Sankofa – வேர்களைத் தேடி…
ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த கானாவில் வசித்துவரும் அகான் பழங்குடியினர் "சங்கோஃபா" என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். அது ஒரு முக்கியமான தத்துவம். இந்த வார்த்தை மூன்று சொற்களால் ஆனது. SAN (திரும்ப), KO (செல்), FA (பார்க்கவும், தேடவும் மற்றும் எடுக்கவும்). அதாவது "திரும்பச் சென்று தேடி எடுக்கவும்" என்று பொருள்.
அகான் பழங்குடியினர் வணங்கும் ஒரு புராணப் பறவையின் பெயர் சங்கோஃபா. அந்தப் பறவையின் கால்கள் முன்னோக்கி நடக்க, அதன் தலை பின்பக்கமாக, திரும்பி ஒரு பொன்முட்டையை தன் வாயில் கவ்விக்கொண்டிருக்கும். வாழ்வியல் தத்துவத்தைக் குறிக்கும் ஒரு அழகான மெட்டாஃபராக இதனைப் பார்க்கலாம்.
ஒருவர் எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும் என்றால் அவர் தனது கடந்த காலத்தை உற்று நோக்கி அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலம் என்பது வெறும் இறந்த காலமல்ல. அது அனுபவ ஞானத்தின் ஊற்று, அதுவே பொன்முட்டை என்று அகான் பழங்குடியினர் நம்புகின்றனர்.
கடந்த காலத்தின் நல்லவைகளை, சிறந்தவைகளை வைத்து எதிர்காலத்தை திட்டமிடவேண்டும் என்று கூறுவர். நாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிவதே, நாம் எங்கு செல்லப்போகிறோம் என்பதை தீர்மானிக்கிறது.
சங்கோஃபா - நமது கால்கள் எதிர்காலத்தை நோக்கி நடை போட, கடந்த காலத்தின் கண்களால் கிடைக்கும் பார்வை, பாதைக்கு வெளிச்சமாய் இருக்கும்.
-janakiraman
No comments:
Post a Comment