Sunday, 10 May 2026

லதா


எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது நம் தராசில் வைத்து குறை கூறிக் கொண்டும் வன்மம் கக்கிக் கொண்டுமே ஏன் இருக்கிறோம்? 

நம் எண்ணம் மட்டுமே சிறந்தது. நாம் வாழும் முறை, கடைபிடிக்கும் கொள்கைகள் மட்டுமே சிறந்தது என நினைப்பதும் மற்றவர் தனிப்பட்ட வாழ்வில் புகுந்து அவர் இப்படி செய்வது சரியில்லை, அவர் அப்படி வாழ்வது முறையில்லை என்று எப்பொழுதும் எதையாவது கிளறிக் கொண்டே இருப்பதும் எவ்வாறு சரியாக இருக்க முடியும்? 

இங்கு அனைவரும் ஒரே பாதையில் பயணிப்பவர் இல்லை. அவரவர் பாதை அவரவரை செதுக்கியிருக்கும். ஆனால் எதோ நாமெல்லாம் ஒரே மோல்டில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் போலும், இம்மி பிசகாமல் அனைவரும் ஒரே போல் தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், அது மட்டுமே சரியென வாதாடுவது நம்மை முட்டாளாகத்தான் பொருள்பட வைக்கிறது. 

கலாச்சார காவல்காரர்களை நிந்தித்து, முற்போக்கு மனப்பான்மை கொண்டவர்களாக தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூட, தனக்கென ஒரு லட்சுமண ரேகை வரைந்திருக்கிறார்கள் இதைத் தாண்டக் கூடாது, இதைத் தாண்டலாம் என. இதில் ஒரு தவறுமில்லை. அது தனக்கான எல்லைக் கோடாக வைத்திருக்கும் வரை. ஆனால் அதே எல்லைக்கோட்டை வேறொருவர் தாண்டினால், அங்கு இவர்களும் கலாச்சாரக் காவலர்களாகத்தான் ஆகிவிடுகிறார்கள். 

அதாவது மனிதர் எத்தனை இழிவானவர்கள் என்றால் தனக்கென வருகையில் தான் தாண்டியவரை எல்லாம் சரி, ஆனால் இன்னும் நாம் தாண்டாதவற்றை மற்றவர் தாண்டும்போது அங்கு நம்மால் அதை ஏற்க இயலாது போகிறது, உடனே அங்கு நாம் நீதிபதியாக மாறுகிறோம். 

இதில் பிற்போக்கு என்ன முற்போக்கு என்ன? மற்றவர் சொந்த வாழ்வில் அழையாத நீதிபதியாக உள்ளே நுழைந்து தராசை கையில் ஏந்தும் போதே நாம் நாகரிகமற்ற மனிதர்களாகிறோம். அங்கேயே எல்லா போக்கும் உடைந்துவிடுகிறது.

No comments:

Post a Comment