Sunday, 31 August 2025

160


#கற்கை_நன்றே_160

“மனித உடம்பின் தலையாய பணி, போகுமிடங்களுக்கெல்லாம் மூளையையும் தன்னுடன் எடுத்துச் செல்வதுதான்” என்று. 

-தாமஸ் ஆல்வா எடிசன்

அன்றாட வாழ்வில் பல விஷயங்க்ளை தெரிந்து வைத்திருந்தாலும் சில விஷயங்கள் மனதிற்கு தெம்பூட்டுபவை. சமூகம் குறித்து சிந்திக்க வைப்பவை. அந்த வகையில் சில கேள்விகளும் பதில்களும்

*சரியான தேர்வு சரியான தீர்வு

வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் மியாமி தீவுகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்; குப்பையும் சேர்ந்து. அங்குள்ள நிர்வாகம் எத்தனை அறிவுறுத்தியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஐஸ்க்ரீம் கப்புகளே அதிகம் தென்பட்டன. இதற்குத் தீர்வாக, சாப்பிடக்கூடிய கப்பாக ஏன் தயாரிக்கக் கூடாது என யோசனை செய்து 'Wafer Cups' பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து அது குப்பையில்லாத கடற்கரையானது.

ஒரு பியூ ரிசார்ச் சர்வேயில் "வாழ்க்கையில் எது முக்கியம்?" என கேட்கபட்டது மினிமலிசம் பகிர்ந்த செய்தி

இரண்டாமிடம் பிடித்தது: குடும்பம்

மூன்றாமிடம் பிடித்தது: தொழில், வேலை

முதலிடம்?

"எனக்கு பிடித்ததை செய்ய நேரம் கிடைப்பது" என மக்கள் சொன்னார்கள்.

தினமும் நமக்கு பிடித்ததை செய்ய ஓரிரு மணிநேரம் அவசியம். அந்த நேரத்தில் சும்மா இருக்கலாம், புத்தகம் படிக்கலாம், டிவி பார்க்கலாம்,..ஆனால் ரிலாக்ஸ் அண்ட் ரிவைண்ட் செய்ய தினமும் நேரம் ஒதுக்குவது அவசியம்.

24 மணிநேரத்தில் நாம் நமக்காக வாழும் நேரம் என்பது தூங்கும் நேரம், உண்ணும் நேரம், உடல்பயிற்சி செய்யும் நேரம் ஆகியவை தான். ஆனால் அவை எல்லாம் நம்மை நாமே பழுதுபார்ப்பது மாதிரிதான்

நாம் நமக்காக வாழும் நேரம் என இந்த ஒரு மணிநேரமாவது இருக்கட்டும். அதில் நமக்கு பிடித்ததை செய்வோம்

#கண்ணியம் என்பது யாதெனில்..

இந்தியா பிரிந்தவுடன் முகமது அலி ஜின்னா, காயிதே மில்லத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் கட்சியின் வரவு, செலவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பங்குத் தொகை என்னிடம் உள்ளது. இதனை என்னிடம் நீங்கள் பெற்றுச் செல்லலாம்' என எழுதினார்.

அதற்கு பதில் எழுதிய மில்லத், 'தற்போது பிரிவினையில் நீங்கள் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் என இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் அளித்து நான் பெறுவதாய் இருந்தால் என் கை கீழேயும் தங்கள் கை மேலேயும் இருக்கும். இந்தியரான எங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கமல்ல. எனவே அப்பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்றாராம். அதுதான் கண்ணியமிகு காயிதே மில்லத்.

#பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டியது

'விசாரணை' பட விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன, நாடக ஆசிரியர் பாரத இந்துவின் கதை.

"கொத்தனார் ஒருவர் சுவர் கட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த வழியே சென்ற பெண்ணின் அழகில் மயங்கி கட்டடத்தை கோணலாய் கட்டியதால் கீழே விழுந்து ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதால் நீதி விசாரணை நடக்கிறது. 'உன் கவனக்குறைவால் நடந்ததால் நீதான் பொறுப்பு' என்றார் மன்னர். 'ஐயா, கவனக்குறைவிற்கு நான் காரணமல்ல, அந்தப் பெண்மணிதான்' என்றார் கொத்தனார். அப்பெண்மணியிடம் விசாரித்தபோது, 'தவறு என்னுடையதல்ல, மந்திரி அலுவல் விஷயமாய் அழைத்தார். ஆகவே தவற்றுக்கு மந்திரிதான் பொறுப்பு' என்றார். மந்திரியின் பதிலில் திருப்தியுறாத அரசன், அவரை தூக்கில் போடுவதாக முடிவு செய்தான்.

மக்கள் முன் மந்திரியை தூக்கிட வரும்போது ஒரு பிரச்னை. தூக்குக் கயிற்றைவிட மந்திரியின் முகம் பெரிதாய் இருக்கிறது. தூக்குக் கயிற்றை மாற்றலாமா எனக் கேட்டபோது, அது வழக்கமில்லை என அரசன் மறுத்துவிடுகிறான். இதற்குத் தீர்வாக, இந்தச் சுருக்குக் கயிறு யாருக்குப் பொருந்துகிறதோ அவரை தூக்கிலிடுவோம் என முடிவு செய்யப்படுகிறது.

ஒரு தவறும் செய்யாத, மெல்லிய கழுத்துடைய ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவோ மறுத்தும், ``இந்தக் கயிற்றிற்கு ஏற்ற சின்னக் கழுத்து உனக்குத்தான் உள்ளது" எனக் கூறி அவனை தூக்கிலிட்டனர். ஒருவனை தண்டிக்க விரும்பினால் அனைவருக்கும் எளிதில் ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது’’ என முடியும்.

இக்கதை, `விசாரணை' படத்துக்குப் பொருத்தமான பேச்சு. ஒரு பேச்சாளன் பொருத்தமாய்ப் பேச வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

நற்காலை

-தோழமையுடன் மணிகண்டபிரபு

101


#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_ஒரு_எழுத்தார்

Book No:101/100+
Pages:-238

ஆளாண்டாப் பட்சி
-பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகத் தலைப்புகள் பெரும்பாலும் வித்தியாசமானவை. இந்நாவலின் தலைப்பு ஒரு பறவையின் பெயர். இது மனிதர்களைத் தம்மருகே அண்ட விடாது.தனித்து வாழும் இயல்புடையது.தீயவர்களை அழித்து நல்லவர்களுக்கு உதவி செய்யும் குணமுடையது.இந்நாவலின் கதைக்கரு இதனை மையமாகக் கொண்டது.

 பறவைகளைப் போல் மனிதர்களும் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்கிறார்கள்.குடும்பத்திற்காக,பொருளாதாரத்திற்காகவும் நவீன காலங்களில் இடபெயர்வு என்பது சாதாரணமாய் நிகழக் கூடியது என்றாகிவிட்டது.

தற்காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது அரிதாகிவிட்டது.அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பது முதுமொழி. அண்ணன் தம்பி உறவு எப்போது சீர்குலைகிறது என்றால் முதலில் திருமணம் முடிந்தவுடன் இரண்டாவது குடும்ப சொத்து பிரிக்கப்படும் போதுதான்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நான்காவது மகனான முத்துவிற்கு
அவர்களின் சொந்த நிலம் பங்கு பிரித்து தரப்படுகிறது.அதில் அவரின் மூத்த அண்ணனுக்கு அதிக பங்கு ஒதுக்கப்படுகிறது. அடுத்தவர்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டு..முத்துவின் பங்கு குறைவாக தரப்படுகிறது.அந்த நிலமும் நீர்வரத்து இல்லாத நிலமாய் கொடுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைகிறான்.

தன் மனைவியின் சொல்லால் குழப்பமடையும் முத்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் ஒரு கசப்பான அனுபவம் அவன் அந்த ஊரைவிட்டு குடும்பத்தைவிட்டு,நிலத்தை விற்று வெளியேற முடிவு செய்கிறான்.புதிய நிலத்தை வாங்க தயாராகிறான். தன் மாமனாரின் தோட்டப் பணியாளாக இருக்கும் குப்பண்ணா எனும் குப்பனுடன் சேர்ந்து புதிய நிலத்தை வாங்க புறப்படுகிறான் முத்து. அதிலிருந்து தான் நாவல் துவங்குகிறது.முத்து மேல் சாதி சமூகத்தினராக இருந்தாலும், குப்பண்ணா தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தாலும் இருவரின் மனநிலையும் சமூகம் குறித்த புரிதலும் நாவலில் வெளிப்படுகிறது.இதுவரை வெளியுலகமே தெரியாமல் அண்ணனே உலகமாய் இருந்தவனின் வாழ்க்கை எங்கிருந்தோ வரும் குப்பண்ணாவின் அன்பு வாழ்வில் புதிய வெளிச்சத்தை தருகிறது.
குப்பனும் முத்து தன்னை நடத்தும் விதம்.குறித்து நெகிழந்து கொண்டே இருப்பான்.

இவர்கள் செல்லும் வழியில் பேசும் உரையாடல்கள், உணவு, நாடோடி வாழ்க்கை,குப்பனின் நிலம் குறித்த அறிவு,பணம் வைத்திருக்கும் பதைபதைப்பு, திருடர் பயம் ஆகியவை சொல்லப்படுகிறது.ஒரு இடத்தில் மாடு சுருண்டு படுக்க..வடமலையில் கரட்டை ஒட்டிய அந்த  இடத்தை வாங்க முற்படுகிறான்.முத்துவின் உழைப்பின் மீதான ஆர்வம் விளையாத காட்டை மேம்படுத்தி விளைவிக்கிறான். முத்துவின் மனைவி பெருமாயின் பாட்டி, அவனின் மகளும் அதற்கு உதவுகிறார்.உறவுகளின் முன்னே தன்னை ஏமாற்றியவர் முன்னே வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் வைராக்கியம் அவனிடம் அதிகம் இருக்கிறது.இறுதியில் பாட்டி அவனுக்கு சொல்லும் செய்தியுடன் முடிகிறது.

*பானைத் தண்ணிய முகத்தில் அடித்துக் கொண்டால் உடல் முழுக்க குளிர்ச்சி பரவிவிடும்.

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நாவலின் ஓட்டத்திற்கு துணை புரிகின்றன.சொந்தங்களை விட எங்கிருந்தோ வரும் உறவு பிணைப்பு அனைவரின் வாழ்வையும் எண்ணிப் பார்க்க வைக்கிறது.ஒரு இடத்தில் குப்பண்ணாவை சரிசமமாக நடத்த விரும்பி..நீங்கள் காலம்.முழுக்க அடிமையாகவே இருந்து உழைக்கனுமா.. தங்களுக்கு ஒரு இடத்தை தருகிறேன்..உழைத்து முன்னுக்கு வாருங்கள் என்று சொல்லும் இடம் ஒதுக்கப்பட்ட சமூக மேலே உயர்த்தும் சமூக நீதி வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிலைகொள்ள நினைப்பது தான் வாழ்க்கை..ஆனால் எங்கோ ஒரு ராட்சச கை வந்து நம் புலம் பெயர வைக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் மனநிலையை சொல்லும் நாவல்

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 29 August 2025

ராகவன்


எழுத்தாளர்களுக்கு… சிறுகதை எழுதுவது எப்படி? – டிப்ஸ்

பா. ராகவன் 

பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.

