Friday, 10 April 2026

கமகக்கண்ணன்


ஏன் பற்று வேண்டாம்?

பற்று என்பது ஒருவிதமான ஆற்றல் இழப்பு. எதையோ பற்றிக்கொண்டு இருக்க ஒரு உயிருக்கு நீடித்த ஆற்றல் தேவை. பாக்டீரியாவைப் பற்றிக் கொண்டிருக்கும் எதிர்ப்புரதம் கூட வீணாக ஆற்றலைச் செலவழிக்கிறது. 

ஆனால் அந்த ஆற்றல் சற்றும் பயனின்றி விரயமாகிறது. சிந்திக்க. 

எழுத்தாளன் ஏன் ரசிக மனநிலையில் இருக்கக் கூடாது என்பதற்கு வலுவான காரணம் உண்டு. 

அவன் பல்வேறு உணர்ச்சி நிலைகளில் கற்பனை செய்ய வேண்டியவன். கதை மாந்தர்களின் நவரசங்களையும் கற்பனையில் விளைந்த  கதைக்கள நுட்பங்களையும் பின்புலத்தில் முதுகெலும்பாக நிற்கும் தகவல்களின் ஒருங்கிணைவையும் சமநிலையில் வைத்து உணர்ச்சிகளை அணுக வேண்டியவன். அவனுடைய பெரும் ஆற்றல் அப்படியே செலவிடப்பட வேண்டும். அதுவே எழுத்துக்காரனின் தொழில் அறம்.

ஆனால் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலுமாகவே இருப்பவனுக்கு ஒருபோதும் நல்ல இலக்கியம் கைகூடாது. நல்ல இலக்கியத்தையும் அதை எழுதியவரையும் மனம் திறந்து பாராட்டலாம். ஆனால் தொழவோ துதிபாடவோ தேவையில்லை என்பதைப் பட்டறிவில் இருந்தே துல்லியமாக அறிவிக்கிறேன்.  

இல்லறத்தில் ஈடுபடும் ஒருவர் பணத்தின் மீது அதீதப் பற்று கொண்டால் குடும்பத்தின் அநேக இனிமைகளை இழக்க நேரிடும். அதீத தேசப்பற்று வேற்று தேசத்தானைப் பகைமை பாராட்டச் சொல்லும். அதில் ஏகப்பட்ட இழப்புகள் உள்ளன. இப்படித்தான் பற்று என்பது ஒருவனது வாய்ப்புகளையும் அவன் மேம்படுவதற்கான சாத்தியங்களையும் குறைக்கிறது. 

பற்றின்மையோ விடுதலையைத் தருவதன் மூலம் ஒருவனது உள்ளுறங்கும் நிலையாற்றலை உசுப்புகிறது. அதுவே உய்வு. அதுவே ஆன்மீக உச்சம். அதுவே ஞானக் கண்டடைவு. அதற்குப் பலன் உண்டு. பற்றின்மையின் நிலையாற்றல் அவனுக்கும் உலகுக்கும் அரியவற்றை ஆற்றும். அன்பின் இயக்கத்தால் அண்டை அயலாரையும் தேற்றும்.

No comments:

Post a Comment