Sunday, 22 February 2026

tea-20


#மனசுக்கு_ஒரு_தேநீர்_20

“நான் தெரிந்தவன்” என்று நினைக்கும் நொடியில் வளர்ச்சி நிற்கிறது;
“நான் கற்றுக்கொள்கிறேன்” என்று நினைக்கும் நொடியில் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த உண்மையை வாழ்க்கை தத்துவமாக மாற்றும் எண்ணமே Beginner’s Mindset.

இந்தக் கருத்தை ஜென் தத்துவத்தில் விளக்கியவர் Shunryu Suzuki, அவர் எழுதிய Zen Mind, Beginner’s Mind நூல் உலகளவில் இந்த மனப்பாங்கை பரப்பியது.

தொடக்க மனநிலை என்பது
தெரிந்த விஷயத்தையும் புதிய கண்களால் காணும் மனநிலை.
ஒரு குழந்தை உலகைப் பார்ப்பதை நினைத்துப் பாருங்கள்.
அதற்கு எல்லாமே புதிது, அதனால் எல்லாமே அதிசயம்.அதே ஆச்சரிய உணர்வை பெரியவர்களாக இருந்தாலும் இழக்காமல் வைத்திருப்பதே இந்த தத்துவம்.
எந்த ஒரு விஷயத்தையும் முன் முடிவுகளுடன் ஆராயமல் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது ஆகும்

இதனால் சலிப்பு குறைந்து புத்துணர்வு தருகிறது.பதிலை முன்பே யூகிக்காமல் அவர்கள் சொல்லும்வரை பொறுமை காப்பது,
முன்பே இதுதான் இக்கதை சொல்ல வருகிறது என யோசிக்காமல் முழுமையாக படிப்பது,சரி தவறுக்கு
 அப்பாற்பட்டு வேறொரு கோணத்தில் சிந்தித்து நல்லவற்றை எடுத்துக் கொளவது,சிறிய தருணங்களில் கூட உணர்வு பூர்வமாக செயல்படுவது, இவ்வாறு செய்வதால் பதட்டத்தை தணிக்கச் செய்யும்.

மனம் வெறுமையாக இருந்தால் எதற்கும் தயாராக இருக்கும்.
பிரச்சினைகள் வெளியுலகத்தில் இல்லை  மனதில்தான்.உண்மை உண்மையாக காண் என்கிறது.

ஒரு பணியாளர் “I know everything” என்றால் வளர்ச்சி முடியும்.
“I’m still learning” என்றால் உயர்வு தொடங்கும்.நாம் ஒருவரை முழுமையாக தெரிந்துவிட்டோம் என்று நினைத்தால் புரிதல் குறையும்.அவரை தினமும் புதிதாய் அறிய முயன்றால் அன்பு அதிகரிக்கும்.

தொடக்க மனநிலை என்பது அறியாமை அல்ல,அது உயர்ந்த அறிவின் அறிகுறி.எப்போதும் தொடக்க நிலை மாணவனாக இருப்பவன் தான் உண்மையான ஞானி.

மனம் சோர்வடைவது கற்றல் காரணமாக அல்ல;
கற்றலை நிறுத்துவதால்தான்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜா-31


வாழ்க்கைக்கு ஹைக்கூ: 31

"நாம் சந்தித்தோம், பின் பிரிந்தோம்;
இப்போது தூரிகையும் மையும் 
இட்ட சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"

- டைகு ரயோகன் (Daigu Ryokan)

இந்தக் கவிதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிக அழகாகப் பேசுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் தோன்றுவதும் (சந்திப்பு), மறைவதும் (பிரிவு) இயற்கையான சுழற்சி. எவருமே எப்போதும் கூடவே இருப்பதில்லை.

இங்கு 'தூரிகை மற்றும் மை' என்பது ஒரு கலைப்படைப்பையோ அல்லது நாம் விட்டுச் செல்லும் நினைவுகளையோ குறிக்கிறது. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் செய்த செயல்களும், அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகளுமே உலகத்தில் சாட்சிகளாக எஞ்சியிருக்கும்.

நாம் வாழும் காலத்தில் மற்றவர் இதயத்தில் அல்லது இந்த உலகில் எத்தகைய பாதிப்பை (சுவடுகள்) ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தச் சிறிய கவிதை மகிழ்ச்சியான வாழ்விற்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நிகழ்காலத்தில் வாழுதல்: சந்திப்புகளும் உறவுகளும் நிரந்தரமற்றவை என்று உணரும்போது, தற்போது நம்முடன் இருப்பவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளத் தோன்றும்.

 2. பற்றற்ற நிலை: 
பிரிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தால், இழப்புகளால் வரும் துயரம் குறையும்.

3. நல்ல சுவடுகளை ஏற்படுத்துதல்: "நான் போன பிறகு என்ன எஞ்சியிருக்கும்?" என்ற கேள்விக்கு விடையாக, ஒரு ஓவியமாகவோ, கவிதையாகவோ அல்லது ஒரு நல்ல செயலாகவோ பிறருக்குப் பயனுள்ள ஒன்றை விட்டுச் செல்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை உணரலாம்.

"வாழ்க்கை ஒரு தருணம்; அதில் நாம் தீட்டும் ஓவியம் (நல்ல செயல்கள்) மட்டுமே என்றும் நிலைக்கும்"

Saturday, 21 February 2026

கோ.கமலக்கண்ணன்


‘நீ தகுதி உள்ளவனா?’

அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். 

தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.

தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும். 

வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர். 

ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர். 

நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார். 

நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு. 

வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார். 

இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்! 

இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.

-கோ.கமலக்கண்ணன்

வெளியே முற்றத்தில் வெயில் அனாதையாய நின்று வதைத்து கொண்டிருந்தது.அது உறவு தேடி வீட்டுக்குள்ளும்வெக்கையாய் நுழைந்தது. அவன் வீட்டிலிருந்த மின்விசிறியால் வெக்கைக்காற்றை விரட்டியடிக்க முடியவில்லை.அதன் விசிறலிலும் வெக்கைக் காற்றே அனாயசமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது-அபிமானி(மஞ்சள் என்பது நிறமல்ல சிறுகதையில்)

Tuesday, 17 February 2026

tea-19


#மனசுக்கு_ஒரு_தேநீர்_19

புதிதாக நாம் ஒன்றை கற்க ஆரம்பித்து சில நாள்களிலேயே ஏன் நாம் கைவிட்டு விடுகிறோம்?

You lose because you focus on the outcome, not the"doing"

இப்படி செய்தால், அப்படி வரும்" என்று நமக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடியதை மட்டுமே குறி வைக்கிறோம். போக வேண்டிய பாதையை பற்றி இல்லை.
வெற்றியை பெற ஒரே ஒரு வழி தான். நிலையான முயற்சியுடன், ஒழுங்காக செய்வது தான்.

அமெரிக்க உளவியலாளர் கூறுகிறார்.. ஒரு பஃபே பந்தி உள்ளது.சிறந்த உணவுகள் உங்கள் முன்னே இருக்கின்றன.அங்கு செல்வதற்கு இரண்டு அடிகள் தான் உள்ளன.அதற்கு நாம் முதலில் வரிசையில் நிற்க வேண்டும். அதே வரிசையில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அந்த உணவினை நாமே சென்று தான் எடுக்க வேண்டும். யாரும் எடுத்து வர மாட்டார்கள் என நம்ப வேண்டும்.பக்கத்தில் உள்ள வரிசை வேகமாய் செல்வது போல் தோன்றும்.ஆனால் அங்கு செல்லாமல் நிற்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுடன் ஒரே இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

உன்னுடைய துறையில் நீ நிலைத்து நிற்கவும் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.புதுப்புது விசயங்களையும்,திறமையும் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.நீ தேக்கமடைந்து நின்றுவிட்டால் உன் பின்னால் உள்ளவர்கள் உன் அருகில் உள்ளது போல் இருப்பார்கள். ஆனால் சிறிது நேரத்தில் உனக்கு முன்னால் வெகு தூரத்தில் நிற்பார்கள். ஆகவே புதிய பழக்கத்தை வசமாக்க தொடர்ந்து அதனை செய்வதுதான் சாத்தியம்.

ஒரு புத்தகத்தை படிக்க 3 மாதங்கள் கூட ஆகலாம், பரவாயில்லை. உங்கள் அக்கறை தினமும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அது தினம் ஒரு பக்கமாக கூட இருக்கலாம். நிலையான முயற்சி இருக்க வேண்டும்.

ஒரு புதிய பழக்கம் ஒன்று பழக, அது
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.எளிதாக இருக்க வேண்டும்.அதை செய்யும் பொழுது உங்களுக்கு முழு திருப்தி கிடைக்க வேண்டும்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 16 February 2026

book-14


#Reading_Marathon2026
#26RM009

Book No:14/150+
Pages:-157

உருவாகும் உள்ளம்
-எஸ்.ராமச்சந்திரன்
தமிழில் ஆயிஷா இரா.நடராசன்

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் ஆசிரியர் கே.என் சிவராமன் அவர்கள் எஸ் ராமச்சந்திரன் எழுதி ஆயிஷா நடராசன் மொழி பெயர்த்த உருவாகும் உள்ளம் என்ற புத்தகத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அப்போதே தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதன் பின்பு எதேச்சையாக புத்தகத் திருவிழாவில் வாங்கியதுதான் இந்த புத்தகம். மருத்துவராகவும் ஆய்வு உளவியலாளராகவும் அழைக்கப்படும் ராமச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கின்ற போது நிகழ்த்திய பேருரைகள், அவர் எழுதிய கட்டுரைகள் என ஐந்து பகுதிகளாக இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.

மூளையைப் பற்றி படித்த புத்தகங்களில் தலைமைச் செயலகம், விகடன் வெளியிட்ட உச்சி முதல் பாதம் வரை புத்தகத்திற்கு பிறகு மூளையைப் பற்றி மிக எளிதாக அதில் உள் நடைபெறும் மாற்றங்கள் பற்றி நமக்கு எளிமையாக இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

இந்நூல் மனித மனம், சிந்தனை, உணர்ச்சி, நினைவு போன்றவை மூளையின் செயல்பாடுகளால் எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறது.
மனிதன் காட்சிகளை எவ்வாறு அறிந்துகொள்கிறான் என்பதை மூளையின் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் மூலம் விவரிக்கிறது

ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் மறந்துவிடும் நோய் வந்து விடுவது இயற்கை. மீண்டும் தலையில் அடித்தால் அந்த நோய் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் எனக்குத் தெரிந்து இதை உடைத்தது சேது படம் தான். தலையின் அடிபட்ட பின் சித்த வைத்தியம் மூலமாக நினைவுகளை மீட்டுக் கொணர்வது. இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தலையில் அடிபட்ட பின் அல்லது மூளையில் ஏதேனும் ஒரு இடத்தில் பழுதாகி விட்டால் முகக்குருடு என்று அழைக்கப்படும் அமைக்டாலா என்னும் அமைப்பு உள்ளது. இது உணர்வு மண்டலம் மையங்களுக்கு தொடர்பு கருவியாக உள்ளது எனவும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நினைவு மறதி உள்ளிட்ட தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் விரிவாக இதில் சொல்லியுள்ளார். மேலும் மூலையில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவாக இதில் சொல்லியிருப்பார்.

சிரிப்பு ஏன் வருகிறது?சாலையில் ஒருவர் விழுந்தவுடன் வரும் சிரிப்பு? எதனால் ஏன்? மூளை நரம்புகள் என்ன செய்கின்றன என்பதை காரணத்துடன் கூறுகிறார்.

பார்வையின் வழியே கவனிப்பதை மூளை எவ்வாறு கண்டுணர்கிறது? அப்போது எந்த நரம்பின் பங்குபெறுதலால் இது நடக்கிறது?
மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்?
மிரர் அக்நோசியா,மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நியூரான்களின் பெரிய பங்கு என இதற்கு அறிவியல் பூர்வ எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார்.

கலைத்திறன் கூறுகள் மனித மூளையில் உள்ளனவா? அதற்கு பேராசிரியர் 10 வித பொதுவிதிகளை முன் வைக்கிறார்.கேலிச்சித்திரங்கள்

சோழர் கால சிற்பங்கள் போன்றவற்றை விளக்கி புள்ளிகளை கோர்வையாக அணிப்படுத்தி உருவத்தை கண்டுபிடிக்கும் வேலையை மூளை செய்கிறது. பரிணாமம் அடைந்த பிறகு மூளையின் அதீத உந்துதலுடன் அவற்றை உணர்வது நேரடி காரணமாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.மேலும் மில்லர், ஸ்டீவ் பிங்கரின் கலை குறித்த கோட்பாட்டினை பொருத்திப் பார்க்கிறார்.

மனித மனத்தின் இயல்பை அறிவியல் கோணத்தில் புரிய வைக்கும் சிறந்த அறிவியல் அறிமுக நூல்.உணர்ச்சி உருவாகும் நரம்பியல் காரணங்கள்,மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்,டிஸ்லெக்சியா போன்ற கற்றல் கோளாறுகள் தொடர்பான ஆய்வுகள், சைனஸ்தீசியா நோய் குறித்தும் விளக்கியுள்ளார்  மூளை குறித்த வந்த புத்தகங்கள் பைபாஸ் ரோட்டில் செல்வது போல் இருக்கும்..இது மூளையை நரம்புகளுடன் இணைத்து கூறும்போது பைபாஸிலிருந்து ஊருக்குள் போய் வருவது போல நுண்ணிய பல பகுதிகளை விவரித்துள்ளார். இது அறிவியல் நூல் என்ற பயமே ஏற்படாமல் அழகிய எளிய தமிழில் ஆயிஷா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 15 February 2026

tea-18


#மனசுக்கு_ஒரு_தேநீர்_18

உலகின் பிரபலமான ஐந்து விதிகள். 

1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.

கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும். 

2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள்  என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள். 

எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும். 

3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே. 

யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல. 

4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும். 

அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை. 

5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 

தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.

நன்றி:ஷான்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 10 February 2026

எல்லாத் துயரத்திற்கும் முன்பாக அதன் வேர்க் கிழங்காக ஓர் இன்பம் ஒளிந்திருக்கும். துயரங்கள் காலத்தின் வெளிச்சத்தில் கருகி வீழ்பவை. வேர்க் கிழங்குகள் ஒருபோதும் அழிவதில்லை. மண்ணுக்குக் கீழே அவை உறங்கிக்கொண்டே இருக்கின்றன. -திருச்செந்தாழை

tea-17


#மனசுக்கு_ஒரு_தேநீர்_17

இன்றைய சமூக ஊடக காலத்தில் மனிதனின் பங்கு அளப்பரியது. கவனம் மிகப் பெரிய நாணயமாக மாறியுள்ளது. அந்தக் கவனத்தைப் பிடிக்க சிலர் அன்பையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்; இன்னும் சிலர் கோபத்தை. கோபத்தைத் தூண்டி, அதன்மூலம் பார்வை, பகிர்வு, விவாதம் ஆகியவற்றைப் பெருக்கும் யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

2015ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் தான் Rage bait.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் எனலாம். 

மக்களை உண்மையைச் சிந்திக்க வைப்பதற்காக அல்லாமல்
அவர்களை உடனடி கோபத்திற்கு தள்ளுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.உணர்ச்சி வசப்பதிவுகள், பாதி உண்மை, மிகைப்படுத்துதல்கள் இவைகளே ஆயுதம் Rage bait.

“If you want to control people, make them angry.”போல

மனித மனம் அமைதியை விட கோபத்திற்கே வேகமாக எதிர்வினை செய்கிறது.முகம் தெரியாத ஒருவர் மீது வன்மத்தை வார்த்தைகளில் உமிழ்கிறோம்.உரையாடத் தெரியாமலோ சிந்தனை வறட்சியாலோ வாக்குவாதம் செய்கிறோம்.சிந்தனை மேடையாக இல்லாமல்.சந்தைக் கடை போல் கூச்சலிடுகிறோம்.தனது கருத்துதான் சரி என்பதை வலுப்படுத்த எந்த எல்லை வரையும் செல்லத் தயங்குவதில்லை.

சில எதிர் கருத்துகளுக்கு குழுவாக வந்து திட்டி கோபத்தை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள் ஆன்லைன் யுகத்தில்.
செனிகா எனும் அறிஞர் கூறுகிறார்..“We suffer more often in imagination than in reality.” உண்மையை விட கண்மூடித்தனமான கற்பனைகளுக்கு அதிக இடம் அளிக்கிறோம்

Rage bait நம்மிடம் ஒரு முக்கியமான வாழ்வியல் பாடத்தைச் சொல்கிறது:
எதை நாம் கவனிக்கிறோமோ, அதையே நாம் வளர்க்கிறோம்.
ஒவ்வொரு தூண்டிவிடும் பதிவுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வினை ஆற்றாமல், தன் கருத்திற்கு உடன்படவில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவது சுலபம். 

சில நேரங்களில் மௌனம் தான் மிகச் சக்திவாய்ந்த எதிர்வினை.
“You don’t have to attend every argument you’re invited to.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 9 February 2026

tea-16


#மனசுக்கு_ஒரு_தேநீர்_16

Theory X & Theory Y 

“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"

 எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y. 

இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.

Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது

“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்

Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று  நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor

இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது. 

இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம். 

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.

புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 7 February 2026

ஜா-28


வாழ்க்கைக்கு ஹைக்கூ 28

“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”

- யமகுச்சி சோடோ

ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.

இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.

இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.

செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.

ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.

Thursday, 5 February 2026

book-11


#Reading_Marathon2026
#26RM009

Book No:11/150+
Pages:-160

தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்

கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.

“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”

என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.

இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்

மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..

ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?

'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.

கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..

"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.."  என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.

ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.

கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.

சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..

அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.

ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.

இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.

காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.

விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு