Thursday, 2 October 2025

179


#கற்கை_நன்றே_179

சிறந்தவராக இருப்பதை விட தனித்துவமானவராக இருப்பதே மேல். சிறந்தவராக இருந்தால் நீங்கள் நம்பர் ஒன் ஆகத்தான் இருக்க முடியும். தனித்துவமாக இருந்தால் 'ஒன்லி ஒன்னாக' இருக்கலாம்

-ரவிக்குமார்

சமீபத்தில் நறுக்கு ஒன்று படித்தேன். புழுவாய் துடிக்கும் நெஞ்சம் எப்போது?
ஒரு புழுவை காலால் நசுக்கித் தேய்க்கும் போதுதான் என்று இருந்தது.வன்மமும் எரிச்சலும் தான் புழுவை நாம் கொன்றிடத் தூண்டுகிறது.கோபமும் அது போல் தான். நமக்கு கீழானவர்களிடம் அதிகம் வருகிறது.அதனை அந்த நேரத்தில் கட்டுப்படுத்த தான் அதிகம் பயிற்சி தேவைப்படுகிறது.

ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.

ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.அதே போல் மற்ற உதாரணம் ஒன்று..

விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னரிடம் இருந்தன. அரண்மனை பணியாளர் ஒருவர் அதை சுத்தம் செய்யும் போது உடைத்து விடுகிறார். கோபம் கொண்ட மன்னன் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்.. 

உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனையும் உடைத்து விடுகிறார். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார் மன்னர். உடைந்து போகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

இவ்வாறு உடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரு உயிர்களை காப்பாற்ற முடியுமே அதனால்
இப்படி செய்தேன் என்கிறார். தனது தவறை உணர்ந்து தீர்ப்பை திருத்தி அவரை விடுவித்தார். 

கோபம் கொள்வது 
எந்த மனிதனும் செய்யக்கூடிய
மிக எளிதான செயல்தான்.
ஆனால்,
சரியான நேரத்தில்,
சரியான நபரிடம்,
சரியான காரணத்திற்காக 
கோபப்படுவது 
எளிதான செயல் அல்ல...!!
என்கிறார் அரிஸ்டாட்டில்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 1 October 2025

178


#கற்கை_நன்றே_178

அடகு வைக்கப்பட்ட நேர்மை
ஒருபோதும்
திருப்ப படுவதில்லை

-சாக்ரடீஸ்

தற்காலத்தில் நேர்மை என்பதை பலருக்கும் உதாரணத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.ஏடி எம் வரிசை, கடவுள் தரிசனத்தில் இடையில் புகுவது,குறுக்கு வழியில் செல்வதை புளகாகிதத்துடன் சொல்வதை பார்க்கிறோம். நேர்மையாய் இருப்பதை கையாளாகத்தனம் என எண்ணுகின்றனர்.நேர்மை குறித்து நினைக்கும் போதெல்லாம் தும்பி இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய இக்கதைதான் நினைவுக்கு வருகிறது.

 ஆப்பிரிக்கன் ஒருவன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக்கஷ்டம்.ஒரு வெள்ளைத் தாளில்,சம்பள முன்பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான்.அவனுக்கு ஆறு குழந்தைகள்.கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள்.அவன் பணிபுரிந்த நிறுவனத்தில்,

குழந்தைகளுக்கான படிப்பணம் உண்டு. மாதாமாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் அவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரேநாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம்,இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்

கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை.அந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. அவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது எப்போதும்

கஷ்டத்தில் உழலும் அவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

படிப்பறிவு சொட்டும் இல்லாத அந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். அவனுடைய நடத்தைக்கான காரணத்தை தான் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம் தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரைமணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்குஅர்த்தம். 

மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது, அதுதாநேர்மை!

நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மனசாந்திக்காக, நம் சந்ததியினரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு சாத்தியமாக இருந்தது நமக்கும் சாத்தியமாகும்!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 30 September 2025

177


#கற்கை_நன்றே_177

ஆயுள் முழுக்க இந்த வாழ்வு நமக்கு பல்வேறு தேர்வுகளை வைத்துக் கொண்டே இருக்கிறது.நாமும் பல்வேறுவிஷயங்களைத் தேத்ந்தெடுத்துக் கொண்டே இருக்கிறோம். தேர்வுக்கும், தேர்ந்தெடுப்புக்கும் வேறுபாடு உண்டு. தேர்வு நம் முடிவல்ல, தேர்ந்தெடுப்புகளை நாம் முடிவு செய்கிறோம்

-சாம்ராஜ்

Black Swan Events என்பது மிக அரிதான, எதிர்பார்க்கப்படாத, ஆனால் நடந்தால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஆகும்.இந்தக் கருத்தை நசீம் நிக்கோலஸ் தலேப் (Nassim Nicholas Taleb) என்பவர் தனது “The Black Swan” (2007) என்ற புத்தகத்தில் பிரபலப்படுத்தினார்.

Black Swan நிகழ்வுகள் முன்னதாக யாருக்கும் தெரியாது, ஆனால் நடந்த பிறகு அனைவரும் அதை விளக்க முயற்சிப்பார்கள்.”பெரிய ஆபத்து என்பது நீங்கள் ஆபத்துகளைப் புரியாமல் இருப்பதுதான்.” Black Swan நிகழ்வுகள் மறைந்திருக்கும் ஆபத்துகளை வெளிப்படுத்தும்

இதுவரை நாம் கற்பனைகூட செய்துபார்த்திராத மிக அபூர்வமான நிகழ்வு ஒன்று நம் வாழ்க்கையில் நிகழும். அதற்கு நாம் தயாராகவே இருந்திருக்கவே மாட்டோம். 
அதனால் அரிதான, முன்னெப்போதும் நடந்ததில்லாத சம்பவங்களை மனம் ஏற்க மறுக்கும்.
அது நடக்கும்போது நிலை குலைந்து போவார்கள்.

மனிதர்கள் எதிர்காலத்தை கணிக்கும்போது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் தான் சிந்திப்பார்கள்.எதிர்பாராத நிகழ்வு நடந்த பிறகு தான் மக்கள் அதற்கான காரணங்களைச் சொல்லி “இதுவும் சாத்தியமே” என்று கூறுவர்.

 பளுதூக்கும் வீரர் ஒரு ரவுடியிடம் சண்டை போட நேர்ந்தால், சண்டை ஐந்து நிமிடம்கூட நீடிக்காது. ரவுடி கைக்குக் கிடைத்ததை வைத்து வேலையை முடித்துவிடுவான். பளுதூக்கும் வீரருக்கு உடல்வலு இருந்தாலும் இம்மாதிரிச் சூழலில் சண்டை போட்டுப் பழகவில்லை என்பதால் தோற்றுவிடுவார்.

 Ready to face இம்மாதிரி முறைசாராத, டிஸ்ரப்டிவ் முறை பயிற்சிகளைத்தான் ராணுவ வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஒருநாள் மலை ஏறச் சொல்வார்கள், அடுத்த நாள் கயிறு, அடுத்த நாள் பாலைவனத்தில் ஓட்டம், பனியில் கேம்ப்பிங். எனப் பல இடங்களில் பல சூழல்களில் அவர்களால் போரிட முடிகிறது.

உதாரணத்திற்கு எவ்வகை ஆபத்து வரும் என தீயணைப்பு வீரர்களுக்குத் தெரியாது. அதனால் அனைத்து வகை ஆபத்துகளையும் எதிர்நோக்கித் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

வணிகம் செய்யும்போது தினம் தினம் புதிய மனிதர்கள், புதிய சூழல்கள், புதிய சவால்கள். ஒரு நாளைக்கு வேலை செய்யும் உத்தி அடுத்த நாள் பயனாகாது. புதிய மனிதர்கள், புதிய உக்திகள் மூலம்,  அனுபவம் பெறுங்கள். அதன்பின் வாழ்க்கையில் மற்றவர்களை அடித்து வீழ்த்தும் ப்ளாக் ஸ்வான் நிகழ்வுகள் உங்களைப் பாதிக்காது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 29 September 2025

176


#கற்கை_நன்றே_176

வேலைதான் துயரத்தை லேசாக்கும். வேலையில் ஈடுபட்டிருக்கும்போது எப்பேர்ப்பட்ட மனிதனும் கனிகிறான்.

- பெருமாள் முருகன்

வேலையின் விளைவைப் பற்றி அதிகமாக ஆராயாமல் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் நிகழ்வது கடின உழைப்பு. பலன்தரும் உழைப்பினை மட்டுமே விதைத்து அதன் பலன்களை மீண்டும் மீண்டும் மீண்டும் விதையாக்கி பலன் பெறுவது புத்திசாலித்தனமான உழைப்பு என்கிறார்கள்.

ஆனால் உடல் உழைப்பு என்பது சில நேரங்களில் நமக்கு தேவைப்படுகிறது. உதாரனத்திற்கு வீட்டு வேலை, அலுவலகத்தில் செய்யும் ஏதேனும் ஒரு முக்கிய வேலைகள்,குழந்தைகளுகாக, குடும்பத்திற்காக  நம் உடல் உழைப்பை கோருகிறது.டேவிட் கிரேசன் என்பவர் கூறுகிறார் சந்தோஷம் என்பது நான் கண்டறிந்தவரை பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்து விடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்த முடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். 

அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது. வியர்வை, சோர்வு, சுய தியாகத்தை அது விரும்புகிறது. அதை உங்களால் அரண்மனைகளில் காண முடியாது. ஆனால் சோள வயலில், தொழிற்சாலைகளில், வேலை செய்யுமிடங்களில் அது தங்கியிருக்கும். வேலையில் மூழ்கி இருக்கும் அறியாக் குழந்தைக்கு அது மகுடம் சூட்டுகிறது. கடும் வேலையிலிருந்து சடாரென்று நிமிர்ந்து பார்த்தால் அதை நீங்கள் காணலாம். ஆனால் நீண்ட நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தால் வருத்தப்படும் விதத்தில் அது மறைந்து விடும்.

கடும் உடல் உழைப்பில் ஏதோ சுகம் இருக்கிறது. ஒருவனது சிந்தனையே நின்று போகிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் பல மணி நேரம் எனக்குத் தெரிந்தவரை அடிக்கடி வேலை செய்திருக்கிறேன். மண்வெட்டியால் வெட்டுவது, மேலே தூக்குவது, மறுபடி குத்துவது என்று மறுபடி மறுபடி வேலை செய்யும் சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை இருப்பதில்லை.

  பெரும்பாலும் முற்பகலில் நான் சோர்ந்திராத வேளையில் திடீரென்று உலகம் என்னைச் சுற்றி மலர்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதன் அழகும் அர்த்தமும் என்னில் தோன்றி ஆழமான ஒரு சந்தோஷத்தை, முழுமையான திருப்தியைத் தரும்."

உழைத்து களைத்து எடுக்கும் ஓய்வு உன்னதமானது.உடலின் வலிமையை அதிகரித்து..ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்ச்சி பாய்ந்து நம் உடலுக்கு தெம்பு கொடுக்கிறது. மாரத்தான் ஓடும் நண்பர் நாகராஜ் ஒருமுறை சொன்னது..அதிகாலை 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். நாள் முழுவதும் உடல் தன் வேலையை தானே பார்த்துக் கொள்ளும் என்றார். முயன்று பார்த்த போது உண்மை என உணர முடிந்தது.
டிஜிட்டல் உலகத்தில் மனதிற்கு ஏற்றுக் கொள்ளும் சார்ஜர்கள் பல உண்டு.ஆனால் உடலுக்கு ஏற்ற சார்ஜர் உடலுழைப்பும், உடற்பயிற்சியும் மட்டுமே

கடின உழைப்பு என்பது உரிய காலத்தில் நீங்கள் செய்திருக்க வேண்டிய, ஆனால் செய்யத் தவறிய எளிய விஷயங்களின் குவிப்புதான்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 27 September 2025

கோகுல் பிரசாத்


One battle after another படத்தில் வரலாறு குறித்த அவநம்பிக்கை இடம்பெறுகிறது. அது வருங்காலம் குறித்ததாகவும் இருக்கிறது. ‘Make America great again’ போன்ற கோஷங்கள் எவ்வளவு அபத்தமானவை என மெல்லிய கசப்புடன் குறிப்புணர்த்துகிறார்கள். ஏனெனில் ஒருபோதும் அமெரிக்கா மகத்தான நாடாக இருந்ததில்லை. அதன் ‘founding fathers’-ஆக அறியப்படுகிற அனைவருமே எதோவொரு வகையில் இழிவானவர்களே. 

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எத்தனை உயரிய மனிதர் என நினைவுகூரும் அதே நேரத்தில், அவர் தன் வாழ்வின் கடைசிக்காலம் வரை கறுப்பின அடிமைகளை வைத்திருந்தார் என்பதை மறக்கலாகாது என டிகாப்ரியோ சொல்கிறார். ஃபிலிப்பைன்ஸில் ரூஸ்வெல்ட் கட்டவிழ்த்த அரச பயங்கரவாதமும் பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். எதையும் கறுப்பு வெள்ளையாக அணுக முடியாது என்பதே கடந்தகாலம் எப்போதும் உணர்த்தும் பாடம். இங்கு யாரும் புனிதர்கள் அல்ல, அதீத வியந்தோதுதல்களுக்குத் தகுதியானவர்களும் அல்ல. பிறை நிலவைச் சூழ்ந்திருக்கும் இருள்போலக் கீழ்மையே உலகை ஆக்கிரமித்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதோ மெல்லிய வெளிச்சம். இன்றும் என்றும்.

பொற்காலம் என்கிற விஷயம் இருந்ததே இல்லை என்கிறார்கள். அதுவொரு அசட்டு நம்பிக்கை. ஆனால் அதற்காகச் சோர்ந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். கடலில் நிலம் நகர்வதைப்போல மெல்ல மெல்ல முழுமையான விடுதலையை நோக்கி நாம் அடியெடுத்து வைத்தாக வேண்டும். இதில், அரசுத் தரப்பின் இரும்புப்பிடியைக் காட்டும்போதே போராளிக் குழுக்களின் தவறுகளையும் சேர்த்துச் சுட்டுகிறார்கள். ஓர் அப்பாவி சிவிலியனைக் கொன்றதும் படத்தின் நாயகி பெர்ஃபிடியா திடுக்கிடும் தருணம் ஒரு உதாரணம். அப்போதே அக்குறுங்குழுவின் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது.

நாம் அரச புல்டோசர்களால் நசுக்கப்படுவோம் எனத் தெரிந்தும் புல் போல முளைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதுவொன்றே அதிகாரத்துக்கு எதிராக அறைகூவல் விடுக்கும் வழிமுறை. ஆனால், படத்தில் இதெல்லாம் bleak-ஆக வெளிப்படாமல் மிக மேலோட்டமாகக் கடந்துசெல்கின்றன. டரண்டினோ படம் மாதிரி ஒருகட்டத்துக்கு மேல் மைண்ட்லெஸ் ஆக்‌ஷனாக இருக்கிறது. பால் தாமஸ் ஆண்டர்சனிடம் கூடுதலாக எதிர்பார்த்தேன் என்பதால் ஏமாற்றமே மிஞ்சியது.

இது அமெரிக்காவின் வரலாறு மட்டுமல்ல. உலகெங்கும் எப்படியோ பிற்போக்குக் கருத்தியல்கள் புதிய புதிய வடிவங்களை எடுத்து வேறு முகமூடிகளை மாட்டிக்கொள்கின்றன. அவற்றுக்கு பாலிஷான கொள்கை முலாம் பூசப்படுகிறது. அவற்றுக்கு எதிரான சவால்கள் எப்போதும் நீடித்திருக்கும். நம்மால் ஆவது, சளைக்காமல் போராடுவது ஒன்றே. என்றேனும் ஒருநாள் கடலைக் கடந்து இரு நிலங்கள் முட்டி ஒரு மாமலை எழுந்துவிடாதா என்ன!

Wednesday, 24 September 2025

175


#கற்கை_நன்றே_175

Stay with the statement 

 "நகராதீர்கள். நான் சொன்ன வாக்கியத்தோடு இருங்கள்" இல்லையெனில் மனம் தத்துவத்தின் சாரத்தை உதிர்த்து விட்டு அதையும் Entertainment வகையறாக்களில் சேர்த்துக் கொள்ளும். இதயத்தில் எடுத்துக்கொள்ளாது மூளையில் வைத்து சமாதி கட்டிவிடிவோம்

-ஜே.கிருஷ்ணமூர்த்தி

பணிபுரியும் இடத்திலோ குடும்பத்திலோ வேலைப்பகிர்வு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.ஆனால் சிலரோ எனக்கு இந்த வேலையை நான் செய்தால் மட்டுமே முழு திருப்தி என நினைத்து அனைத்து வேலைகளையும் தாமே செய்வர். இதன் அடுத்தகட்டமாய் பிறர் அதே வேலை செய்தாலும், தான் செய்வது மட்டுமே நேர்த்தி என நினைத்து குறை கண்டுபிடிப்பார்கள். 

இதன் மூலம் தான் மட்டுமே அக்மார்க் வேலைக்காரர் என மனதில் தோன்றும். அதற்குப் பின் செய்யும் அனைத்திலும் குறை காண்பதால் இவரே செய்யட்டும் என பலர் தானம் வழங்குவார்கள்.முடிவில் இவரே எல்லா வேலைகளையும் செய்யும் சூழல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கு சலிப்பு ஏற்படுகிறது. சலிப்பு ஏற்பட்டாலும் புலம்பிக் கொண்டே அத்தனை வேலைகளையுமே இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாரும் எளிமையாக வேலையை முடிக்கிறார்கள்..நம்மால் மட்டும். அவ்வாறு இருக்க முடியவில்லையே என எண்ணி துயருறுகின்றனர். Smart work என்பதை உள்வாங்க பயப்படுகின்றனர்

பார்வையற்ற கோழி ஒன்று இருந்தது. பாவம், ஓயாமல் மண்ணை கிளறிக்கொண்டே இருக்கும். புழுவோ, பூச்சியோ, தானியமோ அதன் பார்வையற்ற கண்ணுக்கு படவே படாது. இன்னொரு கோழி மகா கூர்மையான கண். அது கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாது. அக் கோழி கிளறிய இடங்களில் அதன் கண்ணுக்குப் படாத தானியங்களைத் தின்றுவிட்டு ஆனந்தமாகத் திரியும்.

இந்த இரண்டாவது கோழியைப் பின்பற்றுங்கள். எல்லாவற்றையும் நாமேதான் செய்யவேண்டும் என்று தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டால் முன்னேறமாட்டீர்கள். உங்களிடம் எந்தத் திறமை இல்லையோ,அதைபிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். திறமையுள்ளவரை வேலைக்கு  அமர்த்திக்கொள்ளுங்கள்.

"நான் மகத்தான அறிவாளிகளின் மீது நின்றுதான் என் அறிவைப் பெற்றேன்" என்றார் நியூட்டன்.
மற்றவர்களிடம் நாம் வேலையை பகிரும்போது.. நம்மைவிட சிலர் சிறப்பாக செய்வார்கள் அல்லது அவர்களை நம்மை போல் வேலை நேர்த்தி பின்னாளில் உருவாகலாம்.

முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுபவர்கள், கற்றுக் கொள்ளும் வழிமுறைகளை எவ்வளவு எளிதாக்கிக் கொள்கிறார்கள் .அந்த அளவு விரைவில் இலட்சியத்தை அடையலாம்.தமக்கு ஏற்ற வகைகளை, மனப்பாங்கிற்கு துணை நிற்பவைகளை தேர்ந்தெடுப்பது போல வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 23 September 2025

174


#கற்கை_நன்றே_174

இந்த நாளுக்காக மட்டும் வாழுங்கள். இந்த நாளின் வேலைக்காக மட்டும் வாழுங்கள். முன்னும் பின்னும் பார்க்கும் முட்டாள்தனமான பழக்கத்தால்தான் வாழ்வின் மோசமான கவலைகள் தோன்றுகின்றன.

-சர் வில்லியம் ஆஸ்லர்

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது வழி வழியாக நாம்கேட்டுக் கொண்டு இருக்கும் வாழ்வியல் உண்மை.இதன் பொருள் இதனால் இதைச் செய்தால் எனக்கு புகழ் கிடைக்கும் பாராட்டு கிடைக்கும் என எண்ணினால் எந்த வேலையிலும் நம் திறமை வெளிப்படாது.கவனம் முழ்க்க இதை செய்தால் நம்மை பாராட்டுவார்களா என்பதாகவே இருக்கும்.எதனை எதிர்பாராமல் செய்யும் போது நமக்கு எல்லா நேரமும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இருப்பினும் பலர் அதனை பொருட்டாக நினைக்காமல் பணியாற்றுகின்றனர்.இது குறித்து வலைப்பதிவர் பிச்சைக்காரன் பகிர்ந்த பகிர்வு

ஒரு  பவுலர் பந்து வீச ஓடி வருகிறார். விக்கெட் எடுத்தால் அது ஹாட் ட்ரிக். ஒரு வரலாற்று தருணம். காரணம் அந்த அணிக்கு எதிராக பதிவாகும் முதல்ஹாட் ட்ரிக்காக இருக்கும்.

ரசிகர்கள்  டென்ஷனாக காத்திருக்கின்றனர். ஃபீல்டர்கள் மிகவும் கவனமாக வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்
அவுட் ஆகிவிடக்கூடாது என கவனமாக இருக்கிறார் பேட்ஸ்மேன்
பந்து வீசப்பட அதை தடுத்தாட முயல்கிறார் பேட்ஸ்மான்.  பேட்டில் பட்டு பந்து ஸ்லிப் திசையை  நோக்கி சென்றதுமே  பவுலரும்  ரசிகர்களும்  கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுகின்றனர்.  அந்த சிரமமான வாய்ப்பை ஃபீல்டர் கடும்,முயற்சி செய்து பாயந்து பிடித்து விடுகிறார். ஆனால்,அதுவரை காத்திராமல் கொண்டாட்டம் ஆரம்பித்து விடுகிறது

மற்ற நேரமாக  இருந்தால் அந்த ஃபீல்டரின் தீரமும் முயற்சியும் வெகுவாக,பாராட்டப்பட்டு இருக்கும்.  ஆனால் அது பவுலரின் தருணம்.  எனவே அந்த பீல்டர் யார் என்றுகூட குறிப்பிடாமல்  அந்த தருணத்தின் வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.  இத்தனைக்கும் அந்த பீல்டர் டெண்டுல்கர் போல ஒரு ஹீரோதான்.  ஆனால்,அந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் ஒரு சைடு ஆக்டர் மாதிரிதான்.

இந்த யதாரத்தத்தை நாமும் பலமுறை சந்தித்து இருப்போம்.  நமக்கு எந்த கிரெடிட்டும் பாராட்டும் கிடைக்காது என தெரிந்தே  நமது முழுமையான பஙககளிப்பை  அளித்திருப்போம்.  யாரும் பாராட்டவில்லை என்றாலும் நமக்கு ஒரு நிறைவு இருக்கும்

காலம் 
எப்போதும் நம்மை புதுப்பிக்க வைக்கும் சொற்களை யாரிடமாவது கொடுத்து வைத்து இருக்கும்.

அதை பெற்றுக் கொள்கிற வேளை வரும் வரை 
அதற்காக காத்திருப்பதை தவிர வேற வழியில்லை என்கிறார் சில்வியா பிளாத்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

மயிரிழையில் தான்..நாம் இந்த வாழ்விலிருந்து தப்புகிறோம் அல்லது மாட்டிக் கொள்கிறோம்-சாம்ராஜ்

104


#Reading_Marathon2025
#25RM055

Book No:104/100+
Pages:-191

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

பூக்குழி
-பெருமாள் முருகன்

முரண்பாடுகளை மனிதர்கள் அன்போடு கடந்து செல்ல முடியாதா?சிந்தனையின் குறுகலுக்கு காரணம் என்ன?பழைய தலைமுறையையோ வரும் தலைமுறைகளை பற்றியோ சரியாக ஊகிக்க முடியாத இன்று நம்மோடு உடன் இருக்கும் ஜீவன்களை பகைத்து வாழக் காரணம் என்ன? ஏன் இதெல்லாம் என கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதிலஇதனை வாசிப்போரின் மனங்களில் எழும் என உத்தரவாதத்தோடு நாவலை துவஙகுகிறார் பெருமாள் முருகன்.

சினிமாவில் வருவது போல் ஆரம்பக்காட்சியில் காதலி சரோஜாவை காதல் திருமணம் புரிந்துகொண்ட குமரேசன்..காட்டூர் ஓடையூர் சாலையில் அமைந்துள்ள தன் குடிசை வீடு இருக்கும் ஆட்டூருக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்கிறான். பல்வேறு கற்பனைகளுடன் செல்லும் சரோஜாவிற்கு தன் வீட்டினர் யாரேனும் போலிசுடன் வருவார்களோ என எண்ணி பயந்து கொண்டே செல்கிறாள். குமரேசனின் அம்மா உற்றார் உறவினர் காதல் திருமணம் புரிந்ததை எண்ணி கலங்குகின்றனர்.

பக்கத்துவீட்டில் இப்படி ஒரு செயல் நடந்துருந்தால் ஊர்க்காரர்கள் எப்படியெல்லாம் இளகாரமாய் பேசுவார்கள் என்று சரோஜா வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். ரோஜா என்று அன்போடு அழைக்கும் தன் அண்ணனை நினைத்துக் கொண்டாள். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் என்பதால் குடும்பமே அவளிடம் பாசம் வைத்ததை நினைத்து பொறுமினாள். ஊராரின் ஏச்சுக்களை கேட்டுக்கொண்டே இருந்தாள்.ஆனால் அத்தனை கேள்விகளையும் குமரேசன் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தான்.

இவள்.மீதி வசை மாறி பொழிந்து கொண்டே இருப்ப்பாள் மாமியார். கிராமமே அறியாத அவள் தான் காதலில் விழுந்த கதையும் தான் வீட்டில் இருந்தபோது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சமைத்ததை எண்ணி குற்ற உணர்வில் இருப்பாள் சரோஜா.தான் குடியிருந்த வரிசைவீட்டில் தான் குமரேசன் சோடா கடை வைத்திருந்ததும் தான் காதலில் விழுந்த கதையுமநினைத்துக் கொண்டாள். பாறை மீது ஆடு ,கோழி மேய்க்கும் குடும்பத்திற்கு மருமகளாய் வருவேனென நினைக்க வில்லை என்றும் தன் அண்ணனின் கோப குணத்தை நினைக்கும்  போது உடல் சில்லிடுவதையும் எண்ணி பயந்தாள்.ஆனாலும் குமரேசன் ஒருவனே ஆதரவு என எண்ணி சமாதானப்படுத்திக் கொள்வாள்.

ஒரு ஆண் ஒருவனை இழுத்து வந்துவிட்டான் என்பதைவிட ஒரு பெண் ஊரைவிட்டு ஓடிவந்து விட்டாள் என்று அவள்.ஒழுக்கத்தின் மீது வசை பாடும் சுற்றத்தார்,அண்டை வீட்டார்தான் அதிகம். இதுதான் ஒவ்வொரு நாளும் சரோஜாவின் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.

அதற்குள் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி விசாரிக்கின்றனர். எந்த ஆளு அந்தப் பொன்னு என கேட்கின்றன்ர். ஊர்க்கட்டுப்பாடு குறித்து விளக்கமளிக்கின்றனர்.ஊரிலிருந்து தள்ளி வைப்பதாக சொல்கின்றனர்.பின்பு பத்து கிலோமீட்டர் தாண்டி ஒரு சோடாக்கடை பேசி முடித்து மனைவியுடன் அதிகாலை சைக்கிளில் வேலைக்கு செல்கிறான்.உறவின்ற்வீடுகளில் சண்டை கைகளப்பு ஒவ்வொரு நாளும் திகிலுடன் செல்கிறது.மறுநாள் தலைசுற்றல் இருக்கவே.. தனியே வேலைக்குச் செல்கிறான் குமரேசன்..

அதன் பின் அந்த நாளின் இறுதியில் என்ன ஆனது என்பதுவே நெஞ்சை நெகிழ வைக்கும் பூக்குழி நாவல்.
கதையின் மையம் சாதி தான். பொழஙகுற சாதியா என கேட்கும் போதே வன்மமும் கல்ந்து தான் ஒலிக்கிறது. நகரமயமாதலில் ஓரளவு ஒழிந்தாலும்  கிராமத்தில் இயற்கையோடு இன்னும் சாதி வாழ்கிறது என்கிறார். இறுதியில் கனவு போல் முடிந்துவிடும் என எண்ணும் போது.. விழிக்க முயன்றாள்.திறந்திருந்த கண்கள் மூடத்தான் செய்தன.சரி வேறுவழியில்லை கனவை தொடரலாம் என எண்ணும் போது குமரேசனின் சைக்கிள் சத்தம்.. நெஞ்சை பிசைய வைத்தது படித்து முடிக்கும் போது..

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 22 September 2025

173


#கற்கை_நன்றே_173

“தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது; பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது; அந்த பளுவைச் சுமக்கத் தயாரானவர்களே சவாலான வாழ்க்கையை வாழ்கிறார்கள்”

-மாவோ

நாம் அனைவரும் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வேலைக்காக செலவழிக்கிறோம். அந்த வேலை நமக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் தர வேண்டிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் அதற்கு மாறாக நமது ஆரோக்கியத்தையும், உறவுகளையும், மன அமைதியையும் கெடுக்கும் சூழலாக மாறுகிறது. அதுவே Toxic Work Culture என்று அழைக்கப்படுகிறது.

தலைமை மற்றும் மேலாண்மை குறைபாடு, தவறான தகவல் பரிமாற்றம், நம்பிக்கை குறைவு, நேரமின்மை,முறையற்ற அதிகாரம், தொழிற்சங்கங்கள் இல்லாமை போன்றவை தொடர்ந்து காணப்படும் சூழலாக நடைமுறையில் உள்ளது.

அதிக மனஅழுத்தம், அநியாயமான எதிர்பார்ப்புகள், பாகுபாடு, மதிப்பளிக்காத மேலாண்மை, பணியாளர்களுக்குள் ஒத்துழைப்பு இல்லாமை போன்றவற்றால் உருவாகும் எதிர்மறை சூழலே toxic work culture ஆகும்.மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இதன் காரணமாகவே பணியிலிருந்து விலகுகின்றனர்.நீ இல்லாவிட்டால் வேறு பலர் வருவார்கள் என்பதும் நிறுவனங்களின் மெத்தன போக்கிற்கு காரணமாக அமைகிறது.

People don’t leave bad jobs, they leave bad bosses” என்று Gordon Tredgold கூறுகிறார்.பல மேலதிகாரிகளால் வேலையை விடுகின்றனர்.
அவர்கள் கொடுக்கும் deadline என்றால் உயிரோடு இருக்கும் வரை line பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.மறுபுறம் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்கள் "நம்மை யாராவது பாராட்டிவிட மாட்டார்களா எனும் எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. ஆனாலும் அதை மேலதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்.சக ஊழியர்களும் போட்டியாளராக கருதுவதால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்

 உடலின் உறுப்புகளுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டதற்கு அறிஞர் சொன்னார்:"நாம் வாழ்வதற்குத் தேவையான உறுப்புகள் மறைந்தே இருக்கின்றன. வெளியில் தெரியும் உறுப்புகள் இல்லா விட்டாலும் நாம் வாழ்ந்துவிட முடியும்.

ஆனால் மறைந்திருக்கும் உறுப்புகள் இல்லாவிட்டால் வாழவே முடியாது!" ஒவ்வொரு நிறுவனத்திலும், அதன் வெற்றிக்காகப் பாடுபடுகிற பலர் வெளியே தெரியாமல்தான் இருக்கிறார்கள். அவர்கள்தாம் அதற்குத் தோள்கொடுக்கிறார்கள், தூக்கி நிறுத்துகிறார்கள். ஆகவே, எல்லா இடங்களிலும் வெளியே தெரிகிற வெற்றி ஒன்று இருக்கிறது. வெளியே தெரியாமல், ஆழமாக, இதயத்தைப்போல, நுரையீரலைப் போல, கல்லீரலைப்போலப் பணியாற்றுபவர்களும் இருக்கிறார்கள் ஆனால்.முறையான அங்கீகாரமின்றி

Toxic Work Culture என்பது அமைதியான விஷம் போல. அது மனிதரை மட்டுமல்ல, நிறுவனத்தையும் பாதிக்கும். எனவே, வேலை இடத்தில் மரியாதை, நம்பிக்கை, ஊக்கம், வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் வேலை செய்யும் இடம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறும்

நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

தென்கச்சியார்


ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள்.

கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள்.

கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார்.

அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செ`த்துப் போவேன்" என்றாள்.
இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செ~த்துப் போவேன்"னாள்.

கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செ`த்துப் போவேன்ங்குது.

 இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செ`த்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது".

அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான்.
கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார்.

அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செ`த்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செ`த்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான்.
கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செ`த்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான்.
கண்டக்டர்: 😳😳😳

(தென்கச்சி கோ.சுவாமிநாதன் பேச்சிலிருந்து...)

Sunday, 21 September 2025

172


#கற்கை_நன்றே_172

வயது வேறு;அனுபவம் வேறு.
அனுபவம் வேறு;அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு.
-ஜெயகாந்தன்

பொதுவாக வயதின் காரணமாக கிடைக்கும் மரியாதையை விட இளம் வயதிலேயே அறிவின் முதிர்ச்சி காரணமாக நல்ல மதிப்பு சிலருக்கு கிடைக்கிறது.அண்மையில் இணையத்தில் தாட்சயனி மஹாராஜன் எழுதிய பதிவு அனுபவம் குறித்த புதிய பார்வையை வரவழைத்தது..

மனிதனின் (பொதுவாக) முதிர்ச்சி எப்போது?

 ஒருவனை முதிர்ச்சியானவன் என்று கூறுவது வெறும் தோற்றத்தை வைத்தல்ல. அவன் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளை வைத்தே. அது அணைத்து நேரமும் லாபத்தை தான் பெற்று தரவேண்டியது இல்லை. லாபம் என்பது பணத்தோடு நிற்பதும் அல்ல. சரியான நேரத்தில், சரியான முடிவை, சமரசமில்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எடுப்பதே முதிர்ச்சி என்று எனக்கு படுகிறது. வயதிற்கும் இந்த மனமுதிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பல வல்லுநர்கள் கூறுகிறார்கள். வெகுசிலருக்கு குறைந்த வயதில் கூட இது கிடைப்பதுண்டு. அதே போல வயதாகியும் சிலர் இம்முதிர்ச்சியை பெறுவதில்லை. 

பெருவாரியான மக்களை கணக்கில் கொள்ளும்போது நிச்சயம் ஒரு தோராயமான வயதை முதிர்ச்சி பெற்ற, பெரும் வயதாக  25-45 எனலாம். காரணம் இந்த வயதுகளில் இருப்போர் ஈடுபாட்டுடன், உடலுழைப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த வயதில் இருப்போரிடம் சம அளவில் பல திறமைகள், தைரியங்கள், எண்ணவோட்டங்கள் எல்லாம் உள்ளது என்கிறேன்.

25 வயதிற்கு குறைவானவர்கள் நிச்சயம் திறமையும், இளம் ரத்தமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதே நேரம் அந்த வயதிற்கே உரிய மெத்தனம், சோம்பேறித்தனம் இருக்கிறது. கூடவே விளையாட்டுத்தனமும் தான். இது போல காதல் என்னும் பெருமாயை அவர்களது முன்னேற்றங்களை கட்டுக்குள் வைக்கிறது. காதல், கல்யாணம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. அதே நேரம் அது ஒருவனது திறமையை, சுதந்திரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் நடக்கிறது.

இதற்கு நேரெதிராக 45 வயதிற்கு மேல், உடல் உழைப்பில் ஈடுபாடு குறைகிறது, புதிய முயற்சி செய்வதற்கு துணிச்சல் பிறப்பதில்லை. இருப்பது போதும் என்ற மனப்பாங்கு வந்துவிடுகிறது. நாட்கள் சீக்கிரம் கடந்தாலே போதும் என்ற வெறுப்பும் தொற்றிக்கொள்கிறது. மீண்டும் சோம்பேறித்தனம், இம்முறை இயலாததால் சோம்பேறித்தனம் குடிபெருகிறது. புதிய தொழிநுட்பம் பெற மனது விரும்புவது இல்லை. 'நோஸ்டால்ஜியா'விலேயே வாழ்ந்துவிட பிடிக்கிறது.

இதனாலேயே 25-45 வயது என்பது உழைக்க, சேமிக்க, உலகம் சுற்ற, அனுபவங்கள் கற்றுக்கொள்ள, கற்றவற்றை பயன்படுத்த, உருவாக்க ஏற்றது என்று எண்ணுகிறேன். இக்காலகட்டத்தில் அனைத்தும் சம அளவில் கிடைக்கப்பெறலாம். மனைவி, மக்கள், அறிவு, ஆற்றல், சமூக பொறுப்பு, தன்னையறிதல், பிற உயிர்களை நேசித்தல் என்று அவன் விரும்பியதை மனது உணரும் நேரம். தனது வாழ்க்கையை தீர்மானிக்க கிடைக்கும் காலம். இந்த வயதின் தொடக்கத்திலேயே ஒருவர் சிறப்பாக திட்டமிடுவதால், தனது ஓய்வு காலத்தை சிறப்பாக கட்டமைத்துக்கொள்ள முடிகிறது.

25 முதல் 45 வயதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வோம்!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 20 September 2025

உலகை யார் படைத்தார்கள்?


உலகை யார் படைத்தார்கள்?”

Philosophical View: பல மதங்களிலும், உலகை ஒரு தெய்வீக சக்தி படைத்தது என்று கூறுகிறார்கள். யாருக்கோ அது “இறைவன்”, யாருக்கோ அது “சக்தி”, யாருக்கோ அது “அறியப்படாத மூல ஆற்றல்.”

Scientific View: Big Bang Theory படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு “singularity” வெடித்து விரிந்து கொண்டே போனது. இன்று நாம் காணும் கிரகங்களும், நட்சத்திரங்களும், உயிர்களும் அந்த பரிணாமத்தின் விளைவு.

Philosophical Twist: கேள்வி தான் tricky. “யார்” என்று கேட்கும்போது நாமே மனித முகமுள்ள படைப்பாளரைத் தேடுகிறோம். ஆனால் “எப்படி?” என்று கேட்கும் போது, அறிவியல் கதையை கேட்கிறோம்.

Sarcastic Touch: எனினும், WhatsApp University சொல்வது வேற தான் – “உலகை படைத்தவர் நம் பாட்டிகள்! ஏனெனில் அவர்கள் தான் எப்போதும் ‘இந்த உலகமே உன்னால்தான் சுழலுது!’ என்று சொல்வார்கள்.” 😄

இந்த மனதோடுதான் வாழவேண்டி இருக்கிறது.இந்த மனதுதான் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.-ராஜா சந்திரசேகர்

Wednesday, 17 September 2025

171


#கற்கை_நன்றே_171

கனவுவாழ்க்கை என்றால் என்ன?

 இன்றைய நம் வாழ்க்கை 10 ஆண்டுகளுக்கு முந்தைய நம் கனவாக இருக்கவேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்டு அதை நிறைவேற்ற இந்த நொடியில் இருந்து வாழ்க்கையைத் துவக்கவேண்டும். 

இன்று உச்சத்தில் இருக்கும் யாரும் தற்செயலாக அதை அடையவில்லை. வெறியுடன் திட்டம்போட்டு உழைத்தே சாதித்தார்கள்.இப்போது இருக்கும் அறிவு அப்போது இருந்திருந்தால் பல முட்டாள்தனங்களைச் செய்திருக்கமாட்டேன். ஆனால் அறிவு வந்தபின்னர்தானே நம் முட்டாள்தனங்கள் நமக்கே தெரிய ஆரம்பிக்கின்றன?

 58-59 வயதுக்கு மேல் வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதன்பின் 70, 80, 90 - எந்த வயதுவரை வாழ்வோம் எனத் தெரியாது. ஆனால் 90 வயதில் நாம் படுக்கையில் இருக்கிறோமா, மாரத்தான் ஓடுகிறோமா என்பது நம் மத்திம வயது ஃபிட்னஸால் தீர்மானம் ஆகிறது. அதனால் அடுத்த 10 ஆண்டுகளில் ஃபிட்னஸுக்கு முக்கிய முன்னுரிமை தரவிருக்கிறேன். 

இந்த வயதில் என்ன எடை பளுதூக்குகிறேனோ அதை 59 வயதிலும் தூக்கவேண்டும். இப்போது ஓடுவதைவிட வேகமாக, கூடுதல் தொலைவு 58 வயதில் ஓடவேண்டும். இருக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி நல்ல நட்புவட்டத்தைத் தொடர வேண்டும். சமூகத்தில் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். 

20 ஆண்டுகளில் சம்பாதித்த பெயரைக் கெடுக்க ஒரே வினாடி போதும். பல உதாரணங்கள் உலகில் உண்டு. பிள்ளைகளை நல்லபடி படிக்கவைத்து கெரியரை அமைத்துத் தரவேண்டும். மற்ற பொருளாதார நோக்கங்கள், குறிக்கோள்கள் ஏதுமில்லை. இதுதான் 10 ஆண்டுகளுக்குப் பின்னான என் கனவு வாழ்க்கை. அதை வாழவேண்டுமெனில் இந்த வினாடிமுதல் முயற்சிகளைத் துவக்கவேண்டும். 

அதைச் செய்யாமல் 10 ஆண்டுகளை ஜாலியாகக் கழித்துவிட்டு அதன்பின் மீண்டும் தொடர்ந்து வேலைக்குப் போய்க் கஷ்டப்படுவது என்பது என் முட்டாள்தனம். நீங்களும் பத்தாண்டு கனவுகளைக் காணுங்கள். அவற்றை நோக்கி உழையுங்கள். இதன்மூலம் உங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வீர்கள்.

நன்றி:நியாண்டர் செல்வன்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

103


#Reading_Marathon2025
#25RM055

Book No:103/100+
Pages:-175

சுகி சிவம் கேள்வி பதில்கள்

நாடறிந்த பேச்சாளர் சுகி சிவம்.. அவரின் பேச்சுக்கள் கருத்துகள் எல்லாமே ஆன்மிகத்தோடு பகுத்தறிவும் பேசுவார். மூடநம்பிக்கைகளை சாடுவார்.இந்த புத்தகத்தில் உள்ள பல கேள்வி பதில்கள் கருத்து செறிவுடனும், தன்னம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்திருந்தன.

*முதல் கேள்வியே உங்களை உலுக்கிய வரி பற்றி சொல்லச் சொல்லும் போது?
' ஒரு எருமையைப் புத்தராக்க முடியாது என்கிறார்.

*எல்லா நேரங்களிலும் புள்ளி விபரம் முக்கியமா எனும் கேள்விக்கு..
சாதாரண ஒருபென்சிலால் 58,கி.மீ கோடு போடலாம் என்பதை படிக்கும் போது சரியான புள்ளி விபரங்கள் மீது மதிப்பு வந்ததாக தெரிவிக்கிறார்.

*ஆசை என்பது எப்போது, எப்படி பிறக்கும்? புத்தர், எந்த ஆசையை இழக்கச் சொன்னார்?

ஆசைக்கு ஜாதகம் கிடையாது. அதன் பிறப்புக்கு நேரம் காலம் எப்படி சொல்ல முடியும். அது உங்கள் மனத்தின் சலனம். உள்ளிருந்து பிறக்கும் ஓர் எண்ண அசைவு... அல்லது உணர்ச்சி.. இந்தச் சலனத்தின்படி வாழ்க்கை நிகழும்போது துன்பம் துயரம் தோன்றிவிடுகிறது. அப்படி சலனம் ஏற்படும்போது அந்தச் சலனத்தைக் கூர்ந்து கவனிக்கும்படி புத்தர் சொல்கிறார். அப்படி விழிப்படைந்து கவனிக்கும் போது ஆசை ஆற்றில் தோன்றும் மணல் குவியல் நீரோட்டத்தில் மீண்டும் கரைவதுபோல் கரைந்து போய்விடும் என்கிறார்.

*கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு..
பலனில் பற்று வையாதே என அறிவுறுத்துகிறது.பலன் மீது மட்டும் ஆசை வரும் தீய செயலையும் செய்து விடுவார்கள்.அல்லது கடமையை சரிவர செய்ய மாட்டார்கள்.

*என்னைப் பார் யோகம் வரும் என்ற வாசகங் களுடன் கழுதை படத்தை மாட்டி வைப்பது பற்றி தங்கள் கருத்து?

மானம் அவமானம் பாராது மிகவும் அதிகம் உழைக்கும் விலங்கு கழுதை. அடிக்கடி அதன் படத்தைப் பார்த்தாவது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வந்தால் நல்லது. மேலும் உழைத்தால் யோகம் வரும் என்ற அர்த்தத்தில் அதைப் புரிந்து கொண்டால் நீங்கள் புத்திசாலி என்று பொருள். வெறும் கழுதை படத்தைப் பார்த்தால் யோகம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் அவனைவிட கழுதை ஆயிரம் மடங்கு மேலானது என்று பொருள்.

*சுகமான கெட்டது எது? மோசமான நல்லது எது?

மவுனம்.

நாம் மவுனமாக இருப்பதன் மூலம் பிறரைச் சிக்கலில் மாட்டிவிட முடியும் அப்போது அது சுகமான கெட்டது. பிறர் ஏற்படுத்தும் சிக்கலில் இருந்து தப்பிக்கவும் நாம் மவுனமாக இருக்க முடியும். அப்போது அது மோசமான நல்லது.

*இன்றுள்ள அரசியல் தொண்டர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு கதை சொல்கிறேன் Please...

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் வந்தது. நீளமான நூலேணி கீழே தொங்க விடப்பட்டது. பத்துபேர் ஆண்கள் உயிரை ஒரு கையிலும், ஏணியை மறுகையிலும் பிடித்தபடி வரிசையாக ஏறி விட்டனர். ஆபத்தில்லை. அடுத்து பதினோராவதாக அழகான இளம்பெண் ஒருத்தி ஏறினார். ஆனால் ஹெலிகாப்டர் பாரம் தாங்காது தடுமாறியது காப்பாற்ற வந்த ராணுவ வீரர் "தயவுசெய்து யாராவது ஒருவர் விட்டு விடுங்கள்... ஒருவர் ஏணியை விடாவிட்டால் எல்லோருக்கும் ஆபத்து" என்று கத்தினார். ஒருவரும் கேட்கவில்லை.

முடிவில் கடைசியாக ஏறிய பெண் "நான்தான் தியாகம் செய்ய வேண்டும் பெண் தியாகத்திற்காகவே பிறந்தவள் என்னை அழித்தாவது உங்களை வாழ வைப்பது என் கடமையல்லவா... எனக்கு உயிர் பெரிதல்ல... கடமைதான் என் உயிர் மூச்சு...என் சகோதரர்களே நான் போய் வருகிறேன்" என்று உருக்கமாகப் பேசினார். உடனே எல்லா ஆண்களும் (ஏணியை விட்டுவிட்டு) ஜோராகக் கைத்ததட்ட ஆரம்பித்தனர். இனி அவர்கள் கதி..? 

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 16 September 2025

170


#கற்கை_நன்றே_170

உங்கள் பயங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தைரியத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்

பெரும்பாலான புற்றுநோய்களில் கால தாமதத்தைத் தவிர வேறெதெற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறார்கள். பயம் தான் தைரியத்தின் முதல் எதிரி. நம் பயத்தை நம்முடன் மட்டும் வைத்துக் கொள்ள மாட்டோம். அது தொற்று நோய் போல மற்றவருக்கும் பரப்புவோம்.மற்றவரும் பயப்படும் போது நமக்கு கொஞ்சம் தைரியம் வரும். பின்பு நாமே அவர்களுக்கு தைரியம் சொல்லுவோம்

தைரியத்தின் ரகசியம் பற்றி நார்மன் வின்செண்ட் பீலே சொல்கிறார்..
வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?. தோல்விகளைப் பற்றிய உங்கள் உணர்வுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதுதான். அதன் பின், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் அன்றாட வேலைகளை அமைதியுடன் செய்யத் தொடங்குங்கள். இது உங்கள் பயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.அதற்கு உதாரணமாக ஒரு மேற்கோள் கதையை சொல்கிறார்...

மெளரிஸ் செவாலியர் சிறந்த நடிகர். அவர் தனது நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தபோது ஒருநாள்..நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன்னால் அவருக்கு கடுமையான தலைச்சுற்றல் ஏற்பட்டது. தொடர்பில்லாத ஏதேதோ சிந்தனைகள் அவருடைய மூளையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவர் தன்னால் முடிந்தவரையிலும் அந்த அவஸ்தையிலிருந்து விடுபட முயன்றார்.அவர் தன்னிலை இழந்தார். அவரது சக நடிக நண்பர்கள் அந்த இரவு நிகழ்ச்சியை எப்படியோ சமாளித்தார்கள். ஆனால் அவருக்கு தொடர்ந்து பல வாரங்கள் இதே நிலைமை நீடித்தது.

 மெளரிஸின் வார்த்தைகள் குழற ஆரம்பித்தன.அவர் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். “நான் தோல்வி அடைந்தவன். தோற்றவனாக இருப்பது எனக்குள் பீதியை ஏற்படுத்துகிறது. இனிமேல் எனக்கு எதிர்காலமே இல்லை” என்று டாக்டரிடம் அழுது புலம்பினார் மெளரிஸ். 

அவர் தமது சுய நம்பிக்கையை இழந்துவிட்டார். எப்போதும் பயம்... பயம்...பயம் மட்டுமே. பயங்களே அவரைச் சூழ்ந்திருந்தது. சில நாட்களுக்குப் பிறகு மெளரிசிடம் டாக்டர் சொன்னார்: “மெளரிஸ், இந்த கிராமத்தில் உள்ள சிறிய அரங்கில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்களேன்.” “எனக்கும் ஆசைதான். ஆனால்.. நிகழ்ச்சியின் நடுவில் என் மனம் வெறுமையாகிப் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” மெளரிஸ் பதற்றத்துடன் கேட்டார். டாக்டர் மென்மையாகச் சொன்னார்: “இங்கே உத்தரவாதங்கள் எதுவும் கிடையாது, ஆனால் தோற்று விடுவோமா என்ற பயத்தை நீங்கள் அறவே துடைத்து எறிந்து விடுங்கள் என்றார். 

 நடிப்பிலிருந்து ஓய்வு பெற பயம் ஒரு காரணமே இல்லை: அது ஒரு சாக்குப்போக்கு, அவ்வளவுதான். துணிச்சல் மிக்க மனிதன் பயத்தை ஏற்றுக் கொள்கிறான். ஆனால், அதையும் மீறி அவனுடைய பயணம் தொடர்கிறது.”

 அந்த கிராமத்து மேடையில் மீண்டும் மெளரிஸ் தோன்றியபோது, அவருடைய மனம் சொல்ல முடியாத பயத்தாலும், தாங்க முடியாத துயரத்திலும் சிக்கித் தவித்தது. ஆனாலும் அவர் வெகு நேர்த்தியாக நடித்தார். அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. “எனக்குத் தெரியும், நான் பயத்தை வெல்லவில்லை. அதை நான் ஏற்றுக் கொண்டேன், ஆனால் அதையும் மீறி நான் செயல்பட்டேன். இந்த வழிமுறை எனக்கு வெற்றியைத் தந்தது.” அன்றைய இரவுக்குப் பின், எல்லா நாட்களிலும் மெளரிஸ் பார்வையாளர்களின் முன்னால் தோன்றத் தொடங்கினார்.
இங்கே உத்தரவாதங்கள் எதுவும் இல்லை. ஆனால் நான் பயப்படுகிறேன் என்னும் ஒரே காரணத்துக்காக, கலைத்துறையில் இருந்து நான் விலக விரும்பவில்லை. இது என்னுடைய சுய அனுபவம் எனக்கு கற்றுத்தந்த பாடம்.என்கிறார்

எல்லா விஷயங்களுமே பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் ஒரு உன்னத கணத்துக்காக நீங்கள் காத்துக் கொண்டிருந்தால், ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு சூழல் வராமலேயே போய்விடலாம். அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தால் மலைகளில் ஏற முடியாது, பந்தயங்களில் வெற்றி பெற முடியாது, நிலையான மகிழ்ச்சி ஒருபோதுமே எட்டப்பட்டிருக்காது.” எனவே, நாம் பயப்படுபவனாக இருந்துவிடக்கூடாதே என்று நினைத்து நீங்கள் பயப்படாதீர்கள். பாசாங்கு எதுவுமில்லாமல் உங்கள் பயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின், அந்த பயம் உங்களைத் தொடுவதற்கு முன்னால் நீங்கள் இருந்த மனநிலையிலேயே செயல்பட ஆரம்பியுங்கள். பயத்தை புறக்கணித்து விட்டு, உங்கள் பாதையில் தொடர்ந்து செயலாற்றுங்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 15 September 2025

102


#Reading_Marathon2025
#25RM055

Book No:102/100+
Pages:-175

A Perfect day
-Craig Ballantyne

“First say to yourself what you would be; and then do what you have to do.” Epictetus

"முதலில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்று உங்களுக்குள் சொல்லுங்கள்; பின்னர் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்." எபிக்டெட்டஸ்

ஒரு நாள் எப்படி அமைய வேண்டும் என நினைத்துள்ளீர்களா? அதிகாலையில் வரும் ஒரு போன் கால்..அந்நாளில் நீங்கள் வழக்கமான அவசர உலகில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.அடுத்த நாள் நன்றாக அமையவேண்டுமென இன்றைய நாள் முடிகிறது.நாளையை நினைத்து திட்டமிடுவதற்கு பதிலாக அச்சமடைகிறோம். நேற்றைய நினைத்து வருந்துகிறோம். ஆனால் இன்று குறித்து நாம் ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.

கடந்த காலங்களை நாம் மாற்ற முடியாது. ஆனால் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.நேற்றைய நாளைவிட
இன்று அதக நேரமும் அதிக பணியும் முடிக்க வேண்டிய கடமையும் இருப்பதாக எண்ணி இன்றைய நாளை துவங்க வேண்டும்.வெளி உலக தூண்டல்களாம் நாம் அதிக்ச்ம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளோம். இதனால் நம்முடையவ்சுயசிந்தனை, படைப்பாற்றல் அத்தனையும் இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். எந்தவித திட்டமும் இல்லாமல் கும்பலோடு கும்பலாய் ஓடிக்கொண்டு இருக்கிறோம். தனித்துவத்தை வளர்க்கவும் ஆசைப்படுவதில்லை.

எண்ணங்களை ஒழுங்குபடுத்துஙகள் என்கிறார். காலையில் சற்று எழுவதன் மூலம் சிறிய வேலையில் திட்டமிட நேரம் கிடைக்கும். நடிகர் சத்யராஜ் ஒரு பேட்டியில் சொல்வார்.. காலை கொஞ்சம் முன்பு எழுந்தால் நிதானமாய் பல் துலக்கலாம், மெதுவாக அலுவலகம் செல்லலாம் அதுவே தாமதமாய் எழுந்தால் எல்லாமே அவசரம். அடித்தி பிடித்து அலுவலகம் சென்று அன்றைய நாளே அவசரமாகிவிடும்.அதிகாலை எழுவதே அன்றைய நாளின் வெற்றிதான்.

நன்றான ஒருவிதியை நீயே உருவாக்கு. அதை நீயே பின் தொடர்.
இந்நூலாசிரயர் சொல்லும் கருத்துகள் காலையில் எழுவது மனச்சோர்வின்றி..இமெயில்,ஆன்லைன் வரமாட்டேன்.யாரையும் போனில் அழைக்கமாட்டேன். காலையிலேயே நேர்மறை எண்ணத்தை எனக்கு வரவழைப்பேன். அரைமணிநேரம் எழுதுவேன்.இன்று நடக்கும் சரி தவறுகளுக்கு நானே காரணம். யார்மீதும் பழி சொல்லமாட்டேன். 

*ஒரு நாளில் செய்யவேண்டிய செயல்களை ஒட்டுமொத்தமாய் செய்து மன உளைச்சல் அடையாமல் முதலில் செய்யவேண்டியமைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

*பழக்கவழக்கங்களில் உள்ள எந்திரத்தன்மை உயிரற்றதாக, வறண்ட மனமாக்கிவிடுகிறது. இதனைக் கொஞ்சம் மாற்றுவேன்.

*திட்டமிடத்தவறும் போது தவறு செய்ய திட்டமிடுகிறோம். கோடு போட்டது போல வாழவும் முடியாது. ஆனால் தவிர்க்க விரும்பும் விசயத்தை தவிர்த்து செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை செய்ய மெனக்கெடலாம்.

*பொறுமையினால் ஒரு நாளை வெற்றி கொள்ளலாம். அவசரத்தினால் அல்ல.எந்த ஒரு வேலையையும் சந்தோசமாக செய்யும் போது அந்த சுமை தெரிவதில்லை.

*உன் பாதையை ஒளிர வைக்காமல், பிறரின் பாதையை நீ ஒளிரச் செய்ய முடியாது. தேவையற்ற விஷயங்களில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நாம் இழந்த ஒன்றிற்கு ஈடாக வேறொன்று நமக்கு கிடைக்கும்.

முடிவெடு, திட்டமிடு, திட்டமிட்டதை நண்பர்களிடம் நலம்விரும்பிகளிடம் பகிர். அதன் மூலம் பிரச்சினைகள் தீர்மானமாக தீர்த்து விடு என்கிறார்.

தான் மேற்கொண்ட தொழிலில் அலுவலகத்தில் மேற்கொண்ட புதிய விஷயங்கள் அனைத்தையும் பகுதி பகுதியாக நமக்கு சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அவர் வாழும் சூழலில் சொல்லியிருந்தாலும்.. அதில் நமக்கு விருப்பமானதை செய்யக்கூடிய நல்ல விஷயங்களில் நாம் தேர்ந்தெடுத்து பயணிப்போம். 

தொடர்ந்து வாசிப்போம்
தோமையுடன் மணிகண்டபிரபு

169


#கற்கை_நன்றே_169

Practice makes a man perfect என்பதைவிட நவீன காலத்தில்

Perfect practice makes a man perfect என்பது சரியானது.

எப்போதும் நாம் பல விஷயங்களில் பழைய கற்பிதங்களையே யோசிக்காமல் நம்புகிறோம். ஆராயும் மனமும் நமக்கு ஏற்படுவதில்லை. யார் அதில் உள்ள தவறுகளை சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அறிவுலகின் வழி திறக்கிறது சாதனைகளும் இவ்வாறுதான்.மனதிலுள்ள தடையே நமக்கு அச்சத்தை தோற்றுவித்து அதற்கு தடையாக இருக்கிறது.

ஊழையும் உப்பக்கம் காண்பர் என்னும் குறளில் வள்ளுவர்,மனம் தளராமல், சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள், தங்கள் வழியில் வரும் தீய விதியைக் கூட புறமுதுகுகாட்டி ஓடச்செய்வார்கள் என்பதாகும். தக்க சமயத்தில் தக்கபடி முயற்சி செய்பவர்களே வெற்றி அடைகிறார்கள்.  அதற்கு உதாரணமாய் சிறு வரலாறு..

ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் ஓடிக் கடக்க வரலாறு முழுவதும் பலர் முயன்றுள்ளனர். பண்டைய கிரேக்கர்கள் காலந்தொட்டு, மக்கள் அதை அடைய முயன்று கொண்டிருந்தார்கள். உண்மையில், சிங்கங்களைக் கொண்டு துரத்தினால் மக்கள் இன்னும் வேகமாக ஓடுவார்கள் என்று நினைத்து, கிரேக்கர்கள் ஓடுபவர்களுக்குப் பின்னால் சிங்களை ஓடவிட்டுத் துரத்தியதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. 

அவர்கள் புலிப் பாலையும் குடித்துப் பார்த்தனர். அவர்கள் முயற்சித்த எதுவும் வேலை செய்யவில்லை. எனவே, ஒரு மனிதனால் நான்கு நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரம் ஓட முடியாது என்று அவர்கள் தீர்மானித்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் அதை நம்பினர்.நமது எலும்பு அமைப்பில் கோளாறு உள்ளது; காற்றின் எதிர்ப்பு மிகவும் அதிகம்; நம்மிடம் போதுமான நுரையீரல் சக்தியில்லை; இப்படி அதற்கு இலட்சக்கணக்கான காரணங்கள் காட்டப்பட்டன. 

பிறகு ஒரே ஒரு மனிதர் ஓடி  முயற்சித்துத் தோல்விகண்ட பல இலட்சம் வீரர்கள் அனைவரது கருத்தும் தவறு என்று நிரூபித்துக் காட்டினார். 

அதிசயத்திற்கு மேல் அதிசயமாக, ரோஜர் பேனிஸ்டர், அந்த நான்கு நிமிட மைல் ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டியதற்கு அடுத்த ஆண்டு, முப்பத்தேழு தடகள வீரர்கள் முறியடித்தனர். அதற்கு அடுத்த ஆண்டு முன்னூறு வீரர்கள் அதை முறியடித்தனர். ஒரு சில வருடங்களுக்குமுன், நியூ யார்க்கில் நடந்த ஓர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட பதிமூன்று வீரர்களும் அந்த நான்கு நிமிட மைல் சாதனையை முறியடித்தனர்.

முயற்சித்ததால் இந்த இலக்கை அடைய முடிந்தது.நம்ம ஊர் காது கேட்காத தவளைக் கதையும் உண்டு.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 14 September 2025

168


#கற்கை_நன்றே_168

நம் மனம் எப்போதெல்லாம் தத்தளிக்கிறது?

தோல்விகளின் போது..

பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாதபோது..

பிறர் நம்மைக் குறை சொல்லும்போது..

நம்மைவிடத் திறமை குறைவானவர்கள் உயர்வடைந்ததாக நினைக்கும் போது...

என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தின்போது..

ஏதாவது பயம் நம்மை ஆட்டுவிக்கும்போது...

பொதுவாகவே பிரச்சனைகளை எதிர்கொள்ள பயம்.பிரச்சனைகள் அறிதல், அது குறித்து சிந்தித்தல், மூலகாரணம் அறிதல், வழிகளை காணுதல், அதிலிருந்து சிறந்ததை தேர்ந்தெடுத்தல் இவ்வாறு உள்ளன.
இதற்கு நாமே அறியலாம் அல்லது நலம்விரும்பிகளிடம் சொல்லி தீர்வு காணலாம். நம் பெரிய பிரச்சனையே யாரிடமும் அது குறித்து பேசாமல் ஒரு மூளையால் மட்டும் சிந்திப்பது. ஆலோசனைகள் மற்றவர்கள் அனுபவ அறிவின் மூலமும் அறியலாம்.

ஒரு நாள் மூன்று நண்பர்கள் நடந்து சென்றவர். வழியில் ஐம்பது ரூபாய் பணம் கிடக்கிறது. அதை மூவரும் எடுக்கின்றனர்..

முதலாமவன் சொன்னான், "எனக்கு இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் போல் உள்ளது" என்றான். இரண்டாமவன், "எனக்கு தாகம்" என்றான். மூன்றாவது நண்பன் "எனக்கு நல்லபசி. ஏதாவது தாகமாக உள்ளது. எனவே நீர் நிறைந்த ஏதாவது கிடைத்தால் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்" என்றான். இருக்கும் ஐம்பது ரூபாயில் இவ்வளவும் சாத்தியமா? எனவே, இவர்கள் தங்களுக்குப் பணம் கிடைத்ததையும், தங்களுக்கு இப்போது என்ன தேவை? என்பதையும் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் சொன்னார்கள்.

பெரியவர் அவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு பழக்கடைக்குச் சென்றார். ஐம்பது ரூபாய்க்கும் கூடை நிறைய திராட்சைப் பழங்களை வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார்.

முதலாமவன் திராட்சையைச் சாப்பிட்டு அதன் இனிப்பில் மகிழ்ந்தான். இரண்டாமவன் திராட்சையைச் சாப்பிட்ட போது அதன் நீர்ச்சத்து அவன் தாகத்தைத் தணித்தது. மூன்றாமவன் நிறையத் திராட்சைகளைத் தின்று பசியாற்றிக் கொண்டான். பிரச்சனையும் தீர்ந்தது; மகிழ்ச்சியும் கிடைத்தது.

பல சமயங்களில் குடும்பத்தில், தொழிலகத்தில், நிர்வாகத்தில் இதுபோன்ற சில வித்தியாசமான சிக்கல்கள் உருவாகும். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் அங்கே பிரிவுகள் தொடரும்; வேதனைகள் நிறையும்.

மாறாக, அங்கே நிதானமாக யோசித்துப் பணி செய்யும் ஒவ்வொரு நபரையும், பலன்பெறும் ஒவ்வொரு நபரையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஒற்றுமை வளரும்; சாதனைகள் பெருகும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

படித்ததில் பிடித்த வரிகள்...உங்கள் கிரீடம் அழகாய்த்தான் இருக்கிறது.....ஆனால்என் தலையை பத்திரமாக வைத்திருக்கும் கடமைஎனக்கு முக்கியம்.......🌺நிற்கதியற்ற மனசு நீங்கள் யாரென்றெல்லாம்ஆராய்ச்சி செய்யாதுஉங்கள் சுண்டு விரலை நீட்டி பாருங்கள்.🌺எதார்த்தங்களை பேசும் போதுகண்ணாடிமுன் நிற்காதீர்கள்அபத்தமாகவோஅசிங்கமாகவோஅவ்வளவு ஏன்-பைத்தியமாகவோ கூடதெரியக்கூடும்.......🌺எல்லோருக்குள்ளும் ஒரு சுயவிளக்கமிருக்கிறதுஆனால்அதில் என்ன சிக்கலென்றால்எல்லோருமேபேச்சின் கடைசி வார்த்தைதங்களுடையதாகவேஇருக்க வேண்டுமெனநினைத்துக் கொள்கிறார்கள்..🌺என்னதைரியத்தில்-உறங்குகிறீர்களோ....அதே தைரியத்தில்-எழுந்திருங்கள்.🌺பெரும் அவமானத்திற்குப் பிறகும்காலம் அதே வேகத்தைகுறைத்துக்கொள்வதேயில்லை.....உற்றுப் பாருங்களேன்....

லதா


மீள்!

தனி மனிதனுக்குள் தான் எத்தனை போராட்டங்கள்? அன்பு செலுத்துவதால் உளைச்சல்கள், அன்பு கிடைக்கவில்லை என ஏக்கங்கள்! 

எத்தனை கிடைத்தாலும் இன்னும் ஏதோ ஒரு வெற்றிடம் ....பூர்த்தி செய்ய தேடல்கள்!

பேச நினைக்கும் சிலவற்றை பேசமுடியாமல் தனக்குள் முடங்கிக்கொள்ளும் வேதனைகள்!

கிடைத்ததை நிலைக்க வைக்க போராட்டங்கள்! எடுக்க வேண்டிய ஆயுதம் அமைதியும் அன்புமா, ஆக்ரோஷமும் வீச்சுமா என தெரியாமல் தவிக்கும் தவிப்புகள்! 
 
உரிமைப் போராட்டங்கள், கடமைச் சுமைகள்!

உள்ளே குமுறி, வெளியில் புன்னகை பூக்க வேடம் தரிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள்!

அடுத்தவர் தேவை பூர்த்தி செய்ய, சமுதாயத்தில் தலைகுனிவு வராமல் இருக்க, தன் தேவை தவிர்த்து, சுயம் இழந்து நாட்களை கடத்த வேண்டிய நிர்பந்தங்கள்!

நிற்க....ஏன் இத்தனை போராட்டங்கள்?

நாம் வாங்கிய பொருளும் நமதில்லை, நாம் உறவாடும் மனிதர்களும் நம்மவர் இல்லை! பொருள்கள் வீணாகலாம், தொலையலாம். மனிதர்கள் வருவார்கள் போவார்கள். அன்புகள், அக்கரைகள் வரும் போகும். இது யார் தவறுமில்லை! இயற்கை!

அன்பு செலுத்துவோம், கடமைகள் ஆற்றுவோம், நிலைக்க வேண்டியவை நிலைக்கும், நிலைக்க வேண்டாதவை நகரும். மனம் முழுவதும் அன்பால் நிறைப்போம், நமக்கான அன்பு, பிறருக்கான அன்பு என!

மரங்கள் இலை உதிர கவலைப்படுவதில்லை....உதிரும் ஒவ்வோரு இலைக்கும் புதிய இலை தளிர் விடும். இலையுதிர் காலத்தில் அத்தனை இலைகளும் கொட்டி மரம் தனித்து நிற்கும். ஆனால் அப்பொழுதும் தன் கம்பீரம் தொலைப்பதில்லை! சுவாசிப்பை நிறுத்துவதில்லை! வீசும் காற்றை தடுப்பதில்லை! மழையில் நனைந்து சிலிர்க்க தவறுவதில்லை, சுட்டெரிக்கும் சூரியனை சந்திக்க பயம் கொள்வதில்லை!
வசந்தம் வரும், இலைகள் புதியதாக வந்து ஒட்டிக்கொள்ளும், பூக்கள், காய்கள் என குலுங்கும். இவையெல்லாம் தனித்து நிற்கையில் அது முடங்கி போய் இருந்தால் சாத்தியமாகாது. 

மனிதன் மட்டும் ஏன் முடங்க வேண்டும்? இலையுதிர் காலமும், வசந்தமும் காலத்தின் கட்டாயங்கள். இயற்கையின் விதிகள். இயற்கையை மிஞ்சி எதுவும் உண்டோ? போக வேண்டிய உயிரை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சோறிட முடியுமா? அனைத்துக் கதறினால் உயிரற்ற கைகள் நம்மை அனைத்து தேற்றுமா?

உயிரோடு நம்மை விட்டு போனால் என்ன, உயிர் துறந்து நம்மை விட்டு போனால் என்ன? நாம் நேசித்தவர் உயிர் போனால், நம் நேசம் இல்லையென்றாகி விடுமா? உயிரோடு நம்முடன் இருந்த உடல் நம்மை விட்டு விலகினால் என்ன நம் அன்பு இல்லையென்றாகி விடுமா? 

உயிர் போன உடலை என்னுடன் தான் வைத்துக்கொள்வேன் என நினைத்து செயல் பட்டால், அழுகி புழுக்கள் நெளிந்து நாற்றமெடுக்காதா? அந்த நாற்றத்தில் நாம் வாழ முடியுமா? மூக்கை அழுத்திப்பிடித்தால் மூச்சுத்திணறல் ஏற்படாதா? அங்கிருந்து புழுக்கள் நகர்ந்து நம்மேல் படராதா? 

மனம் விட்டுப்போன உறவுகளின் உடல்கள் மட்டும்  நாம் பிடித்துவைத்தாலும் பலன்கள் இதுவே! மற்றவருக்கு நாற்றமடிக்காமல் இருக்கலாம். நமக்குள் நாறும் தானே?

மரத்தைப் போல் கம்பீரமாக நிற்போம். காலை இளஞ்சூரியனை வரவேற்போம், வெளியில் இதமாக வீசும் காற்றை நன்றாக உள்ளிழுத்து சுவாசிப்போம். வீறு நடை போட்டு கடமைகள் ஆற்றுவோம். 

இலையுதிர் காலங்கள் வரும், ஏன் இடையே புயல் காற்றுகள் கூட வீசும். அடித்துச்செல்லப்படாமல் இருக்கும் பட்சத்தில் வசந்தங்களும் மீண்டும் வரும். மனதை திறந்து வைப்போம், பார்வையை விசாலமாக வைப்போம், அன்பை நிறைத்து வைப்போம், இயற்கையை ஆசானாக கொள்வோம். அது நம்மை வழி நடத்தும் மண்ணில் புதையும் வினாடி வரை!

Saturday, 13 September 2025

நாற்காலியில் ஓட்டை


நமது வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறத்தில் துளை இருக்கும். பலர் இதை வெறும் டிசைன் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன.

நாற்காலிகளில் துளை இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.. நாற்காலிகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது, ​​காற்று அவற்றுக்கிடையே சிக்கிக் கொண்டு இறுக்கமாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளும்.
இதனால் அவற்றை எடுக்கும்போது கடினமாக இருக்கும். ஆனால், இந்த துளை இருப்பதால், காற்று எளிதில் வெளியேறும். ஆகையால், எத்தனை நாற்காலிகளை அடுக்கி வைத்தாலும், அவற்றை எளிதாக எடுக்க முடியும்.
 அதேபோல், இந்த சிறிய துளை நாற்காலியின் எடையை குறைக்கிறது.

நாற்காலியின் பின்புறத்தில் துளை இருப்பதால், ​​காற்று சுழற்சி எளிதாக இருக்கிறது. இதன் காரணமாக, அதில் அமர்ந்திருப்பவருக்கு வியர்வை போன்ற அசௌகரியம் ஏற்படாது.
அதேபோல், தண்ணீர் எதுவும் நாற்காலியில் விழுந்தால் ​​அந்த துளை வழியாக தண்ணீர் எளிதாக வெளியேறுகிறது. இது நாற்காலியில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது.
இதன் மூலம், எந்த ஒரு வடிவமைப்பும் வெறும் டிசைன் மட்டுமல்ல. அதன் பின் பல நன்மைகள் மற்றும் காரணங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது.

-படித்தது

Thursday, 11 September 2025

167


#கற்கை_நன்றே_167

உச்சியில் இருக்க வேண்டும் என்றால் மென்மையாக இரு. பலவீனமாக இரு.ஒரு புல்லைப் போல மென்மையாக இரு. பெரிய மரத்தைப் போல பலமாக அல்ல

-ஓஷோ

குழு உணர்வு தற்போது குறைந்து வருகிறது.தன் முனைப்பு தான் மட்டும் புகழடைய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது. இது குறித்து டாக்டர் மெ.ஞானசேகர் பகிர்ந்த செய்தி சிந்திக்க வைக்கிறது.

கூஸ் என்னும் பறவையானது முட்டாள் தனமான பறவை என்று கருதப்படுகிறது. எனவே, இந்தப் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று விரும்பினார் மில்டன் ஆஸ்லன் என்பவர்..இந்தப் பறவைகளின் செயல்பாடுகளைப் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களைக் கொடுத்தார்.

உண்மையில் கூஸ் (Ghoose) பறவைகள் முட்டாள்கள் அல்ல என்பதும் அதனிடமிருந்து நாம்தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இவரது ஆராய்ச்சியில் தெளிவானது.

இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கின்ற போது 'V' அதாவது இந்த வடிவத்தில் இதன் பறக்கும் எல்லை 70% அதிகமாகக் கிடைக்கின்றது. இதனால் எளிதாகப் பறக்க முடிகின்றது.“வரித்தலை வாத்து” இனத்தவை 12,000 முதல் 14,000 அடி உயரத்தில், மிக அதிக வேகத்துடன் பறக்கும் திறன் கொண்டவை.

கூட்டமாக இந்தப் பறவைகள் பறக்கின்றபோது ஒருவேளை ஒரு பறவை தவறுதலாக இந்த வடிவமைப்பிலிருந்து விலகிவிட்டால் தன்னுடைய பழைய இடத்துக்கே மீண்டும் வராது. அதற்கு மாறாக வடிவமைப்பின் பின்னால் போய்விடும். அங்கே சென்றதும் அதற்கு முன்னால் பறக்கும் பறவைகளின் முயற்சியால் ஈர்க்கப்பட்டு மீண்டும் வரிசைக்குள் வந்துவிடும்.ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்திக் கொள்ளும். ஏதேனும் பறவைக்கு அடிபட்டாலோ பறக்க முடியாமல் போனாலோ அப்பறவையை மற்ற இரு பறவைகள் கீழே பத்திரமாக கூட்டி வருகிறது. 

கடைசி வரை அதனை கவனித்துக் கொள்கின்றன.நாம் செய்ய தயங்குவதை கூஸ் பறவைகள் செய்கின்றன.பறவைக் கூட்டத்தின் ஒற்றுமையும் கூட்டு முயற்சியுமே நமக்கு ஞானத்தைப் போதிக்கின்றன.கூட்டு உழைப்பின் சுயநலம் இருக்காது. குழு உணர்வுதான் ஒரு நிறுவனத்யையே வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

ஒருவரால் வெற்றி பெற முடியும், ஆனால் அனைவராக இணைந்தால் அதிசயம் செய்ய முடியும்."
சிறந்த குழு வெற்றி பெறுவது, ஒருவரின் திறமையினால் அல்ல; அனைவரின் ஒற்றுமையினால் தான்."அனைத்து வெற்றிக்களும் ஒரு சிறந்த குழுவின் அர்ப்பணிப்பினால் சாத்தியமாகின்றன." என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 9 September 2025

166


#கற்கை_நன்றே_166

"மக்களை இரண்டு காரியங்களைச் செய்ய வைப்பது மிகவும் கடினம்: ஒன்று, அவர்களைச் சிந்திக்க வைப்பது; மற்றொன்று, செயல்களின் முக்கியத் துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்த வைப்பது." இவ்விரு விஷயங்கள்தான் ஒரு தொழில்முறைக் கலைஞனுக்கும், பொழுது போக்குக் கலைஞனுக்கும் இடையே உள்ள வேறுபாடு

-படித்தது

மாடு மேய்க்கும் ஒரு வயதானவர், ‘ஹெர்ஃபோர்டு இன பசுக்களிடமிருந்து வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டதாய் நார்மன் பீலே கூறுகிறார்.மலைச்சரிவில் உள்ள மாட்டுப்பண்ணையில் கழித்த ஒருவரின் வாழ்வியல் சம்பவத்தை நமக்குக் கூறுகிறார்

 வீசியடிக்கும் பனிக்காற்றை தாங்கமுடியாமல் மாடுகள் மடிவது அங்கே வாடிக்கையான நிகழ்வு. பனி மழையில் பசும் புல்மேடுகளெல்லாம் உறைந்து போகும்; திடீர் திடீரென்று குளிர் அதிகரிக்கும்; காற்றில் பறந்து வரும் பனிக்கட்டிகள் தசையைத் துளைத்துவிடும். இயற்கை நிகழ்த்தும் இந்த வன்முறைக்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல் கால்நடைகள் திகைத்து நிற்கும். சிதறி வீசும் பனித்துகள்களுக்கு எதிராக தமது பின்பக்கத்தைக் காட்டிக் கொண்டு வரிசையாக நிற்கும் அந்த மாடுகளை பனிக்காற்று பல மைல் தொலைவுக்கு உருட்டிச் செல்லும்.
 முடிவில் எங்காவது ஒரு வேலி ஓரத்தில் அவை கொத்துக்கொத்தாக மடிந்து விறைத்துக் கிடக்கும்.

 ஆனால் ஹெர்ஃபோர்டு இனப் பசுக்களோ இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானவை. பனிக் காற்று வீச ஆரம்பிக்கும்போதே, இவை காற்று கடைசியாக மோதித் திரும்பும் ஒரு மலை அடிவாரத்துக்கு ஓடிப்போய்விடும். அங்கே உடலோடு உடல் உரச வரிசை கட்டி நிற்கும் இந்த பசுக்கள், பனிக் காற்றுக்கு முகம் காட்டியபடியே, தலை குனிந்து நிற்கும். ‘பனிக்காற்றின் கோரத்தாண்டவம் முடிந்த பின் பார்த்தால், அந்த ஹெர்ஃபோர்டு இனப் பசுக்கள் எல்லாமே உயிரோடு இருக்கும் அதிசயத்தைப் பார்க்கலாம். 

மாடுமேய்ப்பவர் பரவசத்துடன் சொன்னார்: “அந்த பனிப் புல் வெளியில் இருந்துதான், ‘வாழ்க்கைப் புயலை எதிர்கொள்’ என்னும் மிக முக்கியமான வாழ்வியல் பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.” இந்தப் பாடம் எல்லா இடத்துக்குமே பொருந்தக்கூடியதுதான். 

நீங்கள் அச்சம் கொள்ளும் விஷயங்களை தவிர்த்து விட்டு விலகி ஓட முயற்சிக்காதீர்கள். அப்படிச் செய்தால் அந்த பெருங்காற்று உங்களை அப்படியே உருட்டி கீழே தள்ளிவிடும். அச்சமூட்டும் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்வதா? அல்லது அதை தவிர்த்துவிட்டு விலகி ஓடுவதா? என்பதை ஒவ்வொரு மனிதனும் தமக்குள்ளேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 சொல்லப்போனால் பெரும்பாலான பயங்களுக்கு அடிப்படையே கிடையாது. அவை வெறுமையானவை. ‘வாழ்நாளில் தான் பயந்து நடுங்கிய விஷயங்களில் 92 சதவிகிதம் நடைபெறவே இல்லை’ 
மீதி எட்டு சதவிகித பிரச்சனை வந்தபோது, நான் அவற்றை நேருக்கு நேராக சந்தித்தேன். அதை வெகு இலாவகமாக கையாண்டேன். அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தேன்.” அவன் முத்தாய்ப்பாக சொன்னான்: “எல்லா பயங்களுமே நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவைதான்.”என்று.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 8 September 2025

165


#கற்கை_நன்றே_165

பிரச்சினைகளே இல்லாமல் அல்லது பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி வாழ்வதல்ல மன ஆரோக்கியம். பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது, அதன் தீர்வைத் தேடுவது, அதை நோக்கிப் பயணிப்பது, அந்தத் தீர்வில் இருந்து கற்றுக்கொள்வது, கற்றுக் கொண்டதை வைத்து எதிர்வரும் பிரச்சினைகளைக் கலைவது, அதைத் தடுப்பது என்பவைதான் உண்மையான மன ஆரோக்கியம்.

-சிவபாலன் இளங்கோவன்

Ho'oponopono என்பது ஹவாய் நாட்டின் பழமையான மன்னிப்பு மற்றும் சமரசத்தின் ஆன்மிக நடைமுறையாகும்.இதன் பொருள் சரிசெய்வது அல்லது விஷயங்களை முறையாக திருத்துவது ஆகும்.
இதில், நம் வாழ்க்கையில் ஏற்படும் எந்த பிரச்சனையும், நமது மனதின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது.

Ho'oponopono முறையில் தன்னிலை பொறுப்பு (total responsibility) என்பது முக்கியக் கருத்து; அனைத்து அனுபவங்களும் நம்மால் உருவாவதாகக் கருதப்படுகிறது
இதன் அடிப்படை கோட்பாடு—நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் நாமே பொறுப்பு! பிறரை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, நம்முடைய உள்ளத்தை பரிசோதித்து, தன்னம்பிக்கை மற்றும் தன்னிலை மாற்றம் மூலம் வெளிப்புற உலகை மாற்றலாம். “I am sorry, Please forgive me, Thank you, I love you” எனும் நான்கு முக்கியமான வார்த்தைகளின் மூலம், மனதின் ஆழத்திலிருந்து நம் துன்பங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கின்றனர்.
தொடர்ந்து இதனை சொல்லும் போது மாறுபட்ட எண்ணங்களை மாற்றலாம்.

அமெரிக்காவில் தற்போது இக்கருத்து குழந்தைகளுக்கு வேறு ஒரு முறையில் சொல்லப்ப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனைக்கும் உன் பார்வையிலிருந்து அணுகி முடிவெடு என்பது.இது மிகவும் கடினமான ஒன்றுதான்.நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம் என்பதை உணர்வதாகும். ஆனால், இதை ஏற்றுக்கொள்வது மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு முடிவாகும். ஏனெனில், பிறரை குற்றம்சாட்டாமல், நாமே நம் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவர்கள் என்பதை உணர முடியும். இதனால், நாம் நம்மை வளர்த்துக்கொண்டு, மன அமைதியை அடையலாம்

நாம் நினைப்பதற்கும் உண்மையிலேயே நிகழ்வதற்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. Ho'oponopono-வில், நமது மனதின் ஆழத்தில் பதிந்துள்ள துரிதமான எண்ணங்கள், பழைய நினைவுகள், கோபம், வருத்தம் ஆகியவை நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. நாம் நம் உள்ளத்திலேயே இந்த எண்ணங்களை மாற்றி அமைத்தால், நம் சுற்றியுள்ள உலகமும் அதற்கேற்ப மாறத் தொடங்கும்.

 உதாரணமாக, ஒருவருக்கு வேலை இடத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர் தனது உட்புற உணர்வுகளை மாற்றினால், வேலை இடத்தில் நல்ல மாற்றங்கள் தானாகவே ஏற்படும் என்கிறார்கள். வேலை மீதான வெறுப்பே சலிப்படைய வைக்கிறது.இந்த வெறுப்பை நாம் மாற்றுவதன் மூலம் வேலை குறித்த நம் எண்ணம் மாற்றமடைகிறது.

 எந்த ஒரு பிரச்சனையும் நேர்ந்தாலும், அது நம்மிடம் ஏன் வந்தது என்பதை உணர்ந்து, மனதிற்குள் Ho'oponopono மந்திரங்களை சொல்லி, தன்னிலை மாற்றத்தை ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக மாறும்.

காபியின் தரம் என்பது, கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் முழுமை என்பது, நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சிறந்த கோப்பைகளைப் பற்றியே யோசிக்கும் நமக்கு, பல சந்தர்ப்பங்களில் காபியின் சுவை தெரிவதில்லை.அதே போல் பணத்தையும் பதவியையும் விடாமல்

துரத்தும் நாம், அவற்றை விடவும் முக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் இந்த தவறான அணுகுமுறை தான் காரணம் என்கிறார் சுகபோதானந்தா

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 7 September 2025

164


#கற்கை_நன்றே_164

ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.

-சங்கப்பாடலில்

பிடிவாதங்கள் ஆரம்பத்தில் நன்றாய் இருக்கும்..விரும்பியது கிடைக்கும் போது சிறந்த உக்தியாக தெரியும். ஆனால் காலப்போக்கில் தளர்ந்து விடும்.அன்பின் முன் மட்டும் பிடிவாதம் குறையும்.குறிப்பிட்ட வயதுக்கு மேல பிடிவாதங்களுக்கு மருந்தாக சமரசமே தீர்வாக மாறுகிறது. சமரசங்களே அன்பு அதுவே வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

பிடிவாதத்தை பலர் விடாமுயற்சி 
 என்று குழப்பிக் கொள்கிறார்கள்.
விடாமுயற்சி என்பது, ஒரு செயலில் பல முறை தோற்றாலும், மனம் தளராமல் வெற்றி இலக்கை அடைய தொடர்ந்து அச்செயலை செய்து முடித்தல்.

பிடிவாதம் என்பது எப்பாடு பட்டாவது (நல்லது , அல்லது) எச்செயலை செய்தாவது, தனக்கு வேண்டியதை அடைவது. இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல தோன்றினாலும், இரண்டும் வெவ்வேறானவை

நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களில் கீழ் காணும் நபர்களையும் கடந்து செல்கிறோம்.

பிடிவாத மனிதர்கள் ஐந்து வகைகளில் இருப்பதாக பெர்னார்டு பெர்னோவிஜ் கூறுகிறார்

1.I know all:எனக்கு எல்லா தெரியும் எனும் அகங்காரம் அதிகம்.மற்றவர் பேசிக் கொண்டிருந்தாலும் தான் சொல்ல நினைப்பதை சொல்லிக் கொண்டே இருப்பார்

2.Grenade:சிறிய விஷயத்தை பெரியது போல் சொல்லுவார். தாம் சொல்வதை மட்டும் மற்றவர் கேட்க வேண்டும் என நினைப்பவர்

3.Missing track:முக்கிய விசயத்தை விட்டுவிட்டு சிறிய விசயத்தை அதிக நேரம் விவாதிப்பது.

4.Negative:எந்த விஷயத்தையும் இல்லை,கிடையாது என்பது.இவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது கடினம்

5.May be:எந்த விசயத்தையும் ஆதரிக்க மாட்டார்.முடிவெடுக்க நீண்ட நேரம் ஆகும்

கொள்கைப் பிடிப்புடன் கூடிய பிடிவாதம் வாழ்வை முன்னேற்றும்.. ஆனால் வீண்பிடிவாதம் நம் சிந்தனையை சிதைக்கிறது. பிடிவாதத்திற்கான கடிவாளம் போடுவதே சிறப்பு. பிடிவாதத்தை நேர்மறையில் செலுத்துவது சிறப்பு.
காத்திருப்பதற்கும்
பொறுத்திருப்பதற்கும்
ஒரு பற்றுதல் வேண்டும் என்கிறார் மனுஷ்.அந்த காத்திருப்பு மனநிலை நல்ல விஷயங்களில் பொறுத்திருந்து விடாமுயற்சியுடன் தொடர உதவும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 6 September 2025

மகாத்மா காந்தியை, காந்தியடிகள் என்று முதல் முதலில் எழுதியவர் திருவிக. சிலப்பதிகாரத்தில் வருகிற கவுந்தியடிகளைப் பற்றிப் படித்தபோது, மகாத்மாவை காந்தியடிகள் என்று எழுத வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. தொடர்ச்சியாக அவர் அப்படியே எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டு பலரும் காந்தியடிகள் என்றே எழுத ஆரம்பித்து, அது நிலைத்துவிட்டது.ஆனால் அன்னி பெசண்ட்டை ‘அன்னை வஸந்தை’ என்று திருவிக எழுதியிருக்கிறார். அது நிலைக்கவில்லை.(கு. அழகிரிசாமியின் நான் கண்ட எழுத்தாளர்கள் நூலில் படித்தது.)

தனியாக நடமாடும்பிடிவாதம் உனது..நிழலோடும் உரசாத தன்மானம் எனது-கபிலன்

முப்பது கம்பெனிகளும் இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும் அந்தப் பெரிய கட்டிடத்தை தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' என்று சொல்லி.-முகுந்த் நாகராஜன்

Thursday, 4 September 2025

163


#கற்கை_நன்றே_163

*ஒருவன் கஷ்டத்தில் இருந்தான்.அந்த ஊரில் உள்ள குருவிடம் சென்றான்

*குரு கூறினாராம்
"இன்று போல் என்றும் இருப்பாயாக என்று"

அவன் திகைத்துப் போய் குழப்பத்துடன் வெளியேறினான்.

இது போல் நடைமுறை யதார்த்தத்தை ஜென் வழியில் ஞானிகள் கூறுவதை படிக்கும்போது நிறைய அகக்கதவுகள் திறக்கும். ஆன்மிகம் என்பதை தாண்டி உபதேசத்தின் போது சொல்லும் வாழ்வியல் உண்மைகள் மிகப்பெரும் படிப்பினைகள் தரும்.அவ்வகையில் யதெச்சையாய் படித்த சுகபோதானந்தாவின் புத்தகத்தின் சில வாழ்வியல் கருத்துகளில் சில..

#அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை.அது சிறியதோ, பெரியதோ,கசப்போ,இனிப்பாகவோ இருக்கலாம்.அது இலைகளை,பூக்களை,அசுத்தங்களை எவ்வித பாகுபாடின்றி சும்ந்து செல்லும் நதியைப்போலத்தான். வாழ்க்கை எனும் நெடுங்கதையில் மாற்றம் ஒருகால் புள்ளிதான், முற்றுப்புள்ளியல்ல.

#மகிழ்ச்சி குறித்து ஜென்னில்

மகிழ்ச்சி பொருளில் இல்லை,அது மற்றவர்கள் கொடுத்து நாம் பெறுவது அல்ல,உள்ளே இருக்கிறது மகிழ்ச்சி. அதை உணராதவர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை."எது மகிழ்ச்சியளிக்குமோ அதை எண்ணுங்கள்.எது மகிழ்ச்சியாய் உணரச்செய்யுமோ அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

#திருப்தி

பொதுவாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.அதுதான் மனதார போதும்னு சொல்வாங்க.
மற்றவைகளான பொன்னோ,
பணமோ கொடுத்தால் திருப்தியடையாது.

"ஒரு பெண்மணி குழந்தையுடன் கடற்கரைக்கு சென்றாள்.ஒரு பெரிய அலை குழந்தையை இழுத்துச் சென்றது.ஐயோ என அலறியபோது, இளைஞன் துள்ளிச் சென்று காப்பாற்றினான். குழந்தையை கையில் வாங்கிய தாய் "ஐயோ குழந்தையின் செருப்பு போய்விட்டதே என்றாராம். திருப்தியற்ற மனம் இப்படித்தான் இருக்கும்.

#முரண்பாடு

ஒரு கருத்தோடு முரண்பட்டு, தன் கருத்தோடு மோதி புதிய கருத்து உருவாகும் என்பார் ஹெகல்.ஆனால் சமீப காலமாக முரண்படுதல் என்பது ஃபேசனாகிவிட்டது.இதுபற்றி, துருகனேவ் எழுதிய ரஷ்யக்கதை

"ஒரு ஊரில் ஒரு மூடன் இருந்தான். அவனின் அறிவற்ற தன்மையும், அபத்த செயலையும் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது.அவனுக்கு சங்கடம். அறிவாளியிடம் யோசனை கேட்டான்.அவர் சொன்னார் யாரேனும் உன்னத படைப்பு எனச் சொன்னால் குப்பை என்று நீ சொல்.பிறரை மட்டம் தட்டு. மறுத்துப்பேசு.ஏழுநாள் கழித்து என்னை வந்துபார். பின்னாளில் அவனை மேதை,ஆராய்ச்சியாளர்,
என ஊரே கொண்டாடினர்  என கதை முடியும்.

"முரண்படுகிற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது.ஆனால் அதையே தன்னுடைய இயல்பாகவும், வாழ்க்கை முறையாகவும் ஆக்கிக் கொண்டுவிடக்கூடாது. எண்ணங்களுடன் முரண்படாதீர்கள்.
மனதைக் காலியாக வைத்திருங்கள்.

#ஒப்பிடுதல்

மனம் ஒரு ஒப்பீடு செய்யும் கருவியாயிருக்கிறது.இது வெறுப்பையும் பொறாமையும் தரும்."இதைவிட அழகான நதியை நான் பார்த்திருக்கிறேன்.இதைவிட பெரிய மலையை பார்த்திருக்கிறேன் என்பதெல்லாம் எதையும் முழுமையாய் புரியவிடாமல் அதாவது நிகழ்காலத்துடன் ஒன்றாமல் செய்துவிடுகிறது.

"அகந்தை எப்பொழுதும் பழையதாகத்தான் இருக்கும்.
அவரின் சொல்லும் செயலுமே சரியாக இருக்கும் என நினைப்பார். மாற்றங்களை வரவேற்கமாட்டார்.பழைய முறையை தொடர்வார்.ஒரு கருத்துடன் ஒன்றாமல் தன் கருத்தையே திணிப்பார்கள்.

ஒத்துப்போக தன்னுணர்வு இடம் தராது. அகந்தை அறியாமையுடன் பொருந்தியிருக்கும்.இதனுடன் இன்னொன்று "கோபம்".

நம்மைநாமே தாழ்த்திக்கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை கோபம். கோபத்தை அடக்குவதுவிட வெளிப்படுத்துவது நல்லது. சுஜாதா தன் கற்றதும் பெற்றதும் தொடரில் இதனை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பார்.
ஜப்பானில் கோபம் வந்தால் கோபமல்லாததை செய்வார்களாம்.அதாவது எதிராளியின் மீது கோபம் வந்தால் அதற்குப்பதில் பூவைக் கொடுப்பார்களாம்.இது கோபத்தை குறைக்குமாம்.

#துணிவு

தனக்கு சரியெனபட்டதை தயக்கமின்றி செய்வது துணிவு. அச்சமற்று இருத்தலல்ல.அச்சத்தை அடக்கி வைத்து மெலெழும் நிலை.விவேகம் இல்லாவிடில் அது அசட்டு துணிச்சல் ஆகிவிடும். தைரியம் என்பது தெரியாத ஒன்றை ஆராய்ந்து தேடிக் கண்டுபிடிப்பது.
தெரிந்தே ஒன்றின் கைதியாக இருப்பது தைரியமல்ல.

இதற்கு ஷிப்லியின் கதை ஒன்று
சொல்லலாம்..

ஒரு நாள் அந்த நாய் கடும் தாகத்துடன் இருந்தது. தண்ணீரில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து ஒவ்வொரு முறையும் அதை கண்டதும் தண்ணீரைக் குடிக்காமல் பின்வாங்கியது. தன்னுடைய பிம்பத்தை வேறு நபராக எண்ணிக்கொண்டது. ஆனால் தாகம் அதிகரித்த நிலையில், அது பயத்தை உதறி விட்டு தண்ணீரில் பாய்ந்தது. அந்தக் கணத்தில் அதன் சுய பிம்பம் மறைந்து போனது. நாயின் செயல் தமக்கு தெளிவு தந்ததாக  ஷிப்லி கருதினார். நாம் தாகம் கொண்டு விடுகிற போது நமக்கு தேவையானது கிடைத்துவிடும் என்கிறார் எவ்வளவு பெரிய உண்மை.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 2 September 2025

162


#கற்கை_நன்றே_162

வாய்ப்பு என்பது தீக்குச்சி போன்றது
தீக்குச்சியை உரசியவுடன் பற்றி எரிய வேண்டும்
இல்லையேல்...
வாய்ப்பு மற்றொரு தீக்குச்சிக்கு வழங்கபடும்..

சச்சின் டென்டுல்கரைக் காட்டிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் ஒன்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் அல்ல. ஆனால், அவரது பயிற்சிதான் சச்சினுக்கு சச்சினை அடையாளம் காட்டியது. அதுதான் சச்சினை உலகிற்கு அடையாளம் காட்டியது. பி.டி.உஷாவோடு ஒப்பிடுகையில் ஓ.எம். நம்பியார் ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்தான் இந்தியாவிற்கு ஒரு தலைசிறந்த தடகள வீராங்கனையை வழங்கினார். தன் குருவான துரோணாச்சாரியாரை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் அளவுக்கு அர்ஜுனன் வளர்ந்தது, துரோணாச்சாரியாரின் புகழைப் பறைசாற்றுகிறது. 

நமக்கு வெளியே உள்ள ஒருவர் நம்மை வழிநடத்துவது அவசியம். அவர்கள், நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி; நம் பலவீனங்களை எதிர்த்துப் போராடத் தேவையான, நமக்குள் இருக்கும் வலிமைகளை நமக்குக் காட்டுபவர்கள். நம் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ள நமக்குத் தனிப்பட்டப் பயிற்சியாளர்கள் தேவை. நம் அறிவை விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் தேவை. 

 உங்கள் மழலையர் பள்ளி ஆசிரியர் அவரது வாழ்வில் உங்களைப்போல் உயர்ந்த நிலையை அடையாது இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வு அவர் உங்களுக்கு அளித்த அறிவின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. நம்மை வழிநடத்தும் ஒளியுடன் நம்மை நாம் ஒப்பிட வேண்டாம். சூரியக் கதிர்களிலிருந்து சூரியனை நீக்கிவிட்டால், எதுவும் இருக்காது.

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

 "பத்தாயிரம்," என்று உடனடியான பதில் வந்தது. இப்போது இன்னோரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்," என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதுமில்லை.

 அதுபோன்றதுதான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும்," என்று கூறினார். ஒரு பயிற்சியாளரின் மகத்துவம், ஒரு வீரனுக்கு அவனது திறனை வெளிப்படுத்துவதில் உள்ளது. ஒரு விளையாட்டு வீரனின் மகத்துவம், தனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளத் தன் திறனுக்கு ஏற்றவாறு செயல்படுவதில் இருக்கிறது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 1 September 2025

161


#கற்கை_நன்றே_161

இன்னாமை வேண்டின், இரவெழுக;
இந் நிலத்து
மன்னுதல் வேண்டின்,புகழ் நடுக;-தன்னொடு
செல்வது வேண்டின், அறஞ்செய்க;  வெல்வது
வேண்டின், வெகுளி விடுக!

-துன்பம் வேண்டின் பிச்சை கேட்டுப்பாருங்கள்,பெயர் நிலைக்க உங்கள் புகழை விட்டுச் செல்லுங்கள் தழைத்துக் கொண்டே இருக்கும்.உங்களோடு எடுத்துச் செல்ல அறச்செயல்கள் உள்ளன.அனைத்து காரியங்களும் வெற்றி பெற வேண்டுமாயின் கோபத்தை விட்டு ஒழியுங்கள்

-நாண்மணிக்கடிகை

ஓர் இருள் சூழ்ந்த சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் ஏராளமான நல்ல மனிதர்கள்தான். நல்ல மனிதர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருப்பதுதான். 

தங்களிடம் இருப்பது போதும் என்று அவர்கள் ஒரேயடியாகத் திருப்திப்பட்டு விடுவதால், பணக்காரராவதற்கான தூண்டுதல் அவர்களிடம் இருப்பதில்லை . பொருளாதார அபரிமிதம் குறித்த உணர்ச்சிரீதியான கட்டாயம் எதையும் அவர்கள் உணர்வதில்லை.

 சாலையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வழியாகச் செல்லும் ஒரு நல்ல மனிதர், அதைப் பார்த்துவிட்டு, "இது என் பணம் அல்ல. எனவே, அதை நான் தொட மாட்டேன்," என்று கூறிவிட்டுத் தன் வழியில் சென்றுவிடுவார். அவர் விட்டுச் சென்றதை ஒரு கயவன் கண்டெடுக்கிறான். தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும், அந்த நூறு ரூபாயை அந்த நல்ல மனிதர் எடுத்திருப்பாரேயானால், ஏழைகளின் பசியாற்ற அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதைக் கண்டுகொள்ளாமல் சென்றதால், அழிவுபூர்வமான வழியில் அதைப் பயன்படுத்தக்கூடிய ஒரு கயவனின் கையில் அது கிடைத்துவிட்டது.

 எந்தவொரு நாட்டிலும் புழங்கும் அதிகாரபூர்வமான பணம் ஓர் அளவிற்குட்பட்டது. இப்போது, அந்தப் பணம் ஒரு நல்லவரிடமும் இருக்கலாம், அல்லது ஒரு கயவனிடமும் இருக்கலாம். திருப்தி காரணமாகப் பெருஞ்செல்வத்தைக் குவிக்க விரும்பாத நல்லவர்களால், ஏராளமான பணம் தீயவர்களின் கைகளில் கிடைக்கும்படி ஆகிறது.

 ஒரு நிலைக்குப் பிறகு, செழிப்பு என்பது எவரொருவருக்கும் மிகையாகிவிடுகிறது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நல்லவர்களிடம் இருக்கும் மிகுதி ஒரு சிறந்த உலகை உருவாக்க உதவும்; 
தீயவரிடம் இருந்தால் உலகை அழிக்கப் பயன்படுத்தப்படும். நல்ல மனிதர்கள் தங்களிடம் உள்ள மிகுதிப் பணத்தைக் கொண்டு பள்ளிகளைக் கட்டுவார்கள், கல்வி உதவி வழங்குவார்கள், ஏழைகளின் பசியைப் போக்குவார்கள், மருத்துவ உதவிகளைச் செய்வார்கள். 

 தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல மனிதர்களை, செழிப்பான மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்வாருங்கள். தீயவர்கள் கைகளுக்குப் போய்ச் சேரும்படி ஒரு நூறு ரூபாய் நோட்டை விட்டுச் செல்லாதீர்கள். நாம் அத்தீயவர்களைப் பலவீனப்படுத்துவோம். பொருளாதாரத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வோம். பொருளாதார உபரியை உருவாக்குவோம். உங்களுக்கு அவ்வளவு பணம் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? அதைக் கொண்டு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம். - பணம் சேர்ப்பதற்கான தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் உண்டு.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 31 August 2025

160


#கற்கை_நன்றே_160

“மனித உடம்பின் தலையாய பணி, போகுமிடங்களுக்கெல்லாம் மூளையையும் தன்னுடன் எடுத்துச் செல்வதுதான்” என்று. 

-தாமஸ் ஆல்வா எடிசன்

அன்றாட வாழ்வில் பல விஷயங்க்ளை தெரிந்து வைத்திருந்தாலும் சில விஷயங்கள் மனதிற்கு தெம்பூட்டுபவை. சமூகம் குறித்து சிந்திக்க வைப்பவை. அந்த வகையில் சில கேள்விகளும் பதில்களும்

*சரியான தேர்வு சரியான தீர்வு

வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் மியாமி தீவுகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்; குப்பையும் சேர்ந்து. அங்குள்ள நிர்வாகம் எத்தனை அறிவுறுத்தியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஐஸ்க்ரீம் கப்புகளே அதிகம் தென்பட்டன. இதற்குத் தீர்வாக, சாப்பிடக்கூடிய கப்பாக ஏன் தயாரிக்கக் கூடாது என யோசனை செய்து 'Wafer Cups' பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து அது குப்பையில்லாத கடற்கரையானது.

ஒரு பியூ ரிசார்ச் சர்வேயில் "வாழ்க்கையில் எது முக்கியம்?" என கேட்கபட்டது மினிமலிசம் பகிர்ந்த செய்தி

இரண்டாமிடம் பிடித்தது: குடும்பம்

மூன்றாமிடம் பிடித்தது: தொழில், வேலை

முதலிடம்?

"எனக்கு பிடித்ததை செய்ய நேரம் கிடைப்பது" என மக்கள் சொன்னார்கள்.

தினமும் நமக்கு பிடித்ததை செய்ய ஓரிரு மணிநேரம் அவசியம். அந்த நேரத்தில் சும்மா இருக்கலாம், புத்தகம் படிக்கலாம், டிவி பார்க்கலாம்,..ஆனால் ரிலாக்ஸ் அண்ட் ரிவைண்ட் செய்ய தினமும் நேரம் ஒதுக்குவது அவசியம்.

24 மணிநேரத்தில் நாம் நமக்காக வாழும் நேரம் என்பது தூங்கும் நேரம், உண்ணும் நேரம், உடல்பயிற்சி செய்யும் நேரம் ஆகியவை தான். ஆனால் அவை எல்லாம் நம்மை நாமே பழுதுபார்ப்பது மாதிரிதான்

நாம் நமக்காக வாழும் நேரம் என இந்த ஒரு மணிநேரமாவது இருக்கட்டும். அதில் நமக்கு பிடித்ததை செய்வோம்

#கண்ணியம் என்பது யாதெனில்..

இந்தியா பிரிந்தவுடன் முகமது அலி ஜின்னா, காயிதே மில்லத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் கட்சியின் வரவு, செலவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பங்குத் தொகை என்னிடம் உள்ளது. இதனை என்னிடம் நீங்கள் பெற்றுச் செல்லலாம்' என எழுதினார்.

அதற்கு பதில் எழுதிய மில்லத், 'தற்போது பிரிவினையில் நீங்கள் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் என இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் அளித்து நான் பெறுவதாய் இருந்தால் என் கை கீழேயும் தங்கள் கை மேலேயும் இருக்கும். இந்தியரான எங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கமல்ல. எனவே அப்பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்றாராம். அதுதான் கண்ணியமிகு காயிதே மில்லத்.

#பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டியது

'விசாரணை' பட விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன, நாடக ஆசிரியர் பாரத இந்துவின் கதை.

"கொத்தனார் ஒருவர் சுவர் கட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த வழியே சென்ற பெண்ணின் அழகில் மயங்கி கட்டடத்தை கோணலாய் கட்டியதால் கீழே விழுந்து ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதால் நீதி விசாரணை நடக்கிறது. 'உன் கவனக்குறைவால் நடந்ததால் நீதான் பொறுப்பு' என்றார் மன்னர். 'ஐயா, கவனக்குறைவிற்கு நான் காரணமல்ல, அந்தப் பெண்மணிதான்' என்றார் கொத்தனார். அப்பெண்மணியிடம் விசாரித்தபோது, 'தவறு என்னுடையதல்ல, மந்திரி அலுவல் விஷயமாய் அழைத்தார். ஆகவே தவற்றுக்கு மந்திரிதான் பொறுப்பு' என்றார். மந்திரியின் பதிலில் திருப்தியுறாத அரசன், அவரை தூக்கில் போடுவதாக முடிவு செய்தான்.

மக்கள் முன் மந்திரியை தூக்கிட வரும்போது ஒரு பிரச்னை. தூக்குக் கயிற்றைவிட மந்திரியின் முகம் பெரிதாய் இருக்கிறது. தூக்குக் கயிற்றை மாற்றலாமா எனக் கேட்டபோது, அது வழக்கமில்லை என அரசன் மறுத்துவிடுகிறான். இதற்குத் தீர்வாக, இந்தச் சுருக்குக் கயிறு யாருக்குப் பொருந்துகிறதோ அவரை தூக்கிலிடுவோம் என முடிவு செய்யப்படுகிறது.

ஒரு தவறும் செய்யாத, மெல்லிய கழுத்துடைய ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவோ மறுத்தும், ``இந்தக் கயிற்றிற்கு ஏற்ற சின்னக் கழுத்து உனக்குத்தான் உள்ளது" எனக் கூறி அவனை தூக்கிலிட்டனர். ஒருவனை தண்டிக்க விரும்பினால் அனைவருக்கும் எளிதில் ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது’’ என முடியும்.

இக்கதை, `விசாரணை' படத்துக்குப் பொருத்தமான பேச்சு. ஒரு பேச்சாளன் பொருத்தமாய்ப் பேச வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

நற்காலை

-தோழமையுடன் மணிகண்டபிரபு

101


#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_ஒரு_எழுத்தார்

Book No:101/100+
Pages:-238

ஆளாண்டாப் பட்சி
-பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகத் தலைப்புகள் பெரும்பாலும் வித்தியாசமானவை. இந்நாவலின் தலைப்பு ஒரு பறவையின் பெயர். இது மனிதர்களைத் தம்மருகே அண்ட விடாது.தனித்து வாழும் இயல்புடையது.தீயவர்களை அழித்து நல்லவர்களுக்கு உதவி செய்யும் குணமுடையது.இந்நாவலின் கதைக்கரு இதனை மையமாகக் கொண்டது.

 பறவைகளைப் போல் மனிதர்களும் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்கிறார்கள்.குடும்பத்திற்காக,பொருளாதாரத்திற்காகவும் நவீன காலங்களில் இடபெயர்வு என்பது சாதாரணமாய் நிகழக் கூடியது என்றாகிவிட்டது.

தற்காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது அரிதாகிவிட்டது.அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பது முதுமொழி. அண்ணன் தம்பி உறவு எப்போது சீர்குலைகிறது என்றால் முதலில் திருமணம் முடிந்தவுடன் இரண்டாவது குடும்ப சொத்து பிரிக்கப்படும் போதுதான்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நான்காவது மகனான முத்துவிற்கு
அவர்களின் சொந்த நிலம் பங்கு பிரித்து தரப்படுகிறது.அதில் அவரின் மூத்த அண்ணனுக்கு அதிக பங்கு ஒதுக்கப்படுகிறது. அடுத்தவர்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டு..முத்துவின் பங்கு குறைவாக தரப்படுகிறது.அந்த நிலமும் நீர்வரத்து இல்லாத நிலமாய் கொடுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைகிறான்.

தன் மனைவியின் சொல்லால் குழப்பமடையும் முத்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் ஒரு கசப்பான அனுபவம் அவன் அந்த ஊரைவிட்டு குடும்பத்தைவிட்டு,நிலத்தை விற்று வெளியேற முடிவு செய்கிறான்.புதிய நிலத்தை வாங்க தயாராகிறான். தன் மாமனாரின் தோட்டப் பணியாளாக இருக்கும் குப்பண்ணா எனும் குப்பனுடன் சேர்ந்து புதிய நிலத்தை வாங்க புறப்படுகிறான் முத்து. அதிலிருந்து தான் நாவல் துவங்குகிறது.முத்து மேல் சாதி சமூகத்தினராக இருந்தாலும், குப்பண்ணா தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தாலும் இருவரின் மனநிலையும் சமூகம் குறித்த புரிதலும் நாவலில் வெளிப்படுகிறது.இதுவரை வெளியுலகமே தெரியாமல் அண்ணனே உலகமாய் இருந்தவனின் வாழ்க்கை எங்கிருந்தோ வரும் குப்பண்ணாவின் அன்பு வாழ்வில் புதிய வெளிச்சத்தை தருகிறது.
குப்பனும் முத்து தன்னை நடத்தும் விதம்.குறித்து நெகிழந்து கொண்டே இருப்பான்.

இவர்கள் செல்லும் வழியில் பேசும் உரையாடல்கள், உணவு, நாடோடி வாழ்க்கை,குப்பனின் நிலம் குறித்த அறிவு,பணம் வைத்திருக்கும் பதைபதைப்பு, திருடர் பயம் ஆகியவை சொல்லப்படுகிறது.ஒரு இடத்தில் மாடு சுருண்டு படுக்க..வடமலையில் கரட்டை ஒட்டிய அந்த  இடத்தை வாங்க முற்படுகிறான்.முத்துவின் உழைப்பின் மீதான ஆர்வம் விளையாத காட்டை மேம்படுத்தி விளைவிக்கிறான். முத்துவின் மனைவி பெருமாயின் பாட்டி, அவனின் மகளும் அதற்கு உதவுகிறார்.உறவுகளின் முன்னே தன்னை ஏமாற்றியவர் முன்னே வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் வைராக்கியம் அவனிடம் அதிகம் இருக்கிறது.இறுதியில் பாட்டி அவனுக்கு சொல்லும் செய்தியுடன் முடிகிறது.

*பானைத் தண்ணிய முகத்தில் அடித்துக் கொண்டால் உடல் முழுக்க குளிர்ச்சி பரவிவிடும்.

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நாவலின் ஓட்டத்திற்கு துணை புரிகின்றன.சொந்தங்களை விட எங்கிருந்தோ வரும் உறவு பிணைப்பு அனைவரின் வாழ்வையும் எண்ணிப் பார்க்க வைக்கிறது.ஒரு இடத்தில் குப்பண்ணாவை சரிசமமாக நடத்த விரும்பி..நீங்கள் காலம்.முழுக்க அடிமையாகவே இருந்து உழைக்கனுமா.. தங்களுக்கு ஒரு இடத்தை தருகிறேன்..உழைத்து முன்னுக்கு வாருங்கள் என்று சொல்லும் இடம் ஒதுக்கப்பட்ட சமூக மேலே உயர்த்தும் சமூக நீதி வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிலைகொள்ள நினைப்பது தான் வாழ்க்கை..ஆனால் எங்கோ ஒரு ராட்சச கை வந்து நம் புலம் பெயர வைக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் மனநிலையை சொல்லும் நாவல்

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 29 August 2025

ராகவன்


எழுத்தாளர்களுக்கு… சிறுகதை எழுதுவது எப்படி? – டிப்ஸ்

பா. ராகவன் 

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.

1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.

Thursday, 28 August 2025

159


#கற்கை_நன்றே_159

இன்புற்றிரு

இன்புற்றிருக்க முனை!

சுகம் சுலபம்

-ருத்ரன்

நமக்கு இருக்கும் மிகப்பெரிய தடையே நம் மனதுக்குள் நாம் வைத்திருக்கும் சில நம்பிக்கைகள் தான் என்கிறார் ருத்ரன் அவர்கள். மேலும் அவர் நம்பிக்கையும் உண்மையையும் பற்றி சொல்லும்போது.. உண்மைக்கு ஆதாரங்கள் தேவைப்படாது. நம்பிக்கைகளுக்கு தான் அவ்வப்போது ஆமாம் ஆமாம் என்று கூற வேண்டி இருக்கும். அவநம்பிக்கையும் சந்தேகத்தின் மேல் உள்ள நம்பிக்கை தான் என்கிறார்.

 நம்முள் நாம் உருவாக்கிக் கொண்டுள்ள நம்பிக்கையை பலவும் பிறரின் கணிப்பின் கருத்தின் அடிப்படையிலேயே உருவானவை. பல நேரங்களில் சரியா தவறா என்று யோசிக்காமலேயே நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைகள் தான் நம் வழியை அடைகின்றன.ஆகவே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கையை நாம் முதலில் அறிய வேண்டும்.

பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா?

நாய் இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், கொஞ்சுகிறார், என்னை கவனிப்பவர் ராஜா போன்றவர், இவரை நான் மகிழ்விக்க வாலாட்டுவேன், இவருக்காக காத்திருப்பேன், இவரோடு விளையாடுவேன்.

நாய்க்கு அன்பு கொடுக்க கொடுக்க, அது உயிரையே கொடுக்கும் தன் எஜமானருக்கு, சோர்ந்து போகும் அன்பில்லாவிடில். நாய் ஒரு Team player

பூனை இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், தூக்கி வைத்து கொஞ்சுகிறார், உணவளிக்கிறார், இவ்வளவு கவனம் கிடைக்கிறது என்றால் நான் ராஜா போன்றவன்.

பூனைக்கு அன்பு கிடைக்க கிடைக்க, அது தன்னைப்பற்றி மிகையான பிம்பம் வளர்த்துக்கொள்ளும். நீங்கள் சேவை செய்ய கடமைப்பட்டவர் என நினைக்கும். பூனை ஒரு Solitary Hunter.

மனிதர்களுள் நாய்குணம் உடையவரும் உண்டு, பூனை குணம் உடையவரும் உண்டு.

நாம் என்ன குணம் என்பதை நம்மை சார்ந்தோரை கேட்டு அறியலாம்.
பெரும்பாலும் பேய் குணம் என்று தான் சொல்வார்கள் எனவே நல்ல நண்பர்களை கேட்டு அறியவும். 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 27 August 2025

158


#கற்கை_நன்றே_158

மேற்பரப்பினைக் கண்டு
மெய் மறப்போர்க்கு
ஒரு கடல்
அதன் ஆழத்தால் ஆனது
என்பது தெரியாது

-மகுடேசுவரன்

பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் மென்மையான இடத்தை கடுமையானதாக கடினமானதாக மாற்றி விடுகிறார்கள் இதன் மூலம் மற்றவர்களுக்காக மனதில் தோன்றும் பதிவு உணர்வு இல்லாமல் அடைத்து விடுகிறார்கள். ஆனால் மனதில் இருக்கும் மென்மையான இடங்கள் சுவரில் இருக்கும் விரிசல்கள் போல அப்படியே நிலைபெற்று விடுகின்றன. அவை நமது உண்மையான இயல்பை நமக்கு சுட்டிக் காட்டும் படி எப்போதும் நமக்குள் இருக்கின்றன.பேராசிரியர் மாடசாமி அவர்கள் இது குறித்து எழுதிய மேற்கோள் கதை முற்றிலும் பொருந்துகிறது

மாசாய்' என்பவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகள். உடல்வலிமை மிக்கவர்கள். போர் வீரர்களாக இருந்தவர்கள். ஒரு சமயம் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இன்று வலிமை ஒடுங்கி, உடல் உழைப்பாளிகளாய், கென்யாவிலும் டான்சானியாவிலும் வசிக்கின்றனர். மாசாய் மக்கள் சொன்ன நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று இது:

ஒரு கம்பளிப் பூச்சி, மெல்ல மெல்ல ஊர்ந்து முயல் ஒன்றின் வீட்டுக்குள் நுழைந்தது. பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டது.

முயல் வீடு திரும்பிய போது, யாரோ வீட்டுக்குள் நுழைந்த தடம் தெரிந்தது. யாராய் இருக்கும்? யார் என் வீட்டுக்குள்? என்று கேட்டது முயல். கம்பளிப் பூச்சி சுதாரித்தது.தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே! எந்த விலங்கும் ஒரு மிதி மிதித்தால் கம்பளிப் பூச்சி காலி! சரி! என்ன செய்தது கம்பளிப் பூச்சி? மறைவிடத்தில் இருந்து கம்பளிப் பூச்சி பேசியது. பெருங் குரலில் பேசியது." நானா? நான்தான் காண்டாமிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்!"

கர்ண கடூரமான குரல். நம்பத்தான் வேண்டும். முயல் பயந்து ஓடியது. ஓடிப் போய் ஒரு குள்ளநரியைக் கூட்டி வந்தது. குள்ள நரிக்கும் அதே பதில்! அதே குரல்! நரியும் அடித்துப் பிடித்து ஓடியது.

அடுத்து ஒரு சிறுத்தை... அடுத்து ஒரு யானை... "யார் என் நண்பனின் வீட்டில்?"

கம்பளிப் பூச்சியிடம் இருந்து அதே பதில்! அதே குரல்! "நான்தான் காண்டா மிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்."

முயலுக்குத் துணையாக நிற்க ஒரு விலங்கும் இல்லை. பெரிய பெரிய விலங்குகள் எல்லாம் ஓட்டம் பிடித்தன.

கடைசியாக ஒரு தவளை வந்தது. அதற்கு மரண பயம் இல்லை. மரணம் எந்த நேரமும் வரக் கூடியதுதான்!

குரல் வந்த திசை நோக்கி தவளை தத்தித் தத்தி வந்தது. இன்னும் சில நொடிகளில் கம்பளிப் பூச்சியைக் கண்டு பிடித்து விடும்.

வெளியேற வேண்டிய நேரம் வந்தது. பதுங்கிய இடத்தில்  இருந்து கம்பளிப் பூச்சி வெளியேறியது. ஊர்ந்து ஊர்ந்து குடிசையை விட்டு வெளியேறியது.

குடிசைக்கு வெளியே விலங்குகளின் கூட்டம். கம்பளிப் பூச்சியைப் பார்த்தன. சத்தமிட்டுச் சிரித்தன. அட! இதுதானா நம்மைப் பயமுறுத்தியது?...அவைகள் சிரித்துக் கொண்டிருந்தபோதே, கம்பளிப் பூச்சி மெல்ல மெல்ல ஊர்ந்து மறைந்தது.

சரி! கதை என்ன சொல்கிறது?
பெருங்குரல் எடுத்துப் பேசினால், பிறர் கவனிக்கிறார்கள்; நம்புகிறார்கள்; பயப்படுகிறார்கள். மெலிந்த குரல் என்றால் சட்டை செய்ய மாட்டார்கள்.இன்று அமைதியாய் இருந்தால் விவரம் இல்லாதவன் என்கிறார்கள். பிழைக்கத் தெரிந்தவன் என் வசைபாடுகிறார்கள்.இது தவறான அணுகுமுறை

மென்மையான குரல் உடையவர்களையும் மதிப்போம். அவர்களின் குரலையும் கேட்போம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 24 August 2025

நீண்ட தூரம் நிற்காமல் கார் ஓட்ட கூடாது, என்ன அவசரம் என்றாலும், எத்தனை அனுபவம் உள்ள டிரைவர் ஒட்டினாலும் நெடுஞ்சாலையில் சாலையை நேராக பார்த்தபடி பயணிப்பது கவனத்தை சிதறடிக்கும் அல்லது உறக்கநிலைக்கு இட்டுச் செல்லும். இது "ஹைவே ஹிப்னோசிஸ்" எனப்படும் நிலை, இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை ஓய்வு எடுத்து, காரை நிறுத்தி, முகம் கழுவுங்கள், சற்று காலார நடவுங்கள் அல்லது காப்பி குடியுங்கள் என்பது அமெரிக்காவில் கொடுக்கபடும் பாதுகாப்பு நடைமுறை-பகிர்வு

வீடில்லா மனிதன்வாழ்ந்துவிடக்கூடும்மனிதனில்லா வீடுதான்ஏனோ மரித்துவிடுகிறது-ஷான்

157

#கற்கை_நன்றே_157

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும் ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

-பிராவர்ப்ஸ்

ஆங்கிலத்தில் கேட்கும் செய்கைக்கு இரண்டு சொற்கள் உண்டு.

Hearing-கேட்பது
Listening-புரிதலுடனும் கவனமுடனும் கேட்பது

புரிதலுடன் கேட்பதே கற்றலின் முதல் படி.அதனால் தான் Hear the news. Listen the lesson என்பார்கள். தற்காலத்தில் புரியும் வகையில் சொற்களை பிரயோகப்படுத்துவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். புரிதலின் போதாமை குறைவும் ஒரு காரணம். ஆனாலும் சொல்பவர்கள் எதிரில் இருப்பவர் புரிந்து கொள்கின்றனரா என நினைத்து பேசுவது அவசியம். கேட்பவர்களும் புரியலனு உடனே சொல்லாமல்..சொல்ல  வரும் கருத்துக்களை யூகித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.

இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.

இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?

தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.

கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.

தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.

இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.

இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன

*புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.
*அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.
இரண்டில்.ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

100


#Reading_Marathon2025
#25RM055

Book No:100/100+
Pages:-250

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும்
குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
-ராபின் ஷர்மா

வாழ்க்கையின் மிக சோகமான பகுதி இறப்பதில் இல்லை. மாறாக உண்மையாக வாழ முடியாமல் போவதில் தான் உள்ளது. டால்ஸ்டாய் அவர்கள் கூறியது போல "நாம் எப்பொழுது பிறருக்காக வாழுகிறோமோ அப்பொழுதுதான் நாம் நமக்காக வாழ்கிறோம்". ஏனெனில் பிறருக்காக நன்மை செய்வதில் நமக்கும் அதில் ஒரு நன்மை ஏற்படுகிறது நேர்மறை எண்ணங்களின் உற்பத்தி நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
நம் வாழ்க்கையை உன்னதமாக நம்மால் மட்டுமே முடியும். 

நான் மீண்டும் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் உன்னிடம் அதிகமாக ஓய்வெடுத்துக் கொள்வேன். இந்த பயணத்தின் போது உண்மை காட்டிலும் அதிக அளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வேன். அதிக மலைகளின் மீது ஏறுவேன். எனக்கான முழுமையான முழு நிறைவான தருணங்கள் கிடைப்பதற்கு பாடுபடுவேன்.நான் மீண்டும் வாழ்வதற்கு நேரம் கிடைத்தால் இவற்றையெல்லாம் அதிகமாகிக் கொள்வேன். வேறு எதனையும் விரும்ப மாட்டேன். ஒன்றன்பின் ஒன்றாக நிறைய பூக்களை பறித்துக் கொள்வேன் என்று நாடின் ஸ்டெயர் 89 ஆவது வயதில் கூறுவதை நாம்  எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் தொலைத்து விட்ட சந்தோசங்கள் எளிமையான வாழ்க்கை முறைகள் போன்றவை நமக்கு அதிக மன அழுத்தம் உள்ள வாழ்க்கையே பரிசாக கொடுக்கிறது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரின் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும்.. கொரோனா தாக்கிய நோயாளி சாவின் இறுதி நொடியை அனுபவிக்கும் போது அவருடைய எண்ண ஓட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை குறித்த நேரடி அனுபவத்தை எடுத்துக்காட்டின் மூலம் நமக்கு தந்துள்ளார். அப்போதுதான் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பரிசு என்பதை உணர முடிகிறது.

வாழ்க்கையிலான தலைமை பண்பு என்பது குடும்பத்திலான தலைமை பண்பில் இருந்து துவங்குகிறது. எனது வாழ்வின் நிரந்தர அர்த்தம் எனது வேலையில் எனக்கு கிடைக்கும் வெற்றியில் இல்லை. மாறாக அது என் குழந்தைகளின் நற்பண்புகளை உருவாக்கும் பண்பில் உள்ளது என்பதுதான் உண்மை. குழந்தைகளின் சிறுவயதில் தென்படும் அறிகுறிகளின் படியே அவர்கள் வளர்ந்தால் மேதைகளை தவிர வேறு எவரும் நம்மிடையே இருக்க இயலாது என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார். ஏனெனில் அவர்களின் இயல்பிலிருந்து மடைமாற்றி நாம் நினைக்கும் மனிதர்களாக மாற்றும்போது தான் அவர்கள் வழி தவறி விடுகின்றனர் என்பதனை கூற வருகிறார்.

பொதுவாகவே வீட்டில் உள்ள உறவுகளுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த அன்பளிப்பு என்னவென்றால் அது நாம் அவர்களுக்கு ஒதுக்கும் நேரம் தான் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் தலைமை பண்பு என்பது வீட்டில் இருந்து தான் துவங்குகிறது. பலரும் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால் எந்தவித நோக்கமும் விருப்பமும் இல்லாமல் திட்டமிடாமல் எதெச்சையாக வாழ்வது போல் வாழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் சிறந்ததாகிவிடும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது போல் இல்லை. ஒரே மாதிரியான செயல்களை தினமும் செய்துவிட்டு வித்தியாசமான பலன்களை மட்டும் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று எடுத்துக்காட்டுடன் கூறுகிறார்.

குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தவும் குடும்பத்திற்கான பண்புகளை வளர்க்க உதவும் நடைமுறைகளை ஆழமாய் சுட்டிக்காட்டுகிறது
வாழ்க்கையில் முக்கியமானவற்றை உணர்த்தும் கதை, பொதுவாக பணம் மற்றும் வேலை மேல் அதிக கவனம் செலுத்தும் வாழ்க்கையின் முடிவில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்காமை குறித்து கவலை உணர்வை விவரிக்கிறது.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் நம்பிக்கையும் கொண்ட உறவை வளர்ப்பது. அவர்கள் உணர்வுகளை, கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்வது முக்கியம் என்கிறார்.

நிறைய மனிதர்கள் யோசிப்பதில் காலத்தை கழிக்கின்றனர். ஆனால் உணர்வதில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க தயாராய் இல்லை .ஏனென்றால் அந்த உள்ளுணர்வு தான் ஞானத்துடன் தொடர்பு கொள்ள தொடங்கும். ஆழமாக சிந்திக்கும். வாழ்க்கையில் இப்படி அளவு கடந்த அர்ப்பணிப்பை நமக்குள் ஏற்படுத்தும். அடுத்த எதிர்கால திட்டத்திற்கான அமைதியும் இன்பமும் இன்றைய நம்முடைய பக்குவத்தில் தான் அடங்கி இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம் வரும். அத்தருணத்திற்காகவே அம்மனிதன் பிறந்துள்ளான். அந்த அருமையான சந்தர்ப்பத்தை அவன் கையகப்படுத்தியபின் அவனது வாழ்க்கையின் இலட்சியநோக்கம் நிறைவேறுகிறது. அந்த இலட்சிய நோக்கத்திற்காகத்தான் அவன் தனிப்பட்ட தன்மையுடன் தேர்ச்சியுறுவான். அந்தத் தருணத்தில் அவன் தன் மேன்மையைக் காண்பான். அதுதான் அவனுடைய மிக அருமையான சமயம் என்பார் 
வின்ஸ்டன் சர்ச்சில்

*மற்றவர்களை விட சிறப்பாக இருப்பது என்பது மேன்மை இல்லை. உனது முந்தைய குணத்தை விட இப்பொழுது சிறப்பாக இருக்கிறாய் என்பது தான் உண்மையான மேன்மை இருக்கிறது.

*உனது சூழல் உனது எண்ணங்களை உருவகப்படுத்துகின்றன

*எது உணர்வுகளாக்கப் படுகின்றன லோ அவைகள் உண்மையாக்கப்படுகின்றன

*யாராவது உனக்கு கை கொடுக்க வேண்டும் என்றால் நீ முதலில் அவர்கள் இதயத்தை தொட வேண்டும்
*நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது உங்கள் தலைமுறைகளை வளர்க்கிறீர்கள்.

*குழந்தைகளின் பலங்களை கவனியுங்கள். அவர்களின் பலவீனங்களை அல்ல

இந்த புத்தகத்தில் குடும்பத் தலைவர்களின் ஆளுமை பற்றி சொல்லும் போது ஒவ்வொருவரின் குணங்களைப் பற்றியும், எவ்வாறெல்லாம் திட்டமிட்டால் சாதனை செய்ய முடியும் என்பதனை குடும்பங்களில் இருந்து தொழில் நிறுவனங்கள் வரை நாம் புரிந்து கொள்ளக்கூடிய உளவியல் பண்புகளை இந்த புத்தகம் பேசுகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 23 August 2025

98


#Reading_Marathon2025
#25RM055

Book No:98/100+
Pages:-288

மனமென்னும் குரங்கை வெல்லுங்கள்
-ஆனந்த் பாட்கர்

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" என்பது Masrer the mind monkey என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

மனம் ஒரு குரங்கு என்பார்கள் ஏனெனில் மனம் ஒரு நிலையில் இருக்காது. அந்த மனதை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் மிகப்பெரிய ஆற்றலை பெறலாம் என்பதுதான் ஒவ்வொரு சுயமுன்னேற்ற நூலிலும்  குறிக்கோளாகவும் அடிநாதமாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தகம் ஐந்து பாகங்களையும் 18 அத்தியாயங்களையும் உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொரு மனிதர்களின் மனநிலை மற்றும் மனப்பகுதியில் உள்ள போராட்டங்களை ஆராயும் ஒரு புத்தகம். 

முதல் அத்தியாயத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் மறுபக்கங்களை அலசுகிறது. அதனோடு சமகாலத்தில் வெற்றி பெற்ற ஆளுமைகளின் பின்புலன் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் கூறுகிறது.குரங்கை போன்ற மன அழுத்தங்களைத் தாண்டி நீக்குவதற்கான கலையை விவரிக்கிறது. 

ஒரு விமான நிலையத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு அறிவிப்பை கேட்கிறீர்கள்.அதுதான் ஒரு 'விஷயம்' எந்த 'செயலும்' அந்த சந்தர்ப்பத்தில் விசயத்துக்கு நாம் அளிக்கும் பதில் ஆகும். ஒவ்வொரு விஷயங்களுக்கு நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை தீர்மானிப்பது தான் 'கோட்பாடு'. நாம் கற்றவைகளை பயன்படுத்தி அறிவை பயன்படுத்தி அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தான் வெற்றி பெறுகின்றன என்பதனை தக்க எடுத்துக்காட்டுக்குடன் கூறுகிறார்.

 கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்திற்கு செல்லும் போது ஒரு அனுபவத்தை பகிர்கிறார். முதலில் சந்திக்கும் கொத்தனாரிடம் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டபோது? என்னை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள். நான் ஒரு தினக்கூலி ஒரு நாளைக்கு 300 கற்கள் அடுக்கினால் தான் எனக்கு சாப்பாடு என்கிறார். இரண்டாமவர் ஏதோ ஒரு பணி திட்டம் நடக்கிறது. நான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறேன் என்று கூறுகிறார். மூன்றாமவரிடம் இதே கேள்வியை கேட்டபோது, அவர் மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் நவீன தாஜ்மஹாலை கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு இந்த ஊருக்கே பெருமை என்று கூறி ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மிகவும் உற்சாகத்துடனும் புத்திசாலித்தனம் செயல்படும் அவரைப் பார்த்து வியந்து போகிறார். குழு உறுப்பினர்கள் நிறுவனத்தின் நோக்கத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் விளையாட்டின் நிகழ்வை ஒன்றை பற்றி குறிப்பிடும் போது கவாஸ்கர் 29 வது சதம் அடித்து பிராட்மனின் சாதனையை சமன் செய்யும் நிகழ்வில் கவாஸ்கர் 97 ரன்கள் இருந்தார். அப்போது கவர் டிரைவ் ஒன்று அடித்தார். ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார்.ஆனால் பந்து பவுண்டரி சென்றது. எதிரில் இருந்த வெங்சர்க்கார் அவரை பாராட்டினார். ஆனால் கவாஸ்கரோ எதற்கு என்னை பாராட்டுகிறார் என்று குழப்பமாக இருந்தார். அப்போது அவர் திரும்பி ஸ்கோர் போர்டை பார்த்த போது தான் சதம் அடித்ததை நினைவுக்கு வந்தது... தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தியதால் இந்த சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது என்கிறார்.

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" புத்தகம் மன அழுத்தங்களையும் மனது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அலசியும், அவற்றைக் கையாளுவதற்கான உத்திகள் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் வழிமுறைகளை வழங்கும் ஒரு பயனுள்ள கையேடாகும். மனதை புரிந்து கொள்வதும் மன அமைதியைப் பெறுவதற்கான நடைமுறை பரிந்துரைகளையும் மன அழுத்தத்தை கடக்க உதவும் உள்ளார்ந்த சிந்தனைகளையும் ஈர்க்கக்கூடிய மொழியில் சமர்ப்பித்துள்ளார். இது மனநிலையைப் புதுப்பித்து நலமாக வைத்திருக்கும் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு