Saturday, 7 February 2026

ஜா-28


வாழ்க்கைக்கு ஹைக்கூ 28

“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”

- யமகுச்சி சோடோ

ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.

இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.

இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.

செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.

ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.

No comments:

Post a Comment