1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.

Thursday, 28 August 2025

159


#கற்கை_நன்றே_159

இன்புற்றிரு

இன்புற்றிருக்க முனை!

சுகம் சுலபம்

-ருத்ரன்

நமக்கு இருக்கும் மிகப்பெரிய தடையே நம் மனதுக்குள் நாம் வைத்திருக்கும் சில நம்பிக்கைகள் தான் என்கிறார் ருத்ரன் அவர்கள். மேலும் அவர் நம்பிக்கையும் உண்மையையும் பற்றி சொல்லும்போது.. உண்மைக்கு ஆதாரங்கள் தேவைப்படாது. நம்பிக்கைகளுக்கு தான் அவ்வப்போது ஆமாம் ஆமாம் என்று கூற வேண்டி இருக்கும். அவநம்பிக்கையும் சந்தேகத்தின் மேல் உள்ள நம்பிக்கை தான் என்கிறார்.

 நம்முள் நாம் உருவாக்கிக் கொண்டுள்ள நம்பிக்கையை பலவும் பிறரின் கணிப்பின் கருத்தின் அடிப்படையிலேயே உருவானவை. பல நேரங்களில் சரியா தவறா என்று யோசிக்காமலேயே நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைகள் தான் நம் வழியை அடைகின்றன.ஆகவே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கையை நாம் முதலில் அறிய வேண்டும்.

பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா?

நாய் இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், கொஞ்சுகிறார், என்னை கவனிப்பவர் ராஜா போன்றவர், இவரை நான் மகிழ்விக்க வாலாட்டுவேன், இவருக்காக காத்திருப்பேன், இவரோடு விளையாடுவேன்.

நாய்க்கு அன்பு கொடுக்க கொடுக்க, அது உயிரையே கொடுக்கும் தன் எஜமானருக்கு, சோர்ந்து போகும் அன்பில்லாவிடில். நாய் ஒரு Team player

பூனை இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், தூக்கி வைத்து கொஞ்சுகிறார், உணவளிக்கிறார், இவ்வளவு கவனம் கிடைக்கிறது என்றால் நான் ராஜா போன்றவன்.

பூனைக்கு அன்பு கிடைக்க கிடைக்க, அது தன்னைப்பற்றி மிகையான பிம்பம் வளர்த்துக்கொள்ளும். நீங்கள் சேவை செய்ய கடமைப்பட்டவர் என நினைக்கும். பூனை ஒரு Solitary Hunter.

மனிதர்களுள் நாய்குணம் உடையவரும் உண்டு, பூனை குணம் உடையவரும் உண்டு.

நாம் என்ன குணம் என்பதை நம்மை சார்ந்தோரை கேட்டு அறியலாம்.
பெரும்பாலும் பேய் குணம் என்று தான் சொல்வார்கள் எனவே நல்ல நண்பர்களை கேட்டு அறியவும். 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 27 August 2025

158


#கற்கை_நன்றே_158

மேற்பரப்பினைக் கண்டு
மெய் மறப்போர்க்கு
ஒரு கடல்
அதன் ஆழத்தால் ஆனது
என்பது தெரியாது

-மகுடேசுவரன்

பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் மென்மையான இடத்தை கடுமையானதாக கடினமானதாக மாற்றி விடுகிறார்கள் இதன் மூலம் மற்றவர்களுக்காக மனதில் தோன்றும் பதிவு உணர்வு இல்லாமல் அடைத்து விடுகிறார்கள். ஆனால் மனதில் இருக்கும் மென்மையான இடங்கள் சுவரில் இருக்கும் விரிசல்கள் போல அப்படியே நிலைபெற்று விடுகின்றன. அவை நமது உண்மையான இயல்பை நமக்கு சுட்டிக் காட்டும் படி எப்போதும் நமக்குள் இருக்கின்றன.பேராசிரியர் மாடசாமி அவர்கள் இது குறித்து எழுதிய மேற்கோள் கதை முற்றிலும் பொருந்துகிறது

மாசாய்' என்பவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகள். உடல்வலிமை மிக்கவர்கள். போர் வீரர்களாக இருந்தவர்கள். ஒரு சமயம் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இன்று வலிமை ஒடுங்கி, உடல் உழைப்பாளிகளாய், கென்யாவிலும் டான்சானியாவிலும் வசிக்கின்றனர். மாசாய் மக்கள் சொன்ன நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று இது:

ஒரு கம்பளிப் பூச்சி, மெல்ல மெல்ல ஊர்ந்து முயல் ஒன்றின் வீட்டுக்குள் நுழைந்தது. பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டது.

முயல் வீடு திரும்பிய போது, யாரோ வீட்டுக்குள் நுழைந்த தடம் தெரிந்தது. யாராய் இருக்கும்? யார் என் வீட்டுக்குள்? என்று கேட்டது முயல். கம்பளிப் பூச்சி சுதாரித்தது.தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே! எந்த விலங்கும் ஒரு மிதி மிதித்தால் கம்பளிப் பூச்சி காலி! சரி! என்ன செய்தது கம்பளிப் பூச்சி? மறைவிடத்தில் இருந்து கம்பளிப் பூச்சி பேசியது. பெருங் குரலில் பேசியது." நானா? நான்தான் காண்டாமிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்!"

கர்ண கடூரமான குரல். நம்பத்தான் வேண்டும். முயல் பயந்து ஓடியது. ஓடிப் போய் ஒரு குள்ளநரியைக் கூட்டி வந்தது. குள்ள நரிக்கும் அதே பதில்! அதே குரல்! நரியும் அடித்துப் பிடித்து ஓடியது.

அடுத்து ஒரு சிறுத்தை... அடுத்து ஒரு யானை... "யார் என் நண்பனின் வீட்டில்?"

கம்பளிப் பூச்சியிடம் இருந்து அதே பதில்! அதே குரல்! "நான்தான் காண்டா மிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்."

முயலுக்குத் துணையாக நிற்க ஒரு விலங்கும் இல்லை. பெரிய பெரிய விலங்குகள் எல்லாம் ஓட்டம் பிடித்தன.

கடைசியாக ஒரு தவளை வந்தது. அதற்கு மரண பயம் இல்லை. மரணம் எந்த நேரமும் வரக் கூடியதுதான்!

குரல் வந்த திசை நோக்கி தவளை தத்தித் தத்தி வந்தது. இன்னும் சில நொடிகளில் கம்பளிப் பூச்சியைக் கண்டு பிடித்து விடும்.

வெளியேற வேண்டிய நேரம் வந்தது. பதுங்கிய இடத்தில்  இருந்து கம்பளிப் பூச்சி வெளியேறியது. ஊர்ந்து ஊர்ந்து குடிசையை விட்டு வெளியேறியது.

குடிசைக்கு வெளியே விலங்குகளின் கூட்டம். கம்பளிப் பூச்சியைப் பார்த்தன. சத்தமிட்டுச் சிரித்தன. அட! இதுதானா நம்மைப் பயமுறுத்தியது?...அவைகள் சிரித்துக் கொண்டிருந்தபோதே, கம்பளிப் பூச்சி மெல்ல மெல்ல ஊர்ந்து மறைந்தது.

சரி! கதை என்ன சொல்கிறது?
பெருங்குரல் எடுத்துப் பேசினால், பிறர் கவனிக்கிறார்கள்; நம்புகிறார்கள்; பயப்படுகிறார்கள். மெலிந்த குரல் என்றால் சட்டை செய்ய மாட்டார்கள்.இன்று அமைதியாய் இருந்தால் விவரம் இல்லாதவன் என்கிறார்கள். பிழைக்கத் தெரிந்தவன் என் வசைபாடுகிறார்கள்.இது தவறான அணுகுமுறை

மென்மையான குரல் உடையவர்களையும் மதிப்போம். அவர்களின் குரலையும் கேட்போம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 24 August 2025

நீண்ட தூரம் நிற்காமல் கார் ஓட்ட கூடாது, என்ன அவசரம் என்றாலும், எத்தனை அனுபவம் உள்ள டிரைவர் ஒட்டினாலும் நெடுஞ்சாலையில் சாலையை நேராக பார்த்தபடி பயணிப்பது கவனத்தை சிதறடிக்கும் அல்லது உறக்கநிலைக்கு இட்டுச் செல்லும். இது "ஹைவே ஹிப்னோசிஸ்" எனப்படும் நிலை, இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை ஓய்வு எடுத்து, காரை நிறுத்தி, முகம் கழுவுங்கள், சற்று காலார நடவுங்கள் அல்லது காப்பி குடியுங்கள் என்பது அமெரிக்காவில் கொடுக்கபடும் பாதுகாப்பு நடைமுறை-பகிர்வு

வீடில்லா மனிதன்வாழ்ந்துவிடக்கூடும்மனிதனில்லா வீடுதான்ஏனோ மரித்துவிடுகிறது-ஷான்

157

#கற்கை_நன்றே_157

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும் ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

-பிராவர்ப்ஸ்

ஆங்கிலத்தில் கேட்கும் செய்கைக்கு இரண்டு சொற்கள் உண்டு.

Hearing-கேட்பது
Listening-புரிதலுடனும் கவனமுடனும் கேட்பது

புரிதலுடன் கேட்பதே கற்றலின் முதல் படி.அதனால் தான் Hear the news. Listen the lesson என்பார்கள். தற்காலத்தில் புரியும் வகையில் சொற்களை பிரயோகப்படுத்துவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். புரிதலின் போதாமை குறைவும் ஒரு காரணம். ஆனாலும் சொல்பவர்கள் எதிரில் இருப்பவர் புரிந்து கொள்கின்றனரா என நினைத்து பேசுவது அவசியம். கேட்பவர்களும் புரியலனு உடனே சொல்லாமல்..சொல்ல  வரும் கருத்துக்களை யூகித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.

இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.

இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?

தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.

கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.

தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.

இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.

இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன

*புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.
*அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.
இரண்டில்.ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

100


#Reading_Marathon2025
#25RM055

Book No:100/100+
Pages:-250

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும்
குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
-ராபின் ஷர்மா

வாழ்க்கையின் மிக சோகமான பகுதி இறப்பதில் இல்லை. மாறாக உண்மையாக வாழ முடியாமல் போவதில் தான் உள்ளது. டால்ஸ்டாய் அவர்கள் கூறியது போல "நாம் எப்பொழுது பிறருக்காக வாழுகிறோமோ அப்பொழுதுதான் நாம் நமக்காக வாழ்கிறோம்". ஏனெனில் பிறருக்காக நன்மை செய்வதில் நமக்கும் அதில் ஒரு நன்மை ஏற்படுகிறது நேர்மறை எண்ணங்களின் உற்பத்தி நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
நம் வாழ்க்கையை உன்னதமாக நம்மால் மட்டுமே முடியும். 

நான் மீண்டும் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் உன்னிடம் அதிகமாக ஓய்வெடுத்துக் கொள்வேன். இந்த பயணத்தின் போது உண்மை காட்டிலும் அதிக அளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வேன். அதிக மலைகளின் மீது ஏறுவேன். எனக்கான முழுமையான முழு நிறைவான தருணங்கள் கிடைப்பதற்கு பாடுபடுவேன்.நான் மீண்டும் வாழ்வதற்கு நேரம் கிடைத்தால் இவற்றையெல்லாம் அதிகமாகிக் கொள்வேன். வேறு எதனையும் விரும்ப மாட்டேன். ஒன்றன்பின் ஒன்றாக நிறைய பூக்களை பறித்துக் கொள்வேன் என்று நாடின் ஸ்டெயர் 89 ஆவது வயதில் கூறுவதை நாம்  எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் தொலைத்து விட்ட சந்தோசங்கள் எளிமையான வாழ்க்கை முறைகள் போன்றவை நமக்கு அதிக மன அழுத்தம் உள்ள வாழ்க்கையே பரிசாக கொடுக்கிறது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரின் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும்.. கொரோனா தாக்கிய நோயாளி சாவின் இறுதி நொடியை அனுபவிக்கும் போது அவருடைய எண்ண ஓட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை குறித்த நேரடி அனுபவத்தை எடுத்துக்காட்டின் மூலம் நமக்கு தந்துள்ளார். அப்போதுதான் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பரிசு என்பதை உணர முடிகிறது.

வாழ்க்கையிலான தலைமை பண்பு என்பது குடும்பத்திலான தலைமை பண்பில் இருந்து துவங்குகிறது. எனது வாழ்வின் நிரந்தர அர்த்தம் எனது வேலையில் எனக்கு கிடைக்கும் வெற்றியில் இல்லை. மாறாக அது என் குழந்தைகளின் நற்பண்புகளை உருவாக்கும் பண்பில் உள்ளது என்பதுதான் உண்மை. குழந்தைகளின் சிறுவயதில் தென்படும் அறிகுறிகளின் படியே அவர்கள் வளர்ந்தால் மேதைகளை தவிர வேறு எவரும் நம்மிடையே இருக்க இயலாது என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார். ஏனெனில் அவர்களின் இயல்பிலிருந்து மடைமாற்றி நாம் நினைக்கும் மனிதர்களாக மாற்றும்போது தான் அவர்கள் வழி தவறி விடுகின்றனர் என்பதனை கூற வருகிறார்.

பொதுவாகவே வீட்டில் உள்ள உறவுகளுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த அன்பளிப்பு என்னவென்றால் அது நாம் அவர்களுக்கு ஒதுக்கும் நேரம் தான் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் தலைமை பண்பு என்பது வீட்டில் இருந்து தான் துவங்குகிறது. பலரும் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால் எந்தவித நோக்கமும் விருப்பமும் இல்லாமல் திட்டமிடாமல் எதெச்சையாக வாழ்வது போல் வாழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் சிறந்ததாகிவிடும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது போல் இல்லை. ஒரே மாதிரியான செயல்களை தினமும் செய்துவிட்டு வித்தியாசமான பலன்களை மட்டும் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று எடுத்துக்காட்டுடன் கூறுகிறார்.

குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தவும் குடும்பத்திற்கான பண்புகளை வளர்க்க உதவும் நடைமுறைகளை ஆழமாய் சுட்டிக்காட்டுகிறது
வாழ்க்கையில் முக்கியமானவற்றை உணர்த்தும் கதை, பொதுவாக பணம் மற்றும் வேலை மேல் அதிக கவனம் செலுத்தும் வாழ்க்கையின் முடிவில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்காமை குறித்து கவலை உணர்வை விவரிக்கிறது.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் நம்பிக்கையும் கொண்ட உறவை வளர்ப்பது. அவர்கள் உணர்வுகளை, கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்வது முக்கியம் என்கிறார்.

நிறைய மனிதர்கள் யோசிப்பதில் காலத்தை கழிக்கின்றனர். ஆனால் உணர்வதில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க தயாராய் இல்லை .ஏனென்றால் அந்த உள்ளுணர்வு தான் ஞானத்துடன் தொடர்பு கொள்ள தொடங்கும். ஆழமாக சிந்திக்கும். வாழ்க்கையில் இப்படி அளவு கடந்த அர்ப்பணிப்பை நமக்குள் ஏற்படுத்தும். அடுத்த எதிர்கால திட்டத்திற்கான அமைதியும் இன்பமும் இன்றைய நம்முடைய பக்குவத்தில் தான் அடங்கி இருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம் வரும். அத்தருணத்திற்காகவே அம்மனிதன் பிறந்துள்ளான். அந்த அருமையான சந்தர்ப்பத்தை அவன் கையகப்படுத்தியபின் அவனது வாழ்க்கையின் இலட்சியநோக்கம் நிறைவேறுகிறது. அந்த இலட்சிய நோக்கத்திற்காகத்தான் அவன் தனிப்பட்ட தன்மையுடன் தேர்ச்சியுறுவான். அந்தத் தருணத்தில் அவன் தன் மேன்மையைக் காண்பான். அதுதான் அவனுடைய மிக அருமையான சமயம் என்பார் 
வின்ஸ்டன் சர்ச்சில்

*மற்றவர்களை விட சிறப்பாக இருப்பது என்பது மேன்மை இல்லை. உனது முந்தைய குணத்தை விட இப்பொழுது சிறப்பாக இருக்கிறாய் என்பது தான் உண்மையான மேன்மை இருக்கிறது.

*உனது சூழல் உனது எண்ணங்களை உருவகப்படுத்துகின்றன

*எது உணர்வுகளாக்கப் படுகின்றன லோ அவைகள் உண்மையாக்கப்படுகின்றன

*யாராவது உனக்கு கை கொடுக்க வேண்டும் என்றால் நீ முதலில் அவர்கள் இதயத்தை தொட வேண்டும்
*நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது உங்கள் தலைமுறைகளை வளர்க்கிறீர்கள்.

*குழந்தைகளின் பலங்களை கவனியுங்கள். அவர்களின் பலவீனங்களை அல்ல

இந்த புத்தகத்தில் குடும்பத் தலைவர்களின் ஆளுமை பற்றி சொல்லும் போது ஒவ்வொருவரின் குணங்களைப் பற்றியும், எவ்வாறெல்லாம் திட்டமிட்டால் சாதனை செய்ய முடியும் என்பதனை குடும்பங்களில் இருந்து தொழில் நிறுவனங்கள் வரை நாம் புரிந்து கொள்ளக்கூடிய உளவியல் பண்புகளை இந்த புத்தகம் பேசுகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 23 August 2025

98


#Reading_Marathon2025
#25RM055

Book No:98/100+
Pages:-288

மனமென்னும் குரங்கை வெல்லுங்கள்
-ஆனந்த் பாட்கர்

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" என்பது Masrer the mind monkey என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

மனம் ஒரு குரங்கு என்பார்கள் ஏனெனில் மனம் ஒரு நிலையில் இருக்காது. அந்த மனதை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் மிகப்பெரிய ஆற்றலை பெறலாம் என்பதுதான் ஒவ்வொரு சுயமுன்னேற்ற நூலிலும்  குறிக்கோளாகவும் அடிநாதமாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தகம் ஐந்து பாகங்களையும் 18 அத்தியாயங்களையும் உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொரு மனிதர்களின் மனநிலை மற்றும் மனப்பகுதியில் உள்ள போராட்டங்களை ஆராயும் ஒரு புத்தகம். 

முதல் அத்தியாயத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் மறுபக்கங்களை அலசுகிறது. அதனோடு சமகாலத்தில் வெற்றி பெற்ற ஆளுமைகளின் பின்புலன் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் கூறுகிறது.குரங்கை போன்ற மன அழுத்தங்களைத் தாண்டி நீக்குவதற்கான கலையை விவரிக்கிறது. 

ஒரு விமான நிலையத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு அறிவிப்பை கேட்கிறீர்கள்.அதுதான் ஒரு 'விஷயம்' எந்த 'செயலும்' அந்த சந்தர்ப்பத்தில் விசயத்துக்கு நாம் அளிக்கும் பதில் ஆகும். ஒவ்வொரு விஷயங்களுக்கு நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை தீர்மானிப்பது தான் 'கோட்பாடு'. நாம் கற்றவைகளை பயன்படுத்தி அறிவை பயன்படுத்தி அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தான் வெற்றி பெறுகின்றன என்பதனை தக்க எடுத்துக்காட்டுக்குடன் கூறுகிறார்.

 கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்திற்கு செல்லும் போது ஒரு அனுபவத்தை பகிர்கிறார். முதலில் சந்திக்கும் கொத்தனாரிடம் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டபோது? என்னை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள். நான் ஒரு தினக்கூலி ஒரு நாளைக்கு 300 கற்கள் அடுக்கினால் தான் எனக்கு சாப்பாடு என்கிறார். இரண்டாமவர் ஏதோ ஒரு பணி திட்டம் நடக்கிறது. நான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறேன் என்று கூறுகிறார். மூன்றாமவரிடம் இதே கேள்வியை கேட்டபோது, அவர் மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் நவீன தாஜ்மஹாலை கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு இந்த ஊருக்கே பெருமை என்று கூறி ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மிகவும் உற்சாகத்துடனும் புத்திசாலித்தனம் செயல்படும் அவரைப் பார்த்து வியந்து போகிறார். குழு உறுப்பினர்கள் நிறுவனத்தின் நோக்கத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் விளையாட்டின் நிகழ்வை ஒன்றை பற்றி குறிப்பிடும் போது கவாஸ்கர் 29 வது சதம் அடித்து பிராட்மனின் சாதனையை சமன் செய்யும் நிகழ்வில் கவாஸ்கர் 97 ரன்கள் இருந்தார். அப்போது கவர் டிரைவ் ஒன்று அடித்தார். ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார்.ஆனால் பந்து பவுண்டரி சென்றது. எதிரில் இருந்த வெங்சர்க்கார் அவரை பாராட்டினார். ஆனால் கவாஸ்கரோ எதற்கு என்னை பாராட்டுகிறார் என்று குழப்பமாக இருந்தார். அப்போது அவர் திரும்பி ஸ்கோர் போர்டை பார்த்த போது தான் சதம் அடித்ததை நினைவுக்கு வந்தது... தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தியதால் இந்த சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது என்கிறார்.

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" புத்தகம் மன அழுத்தங்களையும் மனது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அலசியும், அவற்றைக் கையாளுவதற்கான உத்திகள் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் வழிமுறைகளை வழங்கும் ஒரு பயனுள்ள கையேடாகும். மனதை புரிந்து கொள்வதும் மன அமைதியைப் பெறுவதற்கான நடைமுறை பரிந்துரைகளையும் மன அழுத்தத்தை கடக்க உதவும் உள்ளார்ந்த சிந்தனைகளையும் ஈர்க்கக்கூடிய மொழியில் சமர்ப்பித்துள்ளார். இது மனநிலையைப் புதுப்பித்து நலமாக வைத்திருக்கும் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 22 August 2025

ஆசைப்பட வேண்டுமா, வேண்டாமா?ஆசைப்படுங்கள். குற்றமே இல்லை.ஆனால் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கட்டும்..எட்டாத ஒன்றுக்கு ஆசைப்பட்டு, எட்டியதையும் இழந்து விடாதீர்கள்-கி.ரா

வாசல் தெளிப்பதற்காக எழுந்து வந்தாள் சித்ரா. முந்தைய இரவில் தூறல் விழுந்திருக்க வேண்டும். தரை ஏற்கெனவே ஈரமாக இருந்தது. கொட்டாங்கச்சியில் வைத்திருந்த கோலப்பொடியால் நாலாதிசையிலும் இரட்டைக்கோடுகளைக் கடனேயென்று இழுத்தபிறகு உருவான சிறு கட்டத்தில் கோலத்தின் சாயல் இருந்தது. எதையுமே மனமொன்றிச் செய்யப் பிடிக்காத நாட்கள் இவை. வருடக்கணக்காக ஒரே விதமாய்க் கழியும் வாழ்க்கையின்மீது ஒருவிதமான சலிப்பு ஊறியிருக்கிறது... நாற்பது வயதைக் கடக்கும்போது பெண்கள் சந்திக்க நேரும் உடல் உளைச்சலின் பகுதிதான் இந்த மன உளைச்சலும்..-யுவன் சந்திரசேகர்(வெளியேற்றம்)

Thursday, 21 August 2025

156


#கற்கை_நன்றே_156

"ஆற்றின் வேகத்தில் சிக்கப் பட்ட வேதனைகளைக் கூழாங்கல் ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. அது தண்ணீர் உருவாக்கிய சிற்பம் போலவே தன்னைக் கருதுகிறது. கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்."

-எஸ்.ரா

ஒரு கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவர்களை கணிக்க சொன்னார். ஒவ்வொருவரும் ஒரு விடையை சொன்னார்கள்.

அதற்கு ஆசிரியர் கூறுகிறார் இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை அதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேனோ அதற்கேற்றாற் போல் அதன் எடை மாறுபடும்.

இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், அதன் எடை மிகவும் சிறிதாக தெரியும். இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால்.. என் கை வலிக்க ஆரம்பித்து விடும். இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் என் கை உணர்வற்று செயலற்றதாகி விடும்.

இங்கே அந்த குவளையின் எடை அதிகமாகவில்லை ஆனால் அதை நான் தாங்கிக் கொண்டிருக்கும் நேரம் அதிகமாகும் பொழுது அந்த குவளையின் எடை கூடுவது போல் ஒரு பிம்பம் உருவாகிறது.

நம் மன அழுத்தம், கவலைகள் எல்லாம் இந்த குவளை தண்ணீர் போல. சிறிது நேரம் அதைப் பற்றி நினைத்தால் எந்த தொந்தரவுமில்லை. அதுவே கொஞ்சம் நேரம் கூடுதலாக அதை பற்றிய சிந்தனையில் இருந்தால் ஒரு சங்கடமான நிலையை உருவாக்குகிறது. சதா ஒரு நாள் முழுவதும் இதே சிந்தனையிலிருந்தால் அது நம்மை உணர்ச்சியற்றவராக எதுவும் செய்ய இயலாத நிலையை தந்துவிடும்.

இங்கே கவலைகளோ மன அழுத்தமோ நம்மை தொந்தரவு செய்வதில்லை. அதைப்பற்றி நாம் எவ்வளவு நேரம் யோசிக்கிறோமோ அந்த அளவு நம்மை ஆட்படுத்தும் சக்தியை நாம் அதற்கு கொடுத்து விடுகிறோம். இங்கே ஒரு மடுவை மலையாக்குகிறோம் நாம்.

இதற்கென்ன வழி? மிகவும் எளிது. எப்பொழுதும் அந்த குவளையை கீழே வைத்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

" பிரச்சனை என்னவென்றால், மனிதர்கள் உண்மையாக இருக்கும்போது வெறுக்கப்படுகிறார்கள். போலியாக இருக்கும்போதோ நேசிக்கப்படுகிறார்கள். "-பாப் மார்லி.

Wednesday, 20 August 2025

155


#கற்கை_நன்றே_155

If you not willing to learn, no one can help you,
If you are determined to learn, no one can stop you

மனநிலை என்பது ஒரு நபரின் அல்லது குழுவின் நம்பிக்கைகள், மனப்பான்மை மற்றும் சிந்தனை முறைகள் ஆகும், அது அந்த நபர் உலகத்தை எப்படி உணர்கிறார், எப்படி சிந்திக்கிறார், உணர்கிறார் மற்றும் நடக்கிறார் என்பதை வடிவமைக்கிறது. மனநிலை என்பது உங்கள் உலகத்தையும் உங்கள் வாழ்க்கையையும் பார்க்கும் கண்ணோட்டம்.இதனை இருவகையாய் பிரிக்கின்றனர்

நிலையான மனநிலை (Fixed mindset) , இது மாறாது.இரண்டாவது ளர்ச்சி மனநிலை (Growth mindset) இது கற்றல் மற்றும் முயற்சி காரணமாய் மாற்றிக் கொள்ளலாம்.என 

 ஒரு விஷயத்தில் முடிவெடுத்து Mind நிலைப்பெற்று விட்டால் அதை மாற்றித் தெளிவுபடுத்துவது கடினம். மாற்றம் என்பது மாறாதது என்பது ஒவ்வொரு முடிவுகளுக்கும் கூட பொருந்தும்.

ஓர் உயரமான இடத்திலிருந்து கீழே போடப்படும் ஒரு பொருள் எவ்வளவு கனமானதாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவாக அது நிலத்தில் வந்து விழும் என்று அரிஸ்டாட்டில் கூறியதைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வந்துள்ளனர்.

 அரிஸ்டாட்டில் எல்லாக் காலங்களிலும் மிகச் சிறந்த சிந்தனாவாதி என்று கருதப்பட்டவர். எனவே, நிச்சயமாக அவரது கூற்று தவறாக இருக்காது. ஆனால், அதைச் சோதித்துப் பார்க்க, ஒரு துணிச்சலான மனிதன் ஒரு கனமான பொருளையும் ஒரு லேசான பொருளையும் எடுத்துக் கொண்டுபோய், ஒரு பெரும் உயரத்திலிருந்து இரண்டையும் கீழே போட்டிருந்தால், கனமான பொருள் முதலில் தரையைத் தொட்டதா இல்லையா என்பதைக் கண்கூடாகப் பார்த்துத் தெளிவடைந்திருக்கலாம்.

 ஆனால், அரிஸ்டாட்டில் இறந்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள்வரை யாரும் அதற்கு முன்வரவில்லை. 1589 இல், கற்றறிந்த பேராசிரியர்கள் சிலரைப் பீஸா கோபுரத்தின் அடியில் வந்து நிற்குமாறு கலீலியோ கேட்டுக் கொண்டார். 

பிறகு, அவர் கோபுரத்தின்மேல் ஏறிச் சென்று, பத்துப் பவுண்டுகள் கனம் கொண்ட ஓர் எடையையும், ஒரு பவுண்டு கனம் வாய்ந்த ஓர் எடையையும் அங்கிருந்து கீழே தள்ளினார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன.
ஈர்ப்புவிசை எல்லா பொருள்களின் மீதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை தெளிவாக விளக்கியிருப்பார்.

 ஆனால், தாங்கள் கண்கூடாகப் பார்த்ததை மறுக்கும் அளவுக்கு அப்பேராசிரியர்கள் தாங்கள் கேள்விப்பட்டு வந்துள்ள பொதுவான அறிவில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து அரிஸ்டாட்டில் கூறியதுதான் சரி என்று கூறி வந்தனர்.பின்னர் தொடர் ஆய்வு மூலம் இதனை நிரூபித்தனர்

உண்மைகளை விட கேள்விப்பட்டதையே நாம் அதிகம் நம்புகிறோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 19 August 2025

154


#கற்கை_நன்றே_154

நேற்றுவரை அப்பா ஓர் உயிர். இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்த சொல்லை உச்சரித்துக் கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்.

-வைரமுத்து

அலெக்சாண்டர் இந்தியாவுக்கு செல்லுமுன் இந்திய ஞானத்தைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் அதிசயங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தார்.

அதில் ஒன்று, வட இந்தியாவில் ஏதோ ஒரு குகையில் ஒரு சுனை இருப்பதாகவும், அந்த சுனை நீரை குடிப்பவர்கள் சாகாவரம் பெறுவர் என்பதுமாம்.

அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்புவதற்கு முன் மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அந்த குகையைக் கண்டுபிடித்தும் விட்டார்.

படைகளை பின்னே நிறுத்தி விட்டு அலெக்சாண்டர் மட்டும் முன்னேறி குகைக்குள் சென்றார். அது நீண்ட ஒரு குகை. குகையின் இறுதியில் சிறியதாக ஒரு சுனை இருப்பதைக் கண்டார். தண்ணீர் தெளிவாக சலனமற்று இருந்தது. அருகில் சென்றார். குனிந்தார். கவனமாக இரு கைகளையும் குவித்து தண்ணீரை அள்ளினார்.

என்ன ஒரு அற்புதம்.

இனிமேல் சாவில்லை. உலகம் முழுதும் செல்லலாம், உலகத்தை வெல்லலாம். மரணத்தை வென்றுவிட்டேன்.

அப்பொழுது ஒரு குரல் கேட்டது. தலையை நிமிர்த்திப் பார்த்தார். எதிர்க்கரையில் மிகவும் சோகமான தோற்றத்துடன் ஒரு காகம் அமர்ந்திருந்தது. அது பேசியது.

"ஒரு நிமிடம்…"

அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.

காகம் தொடர்ந்தது.

"ஒரு நிமிடம்…அந்த நீரைப் பருகுவதற்கு முன் என் கதையைக் கேளுங்கள். நானும் உங்களைப் போல்தான்…சில நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் மிகுந்த ஆசையுடன் இந்த நீரைப் பருகினேன். இந்த உலக சுகங்களை ஆசை தீர அனுபவித்தேன். இனி பார்க்க வேண்டியது எதுவும் இல்லை. அனுபவிக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லாம் அலுத்து விட்டது. என்னுடன் இருந்த உறவினர்களும் நண்பர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு என்று எவரும் இல்லை. எனக்கு வாழவும் பிடிக்கவில்லை. இந்த நீரைப்பருகி சாகா வரம் பெற்று விட்டதால் இறக்கவும் முடியவில்லை. வாழ்க்கை மிகவும் நரகமாகி விட்டது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்று யாராவது எப்பொழுதாவது வருவாராயின் அவர்களை எச்சரிக்கிறேன். இனி உன் விருப்பம்" என்று முடித்தது.

அலெக்சாண்டருக்கு ஒரே குழப்பம். கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தான். இறுதியில் அந்தக் காகம் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. மரணத்தின் தெளிவு பிறந்தது. உண்மையில் மரணம் என்பது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. குறுகியகாலத்தில்.இந்த வாழ்வு மூலம் பலருக்கு உபயோகமாக நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

பரூக் அப்துல்லா


என்னை பாதித்த ஒரு புகைப்படம் 

புகைப்பட தினத்தில் உங்களுக்காக.. 

முதல் படத்தில் நாம் பார்ப்பது டைப் ஒன்று டயாபடிஸ் எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற  வாழ்க்கை 

ஆம்... அந்த உயிர்காக்கும் அமிர்தம்  இன்சுலின் தான். 

நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது 

Dr.பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர். 
அறிவியல் ஆராய்ச்சியில் பண்டிதம் கிடையாது. 
கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது 

அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார் 

"கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது.. 

கணையம் முழுவதும்  நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது 
அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை. 

இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது அந்த ஒரு யோசனை தான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது. 

நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார் 

இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார்.

அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும் , துணைக்கு Dr.பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார். 

பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர்

அதை கணையம் முழுவதும்  நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர். 

அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர்

பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர். 

அந்த உயிர் காக்கும் திரவம் தான் "இன்சுலின்" 

இந்த கண்டுபிடிப்புக்காக 1923க்கான நோபல் பரிசு Dr.பாண்டிங் மற்றும் Dr.மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது. 

இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். 

வரலாற்றில் நிலைத்தார்... 

மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்..ஒரு மனிதனின் சுயநலமின்மை எப்படி உலகை மாற்ற முடியும் என்று புரியும் 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 
#உலகபுகைப்படதினம்

Monday, 18 August 2025

153


#கற்கை_நன்றே_153

செம்பைத் தினந்தோறும் தேய்த்துக் கழுவாவிடில் களிம்பு ஏறிவிடும். நம் மனமும் அப்படித்தான்

-பரமஹம்சர்

வெளிச்சம் கொண்டு அனைத்தையும் தேடலாம் இருளைத்தவிர"

மனம் என்பது அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு.ஒருவர்  “நான் இன்று பூங்காவிற்கு போகலாமா?” என்று சிந்திப்பது..சிந்தனையின் செயல்பாடு, இதை மனம் செய்கிறது.
ஒருவரை பார்த்து பயம் ஏற்படும் போது..பயம் என்ற ஒரு உணர்வு, மனத்தின் வெளிப்பாடு.மனம் உடல் மற்றும் மூளையுடன் தொடர்புடைய ஒரு செயல்பாடாக இருக்கிறது. சில தத்துவம், மனம் உடலுடன் ஒன்றும், முற்றிலும் வேறுபட்டதாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது

கோவை மருதமலைக்கு செல்லும் போது பாம்பாட்டி சித்தர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.எப்போதும் பாம்புடன் இருப்பார், பாம்பு பிடிப்பதில் வல்லவர் அல்லது ஏதோ அடைமொழி போல உண்டு என நினைத்திருந்தேன்.அவரை பற்றி ஏ.எம் ராஜகோபாலன் எழுதியதை படித்த போது வியப்பே மேலிட்டது.

பாம்பாட்டிச் சித்தர் என்றால் ஏதோ பாம்புகளுடன் பயமில்லாமல் சித்து விளையாடும் சக்தி பெற்றவர் என்று நினைத்து விடாதீர்கள். பாம்பு என்று அவர் கூறியது மனம் என்னும் பாம்பைத்தான்! 'பாம்பாட்டி' பாம்புடன்தான் இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்தப் பாம்பாட்டி ஒவ்வொரு விநாடியும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எந்த விநாடியும் கொடிய விஷப் பாம்பினால் அந்தப் பாம்பாட்டிக்கு மரணம் ஏற்படக்கூடும்.

 அந்தப் பாம்பைப் போன்றுதான் மனித மனமும். அதனைக் கட்டுப்படுத்தி நம்மிடம் தாவித்திருக்கும்வரை ஆபத்தில்லை ஆனால் ஒரு விநாடி அஜாக்கிரதையாக இருந்தாலும், நாம் உறுதி தளர்ந்தாலும் அந்த விநாடியே அது தவறான வழியில் நம்மை இழுத்துச் சென்று. நமது நல்வாழ்க்கையில் இருந்து நம்மை வீழ்த்திவிடும்.

இத்தகைய மனம் என்ற நச்சுப்பாம்பைத் தன் இஷ்டப்படி கட்டுப்படுத்தி, ஆட்டி வைத்ததால், அம்மகாபுருஷருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டது.அவர் ஒரு முறை தவம் செய்த போது..இளைஞன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அவனை தேற்றி காரணம் கேட்டபோது,தவறான வாழ்க்கை வாழ்ந்ததை கூறினான். மறுமொழியாக சித்தர்.. அதிகமாக அனுபவித்த இன்பங்களுக்கு பின்னாளில் ஆரோக்கியத்தை விலையாக கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

"பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரும் ஒருமாது பார்த்தபோது
பையோட கழன்றதென்று ஆடுபாம்பே

இறைவன் அளித்த செல்வத்தினால் மதி இழந்தான் என்று கூறும் பாடல் பாடி..கஞ்சமலை மூலிகை கொடுத்து அவனைக் காப்பாற்றினார்.மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மனதை கட்டுப்பாட்டில் வைக்காதது தான் காரணம் என்கிறார்.மனம் எனும் விளைநிலத்தில் ஆசை என்னும் களையை களைந்து..மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? எனும் வாலியின் வரிக்கு அன்றே உயிர் கொடுத்திருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 17 August 2025

152


#கற்கை_நன்றே_152

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்!சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல்;கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல்

-பாரதியார்

நம் வாசிப்பின் மிகச் சிறந்த சொத்தாக இலக்கியம் கருதப்படுகிறது. ஆனால் நம் முன்னோர்களின் அறிவு கருவூலமாக நாட்டுப்புற இலக்கியங்கள் திகழ்கின்றன. அவை வாய்வழியாக சொல்வதால் பல்வற்றை மூடநம்பிக்கை, கட்டுக்கதை என்று ஒதிக்கிவிடுகிறோம். ஆனால் அதில் உள்ள வாழ்வியல் கதைகள் என்றும
 நம் உத்வேகப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. அவ்வகையில் சமீபத்தில் இறையன்பு உரையில் சில மேற்கோள்கள் கூறியது சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

ஒருமுறை கம்பர் மாலை வேளையில் நடைபயின்ற போது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்று ஓர் ஏற்றம் இறைப்பவர் பாடியதாகவும், அடுத்த வரி எப்படி இருக்கும் என்று இரவு வரை தூங்காமல் அதையே கம்பர் யோசித்திருந்தார்.

மறுநாள் அவர் எப்படி முடிப்பார் என்று அதே வயலுக்குச் சென்றபோது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே' என்று முடித்தாராம். கம்பரே அசந்து போனாராம்.

நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கும் கவித்திறன் அசாத்தியமானது.

கைம்பெண் ஒருத்தி கணவனை நினைத்துக் கேள்வி கேட்பதுபோல் ஒரு நாட்டுப்புறப் பாடல். (மாலையிட்ட மங்கையில் கேட்டிருப்பீர்கள்)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று என்னை நிறுத்தி வழிபோனவரே

என்கிற அந்தப் பாடலில் அத்தனை கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த உலகம் நெருஞ்சி பூத்த காடுபோல அழகாக இருக்கிறது, தூரத்திலிருந்து பார்ப்பதற்கு, மஞ்சை மசேலென்று அத்தனை அழகாக அது இருக்கும். கண்களைக் கவர்ந்திழுக்கும்.

நாமும் மயங்கி உள்ளே சென்றால் கால்களை முள்ளாய்க் குத்தும். அதைப்போல கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இவ்வுலகம் நெருஞ்சியைப்போல் இருக்கும் என்று பாடுகிறாள் அவள்.

எத்தனை பொருள் பொதிந்த பாடல்!

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்றெல்லாம் கூறுகிறோம். ஏன் கடுகளவு, மிளகளவு என்று கூறக் கூடாதா!

கைமணலைக் காட்டிலும் கடுகு சிறியதில்லையா!
பிறகெதற்கு கைம்மண் உதாரணம்.

"குறுகும் கைமணல் போல' என்கிற நாட்டுப்புறப் பாடல் ஒன்று உண்டு. கை நிறைய மணலை அள்ளினால் அது கை இடுக்குகளின் வழியாக வெளியே விழுந்து கொஞ்சம்தான் எஞ்சியிருக்கும். அதைப்போல நாம் படித்தவற்றில்கூட நாளடைவில் பலவற்றை மறந்துவிட்டுச் சிறிது கல்வி அறிவோடு மட்டுமே இருப்போம் என்பதை அந்தப் பழமொழி குறிப்பிடுகிறது.

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம்அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய்!என்று கேட்க
காகமோ !சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம்!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !
அந்த வழியே சென்ற புலி !
சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும் என் அந்த நாட்டுப்புறக் கதை முடியும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday, 14 August 2025

151



#கற்கை_நன்றே_151

“சுதந்திரப்போராட்ட காலத்தில் எங்கு பார்த்தாலும் காந்திகளாகத் தெரிந்தார்கள். சுதந்திரம் கிடைத்த பின்னர்  தெரிந்தது, காந்தி மட்டும்தான் காந்தி என்று”

- கிரிராஜ் கிஷோர்

பொதுவாய் சுதந்திரம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் நம்மில் உள்ளன.முதலில் பிரம்மித்து பார்ப்பது,பிறகு இந்த சுதந்திரம் தேவைதானா என தம் கருத்தில் பிறழ்வது, பின்பு மீண்டும் தருக்க ரீதியில் மனம் ஒரு சமநிலை அடைந்து சுதந்திரம் நல்லதுதான் என முடிவுக்கு வருவது. இந்த மனமாற்றமானது மாறிக்கொண்டே இருக்கும்.நீரில் மூழ்கியவனுக்கு வெளிவர வேண்டும் என்ற இலக்கு மட்டுமே இருக்கும்.அதுபோலத் தான் அக்காலத்தில் பெற்ற சுதந்திரமும்

#அட்லியின் அறிவிப்பு 

1946 ஆகஸ்ட் 16ஆம் தேதி "இடைக்கால அரசாங்கத்தை" அமைக்குமாறு வைஸ்ராய் வேவல் பிரபு நேருவை கேட்டுக்கொண்டார். நேரு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஜின்னா முதலில் மறுத்து விட்டார்.

அந்நாளை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தார்.கல்கத்தாவில் இனக்கலவரம். திட்டமிட்ட தாக்குதல்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வைஸ்ராய் வேவல் பிரபு செயலிழந்தார். அந்த நெருக்கடியான நேரத்தில் தொழிற்கட்சியின் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 *1948 ஜூன் முதல் தேதிக்குள் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்து விடும். *அதிகார பொறுப்பை ஒப்படைப்பது என்பது பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யும். *வேவல் பிரபுவுக்கு பதில் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்படுவார்

#மெளன்ட்பேட்டன் திட்டம்

இந்தியா விடுதலை அடைவதற்கு சரியாக 73 நாட்களுக்கு முன் இந்தியாவை இரண்டாக பிரித்து விடுவதற்கான முடிவெடுத்தார் பேட்டன். இந்திய பிரிவினை பற்றி ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன், நேரும் ஜின்னாவும் டெல்லி வானொலி மூலம் அறிவித்தனர். அந்த அறிவிப்புக்கு இந்திய விடுதலைச் சட்டம் வடிவம் கொடுத்தது. தேசிய காங்கிரஸ் அங்கீகாரம் அளித்தது. உலக வரலாற்றில் சிக்கல் மிக்க "விவாகரத்து" நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவின் வளமிக்க மாகாணங்களான பஞ்சாபையும் வங்காளத்தையும் கூறுபோட இசைந்தனர்.

