Wednesday, 4 March 2026

tea-23


#மனசுக்கு_ஒரு_தேநீர்_23

ஒருவனின் வாழ்நாளை எவ்வாறு 
களவாட முடியும்? 

எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை விதைத்து, தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 'அன்றைய' நாளை மறக்கடித்து விடு. 
செய்த செயல்கள் ஏதுமின்றி அவனது ஆயுட் காலம் முழுவதும் கழிந்தே போய் விடும்.

-கஸ்ஸாலி

“Your mindset determines whether you see difficulty as a problem or a challenge

ஒரே நிகழ்வு 
ஒருவருக்கு பிரச்சனை,
மற்றொருவருக்கு சவால்.
ஒரு பிரச்சனைக்கும் ஒரு சவாலுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. மஹாத்ரயா ரே
இதனை உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஒரு காட்டின் நடுவில் ஒரு சிங்கம் என் எதிரில் நின்று கொண்டிருந்து, என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்றால், நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் என் கையில் ஓர் இயந்திரத் துப்பாக்கி இருந்தால், அந்த சிங்கத்திற்குப் பிரச்சனை என்று பொருள். சரியான நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சவால் மட்டும்தான் எனக்கு இருக்கும். 

நான் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை என்னிடம் உள்ள வளங்களைவிடப் பெரியதாக இருந்தால், அதை ஒரு பிரச்சனை என்று கூறலாம். ஆனால், என்னிடமுள்ள வளங்கள் நான் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையைவிடப் பெரிதாக இருந்தால், அது வெறும் சவால்தான்.

 நம்முடைய பிரச்சனைகளை அளவுக்கதிகமாக மதிப்பிடுவதும், அப்பிரச்சனைகளை முறியடிக்கக்கூடிய நமது திறனை மிகவும் குறைவாக மதிப்பிடுவதும்தான் மனிதனுடைய இக்கட்டான சூழ்நிலை

சவால்களை  வெற்றி கொள்ளும்போது, நீ இன்னும் பெரிய சவால்களைப் பின்தொடர அவை உனக்கு உதவுகின்றன; அதன் வாயிலாக அவை உனக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

மனித வாழ்க்கை என்பது அமைதியான ஏரி அல்ல; அலைகள் எழும் கடல் போன்றது. அந்த அலைகளில் சிலவற்றை நாம் பிரச்சனை என்று அழைக்கிறோம்; சிலவற்றை சவால் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் அலை ஒன்று தான் — அதை நாம் பார்க்கும் பார்வை மட்டுமே வேறுபடுகிறது.

வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலை வந்தால் மனித மனம் முதலில் அதை பிரச்சனையாகவே உணர்கிறது. பிரச்சனை என்பது நம்மை நிறுத்திவிடும் சுவரைப் போன்றது. அது பயத்தையும் தளர்ச்சியையும் உருவாக்குகிறது.
அதே நிலையை ஒருவர் சவால் என்று எண்ணும் போது, அந்த சுவர் கதவாக மாறுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திறமையில் அல்ல; பார்வையில் தான்.

பிரச்சனை மனிதனை சோதிக்கிறது;
சவால் மனிதனை செதுக்குகிறது.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment