#Reading_Marathon2026
#26RM009
Book No:11/150+
Pages:-160
தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்
கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.
“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”
என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.
இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்
மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..
ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?
'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.
கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..
"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.." என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.
ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.
கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.
சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..
அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.
ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.
இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.
காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.
விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு