Friday, 3 April 2026

ஜா-36


வாழ்க்கைக்கு ஹைக்கூ 36

"இந்த பனிக் காலை;
 எனக்குப் பிடிக்காத அந்த கருங்காகம். 
ஆனாலும் கூட பேரழகு!" 

மட்சுவோ பாஷோ (Matsuo Basho) எழுதிய இந்தக் கவிதை முரண்களில் இருக்கும் அழகை ரசிக்கச் சொல்கிறது.

சுற்றிலும் வெண்மையான பனி படர்ந்த ஒரு காலை பொழுது. இங்கு பனி என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளம். காகம் பொதுவாக அதன் நிறத்திற்காகவும், குரலுக்காகவும் பலரால் விரும்பப்படாத ஒரு பறவை.

ஆனாலும் அந்த வெண்மையான பனிப் பின்னணியில், காகத்தின் கறுப்பு நிறம் ஒரு அற்புதமான ஓவியம் போலத் தெரிகிறது. வெறுப்பைத் தாண்டி, அந்த ஒரு கணத்தில் அதன் அழகை கவிஞர் உணர்கிறார்.

வாழ்க்கை என்பது நாம் எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல;  நாம் எதை, எந்த சூழலில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தும் அமையும்.

நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் கோணத்தை மாற்றினால் உலகம் மாறும். நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், நம்முடைய முன்முடிவுகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், நாம் வெறுக்கும் ஒன்றிலும் ஒரு அழகு இருக்கும். அலுவலகத்தில் ஒரு சக ஊழியரை நமக்கு எதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு இக்கட்டான சூழலில் அவர் வேலையை மிக நேர்த்தியாக முடிப்பதைக் காணும்போது, "அவர் கோபக்காரராக இருந்தாலும், அவர் திறமைசாலி" என்று நீங்கள் உணர்வது இந்த ஹைக்கூ போன்ற ஒரு தருணமே.

முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் அதனுள்ளிருந்து வெளிப்படும் பேருண்மையை அறிவதும் வாழ்வை இனிதாக்கும். உலகம் என்பது கறுப்பும் வெளுப்பும் கலந்தது. பனி (வெண்மை) மட்டுமே இருந்தால் அது சலிப்பைத் தரும். அந்த வெண்மைக்கு இடையில் காகத்தின் கறுப்புதான் ஒரு கவித்துவமான அழகைத் தருகிறது. அதேபோல், வாழ்வில் கஷ்டங்களும், நமக்கு பிடிக்காத விஷயங்களும் இருந்தால்தான் மகிழ்ச்சியின் மதிப்பு தெரியும்.

இவரது அனைத்து ஹைக்கூ கவிதைகளிலும் வெளிப்படும் "நிகழ்காலத்தில் வாழ்தல்" இதிலும் வெளிப்படுகிறது. பாஷோ, காகத்தின் மீதுள்ள தனது பழைய வெறுப்பை மறந்துவிட்டு, அந்தச் சிறு நொடியில் அதன் அழகை ரசிக்கிறார். கடந்த கால கசப்புகளைச் சுமக்காமல், நிகழ்காலத்தில் இருக்கும் அழகை ரசிப்பதே நிறைவான வாழ்வு என்கிறார்.

உண்மையில், மகிழ்வான வாழ்வு என்பது எல்லாவற்றையும் நமக்குப் பிடித்தது போல மாற்றுவதில் இல்லை; நமக்கு பிடிக்காதவற்றிலும் இருக்கும் நன்மையை அல்லது அழகைக் கண்டறிவதில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment