவின்மை நிலவுகிறது.மற்றொருபுறம் கல்வி என்பது அடைவுகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது.

உலகெங்கும் 12 முதல் 14 மாதத்தில் மற்றவர் உதவியின்றி நடக்கும் ஆற்றலை பெறுகின்றன. இது 18மாதத்துக்கு மேல் தாமதமானால் அறிவுத் திறன் குறைபாட்டின் முதல் அறிகுறி ஆகும்.

பேசுதல், தகவல் பரிமாற்ற இடர், மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யும் மனப்பாங்கு இம்மூன்றும் ஆட்டிசத்தை அடையாளப்படுத்து கின்றன.நூறில்ஒரு  குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது.ஆட்டிசம் ஒன்று அல்ல, கடுமையான, மிதமான, லேசான என வகைப்படுத்தலாம். ஆட்டிசம் கண்டுபிடித்த வரலாறு,அது நரம்பியல்சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு என்பது உள்ளிட்ட அதன் அறிகுறிகளை சொல்கிறது. முதலாவதாக மொழித்திறன் குறைபாடே குறைவாக பேசுதல், பேச்சுமொழியை புரிந்து கொள்வதில் சிக்கல்,பயன்பாட்டு மொழிச்சிக்கல் போன்றவை பேசுவதில் இடர் ஏற்படுத்துகின்றன.

ஒரே செயலை தொடர்ந்து செய்தல், சில விஷயங்களில் அபார ஈடுபாடு இருக்கும்.மரபியல் சார்ந்த காரணமோ, மூளைச்சேதமோ, நரம்புக் கோளாறு, ஆனால் அறியப்பட்ட காரணங்களில் மிக சொற்பமே ஆட்டிசம் தோன்ற காரணமாக அமைகிறது.நூறில் ஒருவருக்கு ஆட்டிசம் தற்காலத்தில் வருகிறது.அதிலும் ஆண்களுக்கு அதிகம்.3வயதுக்கு முன்பே தெரிய வருகிறது.சுமாரான ஆட்டிசம் உள்ளவர்களுக்கு பதின்ம வயதுவரை கூட அடையாளம் காணப்படுவது இல்லை.இவை எந்த வித எக்ஸ் ரேவிலும் தெரியாது. வளர்ச்சி மற்றும் செயல்களின் மூலமே கண்டறிய முடியும். இந்நூலில் தரப்பட்டுள்ள அறிகுறிகள்,கேள்விப்பட்டியல் பகுதி இதனை விளக்குகிறது.

புதிய திறன்களை கற்பிப்பது, பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி, தொடர் செயல்களையும் மிதமிஞ்சிய ஈடுபாட்டைக் குறைப்பது, சமூக திறன் மேம்படுத்துதல்,புலன்களை ஒருமைப்படுத்துதல் தான் சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது. இதில் பெற்றோர் ஆசிரியர்களின் பங்கே பிரதானம்.வயது வந்தவர்களின் ஆட்டிசம் குறித்த தரவுகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

#அறிவுத்திறன் குறைபாடு

வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி இல்லாததும், அன்றாட செயல்களில் பின் தங்கி இருப்பதும் ஆகும். இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் தடையினால் உண்டாகும் ஒரு பற்றாக்குறை ஆகும்.அறிவுத் திறனில் எல்லாத்திறன்களும் சராசரிக்கு குறைவாக இருக்கும். டிஸ்லெக்சியாவில் வாசிப்புமட்டும் குறைவாய் இருக்கும்.அறிவு திறன் குறைபாட்டினால் தாமதமாக கற்பது, சிந்தனை திறன் குறைவு, கற்பதில் இடர்கள் ஏற்படும்.கற்றலில் பின் தங்கி இருப்பார்கள்.இதிலம் சுமார், மிதமான,கடுமையான, மிககடுமையான, என நான்கு நிலைகள் இருக்கிறது. சுமாரான அறிவுத்திறன் குறைபாடு உடையவர்கள் 5&6 ம் வயதில் தெரியவரும்.தன் ஒத்த வயதினரைவிட இரண்டு ஆண்டுகள் பின் தங்கி இருப்பர் . இதனை ஆசிரியரும் பெற்றோரும் சோம்பேறித்தனம்,அக்கறையின்மை என நினைத்துவிடுகின்றனர்.

சரி படிக்கவில்லை எனில்  எல்லாரும் அறிவு சார் குறைபாடா என்றால் இல்லை.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்,வாய்ப்பு குறைந்த குழந்தைகள் ஆவர். கற்றலில் மட்டும் பின் தங்கி வேறு செயலாக்கத்தில் திறன் வாய்ந்தவராக இருந்தால் அவர்கள் மெதுவாய் கற்போர் இல்லை.தேவையான பயிற்சிகள் கொடுத்தால் முன்னேறுவர்

ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள் பற்றிய செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அவர்களின் குணாதிசயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.நடத்தை சார்ந்த பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் பற்றிய குறிப்பும் விரிவாக உள்ளது 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் குறைபாடுகளை உணர்ந்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.மற்ற குழந்தைகளடன் ஒப்பிடுதல் கூடாது. அவர்களின் முன்னேற்றம் குறைவாகத்தான் இருக்கும் என எண்ண வேண்டும்.அவர்கள்.கற்ற விஷயங்களை மறந்துவிடுவர் எனவே பொறுமையை கையாள வேண்டும்.அக்கறையுடன் செயல்பட வேண்டும்.ஆசிரியர்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்.

#கற்றல் குறைபாடு

கற்கும் வாய்ப்பு இருந்தும் பின்தங்கி இருப்பர்.வாசிப்புத்திறன் குறைபாடு, மிகை எழுத்துப் பிழைகள், முக்கிய அடையாளங்கள். மூளை வளர்ச்சியின் போதுவாசிப்புக்குத் தேவையான நரம்பு வலை பின்னல்கள் சரிவர செயல்படாததால் இக்குறைபாடு ஏற்படுகிறது.ஒரு மனிதனின் வாசிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை சார்ந்த கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா.ஜெர்மன் கண் மருத்துவர் ருடால்டாஃப் பெர்லின் எனும் கண் மருத்துவர் 1887ல் டிஸ்லெக்சியா என்ற சொல்லை உருவாக்கினார்.பின் 1896

பிரிங்கிள் மோர்கன் எனும் பொது மருத்துவர் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் விவரித்து எழுதினார். இது பாதிக்கப்பட்டவர் 50-70% பேருக்கு கணக்கு கையெழுத்து திறன்களில் குறைபாடு இருக்கும். இதனால் பலர் தவறாக புரிந்துகொண்டு பள்ளியை விட்டு நிறுத்திவிடுகின்றனர். வாசிப்பு, எண் கணிதம், கையெழுத்து மூன்றும் ஒரே குழந்தையிடன் காணப்பட்டால் கற்றல் குறைபாடு எனலாம்.டிஸ்லெக்சியாவை மூளையை ஸ்கேன் செய்தால் கூட தெரியாது.சோதனைகள் மூலமே அறிய முடியும்.தனிச்சொல் வாசிப்பு சோதனை, போலிச் சொற்கள் எழுத்து கொண்ட வாசிப்பு சோதனகளை கொடுத்து பயிற்சி செய்யலாம்.

பேசுதல், நடத்தல் போல வாசிப்பு இயல்பாய் வருவதில்லை. அது பயிற்சியின் மூலமே மட்டுமே வருகிறது.ஜப்பானிய் மொழியில் ர எனும் எழுத்து இல்லை.அவர்கள் ர என்பதை ல என்று உச்சரிக்கிறார்கள். ராதா என்பதை லாதா என்றே சொல்கிறார்கள். இப்படிதான் பலரின் உச்சரிப்பும் அவர்கள் வளர்ந்த சூழல் பொறுத்து மாறுபடுகிறது.வாசிப்பும் வாசிப்பதை புரிந்து கொள்வதும் வெவ்வேறான செயல்பாடுகள். புரிந்து கொள்வதிலும் குறைபாடுகள் வருகிறது.மொழியின் உச்சரிப்பு தமிழும் ஆங்கிலமும் வேறுபடுவதை அறியலாம். அதனை உச்சரிக்கும் விதத்தில் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

வீட்டில் குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.ஒலிப்பு முறைகளை கற்றுக் கொடுக்கலாம். அடிப்படை கணிதத்திறன் மேம்படுத்தலாம் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கான அறிவுரைப்பகுதியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 10 May 2026

லதா


எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது நம் தராசில் வைத்து குறை கூறிக் கொண்டும் வன்மம் கக்கிக் கொண்டுமே ஏன் இருக்கிறோம்? 

நம் எண்ணம் மட்டுமே சிறந்தது. நாம் வாழும் முறை, கடைபிடிக்கும் கொள்கைகள் மட்டுமே சிறந்தது என நினைப்பதும் மற்றவர் தனிப்பட்ட வாழ்வில் புகுந்து அவர் இப்படி செய்வது சரியில்லை, அவர் அப்படி வாழ்வது முறையில்லை என்று எப்பொழுதும் எதையாவது கிளறிக் கொண்டே இருப்பதும் எவ்வாறு சரியாக இருக்க முடியும்? 

இங்கு அனைவரும் ஒரே பாதையில் பயணிப்பவர் இல்லை. அவரவர் பாதை அவரவரை செதுக்கியிருக்கும். ஆனால் எதோ நாமெல்லாம் ஒரே மோல்டில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் போலும், இம்மி பிசகாமல் அனைவரும் ஒரே போல் தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், அது மட்டுமே சரியென வாதாடுவது நம்மை முட்டாளாகத்தான் பொருள்பட வைக்கிறது. 

கலாச்சார காவல்காரர்களை நிந்தித்து, முற்போக்கு மனப்பான்மை கொண்டவர்களாக தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூட, தனக்கென ஒரு லட்சுமண ரேகை வரைந்திருக்கிறார்கள் இதைத் தாண்டக் கூடாது, இதைத் தாண்டலாம் என. இதில் ஒரு தவறுமில்லை. அது தனக்கான எல்லைக் கோடாக வைத்திருக்கும் வரை. ஆனால் அதே எல்லைக்கோட்டை வேறொருவர் தாண்டினால், அங்கு இவர்களும் கலாச்சாரக் காவலர்களாகத்தான் ஆகிவிடுகிறார்கள். 

அதாவது மனிதர் எத்தனை இழிவானவர்கள் என்றால் தனக்கென வருகையில் தான் தாண்டியவரை எல்லாம் சரி, ஆனால் இன்னும் நாம் தாண்டாதவற்றை மற்றவர் தாண்டும்போது அங்கு நம்மால் அதை ஏற்க இயலாது போகிறது, உடனே அங்கு நாம் நீதிபதியாக மாறுகிறோம். 

இதில் பிற்போக்கு என்ன முற்போக்கு என்ன? மற்றவர் சொந்த வாழ்வில் அழையாத நீதிபதியாக உள்ளே நுழைந்து தராசை கையில் ஏந்தும் போதே நாம் நாகரிகமற்ற மனிதர்களாகிறோம். அங்கேயே எல்லா போக்கும் உடைந்துவிடுகிறது.

இன்று தினசரி வாழ்வில் தகவல்கள் அளவுக்கு அதிகமாகி வருவது பிரச்சனையல்ல,நம்மிடம் சரியான தகவல் வடிகட்டிகள் இல்லை என்பதுதான் பிரச்சனை-கிளே ஷிர்க்கி

Friday, 8 May 2026

book-27


#Reading_Marathon2026
#26RM009

Book No:27/150+
Pages:-362

மந்திரவாதியின் சீடன்
-இவால்ட் ஃப்ளிஸர்

இந்நாவலை எழுத்தாளர் இமையம் அவர்களின் பரிந்துரை செய்ததால் வாசித்தேன். தத்துவம் சார்ந்த புத்தகம் விருப்பம் என்பதால் உடனடியாக வாசித்தேன்.
நான் யார்?”, “வாழ்க்கையின் உண்மை என்ன?” போன்ற அடிப்படை கேள்விகளை கதையின் வழியாக எழுப்புகிறது.

காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்மிக பயணம் செய்யும் துறவியின் பார்வையில் நாவல் துவங்குகிறது.பத்ரிநாத் சென்று அங்குள்ள முதிய சாமியாரை சந்திக்க திட்டம்.அப்படி செல்லும் போது அதில் வித்தியாசமான மனிதர்கள், பனிமூடிய மலைப்பின்னணியில் நடந்து செல்வது, புனிதப் பயணமா, அல்லது யாரை தேடிச் செல்கிறார் ஆகியவை அடுத்து என்ன எனும் ஆர்வத்தை தூண்டுகின்றன

இளம் துறவியின் உள்ளார்ந்த தேடல், வாழ்க்கையின் அர்த்தம், சுயஅறிவு போன்ற கேள்விகளை மையமாகக் கொண்டு நகர்கிறது.

முதியவரை சந்தித்து உரையாடல் நடைபெறுகிறது.உனக்கு என்ன வேண்டும் என்கிறார்.. "முழுமை.என்னுடனும் உலகத்துடன் ஒன்றியிருத்தல் வேண்டும் என்கிறார். இதிலிருந்து உரையாடல் துவங்குகிறது.யோகானந்தர் இளைய துறவிக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

"காரணகாரிய அறிவுடைய மனதுக்கு எல்லாமே பிரச்சனைதான். ஒரு பிரச்சனைக்கான எந்தத் தீர்வும் இன்னொரு பிரச்சனையை உருவாக்குகிறது. தன்னளவில் யதார்த்தம் பிரச்சனையற்றது. அதுகுறித்த என் பார்வைதான் பிரச்சனையானது. எல்லாமே என் மூளைக்குள் நுழைந்து விடுகின்றன. என் மூளை ஒரு தேச எல்லைபோல. என் அறிவு சுங்க அதிகாரிபோல உள்ளே வரும் விலைமதிப்பற்றவற்றில் பெரும்பாலானவற்றையும், புதுமையான, அந்நிய தேசத்துக்குரிய யாவற்றையும், வித்தியாசமானவை, நிலைகுலைய எனத்தோன்றும் யாவற்றையும் கைப்பற்றிவிடுகிறது. ஒழுங்கமைவைப் பாதுகாப்பதே அறிவின் கடமை. அதுதான் மரபு. வெளியே பார்க்க ஜனநாயகவாதி; உள்ளேயோ ஒருபோதும் கண்ணுறங்காத தந்திரமிகு சர்வாதிகாரி. என்கிறார் முதியவர்.
மீண்டும் பயணம்.செய்கிறார் துறவி.

தான் என்ற எண்ணம் என்பதற்கான விளக்கம், ஒவ்வொரு நிகழ்விலும் புத்தம் சார்ந்த போதனைகளை வழங்குகிறார்.கண்களை மூடி இருக்கும்போது சுற்றுப்புற இரைச்சல்கள் துறவிக்கு மனப்போராட்டம் ஏற்படுத்துகின்றன.
இதற்கு குரு " மனச்சோர்வு இயற்கை எனும்போது ஒருவர் நிரந்தர களிப்பில் நீடிக்கமுடியாது என்கிறார்.

ஏனெனில் இவற்றை நிரந்தரமாக பிடித்து வைத்துக் கொள்ளமுடியாது. இவற்றினிடத்தை எதிர்மறை எண்ணங்கள் வந்து பிடித்துக் கொள்கின்றன என்கிறார்
நிதர்சன உண்மை என உணர்ந்தேன்.

இமயமலையின் இயற்கை வருணனைகள் நாமே அங்கிருக்கும் உணர்வை தருகிறது. குருவிற்கும் சீடனுக்குமான உரையாடல், வாழ்வியல் உண்மைகள், தத்துவம் ஆகியவை இருவரின் உரையாடலிலும் இருக்கிறது.
படித்து ரசிக்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல்.. படித்து சிந்திக்க வேண்டிய இடங்கள் அதிகம் வருகிறது.

அகச் சிக்கல்களால் அல்லாடும் சீடன் குருவுடன் சேர்ந்து ஞானத்தைத் தேடி பயணிக்கிறான். அந்தப் பயணம் வெறும் வெளி நடைபயணம் அல்ல; அது மனிதன் தன்னை அறியும் உள்பயணமாகவும் விரிகிறது. பயணமெங்கும் சந்திக்கும் மனிதர்கள், தாந்திரீகம், கனவு, இயற்கை குறித்த செய்திகள் எல்லாம் வருகின்றன.

ஹென்றி அலெக்ஸாண்டர் எனும் கதாபாத்திரம் நாவல் ஓட்டத்திற்கு உதவுகிறது.வியப்பூட்டும் சடங்குகள், தாந்திரீகம் கதைக்கு தனிச்சுவை தருகின்றன.ஒரு இடத்தில் ஹென்றி இவ்வாறு கூறுகிறார் "உங்களது இலக்கின்மீது கவனம் குவிக்க அதிக ஆற்றலைச் செலுத்தும்போது, இலக்கை அடையும் வழியின்மீது கவனம் குவிக்க உங்களிடம் குறைந்த ஆற்றலே எஞ்சியிருக்கும். 

ஏன் வாழ்கிறோம்?”, “எது உண்மை?”, “மனித விடுதலை என்றால் என்ன?” போன்ற கேள்விகள் மெய்யியல் உரையாடல் போல முக்கியமாக வருகின்றன. ஒரு இடத்தில் சொல்கிறார்

"வார்த்தைகள் என்பவை உலகின் சன்னல்மீது நாம் தொடர்ந்து எறியும், அதனை ஊடுருவிப் பார்க்க முடியாத திரையாக மாற்றிவிடும் கற்கள்தான் என்று தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையும், மிக நேர்மையான வார்த்தையும்கூட, தன்னளவில் ஒரு சிறிய பொய்யாக இருக்கிறது. அது உணர்வைச் சிந்தனைக்குள் மொழிபெயர்ப்பதாக, அதனால் அதனைத் தோராயமான ஒன்றாக மாற்றுவதாக இருக்கிறது. நாம் அனைவரிலும் சிந்தனையை மேற்கொள்வது தன்முனைப்பு, தன்முனைப்பு ஒரு முகமூடி, தன்முனைப்பு ஒரு சுயபிம்பம்" என்கிறார்.

வினாடி நேர உள்ளொளி பத்து வருட அறிமைக்குச் சமம் எனும்வரி சிந்திக்க வைத்தது.தினசரி வாழ்க்கையில் ஏதேனுமொரு பிம்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதன் தன்னைப் புரிந்துகொள்வதே ஞானத்தின் முதல் படி என்ற உணர்வு நிலைக்கிறது.

ஞானம் என்பது வெளியில் இருந்து வருவதுகிடையாது. அது உள்ளிருந்து வரும் பூரணத்துவம்.அதனை கண்டடைய யாரோ ஒருவர் தூண்டுகிறார். அவ்வாறு கிடைக்கும் அக ஒளி நமக்குள் ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கிறது. அதனை அடைந்த பின்பு புதிதாய் நமக்குள் பரவசம் பரவுகிறது. வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. வாசிக்கும் நமக்கும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 7 May 2026

நீங்கள் புத்தகம் வாசிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து உங்களிடம் காட்டினால் அப்போது தெரியும் நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து லயித்துப் போயிருக்கிறீர்கள் என்பது. உங்கள் முகபாவத்தின் வழியே சொற்கள் ஏற்படுத்திய வியப்பும் நெகிழ்வும் மகிழ்ச்சியும் கடந்து போவதை நீங்களே காண முடியும். -எஸ் ரா

சமயத்தில் கோபம் வந்தாலும்,பிறகு நினைத்துச் சிரிக்கச் செய்யும்படியான காரியம்தானே குறும்புத்தனம்? அது தப்பில்லை. ஆனால் பின்னால் நினைத்து அருவருப்பு அடையும்படியான காரியத்தைச் செய்வது அசிங்கம் அல்லவா? ~பிரபஞ்சன்.

'தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் சிறைக் கூடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?' என்று ஒருவர் பாதிரியாரிடம் கேட்டார்.எதுவுமில்லை. அங்குள்ளவர்கள் தண்டனை பெற்று விட்ட குற்றவாளிகள், ' என்று பதிலளித்தார் பாதிரியார்.-ரா.கி.ரங்கராஜன்

Tuesday, 5 May 2026

நியஅஸ்


நாம் அனைவருக்கும் cognitive bias இருக்கும் — இது மனித இயல்பு.
தரவுகள் (Data) நமக்கு பெரும்பாலும் தெளிவான கதையை சொல்லும். ஆனால் நாம் கேட்பதில்லை.

