வாழ்க்கைக்கு ஹைக்கூ 12:
"அழகாக மாறி;
பின்னர் உதிர்ந்து; கீழே விழும் மேப்பிள் இலைகளைக் கண்டு நான் பொறாமை கொள்கிறேன்."
- ககாமி ஷிகோ (Kagami Shiko)
மேப்பிள் மரத்து இலைகள் கோடைக்காலத்தில் பச்சையாக இருக்கும். ஆனால் இலையுதிர் காலத்தில் (Autumn), அவை உதிர்வதற்குத் தயாராகும் போது, மிக அழகான சிவப்பு மற்றும் தங்க நிறத்திற்கு மாறுகின்றன. தங்கள் வாழ்வின் முடிவில், அவை வாடி வதங்கிப் போகாமல், மிகச்சிறந்த அழகை வெளிப்படுத்திவிட்டு, மரத்தை விட்டு மெதுவாக, அமைதியாகக் கீழே விழுகின்றன. கவிஞர் அந்த "அழகான விடைபெறுதலை" இந்தக் கவிதையில் கண்டு வியக்கிறார்.
பொதுவாக மனிதர்களாகிய நாம் வயதாவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்; மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால் இந்த ஹைக்கூ முதுமை ஒரு அழகு என்கிறது.
வயதாவதை அழகின் இழப்பாகப் பார்க்காமல், அனுபவமும் ஞானமும் நிறைந்த ஒரு மனங்கனிந்த அழகாக (Inner Beauty) பார்க்க வேண்டும்.
இலைகள் எப்படி கிளைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்காமல், நேரம் வந்ததும் அழகாக உதிர்ந்து விடுகின்றனவோ, நாமும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பற்றுகளைத் துறந்து, அமைதியாகவும் பெருமையுடனும் விடைபெறக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் அன்பாலும் அனுபவத்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை அழகாக்கிவிட்டு, வாழ்க்கைக் குறித்து எந்த கவலையோ, புகாரோ இல்லாமல் மகிழ்வாக, நிறைவாக, பற்றுகளை விட்டு விலகி மேப்பிள் இலைகளைப் போல, வாழ்விலிருந்து உதிர்தல் உன்னதம்.
No comments:
Post a Comment