Thursday, 30 October 2025

189


#கற்கை_நன்றே_189

இங்க learning என்பது மாரத்தன் ஓட்டம் மாதிரி..
அப்டேட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கணும்.

-ஜெய்

டாம் கானல்லன் எழுதிய 1% தீர்வு புத்தகத்தில் குறிப்பிடும் நிகழ்வு..

கென் என்பவர் தன் மகன் ஜேக் அணியினர் கால்பந்து விளையாடுவதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். முந்தைய போட்டிகளில் எதிரணியினர் தான் வெற்றி பெற்றிருந்தனர்.மகனின் புதிய பயிற்சியாளர் ஜிம்.. போட்டியில் ஜேக்கின் மீது பார்வையை செலுத்தினார். எதிரணி நீண்ட நேரம் கோல் போடாமல் இருந்ததை சுட்டிக்காட்டி ஜேக்கை லாவகமாக பந்தை வாங்கி கோல் போட சிக்னல் கொடுத்தார்.ஜேக்கின் அணியின் கோல் போட்டு வெற்றி பெற்றனர்.இந்த கொண்டாட்டத்துக்குப் பின்

“ஜிம், உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”என தந்தை கேட்டார்

இக்கேள்வியை எதிர்பார்த்த பயிற்சியாளர் “சிறுவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்போதும் எனக்கு மனநிறைவைக் கொடுத்து வந்துள்ளது என்றார்.

“அதற்கு முதற்காரியமாக, மற்ற விளையாட்டு வீரர்களிடமிருந்து, தலைசிறந்த விளையாட்டு வீர்ர்களை எது தனித்துவப்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தேன். வீரர்களின் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படும் இடம் ஒலிம்பிக் போட்டிதான்.2006ம் ஆண்டு ஒலிம்பிக்கில்  முதலாவதாக வந்தவருக்கும் நான்காவதாக வந்தவருக்கும், அதாவது, தங்கப் பதக்கம் பெற்றவருக்கும் பதக்கம் எதையும் பெறாதவருக்கும் இடையே இருந்த கால இடைவெளி வெறும் 1.08 நொடிகள்தான். அதாவது, 0.9 சதவீதம் மட்டும்தான்,” என்று கூறினார்.

இதனை நான் ஆராய்ந்தேன். “அபூர்வமாக சில சமயங்களில் அது ஒரு சதவீதத்திற்கும் சிறிது கூடுதலாக இருந்தது.“நான் இறுதியாக இந்த முடிவிற்குத்தான் வந்தேன்: சிறந்த ஆட்டக்காரருக்கும் மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் இடையே இருந்த இடைவெளி ஒரு சதவீதம் மட்டும்தான்.”
நம் ஒவ்வொருவராலும் நூற்றுக்கணக்கான விஷயங்களில் 1 சதவீத மேம்பாட்டை அடைய முடியும்.”
நேர்மையான நோக்கு, குழு மனப்பான்மை, தகவல் பரிமாற்றம், விடாமுயற்சி, அடிப்படை விளையாட்டுத் திறன்கள் போன்றவற்றில், 1 சதவீதம் முன்னேற வேண்டும் என்று நான் இந்தச் சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். அந்த விளைவுதான் வெற்றி.

“சில சமயங்களில், ஒரு சாதனையை முறியடிக்க நம்மால் முடியாது என்று நமக்குத் தோன்றிவிட்டால், கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படுவதில்லை.”“எல்லோராலும் மகத்தான சாதனைகளைப் படைக்க முடியாவிட்டாலும்கூட, தாங்கள் இப்போது இருப்பதைவிட மேம்பட்ட ஒருவராக ஆக அவர்களால் கண்டிப்பாக முடியும்.

ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாசகம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?”  “‘வேகமாக! உயரமாக! வலுவாக!’ “
 உச்சகட்ட வேகம் என்றோ, உச்சகட்ட உயரம் என்றோ, அல்லது உச்சகட்ட வலு என்றோ இங்கு குறிப்பிடப்படவில்லை. அதாவது, முன்பு இருந்ததைவிட அதிக வேகமாக, அதிக உயரமாக, அல்லது அதிக வலுவாக இருக்க வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது.”

1% மேம்பாடு ஒட்டு மொத்த வெற்றிக்கும் காரணமாகிறது

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

109


#Reading_Marathon2025

#25RM055

Book No:109/150+

Pages:-343

#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்

கங்கணம்

-பெருமாள்.முருகன்

பெருமாள்.முருகன் அவர்களின் புத்தக்த் தலைப்பே வித்தியாசமாகவும், கதையின் மைய சரடை தொட்டு விளக்கும் படியும்..அந்த வார்த்தையின் பவரையும் உணர்த்தும்.அந்த வகையில் கங்கணத்தை பற்றி விளக்கும் போது..

கங்கணம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. திருவிழாக் காலத்திலும் திருமணத்தின் போதும் கையில் கட்டும் மஞ்சள் கயிற்றுக்குக் கங்கணம் எனப் பெயர். அது ஆகுபெயராகிக் கைவளையைக் குறிப்பதும் உண்டு. மஞ்சள் துண்டைக் கயிற்றில் இணைத்துக் கையில் கட்டும் சடங்குக்குக் கங்கணம் கட்டுதல் என்று பெயர். கங்கணம் கட்டிவிட்டால் அக்காரியம் முடியும் வரைக்கும் வெளியே செல்லக்கூடாது, வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்பன நடைமுறைகள். ஏனெனில் திருவிழாவும் திருமணமும் கவனக்குவிப்பு வேண்டும் முக்கியமான காரியங்கள். ஏதோ செயலில் ஈடுபட்டு அச்செயலை முடிப்பதில் தீவிரக் கவனம் கொண்டிருக்கிறான் எனப் பொருள்.

இளமையில் மணப் பெண்களை சலித்து தேடினால்

முப்பதுக்கு மேல் மணப்பெண்ணை தேடி சலிக்கனும் என நறுக்கு ஒன்றை எழுதியிருந்தேன்.அதற்கு முற்றிலும் பொருந்துவது இந்நாவல். மாரிமுத்து அந்த பகுதியின் ஜமீன்போல. ஏகப்பட்ட நில புலன்களுக்கு சொந்தக்காரர். அவரின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பனின் பார்வையில் நாவல் துவங்குகிறது.மாரிமுத்துவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவரின் அப்பாவும் அம்மாவும் ஒரு பொருள் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கமாட்டர்கள். அத்தனை கஞ்சம்.ஆனால் மாரிமித்து அப்படியல்ல..தாமதித்தாலும் செய்வார். மாரிமுத்துவுக்கு வரன் பார்ப்பதெலாம் தட்டிப் போகிறது.

இரு வயது மூத்தவள், பழைய புல்லட் வண்டி வைத்திருப்பதால் பெண் அமையல எனக்கூறி பெண் அமையாமல் இருக்கிறது. ஊருக்கெல்லாம் இலவசமாய் திருமணம்.முடித்து வைக்கும் தானாவதி தாத்தாவாலேயே திருமண நடத்தி முடிக்கமுடியவில்லை.தன் தோட்டத்தில் வேலை பார்க்கும் குப்பன் மகன் ரமேஷ்க்கு திருமணம் செய்ய ஐயாயிரம் கடன் கேட்கிறார் குப்பன்.35 வயது வரை  தான் திருமணம் ஆகாமல் இருக்க 17 வயதில் ஒரு சிறுவனுக்கு கல்யாணமா?இதை அவமானமாய் உணரும் மாரிமுத்து ஆறு மாதம் கெடு சொல்கிறார். அதற்குள் தான் திருமணம் முடிக்க மனதிற்குள். எண்ணிக்கொள்கிறான்.

என்னதான் பணக்காரனாய் இருந்தாலும் திருமணம் அமையாமல் அவமானமாய் இருந்தது. பெண்வீட்டார்க்கு மோர் கொடுக்காதது, மூலநட்சத்திரம், வரதட்சணை போன்றவற்றாலும் தடைபடுகிறது.அப்படியே அமைந்தாலும் யாரேனும் ஒருத்தன் மாப்பிளை குடினு சொல்லி வைக்கிறார்கள். அதனாலேயே மாரி குடித்து ஆறேழு வருடமாகிறது.நரைமுடி, லேசான வழுக்கையும் பீதியடைய வைக்கிறது.ஆறு மாதத்திற்குள் குப்பன் மகனுக்கு முன் திருமணம் நடக்கனும் என்பது டார்கெட்

பரம்பரை நிலம் பிரிக்கப்படாததால் தான் திருமணம் தள்ளிப் போகிறது எனச் சொல்ல அதனை பிரிக்கும் வேலையில் ஈடுபடும் போதுதான் சித்தப்பா மகன் செல்வராசுவுடன் பழக ஆரம்பித்தான்.ஐந்தாறு வயது சின்னவன் ஆனால் அறிவில் முதிர்ச்சியானவன்.அவன் மாற்று சாதி சேர்ந்த பெண்ணை விரும்புவதாக தெரிவித்த போது அதிர்ச்சி ஆகிறான். மாரிமுத்து.அவமானம், சாதி பெருமை எல்லாம் சொன்னாலும் தன் காதல் குறித்த பேச்சினால் அமைதியாகிறான் நாயகன்.ஆனாலும்

திருமணமாகாத குற்ற  உணர்ச்சி அவனிடத்தில் எப்போதும் உண்டு.

இளவயது நண்பராக இருந்த ராமரை சந்தித்தது மாரிமுத்துவுக்கு ஆறுதலாய் இருந்தது.

நாவலின் பல இடங்களில் நாயகனின் பிரச்சனை மட்டும் அலசாமல் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்சனை, கிராமத்து மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் பாட்டி வைத்திய முறை ஆகியவை குறித்த செய்திகளும் வருகிறது.

அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி மாரிமுத்து தனக்கான துணையை அடைந்தானா? அவனது நிலம் அவனுக்கானதா? என்பதை கிராமிய மண் வாசனை மாறாமல் பெருமாள் முருகன் "கங்கணமா"க காட்டியுள்ளார்.

  

ஒரு முதிர் கண்ணன் சந்திக்கும் சவால்களும் ஏளனங்களும், சாதிக்குள் பெண் கொடுக்க மறுப்பவர்களும், வேற்று சாதியில் பெண் எடுக்கலாமா என மனதின் ஊசலாட்டமும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருமண தடைகள் என்னென்ன ருபத்தில் வருகின்றன என்பதை நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் தட்டிக்கழிக்க என்னென்ன கார்ணங்கள் வருகின்றன என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. மாரிமுத்து-அம்மா, மற்றும் மாரிமுத்து

பாட்டிக்கும் நடைபெறும் உரையாடல்கள் கதையை நகர்த்த உதவுகின்றன.

இடப்பிரச்சனை, கிளைக்கதைகள், தானாவதி தாத்தா ஆகியோர் நாவல் சுவாரஸ்யமாய் செல்ல உதவுகின்றனர்.செல்வராசு வந்தவுடன் வேறு பரிணாமத்தை விதையிடும் மற்றும் ராமன் கதாபாத்திரம் வந்த பின் அந்த விதைகள் வளர ஆரோக்கியமான உரையாடல் மாரிமுத்துவிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கதையின் இறுதியில் குப்பனின் பேச்சு நல்ல முதிர்ச்சியைக் காட்டுகிறது.

*கழுத்துப்புண்ணு வலி எருதுக்குத்தான் தெரியும்.கொத்துகிற காகாக்கு தெரியுமா?

*பாட்டி சொன்னாள் நா என்ன கொமுறியா? நகைநட்டு போட்டு அலைய. மண்ணுக்குள்ள கெடக்கிற உடம்பு மண்ணுமேல கிடக்குது அவ்வளவுதான்

*பெரிய பெரிய சம்பவங்களை தாங்கிக் கொள்கிற மனதினால் அற்பவார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

மனித நாக்கு வார்த்தைகளை சுழற்றும் 

 எப்படிகற்றுக் கொண்டதோ?

ஒரே ஒரு ஒன்லைனரை வைத்து நாவல் முழுவதும் சுவாரஸ்யம் கெடாமல் கொடுத்துள்ளார் பெருமாள் முருகன்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 28 October 2025

188


#கற்கை_நன்றே_188

நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வை தன் ரசனையின் மையினால் எழுதியவர் சுஜாதா தான்..ஒரு சுவாரஸ்ய பகுதி

உலகில் மிகவும் அகழ்வாராயப்பட்ட இடம் - சுஜாதா

உலகத்திலேயே மிகவும் அகழ்வாராயப்பட்ட இடத்திற்கு கின்னஸ் இருந்தால் அது ஆழ்வார்பேட்டையில் இருக்கும் எங்கள் தெருவுக்குதான் கிடைக்கும்.

1993- ல் நான் பெங்களூரை துறந்துவிட்டு இங்கு குடிபுகுந்ததிலிருந்து இந்தச் சாலையை இடைவிடாமல் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்தவறி தோண்டுவது நின்றுபோனால் கடப்பாரை பயிற்சி விட்டுப் போகாமல் இருக்கத் தோண்டுகிறார்கள்.

முதன்முதலாக குடிநீர் வடிகால் வாரியர்கள் வந்து வெட்டிப் போட்டுவிட்டு சிமெண்டில் அனார்கலி ரேஞ்சுக்கு சமாதி போல ஏதோ கட்டிமுடித்து மூடினார்கள். 

அது மூடின உடனே டெலிபோன் காரர்கள் நீண்ட ஃபைபர் கிளாஸ் குழாய்களை அடுக்கி எதிர்ப்பக்கம் தோண்டி கேபிள் போட்டார்கள். 

அதன்பின் சிறு மேம்பாலம் கட்டுபவர்கள் 

பாதாள சாக்கடை என்று எதையோ பிழைதிருத்தும் காரணத்துக்காக நடுவே வெட்டிப்போட்டார்கள். 

அவர்கள் முடிந்ததும் இப்போது மின்வாரியர்கள் ஹை டென்ஷன் கேபிள் போடுவதற்கு தோண்டி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தோண்டலும் குறைந்தபட்சம் ஆறுமாதம் நீடிக்கிறது. கூலியாட்கள் குடிசை போட்டு, சோறாக்கி, பிள்ளை பெற்றுக் கொண்டு, மறு தோண்டுதலுக்கு புறப்படும் வரை ஒரு வாழ்க்கையை நடத்தி விட்டுச் செல்கிறார்கள்.

இப்போதெல்லாம் கார்ப்பரேஷன், டெலிபோன், மின்வாரிய வட்டாரங்களில் தினம் கீழ்க்காணும் உரையாடல் நிகழும் என்று நினைக்கிறேன்.

இன்ஜினியர்: "ஏம்பா இன்னிக்கி என்ன வேலை?"

காண்ட்ராக்டர்: "எதுவும் வேலை இல்லை இல்லிங்க".

இன்ஜினியர்: "அப்போ ஒண்ணு பண்ணுங்க. ஆழ்வார்பேட்டையில் அம்புஜம்மாள் தெரு ஒண்ணு இருக்கு அங்கே போய் தோண்டுங்க"

காண்ட்ராக்டர்: "எதுக்குங்க?"

இன்ஜினியர்: "சும்மாய்யா…. இனிமே வேலை இல்லைன்னு மட்டும் சொல்லாதே"

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் கேபிள் போடுவதில்லையா, சாக்கடை வெட்டுவது இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் தோண்டுகிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். 

ராத்திரி 12 மணிக்கு ஆள் படையுடன் வருவார்கள் . அதி பிரகாசமாக கண்சிமிட்டும் மஞ்சள் விளக்குகளை வைப்பார்கள். அது என்ன மாயமோ….. அதிகாலைக்குள் தோண்டி வேலையை முடித்த இடம் தெரியாமல் அடைத்து சமன்படுத்தி விட்டுப் போவார்கள். ஒரே நாள் தான்.

இங்கு? பகவான் விட்ட வழி.

திருவள்ளுவர் இன்று இருந்தால்....

தோண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு நீண்டநாள் தோண்டல் இலை

என்று எழுதியிருப்பார்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 27 October 2025

187


#கற்கை_நன்றே_187

"அறிந்து கொள்ளல் என்பது இரண்டு வகை. 

ஒன்று, புரிந்துகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளுதல், மற்றொன்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிந்து கொள்ளுதல்

டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்ட வேண்டும். 'டென்ஷன் இல்லாமல் இருப்பது' என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால், அது ஏற்கனவே இருக்கிறது என படித்திருக்கிறேன்.

தாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் அந்த அளவுக்குத்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். தம் வாழ்வில் நிகழும் விஷயங்கள நம் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில்லை மாறாக, அந்நிகழ்வுகள் குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நம் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது.

ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீஐ வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார்.

வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் என்கிறார் .மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம்.

நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு என்கிறார் ஜெயமோகன்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

டாக்டர்


மோன்தா புயல்  நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்? 

தமிழ்நாட்டை தீவிரப் புயல்களிடம் இருந்து காக்கும் "செட்டிங்" எது? 

ஆம்... வங்கக் கடலில் உருவாகும் 
பெரும்பான்மையான 
சூப்பர், அதி தீவிர, தீவிர புயல்களிடம் இருந்து தமிழ்நாடு எப்படித் தப்புகிறது? 

எப்படி 
ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் புயலால் கடும் சேதத்துக்கு உள்ளாகின்றன? 

அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் 
ஏன் - கிழக்கில்  இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? 
என்பதை நாம் அறிய வேண்டும். 

நாம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் இருக்கிறோம். 
இந்தப் வெப்ப மண்டலப் பகுதிகளில்
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி " மேற்கு நோக்கிய காற்று" (WESTERLIES) தொடர்ந்து வீசுகிறது.

இதை "ட்ரேட் விண்ட்ஸ்" TRADE WINDS என்று அழைக்கிறோம். 

வளி மண்டலத்தில் தோன்றும் புயல்கள் 
ஒரு பார்சல் போல இந்த மேற்கு நோக்கிய வர்த்தக் காற்றின் துணையுடன்  
கிழக்கில் இருந்து தோன்று மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. 

இதற்கு அடுத்த படியாக 
புயலை சுழலச் செய்வது எது என்று நாம் அறிய வேண்டும். 

அதற்குக் காரணம் 
பூமியின் சுழற்சி..

பூமியின் சுழற்சியின் விளைவாக பூமத்திய ரேகைக்கு வடக்கே உருவாகும் புயல்களில் 
காற்று சுழற்சி, 
எதிர் கடிகார திசையில் இருக்கும் (ANTI CLOCK WISE DIRECTION) 

பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்களில், காற்றின் சுழற்சி கடிகார திசையில் இருக்கும். 

இதன் விளைவாக, 

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் புயல்கள், 
பூமத்திய ரேகைக்கு வடக்கே, வலது பக்கம் திரும்பும்.
இதனால் மேற்கு - வட மேற்கு திசை நோக்கி இயற்கையாகவே நகரும். 

பூமத்திய ரேகைக்கு தெற்கே உருவாகும் புயல்கள், இடது பக்கம் வளைந்து கிழக்கே தென் கிழக்கு திசையில் செல்லும். 

இப்போது புரிந்திருக்கும்... 

அந்தமான் தீவுகள் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்படியே மெதுவாக வெஸ்ட்ரலைஸ்/ ட்ரேட் விண்ட் தாக்கத்தால் 
மேற்கு நோக்கி வந்தாலும் 

பூமியின் கோரியாலிஸ் விசையால் 
மேற்கு - வட மேற்கு நோக்கி செல்கிறது. 

இது தான் இயற்கை. 

கூடவே, புயல்களுக்கு 
எரிபொருளாக செயல்படும் கடலின் மேற்புற வெப்பம் அதிகமாக இருப்பது தொடர்ந்து புயலை இந்த விசைகளைத் தாண்டியும் தக்க வைக்க உதவுகிறது. 

இவையன்றி 
நிலப்பரப்பில் அதி காற்றழுத்தப் பகுதிகள் நிலவும் . இதை ரிட்ஜஸ் (RIDGES) என்று அழைக்கப்படுகின்றன.
இவை குறைந்த காற்றழுத்தப் பகுதியான புயல்களை தன்னிடம் நெருங்க விடாமல் தள்ளும். 

வட கிழக்கு பருவ மழை சூழ்நிலையான தற்போது, இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மிகுதியான காற்றழுத்தம் இருக்கும். 
இது புயல்களை 
மேற்கொண்டு வடக்கு நோக்கி வராமல் தடுக்கும்.
இதன் விளைவாக 
வடக்கு - வட மேற்கு திசையில், தமிழ்நாட்டின் வட கிழக்கு கடற்கரை, ஆந்திரா, ஒடிசா ஆகியவற்றை விட்டு கிழக்கு நோக்கி "டிஃப்லெக்ட்" ( பாதை வளைவு)  செய்து வங்கதேசத்தை நோக்கி , மியான்மரை நோக்கி கூட புயலை  சில நேரங்களில் தள்ளி விடுவதையும் காண முடியும். 

இன்னும் 
தமிழ்நாட்டின் தென் கிழக்கு கடற்கரையை 
புயல்களிடம் காப்பாற்றும் அமைப்பாக இருப்பது 
இலங்கை. 

இலங்கையை நோக்கி வரும் புயல்களை நிலத்தில் நிலவும் மிகுதியான காற்றழுத்தம் காரணமாக ( ரிட்ஜ்) 
வடக்கு நோக்கி தள்ளி விடுகிறது 

அல்லது 

மேற்கு நோக்கி வரும் 
சிஸ்டங்களை, இலங்கையில் அவை கரைகடந்து வலிமை இழந்து தமிழ்நாட்டுக்கு மழை கொடுக்கின்றன. 

தமிழ்நாட்டின் 
வட கிழக்கு கடற்கரை 
மாவட்டங்கள் - மழை மற்றும் புயல்களால் அவ்வப்போது பாதிப்பை சந்தித்து வந்தாலும்,  தமிழ்நாடு  - அதி தீவிர/ தீவிர புயல்களிடம் இருந்து ஆந்திரா/ ஒடிசா/ மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில் இயற்கையாக அரணைப் பெற்று விளங்குகிறது. 

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Sunday, 26 October 2025

ஜீயோ டாமின்


ஒரே ஒரு வாளி - அதன் விளிம்பு வரையில் சுற்றியிருப்போருக்கு தாகம் தீர்க்கப் போதுமான தண்ணீரும் அதில் இருக்கிறது.

திடீரென விசித்திரமான ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. யார் அதிகத் தண்ணீரை உறிஞ்சுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். 

வாளியிலிருக்கும்  தண்ணீர் தீர்ந்தால் எல்லோரும் செத்துப்போவோம் என்று தெரிந்தும் எல்லோரும் போட்டியில் சேர்ந்து கொள்கின்றனர். 

காலம் காலமாக வர்க்கரீதியாகவும் சாதீய ரீதியாகவும் பிறரைச் சுரண்டிக் கொளுத்த ஒருசிலருக்கு மட்டும் தண்ணீரை வேகமாக உறிஞ்ச நீண்ட குழல் வாய்க்கிறது. மற்றவர்கள் அப்பாவியாக அதனை வேடிக்கப் பார்க்கின்றனர். 

தண்ணீர் தீர்ந்துகொண்டே இருக்கிறது. 

இன்னும் வேகமாக உறிஞ்சினால் எல்லாருடைய தாகமும் தீருமென்று ஆரூடம் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்குப் பதிலாக மட்கும் உறிஞ்சு குழல் பயன்படுத்தினால் ஆபத்தில்லை என்கிறார்கள் சில 'ஆபத்தான' சூழலியலாளர்கள்.

போட்டி வேகமெடுக்க, பக்கெட்டின் தண்ணீர்தான் குறைகிறதே தவிர பெருவாரியான பார்வையாளர்களின் தாகம் தீரவில்லை. ஒட்டுமொத்தத் தண்ணீரும் வற்றும்போதும்கூட அது தீரப்போவதில்லை.

ஜிடிபி வளர்ச்சியை முதன்மை குறிக்கோளாகக் கொண்ட ஒவ்வொரு அரசும், பெருமுதலாளிகளின் நலனுக்காக – ‘உற்பத்தி அதிகரிப்பு’ என்ற பெயரில் இயற்கை வளங்களை வணிகப் பண்டமாக்கி தனியாருக்குத் தாரைவார்த்து விற்பனை செய்யும் பிரம்மாண்டச் சந்தையைக் கட்டியெழுப்பி பிற நாடுகளோடு போட்டி ஒன்றை நடத்துகின்றன. எவ்வளவு வேகமாக ஜிடிபி வளர்கிறதோ அவ்வளவு வேகமாக நாம் அழிவுக்கு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம். 

ஏனென்றால், நமக்கு மேலும் மேலும் சுரண்டிக்கொண்டே இருப்பதற்கு மலைகளும், கடல்களும், காடுகளும் இங்கு இல்லை. புவியின் எல்லா வளங்களும் வரம்புக்கு உட்பட்டவை. இந்தச் சுரண்டல் பொருளாதார அமைப்பால் ஒருபோதும் எல்லோருடைய பசியையும் தீர்க்க முடியாது - சமத்துவத்தையும் சமூக நீதியையும் உறுதி செய்ய முடியாது. 

இதுவொரு சூதாட்டம்!

186


#கற்கை_நன்றே_186

உங்களால் எங்கே தொடங்க முடியுமோ அங்கிருந்து தொடங்குங்கள்.உங்கள் கையில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு தொடங்குங்கள்

-ஆண்ட்ரூ மேத்யூஸ்

எல்லாரும் வேண்டுவது எப்போதும் சந்தோசமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதும் என்பதில் இக்கணம் உணடு என்பதை மறந்துவிடுகின்றனர். நேரம் என்பது இக்கணம் மட்டும் தான்.இந்த நேரத்தில் நிம்மதியாகவும்.சந்தோசமாகவும் இருப்பது தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதற்கான அடிப்படை காரணம்.

படிப்படியாக மலையின் மீது எப்படி ஏறுவீர்களோ, அதே போல் உங்கள் பிரச்சினைகளை கையாளுங்கள் என்கிறார் ஆண்ட்ரூ மாத்யூஸ். பாறைமீது ஏறும்போது ஒரு பாறையில் சிக்கினால் உங்கள் கவனம் முழுவதும் அந்தக் கணத்தில் தான் விடுபட எண்ணுவீர்கள். எஞ்சி இருக்கும் பாறைமீது கால் சிக்கும் என எண்ண மாட்டீர்கள் அல்லவா..

எப்போதெல்லாம் 24 மணி நேரம் கடினமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள் கவனம் செலுத்துங்கள்.பின் அடுத்த ஐந்து நிமிடங்கள் என மகிழ்ச்சியாக் இருக்க எண்ணுங்கள்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் வட அமெரிக்கப் பெண்மணியான ஷேரன் உட், தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறினார்: 

“அது உடல் வலிமையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாக மன வலிமையைப் பற்றியது என்பதை நான் கண்டறிந்தேன். உண்மையான போராட்டம் என்னுடைய மனத்தில்தான் நிகழ்ந்தது. நானே சுயமாக உருவாக்கிக் கொண்ட தடைகளைக் கடந்து, ஆற்றல் எனும் பொக்கிஷத்தை நான் சென்றடைய வேண்டியிருந்தது. 

அந்த ஆற்றலின் 90 சதவீதத்தை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்.” பயன்படுத்தப்படாத அந்த 90 சதவீத ஆற்றலை நீங்கள் வசப்படுத்த விரும்பினால், “அதை நான் எப்படிச் செய்வது?” என்று கேளுங்கள். அப்போது நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைப்பீர்கள்

-நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

உலகில் இருக்கும் பாதி வேலைகள் புல்ஷிட் வேலைகள் என கூறப்படுகிறதுபுல்ஷிட் வேலைகளை யாரும் செய்யாமல் போனால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.விவசாயி, மீனவர், லாரி டிரைவர், காவல் துறை, வக்கீல்கள், மருத்துவர்கள்...இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலகம் முழுக்க பாதிப்புக்குள்ளாகும்.யுடியூபர்கள், திரைத்துறையினர், கிரிக்கட் ஸ்ட்ரைக் நடத்தினால் அவர்களைத்தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைஆனால் புல்ஷிட் வேலைகளுக்கு தான் சம்பளமும் அதிகம்-நியாண்டர் செல்வன்

Sunday, 19 October 2025

107


#Reading_Marathon2025

#25RM055

Book No:107/100+
Pages:-150

Master your mindset

-MJ DeMarco

உங்கள் பார்வையை மாற்ற, உங்கள் சிந்தனைையை மாற்ற வேண்டும்; உங்கள் சிந்தனையை மாற்ற, உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும்.

எண்ணங்களே செயல்களின் அடிப்படை ஆகின்றன. சிந்தனையில் ஏற்படும் மாற்றம் செயல்களில் எதிரொலிக்கின்றன. அதனால் தான்

You have to think differently you have to act differently. என்கிறார்கள். நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் 1% என்றால் அதுகுறித்த கவலைகளே 99% ஆக்கிரமித்துள்ளன. அதனை களைவது நம் கைகளிக் தான் இருக்கிறது.

எந்த ஒரு செயலையும் அவசரப்பட்டு செய்யாமல், முடிவெடுக்காமல் நிதானமாக யோசிக்க சொல்கின்றனர். ஒரு செயல் குறித்து பார்வையாளராய் இருக்கும் போது தான் அப்பிரச்சனை குறித்த முடிவு நம்மாலெடுக்க முடியும். வெறுமனே பங்கேற்பாளராகும் போது அதிலேயே கரைந்து விடுகிறோம்.

ஆகவே பார்வையாளராய் இருந்து நன்கு கவனித்து சிந்தனையை சீர்படுத்த வேண்டும்.

கவலைக்கு கருணை காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் அது இருப்பிடம் தேடி நம்மிடமே அடைக்கலமாகி 

விடும்.“Your emotions are the slaves to your thoughts, and you are the slave to your emotions.” என்கிறார்.Elizabeth Gilbert

கட்டுரையாளர் ஒருகட்டத்தில் துவண்டு நிற்கும்போது அவருக்கு கைகொடுத்தது புதிய விசயங்களை தேடிச்சென்றது, புதுமையை விரும்பியது, ஓய்வு போன்றவற்றை செய்யும்போது மனம் கட்டுக்குள் வருவதை உணர்ந்தார்.அதன் மூலம் நாள்தோறும் இத்தகைய பயிற்சிகள் அவரை வலிமையுள்ளவராய் மாற்றியது.பலரும் செய்யும் தவறான விசயம் புதியனவற்றை பற்றி சிந்திப்பதில்லை செய்வதில்லை என்கிறார்.

"Happiness is not by chance but by choice." மகிழ்ச்சி எப்போதும் பிறர் கொடுப்பதில்லை. அது நம்மிடையே உள்ளதை நாமே மீட்டெடுக்கிறோம்.

நமக்கான நேரத்தை நமக்குக் கொடுக்கும்போதுதான் நம்மை பற்றி நினைக்கும் போதுதான், நம்மை நாமே பாராட்டும் போது தான் உண்மையான மகிழ்ச்சி நமக்குள் சுரக்கிறது.

நமக்குள் ஏற்படும் கவலைக்கு மூலகாரணம் இறந்த கால தவறுகளை நினைத்து நிகழ்காலத்தில் கவலைப்பட்டு எதிர்காலத்தை இழப்பது போன்றதாகும். அதே போல் சுற்றுப்புற நண்பர்களின் வழியேயும் நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதனை களைய முடியும்.

“You don’t have to be great to start, but you have to start to be great.”நல்ல துவக்கமே பகுதி வெற்றி. நல்ல செயல்களை செய்வதன் வழியே மனம் மாற்றமடைகிறது என்பதைத் தாண்டி தொடர்ந்து செய்வதன் வழியே தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும்.இதற்கு உதாரணமாக

Learning ,Practice ,Apply ,Consistencyஎன நான்கும் இன்றியமையாதது என வலியுறுத்துகிறார்.

நல்ல உரையாடல்கள் சிந்தனையை செம்மைப்படுத்துகிறது. கருத்தியல் ரீதியாக உரையாடுகையில் நாம் கற்றவற்றை நம்பியவற்றை மீளாய்வு செய்யவும், புதியனவறை கற்று மனதை மேம்படுத்தவும் உதவுகிறது.

தோல்விகளை கற்றலுக்கான வாய்ப்பாகக் காணும் மனப்பாங்கு, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்து, நம்பிக்கையுடன் முன்னேறுவது,. மனத்தை ஒழுங்குபடுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பது,வாழ்க்கை நோக்கத்தைத் தேடவும், அதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. முக்கிய முடிவுகளை தெளிவுடன் எடுக்க வழிகாட்டுகிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 18 October 2025

106


#Reading_Marathon2025

#25RM055

Book No:106/100+

Pages:-216

அன்புடை நெஞ்சம்

-என். சொக்கன்

பண்புடை நெஞ்சத்தைத் தொடர்ந்து என். சொக்கன் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தது அன்புடை நெஞ்சம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற அகப்பாடல்களை இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாசிக்கத்தூண்டும் விதத்தில்.அமைந்திருக்கிறது.

யுத்தகாண்டத்தில் ராமன் போருக்குத் தயாராகும் காட்சியை வர்ணிக்கும்போது, ’கவசம் இட்டு இறுக்கி வீக்கினான்’ என்கிறார் கம்பர். அதாவது, போர்க் கவசத்தை இறுக்கிக் கட்டினான். அதற்குக் கம்பர் சொல்லும் காரணம், ‘தேவியைத் திரு மறு மார்பில் தீர்தலால் ‘நோ இலள்’ என்பது நோக்கினான்கொலோ?’என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லி அதனொடு தொடர்வுடையுதாய் வள்ளிவர் பாடலை கூறி, சமகாலத்தில் வாலி பயன்படுத்திய 

அவரது ஜாலியான ஆங்கில நடையில்: Hot Boxல் வைத்த Food உண்பதில்லை, எனக்கூறி குறிந்தொகை பாடலை நமக்குத்தருகிறார்.

அப்படியே சங்க இலக்கிய பாடலில் ஆரம்பித்து சமகாலத்துக்கு தாவி மீண்டும் சங்க இலக்கியம் சமகால இலக்கியத்திற்கு யூ டர்ன் அடிப்பது போல் வாசிப்பு அனுபவம்.

கணவனும் மனைவியும் தனித்திருக்கும் நேரம். அவள் அவனிடம் சில குறைகளைச் சொல்ல நினைக்கிறாள். தயக்கத்தோடு கேட்கிறாள், ‘சொன்னா கோச்சுக்கமாட்டீங்களே?’ ‘தாராளமாச் சொல்லு’ என்கிறான் அவன். ‘பாகற்காய் கசக்கும்தான். ஆனா, அதுக்குள்ளே ருசியும் இருக்குமே, அதுபோல, நீ என்மேல குறை சொன்னாலும் அதுல ஒரு நல்லது இருக்கும், தயங்காம சொல்லலாம்.’ பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’க் காட்சியை பாடலுடன் பதிவு செய்திருப்பார்.

காதலைப்பற்றி சொல்லும் போது.. யாருக்கும் தெரியாமல் சந்திப்பது சகஜம்.அதற்கு களவுக் காதலிலேயே குடியிருக்கக்கூடாது, ஒருகட்டத்தில் அது கற்புக் காதலாக மாறவேண்டும். குடும்பம் என்கிற பொறுப்பை ஏற்கவேண்டும்.அதைதான் ஊர் வதந்தியாகப் பேசுகிறது. அவர்களுடைய நோக்கம் காதலைப் பிரிப்பது அல்ல, அதைக் கற்பு நெறிக்கு மாற்றுவது என் யதார்த்தவாதத்தை முன் வைக்கிறார்.

அதே போல் மற்றொர சுவாரஸ்ய பாடலாக
குறுந்தொகையில் வெண்பூதன் எழுதிய பாடல் இது: அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை, தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை ’வரும்’ என்றோளே! இந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் அழகாகப் பதிவு செய்கிறார் தாமரை: இதுதானா, இதுதானா, எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா!..இந்த பாடல் வரிகளை கட்டுரைக்கு ஏற்றாற்போல் அழகாக கனெக்ட் செய்திருப்பார் 

குளிர்காலம் வரும்போதெல்லாம் ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல் நெருப்பின்பக்கம் நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது, எந்தக் காலத்திலும் உன் பக்கமே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.என்று கவிஞர் மீராவின் கவிதையை ஒப்பிட்டு புலமைப்பித்தன் ஒரு திரைப்பாடலில் இதை எழுதுகிறார்: கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய், வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்! மீராவுக்கும் புலமைப்பித்தனுக்கும் ஒத்த சிந்தனை வரக் காரணமான பாடல், குறுந்தொகையில் இருக்கிறது. படுமரத்து மோசிக்கொற்றன் எழுதியது என அந்த சங்கப்பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

நற்றிணைப் பாடலில் யானை பலாப்பழம் சாப்பிடுகிற காட்சியை ஏன் தோழி காதலனிடம் சொல்லவேண்டும்? அவர்கள் நாட்டை வர்ணிக்க வேறு விஷயமா இல்லை? யானை ஜோடியாகப் பலாப் பழம் தின்ன வருகிறது. அதைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். இங்கே ஊர் மக்கள் என்பது, காதலன், காதலியைப்பற்றிப் பலவிதமாகப் பேசுகிறவர்களைக் குறிக்கிறது. அவர்கள் முன்னால் கை கோத்துக்கொண்டு நீங்கள் ஜோடியாக நடக்கவேண்டும், இப்போது கேலி பேசுகிறவர்கள் அப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? அதை நான் பார்க்கவேண்டும் என்று தோழி சொல்லாமல் சொல்கிறாள். குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒரு பாடலில், பலாப்பழம் வேறுவிதமான கருத்தைச் சொல்லப் பயன்படுகிறது. அங்கேயும் காதலன் காதலியை இரவில் சந்தித்துவிட்டுக் கிளம்புகிறான். தோழி அவனிடம் பேசுகிறாள்.

வழக்கமாய் நாயகன் மாட்டுவண்டி ஓட்டுவது போல் இருக்கும். ஆனால் நாயகி வண்டி ஓட்டும் காட்சியில் ஜல் ஜல் சலங்கை ஒலி பாடலை கவியரசர் எழுதியிருப்பார். அதற்குபின்னணியாய் அமைந்த பாடலைக்கூறி அதனோடு தொடர்புடைய சங்கப்பாடலை கூறியிருப்பார்

பாரதியாரின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று, ‘மூன்று காதல்’. தலைப்பைப் பார்த்து அவசரப்படவேண்டாம். முழுப் பாடலையும் வாசித்தால் பாரதியார் சொல்லும் மூன்று காதல்கள் எவை என்று புரியுமெனக் கூறி ஒவ்வொரகாதலைக் குறித்தும் விரிவாக பதிவு செய்திருப்பார்.

தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள்தான். ‘கால்’ என்றால், நான்கில் ஒரு பங்கு என்பது ஒரு பொருள், உடலில் அது நான்கில் ஒரு பங்கு இருப்பதால், நம்முடைய கால்களுக்கும் அதே பெயர் அமைந்ததாகச் சொல்வார்கள். அதேபோல், ’அரை’ என்றால் இடுப்பு. அது உடலை சரிபாதியாகப் பிரிக்கிறதல்லவா? இடுப்புக்கு இன்னொரு பெயர் ‘இடை’. உடலின் இடையில் உள்ளதால் அந்தப் பெயர்.

கவிஞர்கள் பெண்களை வர்ணிகும் போது உவமையை எடுத்துரைப்பது இயல்பு. இவ்வாறு எடுத்துரைத்த உவமைகளை இக்கட்டுரை முழுவதும் விளக்கியிருப்பார்.

Known to unknown போல தெரிந்த ஒரு செய்தியில் ஆரம்பித்து, அது சினிமாவில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைககூறி அதன் மூலம் அல்லது அது தொடர்பாக சங்கப்பாடலில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார்.நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

105


#Reading_Marathon2025

#25RM055

Book No:105/100+

Pages:-176

எம்.ஜி.ஆர் பதில்கள்

அந்நாளில் பிரபலங்களின் கேள்வி பதில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. தாங்கள் விரும்பும் நட்சத்திரம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் அவர்களின் மனதில் உள்ள விஷயங்களும் நமக்கு தெரிந்துவிடும். தினமணி கதிர் வார இதழில் எம்ஜிஆர் அவர்கள் அளித்த கேள்வி பதில்கள் தான் இந்த புத்தகங்களின் தொகுப்பாக இருக்கிறது.

அறிஞர் அண்ணா அவர்களின் நிழல் கருணாநிதி என்று கூறுகிறார்களே அது உண்மையா? என்று கேட்டதற்கு நிழல் எப்போதும் தானாக இயங்குவதில்லை. வெளிச்சம் இல்லாவிட்டால் நிழல் நம் கண்களுக்கு தெரியாது. பேரறிஞரின் மறு பதிப்பு கலைஞர் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

மடக்கும் விதத்தில் சில கேள்விகளும் கேட்பார்கள் அதற்கு புத்திசாலித்தனமாக பதிலும் சொல்லி இருக்கிறார். ஒருவர் கோழியில் இருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பதற்கு பதிலாக மாம்பழம் முதலிலா? மாமரம் முதலிலா? என்று வினா எதிர் வினாவை கொடுத்திருப்பார்.

ஒரு எதிர்க்கட்சிக்கு என்ன ஒழுங்கு தேவை என்பதற்கு ஓர் அரசியல் நடத்தும் கட்சிக்கு என்னென்ன ஒழுங்குகள் தேவையோ அத்தனையும் எதிர்க்கட்சிக்கும் தேவை. என்னை பொறுத்தவரையில் எதிர்க்கட்சியை சிவப்பு விளக்கு என்று சொல்லுவேன். மக்களை ஏற்றி செல்லும் வண்டிகள் தடம் புரளாமல் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுவது என்று எதிர்க்கட்சிக்குரிய தகுதிகளாக குறிப்பிடுகிறார்.

என்றும் மதிக்கும் அறிவுரை என்ன என்று கேட்டதற்கு "உன்னை விட பிறருக்கு அறிவோ பலமோ ஆற்றலோ ஏதோ ஒரு வகையில் அதிகம் இருக்கும், என்று நினைப்பில் நீ மற்றவர்களோடு பழக வேண்டும். யாரைப் பற்றியும் அலட்சியமாக எண்ணாதே" என்று அறிவுரை பிடித்திருந்ததாக கூறுகிறார்.

சில கேள்விகள் சாதாரணமாகவும் பதில்கள் அதைவிட சாதாரணமாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வழக்கமாக எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? நடிப்புத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? எனும் கேள்விக்கு எழுதத் தெரிந்ததால், நடிக்க தெரிந்ததால் என்ற சேப்டியான பதில்கள் தான் எம்ஜிஆரும் சொல்லி இருக்கிறார்.

இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவை கொடுத்திருப்பது ஏன் எனும் கேள்விக்கு "அவன் மீது உள்ள அவநம்பிக்கையால்"

இந்தியாவின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?கலங்கித் தெளிதல் என்ற நிலையில் இருக்கும்

 என்ற சில ஒன் லைனர்கள் ரசிக்க வைக்கின்றன.

கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் காலத்தை பார்த்தால் எம் ஜி ஆர் அப்பொழுத திமுகவில் தான் இருந்திருக்கிறார். அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் வந்த புதிது என்பதால் அதை குறித்த கேள்விகள் தான் அதிபெற்றுள்ளபெற்றுள்ளன. பல கேள்விகள் சுவாரசியம் இல்லாமையும் சில பதில்கள் சுவாரஸ்யம் இல்லாமலும் ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்திலும் அமைந்திருக்கின்றன. நல்ல கேள்விகள் சிறந்த குழந்தைகளை பெற்றெடுக்கின்றன என்று சொல்வார்கள். அது போல சில கேள்விகள் மட்டும் நல்ல முறையில் அமைந்துள்ளன ஒரு வித்தியாசமான அனுபவமான வாசிப்பு அனுபவமாக இருந்தது

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும்.- ஹென்றி மில்லர்

Wednesday, 15 October 2025

185


#கற்கை_நன்றே_185

சாக்ரடீஸின் கருத்தியல்படி
உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். உண்மையில் அறியாமையிலிருந்தே எல்லாம் அறிந்து கொண்டவர்களும், அறிந்ததாலேயே அறியாமையிலிருப் பவர்களுமாக (Ignorant Knowers and knowing ignorant) உலகம் இரண்டாவது வகை மனிதர்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

ஒருவரின் புத்தி எல்லையைத் தாண்டும் போது தான் கூட்டு சிந்தனையின் நுண்ணறிவு பிறக்கிறது.”அதாவது
ஒன்றாகச் சிந்திக்கும் நூறு சிறு மனங்கள், ஒரு பெரிய மூளைப்போல் செயல்படும்.அதாவது சின்ன கல்லு பெத்த இலாபம் மாதிரி."இதனை Swarm Intelligence என்கிறார்கள். இதற்கு உதாரணமாக எறும்பைச் சொல்கிறார்கள்.சிறியதாக இருந்தாலும் ஒன்றாய் சேரும் போது ஒரு துரும்பை அசைக்கிறது, பாலமிடுகிறது.

இது குறித்து ஹேமா அவர்கள் எழுதிய பதிவு இன்னும் புரிதலை மேம்படுத்துகிறது.எறும்பின் மூளையில் உள்ள நினைவகம் (storagespace) வெறும் 256KB மட்டுமே!நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிகள் 64GB, 128GB என்று வெவ்வேறு அளவிலான நினைவகத்துடன் (memory/storage) ஒப்பிடும்போது மிகக் குறைவு.

ஆனால், யோசித்துப் பார்த்தால், எறும்புகள் உணவு தேடிச் செல்வது, சேகரித்த உணவை மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து சேமிப்பது என்று பல வேலைகளைச் செய்கின்றன. 

ஓர் இடத்துக்குப் போய் வருவதற்கு வழியை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், எறும்புகளிடம் உள்ள 256KB நினைவகம் பத்தாதுதானே? மேலும், மூளையின் செயல்பாட்டை வெவ்வேறு பணிகளுக்கும் செலவிட வேண்டும். அப்படியிருக்கும்போது, தங்களிடம் உள்ள இத்துனூண்டு ‘மூளையில்’ எப்படி இத்தனை வேலைகளைத் திட்டமிட முடிகிறது?

எறும்புகள் தங்களுக்கென்று ‘தலைமை எறும்பு’ சொல்வதைச் செய்வதில்லை.ஆனாலும் ஒரு வேலையை கச்சிதமாய் முடிகிறது. 

தாங்கள் நகரும்போது, பெரமோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு வெளியிட்டு, பிற எறும்புகளுக்கும் வழித்தடத்தை அறிவிக்கின்றன. இது எறும்பின் கூட்டுப் புலமை.சின்ன மூளை! பெரிய வேலை என்கிறார்.

அறிவின் அடிப்படையே பகிர்தல் தான். பலரும் அதனை செய்வதில்லை.கருத்துக் கேட்பு என்பது மாபெரும் உக்தி. பல்வேறு தரப்பின் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி புதிய கருத்துக்கள் பிறப்பதாய் சொல்கிறார் ஹெகல்.அருகில் உள்ளவர்களின் அறியாமை எனும் இருளை விரட்டும் விளக்கு நம் கையில் தான் உள்ளது. நமக்கானது முன்னொருவர் கையில். ஆகவே அறிவை பகிர்வோம். அனுபவத்தை பெறுவோம்.

 நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 14 October 2025

183



#கற்கை_நன்றே_183

மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உருவாகின்றன
-அரிஸ்டாடில்


சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு திறமையாகச் சிலர் செயல்படுகின்றார்கள். ஆனால் திறமையாகச்  செயல்பட்டதன் பலன் சில ஆச்சர்யங்களையும் தருகின்றது. சில நேரங்களில் இந்த திறமையை குறுக்கு வழியில் பயன்படுத்தினால் சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றன.எனவே, எப்போதும் குறுக்கு வழிகள் உதவும் என்று தப்புக் கணக்குப் போடக் கூடாது.

ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார்.


போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்தபோது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.
வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.
ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன் மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
நம்மை விட புத்திசாலிகள் அருகில் உண்டு என்பதை உணரலாம்

ஒஷோ கூறும் கீழ்காணும் கதை தான் பெரிய அறிவாளி என நினைத்துச் செய்யும் செயல்கள் எதிர்விளைவை தருகின்றன..

நெரிசல் மிகுந்த ஒரு நாளில் ஒரு விபத்து நடந்துவிட்டது. விபத்து நடந்த இடத்தில் மக்கள் அதிகமாகக் குவிந்து காணப்பட்டனர்.  அந்தப் பக்கமாக வந்த ஒரு பத்திரிக்கை நிருபர் 'என்ன?' என்று விசாரித்தபோது விபத்தில் யாரோ இறந்து விட்டதாகச் சொன்னார்கள். கூட்டத்தைக் கடந்து உள்ளே செல்ல முடியாத அந்த நிருபருக்கு ஒரு யோசனை வந்தது.

உடனடியாக "நான் தான் அந்த விபத்தில் இறந்தவரின் அப்பா" என்று கத்தினார். சத்தத்தைக் கேட்ட கூட்டம் உடனடியாக விலகி நின்று அவரைப் பார்த்து, வழிவிட்டது. அவரும் வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஒரு கழுதை அடிபட்டுச் செத்துக் கிடந்தது. "கழுதையின் அப்பா" அசடு வழிந்து நின்றார்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு


Monday, 13 October 2025

184


#கற்கை_நன்றே_184

"கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும். அதன்மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும் அது உறுதியாக நிற்கிறது. அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அடங்கி அமைதியாகின்றன

-வில்லியம் ஆஸ்லர்

ஒரு  அமெரிக்கப் பத்திரிக்கை இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது ? என்ற கேள்வியைப் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் கூறக்கூடிய பதில்களும், அதற்கான காரணங்களும் அவரால் தொடர்ந்து தொகுக்கப்பட்டும், பத்திரிக்கையில் வெளியிடப்பட்டும் வந்தன. பெரும்பாலானவர்கள் ஆகாய விமானம், அணுசக்தி ஆற்றல், கம்ப்யூட்டர், வாகனப்  போக்குவரத்து, சில அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் என்றெல்லாம் கூறினார்கள்.

ஒரேயொரு நபர் மட்டும் மிகவும் வித்தியாசமான ஒரு பதில் சொன்னார். அதாவது அவரைப் பொறுத்தமட்டில் தலைசிறந்த கண்டுபிடிப்பு தெர்மாஸ் என்றார். காரணம் கேட்டதற்கு, அது சூடானதை சூடானதாகவும், குளிர்ச்சியானதை குளிர்ச்சியாகவும் வைக்கிறது என்றார். இதிலுள்ள உள் அர்த்தம் "எது எப்படியுள்ளதோ அதன் உண்மைத்தன்மை மாறாமல் அது வெளிப்படுத்துகிறது என்பதே" இதன் சிறப்பு.

தன்னிடம் பெறக்கூடிய பொருளின் தன்மையை மாற்றாமல் வைப்பது தெர்மாஸ் குடுவையின் பண்பு. மனிதர்களைக் காணும் போதும் அவரவர் நிலையில் அவர்களை வைத்து, அவர்களை உயிரோட்டமாக இருக்க வைப்பதும் அவசியம் என்பதே இந்தச் சம்பவத்தின் உண்மையான விளக்கம்.

Sympathy vs Empathy

Sympathy என்பது ஐயோ பாவம் என்று இரக்கப்படுவது.இது ஒரு போதும் ஒருவரின் துன்பத்தை மாற்றாது.

அதை மாற்ற முயலுவதுதான் Empathy.கருணையை செயலாக மாற்றுவது.இந்த Empathy யை தான் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

ஒத்தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

எவன் அடுத்தவனுக்கு நேர்கிற துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதுகிறானோ,அவன் தான் உண்மையில் உயிர்வாழ்கிறவன்.

*அதற்கு ஆங்கிலத்தில் empathy என்றுபெயர்.மற்றவர் துன்பத்தை எவன் உணர்கிறானோ அவன் தான் emperor- பேரரசன் என்கிறார் சுபவீ

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 7 October 2025

182


#கற்கை_நன்றே_182

பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஃபேஸ்புக் பார்ப்பது டுவிட்டர் எழுதுவது,எந்த உரையாடலையும் தொடர்ச்சியாகக் கவனிக்காமல் ஐந்தாறு நிமிடங்களுக்கே விஷயத்திலிருந்து தாவிச்செல்வது போன்றவை இன்றையத்தலைமுறையில் பொதுவாக மிக அதிகம்.இன்றைய ஊடகப்பெருக்கத்தின் விளைவு இது.இது பொதுவாக ஒற்றைவரிகளை மட்டுமே அறிந்தவர்களாக,எதையும் தர்க்கபூர்வமாக விரிவாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது 

-ஜெயமோகன்

இன்றைய உலகில் அதிகம் பேரால் கடைபிடிக்காத ஒன்று காத்திருப்பதும் பொறுமையாய் இருப்பதும் தான்.
மற்றவர்கள் கூறுவதை நாம் காது கொடுத்து கேட்பதில்லை சிந்திப்பதுமில்லை,
பின்பற்றுவதுமில்லை.மற்றவர் அனைவரும் நம் அறிவை மட்டுப்படுத்துகின்றனர்,ஏளனம் செய்கின்றனர் என்ற மனம் தான் மூத்தோர் சொல்லும் அறிவுரைகளை இடது கையால் தள்ளிவிடுகின்றனர். இதனை அவர்கள் பெருமையாகவும் கருதுகின்றனர்.

ஓஷோ சொல்வது இதைத்தான்
யாரும் யாரையும் மாற்ற முடியாது.இது ஒரு மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய புரிந்து கொள்தலாகும்

ஆகவேதான்,வயதானவர்கள் மிகவும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும் போகிறார்கள்.ஆனால் இளமையில் அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.அவர்கள் தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்ற முனைகிறார்கள். அவர்களது விருப்பப்படி, இந்த உலகம் அமையவேண்டும் என நினைக்கிறார்கள். கடுமையாகப் போராடுகிறார்கள்.ஆனால் நினைத்தது நடக்காது.ஏனெனில் இயற்கையே அப்படித்தான்

இளஞ்செடியை சுற்றி வேலிக்கூண்டு ஒன்றை அமைத்தான் தோட்டக்காரன். இது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று செடி நினைத்தது. மனம் நொந்தது. வெளியே சுதந்திரமாக தெரியும் பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து பெருமூச்சு விட்டது. ஒரு கட்டத்தில் அதற்கு கோபம் வந்து. தன் ஒரு கிளையை வளைத்து

வெளிக்கூண்டுக்கு வெளியே நீட்டியது.. ஆகா இதுவல்லவோ சுதந்திரம் என எண்ணியது.

 ஆனால் அங்கு வந்த மேய்ச்சல் மாடு ஒன்று தன் நாவினால் வெளியே இருந்த இலைகளை தாவி இழுத்து சுவைத்தது. பின்பு இளஞ்செடியை வேரோடு கீழே சாய்த்தது. மரமாக நிமிர்ந்து நிற்கும் வரை பொறுமையோடு இருந்திருந்தால் வேலிக்

கூண்டு இல்லாமல் போயிருக்கும், சுதந்திரமும் கிடைத்திருக்கும்.

' ஏன் போடப்பட்டுள்ளது என்பதை அறியாத வரை எந்த வேலியையும் தகர்க்காதே" என்கிறார் 
ராபர்ட் ஃப்ராஸ்ட் 

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 6 October 2025

181


#கற்கை_நன்றே_181

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

இக்குறளின் மூலம் அழகிய வாழ்வியல் தத்துவத்தை என்.சொக்கன் அவர்கள் தருகிறார்.

எதிரியோடு மோதுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டுபிடிக்கும்வரை கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருங்கள் என்கிறார் திருவள்ளுவர் (குறள் 491). அதாவது, கண்ட இடத்திலிருந்து கல் எறியக்கூடாது, எங்கிருந்து எறிந்தால் எதிரிக்கு வலிக்கும், எது நமக்குத் தொலைநோக்கில் உறுதியான வெற்றி வாய்ப்பைக் (Strategic Advantage) கொடுக்கும் என்று ஆராய்ந்து தெரிந்துகொண்டு அங்கிருந்துதான் கல்லை எறியவேண்டும். அதுவரை கற்கள் நம் கையில்தான் இருக்கவேண்டும்.

அடுத்து வரும் 'எள்ளற்க' என்ற சொல் அதைவிட முக்கியம். அதாவது, தாக்குவதற்குச் சரியான இடம் கிடைக்கும்வரை எதிரியை இழிவாகப் பேசாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள், கையைக் கட்டினால் போதாது, சரியான தாக்குதல் திட்டம் அமையும்வரை வாயையும் கட்டவேண்டும். சினத்தைக் கட்டுப்படுத்தாமல் 'உன்னை என்ன பண்றேன் பாரு' என்றெல்லாம் கத்திக்கொண்டிருந்தால் இரண்டு பிரச்சனைகள்:

1. நேரமும் ஆற்றலும் திட்டுவதில் செலவாகிவிடும், தாக்குதலுக்குத் திட்டமிடமுடியாது.

2. நம்முடைய கத்தலைக் கேட்டு எதிரி எரிச்சலடைந்து நம்மைத் தாக்கத் தொடங்கினால் திருப்பித் தாக்குவதற்குச் சரியான திட்டமோ இடமோ இல்லாமல் வெட்டவெளியில் சிக்கிக்கொள்வோம்

இது அரசர்களுக்கு எழுதிய குறள்தான். ஆனால், 'தாக்குதல்' என்பதை 'எதிர்த்துப் போட்டியிடுதல்' என்று மாற்றிக்கொண்டால் எல்லாருக்கும் பொருந்தும். அவ்வப்போது வாயை மூடாத பிழையால் நாம் சந்தித்த/சந்திக்கிற தொல்லைகள்தான் எத்தனை எத்தனை!

அன்றாடம் வாசிக்கும் புத்தகங்களில், நம்மைச் செறிவூட்டக்கூடிய ஒரே ஒரு வரியை வாசித்தாலே போதுமானது. அன்றாடம் செறிவுபெறுகிறோம் என்பதே மற்ற எல்லாவற்றையும்விட மகிழ்ச்சிதரக்கூடியதாகவும் திருப்திதரக்கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது என்கிறார் த.ராஜன்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 5 October 2025

180


#கற்கை_நன்றே_180

தகுதியின்மை மூன்று காரணிகளால் விளைகிறது. தகவலின்மை, புரிதலின்மை, மற்றும் அனுபவமின்மைதான் அவை. கூர்ந்து கவனமாகக் கேட்பதன் மூலம் மட்டுமே அந்த முதல் பற்றாக்குறை களையப்படுகிறது

-மஹோத்ரயா ரா

சமீபத்தில் நுண்ணம் எனும் வார்த்தை படித்தேன்.இதன் அர்த்தம்
நுண்ணம் என்பது “மிக நுட்பமான அறிவு”, “சிறு சிந்தனை திறன்” என்று பொருள்.சாதாரணமாக யாரும் கவனிக்காத, மிக நுணுக்கமான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் மன திறன் — அதுவே நுண்ணம்.சுவேகி அவர்களின் பதிவு மேலும் தெளிவைத் தந்தது

நுண்ணம் என்பது புரட்சி - "Nimbleness is rebellion” இதன் பொருள் நுட்பமாக, வேகமாக, சூழ்நிலைக்கு தகுந்து செயல்படுவது — ஒரு வகையில் கிளர்ச்சி ஆகும்.”

ஒரு பெரிய நிறுவனத்தில் அனைவரும் பழைய விதிமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள்.

ஆனால், ஒரு இளம் ஊழியர் புதிய சாஃப்ட்வேர் பயன்பாட்டை அறிமுகப்படுத்தி, வேலையை விரைவாக முடிக்கிறார்.

இதனால் மேலாளர் முதலில் அதிர்ச்சி அடைகிறார் — ஆனால் பின்னர் அது பயனுள்ளதாக இருக்கும் என உணர்கிறார்.

இங்கு அந்த இளம் ஊழியரின் நுண்ணம் வெளிப்பட்டுள்ளது.

“நுண்ணம் பேசும் நெஞ்சம் தான், வாதம் வெல்லும் வலிமை.”

வித்யாசமான எண்ணங்களை ஏற்காமல் பரிசீலிக்கக் கூடிய திறன் ஏன் முக்கியமானது, மற்றும் அது நம்முடைய தினசரி முடிவெடுப்புகளில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

எண்ணங்களை பரிசீலிப்பது என்பது பலவீனமல்ல—அது ஒரு மனஅழகிய வரவேற்பு.

ஒரு எண்ணம் உங்கள் மனதுக்குள் நடக்க அனுமதிப்பது, ஆனால் அதன் சாவியை கொடுக்காமல் இருப்பது.

கருத்துகள், கொள்கைகள், உணர்ச்சி தூண்டுதல்கள் நிரம்பிய உலகத்தில், இந்த திறன் தான் ஞானத்தின் பாதுகாப்பு சுவராக செயல்படுகிறது.

நீங்கள் பரிசீலிக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை—ஆனால் வளர விரும்பினால், பரிசீலிக்க வேண்டும்.

 பாகுபாடு இல்லாமல் எண்ணங்களை அளவீடு செய்தால், நீங்கள் தெளிவின் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்

நீங்கள் அசௌகரியத்தையும் ஆபத்தையும் வேறுபடுத்திக் காணும் திறனை வளர்த்துக்கொள்கிறீர்கள்.

ஒவ்வொரு புதிய எண்ணமும் ஆபத்தானது அல்ல—அது ஒரு புதிய பார்வை மட்டுமே ஆக இருக்கலாம்.ஜனநாயக கருத்து எதிர்மறை கருத்துகளை கேட்கும் திறன் கொண்ட குடிமக்கள் மூலம் வளர்கின்றன. வாதம் சாகும் போது, ஆர்வமும் சாகிறது.புதிய எண்ணங்களை பரிசீலிப்பதே புதுமையின் மூச்சு.

தினசரி வாழ்க்கையில், நாம் சக ஊழியரின் வித்தியாசமான யோசனையை கேட்கலாம், பரிந்துரைத்த புத்தகத்தை வாசிக்கலாம், அல்லது ஒரு வாதத்தில் ஈடுபடலாம்—உங்கள் மையத்தை இழக்காமல்.

 கும்பல்மனப்பான்மையை விட, நுண்ணுணர்வுடன் செயல்படுகிறீர்கள்.

இது நடுநிலையாக இருப்பது பற்றி அல்ல. இது நுண்ணமாக இருப்பது பற்றி.

உணர்ச்சி வெடிப்புகளை விரும்பும் உலகத்தில், நுண்ணம் என்பது புரட்சி.

“நுண்ணம் பேசும் நெஞ்சம் தான், வாதம் வெல்லும் வலிமை.”

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

நாம் இத்தருணத்தில் போராடவில்லையெனில் எதிரி நம்மைக் கொன்றொழிப்பான்.பின்நம் கல்லறைகளின் மீதேறி நின்று இவையெல்லாம் அடிமைகளின் எலும்புகளென எக்காளமிடுவான்.-லூ சூன்

Saturday, 4 October 2025

"நடப்பது என்பதின் தத்துவம்" Philosophy of walking எனும் ஃப்ரெட்ரிக் கிராஸ் எழுதிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நடப்பது என்பது சுதந்திரம்,படைப்பு சக்தி,சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது என்று எழுதி இருக்கிறார் . மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மூலமாக நடை போடுவதை ஒரு போராட்ட யுத்தியாக மாற்றிக் கொண்டார். சுதந்திரமும், தனிமனித வெற்றியும் பற்றி நீண்ட நடை பயணங்களில் தனிமையாக சிந்திக்கும் போது --சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து விலகி நடக்கும் போது ---தனக்கான தனி வழிகளை சிந்தனை பூர்வமாகக் கண்டுபிடிக்க முடிகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.10000 அடிகள் தினந்தோறும் நடப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் தினந்தோறும் நடை பழகுங்கள்.-இந்திரன்

Thursday, 2 October 2025

179


#கற்கை_நன்றே_179

சிறந்தவராக இருப்பதை விட தனித்துவமானவராக இருப்பதே மேல். சிறந்தவராக இருந்தால் நீங்கள் நம்பர் ஒன் ஆகத்தான் இருக்க முடியும். தனித்துவமாக இருந்தால் 'ஒன்லி ஒன்னாக' இருக்கலாம்

-ரவிக்குமார்

சமீபத்தில் நறுக்கு ஒன்று படித்தேன். புழுவாய் துடிக்கும் நெஞ்சம் எப்போது?
ஒரு புழுவை காலால் நசுக்கித் தேய்க்கும் போதுதான் என்று இருந்தது.வன்மமும் எரிச்சலும் தான் புழுவை நாம் கொன்றிடத் தூண்டுகிறது.கோபமும் அது போல் தான். நமக்கு கீழானவர்களிடம் அதிகம் வருகிறது.அதனை அந்த நேரத்தில் கட்டுப்படுத்த தான் அதிகம் பயிற்சி தேவைப்படுகிறது.

ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.

ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.அதே போல் மற்ற உதாரணம் ஒன்று..

விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னரிடம் இருந்தன. அரண்மனை பணியாளர் ஒருவர் அதை சுத்தம் செய்யும் போது உடைத்து விடுகிறார். கோபம் கொண்ட மன்னன் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்.. 

உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனையும் உடைத்து விடுகிறார். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார் மன்னர். உடைந்து போகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

இவ்வாறு உடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரு உயிர்களை காப்பாற்ற முடியுமே அதனால்
இப்படி செய்தேன் என்கிறார். தனது தவறை உணர்ந்து தீர்ப்பை திருத்தி அவரை விடுவித்தார். 

கோபம் கொள்வது 
எந்த மனிதனும் செய்யக்கூடிய
மிக எளிதான செயல்தான்.
ஆனால்,
சரியான நேரத்தில்,
சரியான நபரிடம்,
சரியான காரணத்திற்காக 
கோபப்படுவது 
எளிதான செயல் அல்ல...!!
என்கிறார் அரிஸ்டாட்டில்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 1 October 2025

178


#கற்கை_நன்றே_178

அடகு வைக்கப்பட்ட நேர்மை
ஒருபோதும்
திருப்ப படுவதில்லை

-சாக்ரடீஸ்

தற்காலத்தில் நேர்மை என்பதை பலருக்கும் உதாரணத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.ஏடி எம் வரிசை, கடவுள் தரிசனத்தில் இடையில் புகுவது,குறுக்கு வழியில் செல்வதை புளகாகிதத்துடன் சொல்வதை பார்க்கிறோம். நேர்மையாய் இருப்பதை கையாளாகத்தனம் என எண்ணுகின்றனர்.நேர்மை குறித்து நினைக்கும் போதெல்லாம் தும்பி இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய இக்கதைதான் நினைவுக்கு வருகிறது.

 ஆப்பிரிக்கன் ஒருவன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக்கஷ்டம்.ஒரு வெள்ளைத் தாளில்,சம்பள முன்பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான்.அவனுக்கு ஆறு குழந்தைகள்.கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள்.அவன் பணிபுரிந்த நிறுவனத்தில்,

குழந்தைகளுக்கான படிப்பணம் உண்டு. மாதாமாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் அவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரேநாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம்,இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்

கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை.அந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. அவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது எப்போதும்

கஷ்டத்தில் உழலும் அவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

படிப்பறிவு சொட்டும் இல்லாத அந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். அவனுடைய நடத்தைக்கான காரணத்தை தான் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம் தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரைமணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்குஅர்த்தம். 

மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது, அதுதாநேர்மை!

நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மனசாந்திக்காக, நம் சந்ததியினரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு சாத்தியமாக இருந்தது நமக்கும் சாத்தியமாகும்!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு