#Reading_Marathon2026
#26RM009
Book No:22/150+
Pages:-320
இரண்டு கிழவர்கள்
-லியோ டால்ஸ்டாய்
லியோ டால்ஸ்டாய் என்றதும் நினைவுக்கு வருவது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில துணைப்பாடத்தில் வந்த கதை தான் எளிய மக்களுக்கு உதவி செய்வது தான் கடவுளை அடையும் உண்மையான வழி என்பதனை அழுத்தமாய் அந்த கதை சொல்லி இருக்கும் அந்த கதையின் நினைவோடு தான் இந்த புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.முதலில் இப்புத்தக மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும் கதைக்கும் மனதுக்குள் நெருக்கமாகவும் இருந்தது.
இரண்டு கிழவர்கள் கதையில் எஃபீம் (Efim) மற்றும் எலீஷா (Elisha) என்ற இரண்டு முதியவர்கள்,
எபிம் தீவிரமான உறுதியான மனம் கொண்டவர்.கொஞ்சம் பணக்காரர். எலிசா என்பவர் தேன் வளர்ப்பு செய்து பிழைத்துக் கொண்டிருப்பவர். இருவருக்குமே இயேசு பிறந்த ஊரான ஜெருசலேமுக்கு இறப்பதற்கு முன் செல்ல வேண்டும் என்பது நோக்கமாய் இருந்தது. அந்த நோக்கத்தை தூண்டி விட்டவர் எலிசா. நாம் பணம் சேர்த்துக் கொண்டு ஜெருசலத்தை நோக்கி புறப்படுவோம் என்று ஆறு மாத காலம் திட்டம் தீட்டுகின்றனர்.
பயணம் செய்யும்போது எலிசா பின் தங்கி விடுகிறார். ஒரு குடிசையில் அவர் சென்று பார்த்த இடம் அவருக்கு வியப்பாக இருந்தது. அங்கேயே தங்கிவிட்டார்.அதன் பின் என்ன நடந்தது எபிம் மட்டும் ஜெருசலம் செல்கிறார். அங்கு சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் தான் இந்த கதையின் மையம். ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் பிறரின் அன்பை சம்பாதிப்பதும் பிறரிடம் அன்பை செலுத்துவதும் தான் உண்மையானது என்னும் பேருண்மை இந்த கதையின் மூலம் அறிய முடிகிறது.
மனிதர்களுக்கு தேவை அறிவுரைகள் இல்லை. தெளிவுரைகள். எல்லோர் சூழ்நிலையும் ஒன்றல்ல, எல்லோர் பார்வைகளும் ஒன்றல்ல...ஒவ்வொருவர் திறனும் ஒன்றல்ல.... அப்படி இருக்கையில் நாம் சொல்லும் எந்த அறிவுரையும் கண்டிப்பாக மற்றவருக்கு ஒரே போன்ற விளைவை ஏற்படுத்தாது....நாம் நல்லது என நினைத்து சொல்லும் அறிவுரை அவர்கள் சூழ்நிலை பொருத்து நன்மையும் விளைவிக்கலாம், தீமையும் விளைவிக்கலாம்.
என லதா அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருப்பார். இந்த கதையில் வரும் இவானும் தனக்கு தெரியாத ஏதோ ஒன்று மற்றவருக்கு தெரிந்திருக்கிறது. அதை அறிந்திருந்ததை தானும் அறிந்திருந்தால் நிச்சயம் அவரைப் பற்றி புரிந்து கொண்டிருப்பேன். நாம் நம்முடைய மனதில் நினைப்பதைத்தான் நாம் உண்மை என்று நினைக்கிறோம். மற்றவர்களின் பார்வையில் அல்லது அவர்கள் உண்மையில் நடந்ததை நாமும் தெரிந்து கொள்ளும்போது நம்முடைய முடிவுகளை நாம் மாற்றிக் கொள்கிறோம்.
உன் அயலானையும் நேசி எனும் கருத்தை முன் வைத்து இழந்த வாய்ப்பு கதை அமைக்கப்பட்டுள்ளது. இவான் குடும்பமும்,கேவ்ரில் குடும்பமும்..பூவே உனக்காக பாணியில் இரு குடும்பத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவானின் வயதான தந்தை இதை எல்லாம் பார்த்து மகிழ்கின்றார். ஒரு முறை முட்டை அருகில் உள்ள வீட்டில் வைத்ததை பேசப்போய்தீராப் பகையில் முடிகிறது. இறுதியில் எவ்வாறு இணைந்தார்கள் என்பது தான் கதை.தொய்வின்றி சுவாரஸ்யமாய் செல்லும்.கதை மனித மனம் எவ்வாறு எல்லாம் சுயநலமாய் சிந்திக்கிறது என்பதை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். கதையில் வரும் முதியவரின் கதாபாத்திரம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கதையில் முக்கியமான கட்டத்தில் அவர் சொல்லும் அறிவுரை
/நீ உனக்குதான் எல்லாம் தெரியுமென்றும் எனக்கு எதுவும் தெரியாது எனவும் நினைக்கிறாய். இல்லை! நீ இன்னும் குழந்தைதான். ஒரு பைத்தியக்காரத்தனம் உன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியாமல் உன் கண்கள் குருடாகி விட்டன. மற்றவர்களின் பாவங்கள் உன் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் உன்னுடைய பாவங்களை நீ உன் முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டுள்ளாய். கேவ்ரியல் செய்தது தவறுதான் என்பதை நான் அறிவேன். ஆனால் அவன் ஒருவன் மட்டுமே தவறு செய்தான் எனில் இந்த உலகத்தில் எந்தத் தீமையும் இருக்காது. இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தீயவையும் ஒரு மனிதன் செய்தவை என நீ கருதுகிறாயா? இல்லை! இந்த உலகில் தீமை செய்வதற்கு இரண்டு மனிதர்கள் தேவை. கேவ்ரியலிடம் இருக்கும் கெட்டதை மட்டுமே நீ பார்க்கிறாய். ஆனால் உன்னிடம் இருக்கும் கெட்டதை உன்னுடைய கண்கள் மறைத்துவிட்டன. அவன் ஒருவன் மட்டுமே கெட்டவனாக இருந்து நீ நல்லவனாக இருந்திருந்தால் எந்தத் தவறும் நடந்திருக்காது."/ என்ற இடம் மிக அற்புதமானது
ஒரு ஒரு காபி கடையில் நடக்கும் கடவுள் பற்றிய விவாதம் தான் சூரத்தின் காபி ஹவுஸ் கதையின் மையக்கரு. ஒவ்வொருவரும் தங்கள் கடவுள் குறித்த மேன்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். அது ஒரு தத்துவ விவாதமாகவும் மாறி செல்கிறது. தத்துவார்த்தங்களின் இறுதியில் அனைவரும் மௌனமாகி யாருடைய நம்பிக்கை சிறந்தது என்பதை மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டனர் என்று கதை முடிகிறது. பணம் படைத்தவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்ற எண்ணங்களில் உள்ள பொய்மை குறித்த கருத்தினை 'இலியாஸ்' கதை விளக்குகிறது.
டால்ஸ்டாயின் கதைகள் அனைத்துமே அன்பினை மையமாகக் கொண்டவை. அந்த அன்பினை பற்றி குறிப்பிடும் போது, ஏதோ ஒரு நீதிக் கதைகள் போல் இறுதியில் இல்லாமல் வாழ்வியலில் இருந்து மனிதர்கள் துன்பப்படும் நேரத்தில் கூட அன்பினை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனை தான் ஒவ்வொரு கதைகளிலும் சொல்லி இருப்பார்.
இந்த தொகுப்பில் இன்னும் மற்றொரு முக்கிய கதையாக பார்ப்பது 'கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்' எனும் கதைதான்.விளாடிமிர் நகரத்தில் வாழும் இவான் எனும் இளமையான வியாபாரி.. தன்னுடைய வியாபாரத்துக்கு புறப்படும் போது மனைவி ஒரு கெட்ட கணவனை காண்கிறாள்.அதாவது கணவன் வயதான தோற்றத்தில் வந்து தனது அங்கியை கழட்டி சிரிப்பது போல ஒரு கெட்ட கனவு வருகிறது. இதனை தன் கணவரிடமும் பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் கணவன் அதனை பற்றி சிறிதும் கவலையில்லாமல் வியாபாரத்துக்கு கிளம்புகிறார். அப்போது ஒரு தங்கும் விடுதியில் ஒரு கொலை நடைபெறுகிறது.அந்தப் பழி இவர் மீது விழுகிறது.அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை. மனைவியின் கனவு பலித்ததா உண்மையான குற்றவாளியை இவான் தேடி கண்டுபிடித்தாரா? அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்பதுதான் இந்த கதையின் கரு.
டால்ஸ்டாயின் கதைகள் பொதுவாக மனித வாழ்க்கையின் ஒழுக்கம், ஆன்மீகம், சமூக அநீதி, மற்றும் உள்ளார்ந்த போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அவர் வெறும் நிகழ்ச்சிகளைச் சொல்வதில்லை; மனித மனத்தின் மாற்றத்தையும் வாழ்வின் நெறியையும் கதைகளில் அமைக்கிறார். மனிதன் தன் எண்ணங்களை எவ்வாறு எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மனிதநேயம் தான் மனிதனின் மகத்தான கொடை என்பதனையும் தன் எழுத்துக்களின் வழியே ஒவ்வொரு கதைகளையும் அதனை அடிப்படையாகக் கொண்டு அமைத்து இருப்பார். இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போதும் மனிதனின் அன்பும் மனிதநேயமும் பெருகும் என்பது உறுதி
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment