Sunday, 4 January 2026

book-3


#Reading_Marathon2026

#25RM009

Book No:3/150+

Pages:-416

நான் ப்ரம்மம்

-ஸ்ரீநிசர்கதத்த மஹராஜ்

ஆன்மிகவாதிகளை பின்பற்றுவதை விட அவர்கள் கூறும் கருத்துக்களை பின்ப்ற்றுவது உண்மையான ஆன்மிகமாக கருதுகிறேன். ஏனெனில் அக்கருத்துகள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்

உளவியலாளர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவரும் வலியுறுத்துவது தன்னை அறிதல் தான்.நான் என்பதை ஒருவர் எவ்வாறு கையாளலாம் ஒன்றும் அறியாதவராக, ஆர்வமிக்கவராக, உறக்கத்திலிருந்து விழிக்கும் போது நான் எனும் விழிப்புணர்வு பெற்றவராக,தோன்றும். நாம் என்னவாக இல்லை என அறிந்தால் தான் நான் யார் என்பது தெரியவரும்.எதனையும் அடையாமல் வாய்ப்பு கொடுக்கப்படும் போது நீ வெளிப்படுவாய் பிறர் மீது அன்பு செய்வாய் என ஆரம்பத்தில்நான் எனும் உணர்வு குறித்து விளக்கமளிக்கிறார்.

ராமாயணத்தில் ஒரு காட்சியை விளக்கும் போது கம்பர்.. தயிர் மத்துகடைவது போல் துன்பம் தான் என்றும் நிலையாக மனிதவாழ்வில் உள்ளது. அது கடையும் நேரத்தை தவிர கிடைக்கும் சொற்ப நேரங்கள் தான் இன்பம் உள்ளது என்பார். மனநிலைகளின் ஓட்டம் முடிவற்றது, அர்த்தம் மிகுந்தது, வலி மிகுந்தது ஆகும். ஏனெனில் வலி ஒரு நிலையான காரணி. இரு வலி மிகுந்த நிலைகளுக்கு இடையே ஒரு இடைவெளியை நாம் இன்பம் என்று சொல்கிறோம் என அந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான ஒரு வரியை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மனம் இயங்கும் வரை காரண காரிய தன்மைகளை அலசிக்கொண்டே இருக்கிறது. ஒன்றுதான் மற்றொன்று காரணம் என்று ஓயாமல் மனம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஆசை படாதே என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை.ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நீ பாடுபட வேண்டும். அதற்கான சக்தியை செலவிட வேண்டும். அதன் பின்பு அதன் பலன்களுக்காக காத்திரு என்ற நடைமுறை எதார்த்தத்தை புரிய வைக்கிறார்.

உலகை யார் நடத்துகிறார்கள் எனும் கேள்விக்கு யாரும் நடத்தவில்லை. எல்லாம் தானாக நடக்கின்றன. நீ கேள்வி கேட்கிறாய் நான் பதிலை சொல்கிறேன் அவ்வளவுதான் என்கிறார். 

மனிதனுக்கு பிராண மன,காரண எனும் மூன்று உடல்கள் உள்ளன .பிராண உடல் அவன் இருப்பையும், மனு உடல் அவன் அறிதலையும், காரண உடல் அவனுடைய ஆனந்தமான உருவாக்கம் குணத்தையும் குறிக்கின்றன. இதையெல்லாம் விழிப்புணர்வில் உள்ள நிலைகளே.

மாற்றத்திற்கு தேவையானது என்ன எனும் கேள்விக்கு..உன் உலகத்தை உள்ளவாறு பார். நீ கற்பனை செய்யும் வண்ணம் பார்க்காதே. பகுத்தறிவு பற்றற்ற தன்மைக்கு வழிவகுக்கும்; பற்றற்ற தன்மை சரியான செயலை உறுதி செய்யும்; சரியான செயல் உன் மெய்யான இருத்தலுக்கு உள்முகப் பாலம் அமைக்கும். முழுமூச்சான முயற்சிக்குச் செயல்தான் அத்தாட்சி. உனக்குச் சொன்னவற்றைப் பிசகாமலும் உண்மையாகவும் செய். எல்லாத் தடைகளும் கரைந்து விடும்.

அறியப்படுவதும் அறிபவரும் ஒன்றாவதாய் எனும் கேள்விக்கு.. இவை இரண்டுமே மனதின் கருத்துக்களே - வார்த்தைகள் அவற்றை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சுயம் என்பது கிடையாது. சுயம் என்பது அவை இரண்டில் ஒன்றிலும்கூட இல்லை. அவற்றிற்கு இடையிலோ. அவற்றிற்கு அப்பாலோ இல்லை. அதை மனதளவில் தேடுவது வீண். தேடுவதை நிறுத்தி. அது இங்கேயே, இப்போதே இருப்பதைப் பார். அதுதான் நீ நன்கு அறிந்த 'நான்' என்னும் விழிப்புணர்வு. நீ செய்ய வேண்டிய தெல்லாம் உன்னை விழிப்புணர்வின் புலத்திற்குள் இருப்ப தாகவோ, அல்லது விழிப்புணர்வுப் புலத்தால் ஆனதாகவோ நினைப்பதை நிறுத்துவதுதான். இதைச் செய்தால் போதும். நீ தெளிவான கவனத்தை இதன்மீது வைத்திருக்க வேண்டும்.. உன் பழைய அனுபவங்களையும் சாதனைகளையும் மறந்துவிடு என்று பதில் அளிக்கிறார். 

புதிய மனத்துக்கும் பழைய மனதிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு பழைய சுயம் எல்லாவற்றையும் வரையறுக்கவும் விளக்கவும் வேண்டுகிறது. அது வார்த்தைகளுக்குள் ஒவ்வொன்றும் பொருத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. வார்த்தைகளால் ஆன விளக்கங்களுக்கு புதுசுயம் முக்கியம்த்துவம் கொடுப்பதில்லை. ஞாபகத்தில் உள்ளவற்றோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்காமல் அது ஒவ்வொன்றையும் அவை இருக்கும் படியாக ஏற்றுக் கொள்கிறது என்ற வித்தியாசத்தை உணர்த்துகிறார்.

*நம்பிக்கை இல்லாமல் அமைதி இல்லை.யாரேனும் ஒருவரை நீ எப்போதும் நம்புவாய் அது உன் தாயாகவோ அல்லது உன் மனைவியாகவோ நண்பராகவோ இருக்கலாம்.

*எல்லா நேரமும் ஒவ்வொன்றும் தானாக நடக்கின்றது. ஆனால் நீ அதற்கு தயாராக இருக்க வேண்டும்.தயாராக இல்லாமல் இருப்பது குழந்தைத்தனம்.

*நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எப்போதும் எதிர்காலத்திற்கே நகர்கிறாய்

*உன்னை கேட்பதெல்லாம் உன்னிடமே திரும்பிப் பார்.உன்னை நெருக்கமாக பார் .உனக்குள் ஆழமாக பார் என்பதே

புத்தகத்தின் மையம் என்பது நான் இன்னும் உணர்வை பெறுவது தான். அதற்குத் தேவையானவை விழிப்புணர்வு மட்டுமே.அந்த விழிப்புணர்வுக்கு தடையாக இருப்பவை எவை எவை எல்லாம் உள்ளன என்பதனை கேள்வி பதில் வடிவில் கூறியுள்ளார். சில உரையாடல்கள் சாதாரண வடிவிலும் சிலவற்றிற்கு மிகவும் ஆழ்ந்த பதிலும் இந்த புத்தகத்தில் தந்துள்ளார். எந்த இடத்திலும் கடவுளை வணங்கு என்று கூறவில்லை. ஒவ்வொரு இடத்திலும் உன்னை எவ்வாறு எல்லாம் மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உன்னை எவ்வாறு எல்லாம் உள்ளுணர்வுடன் நோக்க வேண்டும், அதற்கு தேவையானவை என்ன என்ன என்பதனை பற்றிய மனித மனதை நான் என்று அறிய வைப்பதற்கான முயற்சியில் இந்த புத்தகம் உள்ளது. எந்த இடத்திலும் மூடநம்பிக்கைகளை பரப்பும் கருத்துக்கள் இடம்பெறவில்லை. கேள்விகள் தர்க்க ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் நிகழ்கின்றன. இன்னும் கொஞ்சம் சுருக்கி தத்துவ வடிவில் கொடுத்திருந்தால் இன்னும் இந்த புத்தகம் மேம்பட்டதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment