சிறிய பள்ளிகளே சிறப்பானவை...
சிறிய பள்ளிகள் முக்கியமானவை; நம்பிக்கைக்குரியவை. அங்குதான் உறவுகள் சாத்தியம்; குழந்தைகளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சனைகளுக்குத் தீர்வு சாத்தியம்.
பெரும் பள்ளிகளின் பெருங்கூட்டத்தினிடையே குழந்தைகளின் தனித்துவங்கள் தொலைந்து போகின்றன. கூட்டத்துக்குள் ஒரு தனிமை உண்டாகிறது. பிடிமானமின்மை நேர்கிறது. பெயரற்றுப்போகும் பரிதாபம் நிகழ்கிறது.
பெரிய பள்ளி அனுபவம் - நெரிசலான ஒரு பெரிய கடைவீதியில் நடந்துபோகும் அனுபவம்தான். பிரமிப்பு இருக்கும்; நெருக்கம் இருக்காது.
சிறிய பள்ளிகளின் சிறிய வகுப்பறைகளில்தான் ஒவ்வொரு குழந்தையிடத்தும் மின்னும் நட்சத்திரங்களைக் காண முடியும்.
வகுப்பறையில் சிரிக்கிற முகங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கின்றன. வாடிய முகங்கள்தாம் பல விதமாக இருக்கின்றன. ஒவ்வொரு வருத்தமும் ஒவ்வொரு விதம் மாணவர்கள் கும்பல் அல்ல; வகுப்பறை - ஒரே முகம் அல்ல.
கலகலப்பான தருணங்களிலும் ஒட்டாமல் உட்கார்ந்திருக்கும் மாணவர் சிலரை என் வகுப்பறையில் பார்த்திருக்கிறேன். நெருங்கிப் போனால்- குடும்பம், சாதி, வறுமை என ஏதோ ஒரு சுமையின் பாரத்தோடு அவர்கள் வகுப்பில் இருப்பார்கள்.
அவர்கள்தான் பாடத்துக்கு வெளியே ஒரு சமூகம் இருக்கிறது என்று ஆசிரியர்களுக்கு உணர்த்துகிறார்கள். வாடிய முகம் ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் போல! கண்களைத் திறக்கின்றன... ஆசிரியர்களுக்கு வாயா முக்கியம்? கண்கள் அல்லவா முக்கியம்!
-பேராசிரியர் ச.மாடசாமி, கல்வியாளர்.
No comments:
Post a Comment