Saturday, 2 May 2026

பாரி



'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' பாடலில் , 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி' என்றொரு வரி உண்டு. 

இந்த வரிகளை , 'நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி' என்றுதான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். நினைத்தது என்ன, அப்படியே பாடிக்கொண்டும் திரிந்திருக்கிறேன். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் , காணொலி ஒன்றில் ஒரு பெண்மணி விளக்கி இருந்தார். அதன் பிறகு அந்த வரிகளைத் தேடினால், நிறைய தளங்களில் 'செஞ்சமெனும் வீணை' என்றே இருந்தது. குறிப்பாக 2000 த்தின் தொடக்க காலத்தில் இருந்த இணைய தளங்களிலும் 'செஞ்சமெனும் வீணை' இருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் அவை கண்ணில் பட்டிருந்தால்கூட எப்படி தப்பா எழுதி வச்சிருக்காங்க என்று நக்கீரர் அவதாரம் எடுத்திருப்பேன். ஆனால் அதுதான் உண்மையான வரிகள் என்று அறிந்த பின், வாலியை பிரமித்தேன். 

அந்த வரியின் பொருள் இதுதான். செஞ்சம் என்பது வீணைகளில் ஒரு வகை. இந்த வீணை, சோக ராகங்களை இசைப்பதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படுபவை. ஆனால், அந்த வீணையில் தோடி ராகத்தை இசைத்தால் மட்டும் சோகம் தாண்டிய ஒரு சுகமான இசையை அந்த வீணை பிரசவிக்குமாம். வாலிக்கு இயல்பிலேயே இந்த இசை வாத்திய பின்னணி கொண்டோரோடு புழங்கக்கூடிய வாய்ப்பு இருந்ததனால் சட்டென எழுதிவிட்டார். குறிப்பாக, படத்தில் கதாநாயகனில் கதாபாத்திற்கு அந்த வரிகள் பெரிதாக பொருந்தியிருக்கும். சோகத்தை தனக்குள் நிரந்தரமாக வைத்துக்கொண்டு, பிறர்க்காக திரைப்பாடல்களை மகிழ்வாகப் பாடும் பாடகன் அவன். அவன்தான் செஞ்சம், அவன் பாடுகிற ராகங்கள் தோடியைப் போல சுகமானவையாக அமைந்து பிறரை மகிழ்விக்கும் என்கிற பொருளை அந்த வரிகள் கொண்டிருக்கும். 

'சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் 
சிரிக்காத நாள் இல்லையே' 

என்கிற வரியின் இன்னொரு வடிவம்தான் அந்த 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி'.

 , 'சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை.. எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்' என்கிற வாலியின் வரிகளிலேயே பதில் சொல்லி அமைகிறேன்.

-அ.பாரி

No comments:

Post a Comment