என்னை பாதித்த ஒரு புகைப்படம்
புகைப்பட தினத்தில் உங்களுக்காக..
முதல் படத்தில் நாம் பார்ப்பது டைப் ஒன்று டயாபடிஸ் எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்
இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை
ஆம்... அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான்.
நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது
Dr.பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர்.
அறிவியல் ஆராய்ச்சியில் பண்டிதம் கிடையாது.
கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது
அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்
"கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..
கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது
அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.
இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது அந்த ஒரு யோசனை தான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்
இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார்.
அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும் , துணைக்கு Dr.பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.
பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர்
அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.
அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர்
பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.
அந்த உயிர் காக்கும் திரவம் தான் "இன்சுலின்"
இந்த கண்டுபிடிப்புக்காக 1923க்கான நோபல் பரிசு Dr.பாண்டிங் மற்றும் Dr.மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.
இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார்.
வரலாற்றில் நிலைத்தார்...
மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்..ஒரு மனிதனின் சுயநலமின்மை எப்படி உலகை மாற்ற முடியும் என்று புரியும்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
#உலகபுகைப்படதினம்
No comments:
Post a Comment