மாறாக நாம் என்ன செய்கிறோம் என்றால்? முன்பே நம்பியதை இறுகப் பற்றிக்கொள்கிறோம். உண்மைகளை நம் வசதிக்கேற்ப திரித்து புரிந்துகொள்கிறோம். நம் விருப்பத்திற்கு எதிராக இருக்கும்  தகவல்களை புறகணிக்கிறோம்

தரவை நேர்மையாக ஏற்றுக்கொண்டால்,  தீர்வுகள் எளிமையானதாக  இருக்கும். ஆனால் நாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. முன் முடிவுகளோடு அணுகுகிறோம்.

நம் அனுமானங்களால் முடிவு எடுக்காமல், உணர்ச்சிவயப்பட்டு  முடிவு எடுக்காமல், தரவுகள் பக்கம் நின்று ஒரு முடிவு எடுத்தால் தீர்வுகள் சுலபமாக கிடைக்கும்.

இதைதான் Darius Foroux எழுதிய Think Straight வலியுறுத்துகிறது.

முட்டாள்களால் வெறுக்கப்படுவது என்பது, அவர்களில் ஒருவராக நீங்கள் இல்லை என்பதற்காக நீங்கள் கொடுக்கின்ற விலையாகும்.-Jean Cocteau

Saturday, 2 May 2026

பாரி



'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' பாடலில் , 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி' என்றொரு வரி உண்டு. 

இந்த வரிகளை , 'நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி' என்றுதான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். நினைத்தது என்ன, அப்படியே பாடிக்கொண்டும் திரிந்திருக்கிறேன். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் , காணொலி ஒன்றில் ஒரு பெண்மணி விளக்கி இருந்தார். அதன் பிறகு அந்த வரிகளைத் தேடினால், நிறைய தளங்களில் 'செஞ்சமெனும் வீணை' என்றே இருந்தது. குறிப்பாக 2000 த்தின் தொடக்க காலத்தில் இருந்த இணைய தளங்களிலும் 'செஞ்சமெனும் வீணை' இருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் அவை கண்ணில் பட்டிருந்தால்கூட எப்படி தப்பா எழுதி வச்சிருக்காங்க என்று நக்கீரர் அவதாரம் எடுத்திருப்பேன். ஆனால் அதுதான் உண்மையான வரிகள் என்று அறிந்த பின், வாலியை பிரமித்தேன். 

அந்த வரியின் பொருள் இதுதான். செஞ்சம் என்பது வீணைகளில் ஒரு வகை. இந்த வீணை, சோக ராகங்களை இசைப்பதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படுபவை. ஆனால், அந்த வீணையில் தோடி ராகத்தை இசைத்தால் மட்டும் சோகம் தாண்டிய ஒரு சுகமான இசையை அந்த வீணை பிரசவிக்குமாம். வாலிக்கு இயல்பிலேயே இந்த இசை வாத்திய பின்னணி கொண்டோரோடு புழங்கக்கூடிய வாய்ப்பு இருந்ததனால் சட்டென எழுதிவிட்டார். குறிப்பாக, படத்தில் கதாநாயகனில் கதாபாத்திற்கு அந்த வரிகள் பெரிதாக பொருந்தியிருக்கும். சோகத்தை தனக்குள் நிரந்தரமாக வைத்துக்கொண்டு, பிறர்க்காக திரைப்பாடல்களை மகிழ்வாகப் பாடும் பாடகன் அவன். அவன்தான் செஞ்சம், அவன் பாடுகிற ராகங்கள் தோடியைப் போல சுகமானவையாக அமைந்து பிறரை மகிழ்விக்கும் என்கிற பொருளை அந்த வரிகள் கொண்டிருக்கும். 

'சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் 
சிரிக்காத நாள் இல்லையே' 

என்கிற வரியின் இன்னொரு வடிவம்தான் அந்த 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி'.

 , 'சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை.. எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்' என்கிற வாலியின் வரிகளிலேயே பதில் சொல்லி அமைகிறேன்.

-அ.பாரி