#விடுதலை நாள்

ஆகஸ்ட் மாதம் 14-15 ஆம் தேதி நள்ளிரவு பிறந்தது. நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் கூட்டம் கூடியது. ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். சரியாக இரவு 12 மணிக்கு சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை உணர்ச்சியோடும் பெருமிதத்தோடும் பாடினார். ஜவகர்லால் நேரு இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

" நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த ஒப்பந்தத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த நள்ளிரவு நேரத்தில் உலகமே உறங்கிக்கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ்வதற்காக விழித்துக்கொள்கிறது.

 நேரு முன்மொழிந்த தீர்மானத்தை  செளத்ரி காலிகுவாஸ்மான் வழிமொழிந்தார். இறுதியில் உரையாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் தீர்க்கதரிசனத்தோடு குறிப்பிட்டதாவது..

" நமக்குள்ள வாய்ப்புகள் பெரிது.. நாம் அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் ஊழல், உறவினர்களுக்கு சலுகை, அதிகார ஆசை, ஆதாயம் பெறல், கருப்புச் சந்தை ஆகியவற்றின் அடிச்சுவடுகளை அகற்றாவிடில் நிர்வாகத் திறமையும், நல்வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதை உறுதி செய்ய முடியாது.

  பின்னர் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். இந்தியா விடுதலை அடைகிறது என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.  அன்றிலிருந்து அரசியலமைப்பு சட்டமன்றம் இந்தியாவின் நாடாளுமன்றம் ஆயிற்று. மக்களின் ஆரவாரத்திற்கிடையே ராணுவ அணிவகுப்பை நேரு மற்றும் அவரது சகாக்கள் உடன் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆனால் அதனைப் பார்த்த மகாத்மா காந்தி அங்கு இல்லை நவகாளியில் இருந்தார்.

#பிரிவு

பிரிவினை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் முஸ்லிம்லீக் முறைப்படி அத்திட்டத்தை ஜூன் 9 இல் ஏற்றுக்கொண்டது. அதன்பின் காங்கிரஸ் செயற்குழு தன் சம்மதத்தை ஜூன் 12ஆம் தேதி தெரிவித்தது. சீக்கியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிரிவினையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் தேசம் துண்டாடப்படுவதை கடுமையாக எதிர்த்தனர்.

எப்படியாவது பிரிவினையை தவிர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் காந்தி  சென்று ஜின்னாவை அவருடைய இல்லத்தில் பலமுறை சந்தித்துப் பேசினார்.ஐக்கிய இந்தியாவை காண வேண்டும் என்ற பல தலைவர்களும் விரும்பினார்கள். ஆனால் நடைமுறை நிகழ்ச்சிகள் நினைப்புக்கேற்றவாறு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவை உயிருக்கும் மேலாக நேசித்த காந்தியே தேசப் பிரிவினை என்ற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

#தேசியக்கொடி

1921ம் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது பிங்காலி வெங்கையா   30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். சில மாறுதல்களுக்கு பின் நமது தேசிய கொடி உருவானது.

நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேசரி 'இந்திய பச்சை' என்று பெயர். உலகிலுள்ள வண்ண தர நிர்ணய பட்டியலில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. எனவே இந்திய தேசிய கொடிக்கு என்ற விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

" சுதந்திர தின உரையில் ராதாகிருஷ்ணன் ஒரு மேற்கோளை குறிப்பிட்டார் "நேற்று வரை எந்த தவறுக்கும் நாம் ஆங்கிலேயரை குற்றம் சாட்டினோம். ஆனால் இன்று முதல் இந்த நிமிடம் முதல் செய்யக்கூடிய அனைத்து தவறுகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிறோம் என்று கூறினார். இது தான் நிதர்சன உண்மை. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துவோம்.

"வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய்விடும் வெறும் தகவல்களாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம் என்பார் எஸ்.ரா.

வரலாற்றை வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்போம். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 13 August 2025

150


#கற்கை_நன்றே_150

Perfection is not an action but it's a mindset.

உன்னதம் என்பது செயலல்ல; மனநிலை

பொதுவாக தனக்குள் இருப்பதை
வெளியே பார்ப்பதுதான்
Perfection.மற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒழுங்கை திருப்தி செய்யத்தான் நினைக்கிறோமோ தவிற,நாம் நம்மை perfectionist ஆக முயல்வதில்லை. மாறாக அதற்கு மெனக்கெடுகிறோம்.வலிந்து நமக்குள்ளேயே திணிக்கிறோம். இன்னும் சிலர் நாம் அவ்வாறு இல்லையே என ஏங்குகின்றனர். ஒரிஜினாலிட்டியை தழுவ மறுதலிக்கிறோம்.இது குறித்து நியாண்டர் செல்வனின் கட்டுரையில் இது குறித்து சொல்லியிருப்பார்..

பர்ஃபெக்சனைத் தேடுகையில் நம் ஒரிஜினாலிட்டி எங்கேயோ காணாமல் போய்விடுகிறது. பொய்யான அருவத்தைவிடப் பிழைகள் நிறைந்த ஆனால் ஒரிஜினலான நிஜ உருவத்தையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 ‘தைரியம் என்பது நம் ஒரிஜினாலிட்டியை உலகுக்குக் காட்டுவதுதான்’ என எழுதுகிறார் பிரேனே பிரவுன். நம் பலவீனங்களை மறைத்துக்கொள்வதுதான் உண்மையான பலவீனம். ‘இதான் என் பலவீனம்’ என உண்மையைச் சொல்கையில் நம் பலவீனம் பலமாக ஆகிறது. 

ஏனெனில் பலவீனம் என்பது பலத்தின் மறுபுறம். ‘உன் வீக்னஸ் என்ன?’ என நேர்முகத்தேர்வில் கேட்டால், ‘எனக்குக் கூட்டம் பிடிக்காது, பார்ட்டி பிடிக்காது. சோசியலைஸிங் பிடிக்காது. ஆனால் ஆழமாகச் சிந்தித்து எழுதுவேன்’ என்று பலவீனம், அதன் மறுபுறமான பலம் இரண்டையும் சொல்லவேண்டும். 

உங்களின் பலம் என ஒன்றிருந்தால் அதன் எதிர்ப்புறமாக பலவீனம் என ஒன்று இருந்தே தீரும். அதலடிக்ஸில் சிறப்பாக இருப்பவர்கள் நன்றாகப் படிக்கமாட்டார்கள். புத்தகப் புழுக்களிடம் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னஸ் குறைவாக இருக்கும். நிர்வாகத்திறன் கூடுதலாக இருந்தால் டெக்னாலஜி ‘வீக்’காக இருக்கும். 

பலவீனத்தைச் சரிசெய்கிறேன் எனப் போனால் பலம் பலவீனமாகும். பலவீனம் என நினைப்பது உங்கள் பலவீனமே அல்ல, அது பலத்தின் மறுமுனை என அறிந்தால் மனதில் அமைதி பிறக்கும். அதற்கேற்ற வேலைகளைத் தேடி அடைந்தால் கெரியரின் உச்சத்துக்குச் செல்வீர்கள். 

பர்ஃபெக்சனைத் தழுவ முயல்வதைவிட ஒரிஜினாலிட்டியைத் தழுவுங்கள். பர்ஃபெக்ட் மனிதராக உங்களை மற்றவர்களுக்குக் காட்டுவதைவிடக் குறை நிறைகளுடன் காட்சியளிப்பதற்கே அதிகத் துணிவு வேண்டும். அதிலேயே அதிகப் பலனும் கிடைக்கும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 12 August 2025

149


#கற்கை_நன்றே_149

போட்டிக்கும்... பொறாமைக்கும் என்ன வேறுபாடு?

 அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!

-இறையன்பு

எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர். அவரிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். அதில் ஒரு முக்கியமான கேள்வி 

நீங்கள் மலை ஏறிய போது எது உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது? குளிரா? பனிப் பாறைகளா? சுவாசிப்பா என்று பலரும் பல மாதிரி கேட்டார்கள்.

ஹிலாரி நீங்கள் கூறிய எந்த விஷயம் எனக்கு சவாலாக இல்லை. ஆனால் அவ்வப்போது என் உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தை வெல்வதை எனக்கு சவாலாக இருந்தது. அதாவது "உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது. பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கின்றார்கள். உயிரைக் கூட விட்டிருக்கின்றார்கள். எனவே உன் முயற்சியை விட்டுவிடு" என்று என் மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணம் தான் எனக்கு சவாலாக அமைந்தது. ஆயினும் நான் அந்த எண்ணத்தை புறந்தள்ளி, விடாமல் போராடியதால் வெற்றி பெற்றேன் என்று சொன்னார். நாம் வெற்றி கொள்வது மலைகளை அல்ல நம்மை நாமே என்று இறுதியாக கூறினார்.

நாம் நம்முடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல் எதுவும் மாறப்போவதில்லை. ஆனாலும் நம் மனது உண்மையில் அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. யாராவது ஒருவர் கடவுள் ரூபத்தில் வந்து நமக்கு உதவுவார் என்றும், கடவுளே வந்து உழைக்காமல் ஏதேனும் ஒரு பலனை தருவார் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோம்.

சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. 
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...

காலையில் ஒருவன் எழுந்து கொள்ளும் போது
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....

குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...
.
வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்...
அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது...

வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது..

வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது...

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...

இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...

அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்...
அவனுக்கு வந்த டோக்கன் எண் 999
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...

 அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு வந்தது...நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்..வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்.... 9-வது போட்டியில் பங்கெடுத்துக்கொண்டான்....
பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறான். 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும் கட்டினான்....

போட்டி துவங்கியது...
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்....
போட்டி முடிந்தது....

இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 11 August 2025

148


#கற்கை_நன்றே_148

தூண்டிலின் நோக்கம் மீனைப் பிடிப்பது.மீனைப் பிடித்ததும் தூண்டிலை மறந்துவிட வேண்டும்.சொற்களின் நோக்கம் கருத்தைத் தெரிவிப்பது.கருத்துக்கள் தெரியப்படுத்தப் பட்ட பிறகு சொற்களை மறந்துவிட வேண்டும்.

சொற்கள் தகவலுக்காக உருவாக்கப்பட்டவை.ஆனால் நாம் சொற்களை பிடித்துக் கொண்டு தகவல்களை மறந்துவிடுகிறோம்

-சங் சூ

ஒவ்வொரு சொல்லும் நம் எண்ணத்தில் அதிர்வுகளை உண்டாக்குகின்றன. அந்த அதிர்வுகள் நேர்மறையாக இருக்கும் போது நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. அதுவே எதிர்மறையாய் மாறுகிறபோது அது எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு மன அழுத்தத்தையும் அச்சத்தையும் தருகிறது. 

ஐந்து வயது வரை எதனையும் கற்றுக் கொள்ளும் திறமை உள்ள குழந்தை பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்போது.. உன்னால் முடியாது, உனக்கு வராதா என்ற சொல்லை கேட்கும் போது குழந்தை கடைசி வரை அதிலிருந்து வெளிப்பட முடியாமல் திணறுகிறது.
அதனால்தான் எம் எஸ் உதயமூர்த்தி போன்ற அறிஞர்கள் நம்பு தம்பி நம்மால் முடியும் ,உன்னால் முடியும் என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தினர்.

ஒரு விவசாயி அழகான கன்றுக்குட்டியை வாங்கிய அதை தோளில் மேல் ஏற்றிக்கொண்டு தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் மூன்று திருடர்கள் அவரை ஏமாற்றி அந்த கன்றுக்குட்டியை திருடுவது என்பது என்று முடிவு செய்தார்கள் முதல் திருடன் அவர் முன்னாள் சென்று ஐயா நாயை போய் ஏன் தோளில் உட்கார வைத்துள்ளீர்கள் என்றான் விவசாயிக்கு ஆச்சரியம் இது நாய் இல்லை கன்றுக்குட்டி என்றால் அவனோ நீங்கள் நாயை கன்று கட்டி என்று எப்போது சொல்லத் தொடங்கினீர்கள் என்று கேட்டு வட்டு சென்று விட்டான்.

இரண்டாவது திருடன் அடுத்ததாக சென்று நாயை போய் தோளில் வைத்துள்ளீர்களே? இது சாஸ்திரத்துக்கு விரோதம் இல்லையா? என்றார். இப்போது மீண்டும் விவசாயி இது கன்றுக்குட்டி என்று வலியுறுத்துகிறார். நீங்கள் போய் மருத்துவரை பாருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் சென்று விடுகிறான். இப்போது மூன்றாவது திருடன் வந்து ஐயா வீட்டிற்கு இந்த நாயையா கூட்டிப் போகிறீர்கள் என்றான். விவசாயி இப்போது அவருக்கு குழப்பம் ஏற்பட்டு கன்று குட்டியின் கயிறை தூக்கி வீசிவிட்டு நடந்து சென்றார் திருடர்கள் அந்த கண்டினை பிடித்து வைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டு சென்றனர். 

இதில் நாய் என்ற ஓர் எண்ணம் முதலில் ஏற்பட்டு, பின்பு சந்தேகமாய் வலுப்பட்டு, இறுதியில் ஒரு தவறான முடிவுக்கு வந்து விடுகிறார். இதேபோல் நம் மீதும் பல்வேறு எண்ணங்கள் தரப்படுகின்றன. திணிக்கப்படுகின்றன. நாம் அவற்றையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டு விடுகிறோம். நமது எண்ணமும் அவர்களின் சொற்களின் பின்னே சென்று விடுகிறது.தேஜ் ஸர்ஶ்ரீ என்பவர் worry fast எண்ணம் எண்ணங்களின் விரதம் அனுசரிக்க வேண்டும் என்கிறார். இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்களை பெருக்குவதற்கு அல்லது எண்ணங்களை அலசுவதற்கு உதவி புரிவதாக சொல்கிறார். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்போம் தேவை இல்லை எண்ணங்களை வளர்ப்போம் 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday, 10 August 2025

147


#கற்கை_நன்றே_147

“உங்கள் முயற்சியைப் பாதியிலேயே கைவிட நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டால், பிறகு அது ஒரு பழக்கமாக ஆகிவிடும்,” 

-வின்ஸ் லொம்பார்ட
(கால்பந்து பயிற்றுவிப்பாளர்)

நாம் பயன்படுத்தாத எதையும் நாம் இழந்துவிடுவோன் என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ்.நமக்கு உட்கார்ந்திருப்பது தான் பிடிக்கும் என்று எண்ணி சில ஆண்டுகள் சக்கர நாற்காலியில் செலவிடுவது என்று முடிவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் நடக்க முடியாது. உங்கள் கால்கள் தம் இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. இது எந்த ஒரு திறமைக்கும் மிகவும் பொருந்தக் கூடியது.

 ஒரு வீணை வாசிப்பதை நீங்கள் சில ஆண்டுகள் நிறுத்தினால் பிறகு அதனை உங்களால் சுலபமாக வாசிக்க முடியாது. படைப்புத்திறன் மிக்க உங்கள் கற்பனையை பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தினால் அது மாயமாய் மறைந்து விடும். ஆகவே  நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் 

நீங்கள் ஒரு விஷயத்தை ஒரு கலையில் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது நீங்கள் அதிக துணிச்சல் கொண்டவராக மாறிவிடுகிறீர்கள். நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்தும் போது மிகவும் வலிமை அடைந்தவராக ஆகிவிடுகிறோம்.ஒன்றில் ஈடுபடும் போது நாம் தொடர்ந்து அதில் அக்கறை காட்டுகிறோம். எதுவும் தேவையில்லை எதுவும் முக்கியமில்லை என்று நாம் நமக்கு சொல்லிக் கொள்ளும் போது 
நாம் ஒரு பிரச்சனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். 

நம் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மனதின் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தும் போது நம் மனம் நமக்காக தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.

ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "Win Win Method"
அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.

இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் Win Win Method

தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமானது தொடர்ந்து பயிற்சி செய்யும் போதும் நாம் சிறப்பு வருகிறோம் நம்மிடம் இருப்பவற்றை நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்தவில்லை என்றால் அவை நம்மிடம் நீண்ட காலம் தங்காது ஆகவே பயிற்சி செய்வோம் தொடர்ந்து இயங்குவோம் 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 8 August 2025

ஜானகிராம்


இன்று உலக பழங்குடிகள் தினம் - வாழ்க்கை குறித்த ஆப்ரிக்க தேசத்து பழங்குடினரின் சொலவடைகள்: 

1. “வேகமாக செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். தொலைவுக்கு செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்.”
அர்த்தம்: குழுவாக இணைந்து செயல்பட்டால் நீடித்த வெற்றியை அடையலாம்.

2. “ஞானம் ஒரு பவோபாப் மரம் போன்றது; ஒரே மனிதன் அதைத் தழுவ முடியாது.”
அர்த்தம்: யாருக்கும் முழுமையான அறிவு இல்லை — முழு உண்மையை அறிய பிறரின் பார்வையும் தேவை.

3. “உள்ளுக்குள் பகைவர் இல்லாவிட்டால், வெளியிலிருந்து வரும் பகைவர்கள் உங்களை காயப்படுத்த முடியாது.”
அர்த்தம்: உள்ளார்ந்த அமைதியும் தன்னம்பிக்கையும் வெளிப்புற ஆபத்திலிருந்து காக்கும்.

4. “கிராமம் ஒரு குழந்தையை புறக்கணைத்தால், அந்த வெப்பம் மொத்த கிராமத்தை எரித்து விடும்.”
அர்த்தம்: சமூகம் ஆதரவற்றவர்களை புறக்கணித்தால் அவர்கள் எதிர்ப்பு மற்றும் அழிவுக்குத் தள்ளப்படுவர்.

5. “மழை ஒரே வீட்டின் கூரையில் மட்டும் பெய்யாது.”
அர்த்தம்: நன்மை, தீமை எல்லோருக்கும் வரும் — யாரும் விலக்கு அல்ல.

6. “கைகளை கழுவ தெரிந்த குழந்தை மூப்பர்களுடன் உணவருந்தும்.”
அர்த்தம்: மரியாதை, ஒழுக்கம், தயாரிப்பு ஆகியவை ஞானிகளிடையே இடம் பெறச் செய்கின்றன.

7. “சிறந்த சமையல் பாத்திரமாக இருந்தாலும் அது தானாக உணவைத் தராது.”
அர்த்தம்: வளங்கள் இருந்தாலும், செயல் மற்றும் முயற்சி இல்லாமல் பயன் இல்லை.

8. “சிங்கம் பேச கற்றுக்கொள்ளும் வரை, வேட்டையின் கதை எப்போதும் வேட்டைக்காரனைப் புகழும்.”
அர்த்தம்: வரலாறு அதைச் சொல்பவரால் வடிவமைக்கப்படுகிறது; குரல் கேட்கப்படாதவர்கள் மறக்கப்படுவார்கள்.

9. “ஒரே வளையல் சிணுங்காது.”
அர்த்தம்: ஒரே மனிதன் தனியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது — ஒத்துழைப்பு அவசியம்.

10. “இரவு எவ்வளவு நீண்டிருந்தாலும், விடியல் வரும்.”
அர்த்தம்: எந்தத் துன்பமும் என்றென்றும் நீடிக்காது; நம்பிக்கை எப்போதும் பிறக்கும்.

-பகிர்வு

புதிய கல்விக் கொள்கை


தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025
-மணிகண்டபிரபு

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழு இன்று இன்று தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது இதனை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி கல்விக்கொள்கை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது

10 தலைப்புகளில் 83 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
இன்றைய கல்விச் சூழலில் கொரோனாவுக்கு பிந்தைய கற்றல் இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் திறன்களின் தேவைகள் போன்ற புதிய சவால்களை கருத்தில் கொண்டு இக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு இயலிலும் தமிழக பள்ளிக்கல்வி யின் தற்போதைய நிலை.. எதிர்காலத்துக்கு தேவைப்படும் திட்டங்கள் நோக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறி அதற்கான தீர்வுகளையும் கூறுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் சமச்சீரானா நிலைத்தன்மை உடைய எதிர்கால கல்வி முறைக்கான பள்ளிக் கல்வியை உருவாக்குவதற்கான நோக்கம் இலக்காக கொண்டுள்ளது. 
மாநில கல்விக் கொள்கைக்கான தேவையையும் வலியுறுத்துகிறது. 
எதிர்காலத்தில்  டிஜிட்டல் என்பது அவசியமாய் இருக்கிறது. அனைவருக்குமான சமமான தொழில்நுட்ப வாய்ப்புகளை உறுதி செய்வது உடனடி தேவையாக கூறுகிறது. 

தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் காலை உணவு மற்றும் தமிழக அரசு வழங்கக்கூடிய இலவச நலத்திட்டங்கள், தற்போது அமலில் இருக்கும் கற்பித்தல் முறைகள் மதிப்பீட்டு முறைகள் மன்ற செயல்பாடுகள் மதிப்பீட்டு தேர்வு முறைகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலிலும் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது.

2024 இன் படி பள்ளிக்கல்வித்துறை 58,800க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் 1.16 கோடி மாணவர்களையும் 3 லட்சம் ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. 

*பெண் கல்வியில் பின்தங்கிய மற்றும் பாலின இடைவெளி அதிகம் உள்ள வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு கூடுதல் உள்கட்டமைப்பு, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை போன்ற இவ் வட்டாரங்களின் மேம்பாட்டுக்கான கவனம் செலுத்தும் விதமாக எதிர்கால கல்விக் கொள்கை முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டியலினத்தவர் பழங்குடியினர் சிறுபான்மையினர் ஆகியோரிடம் காணப்படும் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் இடைநிற்றல் விகிதம் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன.
முதல் தலைமுறை கற்போர், கற்றல் இடைவெளி சார்ந்த பிரச்சனைகளை கவனம் ஈர்க்கும் அறைகூவல்களாக கூறியுள்ளது.

*தற்போது ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை தொழில் வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது மேலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

*பெற்றோர் ,கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு(BLN) இயக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுத்தப்படுவார்கள் வாசிப்பு இயக்கங்கள் வீட்டுக் கற்றலுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மொழியில் உரையாடுவதற்குரிய தொடர்பு சாதனங்கள் தயாரிக்கப்படும்.

*அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் இணைந்த கலைத்திட்டம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பிற்காலத்தில் பல்வேறு பாடம் சார்ந்த கற்றலுக்கு அடித்தளம் அமைக்கலாம்

*3,5&8 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவாய்வுகளை SLAS தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதன் மூலம் பாடப் பொருளை புரிந்து கொள்ளுதல் புதிய சூழ்நிலைகளில் பயன்படுத்துதல் ஆகிய திறன்களை மதிப்பிடும் வகையில் உயர்நிலை வினாக்கள் கேட்கப்படும்.

*இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது.

*அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும் மாற்றங்களை பரிந்துரைக்கவும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

*அடிப்படை நிலை, நடுநிலை, இடைநிலை ,மேல்நிலை என 5+3+2+2 நிலை அடிப்படையிலான கலைத்திட்ட வடிவமைப்பு

*மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வியை வலுப்படுத்தல், தொழில்நுட்ப ஆய்வகங்களில் மேம்பட்ட செய்முறை பயிற்சி, இடைநிலை வகுப்புகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி கட்டகங்களை அறிமுகப்படுத்துதல் ,தொழில் கல்வி இணைப்புகளை ஊக்குவித்தல் போன்றவற்றை வலுப்படுத்துதல் வேண்டும் என பரிந்துரைக்கிறது.

*இருமொழிக் கொள்கை, தொடக்கநிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு இரண்டு உடற்கல்வி பாட வேலைகள் இருப்பதை கட்டாயமாக்குதல்.

*விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடற்கல்வி SCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கென தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்

*பள்ளியினுள் பள்ளிகளுக்கு இடையே வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துதல். பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் கலைக்கல்வியை கட்டாயமாக்குதல்.

*அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உடல் இயக்க வளர்ச்சியை கற்பித்தல் முறை மற்றும் குழந்தை மைய கற்பித்தல் உத்திகள் சார்ந்து பயிற்சி அளித்தல். 

*புதிதாக பாடத்தை உருவாக்குவதற்கு பதிலாக தற்போது நடைமுறையில் உள்ள பாடகட்டமைப்புக்குள் ஸ்டெம் STEAM கருத்துக்களை ஒருங்கிணைத்தல்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பருவத்திற்கும் பல்வேறு பாடங்கள் சார்ந்த ஸ்டெம் செயல் திட்டத்தினை கட்டாயமாக்குதல் 

*எண்ம உள் கட்டமைப்பில் 100% இலக்கை அடைவதற்கு பள்ளிகளில் இணைய வசதிகளை விரிவாக்குதல். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு மானிய விலையில் மின்னணு கருவிகளை வழங்குதல்.

*பசுமை பள்ளி என்னும் தரநிலை உருவாக்கப்பட வேண்டும். அதில் மழை நீர் சேகரித்தல் ,சூரிய சக்தி பயன்பாடு, புல்வெளி பராமரித்தல் மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கட்டாய காலநிலை பாடத்திட்டம் 1 முதல் 5 ,6 முதல் 8 ,9 முதல் 12 வகுப்புகளுக்கு உருவாக்குதல் 

*TN-SPARK இணையவள கருவிசார் கல்வி திட்டத்தினை பொருத்தமான வகுப்புகளுக்கு விரிவுபடுத்துதல்.
மனப்பாட முறைகளிலிருந்து புதிய சூழல்களில் பெற்ற அறிவினை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறுதல்

*ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேக்கமின்மை கொள்கையை நடைமுறை ப்படுத்தி வருவதால் தேர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்ட தேர்வு முறையிலிருந்து விலகி, தொடர்ச்சியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் திறன் அடிப்படையில் வலியுறுத்துகிறது.

*ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் மற்றும் கற்பித்தல் திறன்களை வலுப்படுத்துவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி விரிவு படுத்தப்படும். 

*எண்ம வள வங்கிகள் உருவாக்கப்பட்டு புதுமையான மாதிரிகளை வழங்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

*குழந்தைகள் நல மேம்பாடு பகுதிகளில் போக்சோ நடைமுறை குறித்த விழிப்புணர்வு, மாணவர் மனநலன் மனவளர்ச்சி நல மேம்பாடு, கட்டணம் இல்லாத உதவி தொடர்பு எண்கள், இணையதளங்கள், தொடர் நல ஆய்வ ஆகியவை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

*சிறுவர் சிறுமிகளுக்கான தனித்தனியான பயன்படுத்தத்தக்க கழிவறைகள், குடிநீர், மின்விசிறி, மின் விளக்குகள் விளையாட்டு உட்கட்டமைப்பு, அறிவியல் ஆய்வகங்கள் போன்ற இன்றியமையாத பள்ளி வசதிகள் அடுத்த 3 ஆண்டுகளில் 100% அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

*நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி,
முன்னாள் மாணவர் ஈடுபாடு- விழுதுகள், பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துதல், பள்ளி மேம்பாட்டு முன்னெடுப்புகளை வளர்த்தல் சமுதாய பங்கேற்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 7 August 2025

146


#கற்கை_நன்றே_146

அன்பை விதைப்பவர்கள் மட்டுமே
நிம்மதியை
அறுவடை செய்கிறார்கள்.!

-புத்தர்

புத்தரின் கொள்கைகளை வாழ்வியலோடு இணைத்துக் கூறுபவர் அமலன்ஸ்டான்லி. சமீபத்தில் அவரின் பதிவு ரசிக்க வைத்தது.

புத்தர் சொன்னது போல, ஒன்றைத் தீர்மானத்துடன் கைவிடுகிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் அதைப் பற்றிய முழுதான புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு புத்தர் ஐந்து படிநிலைகளைக் குறிப்பிடுகிறார்: உங்கள் மனத்தில் திறனற்றதென ஒன்றிருந்தால் அதை ஊன்றிக் கவனியுங்கள். அது எப்போது எழுகிறது என்பதைப் பாருங்கள். புத்தர் அதனைத் தோற்றுவாய் என்றழைக்கிறார். 

இப்போது, தோற்றுவாய் என்பது இரண்டு காரியங்களைக் குறிக்கிறது: ஒன்று, நீங்கள் காரணத்தைத் தேடுகிறீர்கள் - அது எழுவதை மட்டுமல்ல, அது எழுவதற்கு என்ன காரணம்? அதனுடன் இணைந்து எழுவது எது? புத்தர் தோற்றம் பற்றிப் பேசும்போது,  மனத்திற்குள் இருந்து உதிக்கும் தூண்டுதல்களைப் பற்றிப் பேசுகிறார். மனத்திற்குள் எது தூண்டப்படுகிறது? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? ஏனென்றால் அது மறைந்து போவதைப் பார்க்க விரும்புவது தான் அடுத்த படிநிலை. அதாவது தோற்றத்தையும் மறைவதையும் காண்பது. பின்னர் அக்குறிப்பிட்ட மாசு மறைந்து போகையில், "சரி, எழுவதற்கும் மறைவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது" எனும் உண்மையைக் காண்கிறீர்கள்.

சரி, உங்களை ஈர்க்கும் காரணம் எது? அது மூன்றாவது படிநிலை: அக்கவர்ச்சி யாது? அக்குறிப்பிட்ட விழைவு எங்கே குவி மையம் கொண்டுள்ளது?

புத்தர் குறிப்பிடுவது போல ஆசை கிட்டத்தட்ட எதன் மேலும் கவனத்தைக் குவிக்கலாம். ஒருவரை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் பெரும்பாலும் அவரல்ல நீங்கள் விரும்புவது. மாறாக, அவரைச் சுற்றி நீங்கள் உருவாக்கிய குறிப்பிட்டதொரு பார்வையைத் தான் விரும்புகிறீர்கள்.

அல்லது உலகளவில் பிரபலமான, விலை மதிப்புமிக்க ஒரு வாகனத்தை விரும்புகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகநிலையை, கௌரவத்தை அதன்மூலம் பெறுவதாக நீங்களே எண்ணிக் கொள்கிறீர்கள். 

அப்படியானால், உண்மை என்னவெனில் கவர்ச்சி எங்கே இருக்கிறது என்பதுதான். அது விலையுயர்ந்த வாகனத்தில் இல்லை. மாறாக, அது உங்களைப் பற்றி விளம்புவதென்ன என்பதில்தான் இருக்கிறது. நிறைய வர்த்தக விளம்பரங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன.

உங்கள் மனமும் அதையே உங்களுக்குச் செய்கிறது. எனவே நீங்கள் கவர்ச்சி எதிலுள்ளது என்று துல்லியமாகப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் அது மறைக்கப்பட்டிருக்கலாம். அதை உணர்ந்தறிவது கடினமாகத் தோன்றலாம். என்றாலும் அதன்  காரணங்களைத் தோண்டி எடுக்க வேண்டும். அக்குறிப்பிட்ட பொருளில், மனிதரில் உங்களுக்குப் பிடித்தது எது?

பின்னர், நான்காவது படிநிலையில், நீங்கள் அவ்வசீகரத்தை அதற்கேயுரிய குறைபாடுகளுடன் ஒப்பிடுவது. அக்குறிப்பிட்ட விழைவை அடைவதால் என்ன நிகழப் போகிறது? இங்கேயும், உங்கள் பகுத்தறிவை முன்னிறுத்த வேண்டும். 

முவ்வகை வாழடையாளங்கள் பற்றிய போதனைகள் இங்குதான் தொடர்புறுகின்றன. விழைவிலிருந்து எவ்வித சுகத்தைப் பெற்றாலும், அது நிலையற்றதாக, துயருறுத்துவதாக, தன்னின்மை கொண்டதாக இருக்கும். அதாவது, அதைத் தன் சொந்தமென இறுகப் பற்றிக் கொள்வதில் எவ்வொரு மதிப்பும் பயனுமில்லை.  தன்னின்மை பற்றிய போதனை உண்மையில் ஒருவித தர மதிப்பீடாகும். அது வாழிருப்பு பற்றியதோர் ஆழமான பார்வைக்கு வழிவகுக்கும். இதன் மூலம் நீங்கள், "இவ்விழைவு உண்மையில் மதிப்புக்குரியது அல்ல" என்று முடிவிற்கு வரலாம்.

எனவே அதைக் கைவிடுவது ஐந்தாவது படிநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது முன்னர் ஆர்வமாக இருந்தவற்றின் மீது அக்கறையின்மையை வளர்த்துக் கொள்கிறீர்கள். அதுவே விடுதலைக்குத் தலைப்படுதலாகும்.

இவ்வாறாக, ஒன்றைக் கைவிடுவதில் இப்படித்தான் அர்ப்பணிப்புடன் முயல்கிறீர்கள். அதைக் கைவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தோடல்ல. அதைப் பற்றிக் கொள்வதற்கு உண்மையில் எவ்வொரு சரியான, வலுவான காரணமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் விட்டுவிடுகிறீர்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 6 August 2025

145


#கற்கை_நன்றே_145

‘அவையத்து நாணுதல்’ என்பது ஒரு பண்புநலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கைநிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல்தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத்தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் ‘உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா?’ என்றேன்

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ‘ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா?’ என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்.

நன்றி:ஜெயமோகன்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு