நம்முடன் வாழ்கின்ற உறவுகள், நட்புகளோடு இணைந்தே இந்தப் பயணத்தை நாம் மேற்கொண்டிருந்தாலும், இந்த தொழில்நுட்ப யுகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற ஒருவித வேகத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.
அந்த வேகம் என்பது, உதாரணத்திற்கு ‘அறிந்து கொள்வது, அறிந்து கொள்ளாமல் இருப்பது மற்றும் ஆசைப்படுவது, ஆசைப்படாமல் இருப்பது’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது.
இணைந்தே பயணிக்கிறோம் எனக் காட்டிக் கொண்டாலும், சொல்லிக் கொண்டாலும், அவரவர் வேகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில்தான் நிற்கின்றோம்.
அது சிலருக்கு கர்வத்தையும், சிலருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தந்துவிடுகின்றது. மிகப் பெரும்பான்மையான சூழல்களில், அந்த வேகத்தின் அடிப்படையிலேயே மற்றவர்களோடு பெரிதும் முரண்படுகின்றோம்.
நாம் மிகச் சாதாரணமாகச் சொல்லும் ஒன்று அவர்களுக்கு வேறு மாதிரியும், அவர்கள் மிகச் சாதாரணமாகச் சொல்லும் ஒன்று நமக்கு வேறு மாதிரியும் பெரும்பாலான நேரங்களில் உணரப்படுவது இந்த வேக மற்றும் இட மாறுபாட்டால்தான்.
வெவ்வேறு இடத்தில், மாறுபட்ட வேகத்தில் இருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை, 'நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு புரிய வைக்கவே முடியாது!’ எனும் புலம்பல் மட்டுமே மிகுந்திருக்கும்.
அதன் விளைவு... நாட்கள் நரகமாகும்!
நாம் இருக்கும் நிலையில் இருப்பதால் மட்டுமே நிம்மதி வந்துவிடாது. மற்றவர்கள் இருக்கும் நிலையை புரிந்து கொள்வதும், ஏற்றுக்கொள்வதுமே நிம்மதியைத் தரும்.
- ஈரோடு கதிர்
No comments:
Post a Comment